Thursday, 27 August 2026

கேள்வி-பதில் (27.08.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "சபையில் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். இல்லையேல் கடும் நடவடிக்கை எடுப்பேன். சபை விதியை நான் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தை உருவாக்காதீர்கள்" என்று அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் சபாநாயகர் பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளாரே?

 

பதில்: சபாநாயகர் இதுபோன்ற எச்சரிக்கையைப் பலமுறை விடுத்துள்ளார். ஊரில் சிலர் பட்டப்பகலில், எங்கும் கேமராக்கள் இருந்தாலும், ரவுடித்தனம் மற்றும் வழிப்பறி செய்கிறார்கள் என்றால் போலீஸ்காரர் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா அல்லது அவர்களை நோக்கி, "நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் தொடர்ந்து ரவுடித்தனம், வழிப்பறி செய்தால் நடவடிக்கை எடுப்பேன். நான் சட்டப்படி செயல்படும் கட்டாயத்தை உருவாக்காதீர்கள்!" என்று அடிக்கடி எச்சரிக்கை விடுப்பாரா?

 

பல மாநில சட்டசபைகளில், லோக் சபாவில் கூட, இதே நிலைமை என்பது சபாநாயகர் பிரபாகருக்கு ஆறுதல்.

 

 

2. கேள்வி: "தமிழகத்தைப் பொறுத்தவரை, முஸ்லிம்கள் பிரச்சனை உணர்வு பூர்வமானது. முஸ்லிம்களுக்குப் பாதுகாவலனாக இருந்து, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய கட்சி திமுக-தான்" என்று சட்டசபையில் திமுக எம்.எல்.ஏ,  எ.வ. வேலு பேசியிருக்கிறாரே?

 

பதில்: திமுக-வின் பார்வையில் இரண்டு விஷயங்களைச் சுற்றி வளைத்துத் தெளிவுபடுத்தி இருக்கிறார் எ.வ. வேலு.

 

ஒன்று: தமிழகத்தைப் பொறுத்தவரை, ஹிந்துக்களின் மத நம்பிக்கைகள் இழிவு செய்யப்பட்டால், அந்த நம்பிக்கைகளுக்குப் பாதகம் வந்தால் - அது ஒரு அரசியல் கட்சியிடமிருந்து வந்தாலும் -  தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் உணர்வு ஹிந்துக்களுக்குக் கிடையாது. ஆகையால் உணர்வு பூர்வமான பிரச்சனை என்பது ஹிந்துக்களுக்கு இல்லை; எனவே திமுக அவர்களுக்குப் பாதுகாவலனாக இருக்க அவசியமில்லை.

 

இரண்டு: திமுக முஸ்லிம்களைப் பாதுகாப்பது, உணர்வற்ற அப்பிராணி ஹிந்துக்களிடமிருந்து - சாதாரண முஸ்லிம் மக்களுக்கு அதுபோன்ற விசேஷப் பாதுகாப்பு தேவையில்லை, அவர்களும் அதை எதிர்பார்க்கவில்லை என்றாலும்.

 

விஷயம் என்னவென்றால்: ஒரு சாராருக்குத் திமுக செயற்கையாகப் பயம் காட்டி, அவர்களுக்குப் பாதுகாவலனாக இருந்து அந்த பயத்தைப் போக்குவதும் திமுக-தான் எனக் காலம் காலமாக தகிடுதத்தம் செய்வதில் திமுக, கில்லி.

 

 

3. கேள்வி: சட்டசபையில் ஒரு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ ஏதோ சொல்ல, அதற்குப் பதில் அளித்த அமைச்சர் கீர்த்தனா, "காசு கொடுத்தால் எதையும் எழுதும் ஒரு பத்திரிகையில் வந்த தவறான செய்தியை அவர் கூறுகிறார்" என்று பேசியிருக்கிறாரே?

 

பதில்: சில பத்திரிகைக்காரர்கள் அவ்வாறு நடந்துகொள்ளலாம். அமைச்சர் பதவியில் அமர்த்தி சம்பளம் மற்றும் சலுகைகள் கொடுத்தால் சில மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கட்சித் தலைவரைத் திருப்தி செய்ய எதையும் பேசலாம். இது தரப்பினரும் நம் ஜனநாயகத்தின் தூண்கள்.

 

சரியான வேலை மற்றும் சம்பளம் கிடைக்காமல், பலவகையில் காசும் கிடைக்காமல், அந்த இரு ஜனநாயகத் தூண்களையும் தாங்கியபடி அடியில் அழுந்திக் கிடப்பது அப்பாவி மக்கள்.

 

 

4. கேள்வி: "மூன்று நான்கு நாட்களாக ஆளும் கட்சி உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் மாலை ஆறரை மணிவரை சட்டசபையில் சண்டை மட்டும் போடுகிறார்கள். எப்பப் பாரு சண்டை, சண்டை, சண்டை. மக்கள் பிரச்சனைகளைப் பேசுவதில்லை. இது மனதிற்கு வேதனையாக இருக்கிறது" என்று சட்டசபையில் தேமுதிக உறுப்பினர் பிரேமலதா பேசி இருக்கிறாரே?

 

பதில்: பிரேமலதா பேச்சில் சாரம் உள்ளது.

 

முதலமைச்சர் விஜய் நினைத்தால், இந்தச் சண்டையைச் சில தவெக உறுப்பினர்கள் - குறிப்பாக ஒன்றிரண்டு அமைச்சர்கள் - ஆரம்பிக்காமல் அல்லது ஊதி ஊதிப் பெரிதாக்காமல் சபை மேலும் கண்ணியமாக நடக்கச் செய்யமுடியும். விஜய் அவ்வாறு செய்ய விரும்பவில்லை.  இந்தச் சண்டையை, ஆளும்கட்சி என்பதால் தவெக-வின் கை அநேகமாக ஓங்கியே இருக்கும் இந்தச் சண்டையை, முதலமைச்சர் விஜய் மௌனமாக ரசிக்கிறார். அதைப் புரிந்துகொண்டு சில தவெக உறுப்பினர்கள், குறிப்பாக ஒன்றிரண்டு அமைச்சர்கள்,   முதலமைச்சரிடம் நல்ல பேர் வாங்கும் நினைப்பில் சண்டையை வளர்க்கிறார்கள்.

 

சில சினிமாக்களில் உண்மையான வில்லனைப் பார்வையாளர்கள் ஊகிக்க முடியாதவாறு அவரது நடை, உடை, பாவனைகள் இருக்கும். சில விஷயங்களில் விஜய் அப்படியானவராக இருக்கிறார்.

 


5. கேள்வி: "அறிவாலயம் தோன்றிய பிறகுதான் தமிழர்கள் தங்கள் வீடுகளுக்கு வெள்ளையடித்துக் கொண்டனர். தமிழ்நாடு தனக்கு வெள்ளையடித்துக் கொண்டது" என்று திமுக தலைவர் ஆ. ராசா பேசியிருக்கிறாரே?

 

பதில்: தமிழக மக்களில் வெள்ளையடித்தவர்கள், வெள்ளையடிக்காதவர்கள் என அனைவரிடமும் கொள்ளையடித்தவர்கள் யார்? அவர்கள் எந்தக் கட்டிடம் தோன்றிய பிறகு குடும்பம் குடும்பமாக, ஒன்று மட்டும் சூப்பர் குடும்பமாக, அசுர வளர்ச்சி கண்டார்கள்?


பகுதி 128 // 27.08.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

Sunday, 23 August 2026

கேள்வி-பதில் (23.08.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "தமிழக முதல்வர் விஜய், வருங்காலப் பிரதமர்" என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசியிருக்கிறார். அவர் எந்த அடிப்படையில் அவ்வாறு பேசினார்?

 

பதில்: ஒன்று, விஜய் முதலமைச்சராக இருப்பது அமைச்சர் ஜெகதீஸ்வரிக்குப் பிடிக்காமல் இருக்கலாம் - இதைப்பற்றி ஜெகதீஸ்வரியிடம் விஜய் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். அல்லது, ராகுல் காந்தி பிரதமராக வருவது ஜெகதீஸ்வரிக்குப் பிடிக்காமல் இருக்கலாம் - இதைப்பற்றி விஜய்யிடம் ராகுல் காந்தி தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். இரண்டும் இல்லாமல், ஜெகதீஸ்வரி 'விஜய் மேனியா'வால் பாதிக்கப்பட்டிருக்கலாம் - இதைப்பற்றி ஜெகதீஸ்வரி ஒரு மனநல மருத்துவரிடம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

 

இன்னொன்று. ஹிந்தி நடிகர் ஷாருக் கானுக்கு வட இந்தியாவில் ரசிகர்கள் அதிகம். அவர் அரசியல் கட்சி ஆரம்பித்தால் தமிழகத்தில் பெரிதாக ஓட்டு வாங்கமுடியாது. ஒரு நடிகராக விஜய் தமிழகத்தில் அதிக ரசிகர்களைக் கொண்டிருக்கிறார்.  ஆனால் வட இந்திய எம். பி. தொகுதி வேட்பாளர்கள் விஜய் பெயரைச் சொல்லி ஜெயித்து அவரைப்  பிரதமராகத் தேர்வு செய்யும் அளவுக்கு - அதில் ஒண்ணரை சதவிகிதம் கூட - விஜய்க்கு வட இந்தியாவில் பிரபல்யம் இல்லை. இதெல்லாம் போக, தன் கட்சியின் பெயரில் ஒரு தென் மாநிலத்தின் பெயரைச் சேர்த்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அகில இந்திய அளவில் மெஜாரிட்டி எம். பி-க்களைத் திரட்டி நாட்டின் பிரதமர் ஆவதை மக்கள் பார்க்கவேண்டும் என்றால்: 'ஜனநாயகன்-2' என்ற புதிய சினிமாவில் விஜய் அந்தக் காட்சியை நடிக்க வேண்டும்.

 

 

2. கேள்வி: "2031-ல் தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆட்சி உறுதியாக அமையும்" என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசி இருக்கிறாரே?

 

பதில்: '2031 சட்டசபைத் தேர்தலில், தவெக, திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், அண்ணாமலை தொடங்கப்போகும் புதிய கட்சி ஆகிய அனைத்துக் கட்சிகளையும், அவை 2031-ல் அங்கம் வகிக்கப் போகும் தேர்தல் கூட்டணிகளையும் பாமக தனியாகவோ கூட்டணியாகவோ வென்று, நான் முதலமைச்சர் ஆகி ஆட்சி செய்வேன்' என்கிறார் அன்புமணி ராமதாஸ். அன்புமணியின் பேச்சை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது. சீமானும் திருமாவளவனும் தங்கள் கட்சிகள் குறித்து இதே போல் பேசினால் அதற்கு என்ன பெரிய மதிப்போ, அதற்கு ஒரு குந்துமணி கூடக் குறையாத பெரும் மதிப்பு அன்புமணியின் பேச்சுக்கும் உண்டு.

 

 

3. கேள்வி: முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் ஆட்சியைப் பாராட்டிய விசிக தலைவர் திருமாவளவன், "எந்தத் துறையிலும் லஞ்சம் இல்லை, ஊழல் இல்லை என்ற பெயரை, 100 நாள் ஆட்சியில் தவெக சம்பாதித்துச் சாதித்துள்ளது" என்று கூறி இருக்கிறாரே?

 

பதில்: ஒரு அரசுத் துறையில் ஊழியர்கள் பல மட்டத்தில், பல இடங்களில், செயல்படுகின்றனர். பொத்தாம் பொதுவாக "விஜய் ஆட்சியின் எந்தத் துறையிலும் லஞ்சம் இல்லை, ஊழல் இல்லை" என்று ஆட்சியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியின் தலைவர் சொன்னால், அவர் தெரிந்தே பாதி உண்மை, பாதி பொய்யைக் கலந்து பேசுகிறார், சுயலாபத்திற்காக விஜய்க்கு ஐஸ் வைக்கிறார் என்று அர்த்தம்.

 

அங்கும் இங்கும் லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள், மாமூல் வசூலிக்கும் நபர்கள், திருமாவளவன் பேச்சைக் கேட்கும் போது என்ன நினைப்பார்கள்? 'நாம் வாங்குவது யாருக்கும் தெரியவில்லை. தொடர்ந்து வாங்குவோம், நிறைய வாங்குவோம்' என்று நினைக்க மாட்டார்களா?

 

 

4. கேள்வி: அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் அரசு செலவில் தலா ஒரு காரும், அந்தக் காருக்கான டிரைவர் செலவு மற்றும் பராமரிப்புத் தொகையாக மாதா மாதம் 75,000 ரூபாயும், வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவிக்க, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி "ஏற்கனவே தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக முதல்வர் விஜய்யே கூறி வருவதால், திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் திமுக-வைச் சேர்ந்த 59 எம்.எல்.ஏ-க்கள் அரசு வழங்கும் கார்களைப் பெற மாட்டோம்" என்று சட்டசபையில் தெரிவித்திருக்கிறாரே?

 

பதில்: போலியான காரணத்திற்காக, எம்.எல்.ஏ-க்களுக்கு 'கார் ஆஃபர்' கொடுத்தார் விஜய். போலியான காரணத்திற்காக, திமுக சார்பாக அதை ஏற்க மறுத்தார் உதயநிதி. இருவரும் அவர்களுக்கு மட்டுமே புரியும் ஆட்டத்தை ஆடுகிறார்கள்.

 


5. கேள்வி: "ராகுல் காந்தியைப் பிரதமராக்க இந்தியாவே தயாராக இருக்கிறது; தமிழகமும் தயாராக இருக்கிறது" என்று காங்கிரஸ் தமிழகத் தலைவர் மாணிக்கம் தாகூர் பேசி இருக்கிறாரே?

 

பதில்: மாணிக்கம் தாகூரைக் காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவராக ஆக்கியவர் ராகுல் காந்தி. அதற்காக ராகுல் காந்திக்கு அவர் அவ்வப்போது விதவிதமாக நன்றி சொல்வார். ஒன்றும் நடந்துவிடாது. கலக்கம் வேண்டாம்.


பகுதி 127 // 23.08.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

Friday, 21 August 2026

கேள்வி-பதில் (21.08.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: தமிழகத்தின் ஒவ்வொரு எம்.எல்.ஏ-க்கும் ஒரு கார் அரசு செலவில் வழங்கப்படும்; அத்துடன் டிரைவர் சம்பளம் மற்றும் கார் பராமரிப்புக்காக, அரசு அவருக்கு மாதம் 75,000 ரூபாய் கொடுக்கும் என்று முதல்வர் விஜய் அறிவித்திருக்கிறாரே?

 

பதில்: அடிப்படைத் தேவைகளான சுத்தமான குடிநீர், நிறைவான உணவு, சீரான மின்சாரம், தரமான சாலைகள், சாலைப் போக்குவரத்து வசதிகள், பரவலான வேலை வாய்ப்பு ஆகியவை பெரும்பாலான சாதாரண மக்களுக்கு இன்னும் கிட்டவில்லை. அதிகமானோருக்கு சுகாதாரமான இருப்பிடமும் இல்லை. இந்த நிலையில் எம்.எல்.ஏ-க்களுக்கு அரசு வழங்கப்போகும் கார் + மாதம் ரூபாய் 75,000, சாதாரண மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி.

 

முதலமைச்சர் விஜய் சட்டசபையில் அந்த அறிவிப்பை வெளியிட்டவுடன், எம்.எல்.ஏ-க்கள் வாயெல்லாம் பல்லாகத் தங்கள் மகிழ்வை வெளிப்படுத்தினர். அது அவர்கள் செய்யப் போகும் அதிகமான மக்கள் பணியை நினைத்து அல்ல.

 

தேர்தல் நேரத்தில் எந்தக் கட்சி தங்களை நன்றாகக் கவனிக்கிறதோ, அதற்கு மக்கள் பெருமளவில் வாக்களிப்பார்கள் என்ற ஒரு எண்ணம் தமிழகத்தில் இருக்கிறது. எந்த முதல்வர் தங்களை அரசு செலவில் மூச்சு முட்டக் கவனிக்கிறாரோ, சட்டசபையில் அவருக்குத் திடீரெனத் தேவையாகும் ஆதரவைப் பல கட்சி எம்.எல்.ஏ-க்கள் என்னவானாலும் நன்றியோடு அளிக்க முன்வருவார்கள் என்ற புதிய நினைப்பும் நம் மாநிலத்தில் எழுந்திருக்கிறது.

 

 

2. கேள்வி: மக்கள் பணியாற்றும் உள்ளாட்சி கவுன்சிலர்கள் மற்றும் வார்டு மெம்பர்களுக்கு இலவச பிரைவேட் ஆட்டோ மற்றும் மாதம் 20,000 பராமரிப்புத் தொகை வேண்டாமா? அதில்லாமல் அவர்கள் எப்படிப் பணி செய்வார்கள்?

 

பதில்: விஜய் அரசுக்குச் சட்டசபையில் ஆட்டம் வந்தால், கவுன்சிலர்களும் வார்டு மெம்பர்களும் சட்டசபைக்கு வந்து விஜய்க்கு ஆதரவாக வாக்களித்து, அப்போதைய நிலையில் தேவையாக இருக்கக் கூடிய ஒன்றிரண்டு அதிக வாக்குகள் விஜய் அரசுக்குச் சாதகமாகக் கிடைக்கும்படி செய்யமுடியாது. பிறகு அவர்கள் என்ன பெரிய மக்கள் பணி செய்யமுடியும்?

 

 

3. கேள்வி: அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் அரசு செலவில் கார் என்று முதல்வர் விஜய் அறிவித்தவுடன், "கொடுத்ததெல்லாம் கொடுத்தார்; அவர் யாருக்காகக் கொடுத்தார்; ஒருவருக்கா கொடுத்தார்; இல்லை, ஊருக்காகக் கொடுத்தார்" என எம்.ஜி.ஆர் நடித்த 'படகோட்டி' படத்தின் பாடலை, குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ சிந்து பாடிக் காண்பித்து முதல்வருக்கு நன்றி தெரிவித்திருக்கிறாரே?

 

பதில்: ஊரில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும், அல்லது ஒவ்வொரு குடும்பத்திற்கும், விஜய் அரசு இலவச கார் மற்றும் மாதம் 75,000 ரூபாயை வழங்கவில்லை. அந்த இன்ப அதிர்ச்சி கிடைக்கப் போவது, தமிழக எம்.எல்.ஏ-க்களுக்கு மட்டும். மொத்த ஊரும் எம்.எல்.ஏ-க்கள் மட்டும்தான் என்று அந்த எம்.எல்.ஏ மெய்மறந்து நினைக்கிறார்.

 

 

4. கேள்வி: விஜய் பிரதமராகக் கூட ஆகலாம் என்ற பேச்சு எழுகிறது. அவர் லோக் சபா எம்.பி-யாகத் தேர்வாகிப் பிரதமரானால், ஒவ்வொரு லோக் சபா எம்.பி-க்கும் அரசு செலவில் ஒரு கார் மற்றும் பராமரிப்புத் தொகை வழங்குவாரா?

 

பதில்: பிரதமர் நிலையில், விஜய் பாரபட்சம் காட்டமாட்டார் என நம்பலாம்.

 

ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது ஒரு லோக் சபா தொகுதி. ஆகையால் ஒவ்வொரு லோக் சபா எம்.பி-க்கும் அவர் ஆறு கார்கள் வழங்கலாம். அந்த அறிவிப்பை அவர் லோக் சபாவில் வெளியிட்டவுடன் புளகாங்கிதம் அடைந்த ஒரு தவெக எம்.பி., விஜய்யைப் பாராட்டி இப்படி ஒரு பாடல் பாடலாம்.

 

"கொடுத்ததெல்லாம் கொடுத்தார்; அவர் எத்தனை கார்கள் கொடுத்தார்; ஒரு காரா கொடுத்தார்; இல்லை, ஆறு கார்கள் கொடுத்தார்."

 


5. கேள்வி: "முதல்வர் விஜய்க்கு சினிமாவுல மட்டும்தான் நடிக்கத் தெரியும். அதைத் தாண்டி, வெளியில் வந்து அவருக்கு நடிக்கத் தெரியாது" என்று அமைச்சர் ஆனந்த் சட்டசபையில் பேசி இருக்கிறாரே?

 

பதில்: அமைச்சர் ஆனந்த் வெளியில் நன்றாக நடிக்கிறார்.


பகுதி 126 // 21.08.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com