Sunday, 26 April 2026

கேள்வி-பதில் (26.04.2026)


 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம், "மக்களுக்கு வழங்குவதை இலவசம் எனக் கூறாதீர்கள். அது 'யுனிவர்சல் பேசிக் இன்கம்'. அனைவருக்கும் அடிப்படை வருமானம் வேண்டும் என்றுதான் மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்கள் அமலில் உள்ளன" என்று தெரிவித்திருக்கிறாரே?

 

பதில்: ஒருவருக்கு உடம்பு சரியில்லை, சத்து மிகவும் குறைந்திருக்கிறது, ஒன்றிரண்டு நாட்கள் அவருக்கு ட்ரிப்ஸ் கொடுத்து விரைவாக உடம்பைத் தேற்றலாம், பிறகு நோயாளி வழக்கம் போல் உணவு சாப்பிடலாம் என்ற நோக்கில் ஒரு டாக்டர் ட்ரிப்ஸ் கொடுத்தால் புரிந்துகொள்ளலாம்.

 

வருடக்கணக்கில் ஒருவருக்கு ட்ரிப்ஸ் கொடுக்க நினைக்கும் டாக்டரைப் பற்றி ப. சிதம்பரம் இப்படிச் சொல்வாரா?  "ஒரு நோயாளிக்கு யுனிவர்சல் பேசிக் போஷாக்கு வேண்டும். அரசு செலவில் நடக்கும் அந்த ஆஸ்பத்திரியின் தலைமை டாக்டர், நோயாளிகளுக்கான உரிமை ட்ரிப்ஸ் திட்டத்தை அமல் செய்திருக்கிறார். அது பல வருடங்கள் நடக்கும். அதை வெறும் இலவசம் என்று சொல்லாதீர்கள்."

 

 

2. கேள்வி: மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டத் தேர்தலையொட்டி கொல்கட்டாவில் பேசிய திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, "மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் வெற்றியை உறுதி செய்தபின் டெல்லியைக் கைப்பற்றுவேன்" என்று கூறி இருக்கிறாரே?

 

பதில்: ஒருமுறை திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம், அவர் நாட்டின் பிரதமர் ஆவாரா எனக் கேட்டபோது, "என் உயரம் எனக்குத் தெரியும்" என்று பதில் சொன்னார். அதில் ஒரு நேர்மை இருந்தது. "நான் டெல்லியைக் கைப்பற்றுவேன்" என்று பேசும் மம்தா பானர்ஜியிடமும் அதே நேர்மை இருக்கிறது - தனக்கு ஒரு பைத்தியக்கார ஆசை இருந்தாலும், அதைச் சொன்னால் தனது பைத்தியக்காரத்தனம் வெளிப்பட்டாலும் பரவாயில்லை என்ற நேர்மை.

 

 

3. கேள்வி: "சட்டசபைத் தேர்தலுக்குப் பின் தமிழக அரசியல் களம் மாறும்" என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சொல்லியிருக்கிறாரே?

 

பதில்: 'தேர்தல் முடிவுகள் வந்தபின் சில அரசியல் தலைவர்கள் அணி மாறலாம்' என்று அவர் சொல்வதாக அர்த்தம். அந்தத் தலைவர்களில் அவரும் ஒருவரா என்பதை அவர் இப்போது வெளிப்படையாகச் சொல்ல முடியாது. பின்னர் நிலைமைக்கு ஏற்றபடி, "நான் அப்பொழுதே சொன்னேன்" அல்லது "நான் என்னைக் குறிப்பிடவில்லை. கள யதார்த்தத்தைச் சொன்னேன்" என்று அவர் அறிக்கை விட சவுகரியமான பேச்சு இது.

 

 

4. கேள்வி: சட்டசபைத் தேர்தலில் ஓட்டுப் பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படாத நிலையில் அறிக்கை வெளியிட்ட கவிஞர் வைரமுத்து, "மண், மொழி, மானம் காக்க, மீண்டும் திமுக-தான் ஆட்சிக்கு வரும்" என்று கூறி இருக்கிறாரே?

 

பதில்: 'வைரமுத்துவின் முக்கியத்துவம் காக்க, திமுக ஆட்சிக்கு வரவேண்டும்' என்ற தனது ஆசையை அவர் நேரடியாகச் சொல்லமுடியுமா?

 

 

5. கேள்வி: நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வராவிட்டால் அக்கட்சி என்ன மனநிலையில் இருக்கும்?

 

பதில்:  சாப்ட்வேர் தொழிலில், சிலருக்கு வேலை போய்ச் சம்பாத்தியம் போய்விடும். அப்போது அடுத்த வேலை கிடைக்கக் காத்திருந்து, மீண்டும் நன்றாகச் சம்பாதிக்கத் திட்டமிட்டு செயல்படுவார்கள். அரசியலிலும் தேர்தல் தோல்விக்குப் பின் மனம் தளராமல் அடுத்த வெற்றியையும், வெற்றியின் பலன்களையும், எதிர்நோக்கிச் செயல்படும் கட்சிகள் உண்டு. திமுக இதில் கிங். அதிமுக-வும் சளைத்ததல்ல.

 

பகுதி 84//26.04.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

Wednesday, 22 April 2026

கேள்வி-பதில் (22.04.2026)


 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால், பாஜக-வுக்குக் கைகட்டி நிற்கும் அதிமுக பொதுச் செயலர் பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்" என்று திமுக தலைவர் கனிமொழி கூறியுள்ளாரே?

 

பதில்: அடுத்த ஜென்மம் இருந்தால், ஊழல் மற்றும் தேசவிரோத அரசியல்வாதிகளை அடக்கி வைக்கும் குஜராத் மனிதர் நரேந்திர மோடி தமிழகத்தில் பிறக்கட்டும்.

 

 

2. கேள்வி: "மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்பட்டால்தான், மாநில வளர்ச்சி நன்றாக இருக்கும்" என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்னையில் கருத்து தெரிவித்திருக்கிறாரே?

 

பதில்: சுய நலன் மற்றும் மகன் மருமகன் நலன்களில் குறியாக இருக்கும் ஒருவர், மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்பட்டால், அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சி நன்றாக இருக்காது என்று அவருக்குத் தெரியும். அது பற்றிக் கவலைப்படாத சந்திரபாபு நாயுடு எதுவும் பேசலாம்.

 

 

3. கேள்வி: தமிழகம் வந்த ஆம் ஆத்மி கட்சித் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் சென்னையில் அளித்த பேட்டியில், "பிரசாரத்தின் போது தமிழக மக்கள் என்னை உற்சாகத்துடன் வரவேற்றனர்.  தமிழக மக்கள் பாஜக மீது வெறுப்புடன் உள்ளனர்" என்று கூறி இருக்கிறாரே?

 

பதில்: தமிழக மக்கள் பாஜக மீது வெறுப்பு கொண்டால் கூடப் பரவாயில்லை. குயுக்தி மன்னன், வெறுப்பரசியல் வேந்தன், அரவிந்த் கெஜ்ரிவாலைத் தமிழ் மக்கள் எதிர்காலத்தில் வரவேற்று ஆதரவு தரும் பாதகத்தைச் செய்யாமல் இருந்தால் போதும்.

 

 

4. கேள்வி: தனது கட்சிக்காகத் தேர்தல் பிரசாரம் செய்யும்போது, "இலங்கை, நேபாளத்தில் நடந்த புரட்சி இந்தியாவில் நடக்காது என்று சொல்ல முடியுமா?" என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கேட்டுள்ளாரே?

 

பதில்: அரசியல் பற்றி சீமான் ஒரு விஷயம் பேசும்போது - அதுவும் தேர்தல் சமயத்தில் வாக்கு சேகரிக்கும்போது -  இன்னொரு விஷயத்துக்குத் தாவுவதில், மரம் விட்டு மரம் மட்டுமல்ல, மலை விட்டு மலையும் தாவுவார். அறிவாந்தவராக இருந்தாலும் அவரிடம் சிந்தனை ஒழுங்கு இல்லை.

 

 

5. கேள்வி: "ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருடன் தவெக தலைவர் விஜய்க்கு நெருக்கமான உறவு இருக்கிறது" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளாரே?

 

பதில்: திருமாவளவனுக்கு நகைச்சுவை உணர்வு அறவே இல்லை என்ற ஒரு குற்றச்சாட்டு இருந்தது. அந்தக் குற்றச்சாட்டை, 'போடா டேய்' என்று சொல்லி அரைச் சிரிப்புடன் இடது காலால் உதைத்துத் தள்ளிவிட்டார் அவர்.

 

 

பிகு: நாளை நடக்கப் போகும் தேர்தலுக்காக, யாரை எதிர்த்தும் யாருக்கு ஆதரவாகவும் செய்யப்படும் பிரசாரம் அல்ல இது. வாக்காளர்கள் அனைவரும் சுதந்திரமாகத் தாங்கள் விரும்பியவர்களுக்கு வாக்களியுங்கள்.

 

பகுதி 83//22.04.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

Monday, 20 April 2026

கேள்வி-பதில் (20.04.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "ராஜராஜ சோழனையும் தாண்டி கோவில்களுக்குக் குடமுழுக்கு செய்தவர் சேகர் பாபு" என்று சட்டசபைக்குப் போட்டியிடும் திமுக அமைச்சர் சேகர் பாபுவைப் பாராட்டி கமல் ஹாசன் பிரசாரம் செய்திருக்கிறாரே?

 

பதில்: கமல் ஹாசன் இப்படிப் பேசுகையில், அருகில் அவரைப் பார்த்து நின்றிருந்த சேகர் பாபு உடனே வேறு புறம் முகத்தைத் திரும்பிக் கொள்வது வீடியோவில் தெரிகிறது. சேகர் பாபுவுக்கே சிரிப்பை அடக்க முடியவில்லையோ? உளறு நாயகன்.

 

 

2. கேள்வி: "பெரியார் என்ற பிம்பத்தைத் தமிழ்நாட்டில் அண்ணா, கருணாநிதி, பிறகு மு.க. ஸ்டாலின் ஆகியோர் தூக்கிப் பிடித்திருக்கிறார்கள். அதை உடைக்கவே முடியாது. இன்னும் ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் அது முடியாது" என்று திமுக அமைச்சர் எ.வ. வேலு சமீபத்தில் பேசி இருக்கிறாரே?

 

பதில்: வேலு சொன்ன ஐம்பது வருடத்தில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. அது புரிவதற்கு, முதலில் திமுக தலைவர் ஸ்டாலினுடைய தற்போதைய வயது தெரியவேண்டும். அவர் வயது 73, அவர் மகன் உதயநிதியின் வயது 48. ஸ்டாலின் தொடங்கி, திமுக தலைமைக் குடும்பத்தின் மூன்று தலைமுறையினரின் காதுகள் பல பத்தாண்டுகள் குளிரும் வகையில் பேசிவிட்டார் வேலு. வேலுவுக்கே வயது 75. மருத்துவக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளை நிறுவி நடத்துபவர். பெரியாரைப் போற்றியதில் வேலுவின் பிழைப்பு, அவருடைய தொழில் வளம், அவர் குடும்பத்தின் செழிப்பு ஆகியவை திமுக-வின் கீழ் நூறு சதவிகிதம் கேரண்டி. நமக்கு இதில் சம்பந்தமில்லை.

 

 

3. கேள்வி: லோக் சபாவில் ஒரு அரசு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக உறுப்பினர்கள் கருப்பு உடையணிந்து வந்ததைப் பார்த்த பிரதமர் மோடி ஏதோ சொல்ல, அதற்குப் பதிலளித்த திமுக எம்.பி. கனிமொழி, "கருப்பு என்பது காளி தேவியின் நிறம்" என்று தங்கள் உடைகளின் நிறத்தை நியாயப் படுத்தி அங்கு பேசி இருக்கிறாரே?

 

பதில்: இக்கட்டான சமயத்தில் திமுக-வினருக்கும் காளி தேவி உதவுவாள் என்று கனிமொழி புரிந்துகொள்ளலாம்.

 

 

4. கேள்வி: "தற்போது 543 எம்.பி-க்கள் உள்ளபோதே 3 மாதங்களுக்கு ஒரு முறைதான், ஒருவர் பேச 7 நிமிடம் வாய்ப்பு கிடைக்கிறது. தொகுதி சீரமைப்பால் 816 எம்.பி-க்கள் வந்தால் 5 மாதங்களுக்கு ஒரு முறை 3 நிமிடம் மட்டுமே பேச வாய்ப்பு கிடைக்கும்" என்று இளையான்குடியில் பேசியிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம். இதன் மூலம்,  லோக் சபா எம்.பி-க்கள் எண்ணிக்கையை அதிகரிக்க அவசியமில்லை என்று அவர் வாதிடுகிறார். இந்த வாதம் சரியா?

 

பதில்: சிதம்பரத்தின் பேச்சில் கெட்டிக்காரத் தோற்றம் மட்டும் இருக்கிறது.

 

சிதம்பரத்தின் கெட்டிக்கார ரூட்டில் போய், லோக் சபாவின் தற்போதைய எம்.பி-க்கள் எண்ணிக்கையைப் பாதி குறைத்து 272-ஆக மாற்றலாமா? அப்போது லோக் சபாவில் ஒரு எம்.பி இரண்டு மடங்கு நேரம், அதாவது 14 நிமிடங்கள், பேசலாமே - அது வேண்டாமா? எம்.பி எண்ணிக்கையைக் கால் பங்காகக் குறைத்து 136 என்று ஆக்கினால், லோக் சபாவில் ஒரு எம்.பி 28 நிமிடங்கள் பேசி அசத்தலாம் - அது பயன் தராதா?

 

இன்னொன்று. லோக் சபாவில் எம்.பி-க்கள் என்ன பேசினாலும், எவ்வளவு நேரம் பேசினாலும் பிரயோஜனம் இல்லை; பேசிய பிறகு தனது கட்சிக் கொறடாவின் உத்தரவின் படிதான் அவர் லோக் சபாவில் ஓட்டளிக்க வேண்டும் - இல்லாவிட்டால் அவருடைய எம்.பி பதவி பறிபோகலாம்.  ஆகையால் 3 நிமிடம் என்ன, 30 நிமிடம் கூட நீட்டி முழக்கி அவர் வெளியில் பேசட்டுமே - இப்போது சிதம்பரம் பேசின மாதிரி?

 

 

5. கேள்வி: "அமெரிக்க அதிபர் டிரம்பின் கட்டுப்பாட்டில் நமது பிரதமர் மோடி இருக்கிறார். அவர் குதி என்றால் இவர் குதிப்பார். அவர் கீழே கிட என்றால் இவர் கீழே கிடப்பார்" என்று ராகுல் காந்தி சென்னையில் பேசி இருக்கிறாரே?

 

பதில்: தான் பேசுவதை ஒருவராவது நம்புவாரா என்ற சிந்தனை ராகுல் காந்திக்கு இல்லை. காரணம்: ராகுல் காந்திக்கு உள்ளே ஒரு பைத்தியம் இருக்கிறது. அது பிதற்று என்றால் இவர் பிதற்றுவார். அது புளுகு என்றால் இவர் புளுகுவார்.

 

அமெரிக்க அதிபர் பதவி மாதிரி அல்லாமல், அந்தப் பைத்தியத்தின் பதவிக் காலம் நான்கு வருடங்கள் ஆனாலும் முடிவுக்கு வராது. அது சாஸ்வதம்.

 

பகுதி 82//20.04.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr