Sunday, 23 August 2026

கேள்வி-பதில் (23.08.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "தமிழக முதல்வர் விஜய், வருங்காலப் பிரதமர்" என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசியிருக்கிறார். அவர் எந்த அடிப்படையில் அவ்வாறு பேசினார்?

 

பதில்: ஒன்று, விஜய் முதலமைச்சராக இருப்பது அமைச்சர் ஜெகதீஸ்வரிக்குப் பிடிக்காமல் இருக்கலாம் - இதைப்பற்றி ஜெகதீஸ்வரியிடம் விஜய் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். அல்லது, ராகுல் காந்தி பிரதமராக வருவது ஜெகதீஸ்வரிக்குப் பிடிக்காமல் இருக்கலாம் - இதைப்பற்றி விஜய்யிடம் ராகுல் காந்தி தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். இரண்டும் இல்லாமல், ஜெகதீஸ்வரி 'விஜய் மேனியா'வால் பாதிக்கப்பட்டிருக்கலாம் - இதைப்பற்றி ஜெகதீஸ்வரி ஒரு மனநல மருத்துவரிடம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

 

இன்னொன்று. ஹிந்தி நடிகர் ஷாருக் கானுக்கு வட இந்தியாவில் ரசிகர்கள் அதிகம். அவர் அரசியல் கட்சி ஆரம்பித்தால் தமிழகத்தில் பெரிதாக ஓட்டு வாங்கமுடியாது. ஒரு நடிகராக விஜய் தமிழகத்தில் அதிக ரசிகர்களைக் கொண்டிருக்கிறார்.  ஆனால் வட இந்திய எம். பி. தொகுதி வேட்பாளர்கள் விஜய் பெயரைச் சொல்லி ஜெயித்து அவரைப்  பிரதமராகத் தேர்வு செய்யும் அளவுக்கு - அதில் ஒண்ணரை சதவிகிதம் கூட - விஜய்க்கு வட இந்தியாவில் பிரபல்யம் இல்லை. இதெல்லாம் போக, தன் கட்சியின் பெயரில் ஒரு தென் மாநிலத்தின் பெயரைச் சேர்த்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அகில இந்திய அளவில் மெஜாரிட்டி எம். பி-க்களைத் திரட்டி நாட்டின் பிரதமர் ஆவதை மக்கள் பார்க்கவேண்டும் என்றால்: 'ஜனநாயகன்-2' என்ற புதிய சினிமாவில் விஜய் அந்தக் காட்சியை நடிக்க வேண்டும்.

 

 

2. கேள்வி: "2031-ல் தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆட்சி உறுதியாக அமையும்" என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசி இருக்கிறாரே?

 

பதில்: '2031 சட்டசபைத் தேர்தலில், தவெக, திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், அண்ணாமலை தொடங்கப்போகும் புதிய கட்சி ஆகிய அனைத்துக் கட்சிகளையும், அவை 2031-ல் அங்கம் வகிக்கப் போகும் தேர்தல் கூட்டணிகளையும் பாமக தனியாகவோ கூட்டணியாகவோ வென்று, நான் முதலமைச்சர் ஆகி ஆட்சி செய்வேன்' என்கிறார் அன்புமணி ராமதாஸ். அன்புமணியின் பேச்சை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது. சீமானும் திருமாவளவனும் தங்கள் கட்சிகள் குறித்து இதே போல் பேசினால் அதற்கு என்ன பெரிய மதிப்போ, அதற்கு ஒரு குந்துமணி கூடக் குறையாத பெரும் மதிப்பு அன்புமணியின் பேச்சுக்கும் உண்டு.

 

 

3. கேள்வி: முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் ஆட்சியைப் பாராட்டிய விசிக தலைவர் திருமாவளவன், "எந்தத் துறையிலும் லஞ்சம் இல்லை, ஊழல் இல்லை என்ற பெயரை, 100 நாள் ஆட்சியில் தவெக சம்பாதித்துச் சாதித்துள்ளது" என்று கூறி இருக்கிறாரே?

 

பதில்: ஒரு அரசுத் துறையில் ஊழியர்கள் பல மட்டத்தில், பல இடங்களில், செயல்படுகின்றனர். பொத்தாம் பொதுவாக "விஜய் ஆட்சியின் எந்தத் துறையிலும் லஞ்சம் இல்லை, ஊழல் இல்லை" என்று ஆட்சியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியின் தலைவர் சொன்னால், அவர் தெரிந்தே பாதி உண்மை, பாதி பொய்யைக் கலந்து பேசுகிறார், சுயலாபத்திற்காக விஜய்க்கு ஐஸ் வைக்கிறார் என்று அர்த்தம்.

 

அங்கும் இங்கும் லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள், மாமூல் வசூலிக்கும் நபர்கள், திருமாவளவன் பேச்சைக் கேட்கும் போது என்ன நினைப்பார்கள்? 'நாம் வாங்குவது யாருக்கும் தெரியவில்லை. தொடர்ந்து வாங்குவோம், நிறைய வாங்குவோம்' என்று நினைக்க மாட்டார்களா?

 

 

4. கேள்வி: அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் அரசு செலவில் தலா ஒரு காரும், அந்தக் காருக்கான டிரைவர் செலவு மற்றும் பராமரிப்புத் தொகையாக மாதா மாதம் 75,000 ரூபாயும், வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவிக்க, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி "ஏற்கனவே தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக முதல்வர் விஜய்யே கூறி வருவதால், திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் திமுக-வைச் சேர்ந்த 59 எம்.எல்.ஏ-க்கள் அரசு வழங்கும் கார்களைப் பெற மாட்டோம்" என்று சட்டசபையில் தெரிவித்திருக்கிறாரே?

 

பதில்: போலியான காரணத்திற்காக, எம்.எல்.ஏ-க்களுக்கு 'கார் ஆஃபர்' கொடுத்தார் விஜய். போலியான காரணத்திற்காக, திமுக சார்பாக அதை ஏற்க மறுத்தார் உதயநிதி. இருவரும் அவர்களுக்கு மட்டுமே புரியும் ஆட்டத்தை ஆடுகிறார்கள்.

 


5. கேள்வி: "ராகுல் காந்தியைப் பிரதமராக்க இந்தியாவே தயாராக இருக்கிறது; தமிழகமும் தயாராக இருக்கிறது" என்று காங்கிரஸ் தமிழகத் தலைவர் மாணிக்கம் தாகூர் பேசி இருக்கிறாரே?

 

பதில்: மாணிக்கம் தாகூரைக் காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவராக ஆக்கியவர் ராகுல் காந்தி. அதற்காக ராகுல் காந்திக்கு அவர் அவ்வப்போது விதவிதமாக நன்றி சொல்வார். ஒன்றும் நடந்துவிடாது. கலக்கம் வேண்டாம்.


பகுதி 127 // 23.08.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

Friday, 21 August 2026

கேள்வி-பதில் (21.08.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: தமிழகத்தின் ஒவ்வொரு எம்.எல்.ஏ-க்கும் ஒரு கார் அரசு செலவில் வழங்கப்படும்; அத்துடன் டிரைவர் சம்பளம் மற்றும் கார் பராமரிப்புக்காக, அரசு அவருக்கு மாதம் 75,000 ரூபாய் கொடுக்கும் என்று முதல்வர் விஜய் அறிவித்திருக்கிறாரே?

 

பதில்: அடிப்படைத் தேவைகளான சுத்தமான குடிநீர், நிறைவான உணவு, சீரான மின்சாரம், தரமான சாலைகள், சாலைப் போக்குவரத்து வசதிகள், பரவலான வேலை வாய்ப்பு ஆகியவை பெரும்பாலான சாதாரண மக்களுக்கு இன்னும் கிட்டவில்லை. அதிகமானோருக்கு சுகாதாரமான இருப்பிடமும் இல்லை. இந்த நிலையில் எம்.எல்.ஏ-க்களுக்கு அரசு வழங்கப்போகும் கார் + மாதம் ரூபாய் 75,000, சாதாரண மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி.

 

முதலமைச்சர் விஜய் சட்டசபையில் அந்த அறிவிப்பை வெளியிட்டவுடன், எம்.எல்.ஏ-க்கள் வாயெல்லாம் பல்லாகத் தங்கள் மகிழ்வை வெளிப்படுத்தினர். அது அவர்கள் செய்யப் போகும் அதிகமான மக்கள் பணியை நினைத்து அல்ல.

 

தேர்தல் நேரத்தில் எந்தக் கட்சி தங்களை நன்றாகக் கவனிக்கிறதோ, அதற்கு மக்கள் பெருமளவில் வாக்களிப்பார்கள் என்ற ஒரு எண்ணம் தமிழகத்தில் இருக்கிறது. எந்த முதல்வர் தங்களை அரசு செலவில் மூச்சு முட்டக் கவனிக்கிறாரோ, சட்டசபையில் அவருக்குத் திடீரெனத் தேவையாகும் ஆதரவைப் பல கட்சி எம்.எல்.ஏ-க்கள் என்னவானாலும் நன்றியோடு அளிக்க முன்வருவார்கள் என்ற புதிய நினைப்பும் நம் மாநிலத்தில் எழுந்திருக்கிறது.

 

 

2. கேள்வி: மக்கள் பணியாற்றும் உள்ளாட்சி கவுன்சிலர்கள் மற்றும் வார்டு மெம்பர்களுக்கு இலவச பிரைவேட் ஆட்டோ மற்றும் மாதம் 20,000 பராமரிப்புத் தொகை வேண்டாமா? அதில்லாமல் அவர்கள் எப்படிப் பணி செய்வார்கள்?

 

பதில்: விஜய் அரசுக்குச் சட்டசபையில் ஆட்டம் வந்தால், கவுன்சிலர்களும் வார்டு மெம்பர்களும் சட்டசபைக்கு வந்து விஜய்க்கு ஆதரவாக வாக்களித்து, அப்போதைய நிலையில் தேவையாக இருக்கக் கூடிய ஒன்றிரண்டு அதிக வாக்குகள் விஜய் அரசுக்குச் சாதகமாகக் கிடைக்கும்படி செய்யமுடியாது. பிறகு அவர்கள் என்ன பெரிய மக்கள் பணி செய்யமுடியும்?

 

 

3. கேள்வி: அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் அரசு செலவில் கார் என்று முதல்வர் விஜய் அறிவித்தவுடன், "கொடுத்ததெல்லாம் கொடுத்தார்; அவர் யாருக்காகக் கொடுத்தார்; ஒருவருக்கா கொடுத்தார்; இல்லை, ஊருக்காகக் கொடுத்தார்" என எம்.ஜி.ஆர் நடித்த 'படகோட்டி' படத்தின் பாடலை, குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ சிந்து பாடிக் காண்பித்து முதல்வருக்கு நன்றி தெரிவித்திருக்கிறாரே?

 

பதில்: ஊரில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும், அல்லது ஒவ்வொரு குடும்பத்திற்கும், விஜய் அரசு இலவச கார் மற்றும் மாதம் 75,000 ரூபாயை வழங்கவில்லை. அந்த இன்ப அதிர்ச்சி கிடைக்கப் போவது, தமிழக எம்.எல்.ஏ-க்களுக்கு மட்டும். மொத்த ஊரும் எம்.எல்.ஏ-க்கள் மட்டும்தான் என்று அந்த எம்.எல்.ஏ மெய்மறந்து நினைக்கிறார்.

 

 

4. கேள்வி: விஜய் பிரதமராகக் கூட ஆகலாம் என்ற பேச்சு எழுகிறது. அவர் லோக் சபா எம்.பி-யாகத் தேர்வாகிப் பிரதமரானால், ஒவ்வொரு லோக் சபா எம்.பி-க்கும் அரசு செலவில் ஒரு கார் மற்றும் பராமரிப்புத் தொகை வழங்குவாரா?

 

பதில்: பிரதமர் நிலையில், விஜய் பாரபட்சம் காட்டமாட்டார் என நம்பலாம்.

 

ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது ஒரு லோக் சபா தொகுதி. ஆகையால் ஒவ்வொரு லோக் சபா எம்.பி-க்கும் அவர் ஆறு கார்கள் வழங்கலாம். அந்த அறிவிப்பை அவர் லோக் சபாவில் வெளியிட்டவுடன் புளகாங்கிதம் அடைந்த ஒரு தவெக எம்.பி., விஜய்யைப் பாராட்டி இப்படி ஒரு பாடல் பாடலாம்.

 

"கொடுத்ததெல்லாம் கொடுத்தார்; அவர் எத்தனை கார்கள் கொடுத்தார்; ஒரு காரா கொடுத்தார்; இல்லை, ஆறு கார்கள் கொடுத்தார்."

 


5. கேள்வி: "முதல்வர் விஜய்க்கு சினிமாவுல மட்டும்தான் நடிக்கத் தெரியும். அதைத் தாண்டி, வெளியில் வந்து அவருக்கு நடிக்கத் தெரியாது" என்று அமைச்சர் ஆனந்த் சட்டசபையில் பேசி இருக்கிறாரே?

 

பதில்: அமைச்சர் ஆனந்த் வெளியில் நன்றாக நடிக்கிறார்.


பகுதி 126 // 21.08.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

Wednesday, 19 August 2026

கேள்வி-பதில் (19.08.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "திமுக-வினர் இப்போது பெயில் வாங்குவது போல், தவெக-வினரையும் பெயில் வாங்கவைக்க வேண்டும்" என, திமுக வழக்கறிஞர் அணி கூட்டத்தில் திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசி இருக்கிறாரே?

 

பதில்: திமுக-வினர் மாதிரி தவெக-வினர் பெயில் மட்டும்தான் வாங்கவேண்டுமா? அல்லது, அவர்கள் மாதிரி இவர்களும் சாராய ஆலைகள் நடத்திக் கொழிக்கலாமா, கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் நடத்திக் கல்லா கட்டலாமா, சினிமாத் தொழிலில் கொடிகட்டிப் பறக்கலாமா, தமது குடும்பத்தைச் சார்ந்தவர்களை எம்.எல்.ஏ., மந்திரி, எம்.பி. என்று ஆக்கலாமா, ஆடிட்டருடன் துபாய்க்கு மர்மச் சுற்றுலா போய் வரலாமா?

 

 

2. கேள்வி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உளுந்தூர்பேட்டை மாநாட்டில் பேசிய அதன் தலைவர் திருமாவளவன், "இத்தனைக் காலம் ஆளும் கட்சியோடு நாம் கூட்டணி வைத்தோம். வரும் காலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் தமிழகத்தில் ஆளும் கட்சியாக வளரவேண்டும். ஆளும் கட்சியாகப் பரிணமிப்போம்" என்று அழுத்திச் சொன்னார். பிறகு என்ன நினைத்தாரோ, "தற்போது விஜய் அவர்களின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணியில் இருக்கிறோம். விடுதலைச் சிறுத்தைகளும் தமிழக வெற்றிக் கழகமும் இனி தமிழ்த் தேசியக் களத்தில் இணைந்தே பயணிக்கும்" என்று விஜய்யை சாந்தப்படுத்துவது மாதிரியும் பேசி இருக்கிறாரே?

 

பதில்: ஒரு ஜாதியின் பிரதிநிதியாக அல்லது பாதுகாவலனாகத் தோன்றும் ஒரு அரசியல் கட்சி, பிரதான ஆளும் கட்சியாக வருவது கடினம். காரணம், பெருவாரியான பிற ஜாதி மக்கள் அக்கட்சியிடமிருந்து மனதளவில் அன்னியப்படுவார்கள், அவர்களின் ஓட்டு அக்கட்சிக்குக் கிடைக்காது, அதைப் பணத்தாலும் வாங்க முடியாது.

 

ஒரு ஜாதி சார்புக் கட்சி, அந்த ஜாதி மக்களின் எண்ணிக்கை, அவர்களிடம் அக்கட்சிக்கு உள்ள பிடிப்பு, ஆகியவற்றைப் பொறுத்து பலமாக அல்லது மிதமாகக் கூட்டணி பேரம் நடத்தலாம், அவ்வளவுதான்.

 

'ஆளும் கட்சியாக வளர்வோம்' என்று திருமாவளவன் பேசினாலும், அது 'ஜும்மா ஜும்மா'. "தவெக-வுடன் இணைந்து பயணிப்போம்" என்று அவர் கடைசியாகச் சொன்னது, தற்போதைய அரசியல் சூழலில் தவெக-வுக்கான ஒரு எளிய மெசேஜ்: "நான் ஏதோ பேசினேன். எங்களைக் கழட்டி விட்றாதீங்க".

 

 

3. கேள்வி: விஜய் அரசு நூறு நாட்களைக் கடந்த நிலையில் சட்டசபையில் பேசிய சபாநாயகர் பிரபாகர், "வளமான தமிழகம், வலிமையான தமிழகம், ஊழலற்ற தமிழகம் என்பதற்கு, நூறு நாட்களில் வலுவான அடித்தளத்தை முதல்வர் அமைத்துள்ளார். முதல்வர் திரையுலகிலும் மக்கள் மன்றத்திலும் தொட்டதெல்லாம் துலங்கச் செய்தார். நூறு நாள் சாதனையைக் கடந்து, நூற்றாண்டுகள் போற்றும் பல சாதனைகளை முதல்வர் விஜய் படைக்கப் போகிறார்" என்றெல்லாம் பேசியிருக்கிறாரே?

 

பதில்: லோக் சபாவில், பிரதமரைச் சபாநாயகர் மெய்மறந்து போற்றுவதில்லை. மாநில சட்டசபைகள் குறித்துப் பொதுவாக ஒன்று சொல்லலாம். அவையை நடத்தும்போது, முதலமைச்சருக்காக ஜால்ரா தட்டாத சபாநாயகர், மதச்சார்பை வெளிப்படுத்தாத சபாநாயகர், ஒருதலைப்பட்சமற்ற சபாநாயகர் என்பதற்கு வலுவான அடித்தளத்தை அமைக்கும் நபர் யாரோ?

 

 

4. கேள்வி: "நான் எம்.எல்.ஏ ஆனபோது, உள்துறை அமைச்சர் அமித் ஷா பிறந்திருக்க மாட்டார், அல்லது பாலகனாக இருந்திருப்பார்" என்று அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தன்னை உயர்த்தி, அமித் ஷாவைத் தாழ்த்திப் பேசி இருக்கிறாரே?

 

பதில்: மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்த அடிப்படைத் தகவல் உண்மை என்றாலும், தனது கட்சிக்கும் ஒரு மத்திய அமைச்சராகவும் அமித் ஷா ஆற்றிய பணிகள், செய்த சாதனைகள் என்ன, கார்கே இதுவரை சாதித்தது என்ன?

 

மன்மோகன் சிங் நன்கு படித்தவர், பொருளாதாரம் அறிந்தவர். அவரைப் பத்தாண்டுகள் ஒரு பொம்மைப் பிரதமராக அமர்த்தி சோனியா காந்தியும் அவர் குடும்பத்தினரும் தங்களுக்கு ஆகவேண்டியதைப் பார்த்துக் கொண்டார்கள்.

 

மல்லிகார்ஜுன கார்கே என்ற மனிதருக்கு ஒரு சட்ட அங்கீகாரமும் சட்டப் பாதுகாப்பும் இருக்கிறது. அதன் நோக்கத்தை அவரே புரிந்துகொள்ளாமல், காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு ஒரு வெற்று முகமூடியாக இருப்பதில் பெருமை கொள்கிறார்.

 

ஒரு மனிதனின் மதிப்பு, தரம் என்பது கல்வியால் மட்டும் வராது, சட்டம் அளிக்கும் விசேஷ உரிமையால் மட்டும் வராது, என்பதற்கு மன்மோகன் சிங்கும் மல்லிகார்ஜுன கார்கேயும் உதாரணம். நேரு குடும்பப் பின்னணி இருந்தால் மட்டும் வராது என்பதற்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும்  சோனியா காந்தி உதாரணம்.

 


5. கேள்வி: பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகள் தங்களுக்குள் ஒரு புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கின்றன. அதன்படி, இந்த மூன்று நாடுகளில் ஏதேனும் ஒன்று ஆயுதத் தாக்குதலுக்கு உள்ளானால், அது மற்ற இரண்டு நாடுகளையும் தாக்கியதற்கு ஒப்பானதாகும். இந்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப், "அந்த நாடுகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இது முக்கியமான, பெரிய, தைரியம் மிக்க முதல் நடவடிக்கை" என்று சொல்லி வரவேற்றிருக்கிறாரே?

 

பதில்: துருக்கி ஏற்கனவே பலம் வாய்ந்த நேடோ ஒப்பந்தத்தால் பாதுகாக்கப் படுகிறது. சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தானின் ராணுவ உதவி துருக்கிக்குத் தேவை இல்லை. சவுதி அரேபியா தாக்குதலுக்கு உள்ளானால், ஒப்பந்தம் இல்லாமலே அமெரிக்கா சவுதியின் உதவிக்கு வரும் - துருக்கியும் திருவோடு பாகிஸ்தானும் சவுதி அரேபியாவுக்காக வெட்டியாகத் தோள்தட்டத் தேவையில்லை.

 

பாகிஸ்தான் இந்தியாவால் தாக்கப்பட்டால் - அத்தகைய இந்தியத் தாக்குதல், நம் நாட்டுக்கு எதிராகப் பாகிஸ்தான் வளர்த்து அனுப்பிய கூலி பயங்கரவாதிகள் நமது நாட்டில் ஏற்படுத்தும் பயங்கரவாதச் செயல்களைக் கட்டுப்படுத்த இந்தியா எடுக்கும் ராணுவ நடவடிக்கையாக இருக்கும் -  பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடு என்பதால் சவுதி அரேபியா, துருக்கி எனும் இஸ்லாமிய நாடுகள் அந்த நேரத்தில் பாகிஸ்தானுக்கு ராணுவ உதவி வழங்க ஏதுவாக அந்த மூன்று நாடுகளும் தங்களுக்குள் ஒரு புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தைச் செய்திருக்கின்றன. இந்தியா இதையும் சமாளிக்கும் - பாஜக ஆட்சியில் இருக்கும் வரை கவலை இல்லை.

 

டிரம்பைப் பொறுத்தவரை, அவர் இந்தியாவுக்குச் சொல்வது இது: "இன்னிக்கு ஒட்டிப்பேன். நாளைக்கு வெட்டிப்பேன். மூணாம் நாள் ஒட்டிப்பேன். நாலாம் நாள் எப்பிடி இருப்பேன்னு உனக்கே தெரியும்." அமெரிக்காவையும் இந்தியா சமாளிக்கும் - பாஜக ஆட்சியில் இருக்கும் வரை கவலை இல்லை.


பகுதி 125 // 19.08.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com