Wednesday, 22 April 2026

கேள்வி-பதில் (22.04.2026)


 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால், பாஜக-வுக்குக் கைகட்டி நிற்கும் அதிமுக பொதுச் செயலர் பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்" என்று திமுக தலைவர் கனிமொழி கூறியுள்ளாரே?

 

பதில்: அடுத்த ஜென்மம் இருந்தால், ஊழல் மற்றும் தேசவிரோத அரசியல்வாதிகளை அடக்கி வைக்கும் குஜராத் மனிதர் நரேந்திர மோடி தமிழகத்தில் பிறக்கட்டும்.

 

 

2. கேள்வி: "மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்பட்டால்தான், மாநில வளர்ச்சி நன்றாக இருக்கும்" என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்னையில் கருத்து தெரிவித்திருக்கிறாரே?

 

பதில்: சுய நலன் மற்றும் மகன் மருமகன் நலன்களில் குறியாக இருக்கும் ஒருவர், மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்பட்டால், அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சி நன்றாக இருக்காது என்று அவருக்குத் தெரியும். அது பற்றிக் கவலைப்படாத சந்திரபாபு நாயுடு எதுவும் பேசலாம்.

 

 

3. கேள்வி: தமிழகம் வந்த ஆம் ஆத்மி கட்சித் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் சென்னையில் அளித்த பேட்டியில், "பிரசாரத்தின் போது தமிழக மக்கள் என்னை உற்சாகத்துடன் வரவேற்றனர்.  தமிழக மக்கள் பாஜக மீது வெறுப்புடன் உள்ளனர்" என்று கூறி இருக்கிறாரே?

 

பதில்: தமிழக மக்கள் பாஜக மீது வெறுப்பு கொண்டால் கூடப் பரவாயில்லை. குயுக்தி மன்னன், வெறுப்பரசியல் வேந்தன், அரவிந்த் கெஜ்ரிவாலைத் தமிழ் மக்கள் எதிர்காலத்தில் வரவேற்று ஆதரவு தரும் பாதகத்தைச் செய்யாமல் இருந்தால் போதும்.

 

 

4. கேள்வி: தனது கட்சிக்காகத் தேர்தல் பிரசாரம் செய்யும்போது, "இலங்கை, நேபாளத்தில் நடந்த புரட்சி இந்தியாவில் நடக்காது என்று சொல்ல முடியுமா?" என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கேட்டுள்ளாரே?

 

பதில்: அரசியல் பற்றி சீமான் ஒரு விஷயம் பேசும்போது - அதுவும் தேர்தல் சமயத்தில் வாக்கு சேகரிக்கும்போது -  இன்னொரு விஷயத்துக்குத் தாவுவதில், மரம் விட்டு மரம் மட்டுமல்ல, மலை விட்டு மலையும் தாவுவார். அறிவாந்தவராக இருந்தாலும் அவரிடம் சிந்தனை ஒழுங்கு இல்லை.

 

 

5. கேள்வி: "ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருடன் தவெக தலைவர் விஜய்க்கு நெருக்கமான உறவு இருக்கிறது" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளாரே?

 

பதில்: திருமாவளவனுக்கு நகைச்சுவை உணர்வு அறவே இல்லை என்ற ஒரு குற்றச்சாட்டு இருந்தது. அந்தக் குற்றச்சாட்டை, 'போடா டேய்' என்று சொல்லி அரைச் சிரிப்புடன் இடது காலால் உதைத்துத் தள்ளிவிட்டார் அவர்.

 

 

பிகு: நாளை நடக்கப் போகும் தேர்தலுக்காக, யாரை எதிர்த்தும் யாருக்கு ஆதரவாகவும் செய்யப்படும் பிரசாரம் அல்ல இது. வாக்காளர்கள் அனைவரும் சுதந்திரமாகத் தாங்கள் விரும்பியவர்களுக்கு வாக்களியுங்கள்.

 

பகுதி 83//22.04.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

Monday, 20 April 2026

கேள்வி-பதில் (20.04.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "ராஜராஜ சோழனையும் தாண்டி கோவில்களுக்குக் குடமுழுக்கு செய்தவர் சேகர் பாபு" என்று சட்டசபைக்குப் போட்டியிடும் திமுக அமைச்சர் சேகர் பாபுவைப் பாராட்டி கமல் ஹாசன் பிரசாரம் செய்திருக்கிறாரே?

 

பதில்: கமல் ஹாசன் இப்படிப் பேசுகையில், அருகில் அவரைப் பார்த்து நின்றிருந்த சேகர் பாபு உடனே வேறு புறம் முகத்தைத் திரும்பிக் கொள்வது வீடியோவில் தெரிகிறது. சேகர் பாபுவுக்கே சிரிப்பை அடக்க முடியவில்லையோ? உளறு நாயகன்.

 

 

2. கேள்வி: "பெரியார் என்ற பிம்பத்தைத் தமிழ்நாட்டில் அண்ணா, கருணாநிதி, பிறகு மு.க. ஸ்டாலின் ஆகியோர் தூக்கிப் பிடித்திருக்கிறார்கள். அதை உடைக்கவே முடியாது. இன்னும் ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் அது முடியாது" என்று திமுக அமைச்சர் எ.வ. வேலு சமீபத்தில் பேசி இருக்கிறாரே?

 

பதில்: வேலு சொன்ன ஐம்பது வருடத்தில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. அது புரிவதற்கு, முதலில் திமுக தலைவர் ஸ்டாலினுடைய தற்போதைய வயது தெரியவேண்டும். அவர் வயது 73, அவர் மகன் உதயநிதியின் வயது 48. ஸ்டாலின் தொடங்கி, திமுக தலைமைக் குடும்பத்தின் மூன்று தலைமுறையினரின் காதுகள் பல பத்தாண்டுகள் குளிரும் வகையில் பேசிவிட்டார் வேலு. வேலுவுக்கே வயது 75. மருத்துவக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளை நிறுவி நடத்துபவர். பெரியாரைப் போற்றியதில் வேலுவின் பிழைப்பு, அவருடைய தொழில் வளம், அவர் குடும்பத்தின் செழிப்பு ஆகியவை திமுக-வின் கீழ் நூறு சதவிகிதம் கேரண்டி. நமக்கு இதில் சம்பந்தமில்லை.

 

 

3. கேள்வி: லோக் சபாவில் ஒரு அரசு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக உறுப்பினர்கள் கருப்பு உடையணிந்து வந்ததைப் பார்த்த பிரதமர் மோடி ஏதோ சொல்ல, அதற்குப் பதிலளித்த திமுக எம்.பி. கனிமொழி, "கருப்பு என்பது காளி தேவியின் நிறம்" என்று தங்கள் உடைகளின் நிறத்தை நியாயப் படுத்தி அங்கு பேசி இருக்கிறாரே?

 

பதில்: இக்கட்டான சமயத்தில் திமுக-வினருக்கும் காளி தேவி உதவுவாள் என்று கனிமொழி புரிந்துகொள்ளலாம்.

 

 

4. கேள்வி: "தற்போது 543 எம்.பி-க்கள் உள்ளபோதே 3 மாதங்களுக்கு ஒரு முறைதான், ஒருவர் பேச 7 நிமிடம் வாய்ப்பு கிடைக்கிறது. தொகுதி சீரமைப்பால் 816 எம்.பி-க்கள் வந்தால் 5 மாதங்களுக்கு ஒரு முறை 3 நிமிடம் மட்டுமே பேச வாய்ப்பு கிடைக்கும்" என்று இளையான்குடியில் பேசியிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம். இதன் மூலம்,  லோக் சபா எம்.பி-க்கள் எண்ணிக்கையை அதிகரிக்க அவசியமில்லை என்று அவர் வாதிடுகிறார். இந்த வாதம் சரியா?

 

பதில்: சிதம்பரத்தின் பேச்சில் கெட்டிக்காரத் தோற்றம் மட்டும் இருக்கிறது.

 

சிதம்பரத்தின் கெட்டிக்கார ரூட்டில் போய், லோக் சபாவின் தற்போதைய எம்.பி-க்கள் எண்ணிக்கையைப் பாதி குறைத்து 272-ஆக மாற்றலாமா? அப்போது லோக் சபாவில் ஒரு எம்.பி இரண்டு மடங்கு நேரம், அதாவது 14 நிமிடங்கள், பேசலாமே - அது வேண்டாமா? எம்.பி எண்ணிக்கையைக் கால் பங்காகக் குறைத்து 136 என்று ஆக்கினால், லோக் சபாவில் ஒரு எம்.பி 28 நிமிடங்கள் பேசி அசத்தலாம் - அது பயன் தராதா?

 

இன்னொன்று. லோக் சபாவில் எம்.பி-க்கள் என்ன பேசினாலும், எவ்வளவு நேரம் பேசினாலும் பிரயோஜனம் இல்லை; பேசிய பிறகு தனது கட்சிக் கொறடாவின் உத்தரவின் படிதான் அவர் லோக் சபாவில் ஓட்டளிக்க வேண்டும் - இல்லாவிட்டால் அவருடைய எம்.பி பதவி பறிபோகலாம்.  ஆகையால் 3 நிமிடம் என்ன, 30 நிமிடம் கூட நீட்டி முழக்கி அவர் வெளியில் பேசட்டுமே - இப்போது சிதம்பரம் பேசின மாதிரி?

 

 

5. கேள்வி: "அமெரிக்க அதிபர் டிரம்பின் கட்டுப்பாட்டில் நமது பிரதமர் மோடி இருக்கிறார். அவர் குதி என்றால் இவர் குதிப்பார். அவர் கீழே கிட என்றால் இவர் கீழே கிடப்பார்" என்று ராகுல் காந்தி சென்னையில் பேசி இருக்கிறாரே?

 

பதில்: தான் பேசுவதை ஒருவராவது நம்புவாரா என்ற சிந்தனை ராகுல் காந்திக்கு இல்லை. காரணம்: ராகுல் காந்திக்கு உள்ளே ஒரு பைத்தியம் இருக்கிறது. அது பிதற்று என்றால் இவர் பிதற்றுவார். அது புளுகு என்றால் இவர் புளுகுவார்.

 

அமெரிக்க அதிபர் பதவி மாதிரி அல்லாமல், அந்தப் பைத்தியத்தின் பதவிக் காலம் நான்கு வருடங்கள் ஆனாலும் முடிவுக்கு வராது. அது சாஸ்வதம்.

 

பகுதி 82//20.04.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

Saturday, 18 April 2026

கேள்வி-பதில் (18.04.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "தொகுதி மறுவரையறை சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்தால், கடந்த 1950 மற்றும் 1960ம் ஆண்டுகளில் பார்த்த பழைய திமுக-வை இந்தியா மீண்டும் பார்க்க வேண்டியிருக்கும். என்ன இவன் மிரட்டுகிறான் என்று நினைக்காதீர்கள்; நான் உங்களை எச்சரிக்கிறேன்" என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மற்றும் மத்திய அரசை நோக்கிப் பேசினார். ஸ்டாலின் விடுத்தது உண்மையில் எச்சரிக்கையா, மிரட்டலா? எச்சரிக்கைக்கும் மிரட்டலுக்கும் என்ன வித்தியாசம்?

 

பதில்: இரண்டுக்குமான வித்தியாசம் எளிதானது.

 

உயர் அழுத்த மின்சாரம் கடத்தப்படும் இடங்களுக்கு அருகில், அரசு பொதுமக்களுக்கு எச்சரிக்கைப் பலகை வைக்கலாம். "மதியம் கடுமையான வெயில் அடிக்கிறது. இப்போது வெளியில் சென்றால் ஹீட் ஸ்ட்ரோக் வரலாம். சாயங்காலம் போ" என்று வீட்டில் ஒருவர் மற்றவருக்குச் சொல்லலாம். இவை முறையான எச்சரிக்கை. 

 

"நான் எதிர்பார்க்கும் வகையில் நீ நடந்துகொண்டால் ஓகே. நீ வேறுவகையில் செயல்பட்டால், நான் அந்தக் காலத்தில் செய்த மாதிரி அதகளம் செய்வேன்" என்று ஒருவர் பேசினால் அது மிரட்டல். அதைத்தான் ஸ்டாலின் செய்தார்.

 

 

2. கேள்வி: காட்பாடியில் தனக்காகத் தேர்தல் பிரசாரம் செய்த திமுக அமைச்சர் துரைமுருகன் “நான் லஞ்சம் வாங்கியதாக யாராவது காண்பிக்கட்டும், நெருப்பில் குதித்து விடுகிறேன்” எனப் பேசி இருக்கிறாரே?

 

பதில்: துரைமுருகன் சொல்ல வருவது இது: "நான் லஞ்சம் வாங்கியதாகக் கோர்ட்டுக்குச் சென்று  - அதாவது இறுதியில் சுப்ரீம் கோர்ட் வரை சென்று - நிரூபிக்க எந்த ஆவணமோ மற்ற சாட்சியமோ யாருக்கும் கிடைக்காது." கெட்டிக்காரராகப் பேசியிருக்கிறார். கேட்பவர் கெட்டிக்காரராகப் புரிந்துகொள்ள வேண்டும்.

 

 

3. கேள்வி: மத்திய மாநில சட்டசபைகளில் பெண்களுக்கான மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு தொடர்பான அரசியல் சட்ட திருத்த அரசு மசோதா, போதிய விசேஷப் பெரும்பான்மை ஆதரவு கிடைக்காததால் லோக் சபாவில் தோற்றது. இந்தத் தோல்வி, நடைபெறவிருக்கும் ஐந்து மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டசபைத் தேர்தல்களில், யாருக்கு பாதகமாக இருக்கும்? காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணிக்கா? பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கா?

 

பதில்: லோக் சபாவில் மசோதாவை எதிர்த்துத் தோற்கடித்த எதிர்க் கட்சிகளின் எண்ணம் இது:

 

'எங்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேறினால், "பெண்கள் இட ஒதுக்கீடு சட்டத்தை முன்னெடுத்தது எங்கள் அரசு" என்று அந்த ஐந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் பாஜக பிரசாரம் செய்யும்; அதனால் அங்கு நடக்கவிருக்கும் தேர்தல்களில் எங்களுக்குக் கணிசமான ஓட்டிழப்பு ஏற்படும். மாறாக, எங்கள் எதிர்ப்பால் லோக்சபாவில் மசோதா தோற்றால் அப்போதும் அந்த ஐந்து தேர்தல்களில் எங்களுக்கு ஓட்டிழப்பு ஏற்படலாம், ஆனால் அந்த ஓட்டிழப்பு குறைவாக இருக்கும். ஆகையால் தோற்கட்டும் மசோதா!'

 

இன்னொன்று. மசோதா நிறைவேறிப் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அமலுக்கு வந்தால், 2004-14 மத்திய ஆட்சியில் பிரதமர் மன்மோகன் சிங்கின் பின்னால் சோனியா காந்தி லகான் பிடித்து ஹை-ஹை சொன்ன மாதிரி, மத்திய மாநில சட்டசபைகளில் நிறையப் பெண் உறுப்பினர்கள் கடனே என்று கடமையாற்ற, பின்னணியில் கணவன்மார்கள் தூள் கிளப்பலாம். இந்தியாடா!

 

 

4. கேள்வி: தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்த்து லோக்சபாவில் பேசிய திமுக உறுப்பினர் டி.ஆர். பாலு, "இந்த மசோதாவை எதிர்த்துத் தமிழகத்தில் எங்கள் தலைவர் ஸ்டாலின் கறுப்புக் கொடி ஏற்றியுள்ளார்" என்று சொல்ல, அதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா, "நீங்கள் கறுப்புக் கொடியோ மஞ்சள் கொடியோ ஏற்றுங்கள். அதற்கும் இந்த அவைக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டிருக்கிறாரே?

 

பதில்: என்ன சம்பந்தமா? ஸ்டாலின் செயலை டி.ஆர். பாலு லோக் சபாவில் போற்றிப் பறை சாற்றினால், உடனே ஸ்டாலின் மனதில் டி.ஆர். பாலு பட்டொளி வீசிப் பறப்பார், அதனால் டி.ஆர். பாலுவின் பலவகையான நலன்கள் தொடர்ந்து காக்கப் படும் என்ற சம்பந்தம் ஓம் பிர்லாவுக்குத் தெரியுமா? 

 

 

5. கேள்வி: சமீபத்தில் லோக் சபாவில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "எனக்கும் பிரதமர் மோடிக்கும் மனைவிப் பிரச்சனை இல்லை" என்று பேசி அங்கு சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறாரே?

 

பதில்: சிரிப்புக்கு இடமில்லாத ஒரு விஷயம்: ராகுல் காந்தியை அவர் போக்கில் கட்சிக்குள் வளரவிட்டு, அவருடன் சேர்ந்து ஜனநாயகத்தை மிதித்து நடந்த இன்னொரு பிரச்சனை மோடிக்கு இருந்ததில்லை. அன்னைப் பிரச்சனை.

 

பகுதி 81//18.04.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr