Monday 24 June 2019

அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: சுதா ரகுநாதன், உனக்கு நான் கை தட்டறேன்!



சங்கீதத்தை ரசிக்கற தமிழ்க்காராளுக்கு சுதா ரகுநாதன் யாருன்னு தெரியும். அந்த மாமி கர்நாடக சங்கீதத்துல பேர் வாங்கின பாடகி. அவாளை பத்தி கேள்விப்படாத மத்தவாளும், இப்ப ஒரு சம்பவத்துல சுதா ரகுநாதன் சங்கீத வித்தகர்னு வாட்ஸ்-அப் வழியா தெரிஞ்சிண்டிருக்கா. இப்படியே கர்நாடக சங்கீதமும் புதுசா நாலு பேருக்கு பரிச்சயமானா நன்னா இருக்குமேன்னு ஒரு நப்பாசை. சரி, மெயின் விஷயத்துக்கு வரேன்.

சுதா ராகுநாதனும் அவ ஆத்துக்காரரும் ஹிந்து மதம்னு எல்லாருக்கும் தெரியும். அவாளுக்கு ஒரு பொண்ணு - அவளும் பிறப்புல ஹிந்துதானே? அந்தப் பொண்ணு, ஒரு கிருஸ்தவ பெயர் உள்ள பையனை கல்யாணம் பண்ணிக்கப் போறா. அதுக்கு சுதா ராகுநாதனும் அவ ஆத்துக்காரரும் சேர்ந்து ஒரு கல்யாண ரிசப்ஷன் அழைப்பிதழ் அடிச்சிருக்கா. சில பேர் அந்த இன்விடேஷனை வாட்ஸ்-அப்புல படமா போட்டு, "தன் பொண்ணு ஒரு கிருஸ்தவனை கல்யாணம் பண்ணிண்டாலும், சுதா மாமி அதுக்கு ரிசப்ஷன் வச்சு அழைக்கறாளே! இது அடுக்குமா? இனிமே ஹிந்து கடவுள்கள் மையமான கீர்த்தனைகளை சுதா ரகுநாதன் பாடலாமா? அது தப்பாச்சே!"ன்னு கண்டனம் பண்ணி சுதாவை வறுக்கறா. சுதாட்ட முதல்ல ஒண்ணு சொல்றேன். "வருத்தப்படாதம்மா. நான் உனக்கு வக்காலத்து வாங்கறேன்."

அந்நிய தேச முஸ்லிம் ராஜாக்கள் இந்தியவுல படையெடுத்து ஆட்சி பண்ணின போது, அவா ஹிந்துக்களை இம்சை பண்ணினா, கத்தி முனைல மதம் மாத்தினா, ராமர் கோவிலை இடிச்சு மசூதி கட்டினா, ஹிந்து மதத்துக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தினா. அப்பறம் வெள்ளைக்காரன் ஆட்சி வந்தது, போனது. இப்ப சுதந்திர நாட்டுல நம்மளே விசித்திரமான மத சட்டங்களை வச்சிருக்கோமே? அதையும்  சாதகமா பயன்படுத்தி வக்கிர அரசியல்வாதிகள் என்ன பண்றான்னா, பொறுமையான ஹிந்துக்களை உதாசீனம் பண்றா, சிறுபான்மை ஜனங்களை  தாஜா பண்ணி ஓட்டு வாங்கறா, முஸ்லிம் ராஜாக்கள் ஆரமிச்ச ஹிந்து மத சரிவையும் தீவிரம் ஆக்கறா.  இது ஒரு பக்கம்.

இன்னொரு பக்கத்துல சிறுபான்மை மத தலைவர்கள், அதுவும் கிறிஸ்தவ பாதிரியார்கள், சாதாரண ஹிந்துக்களை ஏமாத்தி மதமாற்றம் பண்றா. இதெல்லாம் இந்தியாவோட உயிர் அடையாளமான ஹிந்து மதத்துக்கும் ஹிந்து கலாசாரத்துக்கும் பெரிய இடி. தன்னோட மதத்தை பெருமையா நினைக்கற ஹிந்துக்களுக்கு ரணம். அதுனால, பேரிழப்புல தவிக்கற ஹிந்துக்களுக்கு, தங்கள்ள ஒருத்தர் தானாவே, யார் கட்டாயமும் இல்லாம,  இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத்துக்கு மாறினாலும்  அதை ஏத்துக்கறது கஷ்டமா இருக்கு.  தானா அப்படி மதம் மாறினவாளை, அவா அம்மா அப்பா தள்ளி வைக்காம இருந்தா, அந்த அம்மா அப்பாவும் பல ஹிந்துக்கள் கோபத்துக்கு ஆளாகலாம்.

வாட்ஸ்-அப்புல வம்பு கிடைக்கும். உண்மை கிடைக்குமான்னு யாருக்குத் தெரியும்? சுதா ரகுநாதன் வீட்டு விஷயத்துலயும், அவாத்து பொண்ணுக்கு இப்படி கல்யாணம் நடக்கப் போறதுங்கறது உண்மை - மத்த சமாசாரங்கள் நமக்கு முழுசா தெரியாது. ஆனா அவா வீட்டுலயும் கல்யாணப் பொண்ணு மதம் மாறிருக்கா, அதை சுதாவும் அவா ஆத்துக்காரரும் ஏத்துண்டாச்சுங்கற அனுமானத்துல வாட்ஸ்-அப் கண்டனங்கள் பறக்கறது. இது உண்மையா இருந்தாலும், கோபிக்கறவா கொஞ்சம் யோசிக்கணும்.

இந்தக் காலத்துல பதினாறு-பதினேழு வயசு பொண்ணு பையன்களையே அம்மா அப்பா வார்த்தை கட்டுப்படுத்தறதா? ஏதோ குறைச்சலாத்தான் இருக்கும். அதைத் தாண்டி, கல்யாண விஷயம் எப்படி இருக்கு? ’பொண்ணு பையன் இஷ்டப்பட்டா நம்ம வரன் பார்ப்போம். இல்லை, அவாளே ஒரு நல்ல துணையை தேர்ந்தெடுத்து கல்யாணம் பண்ணி வைக்கச் சொன்னா பண்ணி வைப்போம். ஆனா நாமளே முனைஞ்சு யாரையாவது பார்த்து கல்யாணம் பண்ணிக்க சொல்லி, அது சரியில்லாம போயி, பழி நமக்கு வரவேண்டாம்’னு பெத்தவா பரவலா கவலைப் படறா. இதுவும் பெத்தவாளோட நல்ல மனசுலேர்ந்து வர்ற எண்ணம்தான். ஏன்னா, குழந்தைகளுக்கு அவா விருப்பப்படி வாழ்க்கைத்துணை கிடைக்கும்போது, அவாளோட மண வாழ்க்கைல ஒரு பிரச்னை வந்தா  அதை அவாளே தன் பொறுப்புல சரி பண்ணிப்பா. ஆனா, வீட்டுல பார்த்த வரனை கல்யாணம் பண்ணிண்டு சின்னதா கணவன்-மனைவி பிரச்சனை வந்தாலும், அம்மா அப்பா நமக்கு சரியா பார்த்து வைக்கலையோன்னு குழந்தைகள் நினைக்கலாம்’ அப்படின்னுதான் பெத்தவா அக்கறையோட நினைக்கறா. கால நிலவரம் இப்படி இருக்கு. இந்த விஷயத்துல, அம்மாக்காரி ஒரு பிரபல பாடகியா இருந்தாலும் அவாளும்  அவ ஆத்துக்காரரும் இப்படித்தான் நினைப்பா.

          எந்த அம்மா அப்பாவும் தன் பொண்ணுக்கோ பையனுக்கோ வரன் பார்க்கணும்னா தன்னோட மதத்துல, தன்னோடா ஜாதில பாக்கறதுதான் சுபாவம். அந்த மாதிரி குடும்பங்கள்தான் அவாளுக்கு நம்பிக்கையா அறிமுகம் ஆகும், சுலபமா பரிச்சயம் பண்ணிக்க முடியும். பொண் பிள்ளைகள் தானா விருப்பப் பட்டு வேற ஜாதி, மதத்துலேர்ந்து ஒரு துணையை தேர்வு பண்ணிண்டா அம்மா அப்பா என்ன பண்ணுவா? ரகசியமா வருத்தப் பட்டாலும், அந்த கல்யாணத்தை ஏத்துண்டு புது ஜோடியை ஆசீர்வாதம் பண்றதுதான் அனேகமா நடக்கும். இந்த மாதிரி கல்யாணத்துக்காக, அம்மா அப்பா தன்னோட குழந்தையை உதற முடியாது.  அதுதான் அம்மா அப்பா.

எந்த நாட்டுலயும், எந்தக் காலத்துலயும் அம்மா அப்பாக்கள் வேற, பொண் பிள்ளைகள் வேற. அதுவும் அம்மாக்கள் அவா பொண் பிள்ளைட்ட காட்டற அரவணைப்பு அலாதி. ராஜிவ் காந்தியோட கொலைக்காக ஜெயில்ல ஆயுள் தண்டனை அனுபவிக்கறானே பேரறிவாளன், அவனோட அம்மாதான் அற்புதம்மாள். அந்த அம்மா தன்னோட பையன் முன்கூட்டியே விடுதலை ஆகணும்னு தினமும் துடிக்கறா. பொது நன்மைக்காக அரசாங்கம் அவனை விடுதலை செய்யக் கூடாதுன்னு நாம நினைக்கலாம். ஆனா ஒரு அம்மாவா அற்புதம்மாள் ஆசைப்படறதை நீங்க குறை சொல்லக் கூடாது, அவாளை நீங்க அனுதாபத்தோட புரிஞ்சுக்கணும். அதுனால, எல்லா விஷயத்துலயும் அம்மாக்களோட பாசத்துக்கும் பரிவுக்கும் வந்தனம் சொல்லுங்கோ. அவா நன்னா பாடுவான்னா அதை கைதட்டி பரிபூரணமா ரசிங்கோ. நான் சொல்றது ரைட்டா?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2019



Sunday 9 June 2019

அரசியலுக்கும் அழுக்கென்று பேர்!


"தமிழுக்கும் அமுதென்று பேர்". இது பாரதிதாசனின் கவிதை வரி. 

நமது   ஜனநாயகத்தின் பல அம்சங்களுக்கு 'வேறு என்ன பேர்?' என் கேள்வியை, ஏதோ கவிதை பாணியில் கேட்டு வைக்கிறேன் (கவிதை ரசனை உள்ளவர்கள் மன்னிக்கவும்!). இதில் கவிதை தெரியாவிட்டாலும் உங்கள் கோபத்தையாவது பார்க்கலாம்.
                                                                                                                                                                                  


        தமிழுக்கும் அமுதென்று பேர்!
        தம்மைத் தொழும் மக்களை 
        சிதைக்கின்ற அரசியலார்
        சிறுமைக்கு வேறென்ன பேர்?


        தமிழுக்கும் அமுதென்று பேர்!
        தம்தேச கஜானாவை
        கொள்ளையிடும் மந்திரிமார்
        கொடுமைக்கு வேறென்ன பேர்?


        தமிழுக்கும் அமுதென்று பேர்!
        தாய்மொழிக் காதலென்று
        கபடத்தில் ஊரேய்க்கும்
        கீழ்மைக்கு வேறென்ன பேர்?


        தமிழுக்கும் அமுதென்று பேர்!
        தம் சக்தி உணராத
        மக்களெனும் எஜமானர்
        மடமைக்கு வேறென்ன பேர்?


        தமிழுக்கும் அமுதென்று பேர்!
        தன்னாட்சி கண்ட நம்
        பொல்லாத ஜனநாயக
        பொய்மைக்கு வேறென்ன பேர்?


Wednesday 5 June 2019

தமிழ் வாழ்க! தமிழன் தவழ்க!


தமிழர்களுக்கு அவ்வப்போது தமிழ் ஜுரம் ஏறவைத்து, அதில் பயன் அடையும் திராவிட அரசியல் தலைவர்கள் உண்டு. இந்த முயற்சியில் இப்போதைய ஆட்டத்தில் வெற்றி கண்டவர் தி.மு.க தலைவர் ஸ்டாலின். தோல்வி யாருக்கு என்று கேட்கிறீர்களா? வழக்கப்படி தமிழனுக்குத்தான்.

ஸ்டாலின் நம்மை நம்பவைப்பது போல், உண்மையில் தமிழ்நாட்டு மக்கள் இப்படி நினைக்கிறார்களா?: ’நான் பின் தங்கினாலும் தமிழ் வாழட்டும். ஹிந்தி வேண்டவே வேண்டாம். தமிழ் நாட்டில் ஹிந்தி எப்படி நுழைந்தாலும் அது ஹிந்தி திணிப்புதான். வேண்டுமானால், அரசியல்வாதிகளின் குடும்பங்கள் நடத்தும்  உயர் கட்டண பள்ளிக்கூடங்களில் கட்டாயமாகக் கூட ஹிந்தி கற்றுக் கொடுக்கட்டும். ஆனால் இலவசமாக, கட்டாயப் பாடமாக அரசுப் பள்ளிகளில் ஹிந்தி சொல்லித் தரக் கூடாது.’ தொலைக்காட்சியை பரவலாகப் பார்க்கும் தமிழக மக்கள் இப்படி அடிமுட்டாள்தனமாக நினைக்க மாட்டார்கள். அப்படியானால் தமிழ் நாட்டில் ஹிந்தி எதிர்ப்பு  ஏன் அரசியல் ரீதியாக எடுபடுகிறது, அதுபோல் ஏன் தோற்றம் தெரிகிறது? சற்று உன்னிப்பாக பார்க்கலாம்.

மக்கள் நலம் விரும்பும் அரசியல் தலைவர்கள், அரசு மூலமாக என்ன செய்வார்கள்? வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் எனப்படும் சுகாதாரமான இருப்பிடம், கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவ சேவை, சுத்தமான குடிநீர், தரமான சாலைகள், போக்குவரத்து வசதி, திடமான சட்டம் ஒழுங்கு ஆகியவை மக்களுக்கு எளிதாக கிடைக்கச் செய்வார்கள். இவற்றில் ஒன்றாவது, 50-ஆண்டு திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ் நாட்டில் பாராட்டும்படி நிறைவேற்றப் பட்டிருக்கிறதா? இல்லை. இந்தத் தேவைகளுக்காக அனேக மக்கள் இன்றும் அரசாங்கத்திடம் கைகூப்பி நிற்கிறார்கள், அல்லல் படுகிறார்கள். அரசாங்கத்தை வழிநடத்தும் அரசியல் தலைவர்களின் பிடியில் தாங்கள் சிக்கி இருப்பது அவர்களுக்குத் தெரியும். அந்தப் பிடியிலிருந்து தாங்கள் சுலபமாக விடுபட முடியாது, அதற்கான சக்தி தங்களுக்கு இல்லை, அரசியல் தலைவர்கள் அராஜகமும் செய்து நம்மை அடக்குவார்கள்,  அவர்கள் பெரிய மனது வைத்தால் மட்டுமே தங்களின் கஷ்டங்கள் குறையலாம் என்பதும் ஜனங்களுக்குப் புரியும்.  

இப்படியான நிலையில், "தமிழர்களே, மத்திய அரசு  உங்கள் மீது ஹிந்தியை திணிக்கப் பார்க்கிறது! நமது உயிர் மூச்சான தமிழுக்கு ஆபத்து! நீங்கள் போராட்டத்திற்குத் தயாராகும் நாள் வருகிறது!" என்று பலம் மிக்க ஒரு தமிழ்நாட்டு அரசியல் தலைவர் குரல் கொடுத்தால், அவலத்தில் இருக்கும் மக்கள் இப்படி நினைக்கிறார்கள்: 'ஹிந்தி படித்த தமிழன் தமிழ்நாட்டை விட்டு வெளியே வேலைக்குப் போய்விட்டான். அவன் இந்த மாநிலத்தைப் பற்றி கவலைப்பட மாட்டான். ஹிந்தி படிக்காத நமக்கு தமிழ்நாடுதான் கதி, நாம் அண்ணாந்து பார்க்கும் தலைவர்தான் நமக்கு விமோசனம்.  இவர் தயவு நமக்கு வேண்டும். இவர் விருப்பப்படி, தமிழுக்கு ஆபத்து ஏற்படுகிறது என்று நாமும் காட்டிக் கொண்டால் நம்மை ஆட்டுவிக்கும் தலைவர் மனம் மகிழ்ந்து, அவர் நமது வாழ்க்கைத்தரம் உயர ஏதாவது செய்யலாம். ஆகையால், நமது வாழ்க்கை வசதி எப்படி சீரழிந்து இருந்தாலும், அதைவிட தமிழ் மொழிதான் இப்போது நமது எண்ணம், அதன் பெருமைதான் நமது குறிக்கோள் என்று நாமும் தோற்றம் தருவோம். காசா பணமா? நாம் படிக்காத ஹிந்திக்கு, நமக்கு தமிழ்நாட்டில் தேவைப்படாத மொழிக்கு எதிர்ப்பு, அவ்வளவுதானே? போடச் சொன்ன கோஷத்தை நாமும் போட்டு வைப்போம்! எப்படியோ தலைவரின் உள்ளம் கனிந்து நமக்கு நல்லது கிடைக்கட்டும்!’

ஸ்டாலினின் அரசியல் சக்தியைப் பார்த்து மற்ற பெரிய சிறிய கட்சித் தலைவர்கள் 'தாங்களும் தமிழ் உணர்வில் சளைத்தவர்கள் இல்லை' என்று அவரவர் வழியில் ஹிந்தி எதிர்ப்பு அறிக்கைகள் விட, ஏதோ தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தெளிவாக தீர்மானமாக "ஹிந்தி படிக்க மாட்டோம்" என்று நினைப்பதாக ஒரு பிரமை தோன்றி இருக்கிறது. இப்படியாக, ‘தமிழ்ப் பற்று’ என்ற களத்தில் அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்ற, அனேக மக்களும் அதை ஏற்பது மாதிரி நடிக்க, ‘ஹிந்தி எதிர்ப்பு’ நாடகம் அவ்வப்போது தமிழ் நாட்டில் அமோகமாக நடக்கிறது. இது ஒரு நாடகம்தானா என்பதை பரிசோதிக்க ஒரு கற்பனை  செய்து பாருங்கள்.

ஸ்டாலினே இப்போது ஒன்று செய்வதாக நினைத்துப் பாருங்கள். அதற்கு அ.தி.மு.க-வும் மற்ற பல திராவிட அரசியல் கட்சிகளும் ஆதரவு தருகிறார்கள் என்றும் நினைத்துக் கொண்டால் இன்னும் நல்லது. அதாவது, ஸ்டாலினும் மற்ற அரசியல் கட்சி தலைவர்களும், “தமிழ் நாட்டு மக்கள் இந்தி கற்பது அவர்களின் எதிர்காலத்துக்கு நன்மை செய்யும். தமிழைத் தாயென தொழுவோம்! இந்தியை சித்தியாக நேசிப்போம்! நம் சித்தியிடம் நேசம் காட்டுவதால், நம் தாயுடனான பாசப் பிணைப்பு மங்கிப் போகுமா என்ன? தமிழைக் காப்போம்! இந்தியை கற்போம்! தமிழ் உனர்வில் வாழ்வோம்! வடக்கிலும் வளர்வோம்!” என்று அறிக்கை விடுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  அப்போது தமிழ்நாட்டு மக்கள் கொதித்தெழுந்து, “எங்களுக்கு ஹிந்தி வேண்டாம். வேண்டவே வேண்டாம்!” என்று சாராயக் கடைகளுக்கு பெண்கள் எதிர்ப்பு காட்டியது போல் வீதிக்கு வந்து போராடுவார்களா, அல்லது சிரித்துவிட்டுப் போய் தங்கள் வேலையைப் பார்ப்பார்களா? இதில் சிரிப்பு விஷயம்தான் நடக்கும் என்பது உங்களின் ஊகமாக இருக்கும். இந்த சரியான ஊகம், ஹிந்தி எதிர்ப்பு நாடகத்தையும் உணர்த்துகிறதா?  நமது போலி ஜனநாயகத்தையும் வெளிச்சம் போட்டு காண்பிக்கிறதா?

          இன்னொரு விஷயமும் பாருங்கள். அறியாமல் தெரியாமல் அந்தக் காலத்தில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டு, அந்த மொழி கற்காமல் வாழ்க்கையில் வாய்ப்புகளை இழந்த தமிழ்நாட்டு பெரியவர்கள் இன்று மௌனமாக வருந்துகிறார்கள். தாங்கள் செய்த தவற்றை தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு அவர்கள் சொல்லி எச்சரிப்பார்கள். இந்த நாளின் தமிழ்நாட்டு இளைஞர்களும் ஹிந்தி படிப்பதின் அவசியத்தை தாங்களாகவே பல வழிகளில் உணர முடியும். இன்றைய ஸ்டாலின் நேற்றைய கருணாநிதி அல்ல. இன்றைய தமிழ்நாட்டு  மாணவர்களும் அவர்களின் அப்பா தாத்தா மாதிரி கண்கட்டப்பட்ட நிலையில் இல்லை. ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முன்பு பூதமாக இருந்த தி.மு.க,   வெறும் பூச்சாண்டியாக மாறிப் போகுமோ?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2019