Wednesday, 15 April 2026

கேள்வி-பதில் (15.04.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "தமிழகத்திற்காகப் போராட ஈ.வெ.ரா, காமராஜர், அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோரின் முழு உருவமாக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறாரே?

 

பதில்: மறைந்த நான்கு தலைவர்களுடன் தன்னை ஒப்பிட்டு, ஸ்டாலின் மறைமுகமாகச் சொல்ல வருவது இது:

 

'தன்னை ஈ.வெ.ரா-வின் வழிவந்த தலைமகனாக வீரமணி நினைத்துக் கொண்டால், அவருக்கு ஒரு பளார்! நான்தான் இன்றைய ஈ.வெ.ரா!'

 

'காமராஜரின் அடிச்சுவட்டில் காங்கிரஸ் கட்சிக்குள் ஒருவர் வருவார் என்று தமிழக காங்கிரஸார் யோசித்தால், அவர்களுக்கு ஒரு டிஷ்யூம்! நானே இன்றைய காமராஜர்!'

 

'அண்ணாதுரையின் நினைவுக்கும் புகழுக்கும் அண்ணா திமுக சொந்தம் கொண்டாடினால், அதற்கும் தலையில் ஒரு தட்டு! இன்றைக்கு நான்தான் அண்ணாதுரை!'

 

'இப்போது கருணாநிதியின் உருவமாக இருக்க வேறு யாரும் ஆசைப்படாவிட்டால் என்ன? நான்தான் கருணாநிதி!'

 

 

2. கேள்வி: தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. திராவிடக் கட்சிகளுக்குப் போட்டியாக பாஜக-வும் "அனைத்து குடும்பங்களுக்கும் பத்தாயிரம் ரூபாய் நிதியுதவி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரெண்டாயிரம் ரூபாய் உதவித் தொகை, வருடத்திற்கு மூன்று சமையல் காஸ் சிலிண்டர்கள் இலவசம்" போன்ற தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருக்கிறதே?

 

பதில்: பிள்ளை பிடிப்பவர்கள் தங்கள் காரியம் நிறைவேறக் குழந்தைகளுக்குச் சாக்லேட் கொடுக்கிறார்கள். அதே சமயம், தெருவில் நின்றபடி பிள்ளை பிடிப்பவர்களிடம் அகப்படவிருக்கும் குழந்தைகளைக் காப்பாற்ற ஒரு போலீஸ்காரரும் அந்தக் குழந்தைகளுக்குச் சாக்லேட் கொடுத்து எளிதாக அவர்களைத் தாய் தந்தையாரிடம் கொண்டு சேர்க்க முயற்சிக்கலாம். இரண்டு சக்லேட்டுகளின் நோக்கமும் வேறு.

 

 

3. கேள்வி: "மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரியைப் பத்து ஆண்டுகளாகியும் மத்திய அரசு கட்டி முடிக்கவில்லை. பத்து ஆண்டுகள் கட்டுவதற்கு அது என்ன தாஜ் மஹாலா?" என்று முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறாரே?

 

பதில்: தொடர்ந்து இந்தியாவுக்கு விரோதமாகச் செயல்படும் பாகிஸ்தான் நாட்டைப் பற்றி கூட, முதல்வர் ஸ்டாலின் தவறாக நினைக்க மாட்டார்; ஆனால் சொந்த நாட்டின் மத்திய அரசை, தமிழகத்திற்கு நன்மைகள் செய்துவரும் மத்திய அரசை, தினமும் கரித்துக் கொட்டுகிறார் அவர். இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, ஸ்டாலினுக்கு ஏதோ மன வியாதி இருக்கிறது. அல்லது, எதிர்காலத்தில் மத்தியப் புலன்விசாரணை அமைப்புகளிடம் ஸ்டாலின் குடும்பம் மாட்டிக் கொண்டால், மத்திய அரசு மீது அவர் தொடர்ந்து சொல்லி வருகிற குற்றச்சாட்டுகளின் மீதான பழிவாங்கும் நடவடிக்கை அவை என்று அப்போது சொல்லலாம், என்ற தற்காப்பு எண்ணத்தில் இப்போது அவதூறு பேசுகிறார். இரண்டு காரணங்கள் சேர்ந்தும் இருக்கலாம்.

 

 

4. கேள்வி: "தொகுதி மறுவரையறை சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்தால், கடந்த 1950 மற்றும் 1960ம் ஆண்டுகளில் பார்த்த பழைய திமுக-வை இந்தியா மீண்டும் பார்க்கவேண்டி இருக்கும்" என்று முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறாரே?

 

பதில்: 2020-ல் இந்தியா-சீனா எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சீன ராணுவம் அத்துமீறியது. அப்போது மோடியின் மத்திய அரசு தனது தற்காப்பு ராணுவ நகர்வுகள் மூலமாகச் சீனாவுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்து, அதைச் சீனாவும் நன்றாகப் புரிந்து கொண்டது. மத்திய அரசின் அந்த எச்சரிக்கை: "எல்லைப் பகுதிகளில் சீனா அத்துமீறினால், கடந்த 1950 மற்றும் 1960ம் ஆண்டுகளில் பார்த்த பழைய இந்தியாவாக எங்கள் நாடு இருக்காது. சீனா இனி புதிய இந்தியாவைப் பார்க்கும்." இந்த எச்சரிக்கை, தானாகவே ஸ்டாலினின் உதார்ப் பேச்சுக்கும் பொருந்தும்.

 

 

5. கேள்வி: விஜய்யின் தேர்தல் பயணத்தின் போது நெடுஞ்சாலையில் தனது வேனை நிறுத்தச் சொல்லி, ஒரு சைக்கிளை வெளியே எடுத்து அந்த சைக்கிளைச் சிறிது தூரம் ஓட்டிப் பல இளைஞர்கள் தன்னைப் பார்த்து ஆர்ப்பரிக்கச் செய்தார் விஜய். இதைக் குறிப்பிட்டுப் பேசிய நா.த.க தலைவர் சீமான், "நாங்களும் கோலிக்குண்டு விளையாட்டு விளையாடுகிறோம். எங்களையும் பார்க்க வாருங்கள்" என்று மக்களை நோக்கிச் சொல்கிறாரே?

 

பதில்: வேண்டாத செயலைச் செய்து விளையாட்டுக் காண்பித்தவர், விஜய். வேண்டாத பேச்சைப் பேசி விளையாட்டுக் காண்பித்தவர், சீமான். விளையாட்டுப் பிள்ளைகள் இருவர்.

 

பகுதி 80//15.04.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

Monday, 13 April 2026

கேள்வி-பதில் (12.04.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்யும் போது கூறுகிறார்: "கிரிக்கெட்ல, சச்சின் டெண்டுல்கர் கிட்ட எல்லா ரெகார்டும் இருக்கும். அரசியல்ல அப்படி யாரும் முறியடிக்க முடியாத ரெகார்டை திமுக செஞ்சிருக்கு." கிரிக்கெட் டெண்டுல்கர், அரசியல் டெண்டுல்கர், இருவரையும் ஒப்பிடவும்.

 

பதில்: கிரிக்கெட் டெண்டுல்கரின் சாதனைகளை மற்றவர்கள் சொல்வார்கள். அரசியல் டெண்டுல்கர், அவரே ஏதேதோ சொல்வார்.

 

 

2. கேள்வி: "சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா, சின்னக் குழந்தையும் சொல்லும். அது திமுக-வின் தேர்தல் அறிக்கை" என்று மு.க. ஸ்டாலின் மேடைக்கு மேடை பாட்டுப் பாடி பிரசாரம் செய்கிறாரே?

 

பதில்: ஒரு சின்னக் குழந்தை பாடுகிறது. மற்ற குழந்தைகள் பிஞ்சுக் கை தட்டி ரசிக்கலாம்.

 

 

3. கேள்வி: "தமிழ்நாட்டை உலகளவில் தனி பிராண்டாக உருவாக்க வேண்டும்" என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசி இருக்கிறாரே?

 

பதில்: ஒரு பிரதேசத்தில் மண்ணும் மலையும் திருடப்பட்டு - குற்றங்கள், போதை, லஞ்சம், ஊழல் பெருகினால் - அது ஒரு பிராண்டா?

 

 

4. கேள்வி: "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆடு மாடு வளர்ப்பதும் அரசு வேலையாகும்" என்று நா.த.க தலைவர் சீமான் பிரசாரம் செய்கிறாரே?

 

பதில்: சீமான் என்ன சொல்கிறார்?

 

ஆடு மாடுகள் தனியார் உடமையில் இருக்கும், ஆனால் அவற்றை வளர்ப்பது அரசு வேலை என்கிறாரா? அல்லது, கால் நடைகள் அரசுடைமை ஆக்கப்பட்டு அவற்றை அரசுப் பணியாளர்கள் வளர்ப்பார்கள் என்கிறாரா?

 

கசாப்புக் கடைக்குப் போன, அல்லது இறந்து போன, கால்நடைகள் பெயரில் யாரும் அரசுக் கணக்கில் செலவு எழுதக் கூடாது என்பதற்காக, வாரா வாரம் கால்நடைகள் கணக்கெடுப்பை சீமான் அரசு நடத்துமா? அதுபோல், புதிய கால்நடை பிறப்புகளையும் அவருடைய அரசு தொடர்ந்து கணக்கெடுக்குமா?

 

ஒரு அபத்தத்தை சரளமாக, சத்தமாகப் பேசினால் அது அபத்தம் ஆகாது என்பது சீமான் கட்சி.

 

 

5. கேள்வி: தமிழகத்தின் தற்போதைய முக்கிய அரசியல் தலைவர்கள் குறித்து ஒருவர் நினைக்கக் கூடிய வாக்கியக் குறி (tagline) என்ன?

 

பதில்: மு.க. ஸ்டாலின் - தந்தை வழிச் சொத்து

 

உதயநிதி - எங்க பாட்டன் சொத்து

 

எடப்பாடி பழனிசாமி - யாரோ உருவாக்கி யாரோ எடுத்து என் கையில் கொடுத்த சொத்து

 

விஜய் - என் கனவு, பிரும்மாண்ட சினிமா. தியேட்டர் கிடைக்குமா?

 

திருமாவளவன் - காத்து எந்தப் பக்கம்யா அடிக்குது?

 

சீமான் - மர்ம யோகி

 

அண்ணாமலை - கர்ம யோகி

 

பகுதி 79// 12.04.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

Thursday, 9 April 2026

கேள்வி-பதில் (09.04.2026)


 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "அதிமுக-வை பாஜக கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கும், அதை எடப்பாடி பழனிசாமி உணரவில்லை" என்று சொல்லி, திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக-வை அவ்வப்போது எச்சரிக்கிறார். இந்த எச்சரிக்கையில் சாரம் இருக்கிறதா?

 

பதில்: 'தமிழகத்தில் அதிமுக-வுக்கு இணையாக, அதையும் தாண்டி, பாஜக மக்கள் மத்தியில் வளர்வது சாத்தியம்' என்று ஸ்டாலின் சொல்ல வந்தால், அதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் ஸ்டாலினின் கவலையும் உள்ளர்த்தமும் வேறு.

 

திமுக-வுக்கு, தனது முக்கிய எதிரியாக அதிமுக-வை சமாளிப்பது எளிது, ஆனால் வளர்ந்து எழுந்த பாஜக-வை சமாளிப்பது கடினம். காரணங்கள் இரண்டு:

 

ஒன்று, எம்.ஜி.ஆர் ஜெயலலிதா இல்லாத அதிமுக-வும், கருணாநிதி இல்லாத திமுக-வும் தங்களுக்குள் ஜென்ம எதிரிகள் என்பதை விட, அரசாங்கத்தின் பலன்களுக்கு ஆசைப்படும் போட்டிக் கட்சிகளாக மட்டும் இருக்கிறார்கள். இந்த நிலையில், அதிமுக-விலிருந்து பல தலைவர்கள் திமுக-வுக்குத் தாவி அதிமுக-வை நலிவுறச் செய்யலாம்; ஆனால் பாஜக-விலிருந்து முக்கியத் தலைவர்கள் திமுக-வுக்குச் செல்ல மாட்டார்கள், அந்த வகையில் பாஜக நலிவுறாது;

 

இரண்டு, அகில இந்திய அளவில் மிகப் பெரிய கட்சியான பாஜக, காத்திருந்து காத்திருந்து தமிழகத்தில் தனது செல்வாக்கை அதிகரிக்கும், ஹிந்து உணர்வுகளை ஒருங்கிணைத்து ஈர்க்கும், எதிர்காலத்தில் அந்தக் கட்சி அதிமுக-வை விடவும் பெரிதாக வளரலாம். அதன் விளைவாக, பாஜக தமிழகத்தில் திமுக-வின் பிரதான எதிரியாக உருவாகலாம், இறுதியில் பாஜக-வினால் திமுக நலிவடையலாம் - இப்படியான அச்சம் ஸ்டாலினுக்கு இருக்கும்.

 

பாஜக-வின் மீதான இந்த அச்சத்தை நேரடியாக வெளிப்படுத்தாமல், பாஜக அதிமுக-வை விழுங்கிவிடும் என்று அதிமுக-வின் வலிமைக்கும் வளர்ச்சிக்கும் அக்கறை காட்டுகிற மாதிரிப் பேசுகிறார் ஸ்டாலின். அவர் தன் அச்சத்தை மறைக்கப் பார்க்கலாம், ஆனால் களைய முடியாது.

 

 

2. கேள்வி: "நீ எனக்கு ஓட்டுப் போட்டா போடு. இல்லைன்னா போ. உடம்புல தெம்பு இருக்கற வரை இதே இடத்துல நின்னு கத்திக் கத்தி செத்துக்கூட போவேன். ஆனா சீட்டுக்கும் நோட்டுக்கும் யார் கிட்டயும் கை கட்ட மாட்டேன்" என்று தனது தேர்தல் பிரசாரத்தின் போது நா.த.க தலைவர் சீமான் பேசி இருக்கிறாரே"

 

பதில்: பொதுவாழ்வில் வாயால் வளர்ந்தவர்கள் உண்டு, வளரவே முடியாமல் வாயால் கெட்டவர்கள் உண்டு. வாயால் மட்டும் ஓரளவு வளர்ந்து, பிறகு வாயால் கெட்டவர் சீமான்.

 

 

3. கேள்வி: "தமிழக காங்கிரஸை ஸ்டாலின் சார் தன் பைக்குள் போட்டுக்கொண்டு விட்டார். ஆனால் உண்மையான காங்கிரஸ் தவெக பக்கம் உள்ளது" என்று விஜய் பேசி இருக்கிறாரே?

 

பதில்: காங்கிரஸ் கட்சி பற்றி விஜய் குழப்பத்துடன் பேசுகிறார். தற்காலத்தில் காங்கிரஸ் இருக்கிறது, உண்மையான காங்கிரஸ் இல்லை.

 

 

4. கேள்வி: தமிழக அரசியல் சூழ்நிலையில், "இளைஞர்கள் பலர் நடிகர்களின் பின்னால் செல்கிறார்களே?" என்று நிருபர்கள் கேட்டதற்குப் பதில் சொன்ன ரஜினிகாந்த், "படிக்கிற வயதில், இளைஞர்கள் முதலில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். அந்த நேரத்தை விட்டுவிட்டால், அவர்கள் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட வேண்டிய நிலை ஏற்படும்" என்று கூறி இருக்கிறார். வேறு எந்த நடிகராவது இப்படிச் சொல்வாரா?

 

பதில்: தமிழகத்தில் சினிமாவின் சக்தி, குறிப்பாக நடிகர்களின் ஈர்ப்பு, பல இளைஞர்களைத் தொடர்ந்து திசை திருப்புகிறது, அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கிறது. இது வருத்தமான விஷயம். இந்த நிலையில், தன் பின்னால் வந்த, வருகிற, இளைஞர்களுக்கும் சேர்த்துதான் ரஜினிகாந்தின் சொற்கள் பொருந்தும்.

 

ரஜினிகாந்த் கூறியது சாதாரண உண்மையாகத் தோன்றலாம், ஆனால் ஒரு பிரபல நடிகராக இதைச் சொல்ல நேர்மையும், நல்லெண்ணமும் பெருந்தன்மையும் வேண்டும். இது பெரிய விஷயம்.

 

 

5. கேள்வி: திருவண்ணாமலையில் தேர்தல் பிரசாரம் செய்த திமுக தலைவர் ஸ்டாலின்,  "திருவண்ணாமலையிலிருந்து தீபத்தை மட்டுமல்ல, திமுக-வையும் பிரிக்க முடியாது" என்று பேசி இருக்கிறாரே?

 

பதில்: இது ஸ்டாலினின் திராவிட மாடல் பகுத்தறிவு. பெரியார் பொன்மொழி பாணியில் இதற்கான விளக்கம்:

 

தீபத்தைக் கற்பித்தவன் அறிவாளி!

 

தீபத்தை வணங்குபவன் நவநாகரிக மனிதன்!

 

தீபத்தைப் பரப்புகிறவன் யோக்கிய சிகாமணி!

 

பகுதி 78// 09.04.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr