Thursday, 28 May 2026

கேள்வி-பதில் (27.05.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: லேட்டஸ்டாக, அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையாவும் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். உடனே தவெக-வில் சேர்ந்தும் விட்டார். இது பற்றிப் பேசிய இசக்கி சுப்பையா, "தொகுதி மக்கள் நலனுக்காகவே ராஜினாமா செய்திருக்கிறேன்" என்று அறிவித்திருக்கிறாரே?

 

பதில்: ஒரு மாதத்திற்கு முன் நடந்த தேர்தலில் தவெக உட்பட நான்கு கட்சிகளின் வேட்பாளர்களை நிராகரித்து, அதிக வாக்குகளுடன் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையாவை அம்பாசமுத்திரம் தொகுதி வாக்காளர்கள் எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுத்தனர். இப்போது அவர் தனது எம்.எல்.ஏ பதவியை உதறிவிட்டு, வாக்காளர்கள் நிராகரித்த கட்சிகளில் ஒன்றான தவெக-வுக்குத் தாவுகிறார், தாவியது மக்கள் நலனுக்காக என்கிறார். காதுல பூ-ந்தோட்டம்.

 

 

2. கேள்வி: "தமிழகத்தில் தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது. அது கவிழும்" என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசி வருகிறார். ஆட்சியில் புதிதாகக் கூட்டணி சேர்ந்திருக்கும் விசிக-வின் தலைவர் திருமாவளவனோ, "எந்தச் சூழலிலும் தவெக ஆட்சி கவிழ நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம்" என்று பேசி இருக்கிறார். இருவர் பேச்சும் எதிர்க் கோணங்களில் இருக்கிறதே?

 

பதில்: தவெக ஆட்சியைச் சில காலம் தாங்குமாறு விசிக-விடம் சொன்னது திமுக - ஒரு அரசியல் உத்தியாக. சரி என்று தலையாட்டிய விசிக, தவெக-விடம் கவிழ்ந்தே விட்ட மாதிரி இருக்கிறது - இல்லை, அதுவே விசிக-வின் அரசியல் உத்தியாகவும் இருக்கலாம். இதுபோக, அதிமுக எம்.எல்.ஏ-க்கள் சிலர் வேகவேகமாகத் தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்து தவெக-வில் சேருகிறார்கள்  - வரப்போகும் இடைத் தேர்தலில் அவர்களே தவெக வேட்பாளர்களாக நிறுத்தப் பட்டு அவர்கள் ஜெயிக்கலாம், அதனால் சட்டசபையில் தவெக எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை மெஜாரிட்டியைத் தொட்டுவிடும் என்பது தவெக-வின் கணக்காக இருக்கும்.

 

ஸ்டாலினுக்கு ஒரு ஆசை. திருமாவளவனுக்கு ஒரு எதிர்பார்ப்பு. விஜய்க்கு ஒரு கணக்கு. அவரவரின் வெற்றி, அவரவரின் குதிரை சக்தியைப் பொறுத்தது.

 

 

3. கேள்வி: சமீபத்தில் லஞ்சம் வாங்கும்போது பிடிபட்ட ஒரு தமிழகப் பெண் சார்பதிவாளர், கைதாகிப் போலீஸாரால் அழைத்துச் செல்லப்படும் போது முகத்தைத் துணியால் மறைத்தபடி கண்ணீருடன் நடக்கிறார், அது ஒரு செய்திச் சேனல் வீடியோவில் தெரிகிறது. ஆனால் ஊழல் தடுப்பு சட்டதின் கீழ் தண்டிக்கப்பட்டு சிறை சென்று வந்த சசிகலா முகத்தை மறைத்ததில்லை, சிரிக்கிறார், அம்மா ஆட்சி பற்றிப் பேசுகிறார், புதுக் கட்சி ஆரம்பிக்கிறார், தேர்தலில் கூட்டணி வைத்துத் தனது கட்சி வேட்பாளர்களை நிறுத்துகிறார். ஏன் இந்தப் பெரிய வேறுபாடு?

 

பதில்: தப்புக் காரியங்கள் செய்தாலும் பின்னர் எழுவதற்கு, வளர்வதற்கு, மக்களைத் தான் முழுதாக உறுதியாக நம்பலாம். கோர்ட்டை அவ்வளவாக நம்ப முடியாது.

 

லஞ்ச ஊழலுக்காகக் கைதான சார்பதிவாளர் கோர்ட்டைச் சந்திக்கவேண்டும், ஆகையால் அவருக்கு அழுகை வருகிறது. சிறைத்தண்டனை பெற்ற சசிகலா மக்களைச் சந்திக்கிறார், மக்களை நம்புகிறார், கவலை இல்லாமல் புன்னகைக்கிறார். கடைசியில் பதவி கிடைக்கிறதோ இல்லையோ, கடைசிவரை அவர் அரசியலில் கௌரவமாக, கெத்தாக வலம் வரலாம் என்று அவருக்குத் தெரியும். நிறைய விஷயங்கள் சாதாரண மக்களுக்குப் புரியாது என்பது நமது அரசியல்வாதிகளின் பலம்.

 

 

4. கேள்வி: அதிமுக-வின் இ.பி.எஸ் மற்றும் வேலுமணி தரப்பினர், ஒருவருக்கு எதிராக ஒருவர் சபாநாயகரிடம் முன்பு அளித்த தகுதி நீக்க கோரிக்கை மனுக்களை வாபஸ் பெற்றிருக்கிறார்களே?

 

பதில்: மதிப்புள்ள ஒரு கட்சியாக மக்களிடம் மீண்டும் தகுதி பெறுவதுதான் அக்கட்சிக்கு மிக முக்கியம். இதற்கு மனுக்கள், பேட்டிகள் ஏதும் உதவாது. மக்கள் மனதைக் கவரும் ஒரு தலைவர் தேவை. அப்படி யாரும் அங்கு தென்படவில்லை. ஆகையால் இப்போதைக்கு அவர்கள் ஒற்றுமையாகச் செய்ய முடிவது இதுதான்: குண்டுசட்டியில் குதிரை ஓட்டுவது.

 

 

 

5. கேள்வி: அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெக-வில் இணைவதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எதிர்ப்புத் தெரிவித்து, "இந்த நடவடிக்கைகள் தவெக மீதான நம்பகத் தன்மையை பாதிக்கச் செய்யும். இது ஆரோக்கியமான அரசியலுக்கு உகந்தது அல்ல. தவெக தலைமை இது போன்ற நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கக் கூடாது" என்று கூறி இருக்கிறாரே?

 

பதில்: சட்டசபைத் தேர்தலுக்கு முன், 'திமுக தீய சக்தி, தவெக தூய சக்தி' என்று பேசினார் தவெக தலைவர் விஜய். அந்த திமுக தலைமை தாங்கிய கூட்டணியில் இருந்த விசிக-வின் தலைவர் திருமாவளவன், "ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளை" என்று விஜய்யைச் சாடினார். ஆனால் தேர்தல் முடிவுகளில் மெஜாரிட்டியை எட்டாத தவெக-வுக்குத் தனது கட்சியின் இரண்டு எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை அளித்து அக்கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்க அவரும் உதவி செய்து, பின்னர் தனது எம்.எல்.ஏ ஒருவரை விஜய் ஆட்சியில் மந்திரியாகவும் அமர வைத்தார் திருமாவளவன். இதில் விஜய் மற்றும் திருமாவளவன் வேண்டியதும் செய்ததும் ஒரே வகை அரசியல் - ஆதாய அரசியல். திடீரென்று ஆரோக்கிய அரசியல் பற்றித் திருமாவளவன் விஜய்க்கு ஆலோசனை சொல்வதில் அர்த்தமில்லை.

 

கரிய மையிடம் காரிருள் சொன்னதாம்: கண்ணே உனக்கு ஆகாது கருமை!

 

பகுதி 98 // 27.05.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

Tuesday, 26 May 2026

கேள்வி-பதில் (26.05.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: தமிழகத்தில் தவெக ஆட்சி அமைத்த சில நாட்கள் கழித்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தன் கட்சியினர் முன் பேசும்போது, "இன்னிக்கு நாம ஆட்சிய இழக்கலை. நம்ம தயவுலதான் ஆட்சியே நடக்குது. உங்களுக்கு என்னன்னு புரியும்" என்று கூறி இருக்கிறார். எனக்குப் புரியவில்லை. எந்த அர்த்தில் "நாம ஆட்சிய இழக்கலை" என்று அவர் பேசினார்?

 

பதில்: கொலை, கொள்ளைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் கஞ்சாப் புழக்கம் தமிழகத்தில் குறையாமல் இருப்பதால், திமுக ஆட்சி தொடர்கிறது என்ற மயக்கத்தில் ஸ்டாலின் இருக்கிறார். அதன்படி பேசிவிட்டார்.

 

 

2. கேள்வி: சட்டசபைத் தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்த பின் அக்கட்சியின் இளைஞர் அணிக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தங்கள் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி குறித்து, "காங்கிரஸ் நம் முதுகில் குத்திவிட்டது. காங்கிரஸ் கட்சிக்குத் தமிழக மக்கள் நிச்சயம் பாடம் கற்றுக் கொடுப்பார்கள்" என்று பேசி இருக்கிறாரே?

 

பதில்: தமிழக மக்கள் இரண்டு கட்சிகளுக்குச் செமத்தியாகக் கற்பித்த பாடங்களை, உதயநிதி நினைவு கொள்ளவில்லை. ஒன்று: நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் தமிழக வாக்காளர்கள் திமுக-வுக்குக் கற்றுக் கொடுத்த பாடம். இரண்டு: 1967 தேர்தலிலேயே காங்கிரஸ் கட்சிக்கும் அவர்கள் வழங்கிய பாடம்.

 

59 வருடங்களாகியும் தமிழக காங்கிரஸ் தனது பாடத்தைச் சரியாகக் கற்கவில்லை. திமுக கற்பதற்கு எத்தனை வருடங்கள் ஆகுமோ?

 

 

3. கேள்வி: முதல்வர் விஜய்யைச் சந்தித்து, சின்னத்திரை நிகழ்ச்சி தயாரிப்பாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக அவரிடம் கோரிக்கைகள் அளித்துவிட்டு வந்த பாஜக தலைவர் குஷ்பு, "தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றம் வரப் போகிறது. முதல்வருக்கு அவகாசம் கொடுங்கள்" என்று பேட்டி கொடுத்திருக்கிறாரே?

 

பதில்: முதல்வரிடம் தங்களுக்காகக் கோரிக்கைகள் வைத்துவிட்டு வந்த ஒருவர், அதே முதல்வர் பற்றி நல்லதாக மட்டும் சொல்லவேண்டியதைக் குஷ்பு சொல்லி இருக்கிறார். மற்றபடி, தேர்தலில் தன்னை நிரூபித்த விஜய், இப்போது வேறொரு தளத்தில் - அரசு நிர்வாகத்தில், அரசு கஜானாவைப் பாதுகாத்து மேம்படுத்துவதில் - தன்னை நிரூபிக்க வேண்டியவர்.

 

தமிழகத்திற்காக முதல்வர் விஜய் பெரிய பணிகள், நல்ல காரியங்கள், செய்ய முடிந்தால் அவற்றின் முக்கிய அறிகுறிகளாவது அவர் ஆட்சியின் முதல் ஆறு மாதம் முதல் ஒரு வருடத்திற்குள் வெளிப்பட வேண்டும். நிர்வாகத்தில் பெரிய தவறுகள் நடக்காமல், கோணல்கள் நிகழாமல், தடுக்க அவருக்கு அவகாசம் ஏதும் கிடையாது. இதையெல்லாம் அவர் உணர்ந்திருப்பார். நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். உற்சாகமாக விசில் அடித்துக் கொண்டே இருக்க முடியாது.

 

 

4. கேள்வி: அதிமுக-வின் வேலுமணி-சி.வி. சண்முகம் தரப்பு மூன்று எம்.எல்.ஏ-க்கள் சட்டசபை சபாநாயகரைச் சந்தித்துத் தங்களின் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்வதாகக் கடிதம் கொடுக்க, சபாநாயகரும் அந்த ராஜினாமாக்களை ஏற்றுக் கொண்டிருக்கிறார். சபாநாயகர் ஏற்ற ராஜினாமாக்களை அவர் திரும்பப் பெறவேண்டும், இல்லையென்றால் அது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் என்று இ.பி.எஸ் தரப்பு அதிமுக எம்.பி இன்பதுரை சொல்கிறாரே?

 

பதில்: உடனடியாக விற்பனை ஆகவேண்டிய சில குதிரைகளை சீக்கிரம் பைசல் செய்யவேண்டும். காத்திருந்தால் நல்ல விலை கிடைக்கத் தக்க சில குதிரைகளை, பின்னால் தள்ளி விடலாம். ஜனநாயக விளையாட்டு விளையாடும்  குதிரைகள், தாங்களாகவே முடிவு செய்து இப்போது அல்லது பிற்பாடு விலைபோக முயலும்.

 

விலையைப் பொறுத்தவரை,  குதிரைகளை வாங்குபவர் தனக்கு அவசரத் தேவை என்ன, சல்லிசாகக் கிடைக்கும் நேரம் எது என்று ஒரு கணிப்பில் தான், சிறிது ரிஸ்க் எடுத்துதான், செயல்பட முடியும். அவரவர் அதிர்ஷ்டமும் இங்கு வேலை செய்யும்.

 

குதிரைகள் இருக்கும்வரை, குதிரைகள் விற்பது வாங்குவது, அதற்கான பேரம், நடக்கும். ராஜினாமாக்கள், அதில் ஓரமாக நடக்கும் ஒரு சிறு நடைமுறை. அதிமுக-வின் எடப்பாடி பழனிசாமி மற்றும் இன்பதுரை இதை நன்கு அறிவார்கள்.

 

 

5. கேள்வி: "தவெக குதிரை வேகத்தில் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது" என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறி இருக்கிறாரே?

 

பதில்: குதிரைகளை ஜெட் வேகத்தில் வாங்க முடிகிறவர், தற்போது நொடித்திருக்கும் தனது நிலையில் ஒரு குதிரையும் தன்னிடம் விலைக்கு வராது, வந்தால் அதற்குக் கொள்ளு கிடைக்காது என்று குதிரைகளுக்கே தெரியும் என்பதை அறிந்து, அங்கும் இங்கும் ஓடும் குதிரைகளைப் பார்த்து ஆதங்கத்தில் ஏதோ சொல்லலாம்.

 

பகுதி 97 // 26.05.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

Sunday, 24 May 2026

கேள்வி-பதில் (24.05.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: சென்ற சட்டசபைத் தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது. பிறகு, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக மற்றும் முஸ்லீம் லீக் கட்சி எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுடன் தவெக தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்ற பின் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது கட்சியினர் முன் பேசும்போது, "இன்னிக்கு நம்ம ஆட்சிய இழக்கலை. நம்ம தயவுலதான் ஆட்சியே நடக்குது. உங்களுக்கு என்னன்னு புரியும்" என்று சொல்லி இருக்கிறாரே?

 

பதில்: முன்பு ஆட்சி செய்த திமுக பதவியிலிருந்து இறக்கப் பட்டு, தவெக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி நடக்கும்போது அந்த ஆட்சிக்கு ஏன் திமுக 'தயவு' காட்ட நினைக்க வேண்டும்? பயம்தான் காரணம் - தவெக தலைமையில் ஒரு ஆட்சி அமையாமல், வேறு எந்த வகைக் கூட்டணியும் ஆட்சி அமைப்பதற்கான மெஜாரிட்டியை எட்ட முடியாமல், ஜனாதிபதி ஆட்சி வந்து சட்டசபை முன்கூட்டியே கலைக்கப் பட்டு இன்னொரு தேர்தல் வருமானால், சென்ற தேர்தலில் திமுக-வுக்குக் கிடைத்த 59 எம்.எல்.ஏ-க்களை விட அக்கட்சி அநேகமாகக் குறைவான எம்.எல்.ஏ-க்களைப் பெறலாம்.

 

தவெக-வைப் பொறுத்தவரை, இப்போது ஆட்சி பெரிதும் நம் கையில் இருக்கிறது, அடுத்த சட்டசபைத் தேர்தல் ஐந்தாண்டுகள் கழித்தே வரட்டும் என்று அக்கட்சி நினைக்கிறது. ஆகையால் தவெக-வின் தயவில் திமுக-வின் சட்டசபை எண்ணிக்கை சார்ந்த மானம் மேலும் சரியாமல் பிழைக்கிறது. இங்கு தயவு காட்டுவது தவெக, தயவை அனுபவிப்பது திமுக. திமுக காட்டுவது தயவு அல்ல, பந்தா.

 

 

2. கேள்வி: தவெக தலைமையிலான அமைச்சரவையில் விசிக மற்றும் ஐ.யூ.எம்.எல் கட்சிகள் பங்கேற்றதை ஆபாசமாக விமர்சித்து - பெண்களையும் இழிவு செய்து - திமுக-வின் ஆ. ராசா எக்ஸ் தளத்தில் ஒரு கருத்தை வெளியிட்டார். அதை ஒட்டி, திமுக தலைவர் ஸ்டாலின், "கட்சியினர் யாரையும் புண்படுத்தும்படி கடும் சொற்களைப் பேசவேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவரான எனது அன்பு வேண்டுகோள்" என்று வலைத்தளம் மூலமாகச் சொல்லி இருக்கிறார்.

 

ஆ. ராசாவின் ஆபாசம் மிக்க விமர்சனத்தைக் கண்டிக்காமல், ஸ்டாலின் ஏன் அவரிடம் அன்பான வேண்டுகோள் வைக்கிறார்?

 

பதில்: ஆபாசம் மிக்க ஆ. ராசா. பாசம் மிக்க ஸ்டாலின்.

 

 

3. கேள்வி: தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே தனது கட்சிக்கு வியக்கத் தக்க எண்ணிக்கையில் எம்.எல்.ஏ-க்களைப் பெற்று ஆட்சி அமைத்திருக்கும் விஜய், ஏன் வியக்கத் தக்க நல்லாட்சி தர முடியாது, தர மாட்டார்?

 

பதில்: இன்னொருவர் தனக்காக, தன் விருப்பப்படி, எழுதிய சினிமா வசனங்களைச் சிறப்பாகப் பேசி, அதற்கேற்ற வகையில் சிறப்பாக நடித்துப் பேர் வாங்குவது வேறு. அதை விஜய் கச்சிதமாகச் செய்தார். ஆனால் நல்லாட்சி என்பது, தான் விரும்பும் டிராக்கில் மக்களின் தேவைகளையும் பிரச்சனைகளை அமைத்து, ஆட்சிக்கான சட்டங்களையும் விதிகளையும் தனக்குப் பிடித்த மாதிரி டான்ஸ் ஆடவைத்து, எல்லாப் பத்திரிகைகள், செய்திச் சேனல்கள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டை எப்போதும் இதமான மியூசிக் போடவைத்து, கடைசியில் வணக்கம் போடுவதல்ல.

 

முதலமைச்சரை ஆவென்று பார்த்தபடி இருந்து, தனக்கு அமைச்சர் பதவி கிடைத்ததால் முதலமைச்சரிடம் நன்றி விசுவாசம் காட்டும் நெஞ்சோடு வலம் வருகின்ற அமைச்சர்களைத் தான் விஜய் பெற முடியும் - ஒன்றிரண்டு நன்கு படித்தவர்கள் சந்தடி சாக்கில் விஜய் கட்சியில் சேர்த்து எளிதாக அமைச்சர்களாகி விடுவது அவர்களுக்கு கெத்தாக இருக்கலாம், அது வேறு விஷயம். சுயமாக விசாலமாகச் சிந்தித்து, உயர் திறமையுடன் செயல்படும் மனிதர்களை விஜய் ஈர்த்துத் தேர்தலில் வேட்பாளர்களாகப் போட்டியிட வைத்து, அவர்கள் ஜெயித்து வந்தபின் அவர்களை அமைச்சர்களாக ஆக்கியதாகத் தெரியவில்லை. கூட்டணி ஆட்சியில் இணைந்த பிற கட்சி அமைச்சர்களும் வெறும் லக்கி பிரைஸ் அமைச்சர்களாகத் தெரிகிறார்கள். விஜய் தலைமையிலான இத்தகைய அமைச்சரவை, வியக்கத்தக்க நல்லாட்சி தருவதற்கான சுபாவமும் திறமையும் கொண்டது என்று நம்பமுடியவில்லை.

 

 

4. கேள்வி: "பதவியை என் தலையிலிருக்கும் முடிக்குச் சமமாகக் கருதுகிறவன் நான்" என்று விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருக்கிறாரே?

 

பதில்: கடவுள் மனிதனைப் படைத்து அவனுக்குத் தலைமுடியையும் சேர்த்துப் படைத்திருக்கையில், பேதம் காட்டாமல் அந்தத் தலைமுடியையும் உயர்வாக மதிக்கும் திருமாவளவனின் மனப்பாங்கு வியக்கத் தக்கது.

 

 

5. கேள்வி: திமுக-வின் தேர்தல் கூட்டணிக் கட்சிகளான விசிக மற்றும் ஐ.யூ.எம்.எல் கட்சிகள், தவெக தலைமையிலான அமைச்சரவையில் பங்கேற்றதை விமர்சித்து, திமுக-வின் ஆ. ராசா வெளியிட்ட ஆபாசப் பதிவை அவரே நீக்கிவிட்டார். பிறகு அவர், "என் வீட்டுத் தோட்டத்துத் தென்னை கூனி வளைந்து எதிர் வீட்டுக்கு இளநீர் தந்தால், இலக்கியத்தில் அதற்குப் பெயர் 'முடத்தெங்கு'! அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்? வாழ்க தமிழ்!" என்று கவிதை ரீதியில் இன்னொரு பதிவைப் போட்டிருக்கிறாரே?

 

பதில்: தமிழக மக்கள் என்ற உரிமையாளரின் தென்னந்தோப்பில் எண்ணிலடங்கா தென்னை மரங்கள் உண்டு. அந்தத் தென்னை மரங்களின் எண்ணிக்கை, அவற்றில் காய்த்து இளநீர் வழங்கும் தேங்காய்களின் எண்ணிக்கை ஆகியவை அந்தத் தோப்பின் காவல்காரனுக்கு மட்டும் அத்துப்படி. அந்தக் காவல்காரனும் அவன் குடும்பத்தவரும் தங்களுக்கென்று நைஸாகப் பறித்துக் கொண்ட பெரு மதிப்புள்ள இளநீர்த் தேங்காய்களின் எண்ணிக்கை, அவற்றில் ரகசியமாக வெளிநாட்டுக்கு அனுப்பப் பட்ட இளநீர்த் தேங்காய்களின் எண்ணிக்கை, ஆகியவற்றுக்கு, சமூகத்தில் 'ஆட்டை' என்று பெயர். இலக்கியத்தில் என்ன பெயர் வைக்கலாம்? வாழ்க ஜனநாயகம்!

 

பகுதி 96 // 24.05.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr