|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி:
என்ன இருந்தாலும், "தமிழன் பிச்சை
எடுக்க மாட்டான்" என்று கமல் ஹாசன் ராஜ்ய சபாவில் பேசியது, தமிழன் என்ற பெருமித உணர்வில் பேசியதாகாதா? பதில்: பொய்யில்
என்ன பெருமிதம்? சைக்கிள்
வெளிநாட்டில் உருவாக்கப் பட்டு பின்னர் இந்தியாவில், தமிழ்நாட்டில், உபயோகத்துக்கு வந்தது. ஆகையால்
அந்த வாகனத்துக்கு ஒரு தமிழ்ச் சொல் இருக்கவில்லை. தமிழர்களிடம் பிச்சை
இருந்ததால் தானே அதற்கான தமிழ்ப் பெயரும் இருந்து வருகிறது? "கற்கை
நன்றே கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே"
என்ற வெற்றிவேற்கை வரிகளிலும் அந்தச் சொல் உண்டு. "தர்மம் தலை காக்கும்" என்ற
பழமொழியில் பிச்சை அளிப்பதும் உள்ளடங்கும். தமிழகத்தின் வழிபாட்டுத் தலங்களின்
வெளியே கையில் நசுங்கிய தட்டுடன் காத்திருப்பவர்கள் செய்யும் செயல் என்ன?
அவர்கள் தமிழர்கள் தானே? பிச்சை எடுப்பதைவிட, கிடைக்கின்ற வேலை செய்தால் அதிக வருமானம் பார்க்கலாம் என்ற நிலையைப்
பிச்சைக்காரர்களுக்கு உண்டாக்காமல்,
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தைத் தூங்கச் செய்தது, மாநிலத்தை ஆள்கின்ற தமிழர்கள்தான் - அந்தத் தமிழர்கள் அனுப்பித்தான்
கமல் ஹாசன் ராஜ்ய சபாவில் வெட்டி முழக்கம் செய்தார். |
|
2. கேள்வி:
"தமிழ்க் கடவுள் முருகன், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாக இருக்கிறார்" என்று அமைச்சர்
சேகர்பாபு பேசி இருக்கிறாரே? பதில்: அடுத்த ஆட்சியைத்
திமுக அமைத்தால் அப்போதும் தனக்கு மந்திரி பதவி கிடைக்க, சேகர்பாபு
இப்போதிலிருந்தே மனமுருகி அர்ச்சனை செய்வது இறைவன் முருகனுக்கு அல்ல, கடவுள் ஸ்டாலினுக்கு. தான் தினமும் பக்தி செலுத்தாவிட்டால் முருகப் பெருமான் கூடத் தன்னை
மன்னிப்பார், அதற்காகத்
தன்னைத் தண்டிக்க மாட்டார், ஆனால் ஸ்டாலின் பெருமான்
அப்படியல்ல என உணர்ந்த அரசியல் ஞானி சேகர்பாபு. |
|
3. கேள்வி:
"பழைய அடிமை, புதிய அடிமை, என எத்தனை அடிமைகள் வந்தாலும் சட்டசபைத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக நிச்சயம் வெற்றி பெறும்" என்று துணை முதல்வர்
உதயநிதி தஞ்சாவூரில் அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறாரே? பதில்: அதிமுக
தலைவர் எடப்பாடி பழனிசாமியை இவ்விதம் இழித்துப் பேசவேண்டும் என்று ஏதோ சொல்லி
இருக்கிறார், உதயநிதி. ஆனால் திமுக-விடம் உள்ள பழைய அடிமைகள்,
அக்கட்சியில் வந்துசேரும் புதிய அடிமைகள், துணையுடன்
வருகின்ற தேர்தலில் திமுக ஜெயிக்கும் என்றுதான் ஸ்டாலினும் உதயநிதியும்
ஆசைப்படுவார்கள், கணக்குப்
போடுவார்கள். எப்போதும் கட்சித்
தலைமையின் குறிப்பறிந்து பணிந்து வேலை செய்ய, கட்சித் தலைமையின் புகழ்பாட, கட்சித் தலைமை
எதிர்பார்ப்பதைக் கொடுக்க, எதிர்க்கட்சித் தலைவர்களைத்
திட்டி கட்சித் தலைமையை மகிழ்விக்க, என்று பல நிலைகளில்
பணி செய்யும் நவீன அடிமைகள் திமுக-வில் உண்டு. வாரிசுத் தலைமை, எதேச்சாதிகாரத் தலைமை, உள்ள கட்சிகளில் சுயநலமாகத்
தலைமையைத் தொழும் அடிமைத்தனம்
இருக்கும். |
|
4. கேள்வி:
"இந்தியாவும் மலேசியாவும் தமிழ் மொழி மீதான அன்பினால் ஒன்றுபட்டுள்ளன"
என்று மலேசியாவில் பிரதமர் மோடி பேசி இருக்கிறார். அது மலேசியாவில் எடுபடுகிறது.
அதுபோன்ற உணர்வோடு, இந்திய தேசியத்துடன்
ஒன்றுபட்டு முன்னேறும் நற்சிந்தனை தமிழகத்தின் முக்கிய கட்சியான திமுக-வுக்கு
ஏன் இல்லை? பதில்: மலேசியத் தலைவர்கள்
அரசியல் பிழைப்புக்காகத் தமிழைப் போற்றுவதில்லை, பல
வழிகளில் சுயநலத்தோடு கொழிக்கத் தமிழ் மொழியை ஒரு பாதையாகப் பயன்படுத்துவதில்லை.
ஆகையால் மொழி அடிப்படையில் மோடி வெளிப்படுத்திய சிநேக உணர்வை மலேசியா வரவேற்கும்,
ஆனால் திமுக மோடியிடம் எவ்விதத்திலும் தமிழ் சார்ந்து நேசக்கரம்
நீட்டாது. மத்திய அரசு தமிழை நேர்மையாகப் போற்றினால், தாங்கள்
தேசியத்தை எதிர்க்கப் பிரயோகிக்கும் தமிழ், தமிழன் என்ற
அரசியல் ஆயுதங்கள் மழுங்குவதாக திமுக கவலைப் படும், ஆகையால்
மோடியை இன்னும் எதிர்க்கும். ஆனால் கணிசமான தமிழ் மக்களைத் திமுக கட்டிப்
போட்டிருப்பது, தனது போலித் தமிழ்ப் பற்றால் அல்ல; அது திமுக-வின் அரசியல் வலிமையால். |
|
5. கேள்வி: 'தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை' என்பது பழமொழி. தந்தையைப் போல
யார் இருப்பார்கள்? பதில்: பழமொழியின்
படி, இறுதியில் தந்தையைப் போல யாரும்
இருக்கமாட்டார்கள். காரணம், பழமொழியின் லாஜிக். தந்தையே
அவர் தாயைப் போல இருப்பாரே! |
|
பகுதி 48 // 08.02.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |