Monday, 10 August 2026

கேள்வி-பதில் (10.08.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன், தமிழகத்தில் விஜய் தலைமையிலான கூட்டணி அமைச்சரவையில் இரண்டு காங்கிரஸ் நபர்கள் இருப்பதை வரவேற்றுப் பாராட்டிவிட்டு, "காங்கிரஸ் கட்சி ஒரு அமைச்சரவையில் இடம் பெறுகிறது என்றால் அதற்கு மறுபெயர் நேர்மை, எளிமை, தூய்மை" என்று கருத்து தெரிவித்திருக்கிறாரே?

 

பதில்: நேர்மை, எளிமை, தூய்மை எனும் பண்புகளைக் காங்கிரஸ் கட்சியோடு ஐக்கியப்படுத்தி வாசன் சொல்லும்போது, அவரிடமிருந்து ஒரு பண்பு தலைதெறிக்க ஓடுகிறது: நேர்மை.

 

 

2. கேள்வி: லாட்டரி நிறுவனத்திடமிருந்து திமுக 900 கோடி ரூபாய் நன்கொடை பெற்றது ஏன் என்று தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேட்டிருக்கிறார். இது நியாயமான கேள்வியா?

 

பதில்: இது நியாயமான கேள்வி என்றால், டாடா, பிர்லா, அம்பானி, அதானி நிறுவனங்கள் திமுக-வுக்கு அளிக்காத இவ்வளவு பெரிய நன்கொடையை ஒரு லாட்டரி நிறுவனம் ஏன் கொடுத்தது என்றும் ஒரு நியாயமான கேள்வி எழும். இரு பக்கத்தவரின் ரகசிய ஆதாயங்கள் உள்ள விவகாரம் இது - அவை வெளிவராது.

 

 

3. கேள்வி: "மத்திய பாஜக அரசு கொண்டுவரும் லோக்சபா தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாகத் திமுக திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. திமுக அப்படிச் செய்தால் அது தமிழகத்திற்கு மட்டுமல்ல, நாட்டிற்கே அக்கட்சி செய்யும் துரோகம்" என்று தவெக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்திருக்கிறாரே?

 

பதில்: மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு ஏற்ப லோக் சபா தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட வேண்டும், அந்த சமயத்தில் பாராளுமன்றம் அது தொடர்பான சட்டத்தை இயற்றவேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் விதிக்கிறது. இதன்படி மத்திய அரசு கொண்டுவர நினைக்கும் மசோதாவில் தமிழகத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்துகிற ரீதியில் என்ன ஷரத்துகள் உள்ளன, அவற்றுக்கு மாற்றாக வேறு என்ன அம்சங்கள் அந்த மசோதாவில் இடம் பெறவேண்டும், என்பது பற்றி நிர்மல்குமார் மூச்சு விடவில்லை. அரசியலமைப்புச் சட்டத்திலுள்ள ஒரு விதி நாட்டிற்கே துரோகம் இழைக்கிறது என்கிறாரா அவர்?

 

 

4. கேள்வி: ஜார்கண்ட் மாநில அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் தேர்வு மற்றும் ஆள்சேர்ப்பு முறைகேடுகளை எதிர்த்து, ராஞ்சியில் மாணவர்களும் வேலை வேண்டுவோரும் இரண்டு வாரமாக ஆர்பாட்டம் நடத்துகிறார்கள். நீட் தேர்வு வினாத்தாள் கசிவை எதிர்த்து டெல்லியில் நடந்த போராட்டத்தில் நேரில் பங்கேற்று, தடையை மீறி பாராளுமன்றத்தை முற்றுகையிட முயன்று, தரையில் புரண்டு ஆதரவளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜார்கண்ட் போராட்டத்திற்கு போன் மூலமாக மட்டும் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் போராட்டம் குறித்து ராகுல் காந்திக்குக் கவலை இல்லையா? இந்தப் போராட்டத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியியின் பங்கு என்ன?

 

பதில்: ஜார்கண்ட் போராட்டம் குறித்து, யாரை விடவும் ராகுல் காந்தி அதிகம் கவலை கொண்டிருப்பார் - அதாவது, அந்த மாநிலத்தில் பாஜக ஆளும்போது இப்படியான போராட்டம் எழுவதற்குக் காரணம் இல்லாமலோ, அல்லது போராட்டம் வராமலோ போய், காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டணி ஆட்சி நடக்கும்போது இந்தப் போராட்டம் வந்து தொலைக்கிறதே என்று. அதே சோகத்தில் கரப்பான்பூச்சித் தலைவர்கள் தாமாகக் கவுந்து கிடக்கிறார்கள்.

 


5. கேள்வி: பாஜக பிரமுகரும் நடிகருமான சரத்குமார் முன்பு நடித்த பிரபல திரைப்படம், நாட்டாமை. சமீபத்தில் தன் பிறந்த நாள் விழாவில் தனது ஆதரவாளர்களிடம் பேசிய அவர், "உங்கள் கைகளில் 'நாட்டாமை குடும்பம்' என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள். என்னை நேரடியாக நீங்கள் சந்திப்பதற்கு அது கிரீன் கார்டு போல இருக்கும்" என்று அறிவுரை வழங்கி இருக்கிறாரே?

 

பதில்:  தொடர்ந்து அந்த விழாவில் பேசிய அவர், "இளைஞர்கள் உட்பட யாரும் தீய பழக்கங்களில் ஈடுபடக் கூடாது" என்றும் சொல்லி இருக்கிறார். இந்த நல்ல அறிவுரையை மட்டும் சரத்குமாரின் ஆதரவாளர்கள் பின்பற்றி, தங்கள் கைகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.


பகுதி 121 // 10.08.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

 

Sunday, 9 August 2026

கேள்வி-பதில் (07.08.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: தஞ்சாவூரில் காவிரி விவகாரம் தொடர்பாக நடந்த  போராட்டத்தின் போது பேசிய உதயநிதி ஸ்டாலின், இரட்டை அர்த்தத்தில் கீழ்த்தரமாகப் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை மறுத்து, தான் இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை என்கிறார் அவர். அவரது மறுப்பு ஏற்கக் கூடியதா?

 

பதில்: அவர் பேச்சில் இரட்டை அர்த்தம் இருந்ததாகச் சொல்வது சரியல்ல. இருந்தது, கெட்ட அர்த்தம் மட்டும்தான்.

 

 

2. கேள்வி: தஞ்சாவூரில் உதயநிதி ஸ்டாலின் இரட்டை அர்த்தம் தொனிக்கப் பேசியதாக எழும் குற்றச்சாட்டு குறித்து அவர் தந்தை மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், "உதயநிதி தவறுதலாகப் பேசும் நபரல்ல. அப்படியே பேசினாலும், உடனடியாக மன்னிப்புக் கேட்கும் இயல்புடையவர்"  என்றும் சொல்லி இருக்கிறார். இதற்கு என்ன அர்த்தம்?

 

பதில்:  உதயநிதி என்ன பேசினார் என்பது ஊருக்கே தெரிந்துவிட்டது. அவர் பேச்சில் இரட்டை அர்த்தம் இல்லை என்று மு.க. ஸ்டாலின் நினைத்தால், "உதயநிதி அப்படிப் பேசவில்லை" என்று மறுப்பதோடு நிறுத்தி இருப்பார். மாறாக, 'உதயநிதி தவறாகப் பேசினாலும் மன்னிப்புக் கேட்பார், நானும் அவரை மன்னிப்புக் கேட்கச் செய்வேன். இதற்கெல்லாம் அவகாசம் கொடுக்காமல் அவரை அவசரம் அவசரமாகக் கைது செய்திருக்க வேண்டாம்' என்று தொனிப்பது போல் மு.க. ஸ்டாலின் ஏன் பேசுகிறார்? "என் மகன் குதிருக்குள் இல்லை" என்கிறாரே!

 

 

3. கேள்வி: உதயநிதியின் சர்ச்சைக்குரிய தஞ்சாவூர்ப் பேச்சு, அதற்காக அவர் கைது, இரண்டையும் குறித்து கருத்துச் சொன்ன நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், "தமிழகத்தில் அரங்கேறி வரும் அரசியல் காட்சிகள் மிகுந்த ஏமாற்றத்தைத் தருகின்றன. ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் சேர்ந்ததுதான் அரசாங்கம் என்ற அடிப்படையை மறந்து, இருவரும் பகைமை பாராட்டுவதும், காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுவதும், அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுவதும் தான் ஆட்சி நிர்வாகமா, மக்களுக்கான அரசியலா என்ற கேள்வி எழுகிறது" என்று கூறி இருக்கிறார். இதற்கு என்ன அர்த்தம்?

 

பதில்: இந்த விவகாரம் பற்றிச் சீமான் வாயைத் திறக்காமல் இருந்தால் உதயநிதியின் பேச்சுக்காக அவரைச் சீமான் கண்டிக்கிறாரா, அல்லது உதயநிதி பேசியது தவறல்ல என்ற எண்ணத்துடன் அவர் கைது செய்யப்பட்டதை மட்டும் சீமான் ஆட்சேபிக்கிறாரா, அல்லது இரண்டுமே  அதிகப்படியானவை என்று அவர் நினைக்கிறாரா, என்பது நமக்குத் தெரியாது.

 

சீமான் வாய் திறந்து நீட்டி முழக்கி ஏதோ சொன்னாலும், அவர் தன் வாயைத் திறக்காத எபெக்ட்டைக் கொடுக்கிறார். சீமான் என்ன அர்த்தம் வைத்து ஜாங்கிரிப் பேச்சு பேசினார், என்ன காரணத்திற்காக யாருக்கும் புரியாதபடி பேசினார், என்பது அவருக்கு மட்டும் தெரியும்.

 

 

4. கேள்வி: தஞ்சாவூர்க் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் இரட்டை அர்த்தத்தில் தவறாகப் பேசினார், ஆபாசத் தொனியில் பேசினார், என்றே இருந்தாலும், அதுபற்றிப் பொதுவெளியில் பரவலாகப் பேசுவது நல்லதா?

 

பதில்: ஒருகாலத்தில் அரசியல் மேடைகளில் ஆபாசப் பேச்சுகள் ஒலித்த போது, அதுபற்றித் தெரிந்து மனதளவில் ஆட்சேபித்தவர்கள் கூட அதை வெளியில் சொல்லிக் கண்டிப்பது நாகரிகமாக இருக்காது என்று மௌனமாக இருந்தார்கள். இது ஆபாசப் பேச்சாளர்களை, அவர்களை வளர்த்துவிடும் அரசியல் கட்சியை, ஊக்குவித்தது.

 

சமூக ஊடகங்கள், அவற்றில் வீடியோ என்றில்லாத அந்த நாளில், ஒரு ஆபாசப் பேச்சு பெரிதாகப் பரவாது. பத்திரிகையிலும் அது பற்றிய செய்தி வராது. மேடையில் ஆபாசமாக விமர்சிக்கப்பட்ட நபருக்கு அது அநேகமாகத் தெரியவரும்.

 

திமுக-வில் அனைவரும் தூக்கிக் கொண்டாடும் உதயநிதியே இரட்டை அர்த்தத்தில் ஆபாசப் பேச்சு என்ற பழிக்கு ஆளாகும் போது, விஜய் அரசு அவரைக் கைது செய்தது. அதனால் உதயநிதியின் பேச்சை சமூக ஊடகங்கள் வழியாகத் தமிழகம் நன்கறியும்படி செய்து அவர் பேச்சு எப்படியானது என்று அனைத்து மக்களும் முடிவு செய்யட்டும் என்று ஆக்கிவிட்டது இந்த அரசு.

 

இரட்டை அர்த்தப் பேச்சுகளின் மீதான வழக்குகள் அநேகமாக சட்டப்படி நிற்காது. உதயநிதியின் மீதான வழக்கு என்னவானாலும், திமுக-வின் வண்டவாளம் தற்போது அதிக வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது - இதைத் திமுக ரசிக்காது. இனி மேடைகளில் வெளிப்படும் ஆபாசப் பேச்சுகள் ஓரளவு குறைய வாய்ப்பிருக்கிறது.

 

மொத்தத்தில், உதயநிதி கைதானதும் அவர் என்ன பேசினார் என்று மக்கள் பரவலாக அறிந்துகொண்டதும், அதை உதயநிதி புரிந்துகொண்டதும், நல்லது.

 


5. கேள்வி: உதயநிதியின் இரட்டை அர்த்தப் பேச்சு பற்றி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் பொதுவெளியில் கருத்து சொல்லவில்லையே?

 

பதில்: கமல் எப்படிக் கருத்து தெரிவிப்பார் என்று நீங்களே ஊகிக்கலாம்.

 

'ஒருவரின் பேச்சுக்கு என்ன அர்த்தம் என்று அவரைக் கேட்பது சரியா, அவர் பேச்சைக் கேட்டவர்களைக் கேட்பது சரியா? இதை நான் கேட்பதாக நீங்கள் நினைத்தால், நான் கூறுவதை நீங்கள் சரியாகக் கேட்கவில்லை என்று பொருள். இக்கேள்வியைக் கேட்பது உண்மையிலேயே இச்சமூகத்தின் மனசாட்சி. அதை நாம் அனைவரும் காதுகொடுத்துக் கேட்டாக வேண்டும்.'


பகுதி 120 // 07.08.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

Tuesday, 4 August 2026

கேள்வி-பதில் (04.08.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

கேள்வி: திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலின், தஞ்சாவூர் மேடையில் ஆபாசமாகப் பேசிய குற்றச்சாட்டில் இன்று கைதாகி இருக்கிறார். அவர் கைது சரியா?

 

பதில்: சமீபத்தில் தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது, பொதுவெளியில் நன்கு அறியப்பட்ட ஒரு பெண்ணை மையப்படுத்தி, முதலமைச்சர் விஜய்யையும் தொடர்புபடுத்தி, கொச்சையாக, ஆபாசம் தொனிக்கும் வகையில் ஒரு கமென்ட் அடித்தார். அது ஆபாசமானது என்பதில் சந்தேகமில்லை.

 

வெளியில் யாரும் சொல்லிக் காட்டுவதற்கே கூச்சப் படும் அளவுக்கான அந்த கமென்ட், உதயநிதியின் வாயிலிருந்து வெகு இயல்பாக வந்தது.

 

அநேகமாக, திமுக தவிர வேறு எந்தக் கட்சியினரிடமும் உதயநிதி பேசிய ஆபாசப் பேச்சை நீங்கள் எதிர்பார்க்க முடியாது. அதுவும் தமிழகத்தைப் பல வருடங்கள் ஆட்சி செய்த ஒரு கட்சியின் இரண்டாம் மேல்நிலைத் தலைவர் - முதல் மேல்நிலைத் தலைவருக்கு இணையாகக் கட்சிக்குள் மதிக்கப் படுகிற அவர் - மேடையில் ஆபாசமாகப் பேசுவது, ஒரு பெண் தொடர்பாகவும் அப்படிப் பேசுவது, வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அதற்கான கண்டனத்தை நன்றாகச் சொல்லியிருக்கிறார்.

 

ஆபாசப் பேச்சு - வெளிப்படையாகவோ, இலைமறை காய் மறையாகவோ - திமுக-வினரிடம் மிகுந்து காணப்படுவதற்குக் காரணம் திமுக-வின் தலைமை. தமிழறிந்த கலைஞர் கருணாநிதி அதில் ஈடுபட்டார்.  ஒரு தலைவரே அந்தக் காரியத்தைச் செய்தால், அவ்வாறு பேசலாமா என்று மனதில் நினைத்திருக்கும் பலரும் அதனால் உடனே ஈர்க்கப் படுவார்கள். அத்தகையவர்கள் தலைவருக்கும் பிடித்துப் போகும், அவர்கள்தான் கட்சிக்குள் நிர்வாகப் பொறுப்புகளுக்கும் தலைமைப் பதவிகளுக்கும் நியமிக்கப் படுவார்கள். இது திமுக-வில் நிகழ்ந்து வருகிறது.

 

ஒரு தலைவரின் உயர்ந்த எண்ணங்கள் மற்றும் சிறந்த செயல்பாடுகளை விட, அவருடைய கீழான சிந்தனைகளும் மலிவான செயல்களும் அதிகமானோரை ஈர்க்கும், விரைவாகவும் ஈர்க்கும். அதனால்தான் திமுக-வில் மலிவாகவும் ஆபாசம் தொனிக்கும் வகையிலும் பேசும் எண்ணம் கொண்டவர்கள் நிறைய இருக்கின்றனர்.

 

உதயநிதி இன்று காலை சென்னையில் கைது செய்யப்பட்டு தஞ்சாவூர் கொண்டுசெல்லப்பட்டு அங்கு விசாரணை முடிந்த நிலையில் விடுவிக்கப் பட்டார். தஞ்சாவூரிலிருந்து சென்னை திரும்புவதற்காகத் திருச்சி விமான நிலையத்திற்கு வந்த உதயநிதி, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தான் பேசாத ஒன்றைப் பேசியதாகச் சொல்லி, தான் பேசியதை வெட்டி ஒட்டிக் காண்பித்து, தன் மீது காவல்துறை வழக்குப் பதிந்திருப்பதாக உதயநிதி சொன்னார். எந்த வார்த்தையைக் காவல்துறை வெட்டியது, ஒட்டியது, என்று உதயநிதியால் வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் அந்த வார்த்தையை மறுபடியும் வெளியில் சொல்வது, அதுவும் அவர் பேசியது சரி என்று நியாயப்படுத்தி அந்தச் சொற்களை மறுபடியும் சொல்வது, அவருக்கே கூச்சமாக இருந்திருக்கும்.

 

உதயநிதி பேசியது பற்றி விஜய் அரசு எடுத்திருக்கும் சட்ட நடவடிக்கை கடைசிவரை கோர்ட்டில் நிற்குமா, வெற்றி பெறுமா என்பது வேறு விஷயம். ஆனால் உதயநிதியின் கமென்ட் ஆபாசமானது, அருவருக்கத் தக்கது, பெண்களை மலினப்படுத்திப் பேசும் தரம்கெட்ட செயல் என்பது நிச்சயம்.

 

உதயநிதியின் கைது மற்றும் போலீஸ் விசாரணையால், அதுபற்றிய விரிவான செய்திகளால், பொதுமக்கள் பலரும் அவர் என்ன பேசினார் என்பதை அறிவார்கள். அதாவது, தஞ்சாவூர்க் கூட்டத்துடன் தனது முறையற்ற பேச்சு முடிந்துவிடும் என்று அப்போது நினைத்த உதயநிதி, தரம் தாழ்ந்த தனது கமென்ட் இவ்வளவு விரிவாகத் தமிழகத்தில் அம்பலமாவதை அதிர்ச்சியுடன் தான் பார்ப்பார் - வெளியில் அவர் என்ன காட்டிக் கொண்டாலும். இதுபோக, மேடைகளில் ஆபாசமாகப் பேசாத முதலமைச்சர் விஜய், உதயநிதியின் மீது எடுத்த கைது நடவடிக்கை மற்றும் நீதிமன்ற வழக்கு, ஆபாசப் பேச்சுக்கு எதிரான ஒரு பலத்த நடவடிக்கையாக அமைந்து பெண்களிடம் பரவலான வரவேற்பைப் பெறும்.

 

உதாநிதியின் மீதான ஆபாசப் பேச்சுக்கான வழக்கு எப்படி முடிந்தாலும் சரி. பலம் வாய்ந்த திமுக-வின் இன்றையப் பெரும் தலைவர் அவர் என்பதால், அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையால் தமிழக அரசியல் மேடைகளில் ஒலிக்கும் ஆபாசப் பேச்சு ஐந்து சதவிகிதமாவது குறையும் என்று எதிர்பார்க்கலாம். அந்த வகையில் உதயநிதியின் மீதான நடவடிக்கை நல்லது செய்ய வல்லது. அந்தக் காலத்தில், அப்பாவிடம் அண்ணன் அடி வாங்குவதைப் பார்த்துத் தம்பிகள் தானாக வழிக்கு வருவதை நம் வீடுகளில் முன்பு பார்த்திருக்கிறோம் அல்லவா?

 

பகுதி 119 // 04.08.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com