Wednesday, 31 December 2025

கேள்வி-பதில் (27.12.2025)

 

 

கேள்வி-பதில்

 

 

 

1. கேள்வி: தனது ஆட்சிக் காலத்தில் தமிழகம் அதிகப் பொருளாதார வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று சொல்ல வந்த முதல்வர் ஸ்டாலின், "இந்தியாவில் தமிழ்நாடுதான் தனிக்காட்டு ராஜா" என்று பேசி இருக்கிறாரே?


பதில்:
ஏதோ வெற்றி வசனம் பேச விரும்பிய முதல்வர், 'காட்டு ராஜா' என்று தன்னை, தனது ஆட்சியை, விவரித்து மகிழ்கிறார். 'தனிக்காட்டு ராஜா' என்ற வார்த்தை, நியாய அநியாயம் பற்றி நினைக்காமல், 'என்னை யார் கேட்பது' என்று தன்னிச்சையாக இயங்கிச் சுயநலம் பேணுவதில் குறியாக இருப்பவரைக் குறிக்கும். இந்தியாவிலிருந்து தமிழகத்தைத் தனிமைப் படுத்த ஆசைப்படும் திமுக-வின் போக்கும் இதில் தொனிக்கிறது. அறியாமல் சரியாகப் பேசுகிறார் ஸ்டாலின்.

 

 

 

2. கேள்வி: பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான், 2024-ல் மாணவர்கள் எழுச்சியால் அந்த நாட்டுக்கு "இரண்டாவது முறை விடுதலை கிடைத்துள்ளது" என்று கூறியிருக்கிறாரே?

பதில்:
பங்களாதேஷ் முதலில் 1971-ஆம் வருடம் பெற்றது, முதல் தர விடுதலை - அடக்குமுறை பாகிஸ்தானிடமிருந்து விடுபட்டதால். இரண்டாவதாக 2024-ல் கிடைத்ததாகச் சொல்லப்படுவது, இரண்டாம் தர விடுதலை - பங்களாதேஷ் தறிகெட்டு இந்தியாவை விரோதிக்கும் மனப்பான்மையுடன் பாகிஸ்தான் பாணிக்கு மாறி வருவதால்.

 

 

 

3. கேள்வி: "நான் பிராமணர்களை எதிர்க்கவேண்டுமெனில், அதற்குக் காரணம் அவர்கள் பிராமணர்களாக இருப்பதற்கு அல்ல; பிராமணத்தை அவர்கள் இழந்ததற்காகவே எதிர்ப்பேன்" என்று ஜெயகாந்தன் திருச்சியில் ஒருமுறை பேசியிருக்கிறார். பிராமணர்களைப் பற்றிய இந்த வகைக் கருத்து சரியா?


பதில்:
முன்காலத்தில் பிராமணர்கள் ஹிந்து மதத்தின் முழுநேர ஆன்மீகச் சேனையாக இருந்தார்கள். அரசர்கள் குலம் அந்தச் சேனைக்கு ஆதரவும் பராமரிப்பும் அளித்தது. அதனால் அன்றைய சமூகத்தில் பிராமணர்களின் மதிப்பும் முக்கியத்துவமும் கூடுதலாக உறுதிப் பட்டது. அரசர்கள் நலிந்து ஒழிந்த பின் அந்தச் சேனையும் மெள்ள மெள்ள அப்படி ஆயிற்று.

 

ஆற்காடு இளவரசர் இன்று எப்படிப் பெயரில் மட்டும் இளவரசரோ, அதைப் போல் இன்றைய பிராமணர்கள் பெயரில் மட்டும் பிராமணர்கள். ஆதி நாளில் அவர்கள் பிரதானமாகத் தெய்வ காரியங்களில் ஈடுபட்டு வந்ததால் - அனைத்து வர்ணத்தவரும் தெய்வத்தை வணங்குவதால் - அவர்களின் வழிவந்தவர்களுக்கு ஒரு பெயர் அடையாளம் மட்டும் இன்று நீடிக்கிறது.

 

காலச் சக்கரம் அரசர்களையும் பிராமணர்களையும் - ஏன், நான்கு வர்ணத்தினரையும் - அரைத்து ஒதுக்கிச் சுழல்கிறது. இதில் பிராமணர்கள் மட்டும் பிராமணத்தைத் தானாக இழந்தார்கள் என்று குறை காண இடமில்லை.

 

 

 

4. கேள்வி: "சிறுபான்மையினர் அச்சமின்றி வாழத் துணையிருப்பதில்தான், பெரும்பான்மையினரின் பலமும் இருக்கிறது; குணமும் இருக்கிறது" என்று முதல்வர் ஸ்டாலின் ஒரு அறிக்கையில் கூறி இருக்கிறாரே?


பதில்:
'பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் வசிக்கும் மைனாரிடி ஹிந்துக்கள் துன்பத்திற்கும் தாக்குதலுக்கும் உள்ளாகிறார்கள், அவர்களின் எண்ணிக்கை அங்கு குறைந்து வருகிறது, அவர்களை அந்த நாடுகளின் பெரும்பான்மையினர் வாட்டுகிறார்கள். இந்தியாவின் சிறுபான்மையினர் நலமாக உள்ளனர், இங்கு அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது, இந்தியப் பெரும்பான்மையினரின் குணம் போற்றத் தக்கது' என்கிற உண்மை நிலையைச் சூசகமாக அறிவிக்கிறார் ஸ்டாலின். அவர் தைரியத்திற்கு சபாஷ்!

 

 

 

5. கேள்வி: ஒருவர் எச்சில் கையால் காக்கா ஓட்டாதவர் என்றால், அவர் கஞ்சன் என்று அர்த்தமா?

 

பதில்: கருணை மிக்கவர் என்றும் அர்த்தமாகலாம். எச்சில் கையுடன் அவர் கை வீசினால் ஒரு பருக்கை பறந்து காக்கையின் கண்ணில் பட்டால் அதற்குக் கண் வலிக்குமே!

 

 

பகுதி 31 // 27.12.2025

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

No comments:

Post a Comment