Tuesday, 14 July 2026

கேள்வி-பதில் (14.07.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "நான் ஒரு ஹிந்து. என்னுடைய மதத்தையும் ஜாதியையும் வீட்டில் வைத்துப் பூட்டிவிட்டு, சாமானிய மனிதனாக, அனைவருக்கும் பொதுவானவனாக, உங்கள் முன்னே நிற்கிறேன். ஜாதி, மதத்தின் பெயரால் அரசியல் செய்வது என் நோக்கமல்ல" என்று 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை பொள்ளாச்சி மாநாட்டில் பேசியிருக்கிறாரே?

 

பதில்: இந்தியாவை ஒற்றை தேசமாகப் பெருவாரியான மக்கள் கருதுவதின் அடிப்படைக் காரணம், இந்தியா ஒரு ஹிந்து தேசம் என்று அவர்கள் நினைப்பதால் - நம் அரசியல் சட்டம் சொல்வதால் அல்ல. அந்தச் சிந்தனையை, ஹிந்துவாக இருக்கும் முக்கிய அரசியல் தலைவர்கள் ஏதோ ஒரு வகையில் எதிரொலிக்காவிட்டால், இந்தியா ஒரு ஹிந்து தேசமாக நீடிக்கும் வாய்ப்பு மேலும் மேலும் குறையும், அதன் தொடர்ச்சியாக இந்திய ஒருமைப்பாடும் தேயும். இன்னொன்று: ஹிந்துவாக இருக்கும் ஒரு தலைவர் - குறிப்பாக, ஒரு பிரதமரோ அல்லது முதலமைச்சரோ - தான் ஹிந்து என்பதை மக்களுக்குத் தெளிவாக உணர்த்தி, ஆனாலும் "ஜாதி, மதத்தால் அரசியல் செய்யாமல்" அனைத்து மக்களுக்கும் நல்ல நிர்வாகத்தை அளிக்க முடியும். ஒரு பிரதமராக மோடி அதைச் செய்துவருகிறார்.

 

 

2. கேள்வி: அமெரிக்காவில் நடைபெற்ற 'வீ த லீடர்ஸ்'அமைப்பின் நிகழ்ச்சியில் ஜூலை 6-ம் தேதி பேசிய அண்ணாமலை, "தவெக அரசு தமிழகத்தில் புதிய அரசு. ஒரு பொலிடிகல் டிசிப்ளின் என்பதாக நாம் அதற்கு ஒரு வருட காலம் சப்போர்ட் கொடுப்போம். எக்கிப் பண்ணுவோம். பெட்டர்-ஆ பெர்பார்ம் பண்ணட்டும். தவெக அரசு தமிழ்நாட்டுக்கு நல்லது பண்ணினா அதை முதல் ஆளாக நின்று வரவேற்கப் போறோம்" என்று பேசி இருக்கிறார். இது அவருடைய விசாலமான பார்வை தானே?

 

பதில்: ஆறு நாட்கள் கழித்துப் பொள்ளாச்சியில் ஜூலை 12-ம் தேதி நடைபெற்ற அந்த அமைப்பின் மாநாட்டில் அண்ணாமலை பேசினார். அப்போது, "தமிழகத்தில் 2031-ல் மிகப் பெரிய ஆட்சி மாற்றம் ஏற்படும். 2026-ல் நடந்த மாதிரி, 2031-லும் 39 வயதுக்குக் கீழே உள்ள இளைஞர்கள் ஆட்சி மாற்றத்தைச் செய்து காட்டுவார்கள்" என்று அண்ணாமலை பேசியதைக் கேட்டபோது இரு கைகளால் பிடித்து, என் சுற்றிய தலையை நிறுத்தினேன்.

 

 

3. கேள்வி: மோடி, அமித் ஷாவைத் தலைவர்களாகக் கொண்ட பாஜக-விலிருந்து விலகி - அதிலும் அவர்கள் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சராக இந்தியாவைத் திறம்பட நிர்வகிக்கையில் பாஜக-வை விட்டுவிட்டு - அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கப் போவதன் உண்மையான காரணம் என்ன?

 

பதில்: அது அண்ணாமலைக்கு மட்டும் தெரியும். வெளியில் அவர் தெரிவித்த காரணங்கள் எடுபடவில்லை.

 

ஒரு ஊகம் இது. மோடி முதலமைச்சராக இருந்து குஜராத்தை மேம்படுத்திய மாதிரி, அண்ணாமலை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்து, லஞ்ச ஊழலற்ற திறமையான ஆட்சியைக் கொடுத்து, இந்த மாநிலத்தை முன்னேற்ற விரும்பி இருக்கலாம். அதற்கான நெஞ்சுரமும் திறமையும் அர்ப்பணிப்பும் அவரிடம் உண்டு. ஆனால் தமிழகத்தில் பாஜக தனியாகவோ, அக்கட்சி தலைமை தாங்கும் கூட்டணியாகவோ, தேர்தலில் மெஜாரிட்டி எம்.எல்.ஏ தொகுதிகளை வென்றாலும் அப்போதைய மத்திய பாஜக - அது எந்த வருடம், அந்த நேரத்தில் அங்கே யார் முக்கியத் தலைவர்களாக இருப்பார்கள் என்பதும் இப்போது தெரியாது - அண்ணாமலையை முதலமைச்சர் ஆக்கும் என்ற நிச்சய உணர்வு அவருக்கு இல்லாமல் போகலாம். ஆகையால் அவர் தனிக்கட்சி ஆரம்பிக்க நினைத்திருக்கலாம்.

 

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

 

இன்னொரு புறத்தில், திமுக மற்றும் அதிமுக-வை எதிர்த்து, பாஜக-வையும் எதிர்த்து, 2026 தேர்தலில் தனியாகப் போட்டியிட்டு ஜெயித்து முதல்வரான விஜய் அவரது சினிமா வழி ஈர்ப்பால் சாதாரண மக்கள் பலரையும் தனது தவெக-வின் வாக்காளர்களாக மாற்றி இருக்கிறார். திமுக, அதிமுக (அல்லது அந்த இரு கட்சிகளின் கூட்டணி), பாஜக, அண்ணாமலை கட்சி, தவெக + காங்கிரஸ் ஆகியவை தேர்தலில் பிரிந்து போட்டியிட்டால் 2031-ல் அண்ணாமலை ஆட்சிக்கு வருவது மிகக் கடினம்.

 

 

4. கேள்வி: அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா? சுருக்கமாகப் பதில் சொல்லவும்.

 

பதில்: வேண்டும். அந்தப் பதவிக்கு அவர் மிகப் பொருத்தமானவர். ஆனால் அதன்பொருட்டு அவர் போகும் வழி, தேர்தலில் அவர் கட்சியோ அதன் கூட்டணியோ அவர் முதலமைச்சர் ஆகும் அளவுக்கு வெல்ல உதவுமா என்பது யாருக்கும் தெரியாது. இந்த நிச்சயமின்மைக்கு ஒரு முக்கிய காரணம், சென்ற தேர்தலில் விஜய் கட்சி தனித்து நின்று பெற்ற மகத்தான வெற்றி.

 


5. கேள்வி: 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் பொள்ளாச்சி மாநாட்டு மேடைக்கு வந்த அண்ணாமலை, அந்த மேடையிலேயே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து பார்வையாளர்களை வணங்கினாரே?

 

பதில்: தமிழக மக்கள் புரிந்துகொள்ளும் ஒரு மொழியை அவர் மோடியிடம் கற்றிருக்கலாம்!


பகுதி 113 // 14.07.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

கேள்வி-பதில் (11.07.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "உங்ககிட்ட யாராவது லஞ்சம் கேட்டா, குடுக்க முடியாதுன்னு சொல்லிடுங்க. நான் இருக்கேன் உங்களோட" என்று அண்மையில் முதலமைச்சர் விஜய் கரூர் கூட்டத்தில் பேசி இருக்கிறாரே?

 

பதில்: விஜய் என்ன பேசினாலும், அரசு வேலைகளுக்காக லஞ்சம் கேட்கிறவர்களின் முகத்துக்கு நேராகச் சாதாரண மக்கள் அனைவரும் "தரமுடியாது" என்று சொல்வது எளிதல்ல. இருந்தாலும் விஜய்யின் பேச்சால், அவர் முதலமைச்சராக இருக்கும் காலத்தில் லஞ்சம் கேட்கிறவர்களின் எண்ணிக்கை குறையும், விடாப்பிடியாகக் கேட்கிறவர்கள் எதிர்பார்க்கும் தொகை குறையும். லஞ்சத்தைக் கட்டுப்படுத்த விஜய்யின் பேச்சு ஒரு நல்ல முனைப்பு.

 

முந்தைய முதலமைச்சர்களில் குறிப்பாக சிலர் லஞ்சத்தைத் தீர்க்கமாக எதிர்த்ததில்லை, கண்டித்துப் பேசியதில்லை. காரணம் அவர்களுக்கே தெரியும். நமக்கும் தெரியும்.

 

 

2. கேள்வி: "விஜய் அரசியலிலும் ஆட்சியிலும் புதியவர். எனவே, அவருக்குக் குறைந்தது ஓராண்டு காலம் ஆட்சி நடத்துவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும். அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பது அவசியம் என்றாலும், அது ஆக்கபூர்வமான விமர்சனமாக இருக்க வேண்டும். புதிய அரசு செயல்படத் தேவையான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்" என்று அண்ணாமலை கூறி இருக்கிறார். இது சரியா?

 

பதில்: ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்தில், ஆளும் கட்சியின் மீது எதிர்க்கட்சிகளோ அரசியல் விமர்சகர்களோ வைக்கும் விமர்சனம் எப்போதும் ஆக்கபூர்வமாக இருக்கவேண்டும். அநாகரிகமாக, அல்லது வெறும் காழ்ப்பில், யாரும் ஒரு அரசை விமர்சனம் செய்வது சரியல்ல -  ஆட்சி செய்பவர் அண்மையில் அரசியலுக்கு வந்தவரோ அல்லது அவர் பல வருடங்கள் அரசியலில் குப்பை கொட்டியவரோ.

 

அரசியலுக்கு விஜய் புதியவர், அவர் ஒரு புதிய அரசின் முதலமைச்சர், என்றாலும் அவர் அரசு எடுத்திருக்கும் சில நல்ல முடிவுகளைப் பலரும் பாராட்டுகின்றனர். பொருத்தமான இந்தப் பாராட்டை, யாரும் ஒரு வருடம் தள்ளிப் போடக் கூடாது. அதைப் போல, பொதுநலனைப் பாதிக்கும் ஒரு தவறான செய்கையை அவர் அரசு செய்தால், அதற்கான விமர்சனமும் அவரை நோக்கி உடனே வரவேண்டும்.

 

இதுபோக, விஜய் அரசியலுக்குப் புதியவரானாலும் ஆள் கெட்டியாகத் தெரிகிறார். எந்த மோசமான அல்லது காட்டமான விமர்சனத்தாலும் அவர் துவண்டுவிடுவார் என்று தோன்றவில்லை. மற்றபடி விஜய் அரசு தொடர்ந்து மதிப்பிடப் படும்.

 

 

3. கேள்வி: 2026 தேர்தலுக்கு முன் விஜய் கலந்துகொண்ட கரூர் கூட்ட நெரிசலில் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினர் 31 பேருக்கு, அரசுப் பணி வழங்கி இருக்கிறார் முதல்வர் விஜய். இதில் தவறு இருக்கிறதா?

 

பதில்: கரூர் சம்பவத்தில் இறந்தவர்களுக்கு அது ஒரு விபத்து.  அது தவிர்க்கப் பட்டிருக்கலாமா என்ற கேள்வி வேறு விஷயம்.

 

கரூர் சோகம் தொடர்பான குடும்பத்தினருக்கு நல்ல இழப்புத் தொகையை விஜய்யே தனிப்பட்ட முறையில், அல்லது அவர் கட்சி வழியாக, அளித்திருக்கிறார் - அதை நாம் குறை சொல்லமுடியாது. ஆனால் விஜய் அந்தக் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதன் மூலம், அரசு செலவில் தன் அரசியல் நலனைப் பூர்த்தி செய்திருக்கிறார் என்று அர்த்தம். சட்டம் என்ன சொன்னாலும் அவர் செய்திருப்பது அதிகார துஷ்பிரயோகம்.

 

அன்று விஜய் வந்து சேர்வதற்கு முன்பே கரூர் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்த நிலையை அறிந்த போலீஸ், "கடைசி நேரத்தில் என்னைக் கூட்டத்திற்கு வரவேண்டாம் என்று எச்சரித்திருக்கலாம், அல்லது அவர்களாகவே அந்தக் கூட்டத்தை ரத்து செய்திருக்கலாம்" என்றும் விஜய் இப்போது பேசி இருக்கிறார். அதாவது, அரசு ஊழியர்களான போலீஸ் அதிகாரிகள் அன்று விழிப்புடன் செயல்படாததால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இன்று அரசு வேலை தருகிறோம் என்று அவர் உணர்த்துகிறார். இந்த நியாயம் எடுபடாது.

 

போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள், மின்வாரிய ஊழியர்கள் ஆகியோரின் அஜாக்கிரதையால் மரணிக்கும் குடும்பத்தினருக்கு அரசு வேலை கிடைக்கிறதா? டாஸ்மாக்கில் மது விற்பனை செய்து பல சாதாரணக் குடும்பங்களின் வாழ்வைச் சீரழிக்கும் அரசு, அந்தக் குடும்பத்தினருக்கு ஏதாவது செய்கிறதா?  சாலையைச் சரியாகப் போடாமல், அல்லது பராமரிக்காமல், இருக்கும் உள்ளாட்சிகளின் அலட்சியத்தால் விபத்துகள் நேர்ந்து உயிர்ப்பலி தரும் குடும்பத்தினருக்கு அரசு வேலைகள் கிடைப்பதில்லை.  விஜய் இப்போது செய்தது தவறு.

 

 

4. கேள்வி: "அதிமுக-விலேயே இருக்கவேண்டும் என நினைக்கும் தொண்டர்களைத் தவெக-வினர் மனமாற்றம் செய்யவேண்டாம்" என்று புதுச்சேரி அதிமுக நிர்வாகி அன்பழகன் பொதுமேடையிலிருந்து வேண்டுகோள் விடுத்திருக்கிறாரே?

 

பதில்: இந்த பயந்தாங்கொள்ளிப் பேச்சைக் கேட்ட பிறகும், அதிமுக-வில் தாமாக நீடிக்க விரும்பும் தொண்டர்களைத் தவெக-வினர் மனமாற்றம் செய்ய முடியாது. அந்த அதிமுக நிர்வாகி நிம்மதி கொள்ளலாம்.

 


5. கேள்வி: "திமுக தோற்றுவிட்டதே என்பது ஒரு கவலை. அதைவிட, கண்முன்னே அதிமுக சிதைவது ஒரு கவலை" என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறி இருக்கிறாரே?

 

பதில்: திமுக, அதிமுக, இரு கட்சிகளையும் 2026 சட்டசபைத் தேர்தலில் வீழ்த்திய தவெக, விஜய் தலைமையில் ஆட்சி அமைத்திருக்கிறது; அந்த விஜய்யின் அமைச்சரவையில் ஒரு விசிக பிரதிநிதி அமைச்சராகி இருக்கிறார்; அந்த விசிக-வின் தலைவர் திருமாவளவன், தவெக-வின் வெற்றியை மனமுவந்து போற்றவில்லை; திமுக தோல்வியடைந்தது, அதிமுக கரைந்து வருவது, பற்றி அவர் மனமுடைந்து கவலை தெரிவிக்கிறார். எல்லாவற்றையும் விட நமக்குக் கவலை தருவது, திருமாவளவனிடம் அதிகரிக்கும் மனக் குழப்பம்.


பகுதி 112 // 11.07.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

Thursday, 9 July 2026

கேள்வி-பதில் (09.07.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "மாணவர்கள் நல்ல அரசியலைப் பழகவேண்டும். நல்ல அரசியல்வாதியின் பின்னால் செல்லவேண்டும்" என்று கமல் ஹாசன் பேசி இருக்கிறாரே?

 

பதில்: 2026 சட்டசபைத் தேர்தல் நடக்கும் முன்னர், திமுக கூட்டணி ஜெயித்து மு.க. ஸ்டாலின் மறுபடியும் முதல்வர் ஆவதற்குத் தனது மக்கள் நீதி மய்யம் பணியாற்றும் எனப் பேசினார் கமல் ஹாசன். திமுக அந்தத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்து, தவெக தலைவர் விஜய் முதல்வரானவுடன் புதிய முதல்வரை விரைவாகச் சந்தித்து வாழ்த்தினார் கமல் ஹாசன். அதன் மூலம் கமல் இனி திமுக-வின் பக்கம் சாய்ந்திருக்கவில்லை என்று சூசமாக உணர்த்தி, இனி அவரது அரசியல் சாய்மானம் எந்தப் பக்கம் என்பதையும் தற்போது அவர் ரகசியமாக வைத்திருக்கிறார்.

 

கமல் ஹாசன் குறிப்பிடும் நல்ல அரசியல்வாதி யார் என்று மாணவர்கள் குழம்புவார்கள். கமல் ஹாசனின் அரசியல் கருத்துகளைக் கேட்கும் மாணவர்களுக்கு அரசியல் புரியாது, கமல் ஹாசனையும் தெரியாது என்று அர்த்தம்.

 

 

2. கேள்வி: "காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு முன் தவெக-வுடன் கூட்டணி அமைக்காததற்கு, கட்சிக்குள் இருந்த குள்ளநரிகள் தான் காரணம்" என்று அந்தக் கட்சியைச் சார்ந்த மாநில அமைச்சர் விஸ்வநாதன் கருத்து சொல்லி இருக்கிறாரே?

 

பதில்: உண்மையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைப் பற்றி அமைச்சர் விஸ்வநாதன் ஏதோ சொல்ல வருகிறார்.

 

தனது கட்சிக்குள் இருக்கும் குள்ளநரிகளை அடையாளம் கண்டு அவர்களை ஒதுக்கிவைக்கத் தெரியாத ராகுல் காந்தி, காங்கிரஸை எதிர்க்கும் பாஜக-வில் உள்ள குள்ளநரிகளை எப்படி அடையாளம் காணுவார், எப்படி சமாளிப்பார், அவர்களை எப்படி ஜெயிப்பார்? காங்கிரஸ் கட்சிக்குள் சர்வ வல்லமை படைத்த ராகுல் காந்தியின் இயலாமையை விஸ்வநாதன் இவ்வளவு அப்பட்டமாகக் கேலி செய்யவேண்டாம்.

 

 

3. கேள்வி: 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை, "50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்தவுடன் மக்களிடம் நாம் அரசியலுக்கு வரவேண்டுமா என கருத்துக் கேட்கவுள்ளோம். அதன்பிறகே அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்" என்று அறிவித்துள்ளார். இதை எப்படிப் புரிந்து கொள்வது?

 

பதில்: 2020-ம் ஆண்டு பாஜக-வில் அண்ணாமலை உறுப்பினராகித் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு முன் அவர் எத்தனை நபர்களிடம் கருத்து கேட்டு முடிவெடுத்திருப்பார்? பத்து இருபது பேர் இருக்கலாம். 2021-ல் பாஜக-வின் மத்தியத் தலைமை, கட்சிக்குப் புதியவரான அண்ணாமலையைத் தமிழக பாஜக-வின் தலைவராக நியமனம் செய்தபோது, அந்த முக்கிய முடிவை எடுக்க எத்தனை நபர்கள் கலந்து ஆலோசித்திருப்பார்கள்? மூன்று நான்கு பேர் இருக்கலாம். ஆனால் இப்போது அண்ணாமலை அரசியல் கட்சி தொடங்கலாமா என்பதற்கான தீவிர ஆலோசனை நடைபெறவே, அவரது வீ த லீடர்ஸ் இயக்கத்தில் குறைந்தது 50 லட்சம் உறுப்பினர்கள் இணையவேண்டுமா? 

 

வீ த லீடர்ஸ் இயக்கத்தில் இதுவரை இணைந்ததாகச் சொல்லப்படும் 19 லட்சம் நபர்கள் இப்படி நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று அண்ணாமலை எதிர்பார்க்கிறாரா?:  'அண்ணாமலை தொடங்கக் கூடிய அரசியல் கட்சியின் தொண்டர்களாக அல்லது அக்கட்சியின் மூன்றாம் கட்ட, இரண்டாம் கட்ட, முதல் கட்ட அரசியல் தலைவர்களாக நாம் உருவாகிச் செயல்படுவோமா என்பது பற்றி இப்போது நமக்குத் தெரியவில்லை. இருந்தாலும் வெறுமனே வீ த லீடர்ஸ் உறுப்பினர் அட்டையைப் பைக்குள் வைத்தபடி இருப்போம். 50 லட்சம் உறுப்பினர்களை அண்ணாமலையின் இயக்கம் எட்டுமா என்பதும் நமக்கு உறுதியாகத் தெரியாது. 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தால் அதன் பிறகு அவரது இயக்கம் அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தை அண்ணாமலை குறிப்பிடும் 'மக்கள்' வெளிப்படுத்துவார்களா என்பதும் நமக்குத் தெரியாது. ஒன்றுமே நிச்சயம் இல்லாவிட்டாலும் அண்ணாமலையின் கீழ் அரசியலில் ஈடுபடுவது குறித்து  நாம் சிவனே என்றிருப்போம். எல்லாம் ஈசன் செயல்'

 

பாஜக-வில் அண்ணாமலை இருந்தபோது அவருடைய பேச்சுகளில் புத்திசாலித்தனம் இருந்தது, தெளிவும் இருந்தது. தற்போது அவரிடம் புத்திசாலித்தனம் மட்டும் தூக்கலாகத் தெரிகிறது.

 

 

4. கேள்வி: "தவெக ஆட்சியில் பங்கெடுத்த போதிலும், திமுக-வுடன் நட்பு தொடர்கிறது" என்று விசிக தலைவர் திருமாவளவன் கூற, அதை விமர்சித்த வைகோ, "அது நோபல் பரிசு பெறவேண்டிய கருத்து" என்று கூறி இருக்கிறார். திருமா பேசியது சரியா அல்லது வைகோவின் கிண்டல் சரியா?

 

பதில்: சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின் போது, திமுக-வைத் தனது அரசியல் எதிரி, திமுக ஒரு தீய சக்தி என்று சொன்னவர் விஜய். அந்த விஜய்யின் தலைமையில் இன்று தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது. அவருடைய அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் விசிக-வின் தலைவர் திருமாவளவன், "திமுக-வுடன் நட்பு தொடர்கிறது" என்று பேசுவதை விஜய் உள்ளூர ஏற்க மாட்டார், திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டா வெறுப்பாக, ஒரு அரசியல் கட்சியின் தலைவருடைய நட்பாவது இன்று கிடைக்கிறதே என்று சந்தேகத்துடன் ஏற்பார்.  திருமாவளவன் வழக்கம் போல் எதையும் எப்போதும் தடம் புரண்டு பேசலாம்.

 

வைகோவைப் பொறுத்தவரை, தவெக தலைமையிலான கூட்டணியில் அவர் கட்சியும் இணைந்த நிலையில், அதே கூட்டணியில் உள்ள இன்னொரு கட்சியின் தலைவரான திருமாவளவனைப் பொதுவெளியில் கிண்டல் செய்யாமல் இருப்பது நல்லது. ஒருவேளை, விஜய் ரசிக்க முடியாத திருமாவளவன் கருத்துக்காக அவரை ஒரு இடி இடித்தால், விஜய்க்கு அருகில் நைசாக நகரலாம் என்று வைகோ நினைக்கிறாரோ?

 


5. கேள்வி: "அதிமுக-வை நிர்மூலமாக்க சிலர் முயற்சிக்கிறார்கள்" என்று அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறாரே?

 

பதில்: அந்த வேலையில் அவருக்குப் போட்டியாக இன்னொரு மனிதரா!


பகுதி 111 // 09.07.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com