Thursday, 26 February 2026

கேள்வி-பதில் (26.02.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: மாநிலத்தின் கடன்களைக் குறைத்து வருவாயை அதிகரித்தால், அதிமுக-வின் தேர்தல் வாக்குறுதியான "ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக பத்தாயிரம் ரூபாய்" வழங்குவது சாத்தியம் என்று, நிருபர்கள் கேள்விக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பதில் கூறியுள்ளாரே?

 

பதில்: சிலர் தங்கள் சகோதரர், சகோதரி செய்யும் பெரிய தவறு அல்லது அநியாயம் பற்றி வெளியில் பேச முடியாது. அது பற்றி மூன்றாம் மனிதர்கள் பேசக் கேட்டால் மௌனமாக இருக்க வேண்டும். காரணம், நெருங்கிய உறவுகளை விட்டுக் கொடுக்க முடியாது. அரசியல் கூட்டணி உறவு என்றால், கூட்டணியின் தலைமைக் கட்சி செய்யும் தவறு அல்லது அநியாயத்தைக் கூட்டணியின் மற்ற கட்சிகள் குறைசொல்லக் கூடாது - அதை ஒருவாறு நியாயப் படுத்தவும் வேண்டும். அண்ணாமலை அதை லாவகமாகச் செய்கிறார்.

 

அதிமுக-வின் பைத்தியக்கார தேர்தல் வாக்குறுதி பற்றி நிருபர்கள் வீசிய கேள்வியை அண்ணாமலை நேர்த்தியாக 'லெக் கிளான்ஸ்' ஆட முடியும் என்றால், அவர் ஆட்சியில் ஒரு முக்கியப் பொறுப்புக்கு வந்தால் எந்தப் பந்துக்கும் அவுட் ஆகாமல் நல்ல ஸ்கோர் எடுப்பார்.

 

 

2. கேள்வி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லக்கண்ணுவின் உடலுக்குக் கலங்கிய கண்களுடன் இறுதி மரியாதை செலுத்திய ரஜினிகாந்த், "ஒருவர் நல்லவராக, நேர்மையானவராக, எளிமையானவராக இருந்தால் அவருக்கு மதிப்பும் மரியாதையும் தானாக வரும் என்பதற்கு உதாரணம் நல்லக்கண்ணு" என்று கூறி இருக்கிறார். இது பற்றி உங்கள் கருத்து?

 

பதில்: நமது மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பு எதையும் நல்லக்கண்ணு வகித்ததில்லை. இருந்தாலும் அவருடைய நல்லதனம், நேர்மை மற்றும் எளிமை பற்றி, முக்கியமாக நேர்மை பற்றி, ரஜினிகாந்த் குறிப்பிட்டதற்கு ஒரு காரணம் - அதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்பதற்காக ரஜினிகாந்த் பேசாவிட்டாலும், அவரது ஆழ்மனதிலிருந்து தானாக வெளிவந்த காரணம் - தமிழகத்தின் ஆட்சியாளர்களிடம் இருக்கவேண்டிய, ஆனால் துளியும் இல்லாத நேர்மை, அத்துடன் நல்லதனம் மற்றும் எளிமை, நல்லக்கண்ணு என்ற அரசியல்வாதியிடம் இருந்தது. இந்த வேறுபாடு அனைவரையும் நல்லக்கண்ணு பற்றிக் கூடுதலாக நெகிழ வைக்கும்.

 

 

3. கேள்வி: "திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒவ்வொரு தேர்தலின் போதும் தங்களுக்கு வேண்டிய அதிகத் தொகுதிகளைக் கேட்பார்கள். அதனால் கூட்டணிக்குள் சலசலப்பு எழுவது சகஜம். அதன் காரணமாக கூட்டணிக்குள் பிளவு ஏற்படாது, கூட்டணிக் கட்சிகள் கூட்டணியை விட்டு விலகாது. திமுக தலைவர் ஸ்டாலின் அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காண்பார்" என்று விசிக தலைவர் திருமாவளவன் சொல்கிறார். இது எப்படி சாத்தியமாகிறது?

 

பதில்: இன்றைய நிலையில், திமுக-வை விட்டால் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு வேறு பெரிய வழி இல்லை,  வேறிடத்தில் பெரிய பலன்கள் இல்லை. திமுக-வும் அவைகளைச் சார்ந்து கூட்டணியாகத்தான் தேர்தலில் வெல்ல முடிகிறது. இருந்தாலும், திமுக கூட்டணியில் அதிகத் தொகுதிகள் கிடைக்காததால், ஆட்சியில் பங்கு உண்டு என்ற உத்தரவாதம் தரப்படாததால், கூட்டணியிலிருந்து ஒரு கட்சி விலகினால் அதற்குப் பெரிய நஷ்டம், திமுக-வுக்குச் சிறிய நஷ்டம்.

 

அதிகத் தொகுதிகளுக்காக முரண்டு பிடித்துக் கூட்டணியிலிருந்து வெளியேறி பெரிய நஷ்டத்தைச் சந்திக்க, திமுக-வின் கூட்டணிக் கட்சி எதுவும் விரும்பாது. காங்கிரஸ் மட்டும், கூட்டணி மாறித் தவெக-வுடன் சேர்ந்து அதிகத் தொகுதிகளில் போட்டியிடுவது லாபமா நஷ்டமா, மாறிச் சேரும் கூட்டணி அமைக்கும் ஆட்சியில் பங்கு கிடைக்கும் என்றாலும் அது ஆட்சிக்கு வருமா இல்லையா, என்று தெரியாமல் இருக்கிறது.

 

இந்தக் காரணங்களால், சலசலப்பு ஏற்படுத்தும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஸ்டாலின் பேசி தொகுதிப் பங்கீட்டை சுமுகமாக முடிக்கிறார் - என்பதைத் திருமாவளவன் மிருதுவாகச் சொல்கிறார்.

 

 

4. கேள்வி: 'கோடைக்கால சிறப்புத் தொகுப்பு' என்று, தமிழக அரசு சார்பில் ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகை பெறுவோருக்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். அடுத்து, அனைத்துக் குடும்பங்களுக்கும் 'கருணைத் தொகை' என்று பத்தாயிரம் ரூபாயை அதிமுக அரசு வழங்கும் என்று ஒரு புதிய தேர்தல் வாக்குறுதியை எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். வாக்காளர்களின் ஓட்டை மேலும் கவர, இனி திமுக மற்றும் அதிமுக வேறு என்ன வாக்குறுதி தர முடியும்?

 

பதில்: ஒவ்வொரு தமிழ் மாதத்தையும் மக்கள் மகிழ்வுடன் வரவேற்கும் விதமாக, அந்த அந்த மாதத்தின் முதல் தேதியன்று, "மாதப்பிறப்பு மகிழ்வுத் தொகை" என்று குடும்பத் தலைவர்களுக்கு ஒரு மாதம், குடும்பத் தலைவிகளுக்கு அடுத்த மாதம், என்று மாற்றி மாற்றி - வருடத்தில் பெண்களுக்கு ஆறு மாதம், ஆண்களுக்கு ஆறு மாதம் கிடைக்கும்படி - அவர்களுக்கு அரசு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக வாக்குறுதி கொடுத்தால் போயிற்று!

 


5. கேள்வி: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பாரதப் பிரதமர் மோடி தோன்றியபோது, அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் 'மோடி மோடி' என்று உற்சாகமாக கோஷம் எழுப்பினார்களே, அது ஏன்?

 

பதில்: இதற்கான காரணத்தை ராகுல் காந்திதான் தெளிவாகச் சொல்வார். அதாவது: இஸ்ரேல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்-காரர்கள்!


பகுதி 60 // 26.02.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

Wednesday, 25 February 2026

கேள்வி-பதில் (25.02.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: 'இந்த சட்டசபைத் தேர்தல், விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர்" என்று தவெக தலைவர் விஜய் வேலூரில் பேசியிருக்கிறாரே?

 

பதில்: விஜய் பிதற்றுகிறார். ஸ்டாலினைத் தீவிரமாக எதிர்த்து வரும் அதிமுக-வுக்கும், பாஜக-வுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் தேர்தல் களத்தில் மதிப்பே இல்லையா?

 

இன்னொன்று: கடந்த பல தேர்தல்களில் திமுக-வுடன் ஒரு கூட்டணிக் கட்சியாக அதன் கூடவே வரும் காங்கிரஸை விஜய் ஏன் எதிர்க்கவில்லை? திமுக எனும் 'தீய சக்தி'க்குப் பக்கபலமாக இருந்து வரும் காங்கிரஸ், இந்தத் தேர்தலில் விஜய் கட்சியோடு கூட்டணி வைக்கலாம் என்று அவர் காத்திருப்பதால், காங்கிரஸை விஜய் தற்காலிகமாக மன்னித்து விட்டாரா?

 

விஜய்யின் மேடைப் பேச்சில் முன்பைவிட இப்போது சினிமாத்தனம் கொஞ்சம் - கொஞ்சம் தான் - குறைந்திருக்கிறது. ஓட்டைகள் கொஞ்சமும் குறையவில்லை.

 

 

2. கேள்வி: தங்கள் ஆட்சியில் ஒவ்வொரு குடும்பதிற்கும் கருணைத் தொகையாகப் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று ஒரு சட்டசபைத் தேர்தல் வாக்குறுதியை அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி புதிதாக அறிவித்துள்ளாரே?

 

பதில்: அவர் அப்படி அறிவித்த பின், "திமுக அரசு ஐயாயிரம் ரூபாய் வழங்கியது சூப்பர் ஹிட் ஆகிவிட்டது. எதிர்க் கட்சிகள் நிலைகுலைந்து போய் உள்ளன" என்று முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறார்.

 

மிகுந்த ரொக்கத்தையும் இலவசங்களையும் பல தரப்பட்ட மக்களுக்குத் தங்கள் அரசு வழங்கும் என்று அறிவித்திருக்கும் திமுக-வுக்கும் அதிமுக-வுக்கும், வரும் சட்டசபைத் தேர்தலில் தனி மெஜாரிட்டி கிடைக்காமல் போவது நல்லது. அப்படியானால் வாக்காளர்கள் அந்த இரு கட்சிகளும் தனியாக ஆட்சி செய்வதை அங்கீகரிக்கவில்லை என்றாகும். அப்போது தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால், அதற்குத் தலைமை வகிக்கும் திமுக-வோ அதிமுக-வோ அளித்த தேர்தல் வாக்குறுதிகள் - அவற்றின் இலவச அறிவிப்புகள் - கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள் ஆகாது, அவற்றை அந்தக் கூட்டணி அரசு அப்படியே முழுதாகச் செயல்படுத்த தார்மீக அவசியமும் இல்லை. இந்த வழியிலாவது திமுக-வையும் அதிமுக-வையும் பிடித்த இலவசப் பைத்தியம் தெளியட்டும். இந்த நல்லெண்ணம், தவெக-வின்  பைத்தியக்கார தேர்தல் வாக்குறுதிகளுக்கும் பொருந்தும்.

 

 

3. கேள்வி: ஒரு அரசியல் கட்சியானது தீய கட்சி, குறுகலான கண்ணோட்டம் உடைய கட்சி என்று சொன்னால், அந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுகிற மக்கள் அப்படியானவர்களா?

 

பதில்: இல்லை.

 

ஒரு அரசியல் கட்சி தனது பேச்சினாலும் செயலினாலும், ஓரளவு நடுநிலை எண்ணம் கொண்ட பொதுமக்கள் பலரை ஈர்க்க முடியும். பின்னாளில் இன்னொரு கட்சி, தனது மாறுபட்ட பேச்சினாலும் செயலினாலும் அந்த மக்களில் பலருக்கு மனமாற்றம் ஏற்படுத்தி அவர்களைத் தனது பக்கம் ஈர்க்க முடியும். அந்த அந்தக் கட்சிகளின் தலைமைப் பண்புகளுக்கு,  யுக்திகளுக்கு, இதில் பெரிய பங்கு உண்டு. சரியான கூட்டணி சேர்க்கைகளும் இதில் வேலை செய்யும்.

 

ஒரு தீய கட்சியின் தலைவர்களைப் போல், கெடுதல் செய்து கொழிக்க நினைப்பவர்கள் அல்ல பொதுமக்கள். அவர்கள் கெடுதல் செய்யப்பட்டு ஏமாற்றப் படுகிறவர்கள். அந்த மக்கள் மாற்றி ஓட்டுப் போட முடியும் - படிப்பறிவு பெரிதாக இல்லாது, அரசியல்வாதிகளின் வஞ்சகத்திற்கு அவ்வப்போது இரையாகும் மக்கள் உள்ள நம் நாட்டிலும். ஆகையால் நமது ஜனநாயகத்தின் மீது இறுதி நம்பிக்கை வைக்க முடிகிறது. அந்த நம்பிக்கை, 2014-ல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மத்தியில் தோற்றபோது பளிச்சென்று நிறைவேறியது, அங்கு இன்னும் நிலைநிற்கிறது.

 

 

4. கேள்வி: "ராமாயணம் மஹாபாரதம் போன்ற கதைகளை, ஆயிரம் இரண்டாயிரம் வருடங்களாக மக்கள் திரும்பத் திரும்பப் படிக்கிறார்கள், அதே கதைகளைப் படிக்கிறார்கள்.

ராமாயணம் மஹாபாரதம் போல, ஸ்டாலின் அரசின் காரியங்களை மக்களிடம் நாங்களும் திரும்பத் திரும்பச்  சொல்கிறோம்" என்று அமைச்சர் கே.என். நேரு பொதுமக்கள் முன் நின்று பேசி இருக்கிறாரே?

 

பதில்: ராமனின் வீரத்தையும் உயர் பண்புகளையும் மையமாக வைத்து சொல்லப் படுவது ராமாயணம். பாண்டவர்கள் தம் பக்கம் இருந்த தர்மத்திற்காகப் போராடியதை, அவர்கள் இறுதியில் வென்றதை, விவரிக்கும் கதை மஹாபாரதம். அவை இரண்டும் மக்களுக்குத் திரும்பத் திரும்ப சொல்லப்படுவது, மக்கள் அவற்றைப் படிப்பது, நல்லது.

 

ராவணன் அணி போன்ற ஒரு அக்கிரமக் கட்சி, "வெல்வோம் அதர்மமாக" என்பதை ஒரு தேர்தல் முழக்கமாகத் தன் மனதிற்குள் சொல்கிற கட்சி, ராமாயண மஹாபாரதக் கதைகளைப் பொதுமக்களிடம் குறிப்பிடவே கூடாதே? சரி, சரி. தேர்தல் ஜன்னியில் ஒருவர் வேண்டாததையும் பேசுவாரே!

 


5. கேள்வி: "உலகில் எட்டு போர்களை நான் நிறுத்தி இருக்கிறேன்" என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் மீண்டும் பேசி வருகிறாரே?

 

பதில்: அமைதிக்கான நோபல் பரிசு மீது டிரம்புக்கு நேர் கண், ஓரக் கண், இரண்டும் உண்டு. அந்த நோபல் பரிசைப் பெறுவது, இந்தியாவில் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கான தகுதி மாதிரி என்று டிரம்ப் நினைக்கிறார். அந்தப் பரிசு கிடைக்க, எப்படியோ எட்டு போட்ட மாதிரிக் காண்பித்தால் மட்டும் போதாது!


பகுதி 59 // 25.02.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

கேள்வி-பதில் (24.02.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "ஹிந்தி படித்துவிட்டுத் தமிழகம் வரும் வட இந்தியர்கள் ஒன்று கஞ்சா விற்கிறார்கள், அல்லது பானி பூரி விற்கிறார்கள்" என்று திமுக எம்.பி கனிமொழி சோமு பேசி இருக்கிறாரே?

 

பதில்: தமிழகத்தில் சிறிதும் பெரிதுமான தொழிற்சாலைகள், கடைகள் என்று எல்லா இடங்களிலும் வட இந்தியர்கள் வேலை செய்து வருமானம் ஈட்டுகிறார்கள். அந்தத் தொழிற்சாலைகளில், கடைகளில் அவர்கள் கஞ்சாவும் பானி புரியுமா விற்கிறார்கள்?

 

அன்றாடம் தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு குற்றங்களில் வேறு வேறு தமிழர்கள் ஈடுபடுகிறார்கள். இதற்காக ஒட்டுமொத்தத் தமிழர்களை இகழ்வாரா இந்தப் பேச்சாளர்?

 

திமுக சார்பாக ஒருவர் எதைப் பேசினாலும் அபத்தம் குப்பென்று கிளம்பும். கனிமொழி சோமுவின் பேச்சு இதை நிரூபிக்கிறது.

 

 

2. கேள்வி: அதிபர் டிரம்ப் தானாக விதித்த இறக்குமதி வரிகள் அமெரிக்க சட்டங்களுக்குப் புறம்பானவை என்று 6:3 விகிதத்தில் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அது பற்றிப் பேசிய டிரம்ப், "நான் சில உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறித்து வெட்கப் படுகிறேன், மிகவும் வெட்கப் படுகிறேன்" என்று சொல்லி இருக்கிறாரே?

 

பதில்: பித்துக்குளி டிரம்ப் ஒருவரை மனதாரப் பாராட்டினால் அந்த மனிதர் என்ன ஏது என்று யோசிக்க வேண்டும். டிரம்ப் ஒருவரைப் பற்றி மிகவும் வெட்கப் படுகிறார் என்றால், அதைவிட அந்த மனிதருக்கு வேறு பெருமை கிடையாது. சம்பந்தப்பட்ட அமெரிக்க நீதிபதிகள் உள்ளூர மகிழ்ச்சி கொள்ளலாம்.

 

 

3. கேள்வி: "குருவை வணங்குபவர்களை அயோக்கியன், முட்டாள், காட்டுமிராண்டி எனச் சொல்லும் பகுத்தறிவாளர்கள் தான் உண்மையான அயோக்கியர்கள், முட்டாள்கள், காட்டுமிராண்டிகள்" என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பேசி இருக்கிறாரே?

 

பதில்: பொதுமக்கள் அல்லது விமர்சகர்கள் 'பகுத்தறிவு பிராண்ட்' பகுத்தறிவாளர்களை இவ்வாறு எதிர்த்துப் பேசுவது வேறு. நீதிபதி பதவி வகிக்கும் ஒருவர் இப்படிப் பொதுவில் பேசுவது - அரசியல் சாயம் கொண்டுவிட்ட சில கருத்துகளை அவர் அரசியல் நோக்கம் இல்லாமல் ஆத்மார்த்தமாகச் சொன்னாலும் - வேறு. அவரைப் போன்ற ஒரு நீதிபதி இதைத் தவிர்த்தால், அவர் வழங்கியிருக்கும் சில தைரியம் மிக்க அரிதான தீர்ப்புகள், சட்ட உலகில் அதிக மதிப்பைப் பெறும்.

 

 

4. கேள்வி: "தேர்தலுக்குள் நீங்கள் ஒவ்வொருவரும் 100 வாக்காளர்களை, ஐந்து முறையாவது நேரில் சந்திக்க வேண்டும். திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துச்சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும்" என்று திமுக தலைவர் ஸ்டாலின் அக்கட்சியின் தேர்தல் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார். ஒரு முறை போதாதா, ஏன் ஐந்து முறை?

 

பதில்: வாழ்க்கையில் உங்களுக்கு நேர்ந்த சில சம்பவங்கள் மூலம் நீங்கள் பெரிய நன்மைகள் பெற்றிருந்தால், அந்தச் சம்பவங்களும் நன்மைகளும் தாமாக உங்களுக்கு எப்போதும் நினைவிருக்கும். ஏதோ சம்பவங்கள் மூலம், உங்களுக்குக் கிட்டாத பெரிய பலன்கள் உங்களுக்கு வந்துவிட்டது போல் உங்களை ஒருவர் பொய்யாக நம்பவைக்க முயன்றால், அவர் உங்களுக்கு ஐந்து முறை வேப்பிலை அடித்துப் பார்க்க வேண்டும்.

 


5. கேள்வி: "21-ம் நூற்றாண்டின் காமராஜராகத் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் உருவெடுத்து வருகிறார்" என்று காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கூறியிருக்கிறாரே?

 

பதில்: காமராஜின் பெருமையை அங்கீகரித்து அவருக்கு மதிப்பளித்தவர் ஜவஹர்லால் நேரு. ஆகையால், "21-ம் நூற்றாண்டின் ஜவஹர்லால் நேருவாக வந்திருக்க வேண்டியவர் மணிசங்கர் அய்யர்" என்று பதிலுக்கு ஸ்டாலினும் அறிவித்தால், ஸ்டாலின்-மணிசங்கர் அய்யர் காமெடி இன்னும் ஜோராக இருக்கும்.


பகுதி 58 // 24.02.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr