|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: "அதிமுக-வை பாஜக கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கும், அதை எடப்பாடி
பழனிசாமி உணரவில்லை" என்று சொல்லி, திமுக தலைவர் ஸ்டாலின்
அதிமுக-வை அவ்வப்போது எச்சரிக்கிறார். இந்த எச்சரிக்கையில் சாரம் இருக்கிறதா? பதில்: 'தமிழகத்தில் அதிமுக-வுக்கு இணையாக, அதையும் தாண்டி, பாஜக
மக்கள் மத்தியில் வளர்வது சாத்தியம்' என்று
ஸ்டாலின் சொல்ல வந்தால், அதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால்
ஸ்டாலினின் கவலையும் உள்ளர்த்தமும் வேறு. திமுக-வுக்கு, தனது முக்கிய எதிரியாக அதிமுக-வை
சமாளிப்பது எளிது, ஆனால் வளர்ந்து எழுந்த பாஜக-வை
சமாளிப்பது கடினம். காரணங்கள் இரண்டு: ஒன்று, எம்.ஜி.ஆர் ஜெயலலிதா இல்லாத அதிமுக-வும், கருணாநிதி இல்லாத திமுக-வும் தங்களுக்குள் ஜென்ம
எதிரிகள் என்பதை விட, அரசாங்கத்தின் பலன்களுக்கு ஆசைப்படும்
போட்டிக் கட்சிகளாக மட்டும் இருக்கிறார்கள். இந்த நிலையில், அதிமுக-விலிருந்து பல தலைவர்கள் திமுக-வுக்குத் தாவி
அதிமுக-வை நலிவுறச் செய்யலாம்; ஆனால்
பாஜக-விலிருந்து முக்கியத் தலைவர்கள் திமுக-வுக்குச் செல்ல மாட்டார்கள், அந்த வகையில் பாஜக நலிவுறாது; இரண்டு, அகில இந்திய அளவில் மிகப் பெரிய
கட்சியான பாஜக, காத்திருந்து காத்திருந்து தமிழகத்தில்
தனது செல்வாக்கை அதிகரிக்கும், ஹிந்து
உணர்வுகளை ஒருங்கிணைத்து ஈர்க்கும், எதிர்காலத்தில்
அந்தக் கட்சி அதிமுக-வை விடவும் பெரிதாக வளரலாம். அதன் விளைவாக, பாஜக தமிழகத்தில் திமுக-வின் பிரதான எதிரியாக
உருவாகலாம், இறுதியில் பாஜக-வினால் திமுக
நலிவடையலாம் - இப்படியான அச்சம் ஸ்டாலினுக்கு இருக்கும். பாஜக-வின் மீதான இந்த அச்சத்தை நேரடியாக வெளிப்படுத்தாமல், பாஜக அதிமுக-வை விழுங்கிவிடும் என்று அதிமுக-வின்
வலிமைக்கும் வளர்ச்சிக்கும் அக்கறை காட்டுகிற மாதிரிப் பேசுகிறார் ஸ்டாலின்.
அவர் தன் அச்சத்தை மறைக்கப் பார்க்கலாம், ஆனால்
களைய முடியாது. |
|
2. கேள்வி: "நீ எனக்கு ஓட்டுப் போட்டா போடு. இல்லைன்னா போ.
உடம்புல தெம்பு இருக்கற வரை இதே இடத்துல நின்னு கத்திக் கத்தி செத்துக்கூட
போவேன். ஆனா சீட்டுக்கும் நோட்டுக்கும் யார் கிட்டயும் கை கட்ட மாட்டேன்"
என்று தனது தேர்தல் பிரசாரத்தின் போது நா.த.க தலைவர் சீமான் பேசி
இருக்கிறாரே" பதில்: பொதுவாழ்வில் வாயால் வளர்ந்தவர்கள் உண்டு, வளரவே முடியாமல் வாயால் கெட்டவர்கள் உண்டு.
வாயால் மட்டும் ஓரளவு வளர்ந்து, பிறகு வாயால் கெட்டவர் சீமான். |
|
3. கேள்வி: "தமிழக காங்கிரஸை ஸ்டாலின் சார் தன் பைக்குள்
போட்டுக்கொண்டு விட்டார். ஆனால் உண்மையான காங்கிரஸ் தவெக பக்கம் உள்ளது"
என்று விஜய் பேசி இருக்கிறாரே? பதில்: காங்கிரஸ்
கட்சி பற்றி விஜய் குழப்பத்துடன் பேசுகிறார். தற்காலத்தில் காங்கிரஸ் இருக்கிறது, உண்மையான காங்கிரஸ் இல்லை. |
|
4. கேள்வி: தமிழக அரசியல் சூழ்நிலையில், "இளைஞர்கள் பலர்
நடிகர்களின் பின்னால் செல்கிறார்களே?" என்று நிருபர்கள் கேட்டதற்குப் பதில் சொன்ன
ரஜினிகாந்த், "படிக்கிற வயதில், இளைஞர்கள்
முதலில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். அந்த நேரத்தை விட்டுவிட்டால், அவர்கள்
வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட வேண்டிய நிலை ஏற்படும்" என்று கூறி
இருக்கிறார். வேறு எந்த நடிகராவது இப்படிச் சொல்வாரா? பதில்: தமிழகத்தில் சினிமாவின் சக்தி, குறிப்பாக நடிகர்களின் ஈர்ப்பு, பல இளைஞர்களைத் தொடர்ந்து திசை
திருப்புகிறது, அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கிறது. இது வருத்தமான விஷயம். இந்த
நிலையில், தன் பின்னால் வந்த, வருகிற, இளைஞர்களுக்கும் சேர்த்துதான் ரஜினிகாந்தின் சொற்கள் பொருந்தும். ரஜினிகாந்த் கூறியது சாதாரண உண்மையாகத்
தோன்றலாம், ஆனால் ஒரு பிரபல நடிகராக இதைச் சொல்ல நேர்மையும், நல்லெண்ணமும் பெருந்தன்மையும் வேண்டும்.
இது பெரிய விஷயம். |
|
5. கேள்வி: திருவண்ணாமலையில் தேர்தல் பிரசாரம் செய்த திமுக
தலைவர் ஸ்டாலின், "திருவண்ணாமலையிலிருந்து
தீபத்தை மட்டுமல்ல, திமுக-வையும்
பிரிக்க முடியாது" என்று பேசி இருக்கிறாரே? பதில்: இது
ஸ்டாலினின் திராவிட மாடல் பகுத்தறிவு. பெரியார் பொன்மொழி பாணியில் இதற்கான
விளக்கம்: தீபத்தைக் கற்பித்தவன் அறிவாளி! தீபத்தை வணங்குபவன் நவநாகரிக மனிதன்! தீபத்தைப் பரப்புகிறவன் யோக்கிய சிகாமணி! |
|
பகுதி 78// 09.04.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
Saying As I Feel ~ உறைத்ததும் உரைப்பதும்
Thursday, 9 April 2026
கேள்வி-பதில் (09.04.2026)
Sunday, 5 April 2026
கேள்வி-பதில் (05.04.2026)
|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: "திமுக-வை ஆட்சியிலிருந்து அகற்றத் தமிழகம்
எங்கும் பிரசாரம் செய்வதற்கு வசதியாக, வரும் சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை"
என்று பாஜக தலைவர் அண்ணாமலை சொல்கிறார். அதுபோல் "திமுக-வை மீண்டும்
ஆட்சியில் அமர்த்துவதற்குப் பிரசாரம் செய்வதற்காக நான் தேர்தலில்
போட்டியிடவில்லை" என்று ஏன் உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கவில்லை? பதில்: தமிழகத்தில்
பாஜக-வுக்காக ஓட்டு ஈர்க்கும் சக்தி, பாதிக்கு
மேல் அண்ணாமலையின் தனிப்பட்ட மக்கள் செல்வாக்கிலிருந்து கிடைக்கிறது. ஆகவே அவர்
தேர்தலில் போட்டியிடாமல் பல இடங்களுக்கும் சென்று பிரசாரம் செய்வது பலன்
அளிக்கும். திமுக-வின் ஓட்டு ஈர்க்கும் சக்தி, அக்
கட்சியில் அண்ணா ஆரம்பித்து கருணாநிதி வளர்த்த கட்சிக் கட்டமைப்பிலிருந்து
கிடைக்கிறது. அத்துடன் திமுக-வின்
தலைமைக்கும் கட்சியின் மற்ற தலைவர்களுக்கும் இடையே கருணாநிதி தொடங்கிவைத்து, ஸ்டாலின் விரிவாக்கிய, 'ஒண்ணுக்குள்ள ஒண்ணு' பிணைப்பிலிருந்து அதிகம் கிடைக்கிறது. உதயநிதிக்கு, அவர் தந்தை ஸ்டாலினுக்கு, தனிப்பட்ட மக்கள் செல்வாக்கு என்று பெரிதாக இல்லை.
ஆகையால் உதயநிதி தேர்தலில் போட்டியிடாமல் பிரசாரம் செய்வதால் திமுக-வுக்குப்
பலன் இருக்காது. இன்னொன்று. திமுக ஆட்சிக்கு வந்து உதயநிதி அமைச்சர் ஆகவில்லை என்றால், ஒரு மாபெரும் நஷ்டத்தை யார் ஈடு செய்வது? |
|
2. கேள்வி: "தமிழகத்தில் என்.டி.ஏ ஆட்சி வந்தால், நமது
மாநிலத்தின் பெயரை 'தட்சிண பிரதேஷ்' என்று மாற்றவும்
அவர்கள் தயங்க மாட்டார்கள்" என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசி இருக்கிறாரே? பதில்: அந்த அந்தப் பிரதேச மக்களுக்கு அவரவர்
தாய்மொழியின் மீது உணர்வுபூர்வமான அபிமானம் இருக்கும். 'தமிழ்நாடு' என்ற பெயரில் உள்ள 'தமிழ்' என்ற சொல்லை நீக்கிவிட்டு, நமது மாநிலத்துக்கு வேறு பெயர் வைக்க எந்த
அரசியல் கட்சியும் நினைத்துப் பார்க்காது, திமுக-வைத் தவிர. அந்தக் கட்சி நமது
மாநிலத்துக்கு ஒரு புதிய பெயரை ஆசையுடன் கற்பனை செய்து பார்க்கலாம், தனது ஆரம்பகாலக் கனவில். திராவிட நாடு. |
|
3. கேள்வி: "இள வயதில் நான் தலைச் சுமையாக கத்தரிக்காய்
சுமந்து விற்றவன்" என அமைச்சர் துரைமுருகன் தனது தொகுதி மக்களிடம்
உருக்கமாகத் தெரிவித்துள்ளாரே? பதில்: துரைமுருகன்
இப்போது மு. க. ஸ்டாலினையும் உதயநிதியையும் சுமக்கிறார். சொத்தைக் கத்தரிக்காய். |
|
4. கேள்வி: ஈரானுடனான போர் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்
தினம் தினம் மாறுபாடான கருத்துகள் கூறி வருவதைக் குறிப்பிட்ட பிரெஞ்சு அதிபர்
மேக்ரான், "நீங்கள் தினம்
தினம் பேச வேண்டியதில்லை" என்று டிரம்புக்கு அறிவுரை சொல்லியிருக்கிறாரே? பதில்: டிரம்புக்கான அறிவுரை சரிதான். அதில் 'தினம் தினம்' என்ற வார்த்தையை மேக்ரான் தவிர்த்திருக்கலாம். |
|
5. கேள்வி: திமுக கூட்டணியில் வைகோ-வின் மறுமலர்ச்சி
திமுக-வுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, அதில் மூன்று தொகுதிகளில்
திமுக-வின் உதயசூரியன் சின்னத்தில் மறுமலர்ச்சி திமுக போட்டியிடும், ஒரு தொகுதியில்
தனது சின்னத்தில் அக்கட்சி போட்டியிடும் என்று ஒப்பந்தம் ஆனது. ஆனால் திடீரென்று, நான்கு
தொகுதிகளிலுமே மறுமலர்ச்சி திமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்று
வைகோ அறிவிக்க, அந்த முடிவைத்
திமுக தலைவர் ஸ்டாலினும் வரவேற்றிருக்கிறாரே? பதில்: திமுக-வுடன்
பின்னிப் பிணைந்துவிட்ட வைகோ, தன் கட்சியின்
பெயரை மாற்றி வைக்கலாம். மறுசுழற்சி திமுக. |
|
பகுதி 77 // 05.04.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
கேள்வி-பதில் (04.04.2026)
|
கேள்வி-பதில் |
|
கேள்வி: வரும் சட்டசபைத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில்
உள்ள பாஜக, 27 தொகுதிகளில்
போட்டியிடுகிறது. பாஜக வேட்பாளர்களில்
அண்ணாமலையின் பெயர் இல்லை என்பது அவரின் பதில்: இந்தத்
தேர்தலில் அண்ணாமலை போட்டியிட விரும்பவில்லை என்று அவர் ஏற்கனவே பாஜக-வின்
தலைமைக்குத் தெரியப்படுத்தி விட்டதாக அவரே தெரிவித்திருக்கிறார். அந்தக் கூற்றை
நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அண்ணாமலை எப்படி விருப்பப் பட்டாலும், பாஜக-வின்
மத்தியத் தலைமை அதை உதாசீனம் செய்து ஏன் அவரைப் போட்டியிடுமாறு
நிர்பந்திக்கவில்லை? ஏனென்றால், அண்ணாமலை மீது, பாஜக-வின்
மத்தியத் தலைமை பெரு மதிப்பு வைத்திருக்கிறது. அதற்கு ஒரே காரணம்: அவர்
தமிழகத்தில் பரவலான மக்கள் செல்வாக்குப் பெற்று அதன் மூலம் கட்சிக்கு வலிமை
சேர்க்கிறார்; இப்போதும் அவர் தேர்தலில் போட்டியிடாமல்
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்காகத் தமிழகம் முழுவதும் பணியாற்றப்
போவதாகச் சொல்லியிருக்கிறார்; தேர்தலில்
போட்டியிடாமல் அவர் அந்தப் பணியை அதிகம் செய்ய முடியும்; அதுவும் பாஜக-வுக்கு நன்மை செய்யும், அதிமுக கூட்டணிக்கும் உதவும். தான் போட்டியிட விரும்பவில்லை என்று சொல்லிவிட்டு, அண்ணாமலை மாதிரி மக்கள் செல்வாக்குள்ள ஒரு தலைவர், தேர்தல் பணியில் ஈடுபடாமல் இருந்தால்தான் அது பாஜக
வேட்பாளர்களுக்கு உதவாது, அந்த நிலை கட்சிக்கும் நல்லதல்ல. ஆனால் நடப்பது வேறு. அண்ணாமலை போட்டியிடாவிட்டாலும், அவர்
தேர்தல் களத்தில் இருக்கப் போகிறார், தேசிய
ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்காக - குறிப்பாக பாஜக வேட்பாளர்களுக்காக -
தேர்தல் பிரசாரம் செய்யப் போகிறார் என்றால், அது
அவரின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. இதனால் கட்சியினர் மத்தியிலும் அவருடைய
அபிமானிகள் மனத்திலும் அவருடைய மதிப்பு போகப் போக உயரும். வருகின்ற சட்டசபைத் தேர்தலில் பாஜக 27
தொகுதிகளில் தான் போட்டியிடுகிறது. பாஜக பெரும்பான்மை இடங்களை வெல்வதற்கு, அல்லது அதன் அருகில் வருவதற்கு, சாத்தியமில்லாத தேர்தல் இது. இதில் அண்ணாமலை
போட்டியிடாததால், பாஜக முக்கியப் பங்கு வகிக்கப் போகும்
ஆட்சியில் பங்காற்றும் வாய்ப்பை அவர் இழக்கிறார் என்று ஆகாது. ஆகையால் இந்தத்
தேர்தலில் அவர் போட்டியிடாமல், கட்சியின்
அனைத்து வேட்பாளர்களுக்கும் - பொதுவாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு -
பாடுபட்டால் அதுவும் கட்சிக்கு நல்லதுதான். அவரே இந்தப் பெரிய பணியைத் தேர்வு
செய்ததால், கட்சியும் அதை ஏற்றுக் கொள்வதை நாம்
புரிந்து கொள்ளலாம். ஒருவேளை அதிமுக கூட்டணி வென்று, வரப்போகும்
ஆட்சியில் பாஜக-வும் பங்கேற்கும் என்றாலும், அந்த
சூழ்நிலை பற்றி இப்போது நிச்சயமாக ஒன்றும் சொல்வதற்கில்லை, அதை அப்போது பார்த்துக் கொள்ளலாம். இப்போதைய நிச்சயத்
தேவை, பாஜக வேட்பாளர்களுக்காக அண்ணாமலை பிரசாரம் செய்வது; அண்ணாமலை தேர்தலில் போட்டியிடாமல் அவர் அந்தப் பணியை
மேலும் பரவலாக, சிறப்பாக, செய்யமுடியும். அண்ணாமலை தேர்தலில் போட்டியிடவில்லை என்று தெரிய வந்ததும், அவருடைய அபிமானிகளும் ஆதரவாளர்களும் சட்டென்று
வருத்தம் கொள்ளலாம். அது இயற்கை. ஆனால் அவர் பாஜக வேட்பாளர்களுக்காகப் பிரசாரம்
செய்யும் போது, ஓட்டுக் கேட்கும் போது, அந்த மக்கள் மனமுவந்து அவ்விதம் வாக்களிப்பார்கள். ஏதோ
கோபத்தையும் வருத்தத்தையும் மனதில் கொண்டு, அண்ணாமலையின்
வேண்டுகோளையும் புறம் தள்ளி, தேர்தலில்
ஓட்டுப் போடாமல் இருப்பது, அல்லது அதிமுக கூட்டணியை எதிர்க்கும்
வேறு கட்சிக்கு வாக்களிப்பது, ஆகிய பயனற்ற
செய்கைகளை அந்த மக்கள் செய்ய மாட்டார்கள்.
ஆகையால், அண்ணாமலை போட்டியிடாததால் - அந்தக்
காரணத்தால் - அதிமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பும், பாஜக-வின் வெற்றி வாய்ப்பும்,
பாதிப்படையாது. இன்னொன்று: அண்ணாமலையின் தன்னலமற்ற செய்கையால், அவருடைய அசாதாரண அர்ப்பணிப்பால், அவர் பாஜக-வுக்குச் சில புதிய வாக்காளர்களையும்
ஈர்க்கலாம். 1963-ம் வருடம், தான் வைத்திருந்த தமிழக முதல் அமைச்சர் பதவியை விட்டு
விலகி, "நான் முழு நேர கட்சிப் பணிக்கு வருகிறேன்" என்று
சொல்லி கட்சிக்காக வேலை செய்ய வந்தார் ஒரு மக்கள் தலைவர். அவர் காமராஜ். இப்போது, "நான் தேர்தலில் போட்டியிடவில்லை, கட்சி வேட்பாளர்களுக்காக - அதோடு கூட்டணிக்காக -
பிரசாரம் செய்கிறேன்" என்று வந்திருக்கிறார் அண்ணாமலை, அவருடைய கட்சியும் அதை ஏற்றுக் கொண்டிருக்கிறது.
தொலைநோக்கில், இது நல்லது. சட்டடபைத் தேர்தல் முடிவுகள் எப்படி அமைந்தாலும், அண்ணாமலையின் எண்ணமும் செய்கையும் வியக்கத் தக்கவை.
தமிழகத்தில் மட்டுமல்ல, அகில இந்திய அளவிலும், கட்சிக்குள் அண்ணாமலையின் மதிப்பு மேலும் உயரும்.
அவருக்கு வயது நிறைய இருக்கிறது. சிந்திக்கும் திறன் இருக்கிறது. தேசப்பற்று
இருக்கிறது. தன்னலமற்ற அர்ப்பணிப்பு இருக்கிறது. கட்சியில் வேலையும் நிறைய
இருக்கிறது. மற்றவை காலப் போக்கில் தானாக நடக்கும். |
|
பகுதி 76 // 04.04.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |