Saturday 19 February 2022

கண்கள்

 -- ஆர். வி. ஆர்

 

  

 

சிங்கத்தின் கண்களில் ஆதிக்கம் அமைத்து

சேவலின் கண்களில் செருக்கைச் சேர்த்து

 

 

யானையின் கண்களில் பொறுமையைப் பூட்டி

பூனையின் கண்களில் ஆர்வத்தை அமர்த்தி

 

 

எலியின் கண்களில் பீதியைப் பரப்பி

புலியின் கண்களில் ஆக்ரோஷம் அடைத்து

 

 

நாயின் கண்களில் நன்றியை நிறுத்தி

பசுவின் கண்களில் சாந்தம் செதுக்கி

 

 

மானின் கண்களில் மிரட்சி மிதக்க

மனிதன் கண்களில் பாசாங்கைப் புதைத்து

 

 

அவரவர் தன்மையைக் காட்டியும் மறைத்தும்

அற்புதம் செய்வது விழிகள்தானோ!

 

   முதல் பிரசுரம்:  பூபாளம், பிப். 2022

 

* * * * *

 

Copyright © R. Veera Raghavan 2022

Monday 7 February 2022

நீட் எதிர்ப்பில் வைரமுத்து: அடிக்கும் ஜால்ராவில் அபஸ்வரம்!

 - ஆர்.வி.ஆர்

 

       தமிழக சட்டசபை சென்ற செப்டெம்பர் மாதம் நிறைவேற்றிய "நீட் வேண்டாம்" சட்ட மசோதாவை கவர்னர் ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பினார். அது பற்றி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க, முதல்வர் ஸ்டாலின் தலைமையில்  சட்டசபை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் இந்த மாதம் 5-ம் தேதி நடக்கப் போவதாக அறிவிப்பு வந்தது. உடனே கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் இப்படி ஜால்ரா தட்டினார்:



திருப்பி அனுப்புவது ராஜ்பவனின் மேட்டிமை
மீண்டும் அனுப்புவது சட்டமன்றத்தின் உரிமை

நாளை
முதலமைச்சர் கூட்டும்
அனைத்துக்கட்சிக்
கூட்டத்தின் முடிவை

ராஜ்பவனும்
ஜனாதிபதி மாளிகையும் மட்டுமல்ல

இருள்கட்டிக் கிடக்கும்
ஏழைக் குடிகளின்
ஓலைக் குடிசைகளும்
கண்ணில் நீரோடு
கவனிக்கின்றன

வைரமுத்து (@Vairamuthu) February 4, 2022


           என்ன சொல்கிறார் வைரமுத்து?


    ஒரு மாநில சட்டசபையின் அதிகார வரம்புகள், பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதியின் அதிகாரங்கள், நீட் தேர்வு அவசியம் என்று ஆறு வருடங்கள் முன்னரே சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு பற்றி எல்லாம் கவர்னரும் ஜனாதிபதியும் மறந்துவிட்டார்களாமா? அதனால் பிப். 5-ம் தேதி தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சி கூட்டம் நடப்பதற்கு முன் அது என்ன முடிவெடுக்குமோ என்ற நடுக்கத்தில் இருந்தார்களாமாஎழுதும்போது வைரமுத்துக்கே சிரிப்பு வரவில்லையா? வந்திருக்கும். இருந்தாலும், தான் தட்டும் ஜால்ரா சத்தம் முதல்வர் ஸ்டாலின் காதை எட்டினால் தனக்கு அவரிடத்தில் மதிப்பு கிடைக்கும் என்ற திருப்தி அடைந்து, இன்னும் ஓங்கி ஒரு தட்டு தட்டுகிறார் - அது அவரது அடுத்த வரிகள்!

 

   5-ம் தேதி கூட்டத்தின் முடிவை ‘ஏழைக் குடிகளின் ஓலைக் குடிசைகளும்’ ‘கண்ணில் நீரோடு’ கவனிக்குமாம். அந்தக் கூட்டத்தின் முடிவை, அதன் தொடர் நடவடிக்கைகளை, உண்மையில் கண்ணில் நீரோடு கவனிக்கிறவர்கள் யார்? 'நீட் தேர்வு வந்தபின் முன்னர் கோடிக்கணக்கில் வரியின்றிக்  கிடைத்த வரவுகள் போனதே’ என்று வருந்தும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின்  மறைமுக முதலாளிகள். பிறகு, 'அதனால் நமது இலவசப் பங்கும் மறைந்ததே’ என்று துடிக்கும் சில அரசியல்வாதிகள், ஆகியோர்தான் - 'ஏழைக் குடிகள்' இல்லை.

 

      சரி, 5-ம் தேதி சட்டசபைக் கட்சித் தலைவர்கள் எட்டிய முடிவைத் தொடர்ந்து நாளை (பிப். 8-ம் தேதி) தமிழக சட்டசபை கூடி, நீட் விலக்குக்காக முன்பு நிறைவேற்றிய  அதே மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கலாம். பின்பு அதுவும் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். பிறகு சட்டம் தனது வேலையைச் செய்யட்டும். அது என்ன வேலை என்பது அனைவருக்கும் போகப் போகத்தான் பகிரங்கமாகத் தெரியும். அதுவரை வீர வசனங்கள், விசனக் கவிதைகள் வந்து கொண்டிருக்கும். இப்போது நாம் இன்னொரு பக்கத்தைப் பார்க்கலாம்.  

 

      நீட் எதற்கு? தேவையான பள்ளிப் பாடங்களை நன்றாகப் புரிந்து கொண்ட மாணவர்களைப் பாரபட்சமில்லாமல் வெளிப்படையாகத் தேர்வு செய்து மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பதற்கு ஒரு வழிமுறை இது. இதன் அடுத்த பலன் என்ன? படிப்பில் சிறந்த மாணவர்களை மருத்துவர்களாக்கி, அவர்கள் மூலம் பொதுமக்களுக்குச் சரியான நல்ல மருத்துவ சிகிச்சை கிடைக்க வழி செய்யப் படுகிறது. அப்படிப் பயன் பெறும்  பொதுமக்களில் ‘ஓலைக் குடிசைகளில் வாழும் ஏழைக் குடிகளும்’ உண்டு. அதிக விவரம் அறிந்த வைரமுத்துக்கும் தமிழ்நாட்டில் நீட்-ஐ எதிர்க்கும் பல அரசியல்வாதிகளுக்கும்  இது தெரியும்.  காரண காரியமான பாசாங்கு, அவர்களை வேறுவிதமாகப் பேச வைக்கிறது, அவ்வளவுதான். இதை மேலும் இப்படி ஆராயலாம்.

 

       ஒவ்வொரு அரசியல் கட்சியும் அந்தக் கட்சியின் தலைவராக ஒருவர் வருவதற்கு ஒரு முறை வைத்திருக்கிறது. உதாரணமாக, நீட் எதிர்ப்பில் முன்னிலை  வகிக்கும் திமுக-வானது, கலைஞருக்குப் பின் அவர் மகன் ஸ்டாலின் என்று வைத்து, அடுத்ததாக அவர் மகன் உதயநிதியையும் அந்தப் பதவிக்காகத் தயாராக வைத்திருக்கிறது. நீண்டகால உள்கட்சி ஜனநாயகம் செழிக்க, உதயநிதிக்கும் மகன் இருக்கிறார். இது போன்ற கட்சித் தலைவர் தேர்வு முறையோடு ஒப்பிட்டால், நல்ல மருத்துவர்களை உருவாக்கக் கொண்டுவரப் பட்ட நீட் தேர்வு முறை வெளிப்படையானதா, அனைவருக்கும் அதிகபட்ச சமவாய்ப்புகள் அளிப்பதா,  இல்லையா?

 

   அடுத்தது: “ஏழை எளிய, கிராமப்புற விளிம்பு நிலை மாணவ சமுதாயத்தைப் பாதிக்கும்” என்பதால்  தமிழகத்தில் நீட்-ஐ எதிர்ப்பதாகச் சொல்கிறது திமுக (சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு: www.malaimalar.com, ஜனவரி 06, 2022). அதிமுக மற்றும் வேறு பல திமுக-ஆதரவுக் கட்சிகளின் நிலையும் அதுதான். அப்படியானால், நீட்-ஐ ஏற்றுக் கொண்ட மற்ற மாநில அரசியல் தலைவர்கள்  அனைவரும், வேண்டும் என்றே தங்கள் மாநிலத்தில் உள்ள ‘ஏழை எளிய, கிராமப்புற விளிம்பு நிலை மாணவர்’களுக்கு எதிராக செயல்படுகிறார்களா? அல்லது, நீட் தேர்வால்  அப்படியான மாணவர்களின் நலன்கள் பாதிப்பு அடைவது கூடப் புரியாத மக்குகளா மற்ற மாநிலத் தலைவர்கள்? நிச்சயமாக இரண்டும் இல்லை. தமிழகத்தில் நீட்-ஐ விலக்குவதால் தமிழக அரசியல் பெருந்தலைவர்களுக்கு ஏதோ எண்ணிப் பார்க்க முடியாத நன்மை கிடைக்கும் அல்லவா? அந்த நன்மை, மற்ற மாநிலங்களில் நீட் போவதால் அந்த மாநில அரசியல் தலைவர்களுக்குக் கிடைக்க வழியே இல்லை.  தமிழக அரசியல் தலைவர்களின் தனித்துவமான நீட்-எதிர்ப்புக்கு இதுதான் உண்மையான காரணமாக இருக்க முடியும்.  

       இன்னும் ஒரு படி மேலே போய் நாம் இதையும் நமது அரசியல் தலைவர்களிடம் கேட்கலாம்: யாருக்கு ஆதரவாகத் தமிழகத்தில் நீங்கள் நீட்-ஐ எதிர்ப்பதற்காகச் சொல்கிறீர்களோ, அவர்கள் எளிதாக மருத்துவர்கள் ஆனால் மட்டும் போதுமா? அவர்கள் எளிதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஆக ஆசைப்பட மாட்டார்களா? எளிதில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியிலாவது ஆட விரும்ப மாட்டார்களா? ஏன் இந்த வாய்ப்புகளும் அவர்களுக்கு சுலபமாகக் கிடைக்கவேண்டும் என்று நீங்கள் போராடவில்லை? நீட் எதிர்ப்பில் நீங்கள் உங்களுக்காக எதிர்பார்க்கும் சிலபல  பலன்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.பி.எல் விஷயத்தில் கிடைக்காது, அதனால் அந்தத் துறைகளிலும் பாசாங்கு செய்வது பயனற்றது,  என்பதாலா?

 

       ‘ஏழை எளியவர்கள்’, ‘கிராமவாசிகள்’, ‘விளிம்புநிலை மனிதர்கள்’ ஆகியோரின் கல்வித்தரம் உயர, வாழ்க்கை வசதிகள் பெருக, கடந்த சுமார் ஐம்பத்து ஐந்து வருடங்களாகத் தமிழக ஆட்சியில் மாறி மாறி அமர்ந்திருக்கும் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் உண்மையில் செய்தது, நிகழ்த்திக் காட்டியது, பெரிதாக இல்லை.  அரசு எளிதாக அள்ளி வீசும் இலவசங்களையும் சலுகைகளையும் எதிர்நோக்கி இருந்து, ஆனால் சொந்தக் கால்களில் எழுந்து நிற்கத் திணறும் நிலையிலேயே அந்த மக்களைத் தொடர்ந்து வைத்திருப்பதுதான் இரு கழகங்கள் புரிந்த சாதனை. அந்த மக்களின் பரிதாப நிலையைப் பயன்படுத்தி, தாங்கள்தான் அவர்களின் பாதுகாவலர்கள் என்ற மாயத் தோற்றம் கொடுத்து,  தமிழகத்தில் நீட்-ஐ ஆதரிப்பவர்கள் அந்த மக்களுக்கு ஏதோ  எதிரானவர்கள் என்று குயுக்தியாகச் சித்தரிக்க முனைகின்றன திமுக மற்றும் பிற நீட்-எதிர்ப்புக் கட்சிகள். அப்படியே தாங்கள், தங்கள் தலைவர்கள், பிழைக்கவும் தழைக்கவும் வழி தேடுகின்றன. இந்தக் காட்சிகளைத்தானே நாம் ‘கண்ணில் நீரோடு’ கவனிக்கவேண்டும்?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2022