Sunday, 29 March 2026

கேள்வி-பதில் (28.03.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "தமிழக சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றால் அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்" என்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் பேசுகிறாரே?

 

பதில்: ஆட்சியிலிருந்து திமுக அகற்றப்பட வேண்டும் என்று தமிழகத்தில் கணிசமான வாக்காளர்கள் நினைக்கிறார்கள். இது ஒரு புறம்.

 

இன்னொரு புறத்தில், தமிழகத்தில் அதிமுக-வைத் தவிர, அல்லது அதிமுக-வுடன் கூட்டாக, ஆட்சிக்கு வருவதற்கு பாஜக-வும் மாநிலத்தில் ஒரு தகுதியான கட்சியாக வளர்ந்திருக்கிறது என்று நிறைய வாக்காளர்கள் நினைப்பார்கள். இதற்கு ஒரு வெளி அடையாளம்: திமுக அதிமுக தவிர, இந்த சட்டசபைத் தேர்தலில் அதிக வேட்பாளர்கள் ஒரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது (பாஜக, தமாகா மற்றும் ஒன்றிரண்டு கட்சி வேட்பாளர்கள் அனைவருமாக), பாஜக-வின் தாமரை சின்னத்தில். ஆகவே ஆட்சி மாற்றம் வந்தால் அதில் பாஜக-வும் சேர்ந்து இடம் பெறுவது சரியாக இருக்கும், தமிழகத்திற்கு நன்மை தரும்.

 

திமுக-வை எதிர்க்கும் பெரிய கூட்டணி முற்றிலும் ஒன்றுபட்டுத் திமுக-வைத் தோற்கடிப்பது, தமிழகத்திற்கான பெரிய பலன். 'அதிமுக தனித்து ஆட்சி' என்பது, பழனிசாமியின் சின்ன ஆசை.

 

சின்ன ஆசைகளை விட்டால் தான் பெரிய பலன்களை எளிதில் அடைய வாய்ப்புண்டு. ஒருவேளை, அதிமுக தனித்து ஆட்சி அமைத்தால், அதில் பழனிசாமிக்கு மட்டும் தெரிகிற பெரிய பலன்கள் இருக்கலாம்.

 

 

2. கேள்வி: தமிழக சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப் பட்ட நிலையில், அண்ணாமலையின் உடல் மொழியும் தோரணையும், அதிமுக-பாஜக  கூட்டணிக்கு எளிதில் வலு சேர்ப்பதாகத் தெரியவில்லையே?

 

பதில்: அது உண்மையாக இருந்தாலும், ஒரு வகையில் பரவாயில்லை.

 

'எங்கள் கூட்டணி வென்றால், அதிமுக மட்டும் ஆட்சி அமைக்கும். அதிமுக-வுடன் கூட்டணியாக இணைந்திருந்த மற்ற எந்தக் கட்சிக்கும் ஆட்சியில் பங்கு கிடையாது' என்ற எடப்பாடி பழனிசாமியின் பல சுயநல அறிவிப்புகளை ஜீரணிக்காத ஒரு தமிழக பாஜக தலைவர், சிறிது முறுக்கிக் கொண்டு நிற்பது பாதகமில்லை. அதாவது, பழனிசாமியின் அந்தப் பேச்சுக்கும் அணுகுமுறைக்கும் பாஜக நைஸாக - நேரடியாக இல்லாமல் - ஒரு எதிர்ப்பு காட்டிய மாதிரி இருந்தால் அது களத்தில் நல்லது. அதைச் செய்து காட்டும் தமிழக பாஜக தலைவர், தன் கட்சியின் மத்தியத் தலைமையின் அபிமானம் பெற்றவராக இருப்பதால் அது இன்னும் நல்லது. இப்போதைக்கு இந்த அளவுதான் ஒருவர் ஒட்டுமொத்த நல்லதாக யோசிக்கலாம்.

 

 

3. கேள்வி: நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், பல இடங்களில் பாட்டுப் பாடி ஓட்டு சேகரிக்கிறாரே?

 

பதில்: ஒரு கட்சியில் நான்காம் கட்டத் தலைவர்கள், அல்லது வெறும் பேச்சாளர்கள், இதைச் செய்யலாம். சீமான் கட்சியில் அவர் மட்டும்தான் முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் கட்டத் தலைவர். அவரே பாடிப் பாடி ஓட்டுக் கேட்கும்போது பரிதாபமாகக் காட்சி தருகிறார். அவருடைய பரிதாபத்திலும் அவருக்குப் பலன் உண்டா என்பது அவருக்குத் தான் தெரியும்.

 

 

4. கேள்வி: ஈரான் அருகில் உள்ள ஹோர்முஸ் ஜலசந்தியின் பெயரை மாற்றி அதற்குத் தனது பெயரை வைக்கவேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் யோசனை கூறி இருக்கிறாரே?

 

பதில்: பெயரை மாற்றித்தான் ஆகவேண்டும் என்றால், டிரம்ப் தனது பெயரை விட, ஒரு இந்தியரின் பெயரைப் பரிசீலிக்கலாம் - மோடி அல்ல.

 

அற்ப சிந்தனை, அகராதிப் போக்கு மற்றும் அசட்டுப் பேச்சின் உருவம், டிரம்ப். இந்த குணாதிசயங்களை அப்படியே பிரதிபலிக்கிறது, டிரம்பின் யோசனை. ஆனால் அவரை விடவும், இந்த அனைத்து குணாதிசயங்களையும் இளவயதிலேயே பெற்ற கில்லாடி, ராகுல் காந்தி. தன்னை மிஞ்சியவர் பெயரை டிரம்ப் பணிந்து பரிசீலிக்கலாம்.

 


5. கேள்வி: சட்டசபைத் தேர்தலுக்கு தமிழகக் காங்கிரஸ் தயாராகும் விதம் குறித்து அறிக்கை வெளியிட்ட காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, "காங்கிரஸ் கட்சியின் தொகுதித் தேர்வில் எந்தவித வெளிப்படைத் தன்மையும் இல்லை .... அனைத்துமே மிக ரகசியமான முறையில் நடைபெற்றது .... காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் உழைப்பை சிலர் விற்றுத் தின்பதைப் பார்க்க வேதனையாக உள்ளது .... மாநிலத் தலைவர், சட்டமன்றத் தலைவர் மட்டுமே கட்சியல்ல" என்றெல்லாம் தமிழகக் காங்கிரஸைக் கடுமையாக விமர்சித்திருக்கிறாரே?

 

பதில்: உண்மையில் ஜோதிமணி இப்படிச் சொல்வதாக அர்த்தம்: "தமிழகத்தில் சரியான நபர்கள் மாநிலத் தலைவராகவும் சட்டமன்றத் தலைவராகவும் வருவதற்கு வழி செய்யத் துப்பில்லாத, இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரான மல்லிகார்ஜுன கார்கேயே! அவர் சிண்டைப் பிடித்திருக்கும் ராகுல் காந்தியே! நீங்கள் இருவர் மட்டும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியல்ல! இப்படித்தான் நாட்டிலுள்ள காங்கிரஸ் தொண்டர்களின் உழைப்பை விற்றோ விற்காமலோ தின்பீர்களா?"

 

ஜோதிமணி அறிக்கையின் இந்த உண்மையான அர்த்தம் தமிழகக் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகைக்குத் தெரியும். இந்த அர்த்தம் ராகுல் காந்திக்கும் தெரியும். ஆனால் இந்த அர்த்தம் தனக்குத் தெரியாதது மாதிரியும், தான் வேறு வகையில் பிஸியாக இருப்பது போலவும் ராகுல் காந்தி நடிப்பார். இந்த நடிப்பும் செல்வப் பெருந்தகைக்குத் தெரியும்.


பகுதி 73 // 28.03.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

Friday, 27 March 2026

கேள்வி-பதில் (27.03.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: தூத்துக்குடியில் ஒரு மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, உடனே கொலை செய்யப்பட்டு, ஒரு புதருக்குப் பின்னால் கண்டெடுக்கப் பட்டார்.  அது பற்றிக் கருத்து சொன்ன நடிகர் எஸ். வி. சேகர், "அந்தப் பெண் ஏன் புதருக்குப் பின்னால் போகணும்? போலீஸ் புதருக்குள் லைட் போடமுடியுமா?" என்று கேட்டிருக்கிறாரே?

 

பதில்: முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய நண்பர் என்று எஸ். வி. சேகர் அடிக்கடி சொல்பவர்.

 

தூத்துக்குடி கொடுமை பற்றிய எஸ்.வி.சேகரின் அபத்தக் கருத்துக்கு எதிர்ப்பு வலுக்க, அவர் ஒரு மன்னிப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறார் -  அது பெருந்தன்மை குறைவான, நழுவல் தொனியில் இருந்தாலும். ஆகையால் இனி அவரை விமர்சிப்பது அவசியமில்லை. ஆனால் ஒன்று கவனிக்கத் தக்கது.

 

நடந்த குற்றத்தில், போலீஸ் அராஜகத்தால் நிகழும் லாக்கப் மரணம் போன்ற போலீஸின் நேரடி ஈடுபாடோ நடவடிக்கையோ இல்லை. இருந்தாலும், தமிழக போலீசார் பொதுவாகச் சட்டம் ஒழுங்கைக் கறாராகப் பராமரிக்க முனையாமல், முடியாமல், மெத்தனமாக இருக்கின்றனர். இந்த நிலைக்குத் தலையாய பொறுப்பு, போலீஸ் துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலினைச் சாரும்.

 

ஸ்டாலின், அவருடைய அமைச்சர்கள், பிற திமுக தலைவர்கள், நிர்வாக விஷயங்களிலும் பிற விஷயங்களிலும் நேராக இல்லை, முறையாக நடந்து கொள்வதில்லை. இதனால் ஒரு அளவுக்கு மேல் ஸ்டாலின் போலீஸாரிடமிருந்து முழு அர்ப்பணிப்பையும் வேலைத் திறனையும் பெற முடியாது - அந்தத் திறன் அவர்களிடம் இருந்தாலும். இந்த ஒட்டுமொத்தப் பரிதாப நிலை, எல்லாக் குற்றவாளிகளுக்கும் ஒரு மறைமுக ஊக்க மருந்து. அது எந்தக் குற்ற எண்ணம் கொண்டவனை எப்போது, எந்த அளவுக்கு, தறிகெட்ட வில்லனாக்கும் என்று சொல்ல முடியாது.

 

அரசு நிர்வாகத்தில், பொதுமக்கள் பார்வையில், ஆள்பவர்கள் சரியாக, நேராக, கறாராகச் செயல்படாவிட்டால், குற்றங்கள் கட்டுப்படாது; அதுபோக, அவர்களின் தரத்துக்கு ஏற்ற நண்பர்கள்தான் அவர்களுக்கு வாய்ப்பார்கள்.

 

 

2. கேள்வி: திமுக கூட்டணியில் மதிமுக-வுக்கான தொகுதி எண்ணிக்கையைப் பேசி முடிப்பதற்காக, திமுக நிர்வாகிகளுடன் மதிமுக சார்பாக ஒரு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் விளைவாக எட்டப்பட்ட இறுதி முடிவு பற்றி மதிமுக குழுவினர் கருத்து சொல்லும்போது, "எங்கள் தகுதிக்கு ஏற்ற தொகுதிகள் கிடைக்கவில்லை. நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்" என்று கூறி இருக்கிறார்களே?

 

பதில்: இதில் அழுவது புலம்புவது தவிர, அதற்கு மேலான தகுதியை மதிமுக அடையவில்லை. மதிமுக தனது தகுதியை வளர்த்துக் கொள்ள, ஸ்டாலின் காலை வைகோ கெட்டியாகப் பிடித்து அழகு தமிழ் பேசுவது மட்டும் போதாது.

 

 

3. கேள்வி: திமுக அமைச்சர் சிவசங்கர், "பீஹாரில் நிதிஷ் குமாருக்கும், மஹாராஷ்டிராவில் சரத் பவாருக்கும் ஏற்பட்ட நிலைமை தான், அதிமுக பொதுச்செயலர் பழனிசாமிக்கு நேரிடும்" என்று சொல்லி இருக்கிறாரே?

 

பதில்: கொடிய கட்சியான பாஜக-வுடன் கூட்டணி வைத்தால், அதிமுக ஓரம் கட்டப்படும், சிறுமைப் படும் என்று சொல்ல வருகிறார் அமைச்சர் சிவசங்கர் - அவர் கூற்றின் மையக் கருத்து சரியோ இல்லையோ. ஆனால் கொடியது, ஏமாற்றப் படுவது, என்பதற்கு இரண்டு கட்சிகளை அவர் உதாரணம் காட்ட வரும்போது, அது தமிழக மக்களுக்குப் பளிச்சென்று புரியும்படி அமைச்சர் சொல்லி இருக்கலாம். அதாவது, "தமிழகத்தில் திமுக-வுடன் கூட்டணி வைத்ததால் மிதிக்கப்பட்டு நசுக்கப்பட்ட வைகோ-வின் பரிதாப நிலைதான் பழனிசாமிக்குப் பின்னர் ஏற்படும்" என்று சிவசங்கர் சொல்லியிருக்கலாம். அந்த உவமானத்திற்கு ஈடு இணை இல்லை.

 

 

4. கேள்வி: "அங்கீகாரம் இல்லாத தேமுதிக என்ற கட்சிக்கு, திமுக தனது கூட்டணியில் அதிகத் தொகுதிகளை ஒதுக்கி இருக்கிறது. இதுதான் திமுக" என்று அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறாரே?

 

பதில்: அதிமுக, தன் சார்பில் மக்களிடம் சொல்ல வேண்டியதை, தேர்தல் அறிக்கையில் பலமான இலவச அறிவிப்புகள் மூலமாகப் பழனிசாமி பேசி விட்டார். அதற்கு மேல், அடுத்த வீட்டில் எட்டிப் பார்த்தவாறு, பராக்குப் பார்த்தவாறு இப்படியான வேடிக்கைப் பேச்சுதான் சாத்தியம்.

 


5. கேள்வி: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது கட்சிக்கான தேர்தல் அறிக்கையில்:

 

முதியோர், ஆதரவற்றோர், கைம்பெண்கள், ஆகியோருக்கு மாதாந்திர உதவித் தொகை 3,000 ரூபாய்;

 

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 3,000 ரூபாய்;

 

பத்திரிகையாளர்களுக்கு 20,000 ரூபாய் ஓய்வூதியம்;

 

என்றெல்லாம் அறிவித்திருக்கிறாரே?

 

பதில்: திராவிட மாடல் தனிப்பெரும் மாடல் - நீர் அதன் தலைவர் - இந்நினைவு அகற்றாதீர்!


பகுதி 72 // 27.03.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr