Sunday, 5 July 2026

கேள்வி-பதில் (04.07.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "திமுக-விலிருந்து குடும்பத்துடன் ஸ்டாலினும், அதிமுக-விலிருந்து பழனிசாமியும் விலகினால்தான் அந்தக் கட்சிகளுக்கு நல்லது நடக்கும்" என தவெக அமைச்சர் நிர்மல்குமார் கூறி இருக்கிறாரே?

 

பதில்: மாநிலக் கட்சிகள் பெரும்பாலும் ஒரு தலைமைக் குடும்பத்தின், அல்லது தலைமையைப் பிடித்து வைத்திருக்கும் ஒருவரின், நலனுக்காக ஒரு பண்ணை போல் நடத்தப் படுகின்றன. பண்ணையும் பண்ணையாரும் அங்கு உடலும் உயிரும் போலப் பின்னி இருப்பவை - எளிதில் அவற்றைப் பிரிக்க முடியாது.

 

 

2. கேள்வி: விஜய் என்ற தனி மனிதரை மையமாக வைத்து, அவரைச் சுற்றி இயங்கும் கட்சிதான் தமிழக வெற்றிக் கழகம். அவர் தலைமையில் தன்னலமற்ற சிறந்த ஆட்சி சாத்தியமா?

 

பதில்: தவெக-வும் விஜய் என்ற தனி மனிதர் மையமாக, 99% பிரதானமாக, இருக்கும் கட்சிதான். அவர் கட்சி சட்டென்று முதல்முறையாக ஆட்சிக்கு வந்தாலும், அரசு நிர்வாகத்தின் மேல்மட்டத்திலும் அடிமட்டத்திலும் முன்பே வளர்ந்திருந்த லஞ்சத்திற்கு எதிராக விஜய் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் பாராட்டத் தக்கவை, யாரும் எதிர்பாராதவை. இதில் அவர் தொடர்ந்து தன்னை நிரூபிக்க வேண்டும். இதற்காக அவர் கவனிக்கப் படுவார்.

 

இன்னொன்று: அரசு நிர்வாகத்தில் ஒரு முதல்வர் தன்னளவில் அநேகமாகச் சரியாகச் செயல்படுவது ஒன்று; அதைவிட மிகவும் கடினமானது, சரியில்லாத மனிதர்கள் கட்சியிலும் அரசு நிர்வாகத்திலும் அடைக்கலமாகத் தன்னருகில் வந்து சேர்ந்து முக்கியப் பணிகளில் ஈடுபடாமல் பார்த்துக் கொள்வது. இந்த இரண்டாவது விஷயத்தில் விஜய்க்குப் பாஸ் மார்க் இப்போது இல்லை.

 

 

3. கேள்வி: அதிமுக-வில் இருந்து விலகி தவெக-வில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான என். ஆனந்த் வரவேற்பு அளித்தார். அப்போது அவர் பேசுகையில், "தவெக-வில் இணைந்தவர்களை நாங்கள் பத்திரமாகப் பார்த்துக் கொள்வோம், அவர்களுக்கு உரிய பதவிகள் மற்றும் மரியாதை கண்டிப்பாகக் கிடைக்கும்" என்று உறுதி அளித்திருக்கிறாரே?

 

பதில்: "நாலுகால் பாய்ச்சலில் எம்மிடம் வாருங்கள். உங்களுக்கு உரித்தான கொள்ளு நிச்சயம்" என்று பலருக்கும் புரியுமாறு அவர் உணர்த்துகிறார்.

 

 

4. கேள்வி: திமுக-வின் அனிதா ராதாகிருஷ்ணனைப் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லும் வழியில், "காவல்துறை அதிகாரிகள் என்னை எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு உடனடியாகத் தவெக-வில் சேருமாறு கட்டாயப்படுத்தினர். நான் மறுத்துவிட்டேன்" என்று அவர் நிருபர்களிடம் சொல்லி இருக்கிறாரே?

 

பதில்: அப்படி நடந்திருந்தால், யாரோ தவெக-விற்கு வேண்டாதவர் அதை அனிதா ராதாகிருஷ்ணனிடம் முயற்சித்திருக்க வேண்டும். அந்த மனிதருக்கும் தவெக-விற்கும் என்ன பகையோ?

 

 

5. கேள்வி: "அதிமுக-விலிருந்து துரோகிகள் வெளியேறுவதால், தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகின்றனர்" என்று அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி கூறி இருக்கிறாரே?

 

பதில்: பட்டாசு கொளுத்தும் எண்ணிக்கையிலாவது கட்சியினர் நம் தலைமையின் கீழ் அதிமுக-வில் எஞ்சி இருக்கிறார்களே என்ற நிம்மதி பழனிசாமிக்கு இருக்கும்.

 

பகுதி 110 // 04.07.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

Thursday, 2 July 2026

கேள்வி-பதில் (02.07.2026)

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், "ராகுல் பிரதமராகும் போது, தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து, காவிரி நீர் பிரச்சனைக்குத் தீர்வு, மேகதாது அணை கட்டத் தடை, மீனவர்களுக்கு நிரந்தரப் பாதுகாப்பு, தமிழகத்திற்கு நிதிப் பகிர்வு ஆகிய ஐந்து அம்ச திட்டங்கள் நிறைவேற்றப் படும்" என்று பேசி இருக்கிறாரே?

 

பதில்: அந்த ஐந்தில் தமிழகத்திற்கு எது உண்மையான பிரச்சனை என்று அவருக்குத் தெரியவில்லை. தமிழகத்துக்கு எது பிரச்சனையானாலும் தீர்வு பற்றித் தமிழக காங்கிரஸ் அலட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக, "ராகுல் காந்தி பிரதமராகும் போது" என்பதைத் தீர்வு தினமாகச் சொல்லிவிட்டார் மாணிக்கம் தாகூர். கெட்டிக்காரர்.

 

 

2. கேள்வி: "அவர்களுக்குச் சிறிதளவாவது மனசாட்சி இருந்தால், கொள்ளையடித்த பணத்தைத் தந்துவிட்டு என்னைப்பற்றி விமர்சிக்கட்டும்" என்று ஜோஹோ நிறுவனர் ஶ்ரீதர் வேம்பு கூறி இருக்கிறாரே?

 

பதில்: மனசாட்சி உள்ளவர்கள் முதலில் மலையளவுக்கு, அதுவும் சந்ததி சந்ததியாக, கொள்ளையடிக்க மாட்டார்கள். இன்னொன்று: பழம் தின்று கொட்டை போட்டவர்களிடமிருந்து, கோட்டை கட்டியவர்களிடமிருந்து, கிழமானாலும் பழம் திரும்ப வராது.

 

 

3. கேள்வி: "திமுக ஆட்சியில் கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் தான் நடந்தது. இதையெல்லாம் நான் ஏன் முன்பே பேசவில்லை என்றால், கூட்டணியில் இருந்துகொண்டே நான் திமுக-வை எதிர்த்து எப்படிப் பேசுவது? அப்படிப் பேசினால் அயோக்கியத்தனமாக இருக்கும்" என்று மதிமுக தலைவர் வைகோ ஆவேசமாக விளக்கம் சொல்லி இருக்கிறார். அவர் பேசியது சரியா?

 

பதில்: கூட்டணிக்குத் தலைமை தாங்கி ஆட்சியிலிருக்கும் ஒரு கட்சியைச் சார்ந்தவர்கள் கலெக்ஷன், கமிஷன், கரப்ஷனில் ஜமாய்ப்பது அப்போதே வைகோவுக்குத் தெரிந்திருக்கிறது. தெரிந்தும் அதை எதிர்க்கவில்லை என்கிறார் வைகோ. சுத்த அசடு கூட இப்படியா பேசும்?

 

கூட்டணியில் இருந்தபோது அரசு நிர்வாகத்தில் நடந்த ஊழலை வைகோ பகிரங்கமாக எதிர்க்க முடியவில்லை என்றால் தனியாகவாவது, தான் இருந்த கூட்டணிக் கட்சியின் தலைமையிடம் 'அநியாயம் நடக்கிறது. இது தகாது, இது கூடாது' என்று வைகோ சொன்னாரா? அதுபற்றி அவர் ஒன்றும் விளக்கவில்லை.

 

இன்னொன்று: ஐந்தாண்டுகளாகக் கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் செய்தவர்களை உள்ளடக்கிய ஒரு கட்சி 2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டபோது, ஏன் அந்தக் கட்சியுடன் திரும்பவும் கூட்டணி வைத்தார் வைகோ? ஏன் அவர்கள் நிபந்தனையை ஏற்று, தனது கட்சி வேட்பாளர்களை அந்தக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட வைத்தார் வைகோ?

 

தன்னுடைய நேர்மையைப் பற்றி, யோக்கியதை குறித்து, என்ன ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறோம் என்று தெரியாமலே பேசி இருக்கிறார் வைகோ.

 

 

4. கேள்வி: சென்ற திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரரை, இப்போதைய தவெக அரசின் போலீஸ் தேடுகிறது. அவர் அகப்படுவாரா?

 

பதில்: முந்தைய திமுக ஆட்சியில், ஒரு சட்ட நிர்பந்தத்தினால் மாநில போலீஸ் அவரைத் தேடு தேடு என்று தேடியபோது, அவரோ அவரது குடும்பத்தவரோ, அல்லது செந்தில் பாலாஜியோ கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அதற்கு ஏற்றபடி போலீஸ் அவரைப் பிடிக்கவே முடியவில்லை. தவெக ஆட்சியில் போலீஸ் அவரைத் தேடும்போது அவர் கவலை கொள்ளாமல் இருக்க முடியாது. மற்ற விஷயங்கள் வழக்கின் தன்மையைப் பொறுத்தது, அவை நீதிமன்றத்தின் கையில்.

 


5. கேள்வி: "தமிழகத்தின் நிரந்தர முதல்வர் விஜய் ..... சிலர் நரி போல் காத்திருக்கின்றனர்" என்று அமைச்சர் செங்கோட்டையன் பேசி இருக்கிறாரே?

 

பதில்: அரசியலில் எதிர்க் கட்சியினர் நரி போல்தான் காத்திருப்பார்கள் - ஆளும் கட்சியை சங்கடப் படுத்த, பழித்துப் பேச, முடிந்தால் ஆட்சியை வீழ்த்த. அப்படித்தான் விஜய்யும் முன்பு காத்திருந்தார். எதிர்க் கட்சியினரின் நகர்வுகளை, அவர்களின் போராட்டங்களை, விமர்சனங்களை ஆளும் கட்சியினர் கண்கொத்திப் பாம்பாக கவனிக்க வேண்டும். மாற்றி மாற்றி இரு தரப்பினரும் முதுகில் போடுவதைத் தேமே என்று வாங்கிப் பசுமாடு மாதிரி சகித்துப் போவது மக்கள்.


பகுதி 109 // 02.07.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 


Monday, 29 June 2026

கேள்வி-பதில் (29.06.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "தமிழகத்திற்கு விரைவில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்; ஒரு மாதம் அல்லது ஆறு மாதம் கழித்து வரலாம்" என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசி இருக்கிறார். எந்த அடிப்படையில் இப்படிச் சொல்கிறார்?

 

பதில்: ஒரே அடிப்படைதான். தான் 'மக்கள் மனதில்' இருப்பதாகச் சொன்னால் மட்டும் பிரயோஜனம் இல்லை; தான் மறுபடியும் முதல்வர் நாற்காலியில் அமரவேண்டும், அல்லது தன் மகனாவது அங்கு உட்கார வேண்டும் என்ற ஆசை ஸ்டாலினுக்கு இருக்கிறது. அது சீக்கிரம் நடப்பதற்கு, முதலில் இப்போதைய விஜய் அரசு மெஜாரிட்டியை இழந்து கவிழவேண்டும்; இரண்டாவதாக சட்டசபைத் தேர்தல் வரவேண்டும்; மூன்றாவதாக - இதுதான் ஸ்டாலினுக்கு முக்கியம் - அந்தத் தேர்தலில் திமுக அல்லது திமுக கூட்டணி ஜெயித்து ஸ்டாலினோ உதயநிதியோ முதல்வராக வேண்டும். இதில் முதல் விஷயம் நடந்தாலும், அடுத்து வரும் தேர்தலில் விஜய் பலமான கூட்டணியுடன் மெஜாரிட்டி பெற்று ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பு அதிகம். இது ஸ்டாலினுக்கும் தெரியும். வெறும் மீடியா செய்திக்காக ஸ்டாலின் வெளியிட்ட 'மீண்டும் தேர்தல்' ஆசை நிறைவேறாமல் இருக்க அவரே விரும்புவார்.

 

 

2. கேள்வி: திமுக கூட்டணியை விட்டுத் தவெக பக்கம் நெருங்கி வரும்போது பேசிய மதிமுக தலைவர் வைகோ, "ஒபாமா ஒருமுறை அமெரிக்க அதிபர் பதவியை ஏற்றபோது, கையில் பேப்பர் ஏதும் வைத்திருக்காமல் தனக்கான பதவிப் பிரமாணத்தை மனப்பாடமாகச் சொன்னார், ஆனால் அதில் தவறு ஏற்பட்டதால் மறுநாள் இன்னொரு முறை அவர் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். மாறாக, நமது முதலமைச்சர் விஜய் தனது பதவிப் பிரமாணத்தை மனப்பாடமாக மேடையில் பிழையின்றி சொன்னதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். 'ஒபாமா தடுமாறிய இடத்தில் நீங்கள் வென்றீர்கள்' என்று விஜய்யிடமே சொன்னேன்" என்று விஜய்யை சிலாகித்தாரே?

 

பதில்: விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றபின் வைகோ அமெரிக்கா போய் வரவில்லை. போய் வந்திருந்தால், "நான் அமெரிக்காவில் ஒபாமாவைச் சந்தித்தபோது, 'மிஸ்டர் வைகோ, உங்கள் முதலமைச்சர் விஜய், பிழையில்லாமல் மனப்பாடமாகத் தனது பதவிப் பிரமாணத்தைச் சொன்னதை டிவி-யில் பார்த்து மெய்சிலிர்த்தேன். ஹி இஸ் சிம்ப்ளி மார்வெலஸ்!" என்று என் கையைப் பிடித்து ஒபாமா கூறினார். அதைக் கேட்டு ஒரு தமிழனாகப் பெருமிதம் அடைந்தேன்" என்று வைகோ பேசி இருக்கலாம்.

 

 

3. கேள்வி: சென்ற திமுக ஆட்சியின்போது எந்தத் துறை வேலைக்காக லஞ்சம் கேட்டனர், எவ்வளவு கேட்டனர், எவ்வளவு கொடுக்கப் பட்டது என்று சிலர் இன்றைய ஆட்சியின்போது எப்படித் தைரியமாகப் பொதுவெளியில் தெரிவிக்கின்றனர்?

 

பதில்: இன்றைய புதிய ஆட்சியின் அதிகாரிகளும் மேலே உள்ளவர்களும் தங்களிடம் அதுபோன்ற வேலைக்கு லஞ்சம் கேட்கமாட்டார்கள், அதற்கு முதலமைச்சர் விஜய் கொடுத்த உத்தரவாதத்தை நம்பலாம் என்ற எண்ணம் அரசை அணுகவேண்டிய பலரிடம் இன்றுவரை இருக்கிறது. அதுதான் காரணம்.

 

திமுக-வும் அதிமுக-வும் தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்தார்களே, அப்போது ஒரு ஆட்சி நடக்கும் காலத்தில் லஞ்சம் கொடுத்தவர்கள், அது பற்றி அடுத்த ஆட்சி வந்த பின்னும் தைரியமாக வெளியில் சொல்லவில்லையே, அது ஏன் என்று கேட்கிறீர்களா? யோசித்தால் புரியும்.

 

 

4. கேள்வி: திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகி, இனி தவெக தலைமையிலான புதிய ஆட்சியை ஆதரிக்கும் என்று வைகோ அறிவித்திருக்கிறார். ஆனால் மதிமுக-வின் கடையநல்லூர் எம்.எல்.ஏ ராஜேந்திரன் - உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் - மதிமுக தற்போது கேட்டுக் கொண்டாலும் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யாமல், “கட்சி, சாதி, மதம் கடந்து வெற்றி பெறச் செய்த கடையநல்லூர் தொகுதி மக்கள் நாள்தோறும் என்னிடம் வெளிப்படுத்தி வரும் உணர்வை மதித்தும், வைகோ மீதோ, என் மீதோ களங்கம் படர்வதைத் தவிர்க்கும் பொருட்டும் பதவி விலகல் என்ற முடிவை மேற்கொள்ள வேண்டாம் என்று வைகோவிடம் தெரிவித்தேன்” என்று சொல்கிறாரே?

 

பதில்: பட்டும் படாமல் பூசி மெழுகி நீண்ட சொற்களில் நழுவிப் பேசும் கலையை வைகோவிடம் கற்ற ஒருவர், அந்தக் கலையை வைகோவிடமே பிரயோகிக்கிறார்.

 


5. கேள்வி: "மக்கள் திலகம் பொருளாளராக இருந்த இயக்கம் திமுக; 'எனக்குத் தலைவர் கலைஞர்' என்று கூறியவர் எம்.ஜி.ஆர்; திமுக-வில் இருந்தபோது உதய சூரியன் சின்னத்தில் தான் முதலில் போட்டியிட்டு வென்றவர் எம்.ஜி.ஆர்" என்று திமுக-வுக்கும் எம்.ஜி.ஆருக்கும் முன்னர் இருந்த நெருங்கிய பிணைப்பை, இப்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுச் சொல்கிறாரே?

 

பதில்: கருணாநிதிக்கும் எம்.ஜி. ஆருக்கும் இடையே இருந்த தீராத போட்டியால், மனக்கசப்பால், திமுக-விலிருந்து எம்.ஜி.ஆர் வெளியேற்றப் பட்டார். அதனால்  அதிமுக என்ற தனிக்கட்சியை எம்.ஜி.ஆர் வழி நடத்தினார். எம்.ஜி.ஆருக்கு அடுத்து அதிமுக-வின் சக்தி வாய்ந்த தலைவரான ஜெயலலிதா, கருணாநிதியுடனான பகையை அப்படியே வைத்துக் கொண்டார். மூவரும் இப்போது இல்லை.

 

தற்போது திமுக மற்றும் அதிமுக-வின் லகான்களைப் பிடித்திருக்கும் ஸ்டாலினுக்கும் பழனிசாமிக்கும் ஜென்மப் பகை கிடையாது. 'பங்கு விளையாட்டில் ஜெயிப்பது நீயா நானா' என்ற போட்டிதான் அவர்களுக்குள் நிலவுகிறது. அவர்களுக்கு நடுவில் திடீரென்று ஜோசப் விஜய் என்ற இன்னொரு கட்சித் தலைவர் முளைத்து ஆட்சியைக் கைப்பற்றியதால், அந்த இருவரின் பங்கு விளையாட்டிற்கு மைதானமே இல்லை என்றாகிவிட்டது. ஆகையால் அந்த இரு கட்சிகளும் நெருங்கி வரலாம், கூட்டாக அல்லது இரண்டும் ஒரே கட்சியாகி விஜய்யை வென்று ஆட்சியைப் பிடிக்கலாம் என்று ஸ்டாலின் நினைக்கிறார். அதற்காக எம்.ஜி.ஆர் சுழி போட்டுப் பேச ஆரம்பிக்கிறார். அதுதான் விஷயம்.


பகுதி 108 // 29.06.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr