Friday, 11 September 2026

கேள்வி-பதில் (11.09.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: தவெக, காங்கிரஸ், விசிக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக ஆகிய கட்சிகளைக் கொண்ட கூட்டணிக்கு 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' என்று பெயர். ஒரு மதத்தைக் குறிக்கும் சொல்லைத் தன் பெயரில் வைத்திருக்கும் கட்சி, மதச்சார்பற்ற கட்சியா? அக்கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணி மதச்சார்பற்ற கூட்டணியா?

 

பதில்: கூட்டணியின் ஒரு கட்சியின் பெயரில் உள்ள ஒரு சொல்லை வைத்து எழுப்பப்படும் கேள்வி இது.

 

அந்தக் கூட்டணியின் பெயரில் நைஸாகத் தவிர்க்கப்பட ஒரு சொல்லைச் சேர்த்துப் படித்தால், வேண்டாத குழப்பம் யாருக்கும் வராது.

 

'மதச்சார்பற்ற' எனத் தொடங்கும் கூட்டணியின் பெயருக்கு முன் 'ஹிந்து' என்ற சொல்லைச் சேர்த்து, 'ஹிந்துமதச் சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' என்று படித்துப் பார்த்தால் ஆல் கிளியர், அனைத்தும் ஓகே.

 

 

2. கேள்வி: சட்டசபையில் முதலமைச்சர் விஜய் சமீபத்தில் பேசியதைத் தொடர்ந்து தனது வீடியோ பதிவை வெளியிட்ட திமுக தலைவர் மு. க. ஸ்டாலின், "யாரைப் பற்றிப் பேசும்போதும் கண்ணியமாகப் பேசுங்கள்" என்று விஜய் முதல்வர் பதவியேற்றவுடன் அவரிடம் ஸ்டாலின் சொன்னதை நினைவு கூர்கிறார். ஸ்டாலின் அன்று விஜய்யிடம் சொன்னது சரியான வார்த்தைதானே?

 

பதில்: வார்த்தையை மட்டும் பார்த்தால் சரிதான்.

 

முன்னர் காமராஜரைப் பற்றித் திமுக தலைவர் கருணாநிதி பேசும்போது, இந்த நல்வார்த்தையை அவர் நினைவில் வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

 

பொன்முடி, ஆர்.எஸ்.பாரதி போன்ற தற்போதைய திமுக தலைவர்களிடம் - "டெங்கு, மலேரியா போல் சனாதனத்தை ஒழிக்கவேண்டும்" என்று பேசிய உதயநிதியிடமும் - ஸ்டாலின் இதே அறிவுரையைச் சொல்லியிருக்க வேண்டும். சொன்னாரா?

 

"அரசு வேலைகள் தொடர்பாக யாரும் வசூல் வேட்டை நடத்துவதை அனுமதிக்காதீர்கள். புதிய முதலமைச்சராக, இந்த விஷயத்தில் உங்கள் கண்காணிப்பு முக்கியம்" என்று விஜய்யிடம் ஸ்டாலின் நடுக்கமில்லாத குரலில் சொல்லி இருந்தால் நல்லது. சொன்னாரா?

 

சரியான வார்த்தையைச் சரியான நபர் சொன்னால் அதற்கு முழு மதிப்பு. சரியான நபர் சொல்லாவிட்டால் அதன் மதிப்பு கால் பங்கு.

 

விஜய்யைப் பொறுத்தவரை, அவர் ஆட்சிக்குப் புதியவர், அரசியலுக்கும் புதியவர். அவரும் கண்காணிக்கப் படவேண்டியவர்.

 

 

3. கேள்வி: "நமது முதலமைச்சர் அதிகம் பேசமாட்டார். ஆனால் அனைத்தையும் கூர்ந்து கவனிப்பார்" என்று விஜய்யைப் பாராட்டி சபாநாயகர் ஜி.சி.டி. பிரபாகர் ஒரு விழா மேடையில் பேசி இருக்கிறாரே?

 

பதில்: பிரபாகர் பேசாதது: 'நமது முதலமைச்சர் அதிகம் பேசாவிட்டாலும், நானும் சில அமைச்சர்களும் அடிக்கடி முதலமைச்சரைப் போற்றிப் புகழ்ந்து பேசி அவரது மௌனத்தை ஈடு கட்டிவிடுவோம்.'

 

 

4. கேள்வி: மு. க. ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதானாரா இல்லையா?

 

பதில்:  ஒரு சட்டத்தின் கீழ் ஒரு அரசியல் தலைவர் கைதாவதோ, தண்டிக்கப்படுவதோ, அல்லது அப்படி ஒன்றும் நடக்காமல் இருப்பதோ, பெரிதாக ஒன்றையும் குறிக்காது. வீராப்பாக அந்தத் தலைவர் ஏதாவது சொல்லலாம், அவருடைய எதிரிகள் அதை மறுக்கலாம். இதில் நமக்கு ஒன்றுமில்லை.

 

எப்படியான இரண்டாம் கட்டத் தலைவர்கள் ஒரு கட்சியின் தலைவருக்கு நெருக்கமாக இருக்கிறார்கள் என்பதை வைத்தே நீங்கள் அந்த முதன்மைத் தலைவரை மதிப்பிடலாம் - அந்தத் தலைவர் தூய்மையானவர் போல் காட்டிக் கொண்டாலும். உதாரணமாக: மலிவாகக் கிடைத்ததால் இரண்டு கப்பல்களை வாங்கிப் போட்ட டி.ஆர். பாலு, டாஸ்மாக் கடைகளில் புரட்சிகள் செய்த செந்தில் பாலாஜி, அரசுப் பணியாளர்களைத் தேர்வு செய்யும் முறையில் புதுமைகள் செய்த கே.என். நேரு, திமுக-வுக்கு எதிராக ஓட்டுப் போட்ட வாக்காளர்களை "உங்களுக்கு நல்ல சாவே வராது" என்று வாழ்த்திய ஆர்.எஸ். பாரதி, சாதாரணப் பெண் வாக்காளர்களைப் பார்த்து, "நீங்க ஓசி பஸ்ல தான போறீங்க?" என்று அன்பாக விசாரித்த பொன்முடி, "டெங்கு, மலேரியா போல் சனாதனத்தை ஒழிக்கவேண்டும்" என்று முழங்கிய உதயநிதி, ஆகியோர் மு. க. ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருப்போரில் சிலர். அவரது சுற்றத்தை வைத்தே நீங்கள் ஸ்டாலினைச் சரியாக எடை போடலாம்.

 


5. கேள்வி: அமெரிக்காவில் இந்த ஆண்டு நடக்கப் போகும் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபைக்கான பார்லிமென்ட் தேர்தலில் தனது குடியரசுக் கட்சி வென்றால் ஒவ்வொரு குடிமகனுக்கும் தலா 5,000 டாலர், அதாவது 5 லட்சம் ரூபாய், வழங்கப் படும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்திருக்கிறாரே?

 

பதில்: இதோடு அவர் நிறுத்தக் கூடாது. தனது கட்சியின் பெயரை 'குடியரசு வெற்றிக் கழகம்' என்று மாற்றி, அந்த 5,000 டாலருக்கு 'அத்தைப் பாட்டி ஐயாயிரம்' என்றும் அவர் பெயர் சூட்டினால், அமெரிக்காவில் மாற்றம் வந்துவிட்டது என்று பொருள்.


பகுதி 133 // 11.09.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

 

கேள்வி-பதில் (09.09.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: சட்டசபையில் மானியக் கோரிக்கை பதிலுரை நிகழ்த்திய முதலமைச்சர் விஜய், ஆக்ரோஷமாகத் திமுக-வின் மீது அடுக்கிய குற்றச்சாட்டுகளால் அக்கட்சி சபையில் நிலைகுலைந்ததா, அல்லது விஜய்க்குப் பதிலளிக்க அங்கு திமுக-வுக்குப் போதிய வாய்ப்புக் கிடைக்கவில்லை என்பதால் சபையில் கட்டிப் போடப்பட்டதா திமுக?

 

பதில்: இரண்டுமில்லை. சபை நிகழ்ச்சிகள் நேரலையில் ஒளிபரப்பானதால், செயல்படமுடியாமல் கட்டுண்டு போனது திமுக.

 

 

2. கேள்வி: தமிழக சட்டசபையில் அமளியில் ஈடுபட்டு சபாநாயகருக்குத் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்த திமுக எம்.எல்.ஏ-க்களை சபைக் காவலர்கள் மூலம் வெளியேற்றச் செய்துவிட்டுப் பேசிய சபாநாயகர், "நடப்பதை அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்த முன்னாள் முதல்வர் பழனிசாமியைப் பாராட்டுகிறேன்" என்று கூறி இருக்கிறாரே?

 

பதில்: சட்டசபை என்று மட்டுமல்ல. தனது கட்சிக்குள்ளேயே, தலைவரான தனக்கு எதிராக அடுத்த கட்டத் தலைவர் யார் எதிர்ப்புத் தெரிவித்தாலும், பிறகு அவர் கட்சியை விட்டு வெளியேறினாலும், அதனால் அதிமுக பலவீனமடைந்தாலும், நடப்பதை அமைதியாகக் கவனித்தவாறு தனது நாற்காலியைக் கெட்டியாகப் பிடித்து அமர்ந்திருப்பவர் பழனிசாமி.

 

 

3. கேள்வி: தமிழக சட்டசபையில், போதை ஒழிப்பின் அவசியம் பற்றித் தமிழில் எழுதிவைத்த காகிதத்தைக் கையில் வைத்துப் படிக்கும்போது திக்கித் தடுமாறித் திணறுகிறாரே தவெக எம்.எல்.ஏ, பல்லவி?

 

பதில்: அந்த இளம் தவெக எம்.எல்.ஏ, 12-ம் வகுப்பு பாஸ் செய்தவர். அவர் படித்த பள்ளியில் அவருக்குச் சரியாகத் தமிழ் சொல்லிக் கொடுத்திருக்க மாட்டார்கள். சரியான தமிழ் ஆசிரியர்களைப் பல வருடங்களாகத் திராவிடக் கட்சிகள் வேலைக்கு அமர்த்தவில்லை. பிறகு தமிழ் எங்கே வாழும்? நமது நகராட்சிக் கட்டிடங்களின் உச்சியிலும் சுவரொட்டிகளிலும் தமிழ் வாழும் - அதிகமான தமிழர்களின் நாவில் அல்ல.

 

 

4. கேள்வி: தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை வெளியேற்றித் திமுக ஆட்சி அமைத்ததைச் சொல்லி, பின்னர் திமுக-வை விரட்டிவிட்டுத் தவெக ஒரு கூட்டணி ஆட்சி நிறுவியதைச் சுட்டிக்காட்டி, அடுத்ததாக இரண்டையும் விட மிகச் சிறப்பான ஆட்சி வரவேண்டியது பற்றிப் பேசிய அண்ணாமலை, "1960-களில் உணர்ச்சிநிலை மாற்றம் வந்தது, 2026-ல் மயக்கநிலை மாற்றம் வந்தது, அடுத்ததாக அறிவுநிலை மாற்றம் நிச்சயம் ஏற்படும்" என்று பேசியிருக்கிறாரே?

 

பதில்: உணர்ச்சிநிலை மாற்றம், மயக்கநிலை மாற்றம், இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றுதான். 1967-லும் 2026-லும் அதை ஏற்படுத்திய தலைவர்கள்தான் வேறு.

 

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே அரசியல் ரீதியாக மக்களிடம் அறிவுநிலை மாற்றம் ஏற்படும் நாள் கண்ணுக்குத் தெரியவில்லை.

 

ஒரு தலைவன் நமக்கு நல்லதை நினைக்கிறான், நல்லது செய்வான், என்ற நம்பிக்கையை மக்கள் பெற்றால் அவன் பின்னால் நின்று அவனுக்குப் பெருமளவில் வாக்களிக்க அவர்கள் தயாராவார்கள் - அவன் புதியவனாக இருந்தாலும். அத்தகைய தலைவன் அறிவார்ந்தவனாக இருக்கலாம், ஆனால் அவனது அறிவுக்காக மட்டும் பெரும்பாலான சாதாரண மக்கள் அவனுக்கு வாக்களிக்க விரும்ப மாட்டார்கள். அதாவது, ஒரு தலைவனின் அறிவு மட்டும் மக்களைத் துளியும் ஈர்க்காது.

 

ஒரு தலைவன் 'நல்லவன், நமக்கு நல்லது செய்வான்' என்ற  உணர்வைச் சாதாரண மக்களிடம் ஏற்படுத்த, மக்களை ஈர்க்கும் ஒரு தனிப்பண்பு அவனிடம் இருக்கவேண்டும் - மோடியிடம் உள்ளது மாதிரி, அண்ணாமலையிடம் இருப்பது மாதிரி. அதோடு, தேர்தல் யுக்திகள், கூட்டணி சாமர்த்தியம், ஓரளவு அதிர்ஷ்டத்தின் பங்கு, ஆகியவை சேர்ந்துதான் அத்தகைய தலைவனுக்கும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பைத் தரும்.

 

 

5. கேள்வி: சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை பதிலுரை நிகழ்த்திய முதலமைச்சர் விஜய் ஆக்ரோஷமாகப் பேசியவாறு தன் வலது உள்ளங்கையைத் தனது தாடை வரை கொண்டுசென்று, தாடையை அசைப்பது மாதிரிச் சைகை காட்டித் திமுக-வை அவர் ஏளனம் செய்வது போல் தொலைக்காட்சியில் தெரிந்ததே, அந்தக் காட்சி எப்படியிருந்தது?

 

பதில்: அப்போது நமது வலதுகை நான்கு விரல்களை நம் உச்சந்தலை மீது வைத்துத் தட்டிக் கொள்வது மாதிரி நாம் சைகை செய்திருக்கலாம். 

 

சினிமா டிராமா பாணி அரசியல் பேச்சுகள், சவால்கள், அங்க அசைவுகள் ஆகியவற்றுக்கு ஏற்ற இடம் சட்டசபை அல்ல. அவற்றுக்கான இடம் வெளியே இருக்கிறது.

 

பகுதி 132 // 09.09.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com