Friday, 14 August 2026

கேள்வி-பதில் (14.08.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: ஒரு பொதுமேடையில் பேசிய ராகுல் காந்தி, "பிரதமர் மோடி, வெளியுறவுக் கொள்கையை எப்படிப் புரிந்து வைத்திருக்கிறார் என்று காண்பிக்கிறேன்" என்று சொல்லிவிட்டு, அருகில் இருந்த ஒரு காங்கிரஸ் நிர்வாகியைக் கவுண்டமணி பாணியில் இறுகத் தழுவிப் பின் விலகி வந்து, "இதுதான் வெளியுறவுக் கொள்கை என்று மோடி நினைக்கிறார்" என்று பிரதமரைக் கேலி செய்திருக்கிறாரே?

 

பதில்: இரு நபர்கள் சந்திக்கும்போது, தமக்குள் அன்பு கலந்த மரியாதையை வெளிப்படுத்தும் விதமாக அவர்கள் ஒருவரை ஒருவர் மெலிதாக அணைக்கும் வழக்கம் மேல் நாடுகளில் இருக்கிறது. இது இந்தியாவிலும், குறிப்பாக மேல்தட்டு மக்களிடம், பரவி வருகிறது.

 

உலக அரங்கில் பிரதமர் மோடியின் நிதானமான, தீர்க்கமான, நல்லெண்ணம் மிக்க சிந்தனையும் பேச்சும் அணுகுமுறையும் பல மேல்நாட்டுத் தலைவர்களை ஈர்த்து, மோடியின் மீது அவை ஒரு அசாதாரண மதிப்பை அத் தலைவர்கள் மனதில் ஏற்படுத்தி உள்ளன. ஆகையால் அவர்கள் மோடியை நேரில் சந்திக்கும்போது அவர் தங்கள் கைகளைப் பற்றுவதோ அல்லது தங்களை மெலிதாக அணைப்பதோ தங்களுக்கு ஒரு கௌரவம் என்று அந்த மேல்நாட்டுத் தலைவர்கள் நினைப்பார்கள்.

 

மேல்நாடுகளில், இன்னொருவரைப் பற்றி ஒன்றும் தெரியாவிட்டால், அல்லது இன்னொருவரின் மீது குறைவான மதிப்பு வைத்திருந்தால், அந்த மனிதரைச் சந்திக்கும்போது அவரை மெலிதாக அணைக்க விரும்பமாட்டார்கள் - வேண்டுமானால் அவருடன் வெறுமனே கைகுலுக்கி விலகி இருப்பார்கள்.

 

சாதாரணமாகவே ராகுல் காந்தி ஒன்றும் தெரியாத பித்துக்குளி. வெறுப்புடன் மோடி பற்றிப் பேசும்போது, சுத்தப் பைத்தியம்.

 

 

2. கேள்வி: 2026 சட்டசபைத் தேர்தலின் போது சைதாப்பேட்டைத் தொகுதியில் திமுக சார்பாக மா.சுப்பிரமணியன் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். இதுகுறித்து கருத்துத் தெரிவித்த திமுக-வின் அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, "சைதாப்பேட்டை வாக்காளர்களுக்கு நல்ல சாவு வராது" என்று பொதுமேடையிலிருந்து அத்தொகுதி வாக்காளர்களைத் திட்டி இருக்கிறாரே?

 

பதில்: ஆர்.எஸ். பாரதி யாரைப் பழித்தாலும் திட்டினாலும் அவர்கள் ஏதோ நல்லது செய்திருக்கிறார்கள் என்று பொருள். அவரது வசவு வார்த்தைகள் மோசமாக இருந்தால், அதைப் பெறுகிறவர்கள் மிக நல்ல காரியம் செய்திருப்பதாக அர்த்தம்.

 

 

3. கேள்வி: மத்திய அரசு உத்தேசித்திருக்கும் லோக் சபா தொகுதி மறுவரையறைக்கு ஆதரவாகத் தமிழக சட்டசபையில் பேசிய தேமுதிக தலைவர் பிரேமலதா, "தற்போது 10 லட்சம் பேருக்கு ஒரு எம்.பி. மட்டுமே இருக்கும் நிலையில், தொகுதி மறுவரையறை செய்வதன் மூலம் 7 லட்சம் முதல் 8 லட்சம் பேருக்கு ஒரு எம்.பி. என எம்.பி-க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதன் மூலம் தமிழகத்துக்கு 59 எம்.பி-க்களுக்கு மேல் கிடைப்பார்கள்" என்ற விளக்கத்தை முன்வைத்தார். இது தேமுதிக-வுக்கு ஏற்புடையதாக இருக்கிறது, ஆனால்  காங்கிரஸ் மற்றும் தவெக-வுக்கு அப்படி அல்ல. ஏன் இந்த வேறுபாடு?

 

பதில்: பாஜக எதைச் செய்தாலும் அதை எதிர்க்கவேண்டும் என்பது காங்கிரஸின் கொள்கை. ஆகையால் தொகுதி மறுவரையறை மசோதாவைக் காங்கிரஸ் எதிர்க்கும்.

 

தவெக-வைப் பொறுத்தவரை, விஜய் எப்படி இருந்தாலும் அந்தப் புதிய கட்சியில் சரியான எம்.பி. வேட்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் கிடைப்பது தற்போது சிரமம். கண்டவர்களும் அதிக அளவில் எம்.பி-யாகத் தேர்வாகி அவர்கள் அசட்டுத்தனமாகப் பேசி அல்லது நடந்துகொண்டு கட்சியின் பெயரை மேலும் மேலும் கெடுக்கவேண்டாம், ஆகவே இருக்கிற எம்.பி. எண்ணிக்கையே தமிழகத்திற்குப் போதுமானது, அதில் இருக்கப் போகும் தவெக எம்.பி-க்களை நாம் சமாளித்தாலே போதும், என்று விஜய் நினைக்கலாம். அத்துடன், பாஜக-வைத் தனது 'கொள்கை எதிரி' என்று முன்பே அறிவித்துவிட்ட தவெக, அதை நிரூபிக்க பாஜக-வின் முக்கிய நடவடிக்கைகளை எதிர்க்க நினைக்கலாம். லாஜிகலாக வேறு ஒன்றும் தெரியவில்லை

 

பிரேமலதாவைப் பொறுத்தவரை, தமிழகத்திற்கு அதிக எம்.பி-க்கள்  கிடைத்தால் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியில் அக்கட்சிக்கு ஒன்றிரண்டு எம்.பி. சீட்டுகள் அதிகமாகக் கேட்டுப் பயனடைய அவர் நினைக்கலாம்.

 

 

4. கேள்வி: 2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன்னர் பிரசாரம் செய்ய விஜய் கரூர் சென்றபோது, அங்கு கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் இறந்தனர். அந்தத் தேர்தலில் விஜய் வென்று முதலமைச்சரான பின், கரூர் நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்தவர்களுக்கு அரசு வேலை வழங்கினார். அதை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்த மனுதாரரிடம், "நடந்தது துயர சம்பவம். அதில் அரசியல் செய்யக் கூடாது" என்று உச்ச நீதிமன்றம் வாய்மொழியாகக் கூறி இருக்கிறதே?

 

பதில்: உச்ச நீதிமன்றத்தின் கருத்து நியாயமானது. இருந்தாலும் தவிர்க்கமுடியாத ஒரு கேள்வி எழுகிறது: வாகன விபத்து, மின்னல் தாக்குதல், மாடு முட்டுதல், நாய்க்கடி, என்று பலவாறாகத் துயர மரணங்கள் வாழ்க்கையில் நிகழ்கின்றன. ஆனால் பாதிக்கபட்ட அந்தக் குடும்பங்களைத் தவிர்த்து, விஜய் கூட்டம் தொடர்பான உயிரிழப்புகளைச் சந்தித்த குடும்பங்களுக்கு மட்டும் விஜய் அரசு வேலை வழங்கினால், அது துயர சம்பவத்தில் அரசியல் செய்வதாகாதா?

 


5. கேள்வி: "எனக்கு மூன்றாம் முறை அமெரிக்க அதிபராவதற்கு விருப்பம். ஆனால் சட்டம் வலுவானது. அது என் விருப்பத்தைக் தடுக்கிறது" என்று அதிபர் டிரம்ப் கூறி இருக்கிறாரே?

 

பதில்: டிரம்ப் மூன்றாம் முறை அதிபராவதைத் தடுக்கும் சட்டத்தினால் ஒரு பாதகமும் இல்லை.  இரண்டு முறைக்கு மேல் டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவிப் வகிக்காத நிலையில், தன்னையறியாமல் அவர் உலகிற்கு ஆற்றப்போகும் சேவை முன்னைவிட அதிகமாக இருக்கும்.


பகுதி 123 // 14.08.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

கேள்வி-பதில் (12.08.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "இந்தியப் பிரதமர் மோடி மனதளவில் வலுவானவர், உறுதி மிக்கவர். அது எனக்குத் தெரியும்" என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு வீடியோ பேட்டியில் கூறி இருக்கிறார். எந்த அனுபவத்தில் டிரம்ப் இதைச் சொல்கிறார்?

 

பதில்: "கற்பாறை வலுவானது, உறுதியானது" என்று தனது மண்டைக் காயத்தைத் தடவியபடி ஒருவர் சொன்னால் அதில் உண்மை இருக்கும்.

 

 

2. கேள்வி: திரைத்துறையில் கமல் ஹாசன் தற்போது 67 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கிறார். இந்த நேரத்தில் அவரைப் பற்றி என்ன சொல்வீர்கள்?

 

பதில்:  மனிதர்கள் தம் வாழ்க்கையில் சிறப்பதற்குக் கமல் ஒரு விதத்தில் படிப்பினையாக இருக்கிறார். அதாவது, "ஒரு துறையில் நீங்கள் சொதப்பினால் (உதாரணம்: அரசியல்) நீங்கள் வேறு காரியத்தில் பரிமளிக்கலாம் (உதாரணம்: நடிப்பு). உங்களுக்கு ஏற்றது எதுவென்று அறிந்து அதில் உங்கள் பிரதான கவனத்தைச் செலுத்துங்கள்" என்று அனைவருக்குமான நற்சிந்தனையைக் கமல் வாழ்ந்து காட்டி இருக்கிறார். அது நல்ல விஷயம்.

 

 

3. கேள்வி: "தென்னிந்தியாவிலிருந்து, தமிழ்நாட்டில் இருந்து, இந்தியாவின் பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்" என்று தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டசபையில் பேசி இருக்கிறாரே? இது சாத்தியமா?

 

பதில்: அதன் சாத்தியம் பற்றி ஆதவ் அர்ஜுனா கவலைப்பட்டிருக்க மாட்டார். அவர் பேசியது, மிக அருகில் அமர்ந்திருந்த முதல்வர் விஜய்யின் காதில் விழுந்தால் போதும் என்று மட்டும் ஆசைப்பட்டிருப்பார். அவர் ஆசை நிறைவேறி விட்டது. விஷயம் முடிந்தது.

 

 

4. கேள்வி: தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் சட்டசபையில் நிதி நிலை அறிக்கையை வாசிக்கும்போது பல தமிழ்ச் சொற்களை அவர் சரியாக உச்சரிக்கவில்லை என்று ஒரு எம்.எல்.ஏ சுட்டிக் காட்டியபோது, அமைச்சர் கோபப்பட்டு ஏதேதோ பேசினாரே - அடுத்த வாரம் தனது தவறான தமிழ் உச்சரிப்பை அவர் ஒப்புக் கொண்டாலும்?

 

பதில்: தமிழகத்தில் தமிழை நன்றாக உச்சரித்து - அதாவது தமிழை அடித்து உதைக்காமல், அல்லது தமிழின் கையை முறுக்காமல் அல்லது காதையாவது திருகாமல் - பேசுகிற தமிழர்களின் சராசரி வயது சுமார் 55-க்கு மேல் இருக்கும். இதற்கு பாதிக் காரணம், திமுக தலைமை பல பத்தாண்டுகளாக மக்களிடையே நேரடியாகவும் மறைமுகமாகவும்  வளர்த்துவிட்ட பொறுப்பில்லாத்தனம்.

 

பொறுப்பில்லாத்தனம் உள்ள ஒருவர் தாய்மொழியைச் சரியாகக் கற்றல், சரியாகப் பேசுதல் உட்பட எந்த சீரியஸ் விஷயத்திலும் அதற்குத் தேவையான நாட்டமும் அக்கறையும் செலுத்த மாட்டார். அப்படியான ஒரு தமிழர், தன் தாய்மொழியைச் சரியாகப் படிக்கவில்லை, பேசவில்லை என்றால் அதை ஒரு தவறாக, ஒரு இழுக்காக உணரமாட்டார். மரிய வில்சனின் பேச்சு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதால், தமிழகத்தில் தமிழ் பரவலாகப் படும் பாடு வெளிச்சத்துக்கு வந்தது.

 

இந்தி தெரியாது போடா!

தமிழும் ததிங்கிணத் தோம்டா!

 


5. கேள்வி: மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக சட்டசபை ஒரு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இது வரவேற்கத் தக்கதா?

 

பதில்: நீட் தேர்வை ரத்து செய்து அதற்குப் பதிலாகத் தமிழகத்தில் பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை நடந்தால், அத்துடன் இன்டர்வியூ எனும் கண்துடைப்பைச் சேர்த்து இன்டர்வியூ மார்க்கையும் மருத்துவச் சேர்க்கைக்கு ஒரு தகுதியாக எடுத்துக் கொண்டால், டொனேஷன் கறக்கும் தனியார் மருத்துவக் கல்லூரி முதலாளிகளின் வளம் பெருகும், புதிய மருத்துவர்களின் தரம் கீழிறங்கும், பொதுமக்களுக்குச் சிறந்த மருத்துவச் சேவை கிடைக்கும் சாத்தியம் மேலும் தள்ளிப் போகும்.

 

போலீஸ் துறையை இழுத்து மூடிவிட்டு, போலீஸ்காரர்களுக்குப் பதிலாக லுங்கி கட்டிய வாட்ச்மேன்களை ரோந்துப் பணிக்கு அமர்த்தினால் போதும் எனச் சட்டம் போட்டு, அதன் மூலம் கிராமப்புற, ஏழை எளிய, பின்தங்கிய மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அரசாங்கம் ரீல் சுற்றினால், அதை ரவுடிகளும் ஜேப்படிக்காரர்களும் குதூகலமாக வரவேற்பார்கள். அந்த வகையிலான கோரிக்கை தான் சட்டசபைத் தீர்மானம்.


பகுதி 122 // 12.08.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

Monday, 10 August 2026

கேள்வி-பதில் (10.08.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன், தமிழகத்தில் விஜய் தலைமையிலான கூட்டணி அமைச்சரவையில் இரண்டு காங்கிரஸ் நபர்கள் இருப்பதை வரவேற்றுப் பாராட்டிவிட்டு, "காங்கிரஸ் கட்சி ஒரு அமைச்சரவையில் இடம் பெறுகிறது என்றால் அதற்கு மறுபெயர் நேர்மை, எளிமை, தூய்மை" என்று கருத்து தெரிவித்திருக்கிறாரே?

 

பதில்: நேர்மை, எளிமை, தூய்மை எனும் பண்புகளைக் காங்கிரஸ் கட்சியோடு ஐக்கியப்படுத்தி வாசன் சொல்லும்போது, அவரிடமிருந்து ஒரு பண்பு தலைதெறிக்க ஓடுகிறது: நேர்மை.

 

 

2. கேள்வி: லாட்டரி நிறுவனத்திடமிருந்து திமுக 900 கோடி ரூபாய் நன்கொடை பெற்றது ஏன் என்று தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேட்டிருக்கிறார். இது நியாயமான கேள்வியா?

 

பதில்: இது நியாயமான கேள்வி என்றால், டாடா, பிர்லா, அம்பானி, அதானி நிறுவனங்கள் திமுக-வுக்கு அளிக்காத இவ்வளவு பெரிய நன்கொடையை ஒரு லாட்டரி நிறுவனம் ஏன் கொடுத்தது என்றும் ஒரு நியாயமான கேள்வி எழும். இரு பக்கத்தவரின் ரகசிய ஆதாயங்கள் உள்ள விவகாரம் இது - அவை வெளிவராது.

 

 

3. கேள்வி: "மத்திய பாஜக அரசு கொண்டுவரும் லோக்சபா தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாகத் திமுக திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. திமுக அப்படிச் செய்தால் அது தமிழகத்திற்கு மட்டுமல்ல, நாட்டிற்கே அக்கட்சி செய்யும் துரோகம்" என்று தவெக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்திருக்கிறாரே?

 

பதில்: மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு ஏற்ப லோக் சபா தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட வேண்டும், அந்த சமயத்தில் பாராளுமன்றம் அது தொடர்பான சட்டத்தை இயற்றவேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் விதிக்கிறது. இதன்படி மத்திய அரசு கொண்டுவர நினைக்கும் மசோதாவில் தமிழகத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்துகிற ரீதியில் என்ன ஷரத்துகள் உள்ளன, அவற்றுக்கு மாற்றாக வேறு என்ன அம்சங்கள் அந்த மசோதாவில் இடம் பெறவேண்டும், என்பது பற்றி நிர்மல்குமார் மூச்சு விடவில்லை. அரசியலமைப்புச் சட்டத்திலுள்ள ஒரு விதி நாட்டிற்கே துரோகம் இழைக்கிறது என்கிறாரா அவர்?

 

 

4. கேள்வி: ஜார்கண்ட் மாநில அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் தேர்வு மற்றும் ஆள்சேர்ப்பு முறைகேடுகளை எதிர்த்து, ராஞ்சியில் மாணவர்களும் வேலை வேண்டுவோரும் இரண்டு வாரமாக ஆர்பாட்டம் நடத்துகிறார்கள். நீட் தேர்வு வினாத்தாள் கசிவை எதிர்த்து டெல்லியில் நடந்த போராட்டத்தில் நேரில் பங்கேற்று, தடையை மீறி பாராளுமன்றத்தை முற்றுகையிட முயன்று, தரையில் புரண்டு ஆதரவளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜார்கண்ட் போராட்டத்திற்கு போன் மூலமாக மட்டும் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் போராட்டம் குறித்து ராகுல் காந்திக்குக் கவலை இல்லையா? இந்தப் போராட்டத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியியின் பங்கு என்ன?

 

பதில்: ஜார்கண்ட் போராட்டம் குறித்து, யாரை விடவும் ராகுல் காந்தி அதிகம் கவலை கொண்டிருப்பார் - அதாவது, அந்த மாநிலத்தில் பாஜக ஆளும்போது இப்படியான போராட்டம் எழுவதற்குக் காரணம் இல்லாமலோ, அல்லது போராட்டம் வராமலோ போய், காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டணி ஆட்சி நடக்கும்போது இந்தப் போராட்டம் வந்து தொலைக்கிறதே என்று. அதே சோகத்தில் கரப்பான்பூச்சித் தலைவர்கள் தாமாகக் கவுந்து கிடக்கிறார்கள்.

 


5. கேள்வி: பாஜக பிரமுகரும் நடிகருமான சரத்குமார் முன்பு நடித்த பிரபல திரைப்படம், நாட்டாமை. சமீபத்தில் தன் பிறந்த நாள் விழாவில் தனது ஆதரவாளர்களிடம் பேசிய அவர், "உங்கள் கைகளில் 'நாட்டாமை குடும்பம்' என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள். என்னை நேரடியாக நீங்கள் சந்திப்பதற்கு அது கிரீன் கார்டு போல இருக்கும்" என்று அறிவுரை வழங்கி இருக்கிறாரே?

 

பதில்:  தொடர்ந்து அந்த விழாவில் பேசிய அவர், "இளைஞர்கள் உட்பட யாரும் தீய பழக்கங்களில் ஈடுபடக் கூடாது" என்றும் சொல்லி இருக்கிறார். இந்த நல்ல அறிவுரையை மட்டும் சரத்குமாரின் ஆதரவாளர்கள் பின்பற்றி, தங்கள் கைகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.


பகுதி 121 // 10.08.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com