Sunday, 2 August 2026

கேள்வி-பதில் (01.08.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "தமிழகத்துக்கு ராகுல் காந்தி வரும்போது, மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டக் கூடாது என்று சொல்வதற்கு அவருக்குத் தைரியம் இருக்கிறதா?" என்று பாமக தலைவர் அன்புமணி கேட்கிறாரே?

 

பதில்: மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டவேண்டும் அல்லது கட்டக் கூடாது என்று ராகுல் காந்தி பேசுவதற்குத் தேவை தைரியம் அல்ல - வாய் திறக்கக் கூடாத விஷயத்தில் வாய் திறக்கும் அசட்டுத்தனம். அன்புமணி தூண்டிவிடும் அசட்டுத்தனத்தை ராகுல் காந்தி அநேகமாக வெளிப்படுத்த மாட்டார்.

 

தேசநலன் சார்ந்த விஷயங்களில் ராகுல் காந்தி அசடாக இருந்தாலும், தனது சுயநலம் சம்பந்தமான விஷயத்தில் அநேகமாக உஷாராக இருப்பார்.

 

 

2. கேள்வி: "பிரதமர் மோடி மற்றும்.அமித் ஷா - நீங்கள் ஜென் சீ தலைமுறையினரை அச்சுறுத்தி அமைதியாக வைக்க முடியாது" என்று ராகுல் காந்தி கருத்து தெரிவித்திருக்கிறாரே?

 

பதில்: ஜென் சீ இளைஞர்களை - அதுவும் படித்த, ஓரளவு வசதி படைத்த, இளைஞர்களை - ராகுல் காந்தி உட்பட யாரும் அச்சுறுத்தி அமைதியாக வைக்க முடியாது. அதை யாரும் முயலவும் மாட்டார்கள்.

 

ராகுல் காந்தியிடம் நிதானமாக, அறிவுபூர்வமாக, தேசநலனில் அக்கறை கொண்டு யார் பேசினாலும் அவரை அமைதியாக வைக்க முடியாது. தேசநலன் என்ற களத்தில் கண்மண் தெரியாமல் தாறுமாறாக ஓடும் கன்றுக்குட்டி, ராகுல் காந்தி.

 

ஒரு விலங்கான கன்றுக்குட்டிக்கு, இலக்கில்லாமல் துள்ளித் திரிவது மகிழ்ச்சி. ஆனால் விலங்கு வளர்ந்து முதிர்ச்சி பெற்று நிதானம் கொள்கிறது.

 

 

3. கேள்வி: டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்தியக் கல்வி அமைச்சரின் ராஜினாமாவைக் கோரி 36 நாட்கள் போராட்டம் நடத்தி அகில இந்தியாவின் கவனத்தை ஈர்த்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, மக்கள் விரும்பும் ஒரு அரசியல் கட்சியாக மாற முடியுமா?

 

பதில்: டெல்லியில் கரப்பான் பூச்சி கட்சி நிகழ்த்தியது ஒரு சர்க்கஸ். அதில் நன்றாக வித்தை காட்டினார்கள். கோஷம் போடும் வித்தை, கண்டதையும் பேசும் வித்தை, பதாகை காண்பிக்கும் வித்தை, ஆபாசச் செய்கை வித்தை, தடுப்புகள் தாண்டும் வித்தை, கல்லெறி வித்தை, வாகனங்களைப் புரட்டும் வித்தை என்று பலவாறான வித்தைகள் தெரிந்தவர்கள் அங்கு கூடித் தங்கள் திறமையை வெளிப்படுத்தினார்கள். மீடியாக்காரர்கள் எல்லா வித்தைகளையும் படம் பிடித்துக் காட்டினார்கள்.

 

வித்தை காட்டிக் கூட்டம் சேர்க்கிறவர்கள், மக்கள் பிரச்சனை தொடர்பாக மக்களின் மனதை ஈர்த்திருந்தால் தவிர - மக்களைத் திசை திருப்பியாவது அவர்கள் மனதை ஈர்த்திருந்தால் தவிர - அரசியல்வாதிகளாக எடுபடமாட்டார்கள். கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர்கள் அரசியல் தலைவர்களாக எடுபடுவதற்கான அறிகுறி இதுவரை இல்லை. ஆனால் பின்னர் தந்திரங்கள் கற்று அவர்களும் அரசியல்வாதிகள் ஆகலாம். இது இந்தியா.

 

 

4. கேள்வி: ஜந்தர் மந்தர் போராட்டத்தின் போது பிரதமரை இழிவாகப் பேசி,  மற்ற வகையிலும் தரம் தாழ்ந்து பேசிய இளைஞர்கள் பலர் மன்னிப்புக் கோரி வீடியோ வெளியிடுகிறார்கள். அவர்களை மன்னிக்கலாமா?

 

பதில்: அவர்கள் வளர்ந்த இளைஞர்கள். இருந்தாலும் சில பொறுப்புகளை உணர வேண்டியவர்கள். அவர்களுக்கு ஜென் சீ என்ற மகுடத்தை அணிவித்த பின் - அதுவும் அவர்கள் ஒரு பெருங்கூட்டமாக இணையும் போது - மனதிற்குள் அவர்களுக்குத் தானாக ஒரு ஆட்டம் வருகிறது. கரப்பான்பூச்சித் தலைவர்கள், மற்ற தலைவர்கள், சில பிரபலங்கள் ஆகியோர் ஜந்தர் மந்தரில் அந்த ஆட்டத்தைக் கொட்டடித்து ஆக்ரோஷப் படுத்தினர்.

 

ஜந்தர் மந்தரில் வன்முறையில் ஈடுபடாமல், கேமரா முன் கன்னாபின்னா பேச்சுப் பேசிய இளைஞர்களைப் பெருந்தன்மையுடன் மன்னிப்பது நல்லது. பிரதமர் மோடியே அவ்வாறு கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

 


5. கேள்வி: பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய இருவரையும் நோக்கி, "நீங்கள் இந்தியாவின் கடந்த காலம்" என்று ராகுல் காந்தி சொல்கிறார். ராகுல் காந்தி இந்தியாவின் எந்த காலம்?

 

பதில்: கெட்ட காலம்.


பகுதி 117 // 01.08.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

Wednesday, 29 July 2026

கேள்வி-பதில் (29.07.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "விசிக நினைத்திருந்தால், 2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன்பே திமுக கூட்டணி சிதறியிருக்கும்" என்றெல்லாம் விசிக தலைவர் திருமாவளவன் பேசி இருக்கிறாரே?

 

பதில்: இன்றைய நிலையில் இதுபற்றிக் கவலைப்பட வேண்டியவர் திமுக தலைவர் ஸ்டாலின் அல்ல. இதுபற்றிச் சிந்திக்க வேண்டியவர், தவெக தலைவரும் கூட்டணி அரசின் முதல்வருமான விஜய். "விசிக நினைத்தால் ....." என்று விஜய்யிடம் திருமாவளவன் பெரிதாக என்ன சொல்ல நினைக்கிறாரோ?

 

 

2. கேள்வி: "இன்றில்லாவிட்டால் நாளை, நாளை இல்லாவிட்டால் மறுநாள், அல்லது என்றாவது ஒரு நாள் நாங்கள் வெற்றி பெறுவோம்" என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பேசி இருக்கிறாரே?

 

பதில்: இன்று, நாளை, மறுநாள், எந்நாளும் சீமான் இதே வார்த்தைகளைச் சொல்லுவார்.

 

 

3. கேள்வி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் சோனம் வாங்சுக் முன்நின்று டெல்லியில் நடத்திய போராட்டம் குறித்துக் கருத்துத் தெரிவித்த நடிகை ஜோதிகா, சோனம் வாங்சுக், அபிஜித் திப்கே, சௌரவ் தாஸ் ஆகியோரைச் சுட்டிக்காட்டி, "உங்களைப் போன்றவர்களைப் பிள்ளைகளாக வளர்க்கக்கூடிய தாய்களாக இருக்க நாங்கள் விரும்புகிறோம்" என்று சொல்லியிருக்கிறாரே?

 

பதில்: எதிர்க்கட்சித் தலைவர்களாகிய ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, மு. க. ஸ்டாலின் போன்றவர்கள் மத்திய அரசுக்கு எதிராகச் செயல்படுவதற்கு லாயக்கற்றவர்கள், அவர்கள் சுத்த வேஸ்ட், என்பது ஜோதிகாவின் கருத்து. அதை எப்படியோ சுற்றி வளைத்துச் சொல்லப் பார்க்கிறார்.

 

 

4. கேள்வி: 'கம்பளிப்பூச்சி ஜனதா கட்சி' என்று ஒரு கட்சி ஆரம்பிக்க நினைக்கிறேன். எடுபடுமா?

 

பதில்: இன்றைய நிலையில் அது பெயரளவில் எடுபடும்.

 


5. கேள்வி: புல், பூண்டு, பூச்சி - விளக்கவும்.

 

பதில்: புல், ஆடு மாடுகளுக்கு உணவு. பூண்டு, மனிதர்களுக்கு உணவு.

 

சில பூச்சிகள் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தானவை - ஆபத்திலிருந்து விலகி இருப்பது நல்லது.


பகுதி 116 // 29.07.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

Sunday, 26 July 2026

கல்வி அமைச்சரின் ராஜினாமா - மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

 

-- ஆர். வி. ஆர்

 

மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒரு வழியாக ராஜினாமா செய்துவிட்டார்.

 

2026 இளநிலை மருத்துவச் சேர்க்கைக்கான தேர்வு நடந்தது. ஆனால் தேர்வுக்கு முன்னரே அதற்கான வினாத்தாள் கசிந்துவிட்டது என்பதை மத்திய அரசு பின்னர் அறிந்தது. அந்தத் தேர்வு உடனே ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடந்து அதன் முடிவுகள் வெளியாகி மருத்துவச் சேர்க்கைகள் நடக்கப் போகின்றன. பிறகென்ன என்றால் – இருக்கிறது.

 

முதலில் நடந்த தேர்வின் வினாத்தாள் கசிந்தது என்பதால், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற அமைப்பு முன்னணியில் நின்று டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கல்வி அமைச்சரின் ராஜினாமாவைக் கோரி 37 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தியது. முதலில் மத்திய அரசு அந்தக் கோரிக்கையை ஏற்காவிட்டாலும், இறுதியில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துவிட்டார். ஜந்தர் மந்தர் போராட்டமும் வாபஸ் ஆகிவிட்டது.

 

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

 

விவேகம் என்றால் என்ன? ஒரு இக்கட்டான சூழலில் நீங்கள் மாட்டிக் கொண்டால் உங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு, உங்களுக்கு மேலும் சங்கடம் தரும் முடிவை எடுக்காமல், ஒரு பாதுகாப்பான முடிவை எடுத்து அந்த இக்கட்டிலிருந்து மீள்வதற்கு விவேகம் என்று அர்த்தம். அதன் பெயர் தோல்வி அல்ல. அது உங்களுக்கான வெற்றி – மற்றவர்களுக்கு எப்படி இருந்தாலும்.

 

நீட் வினாத்தாள் கசிந்ததற்கு தர்மேந்திர பிரதான் ஒரு நேரடியான காரணம், அவர் தன்னுடைய அல்லது தனக்கு வேண்டியவர்களின் லாபத்திற்காக உடந்தையாக இருந்து அந்த வினாத்தாள் கசிய உதவினார் என்பது உண்மையானால், ஒரு அகப்பட்ட குற்றவாளியாக அவர் ராஜினாமா செய்யவேண்டும்; மறுத்தால் அவரை அமைச்சர் பதவியிலிருந்து பிரதமர் விடுவிக்க வேண்டும். அப்படியான குற்றச்சாட்டு தர்மேந்திர பிரதான் மீது இல்லை, அதற்கான சாட்சியம் இருப்பதாக யாரும் சொல்லவில்லை. பிறகு ஏன் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யவேண்டும், அது ஏன் மத்திய அரசின் விவேகம் என்றாகும்?

 

டெல்லி போராட்டக்களப் பகுதியில் குவிந்தவர்களில் அநேகர் மாணவர்களாகத் தெரியவில்லை. அவர்களில் வெகுசிலர்  மாணவர்களாக இருக்கலாம். கரப்பான்பூச்சியினர் இருந்தார்கள். அதோடு, மத்திய அரசை எதிர்த்துக் குரல் கொடுப்பதற்கு அது லட்டு மாதிரியான வாய்ப்பு என்பதால்  காங்கிரஸ் கட்சியினர், ஆம் ஆத்மி கட்சியினர், இன்னும் சில கட்சியினர் அங்கு திரண்டிருந்தனர்.

 

ஜந்தர் மந்தரில் போராட வந்தவர்கள் கைகட்டி வாய்பொத்தி காந்திய வழியில் போராடுபவர்கள் அல்ல. அதோடு, பொதுவெளியில் கூட்டம் எங்கு எதற்காகக் கூடினாலும் வந்து சேரும் சமூக விரோதிகளும் அங்கு கலந்திருப்பார்கள். இந்தியாவை வீழ்த்த நினைக்கும் வெளிநாட்டு சக்திகள் அந்தக்கூட்டத்தில் சிலரை அனுப்பி வைத்திருக்கலாம். வேடிக்கை பார்க்கச் சில அப்பாவி மக்களும் அங்கு வந்திருப்பார்கள். அந்த எல்லா மனிதர்களிலும் யார் யாரை என்ன செய்யத் தூண்டுவார்கள், எப்போது என்ன உயிர்ச்சேதம் அல்லது விபரீதம் அவர்களாலேயே ஏற்படுத்தப் படும் அல்லது தூண்டப்படும் என்பதைக் கணிக்க முடியாது. போராட்டக்களமும் டெல்லியில், நமது தலைநகரில், அகில இந்தியாவின் கவனத்தைப் பெறுகின்றதாக இருந்தது.  

 

ஒரு தீக்குளிப்பு, ஒரு கொலை, பெரிய கலவரம், போலீஸ் துப்பாக்கிச் சூடு என்று  போராட்டக் களத்தில் ஏற்பட்டால் என்ன ஆகும்? அது கரப்பான்பூச்சிகளால், எதிர்க் கட்சிகளால், மீடியாவால், ஊதிப் பெரிதாக்கப்படும். அது சாதாரண இந்திய மக்களைப் பாதித்து மத்திய அரசுக்கு எதிராக அவர்களைத் திருப்பும். காரணம், சாதாரண இந்திய மக்கள் அறிவைவிட உணர்ச்சிகளால் அதிகம் உந்தப் படுகிறார்கள். ஒரு விஷயத்தின் நியாய அநியாயங்களை விடவும், அது தொடர்பான கூக்குரல், களேபரம், அடிதடி, ரத்தம், உயிரிழப்பு, ஆகியவை அவர்களை அதிகம் பாதிக்கும், அதன்படி அவர்கள் பெரிதும் வழி நடத்தப்படுவார்கள். இந்த விளைவுகள் ஏற்பட அனுமதித்து, ஒரு கல்வி அமைச்சரின் பதவியைத் தக்கவைத்து, வரப்போகும் மாநில சட்டசபைத் தேர்தல்களில் – அடுத்த எட்டு மாதங்களில் உத்தரப் பிரதேசம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் வருகின்றன – பாஜக கூட்டணி தனது வெற்றி வாய்ப்பைத் தவறவிடக் கூடாது. பத்து ரூபாய் நஷ்டத்தை ஏற்கச் சம்மதிக்காமல், நூறு ரூபாய் இழப்பை பாஜக வரவழைக்கக் கூடாது. 


கூட்டிக் கழித்துப் பார்த்தால், மத்திய அரசு தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்யக் கேட்டுக் கொண்டது, அவரும் ஒரு பெரிய நன்மைக்காக அதற்கு உடன்பட்டது, மத்திய அரசின் தோல்வி அல்ல. அது மத்திய அரசின், பாஜக-வின், விவேகமான காரியம்.

 

இன்னொன்று. ஜந்தர் மந்தர் போராட்டம் ஜனநாயகத்தின் வெற்றி என்று சொல்வதும் சரியல்ல. மெஜாரிட்டி மக்களின் தீர்ப்பு, அல்லது அம்மக்களின் விருப்பம், என்பதுதான் ஜனநாயகத்தின் அடித்தளம். நீட் வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து மறுதேர்வு நடந்த சில நாட்களில் லோக்சபாவுக்குத் தேர்தல் நடந்தது என்று வைத்துக் கொள்ளுங்கள்.  அப்போது கரப்பான்பூச்சி கட்சியோ மற்ற எதிர்க்கட்சிகளோ அந்த வினாத்தாள் கசிவு பற்றி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக மக்களிடம் பிரசாரம் செய்து அந்த லோக் சபா தேர்தலில் வென்றிருக்க முடியுமா? இல்லை, அது நடந்திருக்காது, என்பது ஒரு நல்ல அனுமானம். கரப்பான்பூச்சி கட்சியின் வெற்றி ஜனநாயகத்தின் வெற்றி என்பது கண்சிமிட்டிச் சொல்லும் கருத்து. இருந்தாலும், கல்வி மற்றும் கல்வித்தரம் தொடர்பாக மேலும் சில சீர்திருத்தங்களை மத்திய அரசு இனி நினைத்துப் பார்ப்பது சற்று எளிதாகும்.

 

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது யாருக்காவது பெரிய இழப்பு, எதிர்பாராத தோல்வி, என்றால் அது லோக் சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்குத்தான். போராட்டம் நீடித்து அதில் ஏதாவது நிகழ்ந்து, அதனால் மக்கள் மத்தியில் பாஜக பெரிய பின்னடைவைச் சந்திக்கும், அதன் விளைவாக நாம் மக்களிடையே அதிக வெளிச்சம் பெறலாம் என்று நினைத்த ஒருவரின் எண்ணத்தில் மண் விழுந்தால், அதை அவர் தன்னளவில் எப்படி எடுத்துக் கொள்வார்? மாணவர்களுக்குக் கிடைத்த வெற்றி என்றா, அல்லது தனது நப்பாசைக்குக் கிடைத்த தோல்வி என்றா?

 

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

Friday, 24 July 2026

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்

 

-- ஆர். வி. ஆர்

 

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

 

இந்த 2026-ல் மருத்துவச் சேர்க்கைக்கான நீட் தேர்வு நடந்து முடிந்தவுடன், நீட் வினாத்தாள் முன்னதாகவே கசிந்தது என்று தேசியத் தேர்வு முகமை கண்டறிந்தது. உடனே அது பற்றி மத்தியக் கல்வி அமைச்சகம் புகாரளித்து சி.பி.ஐ வழக்குப் பதிந்தது.  நடந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடந்தது. மறுதேர்வு முடிவுகளின் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை நடக்கப் போகிறது.

 

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததற்கு எதிராக, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி முன்னணியில் நின்று, மற்ற சில அமைப்புகளும் இணைந்து, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் வீதிப் போராட்டம் நடத்துகின்றன. அவற்றின் கோரிக்கை: வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யவேண்டும். ஆனால் அவரோ பிரதமர் மோடியா அந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை.  பின்னாளில் அவர்கள் என்ன முடிவெடுப்பார்கள் என்று நமக்குத் தெரியாது.

 

நீட் வினாத்தாள் கசிவைப் புலன்விசாரணை செய்யும் சி.பி.ஐ, 13 நபர்களைக் கைது செய்திருக்கிறது. வினாத்தாள் தயாரிப்புக் குழுவில் இருந்த ஒரு கெமிஸ்ட்ரி புரொபசர் ஐந்து லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு வினாத்தாளைக் கசியவிட்டார் என்ற குற்றச்சாட்டு அவர்மீது இருக்கிறது. அதாவது, வினாத்தாள் கசிவு லஞ்சத்திற்காக நடைபெற்றது என்பது புலன்விசாரணையில் தெரியவருகிறது. வழக்கு நடக்கும். 

 

இப்போது போராட்டத்திற்கு வருவோம். போராட்டக்காரர்கள் மத்தியக் கல்வி அமைச்சரின் ராஜினாமாவைக் கேட்பதில் நியாயம் இருக்கிறதா? இது புரிவதற்கு, நாம் சில அடிப்படை விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

 

இந்தியாவில் லஞ்ச ஊழல் ஒரு வாழ்க்கை முறை என்றாகி விட்டது. அரசு உயர் மட்டத்தில் லஞ்ச ஊழல் பலப்பல வருடங்களாகப் பரவி விட்டது.  அதன் விளைவாக, கீழ் மட்டத்தில் லஞ்ச ஊழல் நர்த்தனம் ஆடுகிறது.

 

லஞ்சம் தருகிறவர்கள் இருவகை. ஒன்று, லஞ்சம் கொடுத்துத் தாங்கள் நேர்வழியில் பெறமுடியாத சலுகைகளையும் பலன்களையும் பெற்று அதன்மூலம் தாங்கள் அளித்த லஞ்சப் பணத்தைவிட அதிகப் பயன் அடைகிறவர்கள். நீட் வினாத்தாள் கசிவிற்காக லஞ்சம் கொடுத்தவர்கள் இந்த வகை.

 

இன்னொரு வகையினர், அரசு அளிக்கும் சேவைகள் மற்றும் பலன்களைப் பெறுவதற்காக லஞ்சம் தரும் கட்டாயத்துக்கு உள்ளாகிப் பணம் இழக்கிறவர்கள். உதாரணம்: பத்திரப் பதிவு அலுவலகத்தில் முறையாக ஒரு விற்பனைப் பத்திரத்தைப் பதிவு செய்வதற்காக, லஞ்சம் கொடுக்க வேண்டிய பொதுமக்கள்.

 

இந்தியாவில் மத்தியிலோ ஒரு மாநிலத்திலோ, எந்த அரசு இருந்தாலும் முறைகேடான பயன்களுக்காக லஞ்சம் தருபவர்களும், அதிக வருமானத்திற்காக லஞ்சம் வாங்கும் அரசுத்துறை மனிதர்களும் கைகோர்ப்பது அங்கும் இங்கும் நடக்கத்தான் செய்யும். இதற்குக் காரணம், இரு பக்கத்திலுமான ஒழுக்கக் குறைவு. ஒரு நேரான அரசு கவனிப்பாக இருந்து அவர்களின் செயல்களைக் கட்டுப்படுத்தலாம், ஆனால் அவற்றை முற்றிலும் ஒழிக்க முடியாது. காரணம்: தனிமனித மனங்களில் உள்ள ஒழுக்கக் குறைவை ஒரேயடியாக எந்த அரசும் களைய முடியாது. அந்த மனிதர்கள் அரசுக் காரியங்களில் தங்கள் கைவரிசையைக் காட்டும்போது, ஒரு பொறுப்பான அரசு அவர்களைப் பிடித்து வழக்கு நடத்தி அவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தரலாம், அவர்கள் எதிர்பார்த்திராத சமூக அவமானத்தை அவர்களுக்குத் தரலாம் - அதன் மூலம் பின்னர் அதே குற்றத்தைச் செய்ய நினைப்பவர்களுக்கு அச்சம் ஏற்படுத்தி அவர்களைக் கட்டுப்படுத்த முனையலாம். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மத்திய அரசு தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.

 

சரி, தொன்றுதொட்ட நாளிலிருந்து இந்தியா தனிமனித ஒழுக்கக் குறைவுள்ள சமூகமா? இல்லை. தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்தும் இதிகாசங்களையும் புராணங்களையும் போதனைகளையும் கொண்ட நாடு இந்தியா. அந்நியர்கள் ஆட்சியின்போது, அவர்களது ஆட்சியே அக்கிரமம், அநியாயம் என்றிருந்து அதனால் இந்தியப் பொதுவாழ்வில் ஒழுக்கக் குறைவு துளிர்த்துப் பரவியது.  அதில் அகப்பட்டவர்கள் அதிகம், தப்பித்தவர்கள் குறைவு.

 

மத்தியக் கல்வி அமைச்சர் ராஜினாமா செய்யவேண்டும் என்ற போராட்டத்தை முன்னெடுத்தவர்கள், அதை வழி நடத்துபவர்கள், அதை ஆதரிக்கும் எதிர்க் கட்சிகள் மற்றும் பொதுவாழ்வுப் பிரபலங்கள் ஆகியோருக்கு, ஒரு அடிப்படை விஷயம் புரியாதா? அதாவது, நீட் வினாத்தாள் கசிவுக்கு மத்தியக் கல்வி அமைச்சர் துளியும் காரணமல்ல; அதற்குக் காரணம் நீட் வினாத்தாள் தயாரிப்பில் ஈடுபட்ட சிலரும், தேர்வுக்கு முன்னதாக அந்த வினாத்தாளை அறிய முற்பட்ட சில மாணவர்களும், அவர்கள் அனைவரிடம் இருந்த ஒழுக்கக் குறைவும் என்ற அடிப்படை விஷயம் புரியாதா?

 

புரியும். நன்றாகப் புரியும். இருந்தாலும் போராட்டத்தை நடத்துபவர்கள், அவர்களோடு இணையும் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் மற்றும் போராட்டத்தை ஆதரிக்கும் பிரபலங்களிடம் ஒரு குறை இருப்பதால் அவர்கள் தங்களின் அநியாயச் செயலில் பிடிவாதமாக இருக்கிறார்கள். அந்தக் குறை: அவர்களிடமும் உள்ள ஒழுக்கக் குறைவு – ஒரு பேருக்காக, வெளிச்சமும் விளம்பரமும் கிடைப்பதற்காக, அரசியல் ஆதாயத்திற்காக, உண்மையை ஏற்க மறுக்கும் ஒழுக்கக் குறைவு.  அந்த ஒழுக்கக் குறைவையும் அரசால் நீக்க முடியாது.

 

இந்த விஷயத்தில் மத்திய அரசு என்ன செய்யலாம்?

 

ஒழுக்கக் குறைவான நோக்கத்துடன் வீதியில்  போராட்டம் நடத்துகின்ற, ஒழுக்கக் குறைவுடன் அதற்கு ஆதரவு தருகின்ற, மனிதர்களின் செயல், நீட் வினாத்தாள் கசிவிற்காக லஞ்சம் வாங்குவது மாதிரியான பெரிய குற்றம் அல்ல. தெருக்களில் இறங்கி அவர்கள் செய்யவிருந்த போராட்டத்தை மத்திய அரசு முளையிலேயே கிள்ளி எறிந்திருந்தால், மத்திய அரசுக்கு மக்கள் மத்தியிலும் கோர்ட்டுகள் பார்வையிலும் கெட்ட பெயர் ஏற்படலாம்  – ஏதோ நீட் வினாத்தாள் கசிய விட்டவர்களுக்கு  ஆதரவாக மத்திய அரசு நடப்பதாகப் பொதுவெளியில் ஒரு தோற்றம் ஏற்படலாம். அதனால் எதிர்க் கட்சிகளின் கையும் ஓங்கலாம். யார் கண்டது, இந்தியாவுக்கு எதிரான சில வெளிநாட்டு சக்திகளும் வலிமை பெறலாம். ஆகவே போராட்டத்தை அரசு கடுமையாகக் கையாளாமல் இருந்தது விவேகம் மிக்கது.

 

போராட்டம் தொடர்பான மனிதர்கள் தங்களை, தங்களின் போலி அக்கறையை, மேலும் மேலும் வெளிக்காட்டிக் கொள்ளச் செய்து, பொதுவெளியில் அவர்கள் செய்யத் துடிக்கும் அராஜகங்களையும் சிறிய அளவில் அனுமதித்து, மதியூகமாகவும் பொறுமையாகவும் அவர்களை அம்பலப்படுத்தி வலுவிழக்கச் செய்வதுதான் மத்திய அரசு செய்யத் தகுந்தது.  அதை மத்திய அரசு செய்து வருகிறது. அதைச் செய்வதில் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சமர்த்தர்கள் அல்லவா?  

 

* * * * *


Author: R. Veera Raghavan, Advocate, Chennai