Thursday, 30 April 2026

கேள்வி-பதில் (30.04.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: சட்டசபைத் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்கு நான்கு நாட்கள் இருக்கின்றன. இப்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் என்ன நினைப்பார்? திமுக கூட்டணி வெல்லும் சூழ்நிலையில், தான் தோற்றாலும் தனது மகன் உதயநிதி வெல்லட்டும் என்று நினைப்பாரா, அல்லது உதயநிதி தோற்றாலும் தான் வெல்லவேண்டும் என்று ஸ்டாலின் நினைப்பாரா?

 

பதில்: திமுக கூட்டணி வெற்றி பெறும் சூழ்நிலையில், செந்தில் பாலாஜி நிச்சயம் வெல்லட்டும் என்று ஸ்டாலின் நினைப்பார். மற்ற அனைத்தையும் நிர்வாகம் செய்துகொள்ளலாம்.

 

 

2. கேள்வி: இயக்குநர்-நடிகர் பார்த்திபன், தான் 'ஜாதி மதமற்றவர்' எனத் தாசில்தார் தனக்குச் சான்றிதழ் வழங்கவேண்டும் என்ற உத்தரவைச் சென்னை உயர் நீதிமன்றத்தில் பெற்று, அவ்வாறு ஒரு சான்றிதழையும் பெற்றிருக்கிறார். இதனால் யாருக்கு என்ன பயன்?

 

பதில்: ஒரு நடிகர் எதை எப்படிப் பேசி எவ்வாறு நடித்தால், அந்த சீனுக்குப் பொதுமக்களிடம் சிறந்த எபெக்ட் கிடைக்கும் என்று ஒரு இயக்குநருக்குத் தெரியும். ஒரே நபர் நடிகர் மற்றும் இயக்குநராக இருந்தால், கோச்சிங் இல்லாமல் காரியம் எளிதில் முடியும். நாம் நமது வேலையைப் பார்ப்போம்.

 

 

3. கேள்வி: டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் பற்றிய மேல்முறையீட்டு வழக்கை, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா விசாரிக்கக் கூடாது என்று முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அந்த நீதிபதி முன் ஒரு மனு தாக்கல் செய்ய, அந்த மனு நிராகரிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து, அந்த நீதிபதிக்குக் கடிதம் எழுதிய கெஜ்ரிவால் "டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் உங்கள் அமர்வில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை சிதைந்து விட்டது. எனவே இந்த வழக்கில் நேரடியாகவோ வழக்கறிஞர் மூலமாகவோ இனி ஆஜராக மாட்டேன்" எனத் தெரிவித்து, தனது மனு நிராகரிக்கப் பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப் போவதாகவும் அறிவித்திருக்கிறாரே?

 

பதில்: தனது கோர்ட்டில் நடக்கும் வழக்கில் கட்சிக்காரராக இருக்கும் ஒருவரின் கடிதத்திற்கு, அதுவும் அந்த வழக்கு சம்பந்தமான கடிதத்திற்கு, ஒரு கீழ்க் கோர்ட்டு நீதிபதி கூடப் பதில் எழுதக் கூடாது. ஒரு நீதிபதியும் கட்சிக்காரரும் ஒருவருக்கு ஒருவர் கடிதம் எழுதி எந்த வழக்குப் பிரச்சனைக்கும் தீர்வு காணமுடியாது, அந்தச் செய்கைக்குச் சட்டத்திலும் இடமில்லை. இது தெரிந்தும் கெஜ்ரிவால் நீதிபதிக்குக் கடிதம் எழுதியது மலிவான டிராமா.

 

இன்னொன்று. சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் செய்யப்போகும் அப்பீல் தள்ளுபடியாகி, உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மாவே டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் பற்றிய மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்கலாம், இது பற்றி கெஜ்ரிவால் எழுப்பிய ஆட்சேபணை செல்லாது, என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு போட்டால் கெஜ்ரிவால் என்ன செய்வார்? அப்படி உத்தரவளித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கும் கெஜ்ரிவால் உடனே கடிதம் எழுதித் தனது அதிருப்தியைச் சொல்வாரா?

 

முடிந்தவரை பித்தலாட்டம் செய்கிறார் கெஜ்ரிவால். அவருடைய நாடகத்தின் முடிவு என்னவாக இருந்தாலும் அவர் ஆடுவது பித்தலாட்டம்.

 

 

4. கேள்வி: ராகுல் காந்தி அல்ல, நரேந்திர மோடிதான் இந்தியாவின் பிரதமராக இருப்பதற்குக் தகுதியானவர் என்பது தனது தேர்வு என்பதாக, 'க்ராக்' என்ற ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பச் செயலி சொல்லி இருக்கிறதே?

 

பதில்: இந்த ஒண்ணாம் கிளாஸ் நிதர்சனம் ராகுல் காந்திக்கே தெரியும். அதை ஒப்புக் கொண்டால் அரசியலில் குப்பை கொட்ட முடியாது என்பதால், வெளியில் மாறுதலாக நடிக்க முயல்கிறார் ராகுல். ஆனாலும் பித்துக்குளித் தோற்றம் அவரிடம் பளிச்சிடுகிறது.

 

 

5. கேள்வி: மஹாராஷ்டிராவைச் சேர்ந்த 90 வயதுப் பெண், அவர் தொடர்ந்த ஒரு அவதூறு வழக்கில் தொடர்ந்து பிடிவாதம் காட்டுகிறார் என்ற அடிப்படையில், 'இது அகங்காரங்களின் மோதல்' எனக் கூறிய மும்பை உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை 20 ஆண்டுகளுக்குப் பின் 2046-ம் வருடத்திற்கு ஒத்திவைத்திருக்கிறதே?

 

பதில்: யாருக்கும் எந்தவித அகங்காரமும் கூடாது.

 

பகுதி 85//30.04.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

Sunday, 26 April 2026

கேள்வி-பதில் (26.04.2026)


 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம், "மக்களுக்கு வழங்குவதை இலவசம் எனக் கூறாதீர்கள். அது 'யுனிவர்சல் பேசிக் இன்கம்'. அனைவருக்கும் அடிப்படை வருமானம் வேண்டும் என்றுதான் மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்கள் அமலில் உள்ளன" என்று தெரிவித்திருக்கிறாரே?

 

பதில்: ஒருவருக்கு உடம்பு சரியில்லை, சத்து மிகவும் குறைந்திருக்கிறது, ஒன்றிரண்டு நாட்கள் அவருக்கு ட்ரிப்ஸ் கொடுத்து விரைவாக உடம்பைத் தேற்றலாம், பிறகு நோயாளி வழக்கம் போல் உணவு சாப்பிடலாம் என்ற நோக்கில் ஒரு டாக்டர் ட்ரிப்ஸ் கொடுத்தால் புரிந்துகொள்ளலாம்.

 

வருடக்கணக்கில் ஒருவருக்கு ட்ரிப்ஸ் கொடுக்க நினைக்கும் டாக்டரைப் பற்றி ப. சிதம்பரம் இப்படிச் சொல்வாரா?  "ஒரு நோயாளிக்கு யுனிவர்சல் பேசிக் போஷாக்கு வேண்டும். அரசு செலவில் நடக்கும் அந்த ஆஸ்பத்திரியின் தலைமை டாக்டர், நோயாளிகளுக்கான உரிமை ட்ரிப்ஸ் திட்டத்தை அமல் செய்திருக்கிறார். அது பல வருடங்கள் நடக்கும். அதை வெறும் இலவசம் என்று சொல்லாதீர்கள்."

 

 

2. கேள்வி: மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டத் தேர்தலையொட்டி கொல்கட்டாவில் பேசிய திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, "மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் வெற்றியை உறுதி செய்தபின் டெல்லியைக் கைப்பற்றுவேன்" என்று கூறி இருக்கிறாரே?

 

பதில்: ஒருமுறை திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம், அவர் நாட்டின் பிரதமர் ஆவாரா எனக் கேட்டபோது, "என் உயரம் எனக்குத் தெரியும்" என்று பதில் சொன்னார். அதில் ஒரு நேர்மை இருந்தது. "நான் டெல்லியைக் கைப்பற்றுவேன்" என்று பேசும் மம்தா பானர்ஜியிடமும் அதே நேர்மை இருக்கிறது - தனக்கு ஒரு பைத்தியக்கார ஆசை இருந்தாலும், அதைச் சொன்னால் தனது பைத்தியக்காரத்தனம் வெளிப்பட்டாலும் பரவாயில்லை என்ற நேர்மை.

 

 

3. கேள்வி: "சட்டசபைத் தேர்தலுக்குப் பின் தமிழக அரசியல் களம் மாறும்" என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சொல்லியிருக்கிறாரே?

 

பதில்: 'தேர்தல் முடிவுகள் வந்தபின் சில அரசியல் தலைவர்கள் அணி மாறலாம்' என்று அவர் சொல்வதாக அர்த்தம். அந்தத் தலைவர்களில் அவரும் ஒருவரா என்பதை அவர் இப்போது வெளிப்படையாகச் சொல்ல முடியாது. பின்னர் நிலைமைக்கு ஏற்றபடி, "நான் அப்பொழுதே சொன்னேன்" அல்லது "நான் என்னைக் குறிப்பிடவில்லை. கள யதார்த்தத்தைச் சொன்னேன்" என்று அவர் அறிக்கை விட சவுகரியமான பேச்சு இது.

 

 

4. கேள்வி: சட்டசபைத் தேர்தலில் ஓட்டுப் பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படாத நிலையில் அறிக்கை வெளியிட்ட கவிஞர் வைரமுத்து, "மண், மொழி, மானம் காக்க, மீண்டும் திமுக-தான் ஆட்சிக்கு வரும்" என்று கூறி இருக்கிறாரே?

 

பதில்: 'வைரமுத்துவின் முக்கியத்துவம் காக்க, திமுக ஆட்சிக்கு வரவேண்டும்' என்ற தனது ஆசையை அவர் நேரடியாகச் சொல்லமுடியுமா?

 

 

5. கேள்வி: நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வராவிட்டால் அக்கட்சி என்ன மனநிலையில் இருக்கும்?

 

பதில்:  சாப்ட்வேர் தொழிலில், சிலருக்கு வேலை போய்ச் சம்பாத்தியம் போய்விடும். அப்போது அடுத்த வேலை கிடைக்கக் காத்திருந்து, மீண்டும் நன்றாகச் சம்பாதிக்கத் திட்டமிட்டு செயல்படுவார்கள். அரசியலிலும் தேர்தல் தோல்விக்குப் பின் மனம் தளராமல் அடுத்த வெற்றியையும், வெற்றியின் பலன்களையும், எதிர்நோக்கிச் செயல்படும் கட்சிகள் உண்டு. திமுக இதில் கிங். அதிமுக-வும் சளைத்ததல்ல.

 

பகுதி 84//26.04.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

Wednesday, 22 April 2026

கேள்வி-பதில் (22.04.2026)


 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால், பாஜக-வுக்குக் கைகட்டி நிற்கும் அதிமுக பொதுச் செயலர் பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்" என்று திமுக தலைவர் கனிமொழி கூறியுள்ளாரே?

 

பதில்: அடுத்த ஜென்மம் இருந்தால், ஊழல் மற்றும் தேசவிரோத அரசியல்வாதிகளை அடக்கி வைக்கும் குஜராத் மனிதர் நரேந்திர மோடி தமிழகத்தில் பிறக்கட்டும்.

 

 

2. கேள்வி: "மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்பட்டால்தான், மாநில வளர்ச்சி நன்றாக இருக்கும்" என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்னையில் கருத்து தெரிவித்திருக்கிறாரே?

 

பதில்: சுய நலன் மற்றும் மகன் மருமகன் நலன்களில் குறியாக இருக்கும் ஒருவர், மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்பட்டால், அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சி நன்றாக இருக்காது என்று அவருக்குத் தெரியும். அது பற்றிக் கவலைப்படாத சந்திரபாபு நாயுடு எதுவும் பேசலாம்.

 

 

3. கேள்வி: தமிழகம் வந்த ஆம் ஆத்மி கட்சித் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் சென்னையில் அளித்த பேட்டியில், "பிரசாரத்தின் போது தமிழக மக்கள் என்னை உற்சாகத்துடன் வரவேற்றனர்.  தமிழக மக்கள் பாஜக மீது வெறுப்புடன் உள்ளனர்" என்று கூறி இருக்கிறாரே?

 

பதில்: தமிழக மக்கள் பாஜக மீது வெறுப்பு கொண்டால் கூடப் பரவாயில்லை. குயுக்தி மன்னன், வெறுப்பரசியல் வேந்தன், அரவிந்த் கெஜ்ரிவாலைத் தமிழ் மக்கள் எதிர்காலத்தில் வரவேற்று ஆதரவு தரும் பாதகத்தைச் செய்யாமல் இருந்தால் போதும்.

 

 

4. கேள்வி: தனது கட்சிக்காகத் தேர்தல் பிரசாரம் செய்யும்போது, "இலங்கை, நேபாளத்தில் நடந்த புரட்சி இந்தியாவில் நடக்காது என்று சொல்ல முடியுமா?" என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கேட்டுள்ளாரே?

 

பதில்: அரசியல் பற்றி சீமான் ஒரு விஷயம் பேசும்போது - அதுவும் தேர்தல் சமயத்தில் வாக்கு சேகரிக்கும்போது -  இன்னொரு விஷயத்துக்குத் தாவுவதில், மரம் விட்டு மரம் மட்டுமல்ல, மலை விட்டு மலையும் தாவுவார். அறிவாந்தவராக இருந்தாலும் அவரிடம் சிந்தனை ஒழுங்கு இல்லை.

 

 

5. கேள்வி: "ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருடன் தவெக தலைவர் விஜய்க்கு நெருக்கமான உறவு இருக்கிறது" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளாரே?

 

பதில்: திருமாவளவனுக்கு நகைச்சுவை உணர்வு அறவே இல்லை என்ற ஒரு குற்றச்சாட்டு இருந்தது. அந்தக் குற்றச்சாட்டை, 'போடா டேய்' என்று சொல்லி அரைச் சிரிப்புடன் இடது காலால் உதைத்துத் தள்ளிவிட்டார் அவர்.

 

 

பிகு: நாளை நடக்கப் போகும் தேர்தலுக்காக, யாரை எதிர்த்தும் யாருக்கு ஆதரவாகவும் செய்யப்படும் பிரசாரம் அல்ல இது. வாக்காளர்கள் அனைவரும் சுதந்திரமாகத் தாங்கள் விரும்பியவர்களுக்கு வாக்களியுங்கள்.

 

பகுதி 83//22.04.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr