Monday, 20 July 2026

கேள்வி-பதில் (20.07.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: 2026 சட்டசபைத் தேர்தலில் திமுக தோற்று ஆட்சியை இழந்தது. அதன் தலைவர் உதயநிதி, "இந்தத் தேர்தலில் நமது எதிரி யார் என்பதை நாம் அடையாளம் காணாமல் போட்டியிட்டோம்" என்று தனது கட்சியின் தவறு குறித்துப் பேசினார். அந்தத் தேர்தலில் இன்னும் மோசமாகத் தோற்ற அதிமுக-வின் தவறு என்ன?

 

பதில்:  தனது கட்சிக்குள்ளேயே பல இரண்டாம் கட்டத் தலைவர்களை எதிரிகளாக்கிக் கொண்டு, கூட்டணியில் உள்ள முக்கியக் கட்சியிடம் நட்பில்லாமல் போன எடப்பாடி பழனிசாமியைப் பொதுச்செயலாளராகக் கொண்டிருந்தது, அதிமுக-வின் முக்கியத் தவறு.

 

 

2. கேள்வி: "2026 தேர்தலில் திமுக தோற்றது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் கூட்டணி ஏன் நிலைக்கவில்லை? திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் அதிவேகமாக வெளியேறி தவெக-வுக்கு ஆதரவு கொடுக்கும் அளவுக்கு, திமுக-வுடனான உறவு காங்கிரஸுக்கு ஏன் கசந்தது?" என்று விசிக தலைவர் திருமாவளவன் கேட்கிறாரே?

 

பதில்: அரசியல் லாப நோக்கத்தைக் கணித்து அதன்படி கூட்டணிகள் அமைவதும் கலைவதும் திருமாவளவனுக்குத் தெரியும். அப்படித்தான் அவரும் செயல்படுகிறார் - அதிலும் அவர் கட்சி இந்தக் கூட்டணியில் இருக்கிறதா, அந்தக் கூட்டணியில் இருக்கிறதா என்று யாருக்கும் தெரியாதபடித் தனது கட்சியின் ஆதாயத்தைப் பேணுவதில் திருமாவளவன் கிங்.

 

 

3. கேள்வி: தமிழகத்தில் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் குறித்துப் புகார் தெரிவிக்க வசதியாக, வாட்ஸாப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இது போக, "ஊழல் புகாரில் சிக்கினால், அமைச்சர்களின் பதவி உடனடியாகப் பறிக்கப்படும்; தவறு செய்தவர்களில் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எனப் பார்க்க மாட்டேன்" என்று தனது அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பேசியதாகவும் செய்திகள் வருகின்றனவே?

 

பதில்: "விஜய் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, தமிழக மக்கள் லஞ்சம் ஊழல் என்றால் என்ன என்பதே தெரியாமல் நிம்மதியாக வாழ்ந்தனர். மாநிலத்தில் இல்லாத லஞ்ச ஊழல் எனும் பூதத்தை விஜய் கற்பனை செய்துகொண்டு, அதை அடக்க நினைப்பது நகைப்புக்குரியது" என்று திமுக மற்றும் அதிமுக தலைவர்கள் விஜய்யைக் கண்டித்து அறிக்கை விடவில்லை. லஞ்ச ஊழலுக்கு எதிரான விஜய்யின் அணுகுமுறையை அவர்கள் வரவேற்கவும் இல்லை. திமுக, அதிமுக தலைவர்களுடைய மௌனம் எதையோ உணர்த்துகிறது.

 

 

4. கேள்வி: "என் வாழ்வில் இரு பெருந்தவறுகளைச் செய்துவிட்டேன். ஒன்று, 2006-ல் அதிமுக-வுடன் உடன்பாடு வைத்தது. அப்போது சில மதிமுக நிர்வாகிகள் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவைச் சந்திக்க வைத்தனர். அந்த நிர்பந்தத்திற்கு நான் உடன் பட்டேன். 2017-ல், பாஜக-வை எதிர்ப்பதற்காகத் திமுக-வுடன்  உடன்பாடு செய்தது பெரும் பிழை. சட்டசபைத் தேர்தலில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேசியபோது, 'நான்கு இடங்கள் தான் உங்கள் கட்சிக்கு; மறு பேச்சுக்கு இடமில்லை. இதை ஏற்று, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும்' என வலியுறுத்தி முடிவைத் திணித்தனர்" என்று மதிமுக தலைவர் வைகோ அறிவித்திருக்கிறாரே?

 

பதில்: மதிமுக போன்ற சிறிய கட்சி ஒரு கூட்டணியில் சேரும்போது, வாக்காளர்களிடம் அந்தக் கட்சிக்கு உள்ள அரசியல் சக்திக்கு ஏற்பத்தான் கூட்டணிக்குள் அந்தக் கட்சிக்கு மதிப்பும் தொகுதிகளும் கிடைக்கும் - அதன் தலைவர் மேடைகளில் என்னதான் ராஜமுழக்கம் செய்தாலும்.  தனது பழைய கூட்டணிகள் எப்படித் தவறானவை என்று வைகோ வியாக்கியானம் செய்யாமல் இருந்தால் 'அரசியலில் கூட்டணி மாறுவது கட்சிகளிடையே சகஜம்' என்று அனைவரும் வைகோவை சாதாரணமாக நினைத்துப் போய்விடுவார்கள். ஆனால் அவர் விளக்கமும் நியாயமும் சொல்லவந்து பரிதாபமாகக் காட்சி தருகிறார்.

 


5. கேள்வி: அரசியலில் குதிரை பேரம் நடப்பதாகத் தினமும் செய்திகள் வருகின்றன. இது பற்றி விவரிக்கவும்.

 

பதில்: இந்தவகைப் பேரத்தில் குதிரைகளை வாங்குபவர் மட்டுமல்லாமல், விற்பனையாகும் குதிரைகளும் கெட்டிக்காரத்தனம் மிக்கவை. ஆகையால் வாங்குபவர் தவிர, விற்கப்படும் குதிரைகளும் நல்ல பலன் அடைகின்றன.

 

இந்தக் குதிரை பேரத்திற்கு முன்னோடியாக, வழிகாட்டியாக இருப்பது, தேர்தலின்போது நடைபெறும் கன்றுக்குட்டி பேரம். மக்கள்தான் கன்றுக்குட்டிகள் - சற்று வளர்ந்த கன்றுக்குட்டிகள்.

 

கன்றுக்குட்டி பேரத்தில், வாங்குபவர்களுக்கு மட்டும் அமோகமான பயன்கள் கிடைக்கும். தன்னை யார் வாங்குவார் என்று காத்துக் கிடக்கும் அப்பாவி கன்றுக்குட்டிகளுக்கு ஒன்றிரண்டு வாழைப்பழம் மட்டும் கிடைக்கும்.

 

தான் உண்டு, தனக்குக் கிடைக்கும் வாழைப்பழம் உண்டு என்று இருப்பவை கன்றுக்குட்டிகள். குதிரைகள் யார், அவைகளுக்குக் குதிரை பேரத்தில் ஏன் நல்ல பலன்கள் கிட்டுகின்றன என்பதைச் சொல்ல அவசியமில்லை.

 

கன்றுக்குட்டிகளுக்கு, கெட்டிக்காரக் குதிரைகள் பற்றி அவ்வளவாகத் தெரியாது. குதிரைகளுக்கு, கன்றுக்குட்டிகளின் பாவப்பட்ட நிலை நன்றாகத் தெரியும்.


பகுதி 114 // 20.07.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

No comments:

Post a Comment