Sunday, 20 September 2026

கேள்வி-பதில் (19.09.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "எதிர்காலத்தில் பள்ளிக் குழந்தைகளுக்குச் சிக்கன் பிரியாணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளாரே?

 

பதில்: 'தமிழகத்தில் படித்து முடித்தவர்கள், காசு கொடுத்துச் சிக்கன் வாங்கி அவர்கள் வீட்டிலேயே சிக்கன் பிரியாணி சமைக்கப்பட்டு உண்ணும் அளவுக்கு அவர்களுக்கு மாநிலத்தில் நல்ல வேலை வாய்ப்பும் வருமானமும் கிடைக்கச் செய்வோம்' என்று அமைச்சர் பேச முடிந்தால் நல்லது. ஆனால் அதைச் செயல்படுத்த மாநில அரசு ஆழ்ந்து திட்டமிட்டுப் பல திசைகளில் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும், அதற்கான திறனும் முனைப்பும் மன உறுதியும் முதலமைச்சரிடம் இருக்கவேண்டும். அதெல்லாம் விஜய்யிடம் இல்லை. அதற்குப் பதிலாக, அரசு கஜானாவில் இன்னொரு ஓட்டை போட்டு, சாதாரண மக்களை ஆசையிலும், சார்பு நிலையிலும் வைத்து அவர்களிடம் குயுக்தியாகப் 'பெரிய மனசு' பட்டம் வாங்கினால் அடுத்த தேர்தலில் தவெக-வுக்கு அதிக ஓட்டுகள் கிடைக்கலாம் என்பது அக்கட்சியின் எண்ணமாக இருக்கும். அதற்குச் சாதாரண மக்கள் ஒருவகையில், கோழிகள் இன்னொரு வகையில், பலியாக வேண்டும்.

 

 

2. கேள்வி: 'கலைஞர் காலத்துடன் திமுக முடிந்துவிட்டது ' என்று திமுக தலைவர் கே.என். நேரு தன்னிடம் கூறியதாக மதிமுக-வின் துரை வைகோ சொல்லியிருக்கிறார். நேரு அப்படிச் சொல்லி இருப்பாரா?

 

பதில்: கலைஞர் காலத்து திமுக இப்போது இல்லை. இப்போது இருப்பது ஸ்டாலின் காலத்து திராவிட மாடல் திமுக - அது உதயநிதியின் ரெட் ஜெயன்ட் திமுக-வைப் பாதி உள்ளடக்கியது. இது அனைவருக்கும் தெரியும், துரை வைகோவுக்கே தெரியும். நேரு இதை நினைத்துத் தான் துரை வைகோவிடம் எதையும்  சொல்லி இருக்கலாம். இதைப்போல், ஜவஹர்லால் நேரு காலத்து காங்கிரஸ், இந்திரா காந்தி காலத்து காங்கிரஸ், சோனியா காந்தி காலத்து காங்கிரஸ் வேறு வேறானவை.

 

 

3. கேள்வி: ஈ.வெ.ரா பெரியார் பிறந்த தினத்தை ஒட்டிப் பதிவிட்ட 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை, "சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக, தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட்ட பெரியாரின் பொதுவாழ்வை நினைவு கூர்ந்து வணங்குகிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறாரே?

 

பதில்: "நான் ஒரு ஹிந்து. திருநீறு வைக்கிறேன்.  பொட்டு வைக்கிறேன். வீட்டிலிருந்து வெளியே வரும்போது என் மதத்தையும் சாதியையும் வீட்டில் வைத்துப் பூட்டி விட்டு வருவேன்"என்று 'வீ த லீடர்ஸ்' தலைவராக அண்ணாமலை முன்னர் பொதுமேடையிலிருந்து பேசியிருக்கிறார். ஆனால் வீட்டிலிருந்த போதும் வெளியே வந்தபோதும் ஹிந்துமத எதிர்ப்பை, ஹிந்துக் கடவுள் எதிர்ப்பை, வெள்ளமாய்க் கொட்டிக் கொண்டிருந்த ஈ.வெ.ரா, பெரும் தவறு செய்ததாக அண்ணாமலைக்குத் தோன்றவில்லை. மதத்தையும் கடவுளையும் நம்பாதவன், தனது நம்பிக்கையின்மையை வீட்டில் வைத்துப் பூட்டாமல் வெளியில் கொண்டுவந்து அனைவரிடமும் அதை ஆட்டி அசைத்துக் காட்டலாமா?

 

அண்ணாமலை சார்ந்த ஹிந்து மதத்தில் கடவுள் நம்பிக்கை அபரிதமாக உண்டு. பெரும்பாலும் கடவுள்களின் பெயர்கள்தான் அண்மைக்காலம் வரை குழந்தைகளுக்கு வைக்கப் பட்டன. ராமசாமி என்ற ஈ.வெ.ரா-வின் பெயரும் அண்ணாமலையின் பெயரும் அதற்கு உதாரணங்கள்.

 

அண்ணாமலை நம்பும் கடவுளை, அவர் அனுசரிக்கும் மதத்தை, இழித்தும் பழித்தும் ஈ.வெ.ரா அவர் காலத்தில் பேசியது 'சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக' அவர் மேற்கொண்ட நடவடிக்கை என்று அண்ணாமலை பார்க்கிறாரா? அல்லது, சமூக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மூடநம்பிக்கைக்கு எதிராக ஒருவர் பேசினால், செயல்பட்டால், அவர் ஹிந்து மதம் மற்றும் ஹிந்துக் கடவுள்களை இழித்தும் பழித்தும் பேசலாம், நம்பிக்கையாளர்களை முட்டாள், அயோக்கியன், காட்டுமிராண்டி என்று ஏசலாம், அதெல்லாம் ஒரு பொருட்டல்ல என்கிறாரா அண்ணாமலை?

 

அண்ணாமலை நம்பிக்கையுடன் திருநீறு வைத்துக்கொள்வது, பொட்டு வைத்துக் கொள்வது, ஆகிய செயல்களே ஈ.வெ.ரா-வின் பார்வையில் மூட நம்பிக்கையாக இருக்கும். அது மூட நம்பிக்கை என்றால், அதைச் செய்தவாறு ஈ.வெ.ரா-வைப் பாராட்டிப் போற்றுவது எந்த வகை நம்பிக்கை?

 

ஈ.வெ.ரா-வின் கடவுள் எதிர்ப்பு கருத்துகளைச் சாதாரண மக்கள் யாரும் பொருட்படுத்துவது கிடையாது. சாதாரண மக்களிடையே அவருடைய தாக்கம் பூஜ்ஜியம். ஆகையால் அவருடைய கடவுள் எதிர்ப்பு கருத்துகளை அண்ணாமலை இப்போது விமர்சிக்க அவசியமில்லை, அவரைப் போற்றவும் அவசியமில்லை. ஆனால், நம்பிக்கையாளர்களை இழிவு செய்யும் வாசகங்கள் உடைய ஈ.வெ.ரா சிலைகள் ஹிந்துக் கோவில்கள் முன்பாக நீடித்திருக்காமல் அகற்றப்பட வேண்டியது வேறு விஷயம்.

 

 

4. கேள்வி: "தமிழகத்தில் அடுத்த ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில், பாஜக-வைச் சேர்ந்தவர் முதல்வராகப் பதவி ஏற்பார்" என்று பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலர் பி. எல். சந்தோஷ் சென்னையில் பேசியிருக்கிறாரே?

 

பதில்: இத்தகைய ஆசையைப் பாஜக தனக்குள் வைத்திருந்து உத்வேகம் கொள்ளலாம்.  ஆனால் தற்போதைய தமிழக அரசியல் நிலவரத்தில், அந்த விஷயம் குறித்து பாஜக வெளியில் பேசும்போது அடக்கி வாசிக்கவேண்டும் - ஆசையை வாசிக்கக் கூடாது.

 


5. கேள்வி: "தமிழகத்தில் இனி நூறு ஆண்டுகள் தவெக ஆட்சிதான். ஆட்சி சிறப்பாக உள்ளது" என்று மதுரை ஆதீனம் ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறாரே?

 

பதில்: அவர் பேச்சு சிறப்பாக இல்லை.


பகுதி 136 // 19.09.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

Wednesday, 16 September 2026

கேள்வி-பதில் (16.09.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: நடிகர் அஜித், ரேஸ் கார் ஓட்டுபவர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் இங்கிலாந்து சென்றிருக்கும் நிலையில், அங்கு நடக்கும் கார் பந்தயத்தில் நடிகர் அஜித் பங்கேற்பதை அவர் நேரில் காணச் சென்று, அந்தப் பந்தயத்தைக் கொடி அசைத்துத் துவக்கியும் வைத்திருக்கிறாரே?

 

பதில்: அஜித் ஒரு நடிகராக இல்லையென்றால், விஜய் அந்தக் கார் பந்தயத்தை நேரில் சென்று பார்த்திருக்க மாட்டார். எங்கோ யார்மீதோ விழும் வெளிச்சம் தன்மீது நன்றாகப் படுவதற்கு மெனக்கெட்டிருக்கிறார் விஜய். தமிழக வெளிச்சக் கழகம்.

 

 

2. கேள்வி: மதிமுக-வின் முதன்மைச் செயலர் துரை வைகோ சொல்லியிருப்பது: "மதிமுக-விற்கு எம். பி. பதவி கிடைத்ததை, 'திமுக போட்ட பிச்சை' என்கின்றனர். இது யாரும் யாருக்கும் போடும் பிச்சை இல்லை; மக்கள் தான் எஜமானர்கள். எங்களுக்காவது மக்கள் பிச்சை போட்டனர். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, அந்தப் பிச்சையைக் கூட கொளத்தூர் தொகுதி மக்கள் போடவில்லை". அவர் கருத்து சரியா?

 

பதில்: ஐந்தாண்டுகளில் ஒரு நாள் தங்களுக்கு வாக்குப் பிச்சை போடும் சாதாரண மக்களை, ஐந்தாண்டுகளும் வாழ்வுப் பிச்சை எடுக்கும் நிலையில் வைத்திருப்பவர்கள், நமது திராவிட அரசியல்வாதிகள். அந்த அரசியல்வாதிகள் - அந்த ஒருநாள் பிச்சைக்காரர்கள் - அவர்களுக்குக் கிடைத்த பிச்சைப் பலன்களைக் கணக்கிட்டு ஐந்தாண்டுகளும் தங்களுக்குள் மோதிக் கொண்டிருப்பார்கள். அதைப் பற்றிக் கவலைப்படாமல், சாதாரண மக்கள் தங்களின் ஐந்தாண்டு வாழ்வுப் பிச்சையில் கவனம் செலுத்தினால் பயன் உண்டு.

 

 

3. கேள்வி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது ரஷ்ய அதிபர் புதினுக்கு, திருக்குறளின் ரஷ்ய மொழிபெயர்ப்புப் புத்தகத்தை பாரதப் பிரதமர் மோடி பரிசளித்தார். அது பற்றி ஒரு விழா மேடையிலிருந்து கருத்துச் சொன்ன கவிஞர் வைரமுத்து, "பிரதமர் ஏன் திருக்குறளைக் கொடுத்தார்? பைபிளைக் கொடுத்திருக்கலாம். அது கிறிஸ்தவர்களுக்கு மட்டும் உரித்தானது. குர்ஆன் கொடுத்திருக்கலாம். அது இஸ்லாமியர்களுக்கு மட்டும் உரித்தானது. பகவத் கீதை கொடுத்திருக்கலாம். அது இந்துக்களுக்கு மட்டுமே உரித்தானது. ஆனால் திருக்குறள் தான் உலக மனிதனுக்கே உரித்தானது. அது நாடு, மதம், மொழி, இனம், ஜாதி கடந்தது. ஆகையால் பிரதமர் ரஷ்ய அதிபருக்கு திருக்குறளைக் கொடுத்தார்" என்று பேசி இருக்கிறார். திருக்குறளுக்கு வைரமுத்துவின் மனமுவந்த பாராட்டா இது?

 

பதில்: இங்கு வைரமுத்து திருக்குறளை உள்நோக்கத்துடன் ஒருபக்கத்தில் மட்டும் சிலாகிக்கிறார். காரணம் இது.

 

ஒரு ஹிந்துவாக வாழ்ந்து அந்த மதத்தைப் போற்றுகிற பலர், சிறந்த மனிதர்களாக இருக்கலாம், சிறந்த வாழ்வியல் அறிஞர்களாகவும் இருக்கலாம். அத்த இரண்டுமாக இருந்தவர் திருவள்ளுவர். அவர் குறித்து, திருக்குறள் குறித்து, ஹிந்துக்கள் விசேஷமாகப் பெருமை கொள்வது இயற்கை.

 

திருவள்ளுவர் ஒரு ஹிந்து என்பதன் அடையாளம் ஆங்காங்கே திருக்குறளில் இருக்கிறது, சில குறள்களில் ஹிந்து மத நம்பிக்கைகள் வெளிப்படுகின்றன; இருந்தாலும் ஒட்டுமொத்தத் திருக்குறள் மனித குலமே தன் மனதையும் செயலையும் அதனுடன் ஒன்றுபடுத்திப் பார்க்கும் வகையில் ஆழமாகவும் விசாலமாகவும் இருக்கிறது என்பதால், வைரமுத்துவுக்குத் திருவள்ளுவரை விடவும் முடியவில்லை, தள்ளவும் முடியவில்லை. அதற்கு அடிப்படைக் காரணம்: வைரமுத்து ஒரு ஹிந்து என்பதில் துளியும் பெருமை கொள்ளவில்லை; அப்படியானவர், திருக்குறள் குறித்து இயல்பாகக் குயுக்தியுடன் பேசியிருக்கிறார்.

 

திருவள்ளுவர் தன்னுடைய ஹிந்து மதத்தைப் போற்றிப் பின்பற்றிய ஒரு அறிஞர், ஹிந்து மத நம்பிக்கையைக் குறிக்கும் சில குறள்களை அவர் எழுதியிருக்கிறார், அவை மூலம் அந்த நம்பிக்கையை அவர் சிபாரிசும் செய்கிறார், என்ற உண்மையை வைரமுத்து பின்னுக்குத் தள்ளு தள்ளு என்று தள்ளி, திராவிட அரைகுறைப் பகுத்தறிவின் வழியில் திருவள்ளுவரைப் போற்றுகிற சாக்கில், 'திருக்குறள் ஹிந்து மதத்தைச் சிறிதும் சாராமல், முற்றிலும் ஹிந்து மதத்தைக் கடந்து இருக்கும் நூல்' என்று தூக்கலாகப் பொருள்படும்படி பேசி இருக்கிறார். அப்படிப் பேசும்போது, 'மதங்களுக்கு இடையே நடுநிலையானவன் நான்' என்று போலியாகக் காட்டிக் கொள்வதற்காக, சம்பந்தமில்லாமல் கிறிஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் சேர்த்து அவர் குறிப்பிடுகிறார். அந்த மதத்தவர்கள் தங்களின் மத ரீதியாகத் திருக்குறளில் பெருமை காண்பதில்லை, அது அவர்களுக்கு அவசியமும் இல்லை. சம்பந்தம் இல்லாமல் அவர்களையும் வைரமுத்து குறிப்பிட்டதால் வைரமுத்துவின் உள்நோக்கம் மறையாது, அவர் பேச்சு யாரையும் ஏமாற்றாது.

 

தனக்குப் பிடித்த அர்த்தத்தில் வைரமுத்து ஏதோ சொல்கிறார்.  அதற்கு உரிய அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

 

 

4. கேள்வி: "திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், நாங்கள் ஒரு அமைச்சரைப் பெற்றிருக்க முடியுமா? பெற முடிந்ததா?" என்று மேடையிலிருந்து கேட்கிறாரே விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்? அதாவது, விஜய் தலைமையிலான ஆட்சியில்தான் ஒரு விசிக எம்.எல்.ஏ மந்திரியாக முடிந்தது, திமுக ஆட்சியில் அது நடக்கவில்லை என்று அவர் சொல்கிறாரே?

 

பதில்: ஸ்டாலின் தலைமையிலான சென்ற திமுக ஆட்சியில், அந்தக் கட்சிக்குச் சட்டசபையில் தனிப் பெரும்பான்மை இருந்தது.  இன்றைய ஆட்சிக்குத் தவெக தலைமை தாங்கினாலும்,  சட்டசபையில் அக்கட்சிக்குத் தனிப்பெரும்பான்மை கிடையாது. சட்டசபையில் விசிக-வின் ஆதரவையும் பெற்றுத்தான் இந்தக் கூட்டணி அரசு விழாமல் நிற்கிறது. இந்த ஆட்சியில் விஜய் விசிக-வுக்கு அமைச்சர் பதவி கொடுக்காவிட்டால், ஆட்சியே கவிழலாமே?  அவ்வளவுதானே விஷயம்?

 

கால் உடைந்து, நடக்க முடியாத ஒருவர் அமர்ந்திருந்த சக்கர நாற்காலி இப்படி நினைத்ததாம்: 'தேக ஆரோக்கியம் மிகுந்த ஒரு மனிதர் நேற்று என்னைச் சட்டை செய்யாமல் என்னைக் கடந்து வேக வேகமாக நடந்து போனாரே, அவர் என்றைக்காவது என்னருகில் வந்து என்னைக் கனிவாகப் பார்த்ததுண்டா? என்னைப் பிரியமாகப் பற்றியதுண்டா?'

 


5. கேள்வி: பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்ற உலகத் தலைவர்களுக்குப் பிரதமர் மோடி ருசியான சைவ உணவை இரவு விருந்தாக வழங்கினார். இது பற்றிக் கருத்துத் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "இந்தியாவின் 80 சதவிகித மக்கள் அசைவ உணவு எடுத்துக் கொள்பவர்கள். இந்திய அசைவ உணவு ருசி மிக்கது, என் சகோதரியின் சோலே பட்டூரேவைப் போல" என்று என்னவோ சொல்லவந்து எதையோ பேசி முடித்திருக்கிறாரே?

 

பதில்: குழம்பிய நிலையில் ஏதேதோ பேசுகிறவர்கள், எப்படியோ செயல்படுகிறவர்கள், 'எத்தைத் தின்னால் பித்தம் தெளியும்' என்று இருப்பதாகச் சொல்வதுண்டு. அவர்களில் ஒருவர், 'யாருக்கு எவர் என்ன உணவளித்தால், எம் சித்தம் தெளியும்' என்று இருப்பார்.

 

இன்னொன்று. அசைவ உணவு உட்கொள்பவர்கள், சைவ உணவையும் ருசிப்பது உண்டு. இலையில் சோலே பட்டூரேவை ஒரு வெட்டு வெட்டியிருக்கும் ராகுல் காந்திக்கு இது தெரியும்.


பகுதி 135 // 16.09.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com