Thursday, 9 July 2026

கேள்வி-பதில் (09.07.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "மாணவர்கள் நல்ல அரசியலைப் பழகவேண்டும். நல்ல அரசியல்வாதியின் பின்னால் செல்லவேண்டும்" என்று கமல் ஹாசன் பேசி இருக்கிறாரே?

 

பதில்: 2026 சட்டசபைத் தேர்தல் நடக்கும் முன்னர், திமுக கூட்டணி ஜெயித்து மு.க. ஸ்டாலின் மறுபடியும் முதல்வர் ஆவதற்குத் தனது மக்கள் நீதி மய்யம் பணியாற்றும் எனப் பேசினார் கமல் ஹாசன். திமுக அந்தத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்து, தவெக தலைவர் விஜய் முதல்வரானவுடன் புதிய முதல்வரை விரைவாகச் சந்தித்து வாழ்த்தினார் கமல் ஹாசன். அதன் மூலம் கமல் இனி திமுக-வின் பக்கம் சாய்ந்திருக்கவில்லை என்று சூசமாக உணர்த்தி, இனி அவரது அரசியல் சாய்மானம் எந்தப் பக்கம் என்பதையும் தற்போது அவர் ரகசியமாக வைத்திருக்கிறார்.

 

கமல் ஹாசன் குறிப்பிடும் நல்ல அரசியல்வாதி யார் என்று மாணவர்கள் குழம்புவார்கள். கமல் ஹாசனின் அரசியல் கருத்துகளைக் கேட்கும் மாணவர்களுக்கு அரசியல் புரியாது, கமல் ஹாசனையும் தெரியாது என்று அர்த்தம்.

 

 

2. கேள்வி: "காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு முன் தவெக-வுடன் கூட்டணி அமைக்காததற்கு, கட்சிக்குள் இருந்த குள்ளநரிகள் தான் காரணம்" என்று அந்தக் கட்சியைச் சார்ந்த மாநில அமைச்சர் விஸ்வநாதன் கருத்து சொல்லி இருக்கிறாரே?

 

பதில்: உண்மையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைப் பற்றி அமைச்சர் விஸ்வநாதன் ஏதோ சொல்ல வருகிறார்.

 

தனது கட்சிக்குள் இருக்கும் குள்ளநரிகளை அடையாளம் கண்டு அவர்களை ஒதுக்கிவைக்கத் தெரியாத ராகுல் காந்தி, காங்கிரஸை எதிர்க்கும் பாஜக-வில் உள்ள குள்ளநரிகளை எப்படி அடையாளம் காணுவார், எப்படி சமாளிப்பார், அவர்களை எப்படி ஜெயிப்பார்? காங்கிரஸ் கட்சிக்குள் சர்வ வல்லமை படைத்த ராகுல் காந்தியின் இயலாமையை விஸ்வநாதன் இவ்வளவு அப்பட்டமாகக் கேலி செய்யவேண்டாம்.

 

 

3. கேள்வி: 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை, "50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்தவுடன் மக்களிடம் நாம் அரசியலுக்கு வரவேண்டுமா என கருத்துக் கேட்கவுள்ளோம். அதன்பிறகே அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்" என்று அறிவித்துள்ளார். இதை எப்படிப் புரிந்து கொள்வது?

 

பதில்: 2020-ம் ஆண்டு பாஜக-வில் அண்ணாமலை உறுப்பினராகித் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு முன் அவர் எத்தனை நபர்களிடம் கருத்து கேட்டு முடிவெடுத்திருப்பார்? பத்து இருபது பேர் இருக்கலாம். 2021-ல் பாஜக-வின் மத்தியத் தலைமை, கட்சிக்குப் புதியவரான அண்ணாமலையைத் தமிழக பாஜக-வின் தலைவராக நியமனம் செய்தபோது, அந்த முக்கிய முடிவை எடுக்க எத்தனை நபர்கள் கலந்து ஆலோசித்திருப்பார்கள்? மூன்று நான்கு பேர் இருக்கலாம். ஆனால் இப்போது அண்ணாமலை அரசியல் கட்சி தொடங்கலாமா என்பதற்கான தீவிர ஆலோசனை நடைபெறவே, அவரது வீ த லீடர்ஸ் இயக்கத்தில் குறைந்தது 50 லட்சம் உறுப்பினர்கள் இணையவேண்டுமா? 

 

வீ த லீடர்ஸ் இயக்கத்தில் இதுவரை இணைந்ததாகச் சொல்லப்படும் 19 லட்சம் நபர்கள் இப்படி நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று அண்ணாமலை எதிர்பார்க்கிறாரா?:  'அண்ணாமலை தொடங்கக் கூடிய அரசியல் கட்சியின் தொண்டர்களாக அல்லது அக்கட்சியின் மூன்றாம் கட்ட, இரண்டாம் கட்ட, முதல் கட்ட அரசியல் தலைவர்களாக நாம் உருவாகிச் செயல்படுவோமா என்பது பற்றி இப்போது நமக்குத் தெரியவில்லை. இருந்தாலும் வெறுமனே வீ த லீடர்ஸ் உறுப்பினர் அட்டையைப் பைக்குள் வைத்தபடி இருப்போம். 50 லட்சம் உறுப்பினர்களை அண்ணாமலையின் இயக்கம் எட்டுமா என்பதும் நமக்கு உறுதியாகத் தெரியாது. 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தால் அதன் பிறகு அவரது இயக்கம் அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தை அண்ணாமலை குறிப்பிடும் 'மக்கள்' வெளிப்படுத்துவார்களா என்பதும் நமக்குத் தெரியாது. ஒன்றுமே நிச்சயம் இல்லாவிட்டாலும் அண்ணாமலையின் கீழ் அரசியலில் ஈடுபடுவது குறித்து  நாம் சிவனே என்றிருப்போம். எல்லாம் ஈசன் செயல்'

 

பாஜக-வில் அண்ணாமலை இருந்தபோது அவருடைய பேச்சுகளில் புத்திசாலித்தனம் இருந்தது, தெளிவும் இருந்தது. தற்போது அவரிடம் புத்திசாலித்தனம் மட்டும் தூக்கலாகத் தெரிகிறது.

 

 

4. கேள்வி: "தவெக ஆட்சியில் பங்கெடுத்த போதிலும், திமுக-வுடன் நட்பு தொடர்கிறது" என்று விசிக தலைவர் திருமாவளவன் கூற, அதை விமர்சித்த வைகோ, "அது நோபல் பரிசு பெறவேண்டிய கருத்து" என்று கூறி இருக்கிறார். திருமா பேசியது சரியா அல்லது வைகோவின் கிண்டல் சரியா?

 

பதில்: சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின் போது, திமுக-வைத் தனது அரசியல் எதிரி, திமுக ஒரு தீய சக்தி என்று சொன்னவர் விஜய். அந்த விஜய்யின் தலைமையில் இன்று தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது. அவருடைய அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் விசிக-வின் தலைவர் திருமாவளவன், "திமுக-வுடன் நட்பு தொடர்கிறது" என்று பேசுவதை விஜய் உள்ளூர ஏற்க மாட்டார், திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டா வெறுப்பாக, ஒரு அரசியல் கட்சியின் தலைவருடைய நட்பாவது இன்று கிடைக்கிறதே என்று சந்தேகத்துடன் ஏற்பார்.  திருமாவளவன் வழக்கம் போல் எதையும் எப்போதும் தடம் புரண்டு பேசலாம்.

 

வைகோவைப் பொறுத்தவரை, தவெக தலைமையிலான கூட்டணியில் அவர் கட்சியும் இணைந்த நிலையில், அதே கூட்டணியில் உள்ள இன்னொரு கட்சியின் தலைவரான திருமாவளவனைப் பொதுவெளியில் கிண்டல் செய்யாமல் இருப்பது நல்லது. ஒருவேளை, விஜய் ரசிக்க முடியாத திருமாவளவன் கருத்துக்காக அவரை ஒரு இடி இடித்தால், விஜய்க்கு அருகில் நைசாக நகரலாம் என்று வைகோ நினைக்கிறாரோ?

 


5. கேள்வி: "அதிமுக-வை நிர்மூலமாக்க சிலர் முயற்சிக்கிறார்கள்" என்று அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறாரே?

 

பதில்: அந்த வேலையில் அவருக்குப் போட்டியாக இன்னொரு மனிதரா!


பகுதி 111 // 09.07.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

Sunday, 5 July 2026

கேள்வி-பதில் (04.07.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "திமுக-விலிருந்து குடும்பத்துடன் ஸ்டாலினும், அதிமுக-விலிருந்து பழனிசாமியும் விலகினால்தான் அந்தக் கட்சிகளுக்கு நல்லது நடக்கும்" என தவெக அமைச்சர் நிர்மல்குமார் கூறி இருக்கிறாரே?

 

பதில்: மாநிலக் கட்சிகள் பெரும்பாலும் ஒரு தலைமைக் குடும்பத்தின், அல்லது தலைமையைப் பிடித்து வைத்திருக்கும் ஒருவரின், நலனுக்காக ஒரு பண்ணை போல் நடத்தப் படுகின்றன. பண்ணையும் பண்ணையாரும் அங்கு உடலும் உயிரும் போலப் பின்னி இருப்பவை - எளிதில் அவற்றைப் பிரிக்க முடியாது.

 

 

2. கேள்வி: விஜய் என்ற தனி மனிதரை மையமாக வைத்து, அவரைச் சுற்றி இயங்கும் கட்சிதான் தமிழக வெற்றிக் கழகம். அவர் தலைமையில் தன்னலமற்ற சிறந்த ஆட்சி சாத்தியமா?

 

பதில்: தவெக-வும் விஜய் என்ற தனி மனிதர் மையமாக, 99% பிரதானமாக, இருக்கும் கட்சிதான். அவர் கட்சி சட்டென்று முதல்முறையாக ஆட்சிக்கு வந்தாலும், அரசு நிர்வாகத்தின் மேல்மட்டத்திலும் அடிமட்டத்திலும் முன்பே வளர்ந்திருந்த லஞ்சத்திற்கு எதிராக விஜய் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் பாராட்டத் தக்கவை, யாரும் எதிர்பாராதவை. இதில் அவர் தொடர்ந்து தன்னை நிரூபிக்க வேண்டும். இதற்காக அவர் கவனிக்கப் படுவார்.

 

இன்னொன்று: அரசு நிர்வாகத்தில் ஒரு முதல்வர் தன்னளவில் அநேகமாகச் சரியாகச் செயல்படுவது ஒன்று; அதைவிட மிகவும் கடினமானது, சரியில்லாத மனிதர்கள் கட்சியிலும் அரசு நிர்வாகத்திலும் அடைக்கலமாகத் தன்னருகில் வந்து சேர்ந்து முக்கியப் பணிகளில் ஈடுபடாமல் பார்த்துக் கொள்வது. இந்த இரண்டாவது விஷயத்தில் விஜய்க்குப் பாஸ் மார்க் இப்போது இல்லை.

 

 

3. கேள்வி: அதிமுக-வில் இருந்து விலகி தவெக-வில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான என். ஆனந்த் வரவேற்பு அளித்தார். அப்போது அவர் பேசுகையில், "தவெக-வில் இணைந்தவர்களை நாங்கள் பத்திரமாகப் பார்த்துக் கொள்வோம், அவர்களுக்கு உரிய பதவிகள் மற்றும் மரியாதை கண்டிப்பாகக் கிடைக்கும்" என்று உறுதி அளித்திருக்கிறாரே?

 

பதில்: "நாலுகால் பாய்ச்சலில் எம்மிடம் வாருங்கள். உங்களுக்கு உரித்தான கொள்ளு நிச்சயம்" என்று பலருக்கும் புரியுமாறு அவர் உணர்த்துகிறார்.

 

 

4. கேள்வி: திமுக-வின் அனிதா ராதாகிருஷ்ணனைப் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லும் வழியில், "காவல்துறை அதிகாரிகள் என்னை எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு உடனடியாகத் தவெக-வில் சேருமாறு கட்டாயப்படுத்தினர். நான் மறுத்துவிட்டேன்" என்று அவர் நிருபர்களிடம் சொல்லி இருக்கிறாரே?

 

பதில்: அப்படி நடந்திருந்தால், யாரோ தவெக-விற்கு வேண்டாதவர் அதை அனிதா ராதாகிருஷ்ணனிடம் முயற்சித்திருக்க வேண்டும். அந்த மனிதருக்கும் தவெக-விற்கும் என்ன பகையோ?

 

 

5. கேள்வி: "அதிமுக-விலிருந்து துரோகிகள் வெளியேறுவதால், தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகின்றனர்" என்று அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி கூறி இருக்கிறாரே?

 

பதில்: பட்டாசு கொளுத்தும் எண்ணிக்கையிலாவது கட்சியினர் நம் தலைமையின் கீழ் அதிமுக-வில் எஞ்சி இருக்கிறார்களே என்ற நிம்மதி பழனிசாமிக்கு இருக்கும்.

 

பகுதி 110 // 04.07.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

Thursday, 2 July 2026

கேள்வி-பதில் (02.07.2026)

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், "ராகுல் பிரதமராகும் போது, தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து, காவிரி நீர் பிரச்சனைக்குத் தீர்வு, மேகதாது அணை கட்டத் தடை, மீனவர்களுக்கு நிரந்தரப் பாதுகாப்பு, தமிழகத்திற்கு நிதிப் பகிர்வு ஆகிய ஐந்து அம்ச திட்டங்கள் நிறைவேற்றப் படும்" என்று பேசி இருக்கிறாரே?

 

பதில்: அந்த ஐந்தில் தமிழகத்திற்கு எது உண்மையான பிரச்சனை என்று அவருக்குத் தெரியவில்லை. தமிழகத்துக்கு எது பிரச்சனையானாலும் தீர்வு பற்றித் தமிழக காங்கிரஸ் அலட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக, "ராகுல் காந்தி பிரதமராகும் போது" என்பதைத் தீர்வு தினமாகச் சொல்லிவிட்டார் மாணிக்கம் தாகூர். கெட்டிக்காரர்.

 

 

2. கேள்வி: "அவர்களுக்குச் சிறிதளவாவது மனசாட்சி இருந்தால், கொள்ளையடித்த பணத்தைத் தந்துவிட்டு என்னைப்பற்றி விமர்சிக்கட்டும்" என்று ஜோஹோ நிறுவனர் ஶ்ரீதர் வேம்பு கூறி இருக்கிறாரே?

 

பதில்: மனசாட்சி உள்ளவர்கள் முதலில் மலையளவுக்கு, அதுவும் சந்ததி சந்ததியாக, கொள்ளையடிக்க மாட்டார்கள். இன்னொன்று: பழம் தின்று கொட்டை போட்டவர்களிடமிருந்து, கோட்டை கட்டியவர்களிடமிருந்து, கிழமானாலும் பழம் திரும்ப வராது.

 

 

3. கேள்வி: "திமுக ஆட்சியில் கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் தான் நடந்தது. இதையெல்லாம் நான் ஏன் முன்பே பேசவில்லை என்றால், கூட்டணியில் இருந்துகொண்டே நான் திமுக-வை எதிர்த்து எப்படிப் பேசுவது? அப்படிப் பேசினால் அயோக்கியத்தனமாக இருக்கும்" என்று மதிமுக தலைவர் வைகோ ஆவேசமாக விளக்கம் சொல்லி இருக்கிறார். அவர் பேசியது சரியா?

 

பதில்: கூட்டணிக்குத் தலைமை தாங்கி ஆட்சியிலிருக்கும் ஒரு கட்சியைச் சார்ந்தவர்கள் கலெக்ஷன், கமிஷன், கரப்ஷனில் ஜமாய்ப்பது அப்போதே வைகோவுக்குத் தெரிந்திருக்கிறது. தெரிந்தும் அதை எதிர்க்கவில்லை என்கிறார் வைகோ. சுத்த அசடு கூட இப்படியா பேசும்?

 

கூட்டணியில் இருந்தபோது அரசு நிர்வாகத்தில் நடந்த ஊழலை வைகோ பகிரங்கமாக எதிர்க்க முடியவில்லை என்றால் தனியாகவாவது, தான் இருந்த கூட்டணிக் கட்சியின் தலைமையிடம் 'அநியாயம் நடக்கிறது. இது தகாது, இது கூடாது' என்று வைகோ சொன்னாரா? அதுபற்றி அவர் ஒன்றும் விளக்கவில்லை.

 

இன்னொன்று: ஐந்தாண்டுகளாகக் கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் செய்தவர்களை உள்ளடக்கிய ஒரு கட்சி 2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டபோது, ஏன் அந்தக் கட்சியுடன் திரும்பவும் கூட்டணி வைத்தார் வைகோ? ஏன் அவர்கள் நிபந்தனையை ஏற்று, தனது கட்சி வேட்பாளர்களை அந்தக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட வைத்தார் வைகோ?

 

தன்னுடைய நேர்மையைப் பற்றி, யோக்கியதை குறித்து, என்ன ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறோம் என்று தெரியாமலே பேசி இருக்கிறார் வைகோ.

 

 

4. கேள்வி: சென்ற திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரரை, இப்போதைய தவெக அரசின் போலீஸ் தேடுகிறது. அவர் அகப்படுவாரா?

 

பதில்: முந்தைய திமுக ஆட்சியில், ஒரு சட்ட நிர்பந்தத்தினால் மாநில போலீஸ் அவரைத் தேடு தேடு என்று தேடியபோது, அவரோ அவரது குடும்பத்தவரோ, அல்லது செந்தில் பாலாஜியோ கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அதற்கு ஏற்றபடி போலீஸ் அவரைப் பிடிக்கவே முடியவில்லை. தவெக ஆட்சியில் போலீஸ் அவரைத் தேடும்போது அவர் கவலை கொள்ளாமல் இருக்க முடியாது. மற்ற விஷயங்கள் வழக்கின் தன்மையைப் பொறுத்தது, அவை நீதிமன்றத்தின் கையில்.

 


5. கேள்வி: "தமிழகத்தின் நிரந்தர முதல்வர் விஜய் ..... சிலர் நரி போல் காத்திருக்கின்றனர்" என்று அமைச்சர் செங்கோட்டையன் பேசி இருக்கிறாரே?

 

பதில்: அரசியலில் எதிர்க் கட்சியினர் நரி போல்தான் காத்திருப்பார்கள் - ஆளும் கட்சியை சங்கடப் படுத்த, பழித்துப் பேச, முடிந்தால் ஆட்சியை வீழ்த்த. அப்படித்தான் விஜய்யும் முன்பு காத்திருந்தார். எதிர்க் கட்சியினரின் நகர்வுகளை, அவர்களின் போராட்டங்களை, விமர்சனங்களை ஆளும் கட்சியினர் கண்கொத்திப் பாம்பாக கவனிக்க வேண்டும். மாற்றி மாற்றி இரு தரப்பினரும் முதுகில் போடுவதைத் தேமே என்று வாங்கிப் பசுமாடு மாதிரி சகித்துப் போவது மக்கள்.


பகுதி 109 // 02.07.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr