|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: முதலமைச்சரின் எலும்பை உடைப்பேன் என்று ஒரு திமுக
எம்.எல்.ஏ பொதுவெளியில் பேசி இருக்கிறாரே? பதில்: தொடக்கத்திலிருந்தே
திமுக தலைமை இரட்டை அர்த்த வசனங்கள் பேசியதுண்டு; ஹிந்து
மதத்தை இழித்துப் பேசியதுண்டு. இவை இரண்டுமே வரம்பு மீறியவை. ஒரு கட்சியின்
தலைமை இவ்வாறு வரம்பு மீறினால், கீழ்மட்டத்
தலைவர்களும் நிர்வாகிகளும் அதே வகையில் வரம்பு மீறுவார்கள்; அதற்கு மேல், வன்முறைப்
பேச்சு, வன்முறைச் செயல்கள் போன்ற வரம்பு
மீறல்களிலும் ஈடுபடுவார்கள் - இதுகுறித்து கட்சிக்குள் என்ன பேச்சு நடக்கிறது
என்பது யாருக்கும் தெரியாது. |
|
2. கேள்வி: "தமிழ்நாட்டில் காமராஜரின் 9 ஆண்டுகால
ஆட்சியில் லஞ்சம் என்பதே கிடையாது. புதிதாகப் பொறுப்பேற்ற தவெக ஆட்சியிலும்
லஞ்சத்தைத் தவிர்க்கும் முயற்சி நடைபெறுகிறது. தமிழகத்தில் மீண்டும் லஞ்சம்
தவிர்த்த ஆட்சியாக அடுத்த ஐந்தாண்டுகள் இருக்க வேண்டும்" என்று காங்கிரஸ்
தலைவர் ப. சிதம்பரம் பேசி இருக்கிறாரே? பதில்: தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்தபோது
அக்கட்சி தலைமை தாங்கிய கூட்டணியில் காங்கிரஸ் இருந்தது. அப்போது, லஞ்சம் தவிர்த்த காமராஜரின் 9 ஆண்டுகால ஆட்சியை நினைவுகூர்ந்து அதைப்போல் திமுக ஆட்சி நடைபெற வேண்டும்
என்று ப. சிதம்பரம் பேசியதில்லை. அவ்வாறு பேசாமல் இருந்தால் திமுக-வுக்கு
சங்கடம் வராது, தனக்கும் வசதியானது, என்று சிதம்பரத்திற்குப் புரிந்தது. அடுத்ததாக, 2026 சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ்-தவெக
கூட்டணி அமையாமல் இருக்கவும், முன்பிருந்த காங்கிரஸ்-திமுக கூட்டணி தொடரவும் சிதம்பரம் தன்னாலான
முயற்சிகள் செய்து வெற்றி பெற்றார். திமுக தோற்று தவெக ஆட்சி அமைத்து, லஞ்சத்திற்கு எதிராகத் தவெக முதலமைச்சர்
குரல் கொடுக்கவும் சிதம்பரத்திற்குச் சட்டென்று காமராஜர் ஆட்சி நினைவுக்கு
வருகிறது. பிழைக்கத் தெரிந்த மனதிற்குப் பேசாமல்
இருக்கத் தெரியும், பேசவும் தெரியும். |
|
3. கேள்வி: அரசு வேலைகளுக்காக லஞ்சம் பெறப்படுவதை முதலமைச்சர்
விஜய் கடுமையாக எதிர்த்துக் குரல் கொடுக்கிறார். இதனால் லஞ்சம் வாங்கும் அரசுப்
பணியாளர்கள் விஜய் மீது அதிருப்தி கொள்வார்களா, அவர்களின் மனநிலை என்னவாக
இருக்கும்? பதில்: அமைச்சர்கள்
மட்டத்தில் லஞ்சம் இல்லை என்றால், லஞ்சம்
வாங்கும் பெருவாரியான பிற அரசுப் பணியாளர்கள் மத்தியில் லஞ்சம் மெள்ள மெள்ள
நன்றாகக் குறையும் - முற்றிலும் நீங்காது என்றாலும். ஆகவே அமைச்சர்களை, அதுவும் ஒரு சில துடிப்பான அமைச்சர்களை, விஜய் கண்காணிப்பில் வைத்திருப்பது அவசியம். என்ன இருந்தாலும், வேறு ஒன்றிரண்டு கட்சிகளின் ஆட்சி வராதா
என்று பல லஞ்சப் பேர்வழிகள் உள்ளூர ஏங்கலாம். திராவிட மண் கலந்திருப்பதுதான்
தமிழ் மண். |
|
4. கேள்வி: மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வு வினாத்தாள்
அண்மையில் கசிந்தது என்பதால், நடந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு
நடத்தப்பட்டது. இருந்தாலும் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதற்காக, மத்தியக் கல்வி
அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யவேண்டும் என்று கோரி கரப்பான்பூச்சி
ஜனதா கட்சியினர் டெல்லியில் போராட்டம் செய்கிறார்கள். அந்தக் கோரிக்கை
நியாயமானதா? பதில்: நீட் வினாத்தாள் கசிவில் அமைச்சர் நேரடியாக
சம்பந்தப் பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டோ நிரூபணமோ இல்லை. மத்திய அரசை
எப்படியாவது சங்கடப் படுத்தவேண்டும் என்பது போராட்டத்தின் முக்கிய நோக்கமாகத்
தெரிகிறது. நீட் வினாத்தாள் கசிவைத் திட்டமிட்டு
நடத்தியவர்கள், அதனால் பலன் அடைந்தவர்கள் ஆகியோர் கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
அந்த முயற்சி நடக்கிறது. வினாத்தாள் கசிவுக் குற்றத்தை யாரோ
செய்திருந்தாலும் மத்தியக் கல்வி அமைச்சர் ராஜினாமா செய்யவேண்டும் என்று கேட்பது
நியாயம் இல்லை. அது நியாயம் என்றால், அவரைக் கல்வி அமைச்சராகத் தேர்வு செய்த
பிரதமரும் அதே ரீதியில் பழி சுமந்து பதவி விலக வேண்டுமா? நீட் வினாத்தாள் கசிந்தது வெளிப்படை. அது
மாணவர்களைப் பாதித்த பெரிய பிரச்சனை என்பதும் வெளிப்படை. ஆனால் அதுகுறித்துப்
போராட்டம் நடத்தும் அமைப்பின் உள்நோக்கம் வெளிப்படையாகத் தெரியாது. மத்திய
அரசாங்கம் இந்தப் போராட்டத்தைக் கடுமையாக அணுகினால், அரசாங்கம் ஏதோ நீட் வினாத்தாள் கசிவையும்
அதைச் செய்தவர்களையும் பாதுகாக்கிற மாதிரித் தோன்றும். அது போராட்டம் செய்யும்
தலைவர்களின் உள்நோக்கத்தை மேலும் மறைத்து அவர்களை உன்னதப்படுத்தும். ஆகையால்
மத்திய அரசு இந்தப் போராட்டத்தைப் பொறுமையாகக் கையாள்வது அவசியம். அதை மத்திய
அரசு செய்கிறது. |
|
5. கேள்வி: நீட் வினாத்தாள் கசிந்தது என்பதற்காக மத்தியக் கல்வி
அமைச்சரின் ராஜினாமாவைக் கோரி டெல்லியில் போராட்டம் நடத்தும் அமைப்பிற்கு 'கரப்பான்பூச்சி
ஜனதாக் கட்சி' என்றா பேர்
வைப்பார்கள்? கேவலமாக இல்லை? பதில்: உங்களுக்கு வாய் இருக்கிறது, நீங்கள்
கேட்கலாம். தான் கேவலம் செய்யப்படுவதை வாயில்லாத கரப்பான்பூச்சி யாரிடம் சொல்லி
அழும்? |
|
பகுதி 115 // 22.07.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com |