Thursday 22 December 2022

இட ஒதுக்கீடு - இனிப்பும் கசப்பும்

           

        - ஆர்.வி.ஆர்

   

இட ஒதுக்கீடு (‘ரிசர்வேஷன்’) ஒரு சிக்கலான விஷயம்.  அது நாம் நாட்டில் பல இடங்களில் உண்டு. இதைச் சரியாகப் புரிந்துகொள்ள, எதில் யாருக்கு சட்டம் இட ஒதுக்கீடு வழங்குகிறது, அதன் பிரதான நோக்கம் என்ன, என்பதை முதலில் பார்க்க வேண்டும்.  முக்கியமான இரண்டு இட ஒதுக்கீடுகளை கவனிப்போம்.  

 

சமூகத்தில் பின்தங்கிய குடிமக்கள் நம்மிடையே இருக்கிறார்கள். இட ஒதுக்கீட்டிற்காக, அவர்களின் ஜாதிப் பெயர்களைச் சொல்லி அவர்களை  ‘பட்டியல் சமூகத்தினர்’ , ‘பழங்குடியினர்’  மற்றும் ‘இதர பிற்படுத்தப்பட்டவர்கள்’ என்று சட்டம் வகைப்படுத்துகிறது. அவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாகச்  சேர்த்து ‘பின்தங்கியவர்கள்” என்று பெயர் வைத்துக் கொள்வோம்.   

 

பின்தங்கியவர்கள் பிற மக்களுடன் தகுதி அடிப்படையில் போட்டியிட்டுக் கல்லூரிக் கல்வி – அதிலும் தொழிற்கல்வி – பெறுவது கடினம். ஆகையால் அந்தக் கல்விக் கூடங்களில் அவர்களில் சிலர் எளிதாக இடம் பெறச் செய்யவேண்டும் என்று கணக்கிட்டு சட்டம் அவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்கிறது. அவர்களுக்கான சேர்க்கைத் தகுதியைச் சற்றுத் தளர்த்தி, அவர்களுக்குக் குறிப்பிட்ட சதவிகிதம் வரை இட ஒதுக்கீடு தருகிறது. தகுதிக் குறைவை ஓரளவு ஏற்றுக் கொண்டுதானே இட ஒதுக்கீடு அளிக்க முடியும்?

 

சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிலையங்களில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது. அது வேறு விஷயம்.

 

கல்விச் சேர்க்கைகள் தவிர்த்து இன்னொரு இட ஒதுக்கீடும் சட்டத்தில் உண்டு – அதாவது வேலை வாய்ப்புகளில். அரசு மற்றும் அரசு-சார் அலுவலகங்கள், பல்கலைக் கழகங்கள், கல்விக் கூடங்கள் ஆகியவற்றில் உள்ள பணியிடங்களில் ‘பின்தங்கியவர்’களுக்கு அதே போன்ற இட ஒதுக்கீட்டினால் வேலை சற்று எளிதாகக் கிடைக்கிறது.    

 

இந்த இட ஒதுக்கீடுகளின் பிரதான நோக்கம் என்ன? இது  முக்கியம்.

 

இட ஒதுக்கீட்டினால் கல்லூரிகளில்  படிப்பவர்கள் கல்வித் தகுதியை சுலபத்தில் பெற்று வெளி உலகில் அனைவருடனும் போட்டியிட்டு வேலை தேடிக் கொள்ளலாம், தொழில் தொடங்கலாம். அரசு மற்றும் அரசு-சார் வேலை வாய்ப்புகளை இட ஒதுக்கீட்டு அடிப்படையில் பெறுபவர்கள் தங்கள் பொருளாதார வசதியை எளிதில் பெருக்கிக் கொள்ளலாம். இவ்வாறு பயன் அடைபவர்களின் பிள்ளைகளோ அவர்களின் சந்ததிகளோ காலப்போக்கில் இட ஒதுக்கீடு இல்லாமலே அனைவருடன் சமமாகப் போட்டியிட்டு கல்லூரிப் படிப்புக்கும் வேலைக்கும் தயாராவார்கள். இதுதான் அந்த நோக்கம்.

 

இந்த நல்ல நோக்கம்தான் இட ஒதுக்கீட்டின் இனிப்புப் பக்கம். அந்த நோக்கம் செயலாவதற்கான நடவடிக்கைகளை எடுத்தவாறு, அதையும் கண்காணித்து, அமல் செய்யப்படும் இட ஒதுக்கீடு பயன் தரும். அப்போதுதான் இட ஒதுக்கீடு பெறும் மக்களின் கண்ணியம் காப்பாற்றப் பட்டு அவர்களின் சமூக மதிப்பும் நாளடைவில் உயரும். இந்த ஆரோக்கியமான சிந்தனையும் கண்ணோட்டமும் அநேகமாக அனைத்து அரசியல் தலைவர்களிடமும்  இல்லை.   


இப்போது இன்னொரு பக்கத்தைப்  பாருங்கள்.

 

தகுதியுள்ள சிலரை வேண்டும் என்றே தள்ளி வைத்துத்தான் அவர்களின் இடங்களைத் தகுதி குறைந்த மற்றவர்களுக்கு, அதாவது பின்தங்கியவர்களுக்கு, அளிக்க முடியும். அதனால்  ஒரு நல்ல கல்லூரியில் அல்லது வேலையில் சேரும் வாய்ப்பை இழக்கும் மற்ற சமூகத்து நபர்களும் அவர்களின் குடும்பத்தினரும் சமாதானம் அடைய முடியாது.  இதனால் இட ஒதுக்கீடு கிடைக்கும் சமூகத்தினருக்கும் விட்டுக் கொடுக்க வேண்டிய சமூகத்தினருக்கும் இடையே அதிருப்தி உருவாகும். இது இயற்கை.  இந்த நிலை தொடர்வது இரு தரப்பு மக்களுக்கும் நல்லதல்ல. ஆகையால் கல்லூரிச் சேர்க்கைகளில், அரசு மற்றும் அரசு-சார்  வேலை வாய்ப்புகளில், தரப்படும் இட ஒதுக்கீடு நூறு இருநூறு ஆண்டுகள் என்று தொடர்வது சரியல்ல.

 

சமூகத்தில் பின்தங்கிய மக்களை சற்று விரைவாக முன்னேற்ற உதவும் ஒரு ஆயுதம் இட ஒதுக்கீடு. இந்த ஆயுதம் நல்ல பலன் தரவேண்டும் என்றால், இதை உபயோகிக்கும் அரசு அர்ப்பணிப்புள்ள தலைவர்களால் தொடர்ந்து நடத்தப் படவேண்டும், இந்த விஷயத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களும் ஒத்துழைக்க வேண்டும். இன்றைய இந்தியாவில் இது சாத்தியமல்ல.  

 

இட ஒதுக்கீடு என்பது, பின்தங்கியவர்கள் காலம் காலமாக அனுபவிக்க வேண்டிய வெறும் சலுகை  என்ற அளவில்தான் இட ஒதுக்கீட்டை அரசியல் தலைவர்கள் பின்தங்கிய மக்களுக்குத் தெரியப் படுத்துகிறார்கள்.  இட ஒதுக்கீட்டு சதவிகிதத்தையும் படிப்படியாக ஐம்பது, அறுபது, அறுபத்தி ஒன்பது என்று உயர்த்துகிறார்கள். மேன்மேலும் சில ஜாதியினரை இட ஒதுக்கீட்டு வளையத்திற்குள் கொண்டு வருகிறார்கள்.  சமூகத்தில் தாழ்வாகப் பார்க்கப் படுகிறவர்கள், ஒடுக்கப் பட்டவர்கள் என்பது போக, ஓட்டு சக்தியை மிரட்டலுடன் வெளிப்படுத்தும் வகுப்பினரையும் ‘பின்தங்கியவர்கள்’ லிஸ்டில் சேர்த்து இட ஒதுக்கீடு அளிக்கிறார்கள். அதிக மக்களுக்கு அதிக அளவில் இட ஒதுக்கீடு அளித்தால் அவர்களின் ஓட்டுக்களை எளிதாக வேட்டையாடலாம் என்பது நம் சுயநலத் தலைவர்களின் கணக்கு. அதில் வெற்றியும் பெறுகிறார்கள்.  

 

        சுயநல அரசியலில் பலியான இட ஒதுக்கீடு இப்போது இடியாப்பச் சிக்கலில் மாட்டி  இருக்கிறது.  எப்படி என்று பார்க்கலாம்.

 

பின்தங்கிய மக்கள் லிஸ்டில் இருந்து எந்த ஜாதியினரையும் நமது  அரசியல்வாதிகள் எப்போதும் நீக்கப் போவதில்லை. அப்படிச் செய்தால் அந்த ஜாதித் தலைவர் “நான் உங்களுக்காகப் போராடி உங்களைப் பின்தங்கியவர்கள் லிஸ்டில் மீண்டும் சேர்க்க வைக்கிறேன்” என்று தம் மக்களிடம்  பிரசாரம் செய்து ஓட்டுக்களை அள்ளிச் செல்வார், அரசியல் பேரங்களில் அவர் வலுப்பெறுவார். மற்ற அரசியல் கட்சிகள் இதை விரும்பாது.  ஆகையால் இட ஒதுக்கீட்டிற்குள் வந்த எல்லா ஜாதிகளும் எப்போதும் உள்ளேதான் இருக்கும்.  இது ஒரு பக்கம்.

 

இன்னொரு பக்கத்தில், பின்தங்கிய மக்கள் அனைவருக்கும் இட ஒதுக்கீட்டினால் கல்லூரிகளில் இடமும் அரசு வேலைகளும் எந்தக் காலத்திலும் கிடைத்து முடியப் போவதில்லை. ஏனென்றால் ஜனத்தொகையும் வேலையின்மையும் மிகுந்த நம் நாட்டில், அது யானைப் பசிக்கு சோளப் பொறி. அதோடு,  கல்லூரி இடங்களுக்கும் அரசு வேலைகளுக்கும் தயார் ஆகும் இளைஞர்கள் ஒவ்வொரு வருடமும் உருவாகிறார்கள். ஆகவே “பின்தங்கிய மக்கள் அனைவருக்கும் கல்லூரிகளில் இடமும் வேலைகளும் கிடைத்துவிட்டன. இனிமேல் இட ஒதுக்கீடு தேவையில்லை” என்று எந்தத் தலைவரும் எப்போதும் சொல்ல முடியாது.

 

இன்றைய நிலவரம் இதுதான். நம் அரசியல் தலைவர்கள் தங்களுக்குள் போட்டி போட்டுப் பின்தங்கிய மக்களைத் தங்களின் ஓட்டு வங்கியாக வைத்து வளர்க்கத்தான் ஆசைப் படுவார்கள். அது நிறைவேறும். பின்தங்கியவர்கள் வாழ்க்கையில், காலம் கொண்டுவரும் சிறிய முன்னேற்றம் தவிர இட ஒதுக்கீட்டினால் பெரிய முன்னேற்றம் இருக்காது.  திறமை இருந்தும் இந்தியாவில் உயர முடியாத பலர் மேல் நாடுகளுக்குச் சென்று அங்கே செழிப்பைச் சேர்த்து தாங்களும் வளர்வார்கள். இதெல்லாம் இட ஒதுக்கீட்டின் கசப்புப் பக்கம்.  இனிப்பை விட கசப்பு  பன்மடங்கு அதிகமாகி விட்டது.   

 

இட ஒதுக்கீடு இல்லாமல் பின்தங்கியவர்கள் நாம் நாட்டில் முன்னேற முடியுமா? முடியும். உரிமைகள் மறுக்கப் பட்டவர்களும் நசுக்கப் பட்டவர்களும் உலகத்தில் மீண்டெழுந்த வரலாறு இதை உணர்த்துகிறது.   

 

அமெரிக்காவின் ஜனத்தொகையில் கருப்பர்களான ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் சுமார் 13 சதவிகிதம் (அவர்களைக் குறிக்கும் ‘நீக்ரோக்கள்’ என்ற சொல்லை அவர்கள் ரசிப்பதில்லை).  அவர்களின் முன்னோர்கள் ஆப்பிரிக்கா கண்டத்திலிருந்து கடத்தப்பட்டு 250 வருடங்களாக அந்த நிலப்பரப்பில் வெள்ளைக்காரர்களின் அடிமைகளாக  இருந்தவர்கள். ஆனால் அடிமைத்தனத்தில் இருந்து அவர்களுக்கு விடுதலை கிடைத்த பின், ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் அந்த நாட்டில் தற்போது வரை கணிசமான முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள்.  

 

அமெரிக்காவின் கல்லூரிகளில்,  அரசு வேலை வாய்ப்புகளில், ஆப்பிரிக்க-அமெரிக்கர்களுக்குத் தனியாக இட ஒதுக்கீடு செய்யப் படவில்லை. அவர்களுக்கு எதிராக அந்த நாட்டில் யாரும் பேதம் காட்டக் கூடாது என்று மட்டும் படிப்படியாகச் சட்டம் கொண்டு வந்தார்கள். அதனால் தங்களின் உழைப்பால், முயற்சியால், அவர்கள் வெள்ளைக்காரர்களுடன் சமமாகப் போட்டி போட்டு முன்னேற்றம் காண்கிறார்கள்.  

 

அமெரிக்காவில் பிறந்து அந்நாட்டில் பெரும் வெற்றி கண்ட ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் பலர் உண்டு. அதில் துர்குட் மார்ஷல் என்ற அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி,  ஐ.நா-விற்கான அமெரிக்க தூதர் ஆண்ட்ரூ யங், காலின் பவல் என்ற அமெரிக்க முப்படைத் தளபதி, ஒலிம்பிக் தடகளத்தில் நான்கு தங்கம் வென்ற ஜெஸ்ஸி ஓவன்ஸ் மற்றும் கார்ல் லூயிஸ், சமீபத்தில் இரண்டு முறை அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்வான பராக் ஒபாமா (இவரது தாயார் வெள்ளைக் காரர், தந்தை ஆப்பிரிக்கர்) ஆகியோர் சிலர். இது போன்ற வெற்றிகளால் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களுக்குப் பெருமிதம் கிடைக்கும். அவர்களின் வெற்றியை வெள்ளைக்காரர்களும் மதிப்பார்கள். இதைப் போல இந்தியாவிலும் பின்தங்கியவர்களுக்கு நிகழவேண்டும். இட ஒதுக்கீடு இல்லாமல் இது சாத்தியம்.   

 

உலகெங்கும் சில மனிதர்கள் சரித்திரக் காரணங்களுக்காக மட்டும் பரஸ்பர மனக் கசப்பைச் சுமக்கிறார்கள். அதற்குக் காலமும் விவேகமும்தான் மருந்து, சட்டத்தின் நாட்டாமை அல்ல.  இப்போது அமெரிக்காவில் வாழும் வெள்ளைக்காரர்களும் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களும் தங்களின் எள்ளுத் தாத்தாக்கள் யார் யாருக்கு என்ன செய்தார்கள் என்று பேசுவதில்லை. ஒரு காலத்தில் என்ன நடந்திருந்தாலும் அதற்கு இப்போதுள்ள வெள்ளைக்காரர்களைக் குற்றம் சொல்வது அர்த்தமில்லை என்று ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் யதார்த்தமாக நினைக்கிறார்கள். அந்த நாட்டின் அரசியல்வாதிகளும், ஆப்பிரிக்க-அமெரிக்கர்களை வெறும் 13 சதவிகித ஓட்டு வங்கியாகக் கருதி அவர்களிடம் அப்பட்டமான தாஜா அரசியல் செய்வதில்லை. அந்தப் புரிதல் நாம் நாட்டில் விரிவாக இல்லை என்பது நமது துரதிர்ஷ்டம்.

 

அந்தக் காலத்தில் அடிமைகள் வியாபாரத்தை முன்னின்று நடத்தியது இங்கிலாந்து நாட்டவர். அவர்கள் இந்தியாவையும் ஆண்டார்கள். இன்று இந்தியர்கள், இந்திய வம்சா வழியினர், இங்கிலாந்தில் பல துறைகளில் – முக்கியமாக மருத்துவத்தில் – மேலோங்குகிறார்கள். இங்கிலாந்தில் அவர்களுக்கு இட ஒதுக்கீட்டுச் சலுகையோ வேறு சலுகையோ கிடையாது.  ஆண்ட மக்களிடம் ஆளப்பட்ட மக்கள் மதிப்புடன் உயர்ந்திருக்கிறார்கள்.

 

இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் ஜெர்மெனியில் இரண்டு லட்சத்துக்கும் மேல் யூதர்கள் இருந்தார்கள். பின்னர் ஜெர்மானிய நாஜிக்கள் நிகழ்த்திய இனப் படுகொலையில், அவர்களில் சுமார் தொண்ணூறு சதவிகித யூதர்கள் அழிந்தார்கள். இன்று அந்த நாட்டில் யூதர்களின் எண்ணிக்கை முன்பைவிட அதிகம்.  இட ஒதுக்கீடு இல்லாமல் அவர்கள் ஜெர்மெனியில் எழுந்து நிற்கிறார்கள். மதிப்பும் பெறுகிறார்கள்.  

 

நமது நாடு சுதந்திரம் அடைந்து எழுபத்தைந்து வருடங்கள் ஆயிற்று. அடுத்த ஐம்பது அல்லது நூறு வருடத்திற்குள்ளாவது பின்தங்கியவர்களைக் கணிசமாக முன்னேற்றிவிட முடியும் என்று நமது அரசியல் தலைவர்கள் நம்புகிறார்களா? ஜம்பத்துக்காக அவர்கள் ஆம் என்றாலும், படிப்படியாகத்தானே அப்படி முன்னேற்ற முடியும்? அப்படியானால் இப்போதே இட ஒதுக்கீட்டு அளவை வருடத்திற்கு ஒரு சதவிகிதமோ அரை சதவிகிதமோ குறைத்து வரலாம்.   அப்படிச் செய்தால், பின்தங்கியவர்களுக்காக சுப்ரீம் கோர்ட் நிச்சயித்த இட ஒதுக்கீட்டின் உச்ச வரம்பான ஐம்பது சதவிகிதம் என்பது, அடுத்த ஐம்பது அல்லது நூறு வருடங்களில் மறையும்.  ஆனால் இதைச் செய்து நமது அரசியல்வாதிகள் தங்கள் பிழைப்பில் தாங்களே மண்ணைப் போட்டுக் கொள்ள மாட்டார்களே!

 

முடிவில்லாமல் தொடரும் இந்த இரண்டு இட ஒதுக்கீடுகளும் நமது நாட்டின் மற்ற வகுப்பினருக்கு பாதிப்பு உண்டாக்குவது நன்றாக வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. அதனால் பின்தங்கியவர்களைத் தவிர்த்து, பொருளாதாரத்தில் நலிந்த குடிமக்களுக்கு என்று ஒரு புதிய இட ஒதுக்கீட்டை பத்து சதவிகிதம் வரை செய்ய அனுமதிக்கும் திருத்தம் நம் அரசியல் சட்டத்தில் வந்துவிட்டது. அது செல்லும் என்று நமது சுப்ரீம் கோர்ட்டும் சொல்லிவிட்டது. ஆனால் நாட்டின் அனைத்து மக்களின் நன்மைக்கும் நியாயத்திற்கும் இது முழுத் தீர்வாகாது.

 

நமது நாட்டின் பொருளாதாரம் பரவலாகப் பெரிதாக முன்னேறினால்,  வேலை வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கும். அப்போது நம் மக்களின் புரிந்து கொள்ளும்  சக்தியும் கூடும். அந்த நிலையில் இட ஒதுக்கீடு மெள்ள மெள்ள அர்த்தமில்லாமல் நீர்த்துப் போகும். அது கல்லூரிச் சேர்க்கைகளிலும் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்.  எல்லா இட ஒதுக்கீடும் முக்கியமாக வருமானத்துக்கு வழி செய்யத்தான் என்றால் இந்த விளைவை நாம் காணலாமே?

 

திரும்பவும் சற்று அமெரிக்க ஜனநாயகத்தைப் பாருங்கள்: அங்கே பொருளாதாரம் நன்றாக இருக்கிறது, தாஜா அரசியல் இல்லை, என்பதால்தானே பிற  நாடுகளில் உள்ள படித்தவர்களும் நலிந்தவர்களும் இட ஒதுக்கீடில்லாத   அமெரிக்காவில் பிழைத்து உயரப் பார்க்கிறார்கள்?   

திறமையும் அர்ப்பணிப்பும் மிக்க அரசியல் தலைவர்கள்  நமது நாட்டின் பொருளாதாரத்தை வேகமாக உயர்த்த வழி செய்தால், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கிடைக்கும். நமது பொருளாதாரம் அப்படி உயர்வாதற்கான ஆரம்ப அறிகுறிகள் கிடைக்கின்றன. அது இளசு மாங்காய். அது பெரிதாகட்டும்.  பின்னர் இன்னொரு மாங்காயும் காய்க்கட்டும். இந்த விஷயத்தில் நல்லதாக வேறு எப்படி நினைக்க முடியும்?

* * * * *

 

Copyright © R. Veera Raghavan 2022

Thursday 17 November 2022

ராஜீவ் காந்தி கொலையாளிகள்: ஏன் சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்திருக்க வேண்டாம்?

          - ஆர்.வி.ஆர்

 

ராஜீவ் காந்தி கொலை வழக்குக் குற்றவாளிகள் மீதம் ஆறு பேர் ஆயுள் தண்டனையை அனுபவித்து வந்தார்கள். சுப்ரீம் கோர்ட்டின் சமீபத்திய முடிவினால் அவர்களின் ஆயுள் தண்டனை பூர்த்தியானதாகக்  கருதப்பட்டு அவர்கள் சிறையிலிருந்து வெளி வந்திருக்கிறார்கள்.  

 

நம் நாட்டின் ஒரு சட்டத்தை சுப்ரீம் கோர்ட் அமலாக்குவதற்காகப் போட்ட உத்திரவினால் இந்த ஆறு கொலையாளிகளும் விடுதலை ஆகி இருக்கிறார்கள். அதுதான் நமது அரசியல் சட்டப் பிரிவு 161.  

 

பிரிவு 161 இப்படிச் சொல்கிறது: “ஒரு மாநில அதிகாரத்தின் கீழ் வரும் சட்டத்தை மீறுவதால் தண்டனை பெற்ற எந்தக் குற்றவாளிக்கும் மன்னிப்பு வழங்கவோ, அவரது தண்டனைக் காலத்தைக் குறைக்கவோ அந்த மாநில கவர்னருக்கு  அதிகாரம் உண்டு.” ராஜீவ் காந்தியின் கொலையாளிகளும் அந்த வகைக் குற்றவாளிகள்.  

 

இந்த விஷயத்தில் கவர்னரின் அதிகாரத்தைப் பற்றி சுப்ரீம் கோர்ட் முன்பே சில தீர்ப்புகளில் விளக்கி இருக்கிறது. அதாவது: அப்படியான குற்றவாளிக்குத் தண்டனைக் குறைப்பு செய்ய மாநில அரசு ஆலோசனை அளித்தால், கவர்னர் அதற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அந்த ஆலோசனைக்கு மாறாக கவர்னர் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது.

 

2018-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமியின் அதிமுக அமைச்சரவை, ராஜீவ் காந்தியின் ஏழு கொலையாளிகளின் ஆயுள் தண்டனையைக் குறைத்து அவர்களை முன்கூட்டி விடுவிக்க வேண்டும் என்று கவர்னருக்கு ஆலோசனை தந்தது. அந்த ஆலோசனையை ஏற்றுக் கையெழுத்திட தமிழக கவர்னருக்குக் கூச்சம் இருந்திருக்க வேண்டும். அதனாலோ என்னவோ கவர்னர் தமிழக அமைச்சரவையின் ஆலோசனையைத் தன் பரிசீலனையில் வைத்தபடி இருந்தார்.  அவர் ஒரு முடிவும் எடுக்கவில்லை.

 

இரண்டரை வருடங்கள் சென்றன. பேரறிவாளன் என்ற ஒரு குற்றவாளி கவர்னரின் தாமதத்தை முதலில் சுப்ரீம் கோர்ட்டின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். 161-வது பிரிவுப்படி கவர்னர் செயல்படவில்லை என்பதால் சுப்ரீம் கோர்ட் தனது விசேஷ அதிகாரத்தைப் பயன் படுத்தி பேரறிவாளனின் உடனடி விடுதலைக்கு அப்போது வழி செய்தது. தொடர்ந்து மீதமுள்ள ஆறு கொலையாளிகளும் மனுப்போட, சுப்ரீம் கோர்ட் அதே காரணங்கள் சொல்லி அந்த ஆறு பேரும் விடுதலை பெறுமாறு உத்திரவு பிறப்பித்து விட்டது. சரி, இதற்கு மேல் விஷயம் இருக்கிறதா? இருக்கிறது. அந்த ஏழு கொலையாளிகளை  சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்திருக்க வேண்டாம் என்று நாம் கருதலாம்.

 

பொதுவாகவே ஒரு கவர்னர், மாநில அமைச்சரவையின் ஆலோசனையின்படி தனது பணிகளில் செயல்படவேண்டும் என்று நமது அரசியல் சட்டம் விதிக்கிறது – பிரிவு 163 அப்படிச் சொல்கிறது. அதன்படி, ஒரு குற்றவாளிக்கு மன்னிப்போ தண்டனைக் குறைப்போ அளிக்கும் அதிகாரம் கவர்னருக்கு  இன்னொரு பிரிவின் கீழ் வழங்கப் பட்டாலும், அந்த அதிகாரமும் மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படியே செயலாக்கப்பட  வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தெளிவாக்கி இருக்கிறது. ஆனால் இந்த மாதிரியான விஷயத்தில், இரண்டு சமயங்களில் ஒரு கவர்னர் மாநில அமைச்சரவையின் ஆலோசனையை ஏற்காமல் அதற்கு மாறாகத் தனது எண்ணப்படி முடிவெடுக்கலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு (5 நீதிபதிகள் கொண்டது) ஏற்கனவே தீர்ப்பு அளித்திருக்கிறது [ஆர்வம் உள்ளவர்கள் பார்க்க: M.P. Special Police Establishment v. State of M.P – 2 (2004) 8 SCC 788].

 

சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வே சுட்டிக் காட்டிய அந்த இரண்டு  விதிவிலக்குகள் என்ன?

 

முதலாவது: மாநில அமைச்சரவையின் முடிவில் உள் விருப்பு-வெறுப்பின் தோற்றம்’ (apparent bias)  இருந்தால், கவர்னர் அதற்குக் கட்டுப்பட வேண்டாம்.

 

இரண்டாவது: அமைச்சரவையின் முடிவு ‘சிந்தனை அற்றதாக’ இருந்தால் கவர்னர் அதற்குக் கட்டுப் பட மாட்டார் என்றும் சுப்ரீம் கோர்ட் சொல்கிறது.  சுப்ரீம் கோர்ட் பயன் படுத்திய ‘Irrational’ என்ற ஆங்கிலச் சொல்தான் ‘சிந்தனை அற்றதாக’ என்று இங்கு தமிழில் தரப் படுகிறது.  அந்த ஆங்கில வார்த்தைக்கு சட்டத்தில் விசேஷ அர்த்தம் உண்டு. அந்த வார்த்தைக்கு (‘Irrational’)  தனது தீர்ப்பில் அர்த்தமும் விளக்கமும் கொடுத்தவர் ‘லார்ட் டிப்லாக்’ என்ற புகழ்பெற்ற ஆங்கிலேய  நீதிபதி.  அவர் எழுதியதைத் தமிழில் இப்படித் தரலாம்:  

 

புத்திமிக்க மனிதன் கவனத்துடன் ஒரு விஷயத்தைத் தீர்மானிக்கிற போது, அவர் எட்ட இயலாத ஒரு முடிவு ‘சிந்தனையற்றது’ என்றாகும்.  மேலும் அத்தகைய முடிவானது,  லாஜிக் அல்லது பொதுவில் வழங்கும் தார்மீகப் பண்புகளை மூர்க்கமாக மீறி எடுக்கப்படும் ஒரு முடிவாகவும் இருக்கும்.  

 

(Irrational decision: “So outrageous in its defiance of logic or of accepted moral standards that no sensible person who had applied his mind to the question to be decided could have arrived at it” Council of Civil Service Unions v Minister for the Civil Service [1985] AC 374)

 

Irrational’ என்ற சொல்லிற்கு  (தமிழில்: ‘சிந்தனையற்ற’) சட்ட உலகில் இது மிகவும் பிரசித்தியான விளக்கம்.

 

அந்த ஆங்கிலேய நீதிபதியின் கூற்றுப் படி, ராஜீவ் காந்தி கொலையில் ஈடுபட்ட ஏழு குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையைக் குறைத்து  அவர்களை விடுதலை செய்யுமாறு எடப்படி அரசு தமிழக கவர்னருக்கு அளித்த ஆலோசனை ‘சிந்தனையற்றது’ – Irrational – என்று ஆகும். அப்படியான ஒரு முடிவுக்கு கவர்னர் வர முடியும். வர வேண்டும் என்பதுதான் சரி.  ஏன், கோர்ட்டே அந்த ஆலோசனை சிந்தனையற்றது என்ற முடிவுக்கு எளிதில் வர முடியும்.  இது எப்படி என்று பார்க்கலாம்.

 

  1991-ம் வருடம் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி ஒரு மனித வெடிகுண்டால் – தாணு என்ற அந்நிய நாட்டுப் பெண்ணால், ஒரு கூட்டு சதியின் விளைவால் – படுகொலை  செய்யப்பட்டார். கொலையுண்டது இந்தியாவின் முன்னாள் பிரதமர். ஒரு பிரதமராக அவரும் அவரது அரசும் எடுத்த சில முடிவுகளுக்காக, இலங்கைப் பிரச்சினையில் அவர் கொண்டிருந்த நிலைக்காக, ஒரு கூட்டம் அவரைத் தீர்த்துக் கட்ட நினைத்தது.


     “எங்கள்  விருப்பத்திற்கு  எதிராக  உங்கள்  நாடு முடிவெடுத்தால், அல்லது முயற்சித்தால், உங்கள் பிரதமரே காலி”  என்று அந்தக் கூட்டம் இந்தியாவிற்கு விட்ட எச்சரிக்கைதான் ராஜீவ் காந்தியின் படுகொலை. அது நமது நாட்டின் இறையாண்மைக்கே விடப்பட்ட அச்சுறுத்தல். அப்படியானவர்களை இந்தியா ஒடுக்க வேண்டுமா இல்லையா? குறைந்த பட்சம், அவர்களுக்கு சுப்ரீம் கோர்ட் முதலில் அளித்த தண்டனையாவது நிறைவேற்றப் பட்டிருக்க வேண்டும்.  ஆனால் நடந்தது என்ன?

         

நாலு பேருக்கு மரண தண்டனை, மூணு பேருக்கு ஆயுள் தண்டனை என்று முதலில் சுப்ரீம் கோர்ட் விதித்தது. பிறகு ஏதோ காரணங்கள் சொல்லப்பட்டு ஏழு கொலைக் குற்றவாளிகளுக்கும் தண்டனைகள் குறைக்கப் பட்டு அவர்கள் ஒவ்வொருவராக வெளி வருவது, என்பதெல்லாம் ‘புத்திமிக்க’ ஒருவர் நினைத்துப் பார்க்கும் செயலா? அப்படி நினைக்கிறவர் மாநிலத்தின்  முதல்வராகவோ மந்திரியாகவோ இருந்தால், அதற்கான முடிவை அவர்கள் எடுப்பது – அந்த ஆங்கிலேய நீதிபதி தெளிவுபடுத்திய படி – “லாஜிக்  அல்லது பொதுவில் வழங்கும் தார்மீகப் பண்புகளை மூர்க்கமாக மீறுவதாகும்”. அத்தகைய ஆலோசனைகளை நளினி விஷயத்தில் (தூக்கு தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாகக் குறைக்க) கவர்னருக்கு முதலில் அளித்த கருணாநிதி அரசும், பின்னர் எல்லாக் குற்றவாளிகள் விஷயத்திலும் (ஆயுள் தண்டனையைக் குறைத்து உடனடி விடுதலை அளிக்க) கவர்னருக்கு ஆலோசனை  தந்த எடப்பாடி அரசும் எடுத்த முடிவுகள் ‘சிந்தனையற்றது’ (Irrational) என்பது தெளிவாகிறது.  

 

இப்போது, சுப்ரீம் கோர்ட்டின் 5-நீதிபதி பெஞ்ச் அளித்த தீரப்பை நினைத்துப் பாருங்கள். ஒரு மாநில அமைச்சரவை கவர்னருக்கு அளிக்கும் ஆலோசனை சிந்தனையற்றதாக இருந்தால், அது கவர்னரைக் கட்டுப் படுத்தாது என்று அந்த அரசியல் சாசன பெஞ்ச் விளக்கம் கொடுத்து விட்டது.  ஆகையால் எடப்பாடி அமைச்சரவை அளித்த ஆலோசனையைத் தமிழக கவர்னர் ஏற்காமல் தொடர்ந்து பரிசீலனையில் வைத்திருந்தாலும், அல்லது ஜனாதிபதிக்கு அதை அனுப்பி இருந்தாலும், அந்த ஆலோசனை ‘சிந்தனையற்றது’ என்பதால் அது கவர்னரைக் கட்டுப் படுத்தாது. ஆகையால் ஏழு குற்றவாளிகளையும் சுப்ரீம் கோர்ட் விடுவிக்காமல் இருந்திருக்கலாம். சுப்ரீம் கோர்ட் அப்படியான சட்ட நிலையை எடுத்திருந்தால், நமது நீதி பரிபாலனத்திற்கு இன்னும் பெருமை சேர்ந்திருக்கும்.

 

இந்தியாவில் மனித வெடிகுண்டு மூலம் ஒருவர்  கொடூரமாகக் கொல்லப் படுவது ராஜீவ் காந்தி படுகொலையில்தான் முதலில் நிகழ்ந்தது. அந்த பயங்கரவாதத்தில் அவரோடு பதினான்கு அப்பாவி மனிதர்களும் பலியானார்கள்.  அவர்களில் ஒன்பது பேர் போலீஸ்காரர்கள். உயிர் இழந்தவர்களில் தமிழ் நாட்டுக்காரர்கள் அதிகம். நமது மண்ணில் நமது முன்னாள் பிரதமரை பயங்கரவாதத்தினால் கொன்றவர்களுக்குத் தண்டனைக் குறைப்பு செய்து அவர்களை முன் கூட்டியே விடுதலை செய்ய கவர்னருக்கு ஒரு அமைச்சரவை ஆலோசனை சொல்வது, ‘சிந்தனையற்றது’, ஆகையால் கவர்னர் அந்த ஆலோசனைகக்குக் கட்டுப்பட்டு அதன்படி செயல்பட வேண்டாம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் துரதிர்ஷ்டமாக சுப்ரீம் கோர்ட்டின் பார்வை இப்படி அமையவில்லை.  

 

சதி செய்து நமது பிரதமரை – முன்னாளோ இன்னாளோ – கொடூரமாகத் தீர்த்துக் கட்டிய பாதகர்களுக்கு சுப்ரீம் கோர்ட் விடுதலை அளிக்காமல் இருந்தால் நிஜத்தில் என்ன ஆகும்? ஸ்ரீபெரும்புதூரில் படுகொலையான அப்பாவி இந்தியர்களின் உயிர்களை நாம் மதிப்பதாக இருக்கும். இன்னும் முக்கியமாக, உலகளவில் நம் நாட்டின் மரியாதையையும், நாட்டு மக்களின் மனதில் ஆறுதலான பெருமிதத்தையும் கோர்ட் உறுதி செய்திருக்கும். இந்த விளைவுக்காக மட்டும் சுப்ரீம் கோர்ட் தனது விசேஷ அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏழு ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்திருக்கக் கூடாது. தன் நெஞ்சைத் தொட்டுக் கேட்டால் இந்த விடைகள்தான் ஒவ்வொரு இந்தியனுக்கும் கிடைக்கும்.

 

சரி, இப்படியும் நினைத்துப் பார்ப்போம். ராஜீவ் கொலையாளிகளின் விடுதலைக்காக தமிழக அமைச்சரவை கவர்னருக்கு அளித்த ஆலோசனையில் நியாயம் இருக்கும், அது சிந்தனை மிக்கதாக இருக்கலாம் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். ஒரு முன்னாள் பிரதமரின் கொலைகாரர்களுக்கே இந்தச் சலுகை உண்டென்றால், வரைமுறை இல்லாமல் எந்தக் கொலைகாரனையும்  ஒரு அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்யக் கேட்க முடியுமே? அதற்கு எந்த கவர்னரும் மறுப்பு சொல்லாமல் கையெழுத்துப் போடவேண்டுமே? அதுதான் நமது சட்டமா? உதாரணத்திற்கு,  2008-ல் மும்பைக்கு வந்து 166 பேரை சுட்டுக் கொன்ற அஜ்மல் கசாப்-புக்கும் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பட்டு, பின்னர் அதுவும் இல்லாமல் அவன் வெளியே வர மஹாராஷ்டிர அமைச்சரவை கவர்னருக்கு ஆலோசனை சொல்லலாமா? சொன்னால் அதையும் கவர்னர் ஏற்றுக் கையெழுத்துப் போட வேண்டுமா? அந்த ஆலோசனையைக் கூட ‘சிந்தனையற்ற’ ஆலோசனை, ஆகையால் அதைக் கவர்னர்  ஏற்க வேண்டியதில்லை என்று சட்டம் பார்க்காதா?

 

இல்லை, இதுதான் நாட்டின் உண்மை நிலவரமா? மும்பையில் படுகொலைகள் செய்த கசாப்-பிற்கு தண்டனைக் குறைப்பு அளித்து விடுதலையும் கொடுத்தால், அதற்குத் துணை போகும் கட்சி மஹாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. ஆனால் நாட்டின் முன்னாள் பிரதமரே தமிழக மண்ணில் கொடூரமாகக் கொல்லப்பட்டாலும், அவரோடு பதினான்கு அப்பாவிகள் பலியானாலும், குற்றவாளிகள் அனைவருக்கும் முதலில் தண்டனைக் குறைப்பு, பின்னர் விடுதலை என்று வெட்கம் இல்லாமல் ஏற்பாடு செய்த திராவிடக் கட்சிகள்  மீண்டும் மீண்டும் தமிழ் நாட்டில் ஆட்சிக்கு வரலாம்.

 

எல்லாவற்றையும் விடுங்கள். கடைசியாக, ஒரு கற்பனை செய்து பார்க்கலாம். ஒரு பயங்கரவாதி ஏதாவது ஹை கோர்ட் கட்டிடத்தின் மீது குண்டு போட்டுப் பத்து நீதிபதிகளை அநியாயமாகக் கொலை செய்துவிடுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது நடக்க வேண்டாம், வெறும் கற்பனையாகவே இருக்கட்டும். ஆனால் அப்படி நடந்தால், அந்தக் குற்றத்திற்காகப் பிடிபட்டு தண்டிக்கப் படும் கொலையாளி எவனும் ஒரு மாநில அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் கவர்னரின் கட்டாய ஒப்புதலுடன் வெளிவரமாட்டான் என்று நாம் நம்புவோம். இந்தக் கற்பனை நிகழ்விலாவது மாநில அமைச்சரவையின் பாசமிகு ஆதரவைப் பெறும் ஒரு பயங்கரவாதி தண்டனைக் குறைப்பு பெற்று தப்பிக்காமல் இருக்கட்டும். ஒரு வகையில் இது தேசாபிமான நல்ல நினைப்புதானே?  

* * * * *

Copyright © R. Veera Raghavan 2022

Saturday 29 October 2022

அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: கேஜ்ரிவாலின் கோஷம் - "நோட்டுல சாமியைப் பாத்து, போடுங்கம்மா ஓட்டு!"

 

- ஆர். வி. ஆர்

 

 

ஜாம் ஜாம்னு இன்னிக்கு டெல்லி முதல் மந்திரியா இருக்கார் கேஜ்ரிவால். அவர் தொடங்கின கட்சிதான் ஆம் ஆத்மி கட்சி. அந்தக் கட்சியோட தேர்தல் சின்னம் தெரியுமில்லையா? அதான், விளக்குமாறு.

 

கேஜ்ரிவாலுக்கு பளிச்னு வெளில சொல்ல முடியாத ஒரு பெரிய ஆசை இருக்கு. என்னன்னா, அவர் சீக்கிரமா நம்ம நாட்டு பிரதம மந்திரி ஆயிடணும். அந்த மாதிரி ஆசை மம்தா பானர்ஜிக்கும் இருக்கு, ராகுல் காந்திக்கும் இருக்கு. நித்திஷ் குமாரும் ஓரக் கண்ணுல அப்பிடி ஆசைப் படறார். ஆனா கேஜ்ரிவால் தான் இதுல ராட்சஸ ஆசை வச்சிண்டிருக்கார். அது அவருக்கே தெரியாம மறைமுகமா வெளிப் பட்டுடுத்து. எப்பிடின்னு தெரிஞ்சா சிரிப்பேள். ஏற்கனவே சிரிச்சிருப்பேளே!

 

        இன்னும் ரெண்டு மாசத்துல குஜராத் சட்டசபைத் தேர்தல் நடக்கப் போறது. கேஜ்ரிவால் அங்க போய் அவர் கட்சிக்காக பிரதமர் மோடியை எதிர்த்தும் பிரசாரம் பண்ணிண்டிருக்கார்.  இந்த சமயத்துல, திடீர்னு அவர் மோடிக்கு ஒரு ஐடியாவைச் சொல்லிருக்கார். இனிமே இந்திய ரூபாய் நோட்டுகள்ள ஒரு மாறுதல் பண்ணணும்னார். "ரூபா நோட்டுல ஒரு பக்கம் வழக்கம் போல காந்தி படம் இருக்கட்டும். மறு பக்கத்துல லட்சுமி, விநாயகர்னு சாமி படமா போடுங்கோ. லட்சுமி வளமைக்கு அதிபதி. விநாயகர் தடங்கல்களை நீக்குவார். அவா உருவம் நம்ம ரூபா நோட்டுல இருந்தா நம்ம பொருளாதாரம் முன்னேறும்"னு பத்திரிகையாளர்கள் முன்னாடி பேசிருக்கார், மூணு நாள் முன்னாடி. சிரிக்க முடியறவா சிரிக்கலாம். முடியாதவா அழலாம்.

 

கேஜ்ரிவால் அப்பிடிப் பேசினதுக்கு அவரோட இந்த நினைப்புதான் அடிப்படையா இருக்கணும்:  

 

‘ஹிந்துக்களோட ஓட்டு மோடியோட பா.ஜ.க-வுக்கு நிறையப் போறது. அதுக்கு ஒரு காரணம், மோடிக்கு ஹிந்து மதத்துல இயற்கையாவே பற்று இருக்கு, ஹிந்துக் கோவில்களுக்குப் போறார், சாமி கும்பிடறார், அது நாடு பூரா டிவி-ல தெரியறது. அந்தக் காட்சி ஹிந்துக்களுக்குப் பிடிக்கறது. அப்பழுக்கில்லாத நேர்மை, அசாதாரண  தலைமைப் பண்பு, அபாரமான மேடைப் பேச்சு, அவரோட மத்த சாதனைகள், எல்லாத்தோடயும் அவரோட ஹிந்து மதப் பற்றும்  சேர்ந்துண்டு ஹிந்துக்களை அதிகமா இறுக்கமா அவர்கிட்ட இழுக்கறது. இப்படிப் போயிண்டே இருந்தா நான் என்னிக்குப் பிரதம மந்திரி ஆறது?’

 

‘மோடியோட வெளிப்படையான அரசியல் நேர்மை, தலைமைப் பண்பு, சாதனை சரித்திரம், இதெல்லாம் எனக்குக் கிடையாது, வரவும் வராது. அப்ப ஒண்ணு பண்றேன். எண்பது பெர்சன்ட் ஹிந்துக்களை ஒரே ஐடியாவுல தெய்வத்தை நினைச்சு உருக வைச்சு என் பக்கம் இழுக்கறேன். இனிமே அச்சடிக்கிற ரூபா நோட்டுக்கள்ள ஒரு பக்கம் லட்சுமி, விநாயகர் அப்பிடின்னு ரெண்டு ஹிந்து தெய்வங்கள் உருவத்தைப் போடுங்கோன்னு மோடிக்கு பப்ளிக்கா ஒரு யோஜனை சொல்றேன். அது நடந்தா,  தினம் தன் கைக்கு வர ரூபா நோட்டுல லட்சுமி, விநாயகர் உருவங்களைப் பாத்து ஹிந்து ஜனங்கள் கண்ணுல ஒத்திப்பா. அப்பறம் நாடு பூரா லட்சோப லட்ச ஹிந்துக்கள் லோக் சபா தேர்தல்ல மோடியை ஒதுக்கி வைச்சு என்னோட விளக்குமாத்து சின்னத்துக்கு ஓட்டுப் போடுவா. சிறுபான்மை மக்களை வேற விதமா தாஜா பண்ணி அவா ஓட்டையும் வாங்கப் பாக்கறேன்.'


'இந்தப் பிளான்ல போனா என் கட்சிக்குத்தான் மெஜாரிட்டி கிடைக்கும். நான் பிரதமர் ஆயிடலாமே?’

 

    'ஆனா என்னோட யோஜனைக்கு உண்மையான காரணம் என்னன்னு நான் அசட்டுத் தனமா வெளில சொல்ல முடியுமா? பொருளாதாரத்தோட காசு பணம் சம்பத்தப் பட்டது. அதுனால, லட்சுமி விநாயகர் உருவங்களை ரூபா நோட்டுல சேர்த்தா நாட்டுப் பொருளாதாரம் உயரும், முன்னேற்றத்துக்குத் தடை இருக்காது, எல்லா மனுஷாளும் சீக்கிறமே சுபிட்சமா இருப்பா, நம்ம பிரயத்தனத்துக்கு மேல தெய்வ அனுக்கிரகமும் நமக்கு வேணும் அப்படிங்கற மாதிரி சொல்லிட்டுப் போறேன். இதை நம்புவோம், இல்லாட்டி தெய்வக் குத்தமா ஆகும்னு நிறைய ஹிந்துக்கள் நினைப்பாளே?’

 

‘ஒருவேளை என யோஜனையை மோடி செயல் படுத்தலைன்னா? ரூபா நோட்டுல லட்சுமி விநாயகர் தெய்வங்களை நாம பாக்க முடியாம பண்ணினவர் மோடிதான்னு நினைச்சு ஹிந்துக்கள் அவர் மேல கோபப் படட்டும். இந்தியப் பொருளாதாரம் பெரிசா முன்னேறாததுக்குக் காரணம், ரூபா நோட்டு டிசைனை நான் சொன்னபடி மாத்தலை, அதான் காரணம்னு அப்ப சொல்றேன். மோடி ஓட்டுக்கள் என் பக்கம் நிறையத் திரும்புமே?’

 

கேஜ்ரிவால் தலைக்குள்ள இந்த மாதிரி எண்ணங்கள் ஏன் தறி கெட்டு ஓடும்னா,  அவர் கிட்ட குயுக்தி நிறைய இருக்கு.  அவர் கெட்டிக்காரர் தான். ஆனா தகாத எண்ணம், கெட்ட எண்ணம், இதுகளோட சேர்ந்த கெட்டிக்காரத்தனம் இருக்கே, அதுக்குப் பேர்தான் குயுக்தி.

 

மதத்தை நம்பறது, தெய்வத்தை நம்பறது, இதெல்லாம் அடிப்படைல என்னங்கறேள்? சங்கடங்கள் நிறைஞ்ச நம்ம வாழ்க்கைல ஒரு சமாதானம், அமைதி தேடறதுக்கு அவா அவா ஏத்துண்ட, நம்பிக்கை வச்சிருக்கற, ஒரு மார்க்கம். அதுக்கும் பொருளாதாரக் கொள்கைகளுக்கும் விஞ்ஞானத் தத்துவங்களுக்கும் முடிச்சுப் போட வேண்டிய அவசியமில்லை.  ஐ.ஐ.டில எஞ்சினீரிங் படிச்ச கேஜ்ரிவாலுக்கு இது நன்னாத் தெரியும். ஆனா அவரோட பிரதம மந்திரி ஆசையும் அவர் குயுக்தியும் ஒண்ணா கலந்து அவரை அசட்டுத்  தனமா பேச வச்சிருக்கு.

 

கேட்டா, இந்தோனீஷியா நாட்டுல ரெண்டு பெர்சன்ட்டுக்கு குறைவாதான் ஹிந்துக்கள், எண்பத்தி ஐந்து பெர்சன்ட்டுக்கு மேல முஸ்லிம்கள், அந்த நாட்டு நாணய நோட்டுல விநாயகர் படம் இருக்கேன்னு விதண்டாவாதம் பண்றார் கேஜ்ரிவால். நம்ம நாட்டுல இப்ப இருக்கற அரசியல் சமூக நிலைமை என்னன்னு பாக்காம ‘இன்னொரு நாட்டுல அப்படி இருக்கேன்னு’ குழந்தைத் தனமாவா ஒரு முதல் மந்திரி பேசுவார்? அது மட்டும் இல்லை. வினாயகர் படம் போட்ட இந்தோனீஷிய 2,000 ரூபாய் நோட்டுக்கள்  பதினாலு வருஷத்துக்கு முன்னாலயே புழக்கத்துலேர்ந்து  அந்த நாடு எடுத்தாச்சு, இப்ப விநாயகர் படம் போட்ட நோட்டு அங்க இல்லைன்னு இன்டர்நெட் சொல்றது.    

 

சரி, இப்பிடியும் நினைச்சுப் பாக்கலாம். ‘ஹிந்து ஓட்டுக்களை ஈஸியா வாங்கணும்னு கேஜ்ரிவால் நினைக்கலை. தான் சொன்னது நிஜமாவே நாட்டுக்கு நல்லது, அதுனால நம்ம பொருளாதாரத்துக்கும் தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும்னுதான் கேஜ்ரிவால் அப்படிப் பேசினார்னு  ஒரு பேச்சுக்கு வைச்சுக்கலாம்.  இவர் பேசினதை, இவருக்குப் பதிலா மோடி பேசினார்னு நினைச்சுப் பாருங்கோ. அப்ப முதல்ல மோடி மேல பாயற ஆசாமிகள்ள கேஜ்ரிவாலும் இருப்பார். உண்டா இல்லையா? அப்பறம் எப்பிடி கேஜ்ரிவால் நல்லெண்ணத்தோட மோடிக்கு யோஜனை சொன்னார்னு நினைக்க முடியும்?  


மோடி ஐடியா சொல்லி லட்சுமி விநாயகர் படங்களை  நம்ம ரூபா நோட்டுல போட்டா அந்த தெய்வங்கள் நாட்டுக்கு அனுக்கிரகம் பண்ணாது, அது நாட்டைப் பிளக்கற ஹிந்துத்வா, ஆனா தான் சொல்லி அது நடந்தா அந்த தெய்வங்கள் நமக்கு அனுக்கிரகம் பண்ணும்னு கேஜ்ரிவால் நினைக்கிறவர். ஏன்னா, பிரதமர் ஆகறதுக்கு வேற உருப்படியான வழி அவருக்குத் தெரியலை.

 

இப்பிடிப் பித்துக்குளி யோஜனை சொல்ற கேஜ்ரிவாலைத் திருத்தவே முடியாதான்னு கேட்டா, அதுக்கு ஒரே பதில்தான்: அதெல்லாம் நம்மளால ஆகற காரியமில்லை. லட்சுமி விநாயகர் தெய்வங்கள் நினைச்சா நடக்குமோ என்னவோ?

 

* * * * *

 

Copyright © R. Veera Raghavan 2022

Wednesday 26 October 2022

பாருக்குள்ளே நல்ல ஆசை!

 -- ஆர். வி. ஆர்

 

 

 

 

இரவில் தூங்கிய ஸ்டாலினும் – இனி

தேசியம் ஓங்கிய தமிழ்நாடும்

 

 

மனதில் முதிர்ந்த ராகுலும் – சில

மர்மங்கள் உதிர்ந்த சோனியாவும்

 

 

புத்தி தொலைக்காத சிதம்பரமும் - பதவி

மாண்பு குலைக்காத மன்மோகனும்

 

 

தலித்தால் தழைக்காத மாயாவும் - இங்கு

அதுபோல் பிழைக்காத திருமாவும்

 

 

உறவுகள் செழிக்கும் ஆட்சிமுறை - அதை

அறவே கழிக்கும் அகிலேஷும்

 

 

காலை வாறாத நித்திஷும் - லேசில்

நிறம் மாறாத உத்தவ்வும்

 

 

அரசிலும் மாட்டின் உணவிலும் - தூய

வெளிப்படை காட்டும் லாலுவும்

 

 

மமதை மறைந்த மம்தாவும் - புது

வளமை குறைந்த கே.சி.ஆரும்

 

 

கயமை குன்றிய பவாரும் - இந்த

தேசம் ஒன்றிய பரூக்கும்

 

 

தனி ஆசைகள் விட்ட கேஜ்ரியும் - நம்

காலம் தொட்ட கம்யூனிஸ்டும்

 

 

லஞ்சம் களைந்த அரசினரும் - நல்

நெறிகள் விளைந்த ஊடகமும்

 

 

நாடு சிறக்கக் காண்போமா? - பெரும்

கனவு பறக்கக் கலைவோமா?

 

  


* * * * *


Copyright © R. Veera Raghavan 2022