Wednesday, 4 February 2026

கேள்வி-பதில் (03.02.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில் கடந்த 2006ல் நடைபெற்ற ஆட்சியைவிட சிறப்பான ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வருகிறார்" என அமைச்சர் கே. என். நேரு பேசி இருக்கிறார். எந்த வகையில் ஸ்டாலின் ஆட்சி அதிகம் சிறந்தது?

 

பதில்: அமைச்சர் நேருவை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

 

நேருவுக்கு எதிராக 1,000 கோடி ரூபாய்க்கு அதிகமான லஞ்சப் புகாரை அமலாக்கத் துறை தமிழக அரசிடம் அளித்திருக்கிறது. ஒருவருக்குத் தாங்கமுடியாத சோதனைகள் ஏற்படும்போது, "கடவுளே! நீ மிகப் பெரியவன். ஈடு இணையற்றவன். சர்வ வல்லமை படைத்தவன். நானும் உனக்கு நிறைய நைவேத்தியங்கள் செய்திருக்கிறேன். என்னைக் காப்பாற்று!" என்று ஒருவர் வேதனையுடன் உரத்து வேண்டிக் கொள்ளலாம். 20 வருடங்களுக்கு முன் அவர் தொழுத கடவுளை அன்று அவர் இப்படிப் போற்றவில்லையே என்று கேட்டால், அப்போது அந்த ஆசாமிக்குப் பெரும் சோதனைகள் வந்திருக்காது என்று அர்த்தம்.

 

 

2.கேள்வி: இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய முதல்வர், "சாதியவாதம், வகுப்புவாதம், பெரும்பான்மை வாதம், எதேச்சாதிகார வாதம் ஆகியவற்றுக்கு எதிராக நாம் ஒற்றுமையோடு ஓரணியில் நின்று பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் உருவான தோழமைதான் நம்முடைய தோழமை" என்று பேசி இருக்கிறார். அந்த இரு கட்சிகளுக்கும் இடையேயான தோழமை அத்தகையதா?

 

பதில்: ஸ்டாலின் பேசியது அர்த்தமில்லாத வார்த்தைகள்.

 

ஆட்சியில் வாரிசுவாதம், சட்டம்-ஒழுங்கு பல்லிளிக்கும்வாதம், நிர்வாகம் குறட்டைவிடும்வாதம், கஜானா போண்டிவாதம், குடும்பத்தினர் மாயவளர்ச்சிவாதம் போன்ற கேடுகள் நிகழாமல் இருக்க, நேர்மை, நிர்வாகத் திறன் மற்றும் மக்கள் நலனுடன் ஆட்சி செய்பவர்கள் தோழமை கொள்ள வேண்டும். ஸ்டாலின் அதில் கோட்டை விட்டிருக்கிறார்.

 

 

3. கேள்வி: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், "நானும் ராணுவ தளபதி ஆசிம் முனீரும் பண உதவி கேட்டு உலகம் முழுவதும் யாசகம் எடுக்கும்போது நாங்கள் வெட்கப் படுகிறோம். எங்களது தலைகள் அவமானத்தால் குனிகின்றன" என்று வெளிப்படையாகப் பேசி இருக்கிறாரே?

 

பதில்: தாங்கள் அடக்குமுறை ஆட்சி செய்து, தனிப்பட்ட முறையில் கொழிக்க வேண்டும் என்பதற்காகப் பாகிஸ்தான் ராணுவத் தலைமையும் அதன் பொம்மையாகப் பிரதமரும் செயல்படும்போது, அந்த நாட்டில் தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதாரம் அதல பாதாளத்தில் இருக்கும். அதற்குத் தொடர் காரணமாகத் தாங்கள் இருக்கிறோம் என்பதற்காக ஷெபாஸ் ஷெரீப்பும் ஆசிம் முனீரும் உண்மையில் வெட்கப்பட வேண்டும்.

 

"நான் இரவில் திருடப் போகும் நேரங்களில் போலீசிடம் மாட்டிக் கொள்வேனோ என்ற அச்சத்தில் பயந்து பயந்து என் வேலையைச் செய்கிறேன்" என்று பேசும் திருடனுக்கு அனுதாபம் கிடைக்காது.

 

 

4. கேள்வி: "தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை கட்சிகளும் எங்களுக்குத் தோழமைக் கட்சிகள்தான். பேசுவது, பழகுவது வேறு, அரசியலில் சேர்வது வேறு. எங்களுக்கு உரிய மரியாதை, எங்களுக்கு உரிய நியாயம் எங்கு கிடைக்கிறதோ அங்குதான் கூட்டணி” என்று தேமுதிக தலைவர் பிரேமலதா கூறியுள்ளார். அவர் என்ன சொல்கிறார்?

 

பதில்: தேர்தல் கூட்டணி அமைப்பது ஒரு டீலிங்தான். இருந்தாலும் பிரேமலதா தனது கட்சியை அதிகத் தொகுதிகளுக்கும் மற்ற பலன்களுக்கும் ஏலம் விடுவது மாதிரி அப்பட்டமாகக் காட்டிக் கொள்ளாமல் இருக்கலாம்.

 

தேமுதிக இணையும் கூட்டணி, தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்று அதன் தலைமைக்கட்சி தனித்தோ அல்லது கூட்டணிக் கட்சிகளுடனோ ஆட்சி அமைத்தால், அப்போது எதிர் அணியினர் தேமுதிக-வுக்கு சிறந்த கூடுதல் 'மரியாதை' வழங்க முன்வந்தால், அப்போதுள்ள ஆட்சிக்குத் தேமுதிக அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொண்டு தேமுதிக மேலும் உரிய மரியாதைகள் பெற அந்தக் கட்சி எதிர் அணியுடன் கூட்டு சேருமா? தனது பகிரங்க ஏலத்தின் மூலம் எல்லா பிரதான கட்சிகளுக்கும் இந்த அச்சத்தைப் பிரேமலதா அட்வான்ஸாகத் தருகிறார்.

 


5. கேள்வி: மனைவி முக்கியமானவள் என்று புதுமொழி சொல்ல வந்து, 'மண்ணானாலும் மனைவி, பூண்டானாலும் பொஞ்சாதி' என்கிறீர்கள். மனைவியை மண், பூண்டு என்றெல்லாம் சொல்வது சரியா?

 

பதில்: சரியா என்று பார்க்கலாம்.

 

'கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்' என்பதற்கு இணையாகச் சொன்னது, மனைவி பற்றிய புதுமொழி. அவர் கல், இவர் மண்; அவர் புல், இவர் பூண்டு. சரிக்கு சரி!


பகுதி 46 // 03.02.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 


Friday, 30 January 2026

கேள்வி-பதில் (30.01.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "திமுக-வினர் எப்போதும் இஸ்லாமியர்கள் பக்கம் நிற்பவர்கள்" என்று கும்பகோணத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறாரே?

 

பதில்: 'திமுக இன்னார் பக்கம் நிற்காது' என்று ஸ்டாலின் ஒருபகுதி மக்களை நினைத்து சூசகமாக இப்படிச் சொல்கிறார். அந்த மற்ற மக்களிடம், 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்கிற மாதிரி திமுக சொல்வது: "நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரியல்ல".

 

நீங்கள் ஒருவரின் எதிரி என்றால் அவரை அடித்து உதைத்துதான் நீங்கள் அவருடைய எதிரி என்று காண்பிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவரிடம் பாராமுகமாக இருப்பது, அவருக்கு உரிய அங்கீகாரத்தையும் மரியாதையையும் வழங்காமல் இருப்பது (ஆனால் பிறருக்கு, விழுந்து விழுந்து வழங்குவது), அவர் வணங்கும் கடவுளை மட்டும் நிராகரிப்பது, நிந்திப்பது, கேலி பேசுவது, அவர் வழிபடும் தெய்வங்களைப் பழித்தவரைப் போற்றுவது, அவருக்கு வாழ்த்து சொல்லவேண்டிய நாட்களில் மவுனம் காப்பது, என்று பல திராவிட மாடல் வழிகளில் நீங்கள் யாருக்கு எதிரி என்பதைக் காட்டலாம்.

 

 

2. கேள்வி: கும்பகோணத்தில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்திய மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "திமுக-தான் சிறுபான்மை இன மக்களைக் காக்கக் கூடிய காவல் அரண்" என்று பேசி இருக்கிறார். அதற்கு என்ன பொருள்?

 

பதில்: யாரிடமிருந்து தமிழக சிறுபான்மையின மக்கள் காக்கப்பட வேண்டியவர்கள் என்று முதல்வர் சொல்ல வருகிறார்? பெரும்பான்மை மக்களிடம் இருந்தா? அந்த அர்த்தம் அவர் பேச்சில் கணிசமாக உள்ளடங்கி இருக்கிறது. ஆனால் பெரும்பான்மை ஹிந்துக்களிடம் இருந்து தாங்கள் காக்கப்பட வேண்டும் என்று தமிழகம் உட்பட இந்தியாவெங்கும் சிறுபான்மை மக்களே நினைப்பதில்லை.

 

நமது நாட்டில் சிறுபான்மையான முஸ்லிம் மக்கள், பாகிஸ்தானில் அசுரப் பெரும்பான்மை (96-97 சதவிகிதம்). இந்தியாவில் சமாதானத்தை விரும்பும் அனைத்து ஹிந்துக்களும், அரசின் போலீசாரும், முஸ்லிம்களைக் காப்பது போல் பாகிஸ்தானில் சாதாரண முஸ்லிம்களுக்கே பாதுகாப்பு இல்லை. அந்த நாட்டில் மெஜாரிட்டி சமூக மக்களின் வாழ்க்கையைக் காக்க பாகிஸ்தான் தலைவர்கள் முனைவதில்லை. தமிழகத்தில் மெஜாரிட்டி சமூக மக்களின் உணர்வுகளை மதிக்க ஸ்டாலின் முனைவதில்லை.

 

 

3. கேள்வி: அமெரிக்க அதிபர் டிரம்ப் மாதிரி வினோதமான தலைவர் வேறு ஒருவர் உண்டா?

 

பதில்: ஜெயலலிதாவின் ஆணவ-அதிகார மனப்பான்மை, ராகுல் காந்தியின் பித்துக்குளிப் பேச்சு, சீமானின் அடாவடி அணுகுமுறை, இவை மூன்றும் கலந்து செய்த கலவை, டிரம்ப். அவ்வப்போது அவற்றில் எது அதிகம் தலைதூக்குகிறதோ அதன்படி அவர் பேசுவார், நடந்துகொள்வார்.

 

 

4. கேள்வி: அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இவர்களில் யார் மற்ற அனைவரையும் விடச் சிறந்த தலைவர், ஏன்?

 

பதில்: மோடி.

 

தனது நாட்டை நிர்வகிக்கும் தலைவரை அபாண்டமாக, கேவலமாக விமர்சித்து, சர்வதேச அளவில் தனது நாட்டின் செல்வாக்கு சரிந்து அதன் மூலமாகவும் அந்தத் தலைவர் மதிப்பிழக்கட்டும் என்று கீழ்த்தரமாகச் செயல்படும் உள்நாட்டு எதிர்க்கட்சிகள் இந்தியாவில் உண்டு, மற்ற நான்கு நாடுகளில் இல்லை. அப்படியும் நிர்வாகத்தில் ஜெயிக்கும் கில்லி, பிரதமர் மோடி. அதோடு, அந்த நான்கு நாடுகளின் தலைவர்களும் வியக்கும் உலகத் தலைவர், மோடி. பித்துக்குளி டிரம்ப் உதார்ப் பேச்சு பேசுவது வேறு விஷயம் ("நான் மோடியின் அரசியல் வாழ்வை நாசம் செய்ய விரும்பவில்லை").

 

 

5. கேள்வி: "ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்" என்று மகாகவி பாரதி அன்று பாடினார். இன்றைக்கு வளமான இந்தியாவை எண்ணி எப்படிப் பாடலாம்?

 

பதில்: 'பாரத தேசம்' பாடலில் வளமான பாரதம் உருவாக எல்லாவற்றையும் சொல்லிவிட்டார் பாரதி. இருந்தாலும், ராஜதந்திரம் மிக்க அரசியல் தலைமை தேவைப்படும் இன்றைய இந்தியாவில், தற்போதைய ஏஐ காலத்தில், நாம் இந்த வரிகளை எண்ணிப் பார்க்கலாம்.

 

ஏஐ கற்போம் பொருள் சேவைகள் விற்போம்;

 

தேவை தீர நாம் பெரும் வேலைகள் செய்வோம்;

 

செம்புலத்து நீர்போல் வாழ்வில் எம்-மோடி-ருக்கும் சக்தி போற்றி.

 

பகுதி 45 // 30.01.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

Wednesday, 28 January 2026

கேள்வி-பதில் (27.01.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

நண்பர்களே, வணக்கம்.

 

பலருக்கும் நான் வாட்ஸ் அப்பில் ஐந்து ஐந்தாக அனுப்பிவரும் கேள்வி-பதில்களின் எண்ணிக்கை 200-ஐத் தாண்டுகிறது. இதற்குக் கிடைத்திருக்கும் பரவலான வரவேற்பு எனது முனைப்பையும் உற்சாகத்தையும் கூட்டுகிறது. அனைவருக்கும் நன்றி.

 

சென்ற கேள்வி-பதில் பகுதியை (25.01.2026 தேதியிட்டது) நான் அனுப்பிய சில மணிகள் கழித்து, என் மொபைல் போன் வாட்ஸ் அப் செயலியில் கோளாறு ஏற்பட்டு அது முடங்கியது. பின்னர் ஒரு நாள் சென்ற பின், இன்று மாலை ஆறரை மணிக்கு என் போனில் அந்தச் செயலி மீண்டும் வேலை செய்யத் தொடங்கியபோது, முந்தைய வாட்ஸ் அப் சம்பாஷணைகள் அனைத்தும் என் போனில் காணவில்லை. காரணம், பின்வைத்தல் (back up) தொடர்பான ஏதோ சிக்கல் - இப்போது அது சரி செய்யப்பட்டு விட்டது.

 

என் வாட்ஸ் அப் செயலி முடங்கியிருந்த போது, சென்ற கேள்வி-பதில் பதிவிற்கு உங்களில் யாரேனும் எனக்கு நல்வார்த்தைகளில் மறுமொழி அனுப்பி இருந்தால் எனக்கு அது தெரியாமல் போயிருக்கும், நாகரிகம் கருதி நான் அவர்களுக்கு வழக்கமாக அனுப்பும் பதிலும் என்னிடமிருந்து அவர்களுக்கு வராமல் போயிருக்கும். அப்படியானால் அவர்கள் தயவு செய்து பொறுத்துக் கொள்ளவும்.

 

இப்போது ஒரே ஒரு கேள்வி-பதிலுடன் முடித்துக் கொண்டு வழக்கம் போல் பின்னர் வருகிறேன்.

 

 

கேள்வி: வாட்ஸ் அப்பில் தொடர்வது பயன் அளிக்கிறதா, உபத்திரவம் தருகிறதா?

 

பதில்: வாட்ஸ் அப்பில் ஒரிஜினலாக அனுப்புகிற, முன் நகர்த்துகிற, அனைவருக்கும் ஏக குஷி நிச்சயம் - மறைவுச் செய்திகள் நீங்கலாக. வாட்ஸ் அப் பார்க்கிறவர்களுக்குப் பயன் 10-லிருந்து 110 சதவிகிதம் வரை அவரவர் லயிப்பைப் பொறுத்து, அல்லது விரல் தடவும் வேகத்தைப் பொறுத்து, இருக்கும்.

 

பகுதி 44 // 27.01.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

 

Sunday, 25 January 2026

கேள்வி-பதில் (25.01.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: இரு தரப்பினரைக் குறிப்பிட்டு அரசியல் தலைவர்கள் பேசும்போது, சிலரைப் 'பங்காளிகள்' என்றும், சிலரை 'மாமன் மச்சான் போன்றவர்கள்' என்றும் சொல்கிறார்கள். அரசியலில் இந்த உறவுகளுக்கு என்ன அர்த்தம்?

 

பதில்: 'நாங்கள் பங்காளிகள்' என்றால், 'எங்களுக்குள் முன்பு போட்ட சண்டையை ஒரு பரஸ்பர ஆதாயத்திற்காக ஒத்தி வைத்திருக்கிறோம்' என்று அர்த்தம். நாங்கள் 'மாமன் மச்சான் போல் இருக்கிறோம்' என்று சொன்னால், 'எங்களுக்குள் உள்ள புகைச்சல் கனன்றபடி இருக்கிறது, இன்னும் தீரவில்லை' என்று அர்த்தம்.

 

 

2. கேள்வி: திமுக தலைவர் ஸ்டாலின் தன் கட்சித் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "வரும் சட்டசபைத் தேர்தல் ஆரிய-திராவிடப் போரின் மற்றொரு களம்" என்று சொல்லி இருக்கிறார். இதற்கு என்ன அர்த்தம்?

 

பதில்: அவருக்கே அர்த்தம் தெரியாது.

 

ஆரிய பூதம், திராவிட பூதம் என்று இரண்டு பூதங்களைத் திமுக கற்பனையாக உருவாக்கி, அதில் திராவிட பூதம் நல்ல பூதம், ஆரிய பூதம் கெட்ட பூதம் என்றும் கதை கட்டி, அந்த பூதங்கள் நிஜமானவை என்று மக்கள் நம்பவேண்டும் என்று அக்கட்சி விரும்புகிறது. மக்கள் நம்பவில்லை. இருந்தாலும், ஸ்டாலினுக்கு அரசியலில் பதட்டம் ஏற்படும்போது - அதுவும் தேர்தல் வரும் காலத்தில் - அந்த இரண்டு பூதங்களுக்குள் பெரிய மோதல் இருந்து வருகிறது, திராவிட பூதத்திற்குத் திமுக துணையாக நின்று ஆரிய பூதத்தை வீழ்த்தும் என்று வசனம் பேசி, தனது பதட்டத்தைத் தணித்துக் கொள்வார். இல்லாத இரண்டு பூதங்களில் எதுவும் வெல்வதில்லை, தோற்பதுமில்லை.

 

 

3. கேள்வி: "தேசபக்தி குறித்து எங்களுக்கு யாரும் பாடம் எடுக்கவேண்டாம்" என்று தமிழக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறாரே?

 

பதில்: முதல் விஷயம்: திமுக-வினருக்கு தேசபக்தியில் நாட்டம் இல்லை.

 

ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்ககளை நினைவு கூர்வதற்காக, ஆண்டு தோறும் 'மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை'க் கருப்பு உடையில் அனுசரிக்கின்றனர் ஸ்டாலினும் மற்ற திமுக-வினரும். தேச விடுதலைக்காகத் தியாகங்கள் செய்து போராடியவர்களை - அவர்களில் தமிழரான காமராஜையாவது - திமுக உள்ளார்ந்து போற்றுவதில்லை, பெருமிதத்துடன் நினைவு கூர்வது இல்லை.

 

ஜீவ காருண்யம் குறித்து கசாப்புக் கடைக்காரனுக்கு யார் பாடம் எடுப்பார்கள்? அவனுக்கு யாரிடம் பாடம் கேட்கப் பிடிக்கும்?

 

 

4. கேள்வி: தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய விஜய், திமுக-வை நீக்கிவிட்டுத் தனது கட்சி ஆட்சிக்கு வரும் என்றும், "நான் ஒரு பைசா லஞ்சம் வாங்க மாட்டேன், எனக்கு அது தேவையும் அல்ல" என்றும் பேசி இருக்கிறார். அவர் பேச்சு நம்பிக்கை தருகிறதா?

 

பதில்: திமுக-வும் ஊழலும் பிரிக்க முடியாதவை என்பது சரிதான். ஆனால் இதுவரை ஆட்சிக்கு வராதிருந்து, திமுக-வைத் தேர்தலில் எதிர்ப்பதால் மட்டும் ஒரு கட்சி ஊழலுக்கு எதிரானது என்று ஆகாது. முதலில் விஜய் கட்சி ஆட்சிக்கு வருகிறதா, பார்க்கலாம். மற்றவை பிறகு.

 

இன்னொன்று. இன்றுவரை விஜய் வெளிப்படுத்தி இருப்பது வீர வசனங்கள், மார் தட்டல்கள், விசில் சத்தம் மட்டுமே.  ஊழலை நிராகரித்து, நேர்மையாகவும் திறமையாகவும் ஆட்சி செய்ய முடிகிற ஒரு தலைவரிடம், அவரது பேச்சிலும் உடல்மொழியிலும், நிதானம், முதிர்ச்சி மற்றும் சமநிலைப் பார்வை ஆகிய பண்புகள் தென்படும். பூதக் கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் விஜய்யிடம் அந்தப் பண்புகள் தெரியவில்லை.

 


5. கேள்வி:  கணவன் முக்கியமானவன் என்பதைச் சொல்லும் பழமொழி, 'கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்.' மனைவி முக்கியமானவள் என்று சொல்கிற பழமொழி இருக்கிறதா?

 

பதில்: அதே விதத்தில் புதுமொழியாகச் சொல்லலாம்: மண்ணானாலும் மனைவி, பூண்டானாலும் பொஞ்சாதி.


பகுதி 43 // 25.01.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr