Saturday, 2 May 2026

கேள்வி-பதில் (02.05.2026)


 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: திமுக கூட்டணி மீண்டும் வென்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்த கவிஞர் வைரமுத்து அதற்குக் காரணமாக, "தமிழ்நாட்டுத் தாய்மார்கள் தங்கள் நன்றியைக் காண்பிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது" என்று சொல்லி இருக்கிறாரே?

 

பதில்: மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும். இடையில் என்ன சொல்கிறார் வைரமுத்து?

 

தமிழகத் தாய்மார்கள் பெருவாரியாக அதிமுக கூட்டணிக்கோ வேறு கட்சிக்கோ வாக்களித்திருந்தால், அந்தப் பெண்கள் நன்றி கெட்டவர்களா? ஜனநாயகத்தில் வாக்காளர்கள் தங்கள் விருப்பப்படி எந்த ஒரு கூட்டணிக்கும் அல்லது கட்சிக்கும் வாக்களிக்கலாம். அவர்கள் செய்த ஒரு தேர்வு மாநிலத்திற்கு நன்மை பயக்காது என்றுகூட தோற்கும் கட்சியோ கூட்டணியோ கருத்து சொல்லலாம். இந்த விஷயத்தில் வாக்காளர்களின் பக்கத்திலிருந்து நன்றிக்கு என்ன வேலை?

 

வைரமுத்து வெளிப்படுத்தியது ஜமீன் அரசியல் சிந்தனை - அதாவது திராவிட மாடல் அரசியல் பார்வை.

 

 

2. கேள்வி: "அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் திறமை தாய்நாட்டிற்குத் தேவைப்படுவதால், ஒரு சமுதாயப் பணியாக அவர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும்" என ஸோகோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளாரே?

 

பதில்: கல்லூரிகளில் படிக்கவும், பெரிய நிறுவனங்களில் வேலைக்குப் போகவும், லட்சக் கணக்கான இந்தியர்கள் அமெரிக்கா சென்று அங்கு குடியேறி இருக்கிறார்கள். காரணம்: சொந்த நாட்டில் அவர்களுக்குப் பல கதவுகள் அடைக்கப் பட்டிருக்கின்றன, பல இடங்களில் கதவுகளே இல்லை. அந்த அடிப்படைக் காரணத்தில் நிரந்தர மாற்றம் வந்தால், பல இந்திய இளைஞர்கள் அமெரிக்கா செல்லவேண்டி இருக்காது. ஏற்கனவே போனவர்கள் திரும்பி வருவது இருவர் சித்தப்படி நடக்கும். கடவுள். அடுத்தது டிரம்ப்.

 

 

3. கேள்வி: தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், மூன்று விதமாக வேறுபடுகின்றன. எதை நம்புவது, எதை ஒதுக்குவது?

 

பதில்: வாக்கு எண்ணிக்கை முடியும் வரை உள்ள நேரத்தில் கிரிக்கெட் மாட்ச் பாருங்கள், சினிமா டிராமா பாருங்கள், கச்சேரிகளுக்குப் போங்கள், தியானம் செய்யுங்கள், சீக்கிரம் தூங்குங்கள். எந்தக் கருத்துக் கணிப்பையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல், அதிகாரபூர்வமான தேர்தல் முடிவுகளை மட்டும் எதிர்நோக்குங்கள். உடம்புக்கு நல்லது.

 

 

4. கேள்வி: காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர், "தமிழகத்தில் காங்கிரஸ் இனி ஆட்சியில் இருக்கும் அல்லது எதிர்க்கட்சியாக இருக்கும். நடுநிலை இல்லை" என்று ஒரு பேட்டியில் கூறி இருக்கிறாரே?

 

பதில்:  ஷோடங்கர் சொல்லாமல் விட்டது இது:

 

'நான் சொன்னபடி பின்னர் காங்கிரஸ் நடந்துகொண்டால், அது கட்சி ஏற்கனவே அறிவித்தபடி நடக்கிறது என்றாகும். நான் சொன்னதற்கு மாறாக பின்னர் காங்கிரஸ் நடந்துகொண்டால், கட்சி சார்பாக நான் முன்னர் பேசியதற்கு எனக்கு அதிகாரம் இல்லை, வழக்கம் போல் ராகுல் காந்திதான் எதிலும் இறுதி முடிவெடுப்பார் என்று அர்த்தம்.'

 

 

5. கேள்வி: வரப்போகும் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் திமுக-வுக்குச் சாதகமாக வரும் என்று நம்பிக்கை தெரிவித்த மு.க. ஸ்டாலின், "எல்லாருக்கும் எல்லாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் திமுக ஆட்சி நடக்கிறது. அது தொடரும் என்பது உறுதி" என்று பேசி இருக்கிறாரே?

 

பதில்: முடியப் போகும் ஐந்தாண்டு திமுக ஆட்சியில் பங்கு கொண்ட திமுக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், "எல்லாருக்கும் எல்லாம்" என்ற தத்துவத்தை கோணல்மாணலாகப் புரிந்துகொண்டிருக்க வேண்டும். அந்தப் புரிதலோடு ஒரு ஆட்சி தொடர்வது நல்லதல்ல.

 

பகுதி 86//02.05.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

Thursday, 30 April 2026

கேள்வி-பதில் (30.04.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: சட்டசபைத் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்கு நான்கு நாட்கள் இருக்கின்றன. இப்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் என்ன நினைப்பார்? திமுக கூட்டணி வெல்லும் சூழ்நிலையில், தான் தோற்றாலும் தனது மகன் உதயநிதி வெல்லட்டும் என்று நினைப்பாரா, அல்லது உதயநிதி தோற்றாலும் தான் வெல்லவேண்டும் என்று ஸ்டாலின் நினைப்பாரா?

 

பதில்: திமுக கூட்டணி வெற்றி பெறும் சூழ்நிலையில், செந்தில் பாலாஜி நிச்சயம் வெல்லட்டும் என்று ஸ்டாலின் நினைப்பார். மற்ற அனைத்தையும் நிர்வாகம் செய்துகொள்ளலாம்.

 

 

2. கேள்வி: இயக்குநர்-நடிகர் பார்த்திபன், தான் 'ஜாதி மதமற்றவர்' எனத் தாசில்தார் தனக்குச் சான்றிதழ் வழங்கவேண்டும் என்ற உத்தரவைச் சென்னை உயர் நீதிமன்றத்தில் பெற்று, அவ்வாறு ஒரு சான்றிதழையும் பெற்றிருக்கிறார். இதனால் யாருக்கு என்ன பயன்?

 

பதில்: ஒரு நடிகர் எதை எப்படிப் பேசி எவ்வாறு நடித்தால், அந்த சீனுக்குப் பொதுமக்களிடம் சிறந்த எபெக்ட் கிடைக்கும் என்று ஒரு இயக்குநருக்குத் தெரியும். ஒரே நபர் நடிகர் மற்றும் இயக்குநராக இருந்தால், கோச்சிங் இல்லாமல் காரியம் எளிதில் முடியும். நாம் நமது வேலையைப் பார்ப்போம்.

 

 

3. கேள்வி: டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் பற்றிய மேல்முறையீட்டு வழக்கை, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா விசாரிக்கக் கூடாது என்று முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அந்த நீதிபதி முன் ஒரு மனு தாக்கல் செய்ய, அந்த மனு நிராகரிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து, அந்த நீதிபதிக்குக் கடிதம் எழுதிய கெஜ்ரிவால் "டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் உங்கள் அமர்வில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை சிதைந்து விட்டது. எனவே இந்த வழக்கில் நேரடியாகவோ வழக்கறிஞர் மூலமாகவோ இனி ஆஜராக மாட்டேன்" எனத் தெரிவித்து, தனது மனு நிராகரிக்கப் பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப் போவதாகவும் அறிவித்திருக்கிறாரே?

 

பதில்: தனது கோர்ட்டில் நடக்கும் வழக்கில் கட்சிக்காரராக இருக்கும் ஒருவரின் கடிதத்திற்கு, அதுவும் அந்த வழக்கு சம்பந்தமான கடிதத்திற்கு, ஒரு கீழ்க் கோர்ட்டு நீதிபதி கூடப் பதில் எழுதக் கூடாது. ஒரு நீதிபதியும் கட்சிக்காரரும் ஒருவருக்கு ஒருவர் கடிதம் எழுதி எந்த வழக்குப் பிரச்சனைக்கும் தீர்வு காணமுடியாது, அந்தச் செய்கைக்குச் சட்டத்திலும் இடமில்லை. இது தெரிந்தும் கெஜ்ரிவால் நீதிபதிக்குக் கடிதம் எழுதியது மலிவான டிராமா.

 

இன்னொன்று. சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் செய்யப்போகும் அப்பீல் தள்ளுபடியாகி, உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மாவே டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் பற்றிய மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்கலாம், இது பற்றி கெஜ்ரிவால் எழுப்பிய ஆட்சேபணை செல்லாது, என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு போட்டால் கெஜ்ரிவால் என்ன செய்வார்? அப்படி உத்தரவளித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கும் கெஜ்ரிவால் உடனே கடிதம் எழுதித் தனது அதிருப்தியைச் சொல்வாரா?

 

முடிந்தவரை பித்தலாட்டம் செய்கிறார் கெஜ்ரிவால். அவருடைய நாடகத்தின் முடிவு என்னவாக இருந்தாலும் அவர் ஆடுவது பித்தலாட்டம்.

 

 

4. கேள்வி: ராகுல் காந்தி அல்ல, நரேந்திர மோடிதான் இந்தியாவின் பிரதமராக இருப்பதற்குக் தகுதியானவர் என்பது தனது தேர்வு என்பதாக, 'க்ராக்' என்ற ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பச் செயலி சொல்லி இருக்கிறதே?

 

பதில்: இந்த ஒண்ணாம் கிளாஸ் நிதர்சனம் ராகுல் காந்திக்கே தெரியும். அதை ஒப்புக் கொண்டால் அரசியலில் குப்பை கொட்ட முடியாது என்பதால், வெளியில் மாறுதலாக நடிக்க முயல்கிறார் ராகுல். ஆனாலும் பித்துக்குளித் தோற்றம் அவரிடம் பளிச்சிடுகிறது.

 

 

5. கேள்வி: மஹாராஷ்டிராவைச் சேர்ந்த 90 வயதுப் பெண், அவர் தொடர்ந்த ஒரு அவதூறு வழக்கில் தொடர்ந்து பிடிவாதம் காட்டுகிறார் என்ற அடிப்படையில், 'இது அகங்காரங்களின் மோதல்' எனக் கூறிய மும்பை உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை 20 ஆண்டுகளுக்குப் பின் 2046-ம் வருடத்திற்கு ஒத்திவைத்திருக்கிறதே?

 

பதில்: யாருக்கும் எந்தவித அகங்காரமும் கூடாது.

 

பகுதி 85//30.04.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

Sunday, 26 April 2026

கேள்வி-பதில் (26.04.2026)


 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம், "மக்களுக்கு வழங்குவதை இலவசம் எனக் கூறாதீர்கள். அது 'யுனிவர்சல் பேசிக் இன்கம்'. அனைவருக்கும் அடிப்படை வருமானம் வேண்டும் என்றுதான் மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்கள் அமலில் உள்ளன" என்று தெரிவித்திருக்கிறாரே?

 

பதில்: ஒருவருக்கு உடம்பு சரியில்லை, சத்து மிகவும் குறைந்திருக்கிறது, ஒன்றிரண்டு நாட்கள் அவருக்கு ட்ரிப்ஸ் கொடுத்து விரைவாக உடம்பைத் தேற்றலாம், பிறகு நோயாளி வழக்கம் போல் உணவு சாப்பிடலாம் என்ற நோக்கில் ஒரு டாக்டர் ட்ரிப்ஸ் கொடுத்தால் புரிந்துகொள்ளலாம்.

 

வருடக்கணக்கில் ஒருவருக்கு ட்ரிப்ஸ் கொடுக்க நினைக்கும் டாக்டரைப் பற்றி ப. சிதம்பரம் இப்படிச் சொல்வாரா?  "ஒரு நோயாளிக்கு யுனிவர்சல் பேசிக் போஷாக்கு வேண்டும். அரசு செலவில் நடக்கும் அந்த ஆஸ்பத்திரியின் தலைமை டாக்டர், நோயாளிகளுக்கான உரிமை ட்ரிப்ஸ் திட்டத்தை அமல் செய்திருக்கிறார். அது பல வருடங்கள் நடக்கும். அதை வெறும் இலவசம் என்று சொல்லாதீர்கள்."

 

 

2. கேள்வி: மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டத் தேர்தலையொட்டி கொல்கட்டாவில் பேசிய திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, "மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் வெற்றியை உறுதி செய்தபின் டெல்லியைக் கைப்பற்றுவேன்" என்று கூறி இருக்கிறாரே?

 

பதில்: ஒருமுறை திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம், அவர் நாட்டின் பிரதமர் ஆவாரா எனக் கேட்டபோது, "என் உயரம் எனக்குத் தெரியும்" என்று பதில் சொன்னார். அதில் ஒரு நேர்மை இருந்தது. "நான் டெல்லியைக் கைப்பற்றுவேன்" என்று பேசும் மம்தா பானர்ஜியிடமும் அதே நேர்மை இருக்கிறது - தனக்கு ஒரு பைத்தியக்கார ஆசை இருந்தாலும், அதைச் சொன்னால் தனது பைத்தியக்காரத்தனம் வெளிப்பட்டாலும் பரவாயில்லை என்ற நேர்மை.

 

 

3. கேள்வி: "சட்டசபைத் தேர்தலுக்குப் பின் தமிழக அரசியல் களம் மாறும்" என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சொல்லியிருக்கிறாரே?

 

பதில்: 'தேர்தல் முடிவுகள் வந்தபின் சில அரசியல் தலைவர்கள் அணி மாறலாம்' என்று அவர் சொல்வதாக அர்த்தம். அந்தத் தலைவர்களில் அவரும் ஒருவரா என்பதை அவர் இப்போது வெளிப்படையாகச் சொல்ல முடியாது. பின்னர் நிலைமைக்கு ஏற்றபடி, "நான் அப்பொழுதே சொன்னேன்" அல்லது "நான் என்னைக் குறிப்பிடவில்லை. கள யதார்த்தத்தைச் சொன்னேன்" என்று அவர் அறிக்கை விட சவுகரியமான பேச்சு இது.

 

 

4. கேள்வி: சட்டசபைத் தேர்தலில் ஓட்டுப் பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படாத நிலையில் அறிக்கை வெளியிட்ட கவிஞர் வைரமுத்து, "மண், மொழி, மானம் காக்க, மீண்டும் திமுக-தான் ஆட்சிக்கு வரும்" என்று கூறி இருக்கிறாரே?

 

பதில்: 'வைரமுத்துவின் முக்கியத்துவம் காக்க, திமுக ஆட்சிக்கு வரவேண்டும்' என்ற தனது ஆசையை அவர் நேரடியாகச் சொல்லமுடியுமா?

 

 

5. கேள்வி: நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வராவிட்டால் அக்கட்சி என்ன மனநிலையில் இருக்கும்?

 

பதில்:  சாப்ட்வேர் தொழிலில், சிலருக்கு வேலை போய்ச் சம்பாத்தியம் போய்விடும். அப்போது அடுத்த வேலை கிடைக்கக் காத்திருந்து, மீண்டும் நன்றாகச் சம்பாதிக்கத் திட்டமிட்டு செயல்படுவார்கள். அரசியலிலும் தேர்தல் தோல்விக்குப் பின் மனம் தளராமல் அடுத்த வெற்றியையும், வெற்றியின் பலன்களையும், எதிர்நோக்கிச் செயல்படும் கட்சிகள் உண்டு. திமுக இதில் கிங். அதிமுக-வும் சளைத்ததல்ல.

 

பகுதி 84//26.04.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr