Thursday, 18 June 2026

கேள்வி-பதில் (18.06.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: அமெரிக்க அதிபர் டிரம்ப், விசிக தலைவர் திருமாவளவன் - இருவர் பேசும் முறையை ஒப்பிடுக.

 

பதில்: இன்று சொன்னதற்கு அப்பட்டமாக நேர் மாறாக அடுத்த நாள் பேசுபவர் டிரம்ப். இன்று பேசியதற்கு நியாயம் சொல்ல வந்து, அடுத்த நாள் விதவிதமாக மாறுதலாகப் பேசுபவர் திருமாவளவன்.

 

 

2. கேள்வி: "அதிமுக என்ற கப்பலை தவெக மூழ்க விடாது" என்று சொல்கிறார் தவெக தலைவர் ஆதவ் அர்ஜுனா. அதற்கு என்ன அர்த்தம்?

 

பதில்: ஒரு புதிய கப்பலின் ஓனர், நடுக்கடலில் தத்தளிக்கும் வேறொருவரின் பழைய கப்பலின் மாலுமிகள் பலரையும் தன்னிடம் வேலைக்குச் சேர்த்து, அந்தப் பழைய கப்பலை இழுத்துக் கரையோரத்தில் கடாச நினைத்தால், "நாங்கள் பழைய கப்பலை மூழ்கவிட மாட்டோம்" என்று புதிய கப்பலின் மேனேஜர் ஒருவர் தம்பட்டம் அடிக்கலாம்.

 

 

 3. கேள்வி: "ரஜினிகாந்த் எந்தக் கட்சியிலும் இல்லை. அவர் எந்தக் கட்சிக்கும் வரமாட்டார் என்று நான் நினைக்கிறேன்" என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி இருக்கிறாரே?

 

பதில்: 'அண்ணாமலையின் புதிய இயக்கத்திற்கு, அவர் தொடங்கவிருக்கும் புதிய அரசியல் கட்சிக்கு, ரஜினிகாந்த் தனது ஆதரவைத் தரமாட்டார் என்று நான் நம்புகிறேன்' என்று நயினார் சொல்ல விரும்புகிறார் - நாம் அவ்வாறும் பொருள் கொள்ளவேண்டும். பாஜக-வின் நலனுக்காக என்றெண்ணி நயினார் அவ்விதம் பேசுகிறார். தவறல்ல.

 

பாஜக-விலிருந்து அண்ணாமலை ராஜினாமா செய்துவிட்டு, அது பற்றியும் அவர் தொடங்கவிருக்கும் இயக்கம் பற்றியும் அவர் பேசுகிற வீடியோவை வெளியிட்ட அண்ணாமலை, "2020ல் நான் பாஜக-வில் சேருவதற்கு முதல் நாள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது இயக்கத்தில் சேர வேண்டுகோள் விடுத்தார். பாஜக-வில் சேரப்போவதாக நான் ஏற்கனவே வாக்குறுதி கொடுத்துவிட்டதால் அதை உடைக்க விரும்பவில்லை என்று தெரிவித்து என்னை மன்னிக்கச் சொன்னேன். பிறகு அவரைப் பார்த்தும் மன்னிப்புக் கேட்டேன் .... இன்றைக்கும் சூப்பர் ஸ்டார் மீது பெருமதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன்" என்றெல்லாம் ரஜினிகாந்துடன் தனக்குள்ள உறவு பற்றி விரிவாகப் பேசினார். மோடியுடன் அண்ணாமலைக்கு இருந்த உறவை விட, ரஜினிகாந்துடன் தனக்கு ஏற்பட்ட தொடர்பு பற்றி அந்த வீடியோவில் சற்று அதிகம் பேசினார் அண்ணாமலை. ரஜினி குறித்த அந்த வார்த்தைகள் மூலம், அண்ணாமலையின் புதிய இயக்கத்திற்கு, அவர் தொடங்கவிருக்கும் புதிய கட்சிக்கு, ரஜினிகாந்த் ரசிகர்களை, அபிமானிகளை, அண்ணாமலை ஈர்க்க முனைவதாகவும் நாம் எடுத்துக் கொள்ளவேண்டும். தனது இயக்கத்தின், தனது கட்சியின், நலனில் அண்ணாமலை அவ்விதம் பேசினார். அதுவும் தவறல்ல.

 

தலைவர்கள் பேசுவதைச் சரியாகப் புரிந்துகொண்டு மொத்தத்தில் எது சரி, எது நியாயம், எது நாட்டுக்கு நல்லது என்று தீர்மானிப்பது நம் கையில் இருக்கிறது.

 

 

4. கேள்வி: "பிரதமர் மோடி அமைதியானவர், 'கூல்' மனிதர், அசத்தலானவர். நான் அவரைப் போல் அல்ல" என்று அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜி7 உச்சி மாநாட்டுக்கு இடையே நமது பிரதமரைப் பாராட்டி இருக்கிறாரே?

 

பதில்: அதிபர் டிரம்பின் நல்வார்த்தைகள், கடும் சொற்கள் - இரண்டுமே அவருக்கு வெறும் ஆயுதங்கள். அவர் இனிய சொற்கள் மூலம் அடுத்தவருக்கு ஐஸ் வைத்துக் காரியம் சாதிக்க விரும்புவார், அல்லது கடும் சொற்கள் பேசி எதிராளிக்குப் பயம் காட்டித் தன் வழிக்குக் கொண்டுவர முனைவார். அவருடைய இரண்டு ஆயுதங்களும் இப்போது முக்கால் மொண்ணை. முன்பு மோடி மற்றும் இந்தியா குறித்துக் கடும் வார்த்தைகள் சொல்லியும் அவை பலன் தராததால், இப்போது மோடியிடம் ஐஸ் ஆயுதத்தைப் பிரயோகிக்கிறார் டிரம்ப்.

 


5. கேள்வி: "திமுக ஆட்சியில், தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தைப் புதுப்பிக்க ஆண்டு தோறும் ஆயிரம் பள்ளிகளிடம் தலா 5 லட்ச ரூபாய், ஒரு தடையில்லாச் சான்றிதழ் வழங்க பள்ளிகளிடமிருந்து 25 லட்ச ரூபாய், லஞ்சமாக வசூலிக்கப் பட்டது" என்று தனியார் பள்ளிகளின் ஒரு கூட்டமைப்பு புகார் சொல்கிறது. லஞ்சம் கொடுத்தவர்கள் சார்பாக, சென்ற ஆட்சியில் இவ்வாறு நடந்தது என்று ஒரு அமைப்பு வெளிப்படையாக எந்த தைரியத்தில் சொல்ல முடிகிறது?

 

பதில்: தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில், அந்த தைரியத்தில்.


பகுதி 104 // 18.06.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

Wednesday, 17 June 2026

கேள்வி-பதில் (15.06.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: சென்ற சட்டசபைத் தேர்தலில் மு.க. ஸ்டாலின் தோற்றதற்காக, அவரது ஆதரவாளர்கள் சிலர் - குறிப்பாகப் பெண்கள் - அழுகிற காட்சியை டிவி-யில் இன்றும் காட்டுகிறார்களே?

 

பதில்: நமது ஜனநாயகம் செயல்படுவதைப் பார்த்து சில திமுக ஆதரவாளர்கள் அழுகிறார்கள்; முன்னர் நமது ஜனநாயகத்தை அழ வைத்தது திமுக.

 

 

2. கேள்வி: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவேண்டும் என்ற நோக்கில், அக்கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அதன் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார். இவ்விதம் தமாகா அதிக வாக்காளர்களை ஈர்த்து தன்னை வலுப்படுத்த முடியுமா?

 

பதில்: தமிழ் மாநில காங்கிரஸை வலுப்படுத்துவது, அக்கட்சி அதிக தொண்டர்களையும் அதிக வாக்காளர்களையும் ஈர்ப்பது, நடக்காது. காரணம், இன்றைய தமாகா பெரும்பாலும் ஜி.கே. மூப்பனார் நினைவகம் என்பதாக இருக்கிறது. நினைவகங்களில் ஆள்வரத்து அதிகம் இருக்காது.

 

 

3. கேள்வி: 1977 லோக் சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்றது. இந்திரா காந்தியும் தனது ரேபரேலி தொகுதியில் தோற்றார். ஆனால் மூன்று வருடம் கழித்து நடந்த தேர்தலில் காங்கிரஸ் வென்றது, இந்திரா மீண்டும் பிரதமர் ஆனார். தமிழகத்தில் திமுக தற்போது ஆட்சியை இழந்து ஸ்டாலினும் கொளத்தூரில் தோற்றாலும், அவர் கட்சி அடுத்த தேர்தலில் ஜெயித்து அவர் மறுபடியும் முதலமைச்சர் ஆக முடியாதா?

 

பதில்: அது மிகக் கடினம். 1977ல் காங்கிரஸும் இந்திரா காந்தியும் தோற்றதற்குக் காரணம், எமர்ஜென்சியால் மக்கள் அவர் மீது கோபம் வைத்திருந்தனர் - எதிர்க் கட்சிகளின் மீது மக்கள் கொண்டிருந்த பற்றல்ல. பின்னர் அந்தக் கோபம் கரைந்தது. இப்போது சட்டசபைத் தேர்தலில் திமுக தோற்றதற்கு முக்கிய காரணம், மக்களுக்கு விஜய் மீதுள்ள ஈர்ப்பால். விஜய் தவிர்த்து, புதுக்கட்சி தொடங்கவிருக்கும் அண்ணாமலையும் ஒரு புதிய சக்தியாக உருவாகிறார். இன்னொன்று: இது கூட்டணி அரசியல் காலம் - ஆனால் திமுக-வின் கூட்டணிக் கட்சிகளும் திமுக-வைக் கைகழுவுகின்றன.

 

இந்திரா காந்தி நிலையில் ஸ்டாலின் இல்லை. இந்திரா காந்தியின் அரசியல் வசீகரமும் ஸ்டாலினிடம் கிடையாது.

 

 

4. கேள்வி: "அடுத்த இருபது ஆண்டுகளுக்குத் தமிழக முதல்வராக விஜய் இருப்பார்" என்று தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் கூறி இருக்கிறாரே?

 

பதில்: 'அடுத்த இருபது ஆண்டுகள் தானும் ஒரு அமைச்சராக இருக்கலாமே' என்ற நப்பாசையை ஆனந்த் மறைக்க முடியவில்லை.

 


5. கேள்வி: "தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி சூப்பராக உள்ளது. பாலியல் குற்றங்கள் எல்லா ஆட்சியிலும்தான் நடக்கின்றன. இந்த குற்றச் செயலில் ஈடுபடுவோருக்கு மிகக் கடும் தண்டனை விதிக்க, மத்திய அரசு புதிய சட்டத்தை இயற்ற வேண்டும்" என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறி இருக்கிறாரே?

 

பதில்:  திமுக கூட்டணிக்கு டாடா சொல்லிவிட்டு, தவெக-வுடன் நெருக்கம் கொள்ள மதிமுக ஆர்வமாக இருக்கிறது. அதைப் பொதுவெளியில் குட்டிக்கரணம் போட்டு விஜய்க்குத் தெரிவிக்கிறார் வைகோ. "பாலியல் குற்றங்கள் எல்லா ஆட்சியிலும் நடக்கின்றன" என்பது, வைகோவின் ஸ்டைலான குட்டிக்கரணம்.


பகுதி 103 // 15.06.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

Friday, 12 June 2026

கேள்வி-பதில் (12.06.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "திமுக வாங்கிய கமிஷனைப் பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தாலும், கூட்டணி தர்மத்திற்காக அதை வெளியில் சொல்லவில்லை" என்று இப்போது கூறுகிறாரே காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்?

 

பதில்: 2021 சட்டசபைத் தேர்தலின்போது, காங்கிரஸ் திமுக-வுடன் தேர்தல் கூட்டணியில் இருந்தது, ஆனால் திமுக வென்று அமைத்த ஆட்சியில் காங்கிரஸ் கட்சிக்குப் பங்கு தரப்படவில்லை. இப்போது தவெக-வுடன் புதிதாகக் கூட்டணி உறவு கொண்டு, விஜய் ஆட்சியில் அமைச்சர் பதவிகளையும் பெற்றிருக்கிறது காங்கிரஸ். ஆகையால் தற்போது காங்கிரஸ் அனுஷ்டிக்கும் கூட்டணி தர்மம் இன்னும் உயர் ரகம். இன்றைய விஜய் ஆட்சியைப் பாராட்டிப் பேசுகின்ற -- சமயத்தில் எதுவும் பேசாமல் மவுனம் காக்கக் கூடிய -- காங்கிரஸின் கூட்டணி தர்ம சிந்தனையை நாம் எப்படிப் புரிந்துகொள்வது?

 

 

2. கேள்வி: "சட்டசபைத் தேர்தலில் திமுக சின்னத்தில் மதிமுக-வினர் போட்டியிட்டது துரதிருஷ்டமானது" என்று மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ சொல்லி இருக்கிறாரே?

 

பதில்: துரை வைகோ வெளியில் என்ன சொன்னாலும், அவர் மனதில் ஓடிய எண்ணம் இதுவாக இருக்கும்: 'நான்கு தொகுதிகளில் திமுக சின்னத்தில் மதிமுக வேட்பாளர்கள் போட்டியிட்டு, இரண்டில் ஜெயித்தாலும் மதிமுக-வுக்கு துரதிருஷ்டம் தான். காரணம், அநேகர் எதிர்பார்ப்புக்கு மாறாக தவெக அதிக இடங்களில் ஜெயித்து அதன் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்துவிட்டது. திமுக ஜெயித்து மறுபடியும் திராவிட மாடல் ஆட்சி வந்திருந்தால், 'திமுக சின்னத்தில் மதிமுக போட்டியிட்டது இரண்டு கட்சிகளுக்கும் பெருமை' என்று தில்லாகக் காக்கா வசனம் பேசி இருக்கலாம்'.

 

 

3. கேள்வி: "தமிழகத்தில் கவர்னர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காக, தவெக அரசை வெளியில் இருந்து ஆதரிக்கிறோம்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் வீரபாண்டியன் திரும்பத் திரும்பச் சொல்கிறாரே?

 

பதில்: 'தவெக ஆட்சியை கெட்டியாக ஆதரிக்கும் எங்கள் கட்சியும் பிற கட்சிகளும் தங்கள் ஆதரவை விலக்கி அந்த ஆட்சியைக் கவிழ்த்தால், அடுத்து வரும் சட்டசபைத் தேர்தலில் தவெக பெரும்பான்மை இடங்களில் கெத்தாக வென்று எங்களைச் செல்லக் காசாக ஆக்கி விடும்' என்று வெளிப்படையாகப் பேச வீரபாண்டியன் என்ன, வடிகட்டின அசடா?

 

 

4. கேள்வி: பாஜக-விலிருந்து, தான் விலகுவதாக அண்ணாமலை அளித்த கடிதத்தில் "தேசியக் கட்சிகள், தமிழக மக்கள் புரிந்து கொள்ளும் மொழியில் பேசவில்லை" என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இது சரியா?

 

பதில்: சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தல்களில், மேற்கு வங்கத்தில் ஆட்சியிலிருந்த திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. அதன் தலைவர் மம்தா பானர்ஜியும் அவர் தொகுதியில் தோற்றார். அவர் கட்சி, அந்த மாநில மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் பேசவில்லை என்று ஆகாது. அதைப் போல், தமிழகத்தில் ஆட்சியிலிருந்த திமுக மற்றும் பிரதான எதிர்க் கட்சி அதிமுக இரண்டுமே பெரும் தேர்தல் தோல்வியைச் சந்தித்தன. திமுக தலைவர் ஸ்டாலின் தனது தொகுதியில் ஜெயிக்கவில்லை. இந்த இரு கட்சிகளும் தமிழக மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் பேசவில்லை என்று ஆகாது.

 

தமிழகத்தைப் பொறுத்தவரை, தேசியக் கண்ணோட்டத்தை ஒதுக்கியும் பல வகைகளில் இழித்தும் வளர்ந்த கட்சி திமுக. அதனால் தேசியக் கட்சிகள் என்ன பேசினாலும் அது நமது மாநிலத்தில் பெரிதாக எடுபடாமல் போனது. தேசியக் கட்சிகள் தமிழகத்திற்கு ஏற்றவாறு பேசவில்லை என்பது பத்து அல்லது இருபது சதவிகித விஷயம். தேசியத்தின் மீது, தேசியக் கட்சிகளின் மீது, பெருவாரியான தமிழர்களுக்குப் பிடிப்பு வராமல் திமுக தனது நலன்களுக்கான பிரசாரத்தை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றது என்பது எண்பது அல்லது தொண்ணூறு சதவிகித விஷயம்.

 


5. கேள்வி: "திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் விதமாக எந்தச் செயலையும் அனுமதிக்க மாட்டோம்" என்று தமிழகத்தின் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் தெரிவித்திருக்கிறார். அதற்கு என்ன அர்த்தம்?

 

பதில்: 'இந்த விவகாரம் கோர்ட்டில் இருக்கிறது. அது சுப்ரீம் கார்ட் வரை கூடப் போகலாம். கோர்ட்டின் இறுதி உத்தரவுப்படி அரசு செயல்படும்' என்று அமைச்சர் பேசி இருந்தால், அது சரி, அது நியாயம். அதுவல்லாமல் அவர் பேசிய பேச்சு, கெக்கே பிக்கே.


பகுதி 102 // 12.06.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr