Sunday, 15 February 2026

கேள்வி-பதில் (15.02.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: தமிழக அரசின் "உங்க கனவைச் சொல்லுங்க" திட்டத்தின் கீழ், முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கான தன் கனவை எப்படி விவரிப்பார்? சுருக்கமாகச் சொல்லவும்.

 

பதில்: உதயநிதி, இன்பநிதி.

 

 

2. கேள்வி: "போன மீட்டிங்ல நான் ஒரு பொலிடிகல் பாம் (political bomb) சொன்னேன். அதாவது, ஆட்சிலயும் பங்கு, அதிகாரத்திலயும் பங்குன்னு சொன்னேன். இப்ப அந்த பொலிடிகல் பாம் எல்லாக் கூட்டணிலயும் வெடிக்குது" என்று விஜய் பேசி இருக்கிறாரே?

 

பதில்: உண்மை. திமுக கூட்டணிக்குள், விஜய் போட்ட குண்டு வெடித்து, அதை ஒட்டி 'ஆட்சியில் பங்கு வேண்டும்' என்ற காங்கிரஸ் பிரமுகர்களின் கோரிக்கைச் சத்தம் பெரிதாக ஒலிக்கிறது. அதிமுக கூட்டணிக்குள், "கூட்டணியாகத் தேர்தலைச் சந்திப்போம், ஆட்சியை அதிமுக மட்டும் அமைக்கும்" என்று எடப்பாடி பழனிசாமி முதலில் உரத்து எழுப்பிய குரலை, மோடி மற்றும் அமித் ஷாவின் "என்.டி.ஏ ஆட்சி" முழக்கம் பெரிதாகவும், விஜய் குண்டு அடுத்ததாகவும், அமுக்கி வைத்து விட்டன.

 

 

3. கேள்வி: "தமிழகத்தில் திமுக அரசு கொண்டுவந்த மகளிர் உரிமைத் திட்டம் மட்டுமே தேர்தல் வெற்றியை உறுதிப் படுத்தும் என்று நம்புவது மூட நம்பிக்கை" என்று காங்கிரஸ் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்திருக்கிறாரே?

 

பதில்: 'தமிழகத்தில் திமுக-வுக்கு வால் பிடித்து மட்டும் காங்கிரஸ் அரசியல் செய்தால் இந்த மாநிலத்தில் காங்கிரஸ் வளரும் என்று நம்புவது மூட நம்பிக்கை' என்று அவர் சொல்வதாகப் பொருள் காண்க.

 

 

4. கேள்வி: "ஊழல் செய்த திமுக அமைச்சர்கள் சட்டத்திலிருந்து தப்ப முடியாது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறாரே?

 

பதில்: யார் அதிமுக-வின் தலைவராக இருந்து இதைச் சொன்னாலும் அதற்குப் பெரிய மதிப்பும் நம்பகத் தன்மையும் கிடைக்காது என்பது வருத்தம் தரும் உண்மை.

 

அதிமுக-வை விடவும் பாஜக-வைத் தீவிரமாக திமுக எதிர்க்கிறது. காரணம்: மோடி தலைமை வகிக்கும் பாஜக ஊழலைத் திடமாக அனுமதிக்காது, தமிழகத்தில் பாஜக-வும் பெரிதாக வளர வாய்ப்புண்டு என்பதால். வரும் சட்டசபைத் தேர்தலுக்காக அதிமுக, பாஜக-வுடன் கூட்டணி வைக்கக் காரணம்: அப்படிக் கூட்டணி வைக்காவிட்டால் முதலுக்கே மோசம் என்பது நிச்சயம். அதாவது, தமிழகத்தில் ஆட்சிக்கு வராவிட்டால் - அல்லது கணிசமான எம்.எல்.ஏ-க்களைப் பெறாவிட்டால் - கட்சி மேலும் தேயும், என்ற நிலைக்கு அதிமுக வந்துவிட்டதால். மற்றபடி, இதுவரை அதிமுக ஊழல் எதிர்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சியல்ல.

 


5. கேள்வி: புறநானூறு காலத்தில், நெற்களத்தில் நெல் தூற்றிக் கொண்டிருந்த ஒரு தமிழ்ப் பெண், அப்போது வந்த புலியை வெறும் முறத்தால் வீரத்துடன் விரட்டியதாக மரபுவழிக் கதைகள் சொல்கின்றன. ஒரு தமிழ்ப் பெண்ணின் முறமா புலியைத் திரும்பிப் போகச் செய்திருக்கும்?

 

பதில்: 'நிராயுதபாணியாக இருக்கும் ஒருவரை, அதுவும் ஒரு பெண்ணை, தாக்க வேண்டாம், அவருக்கும் அவரது ஓங்கிய கையில் இருக்கும் முறத்திற்கும் பெருமை கிடைத்தாலும் பரவாயில்லை, திரும்பிவிடலாம்' என்று அந்தப் புலியும் நினைத்திருக்கலாம். ஒரு தமிழ்ப் புலியின் அறம்!


பகுதி 51 // 15.02.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

கேள்வி-பதில் (14.02.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "திமுக-காங்கிரஸ் இடையேயான கூட்டணியில் எந்தப் பிரச்சனையும் இல்லை. எந்தக் குழப்பமும் இல்லை. நாங்கள் இணைந்தே தேர்தலைச் சந்திப்போம். அரசியலைத் தாண்டி ராகுல் காந்தி என் சகோதரரைப் போன்றவர்" என்று இந்தியா டுடே ரவுண்ட் டேபிள் நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசியதில் எவ்வளவு உண்மை இருக்கிறது?

 

பதில்: ஸ்டாலின் பேசியது உண்மை என்றால், அதை மற்ற சகோதரர் ராகுல் காந்தி ஏன் சமீப காலமாகச் சொல்லவில்லை? அதுவும், திமுக-வின் நிலைப்பாட்டுக்கு மாறாகக் காங்கிரஸ் கட்சியில் பலரும் தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று நெடு நாட்களாகப் பொதுவெளியில் கேட்கும் போது?

 

காங்கிரஸ், திமுக இரண்டு கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரம் பெரிய சொத்து மாதிரி - அது தித்திக்கும் பலன்கள் தரும் என்று இரு கட்சிகளுக்கும் தெரியும். அந்த இரு கட்சிகள் கூட்டணியாகத் தமிழக சட்டசபைத் தேர்தலில் வென்றால், அமையப் போகும் ஆட்சி பொதுச் சொத்து மாதிரி. பொதுச் சொத்தில் பங்குள்ள இரண்டு சகோதரர்களில் ஒருவர் மற்றவருக்குப் பங்கு தரமாட்டேன், ஆனால் மற்றவர் தனக்குப் பிரியமான சகோதரர் என்று சொன்னால் ஊர் மட்டுமல்ல, மற்ற சகோதரரே சிரிப்பார் - முன்பு அவர் சொத்து விஷயத்தில் அசமஞ்சமாக இருந்தாலும். ஒரு வேளை அந்தச் சகோதரர் இப்போதும் அசமஞ்சமாக இருப்பாரா என்று கேட்டால் - யாருக்கும் தெரியாது.

 

 

2. கேள்வி: பிப்ரவரிக்கான மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாயுடன் மார்ச் ஏப்ரல் மாதங்களுக்கு இரண்டாயிரம் சேர்த்து, அத்துடன் 'கோடைக்கால சிறப்புத் தொகுப்பு' என்ற பெயரில் கூடுதலாக இரண்டாயிரத்துடன் மொத்தம் ஐந்தாயிரம் ரூபாயை மகளிர் உரிமைத் தொகை திட்டப் பயனாளிகளுக்கு இந்த பிப்ரவரி மாதமே தமிழக அரசு அனுப்பிவிட்டது. இதை முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறாரே?

 

பதில்: 2026 சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி வெல்வது கடினம் என்று ஸ்டாலினே நினைப்பார். அதற்கு ஒரு புதுக் காரணம், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்.

 

சென்ற சட்டசபைத் தேர்தலில் திமுக-வுக்கு வாக்களித்தவர்கள், கடந்த ஐந்தாண்டுகளில் ஓட்டுரிமைை வயதடைந்த பின் வருகின்ற சட்டசபைத் தேர்தலில் சாதாரணமாகத் திமுக-வுக்கு வாக்களிக்க நினைப்பவர்கள் - இவர்களில் பலர் இம்முறை தவெக-வுக்கு ஓட்டுப் போடலாம். சில அதிமுக வாக்குகளையும் இந்த முறை தவெக ஈர்க்கும். அதிமுக-வை விட, அநேகமாகத் திமுக அதிக வாக்குகளைத் தவெக-விடம் பறிகொடுக்கும்.

 

விஜய் விஷயம் தவிர, திமுக ஆட்சியின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டதால் திமுக கூட்டணிக் கட்சிகள் இம்முறை மேலும் சில வாக்குகளை இழக்கும். எல்லாவற்றையும் சரிக்கட்ட, மனதிற்குள் 'தேர்தல் கால சிறப்புத் தொகுப்பு' என்று சொல்லியபடி, அரசுப் பணம் ஐயாயிரத்தை - மொத்தம் 6,550 கோடி ரூபாயை - விநியோகம் செய்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். கட்சிப் பணம் நைஸாகப் பாதுகாக்கப் படுகிறது.

 

 

3. கேள்வி: "தமிழ்நாட்டில் தவெக-வுக்கு ஆதரவு 30 சதவிகிதத்தைக் கடந்துவிட்டது" என்று தவெக தலைவர் விஜய் சேலம் கூட்டத்தில் பேசி இருக்கிறார். எந்த அடிப்படையில் இந்தப் புள்ளி விவரத்தை அவர் சொல்கிறார்?

 

பதில்: இன்னும் சட்டசபைத் தேர்தல் நடந்து வாக்கு எண்ணிக்கை முடியவில்லை என்ற அடிப்படையில்.

 

தவெக-வுக்கு வாக்களிப்பவர்களில் அதிகமானோர், விஜய்யை நேரில் பார்க்கும் ஆர்வத்தில் அவர் பேசும் கூட்டங்களுக்கு வரலாம். திமுக, அதிமுக மற்றும் பாஜக-வுக்கு வாக்களிப்பவர்களில் அவ்வளவு அதிக சதவிகித மக்கள் அக் கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கு நேரில் வரமாட்டார்கள். இது கவனிக்கத் தக்கது.

 

விஜய்யின் ஓட்டு வங்கியைக் குறைத்து மதிப்பிடவும் கூடாது. அது 15, 18, கூடக் குறையவா, துல்லியமாக எவ்வளவு, என்பது வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்தான் தெரியும். அதுவரை விஜய் கூடுதலாக ஆர்ப்பரிப்பார்; திமுக அவரை நினைத்து எவ்வளவு அச்சம் கொள்வது என்று தெரியாதிருக்கும்.

 

 

4. கேள்வி: "ஆயிரம், ரெண்டாயிரம், மூவாயிரம், அஞ்சாயிரம்னு உங்களுக்குப் பணம் கொடுப்பாங்க. எல்லாத்தையும் வாங்கிக்குங்க. அது உங்க பணம்தான். வாங்கிட்டு, தவெக-வுக்கு ஓட்டைப் போடுங்க"ன்னு விஜய் அவர் கட்சி பொதுக் கூட்டத்தில் பேசி இருக்கிறார். இப்படிப் பேசலாமா?

 

பதில்: பணம் வாங்கிய மக்களில் கணிசமானோர், பணம் கொடுத்த கட்சிக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று பணம் விநியோகிக்கும் கட்சி நினைக்கிறது. இதுபோக, போன தேர்தல் சமயத்தில் நமக்குப் பணம் பொருள் கொடுத்த கட்சி இம்முறை தரவில்லை என்றால் அது நம்மை உதாசீனம் செய்கிறது என்று பணம் பொருளுக்குப் பழக்கமான மக்கள் அக்கட்சி மீது அதிருப்தி கொள்ளலாம். ஆகையால் ஓட்டுக்குப் பணம் பொருள் தரும் கட்சி அதை நிறுத்த விரும்பாது - தேர்தல் முடிவு என்னவாக அமைந்தாலும், அதுபற்றி விஜய் இப்போது என்ன பேசினாலும்.

 

விஜய் பேசியது பற்றிக் கேஸ் வந்தால், "மக்களே, உங்களிடமிருந்து கொள்ளை அடிக்கப்பட்ட பணம் உங்களுக்குத் திரும்பி வந்தால் அதைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். இதை நான் சொல்வது தப்பு என்றால் இதுபற்றி இனி பேசவில்லை. வருகின்ற பணம் பற்றி நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்" என்று சொல்லி விசில் ஒலியை மேலும் கிளப்புவார். திமுக-வும் கேஸ் போட்டு இந்த விஷயம் அதிக வெளிச்சம் பெற விரும்பாது.

 


5. கேள்வி: "காலனித்துவ மனநிலையைக் கைவிடவேண்டும்" என்று பிரதமர் மோடி பேசி இருக்கிறார். இது நடக்குமா?

 

பதில்: நடந்துவிட்டது - நம்மைக் காலனியாக ஆட்சி செய்த பிரிட்டிஷ் அரசாங்கம் இப்போது இந்தியாவை அணுகும் விதத்தில். ஆனால் இந்திய அரசியல் தலைவர்கள் ஆட்சியில் அமர்ந்து மக்களைச் சுரண்டும் சுதேசி காலனித்துவம் பல கட்சிகளிடம் வேரூன்றிவிட்டது - அந்தக் கட்சிகள் வெள்ளையர்களை மிஞ்சிவிட்டன.


பகுதி 50 // 14.02.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

கேள்வி-பதில் (11.02.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

 1. கேள்வி: ராஜ்ய சபா எம்.பி கமல் ஹாசன், தாடி சகிதமாக அந்த சபைக்குச் சென்று முதன் முதலில் பேசினார் - ஆங்கிலத்திலும் தமிழிலும். அவரைப் பாராட்டிய கவிஞர் வைரமுத்து, "அன்புள்ள கமல் எம்.பி அவர்களே! கன்னிப் பேச்சல்ல; காளைப் பேச்சு.....நாடாளுமன்றமே நிமிர்ந்து அமர்ந்தது, தாடிச் சிங்கத்தின் தமிழ் கேட்டும்; ஆங்கிலம் கேட்டும்..... காடு அதிரட்டும், களிறே பிளிறு " என்றெல்லாம் எழுதி இருக்கிறார். சிங்கம், களிறு, பிளிறு, நாடாளுமன்றமே நிமிர்ந்து அமர்ந்தது, என்ற பெரிய வார்த்தைகளுக்கு இங்கு என்ன அர்த்தம்?

 

பதில்: பெரிய அர்த்தம் ஒன்றுமில்லை. பரிதாபமான அர்த்தம் தான்.

 

ஈ.வெ.ரா தமிழை இகழ்ந்து எழுதியதை ("தமிழ் படித்தால் பிச்சை கூடக் கிடைக்காது") அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் மேற்கோள் காட்டி, அப்படியான மனிதரைத் திமுக-வினர் தொழுகிறார்கள் என்று விமர்சனம் செய்தார். அமைச்சர் அவ்வாறு பேசியது 11 மாதங்கள் முன்பு. அதை அரையும் குறையுமாகக் கேட்டிருந்த கமல் ஹாசன், முதன்முதலில் ராஜ்ய சபாவில் பேசியபோது, நிர்மலா சீதாராமன் முன்பு மேற்கோள் காட்டியது அவரது சொந்தக் கருத்து, ஈ.வெ.ரா-வுடையது அல்ல, என்பது போல் பித்துக்குளித்தனமாக அமைச்சரை அந்த அவையில் பரிகசித்தார்.

 

'வெண்தாடி வேந்தர்' எனப் பல அபிமானிகள் போற்றும் ஈ.வெ.ரா எழுதியதை - அது அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எண்ணமாகச் சொன்னது போல் - இகழ்ந்த கமல் ஹாசனைத் 'தாடிச் சிங்கம் ' என்று சிலாகிக்கிறார் அசட்டு வைரமுத்து. அதோடு, ஈ.வெ.ரா எழுதிய வரிகளை - அதை யார் சொன்னது என்றே அறியாமல் - நாடாளுமன்றத்தில் விளாசிய கமல் ஹாசனை நோக்கி, "களிறே பிளிறு!" என்று குதூகலிக்கிறார் வைரமுத்து. அதாவது, எதுவும் புரியாமல் எதையும் அறியாமல் கமல் ஹாசன் தொடர்ந்து கோமாளித்தனமாகப் பிதற்றவேண்டும், கேவலப்பட வேண்டும், என்று வைரமுத்து கமல் ஹாசனை வாழ்த்துகிறார். கவியே உளறு! கலைஞனே கேவலப்படு!

 

 

2. கேள்வி: ஒரு பாராட்டு விழாவில் கல்லூரி மாணவிகளிடையே பேசிய முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்தின் ஒரு வசனத்தை நினைவுபடுத்தி, "கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது. கஷ்டப்படாம கிடைச்சா அது நிலைக்காது. கடின உழைப்பு வேண்டும்" என்று மாணவிகளுக்கு அறிவுரை சொல்லி இருக்கிறாரே?

 

பதில்: ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின், அயராமல் எவ்வளவு கஷ்டப்பட்டுத் திமுக எம்.எல்.ஏ ஆகிப் பின்னர் துணை முதல்வராக ஆனார் என்பது தமிழகம் அறிந்தது. ஸ்டாலின் பேசிய பொன்னான வார்த்தைகளை உதயநிதியே மேடை ஏறிச் சொல்லி இருந்தால் அதன் நம்பகத் தன்மை தகதகவென்று ஒளிரும். அப்போது மேடையில் ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் பெருமையுடன் அமர்ந்திருந்தால், "கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது" என்ற ஸ்டாலின் அறிவுரை இன்னும் பிரகாசிக்கும்.

 

 

3. கேள்வி: வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பப் படிவங்களைத் தங்கள் கட்சியினருக்கு விற்பனை செய்யத் தேமுதிக பந்தல் அமைத்துத் தயாராக இருந்தும் அவற்றை வாங்க அதிகம் யாரும் வராமல் போனது ஏன், எதனால்?

 

பதில்: விஜயகாந்த் நினைவைப் போற்றும் அவரது எண்ணற்ற ரசிகர்கள், அவரது அரசியலால் ஈர்க்கப் பட்டவர்கள், இன்றும் உண்டு, ஆனால் அவர் தொடங்கிய தேமுதிக-வை வழிநடத்தும் அவரது குடும்பத்தினர் மதில்மேல் பூனையாக நிற்பது, வழவழா கொழகொழா அரசியல் செய்வது, விஜயகாந்த் அபிமானிகளை தயங்கச் செய்கிறது.

 

இன்னொன்று. திமுக-வோடு அல்லது அதிமுக-வோடு அல்லது தவெக-வோடு கூட்டணி வைத்தாலும், அல்லது தனித்தே போட்டியிட்டாலும், அதில் எது நடக்கும் என்று இப்போது தெரியாவிட்டாலும், தேமுதிக வேட்பாளராகத் தேர்தலில் போட்டியிட நாங்கள் தயார் என்று அந்தக் கட்சியினரை எண்ணச் செய்யும் வசீகரத் தலைமை பிரேமலதாவிடம் இல்லை.

 

 

4. கேள்வி: 'தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் எங்களுக்குப் பங்கு வேண்டும்' என்று தமிழக காங்கிரஸில் பல குரல்கள் பலத்து ஒலிக்கின்றன. ஆனால், "ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது. அது எங்களுக்கும் தெரியும், காங்கிரஸுக்கும் தெரியும்" என்று திமுக தலைவர் ஸ்டாலின் இந்தியா டுடே பேட்டியில் இப்போது கூறி இருக்கிறார். திமுக ஏன் நிகழ்கால யதார்த்தத்தைப் பார்க்க மறுக்கிறது?

 

பதில்: ஒரு பிரதான கட்சி தலைமை தாங்கும் ஆட்சியில், ஒவ்வொரு துறையிலும் நிர்வாகம் நேராகத்தான் நடக்கும் என்றால், கூட்டாகத் தேர்தலில் வென்று ஆட்சி அமைக்கத் துணை செய்த முக்கிய கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் பங்களிப்பது நியாயம், அவசியம், என்று அந்தப் பிரதான கட்சியின் தலைமை நினைக்கும்.

 

'நமது நிர்வாகம் இப்படி அப்படி இருக்கும். எதுவோ எங்கிருந்தோ பெறப்பட்டு எங்கேயோ போய்ச் சேரும், நாம் நம்பிக்கை வைத்துள்ள நமது கட்சி அமைச்சர்களுக்கு மட்டும் சில விஷயங்கள் சிறிதளவு தெரிந்தால் போதும், மற்ற கட்சியினரை அமைச்சரவையில் சேர்த்தால் வேண்டாத விஷயங்கள் வெட்டவெளிச்சம் ஆகும், நமக்கும் நஷ்டங்கள் ஏற்படும்' என்று அந்தப் பிரதான கட்சியின் தலைமை நினைத்தால், அது பிற கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு அளிக்கத் தயங்கும்.

 

திமுக முடிவாக என்ன கணக்குப் போடுகிறது - ஆட்சிப் பலன் ஆசைகள் முக்கியமா, அல்லது தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை அதிகரிப்பது முக்கியமா - என்று பார்க்க வேண்டும்.

 


5. கேள்வி: சூரியனிலிருந்து பெறும் ஒளியைச் சந்திரன் பிரதிபலிக்கிறது. ஆனால் கவிஞர்களிடம் நிலவொளி பெயர் பெறுகிறது, சூரிய ஒளி அல்ல. ஏன் இப்படி?

 

பதில்: தமிழகத்தில் செயல்படுத்தப் படும் மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி, அவற்றைத் தன்னுடையதாகக் காண்பித்து மாநிலத்தில் பெயர் வாங்குகிறது திமுக அரசு. நிலவொளி, கவிஞர்களின் போற்றுதலைப் பெறுவதும் அவ்வகை.

 

கவிதைக்குப் பொய் அழகு. அரசியலுக்குப் பொய் அமிர்தம்.


பகுதி 49 // 11.02.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

Wednesday, 11 February 2026

கேள்வி-பதில் (08.02.20226)

 

 

கேள்வி-பதில்

 

 

 1. கேள்வி: என்ன இருந்தாலும், "தமிழன் பிச்சை எடுக்க மாட்டான்" என்று கமல் ஹாசன் ராஜ்ய சபாவில் பேசியது, தமிழன் என்ற பெருமித உணர்வில் பேசியதாகாதா?

 

பதில்: பொய்யில் என்ன பெருமிதம்?

 

சைக்கிள் வெளிநாட்டில் உருவாக்கப் பட்டு பின்னர் இந்தியாவில், தமிழ்நாட்டில், உபயோகத்துக்கு வந்தது. ஆகையால் அந்த வாகனத்துக்கு ஒரு தமிழ்ச் சொல் இருக்கவில்லை. தமிழர்களிடம் பிச்சை இருந்ததால் தானே அதற்கான தமிழ்ப் பெயரும் இருந்து வருகிறது?

 

"கற்கை நன்றே கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே" என்ற வெற்றிவேற்கை வரிகளிலும் அந்தச் சொல் உண்டு.  "தர்மம் தலை காக்கும்" என்ற பழமொழியில் பிச்சை அளிப்பதும் உள்ளடங்கும். தமிழகத்தின் வழிபாட்டுத் தலங்களின் வெளியே கையில் நசுங்கிய தட்டுடன் காத்திருப்பவர்கள் செய்யும் செயல் என்ன? அவர்கள் தமிழர்கள் தானே?

 

பிச்சை எடுப்பதைவிட, கிடைக்கின்ற வேலை செய்தால் அதிக வருமானம் பார்க்கலாம் என்ற நிலையைப் பிச்சைக்காரர்களுக்கு உண்டாக்காமல்,  தமிழ்நாட்டின் பொருளாதாரத்தைத் தூங்கச் செய்தது, மாநிலத்தை ஆள்கின்ற தமிழர்கள்தான் - அந்தத் தமிழர்கள் அனுப்பித்தான் கமல் ஹாசன் ராஜ்ய சபாவில் வெட்டி முழக்கம் செய்தார்.

 

 

2. கேள்வி: "தமிழ்க் கடவுள் முருகன், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாக இருக்கிறார்" என்று அமைச்சர் சேகர்பாபு பேசி இருக்கிறாரே?

 

பதில்: அடுத்த ஆட்சியைத் திமுக அமைத்தால் அப்போதும் தனக்கு மந்திரி பதவி கிடைக்க, சேகர்பாபு இப்போதிலிருந்தே மனமுருகி அர்ச்சனை செய்வது இறைவன் முருகனுக்கு அல்ல, கடவுள் ஸ்டாலினுக்கு.

 

தான் தினமும் பக்தி செலுத்தாவிட்டால் முருகப் பெருமான் கூடத் தன்னை மன்னிப்பார், அதற்காகத் தன்னைத் தண்டிக்க மாட்டார், ஆனால் ஸ்டாலின் பெருமான் அப்படியல்ல என உணர்ந்த அரசியல் ஞானி சேகர்பாபு.

 

 

3. கேள்வி: "பழைய அடிமை, புதிய அடிமை, என எத்தனை அடிமைகள் வந்தாலும் சட்டசபைத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக நிச்சயம் வெற்றி பெறும்" என்று துணை முதல்வர் உதயநிதி தஞ்சாவூரில் அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறாரே?

 

பதில்: அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியை இவ்விதம் இழித்துப் பேசவேண்டும் என்று ஏதோ சொல்லி இருக்கிறார், உதயநிதி. ஆனால் திமுக-விடம் உள்ள பழைய அடிமைகள், அக்கட்சியில் வந்துசேரும் புதிய அடிமைகள், துணையுடன் வருகின்ற தேர்தலில் திமுக ஜெயிக்கும் என்றுதான் ஸ்டாலினும் உதயநிதியும் ஆசைப்படுவார்கள்,  கணக்குப் போடுவார்கள்.

 

எப்போதும் கட்சித் தலைமையின் குறிப்பறிந்து பணிந்து வேலை செய்ய, கட்சித் தலைமையின் புகழ்பாட, கட்சித் தலைமை எதிர்பார்ப்பதைக் கொடுக்க, எதிர்க்கட்சித் தலைவர்களைத் திட்டி கட்சித் தலைமையை மகிழ்விக்க, என்று பல நிலைகளில் பணி செய்யும் நவீன அடிமைகள் திமுக-வில் உண்டு.

 

வாரிசுத் தலைமை, எதேச்சாதிகாரத் தலைமை, உள்ள கட்சிகளில் சுயநலமாகத் தலைமையைத் தொழும்  அடிமைத்தனம் இருக்கும்.

 

 

4. கேள்வி: "இந்தியாவும் மலேசியாவும் தமிழ் மொழி மீதான அன்பினால் ஒன்றுபட்டுள்ளன" என்று மலேசியாவில் பிரதமர் மோடி பேசி இருக்கிறார். அது மலேசியாவில் எடுபடுகிறது. அதுபோன்ற உணர்வோடு, இந்திய தேசியத்துடன் ஒன்றுபட்டு முன்னேறும் நற்சிந்தனை தமிழகத்தின் முக்கிய கட்சியான திமுக-வுக்கு ஏன் இல்லை?

 

பதில்: மலேசியத் தலைவர்கள் அரசியல் பிழைப்புக்காகத் தமிழைப் போற்றுவதில்லை, பல வழிகளில் சுயநலத்தோடு கொழிக்கத் தமிழ் மொழியை ஒரு பாதையாகப் பயன்படுத்துவதில்லை. ஆகையால் மொழி அடிப்படையில் மோடி வெளிப்படுத்திய சிநேக உணர்வை மலேசியா வரவேற்கும், ஆனால் திமுக மோடியிடம் எவ்விதத்திலும் தமிழ் சார்ந்து நேசக்கரம் நீட்டாது.

 

மத்திய அரசு தமிழை நேர்மையாகப் போற்றினால், தாங்கள் தேசியத்தை எதிர்க்கப் பிரயோகிக்கும் தமிழ், தமிழன் என்ற அரசியல் ஆயுதங்கள் மழுங்குவதாக திமுக கவலைப் படும், ஆகையால் மோடியை இன்னும் எதிர்க்கும். ஆனால் கணிசமான தமிழ் மக்களைத் திமுக கட்டிப் போட்டிருப்பது, தனது போலித் தமிழ்ப் பற்றால் அல்ல; அது திமுக-வின் அரசியல் வலிமையால்.

 


5. கேள்வி: 'தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை' என்பது பழமொழி. தந்தையைப் போல யார் இருப்பார்கள்?

 

பதில்: பழமொழியின் படி, இறுதியில் தந்தையைப் போல யாரும் இருக்கமாட்டார்கள். காரணம், பழமொழியின் லாஜிக். தந்தையே அவர் தாயைப் போல இருப்பாரே!


பகுதி 48 // 08.02.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr