Wednesday, 20 May 2026

கேள்வி-பதில் (19.05.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசும்போது, "கொளத்தூர் தொகுதியை முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் சிங்கப்பூர் போல மாற்றி வைத்திருந்தார். ஆனால் கேடுகெட்ட அந்தத் தொகுதி மக்கள் அவரைத் தோற்கடித்து விட்டனர்" என்று  கூறி இருக்கிறாரே?

 

பதில்: இதில் கேடுகெட்டது, கொளத்தூர் வாக்காளர்கள் அல்ல. அங்கு தோல்வியடைந்த வேட்பாளர் ஸ்டாலினும் அல்ல. கேடுகெட்டது, அந்த வேட்பாளரைக் காக்கா பிடிக்கும் ஆவலில் கொளத்தூர் வாக்காளர்களை இகழ்ந்து, சிங்கப்பூரையும் களங்கப் படுத்தும் வேறொருவர்.

 

 

2. கேள்வி: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் பேசும்போது, சட்டசபைத் தேர்தலில் தவெக அதிக இடங்களை வென்று சில கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்திருக்கும் விஜய் குறித்து, "சோஷியல் மீடியா வாயிலாக, இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தி, ரொம்ப சுலபமாக, சிறு பிள்ளைகளைப் பிரசாரம் செய்யவைத்து, அவர்களின் தாத்தா, அப்பா, அம்மா போன்ற பெரியவர்களிடையே, குழந்தைகள் வாயிலாகப் பிரசாரம் நடத்தி, ஆட்சிக்கு வந்து விட்டனர்" என்று கூறி இருக்கிறாரே?

 

பதில்: தேர்தலில் திமுக அடைந்த தோல்விக்கான காரணங்களை அறிய, 36 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்த ஸ்டாலின், உடனே அந்தக் காரணம் என்ன என்று அவரே அறிவித்து விட்டார். தமிழ்நாட்டுக் குழந்தைகள் வழிகாட்ட, என்ன ஏது என்று கேட்காமல் குழந்தைகள் சொற்படி வாக்களித்த அம்மா அப்பா, தாத்தா பாட்டி, ஆகியோர் திமுக-வை இறக்கிவிட்டு, தவெக-வை ஆட்சியில் அமர்த்தி விட்டார்களாம். குழந்தை மாடல் உடான்ஸ்.

 

 

3. கேள்வி: "மக்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்து, தொடர்ந்து கடினமாக உழைப்பேன்" என, திமுக தலைவர் ஸ்டாலின் மருமகனும் 'பென்' வியூக வகுப்பு நிறுவனத்தின் நிறுவனருமான சபரீசன் அறிக்கை வெளியிட்டுள்ளாரே?

 

பதில்: திமுக இப்போது ஆட்சியில் இல்லை என்பதால், திமுக தலைவர்களின் மகன்களும் மருமகன்களும் இனி கடினமாக உழைத்துத்தான் ஆகவேண்டும். பாவம், பழக்கம் இல்லாத உழைப்பைப் பழகிப் பழகிக் தெரிந்துகொள்ள வேண்டும். கஷ்டம்தான்.

 

 

4. கேள்வி: சட்டசபைத் தேர்தலில் தோற்ற முன்னாள் திமுக அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், "பொதுவாழ்விலிருந்து சில காலம் ஓய்வெடுக்கிறேன். தொடர்ந்து மக்கள் பணியாற்றியதால் சிறிது காலம் தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்த உள்ளேன்" என்று அறிவித்திருக்கிறாரே?

 

பதில்: இந்தத் தேர்தலில் திமுக ஜெயித்து பழனிவேல் தியாகராஜனுக்கு மீண்டும் மாநில அமைச்சர் பதவி கிடைத்தால், அந்தப் பதவியிலிருந்து ஓய்வை நினைத்துப் பார்ப்பாரா அவர்?

 

இன்னொன்று. மிகச் சிறிய காலம் - ஒன்றிரண்டு, அல்லது அதிக பட்சம் மூன்று, மாதங்கள் - ஓய்வெடுப்பார் என்றால் அதை அவர் பெரிதாக அறிவிக்கத் தேவை இல்லை. உடன் பயணிப்பவர்கள் முகம் சுளித்து அதை விட்டுவிடலாம். அதை விட நீண்ட ஓய்வாக இருக்கும் என்றால், கட்சிக்குள் உயர்நிலையில் பணி செய்யும் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? பண்ணை அரசியல் செய்பவர்கள், அந்த வசதி உள்ளவர்கள், எந்த விளைவைப் பற்றியும் கவலைப் படாமல் 'போனால் போகட்டும் போடா' பாடலாம்.

 

 

5. கேள்வி: தன்னைவிட மிக இளைய நடிகரான விஜய் முதலமைச்சர் ஆனதில் தனக்கு அவர்மேல் பொறாமை ஏதுமில்லை என்று சொன்ன ரஜினிகாந்த், "கமல் ஹாசன் முதலமைச்சர் ஆகி இருந்தால் கூட எனக்கு அவர்மேல் பொறாமை வந்திருக்குமா என்று தெரியவில்லை" என்று சிரித்தவாறு சொன்னார்.

 

உண்மையில் தற்போது கமல் ஹாசன் தமிழக முதலமைச்சராகி இருந்தால் அவர் மீது ரஜினி பொறாமைப் பட்டிருப்பாரா இல்லையா?

 

பதில்: கமல் தமிழக முதல்வராகி இருந்தால், ரஜினிக்குத் தாங்க முடியாத, வெளியில் சொல்லமுடியாத, ஒரு உணர்ச்சி ஏற்பட்டிருக்கலாம். கமலை நினைத்துப் பொறாமை அல்ல. தமிழகத்தை எண்ணி துக்கம்.

 

பகுதி 93 // 19.05.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

Sunday, 17 May 2026

கேள்வி-பதில் (17.05.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: 'சட்டசபைத் தேர்தலில் திமுக தோற்றதற்கான உண்மையான காரணங்களைக் கண்டறிய வேண்டும்' என்பதற்காக, மு.க. ஸ்டாலின் 36 பேர் கொண்ட குழுவை அமைத்திருக்கிறார். தோல்விக்கான காரணங்கள் எவை எவையென்று அந்தக் குழு கண்டறியலாம்?

 

பதில்: சட்டசபைத் தேர்தலில் திமுக தோற்றதற்கான காரணங்கள் இரண்டு. ஒன்று: விஜய் தங்களின் மனம் கவர்ந்த சினிமா நடிகர் என்பதால் சாதாரண மக்கள் விஜய்யும் அவர் கட்சியும் ஜெயிக்கவேண்டும் என்று விரும்பினார்கள். இரண்டு: அரசுப் பணத்தையும் மற்ற பணத்தையும் மக்களுக்கு அள்ளி வீசி அவர்களின் ஓட்டுகளை ஒரு கட்சி வாங்க நினைத்தாலும் மக்கள் அவற்றைப் பெற்றுக்கொண்டு பெப்பே சொல்ல நினைத்தால் பெப்பேதான். வேலையில்லாத 36 குழுவினர், முதலாவது காரணத்தை அரை மனதுடன் ஏற்கலாம்; இரண்டாவது காரணத்தை அரைக்கால் மனதுடன் கூட ஏற்க விரும்ப மாட்டார்கள்.

 

இன்னொன்று. தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிமிடத்தில், ஸ்டாலினுக்கும் மற்ற திமுக தலைவர்களுக்கும் அந்த இரண்டு காரணங்கள் பொட்டில் உறைத்திருக்கும்.

 

 

2. கேள்வி: "மு.க. ஸ்டாலின் ஒரு நடமாடும் அரசியல் பல்கலைக் கழகம் எனச் சமூக வலைத்தளங்களில் அனைத்துத் தரப்பினரும் பாராட்டு" என்று கலைஞர் செய்திகள் சேனலில் காண்பிக்கிறார்களே?

 

பதில்: இன்று தமிழகப் பல்கலைக் கழகங்களின் தரம், சொல்லும்படியாக இல்லை. அதை ஒரு உவமானத்தின் மூலம் இப்படி அழுத்தமாகச் சுட்டிக் காட்ட அவசியமில்லை.

 

 

3. கேள்வி: "விஜய் முதல்வர் ஆனதில் எனக்குப் பொறாமை இல்லை. எனக்கிருப்பது ஆச்சரியம் கலந்த சந்தோஷம். ஒரு அப்ரீசியேஷன். 52 வயதில் தனி ஆளாகத் தேர்தலில் போட்டியிட்டு விஜய் முதல்வர் ஆகி இருக்கிறார். இந்த விஷயத்தில், எம்.ஜி.ஆர், என்.டி.ஆரை விட அவர் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார்" என்று ரஜினிகாந்த் ஒரு டிவி பேட்டியில் கூறி இருக்கிறாரே?

 

பதில்: ரஜினிகாந்தின் பெரிய மனது, அவர் விஜய்யை வெளிப்படையாகப் பாராட்டியிருக்கிறார்.

 

ரஜினிகாந்தும் ஆச்சரியப்படத் தக்க மனிதர். விஜய்யும் அவரது சட்டசபைத் தேர்தல் வெற்றியினால் ஆச்சரியப்படத் தக்க மனிதர். ஆனால் ரஜினிகாந்திடம் உள்ள தேசிய கண்ணோட்டம் விஜய்யிடம் தென்படவில்லை. ரஜினிகாந்திடம் உள்ள நேர் சிந்தனையும் அசாதாரண நல்லதனமும் விஜய்யிடம் தெரியவில்லை. மற்றபடி அரசியலில் விஜய் சூட்டிக்காக, தீர்மானம் உள்ளவராகத் தெரிகிறார் - ரஜினியை விடச் சற்று அதிகமாகவும். ஆனால் போற்றப்படும் ஒரு அரசியல் தலைவராகத் திகழ அது மட்டும் போதாது.

 

தேர்தலில் பெரிய வெற்றி அடைந்த விஜய் குறுகிய எண்ணமுள்ள அரசியல் செய்வாரா; அல்லது சமயோசிதமும் சாமர்த்தியமும் கொண்ட, அதே சமயம் வெளிப்படைத் தன்மையும் நம்பகத் தன்மையும் கூடிய அரசியல் செய்வாரா  என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

 

 

4. கேள்வி: "வேட்பாளர்கள் யார் என்றே தெரியாமல் த.வெ.க-விற்கு மக்கள் வாக்களித்துள்ளார்கள். இது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது அல்ல" என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பேட்டி கொடுத்திருக்கிறாரே?

 

பதில்: பல காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார் என்று தெரிந்தும் தேர்தல்களில் மக்கள் அவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இது ஜனநாயகத்திற்கு இன்னும் ஆபத்தாயிற்றே!

 

 

5. கேள்வி: முதல்வர் விஜய்யின் புதிய அரசு பற்றிக் கருத்துத் தெரிவித்த நடிகர் கமல் ஹாசன், "புதியவர்களைக் குறைவாக எடைபோடக் கூடாது. அவர்களிடம் அதிகமும் எதிர்பார்க்கக் கூடாது" என்று சொல்லி இருக்கிறாரே?

 

பதில்: 'குறைவாக எடைபோடக் கூடாது' என்று பேசியதன் மூலம், "விஜய் சாதனைகள் புரிவார். இனி வருவது உங்களுக்கான காலம்" என்று சூசகமாகச் சொல்லி விஜய் கட்சியினரைத் தூக்கிப் பிடித்திருக்கிறார் கமல்.  'அதிகம் எதிர்பார்க்கக் கூடாது' எனப் பேசியதன் மூலம், "விஜய் பெரிதாகச் செய்வதற்கு வாய்ப்பில்லை. பொறுத்திருங்கள், பின்னால் உங்களுக்கான காலம் வரும்" என்று மறைமுகமாகத் திமுக-வினரையும் தாங்கிப் பிடித்திருக்கிறார் அவர்.

 

இந்தச் சின்னத்துல ஓங்கி ஒரு குத்து. அந்தச் சின்னத்துல பளிச்னு ஒரு குத்து. கமல்டா!

 

பகுதி 92 // 17.05.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

Saturday, 16 May 2026

கேள்வி-பதில் (16.05.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்-னு வள்ளுவர் சொன்னதுதான் எங்கள் வழி" என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் சொல்வது சரியா?

 

பதில்: உதயநிதியின் தாத்தா மு. கருணாநிதி அந்தக் குறளுக்கு எழுதிய உரை இது: "பிறப்பினால் அனைவரும் சமம். செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையினால் மட்டுமே வேறுபாடு காணமுடியும்."

 

இந்தக் குறள் காட்டும் வழிதான் திமுக-வின் வழியா? பிறப்பை ஒதுக்கிவைத்து, ஒருவரின் திறமையின் அடிப்படையில் மட்டும்தான் திமுக-வில் பதவிகள் தரப்படுமா, திறமையின் அடிப்படையில் மட்டும் திமுக-விற்குள் வேறுபாடுகள் காணப்படுமா?

 

பிறப்பால் - அதாவது, மு. கருணாநிதியின் மகன் என்பதால் - மு.க. ஸ்டாலின் முன்பு எளிதாக எம்.எல்.ஏ ஆனார். பிறகு மந்திரி, துணை முதலமைச்சர், முதலமைச்சர் என்று உயர்ந்தார். மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதியும் பிறப்பால் எம்.எல்.ஏ, மந்திரி, துணை முதலமைச்சர் என்று ஆனவர். திமுக-வின் அடுத்த மட்டங்களிலும் இந்த வழி பரவலாகப் பின்பற்றப் படுகிறது.

 

இதுதான் திமுக-வின் வழி என்றாலும், 'பிறப்பொக்கும்' குறளை உதயநிதி கூசாமல்  மேற்கோள் காட்டுவதற்குக் காரணம் இருக்கிறது. தன்னைப் போல் அநேகத் தமிழர்கள் அந்தக் குறளை முழுதாகப் படித்துப் புரிந்துகொண்டிருக்க மாட்டார்கள், ஆனாலும் எடுப்பாகத் துவங்கும் அந்தக் குறளை மேற்கோள் காட்டுவது அரசியல் தலைவர்களுக்கு ஒரு பேஷன் என்று அவர் நினைக்கிறார். அவர் நினைப்பு சரி.

 

 

2. கேள்வி: சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து விஜய் முதல்வராவதற்கு முன்பு, "திமுக-வும் அதிமுக-வும் இணைந்து என்னை முதல்வராக்க முயற்சிக்கின்றன என நண்பர்கள் தெரிவித்தனர். அது குறித்த விவரம் எனக்குத் தெரியாது" என்று விசிக தலைவர் திருமாவளவன் சொல்கிறாரே?

 

பதில்: திருமாவளவனின் வி. சி கட்சிக்குச் சட்டசபையில் 2 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். திமுக-வும் அதிமுக-வும் இணைந்து, திருமாவளவனைக் கலந்து ஆலோசிக்காமல், அவரை முதல்வராக்க முயற்சித்திருந்தால், அவரைத் தங்கள் சௌகரியத்திற்காக, தங்களைத் தேர்தலில் மண்ணைக் கவ்வ வைத்த விஜய் முதல்வர் ஆவதைத் தடுப்பதற்காக, ஒரு பொம்மை முதல்வராகத் திருமாவளவனை வைத்திருக்க நினைத்தார்கள் என்று அர்த்தம். அந்த முயற்சி பற்றிக் கேள்விப்பட்ட திருமாவளவனுக்கும் அது புரிந்திருக்கும். இருந்தாலும் அப்படி ஒரு முதல்வராக வருவதைத் திருமாவளவன் விரும்பவில்லையா என்ன? அது மாதிரித் தெரியவில்லை.

 

எதிர்காலத்தில் திருமாவளவன் ஒரு பொம்மை முதல்வராக ஆக்கப்பட வாய்ப்பு இருந்தால், அதற்கு அவர் தயார் என்று சூசகமாக இப்போது அனைவருக்கும் தெரிவித்து விட்டார். வேறு விஷயமில்லை.

 

 

3. கேள்வி: பெட்ரோல் டீசல் விலையை மத்திய எண்ணை நிறுவனங்கள் லிட்டருக்கு மூன்று ரூபாய் ஏற்றியதற்கு முதல்வர் விஜய் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அது ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், அந்த விலை உயர்வைத் திரும்பப் பெறவேண்டும் என்றும் கேட்டிருக்கிறார். விஜய்யின் கண்டனம் சரியா?

 

பதில்: மேற்காசியப் போரின் உலகளாவிய பாதிப்பு என்ன என்று அறியாதவர் போல விஜய் சினிமா டயலாக் பேசியிருக்கிறார்.

 

விஜய் முதல்வராகப் பதவி ஏற்றவுடன் தனது பகட்டான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அவகாசம் கேட்டது - எத்தனை நாட்களுக்கு என்றும் சொல்லாமல் அவகாசம் கேட்டது - ஏழை எளிய நடுத்தர மக்களைப் பாதிக்காதா? இருந்தாலும் அவர் அவகாசம் கேட்டது பரவாயில்லை, போகட்டும் - மற்றபடி அவர் தமிழக அரசின் கஜானாவை ஒரு பைசா கூட நஷ்டம் இல்லாமல் காப்பாற்றினால்.

 

திமுக-வை வீழ்த்திவிட்டு, அதிமுக-வையும் ஓரம் கட்டிவிட்டு ஆட்சிக்கு வந்த விஜய், நடிகர் என்ற நன்மதிப்பாலும் அவருடைய முகராசியாலும் ஆட்சிக்கு வந்திருக்கிறார். அவர் மக்களிடம் உலகப் பொருளாதார உண்மையை மறைத்து, அவர்களின் கண்களைக் கட்டி, அவர்களுக்கு ஐஸ் வைத்து, ஆட்சி செய்ய அவசியமில்லை. இது புரிவதற்கு அவரிடம் நேரான சிந்தனையும் தொலைநோக்குப் பார்வையும் இருப்பது அவசியம். இருப்பதாகத் தெரியவில்லை.

 

 

4. கேள்வி: "பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு மோடி அரசின் தவறே காரணம்" என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளாரே?

 

பதில்: அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் நாட்டின் மீது குண்டுகள் வீசித் தாக்கியது, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது, இவற்றுக்கு மோடி அரசின் தவறா காரணம்? உலகெங்கும் தற்போது பெட்ரோல் டீசலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதும், அவற்றின் சில்லறை விலை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, என்று பல நாடுகளில் - ஐக்கிய அரபு எமிரேட்சில் கூட - உயர்ந்ததும், மோடி அரசின் தவறினாலா?

 

சமீபத்தில் தமிழ்நாட்டில் வெயில் மக்களை வறுத்தெடுத்தது. சொல்லுங்கள் ராகுல்: இதற்கும் படுபாவி மோடிதானே காரணம்?

 

 

5. கேள்வி: "சி.வி. சண்முகம் தரப்பு அதிமுக ஆதரவு, விஜய்க்குத் தேவை இல்லை. விஜய்யால் 5 ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சியைத் தரமுடியும்" என்று காங்கிரஸ் தலைவர் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளாரே?

 

பதில்: கார்த்தி சொல்வதன் அர்த்தம் இது: 'எப்போது வேண்டுமானாலும் விஜய்யின் காலை வாரி ஆட்சியைக் கவிழ்க்கும் சக்தி காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு மட்டும் இருக்கவேண்டும், திரைமறைவாகத் திமுக-விற்கும் அந்த சக்தி இருக்கட்டும். இந்த எல்லாக் கட்சிகளின் சக்தியையும் சைபர் ஆக்கிவிடும் சி.வி. சண்முகம் தரப்பு அதிமுக ஆதரவு விஜய்க்குக் கிடைக்க வேண்டாம்'. கார்த்தி சிதம்பரத்திற்கு விஜய்யின் பதில் இதுவாக இருக்கும்: 'ஆசை தோசை அப்பளம் வடை!'

 

பகுதி 91 // 16.05.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr