|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: 'சட்டசபைத் தேர்தலில் திமுக தோற்றதற்கான உண்மையான
காரணங்களைக் கண்டறிய வேண்டும்' என்பதற்காக, மு.க. ஸ்டாலின் 36 பேர் கொண்ட குழுவை
அமைத்திருக்கிறார். தோல்விக்கான காரணங்கள் எவை எவையென்று அந்தக் குழு
கண்டறியலாம்? பதில்: சட்டசபைத்
தேர்தலில் திமுக தோற்றதற்கான காரணங்கள் இரண்டு. ஒன்று: விஜய் தங்களின் மனம்
கவர்ந்த சினிமா நடிகர் என்பதால் சாதாரண மக்கள் விஜய்யும் அவர் கட்சியும்
ஜெயிக்கவேண்டும் என்று விரும்பினார்கள். இரண்டு: அரசுப் பணத்தையும் மற்ற
பணத்தையும் மக்களுக்கு அள்ளி வீசி அவர்களின் ஓட்டுகளை ஒரு கட்சி வாங்க
நினைத்தாலும் மக்கள் அவற்றைப் பெற்றுக்கொண்டு பெப்பே சொல்ல நினைத்தால்
பெப்பேதான். வேலையில்லாத 36 குழுவினர், முதலாவது
காரணத்தை அரை மனதுடன் ஏற்கலாம்; இரண்டாவது
காரணத்தை அரைக்கால் மனதுடன் கூட ஏற்க விரும்ப மாட்டார்கள். இன்னொன்று. தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிமிடத்தில், ஸ்டாலினுக்கும் மற்ற திமுக தலைவர்களுக்கும் அந்த
இரண்டு காரணங்கள் பொட்டில் உறைத்திருக்கும். |
|
2. கேள்வி: "மு.க. ஸ்டாலின் ஒரு நடமாடும் அரசியல் பல்கலைக்
கழகம் எனச் சமூக வலைத்தளங்களில் அனைத்துத் தரப்பினரும் பாராட்டு" என்று
கலைஞர் செய்திகள் சேனலில் காண்பிக்கிறார்களே? பதில்: இன்று தமிழகப் பல்கலைக் கழகங்களின் தரம், சொல்லும்படியாக இல்லை. அதை ஒரு உவமானத்தின்
மூலம் இப்படி அழுத்தமாகச் சுட்டிக் காட்ட அவசியமில்லை. |
|
3. கேள்வி: "விஜய் முதல்வர் ஆனதில் எனக்குப் பொறாமை இல்லை.
எனக்கிருப்பது ஆச்சரியம் கலந்த சந்தோஷம். ஒரு அப்ரீசியேஷன். 52 வயதில் தனி
ஆளாகத் தேர்தலில் போட்டியிட்டு விஜய் முதல்வர் ஆகி இருக்கிறார். இந்த விஷயத்தில், எம்.ஜி.ஆர், என்.டி.ஆரை விட
அவர் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார்" என்று ரஜினிகாந்த் ஒரு டிவி
பேட்டியில் கூறி இருக்கிறாரே? பதில்: ரஜினிகாந்தின்
பெரிய மனது, அவர் விஜய்யை வெளிப்படையாகப்
பாராட்டியிருக்கிறார். ரஜினிகாந்தும் ஆச்சரியப்படத் தக்க மனிதர். விஜய்யும் அவரது சட்டசபைத்
தேர்தல் வெற்றியினால் ஆச்சரியப்படத் தக்க மனிதர். ஆனால் ரஜினிகாந்திடம் உள்ள
தேசிய கண்ணோட்டம் விஜய்யிடம் தென்படவில்லை. ரஜினிகாந்திடம் உள்ள நேர்
சிந்தனையும் அசாதாரண நல்லதனமும் விஜய்யிடம் தெரியவில்லை. மற்றபடி அரசியலில்
விஜய் சூட்டிக்காக, தீர்மானம் உள்ளவராகத் தெரிகிறார் -
ரஜினியை விடச் சற்று அதிகமாகவும். ஆனால் போற்றப்படும் ஒரு அரசியல் தலைவராகத்
திகழ அது மட்டும் போதாது. தேர்தலில் பெரிய வெற்றி அடைந்த விஜய் குறுகிய எண்ணமுள்ள அரசியல் செய்வாரா; அல்லது சமயோசிதமும் சாமர்த்தியமும் கொண்ட, அதே சமயம் வெளிப்படைத் தன்மையும் நம்பகத் தன்மையும்
கூடிய அரசியல் செய்வாரா என்பதைப்
பொறுத்திருந்து பார்க்கவேண்டும். |
|
4. கேள்வி: "வேட்பாளர்கள் யார் என்றே தெரியாமல்
த.வெ.க-விற்கு மக்கள் வாக்களித்துள்ளார்கள். இது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது
அல்ல" என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பேட்டி
கொடுத்திருக்கிறாரே? பதில்: பல காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார் என்று
தெரிந்தும் தேர்தல்களில் மக்கள் அவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இது
ஜனநாயகத்திற்கு இன்னும் ஆபத்தாயிற்றே! |
|
5. கேள்வி: முதல்வர் விஜய்யின் புதிய அரசு பற்றிக் கருத்துத்
தெரிவித்த நடிகர் கமல் ஹாசன், "புதியவர்களைக் குறைவாக எடைபோடக் கூடாது. அவர்களிடம்
அதிகமும் எதிர்பார்க்கக் கூடாது" என்று சொல்லி இருக்கிறாரே? பதில்: 'குறைவாக எடைபோடக் கூடாது' என்று பேசியதன் மூலம், "விஜய் சாதனைகள் புரிவார். இனி வருவது உங்களுக்கான
காலம்" என்று சூசகமாகச் சொல்லி விஜய் கட்சியினரைத் தூக்கிப்
பிடித்திருக்கிறார் கமல். 'அதிகம் எதிர்பார்க்கக் கூடாது' எனப் பேசியதன் மூலம், "விஜய் பெரிதாகச் செய்வதற்கு வாய்ப்பில்லை.
பொறுத்திருங்கள், பின்னால் உங்களுக்கான காலம் வரும்"
என்று மறைமுகமாகத் திமுக-வினரையும் தாங்கிப் பிடித்திருக்கிறார் அவர். இந்தச் சின்னத்துல ஓங்கி ஒரு குத்து. அந்தச் சின்னத்துல பளிச்னு ஒரு குத்து. கமல்டா! |
|
பகுதி 92
// 17.05.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |