Wednesday, 11 March 2026

கேள்வி-பதில் (09.03.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1967ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி அண்ணாதுரை தலைமையில் திமுக முதன் முறையாக ஆட்சி அமைத்ததைக் குறிப்பிட்டு "அன்றுதான் தமிழினம் தலை நிமிர்ந்த நாள்" என்றும் அந்த நாள் "தமிழகத்தின் எழுச்சிக்கும் தமிழினத்தின் மீட்சிக்கும் விதையூன்றிய நாள்" என்றும் சொல்லியிருக்கிறாரே?

 

பதில்: சுதந்திர இந்தியாவில் வேண்டுமென்றே தமிழினத்தைத் தலை குனியவைத்து, தமிழினத்தின் எழுச்சிக்கான வாய்ப்பைக் காலில் மிதித்து தமிழகத்தில் ஆட்சி செய்தது காங்கிரஸ் கட்சி என்கிறார் ஸ்டாலின். அந்தக் காங்கிரஸ் கட்சியை 1967ல் திமுக தான் ஆட்சியிலிருந்து வெளியேற்றியது என்பதையும் அவர் பெருமையுடன் நினைவு கூர்கிறார். வரும் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, மற்ற தோழமைக் கட்சிகளுக்கு இல்லாத அதிகத் தொகுதிகளை ஒரு கட்சிக்கு வழங்கி, தயக்கம் காட்டிய அந்தக் கட்சியைத் திமுக இழுத்துப் பிடித்து இப்போது ஒரு கூட்டணியை முடித்திருக்கிறது என்றால், அந்த ஒரு கட்சியும் காங்கிரஸ் தான்.

 

பேசுகிற ஸ்டாலினுக்கு விவஸ்தை இல்லை. மௌனமாகக் கேட்கிற காங்கிரஸ் தலைவர்களுக்கு வெட்கம் இல்லை.

 

அரசின் அலட்சியம் ஏற்றுகிற சுமையால் முதுகு வளைய, தமிழின் பெயரால் தலையை மட்டும் ஸ்டாலின் நிமிர்த்திப் பிடிக்க, கழுத்து வலியுடன் தமிழினம் தரும் காட்சி பரிதாபமானது!

 

 

2. கேள்வி: "ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதிஷ் குமார் பிஹாரில் பத்து முறை முதல்வராகப் பதவி ஏற்றவர். அவர் தற்போது முதல்வர் பதவியிலிருந்து விலகி ராஜ்ய சபா உறுப்பினர் ஆகி இருக்கிறார். நிதிஷ் குமாருக்கு அந்த இறக்கத்தை ஏற்படுத்தியது, கூட்டணிக் கட்சியான பாஜக. அவருக்கு நேர்ந்த அதே நிலைமை இனி பழனிசாமிக்கு ஏற்பட்டு, அவரும் பாஜக-வினால் அதிமுக பொதுச் செயலர் பதவியிலிருந்து மாற்றப் படுவார்" என்று முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறாரே?

 

பதில்: ஒரு எதிர்க் கட்சியான அதிமுக-வின் இப்போதைய பிரதான நோக்கம் என்ன? ஆட்சியிலிருக்கும் திமுக-வைத் தேர்தலில் தோற்கடித்து, அதிமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதாகத்தான் இருக்க முடியும். அதில்லாமல், ஒரு பழனிசாமியோ பாலுசாமியோ அதிமுக-வின் பொதுச் செயலராகத் தொடர்ந்து நீடிக்க வேண்டும், இன்னொரு பக்கம் திமுக தமிழகத்தைத் தொடர்ந்து ஆள வேண்டும் என்பதா அதிமுக-வின் லட்சியமாக இருக்க முடியும்?

 

நிதிஷ் குமார் பிஹாரில் நீண்ட வருடங்கள் பெருமை கண்ட மாதிரி, அதிமுக தலைவர் பழனிசாமியும் தமிழகத்தில் சிறப்படைந்து நிலைக்க வேண்டும், அதற்குத் தடை வரக்கூடாது, என்று ஸ்டாலின் துடிக்கிறாரா? அப்படியானால், "நிதிஷ் குமார் மாதிரிப் பழனிசாமி பல முறை தமிழக முதல்வராகப் பதவி ஏற்பதைத் திமுக விரும்புகிறது. அதற்கு ஏற்பத் திமுக-வும் தேர்தல்களில் அதிமுக-வுக்கு ஆதரவளித்து நீண்ட காலம் சட்டசபையில் எதிர்க் கட்சியாக அமரும்" என்று ஸ்டாலின் அறிவிக்கட்டுமே!

 

 

3. கேள்வி: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தால், 60 வயது வரையிலான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2,500 ரூபாய், அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம், மாநிலத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தங்க மோதிரம், திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு 1 சவரன் தங்கம் மற்றும் பட்டுச் சேலை, ஆகியவற்றை மாநில அரசு வழங்கும் என்று விஜய் அறிவித்திருக்கிறாரே?

 

பதில்: தற்போதைய திமுக கூட்டணிக்கு மாற்றாக தவெக ஆட்சிக்கு வந்தாலும், கொள்கை அளவில் திமுக கவலைப்பட வேண்டாம். திமுக மார் தட்டும் திராவிட மாடல் ரூட்டில், திமுக-வை விட வேகம் காட்டுகிறார் விஜய்.

 

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைத்து விஜய் முதல்வரானால் மாநிலத்தின் கடன் சுமை எகிறும், அரசின் கருவூலம் கதறும். திமுக தோற்றாலும், திமுக-வின் திராவிட மாடல் நிர்வாகம் நிலைக்கும்.

 

 

4. கேள்வி: பாமக நிறுவனர் ராமதாஸ், "சட்டசபையில் 234 எம்.எல்.ஏ-க்களும் பெண்களாக இருக்க வேண்டும்" என்று ஒரு மகளிர் தின விழாவில் பேசி இருக்கிறாரே?

 

பதில்: இந்திரா காந்தி, மார்கரெட் தாட்சர், கோல்டா மேயர் ஆகியோர் தமது நாட்டின் பிரதமர்களாக இருந்தனர். அவர்கள் பெண்கள் என்பதால் அந்த நாடுகளின் ஆண்களுக்குக் கேடு வரவில்லை. அதைப்போல் ஆண்கள் பலர் எம்.எல்.ஏக்களாக, முதல்வர்களாக இருந்தால் மட்டும் பெண்களுக்குக் கேடில்லை.

 

எதை வேண்டுமானாலும் சொல்லி எல்லாப் பெண்களின் வாக்குகளை ஈர்க்க வேண்டும் என்ற பைத்தியக்கார எண்ணத்தில்தான் கேடு இருக்கிறது - அது அநேகமாக அனைத்து முன்னணிக் கட்சிகளிலும் உண்டு.

 


5. கேள்வி: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டுப் பேசும்போது, "பெண்கள் ஆண்களை விட அதி புத்திசாலிகள்" என்று ராகுல் காந்தி கூறி இருக்கிறாரே?

 

பதில்: தனக்குப் பெண்களின் வாக்குகள் அதிகம் கிடைப்பதில்லை என்ற சந்தேகத்தில் ராகுல் இப்படிப் பேசியிருக்கலாம்!


பகுதி 64 // 09.03.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

Friday, 6 March 2026

கேள்வி-பதில் (05.03.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: சட்டசபைத் தேர்தலுக்காக திமுக மற்றும் காங்கிரஸ் இடையே இழுபறிக்குப் பின் தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. அதன் பிறகு காரில் ஏறவிருந்த முதல்வர் ஸ்டாலின் சற்று நின்று, இளநீர்த் தேங்காயைச் சீவுவது போல் தனது ஒரு உள்ளங்கையை சிறிதாகக் காற்றில் வீசிப் பத்திரிகையாளர்களை நோக்கி ஒரு சைகை காண்பித்தார் - அதன் வீடியோ டிவி-யில் வந்தது.

 

"தொகுதி உடன்பாடெல்லாம் முடிந்து, 'ஓவர்' என்று நான் பத்திரிகையாளர்களுக்குக் காண்பித்த சிக்னல் அது, பின்னர் அது வைரல் ஆகிவிட்டது" என்று ஸ்டாலின் விளக்கம் அளித்திருக்கிறாரே?

 

பதில்: 'தவெக-வுடன் கூட்டணி வைத்துத் திமுக-வை வீழ்த்த நினைத்த காங்கிரஸை எங்கள் கூட்டணிக்குள் இழுத்துச் சாய்த்து விட்டோம்' என்றும் முதல்வர் அந்தச் சைகை மூலம் அறிவித்திருக்கலாம்!

 

 

2. கேள்வி: அமெரிக்கா-இஸ்ரேல் தொடர்ந்த ஈரான் மீதான போர், ஆறு நாட்களாகியும் முடிவதாகத் தெரியவில்லை. இதுபற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் கவலைப்பட மாட்டாரா?

 

பதில்: டிரம்ப் எதைப் பற்றிப் பொறுப்புடன் கவலைப் படுவார் என்று யாரும் ஊகிக்க முடியாது. ஆனால் இந்தப் போர் எப்போது முடிந்தாலும் இது டிரம்ப் முடித்துவைத்த ஒன்பதாவது போர் என்பதை நோபல் கமிட்டி ஏற்றுக் கொண்டு, அவருக்கு அமைதிக்கான அடுத்த நோபல் பரிசு வழங்கப் படுமா என்பது அவரது கவலையாக இருக்கும்.

 

 

3. கேள்வி: எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்கியபோது அவருக்குப் பெரிய அரசியல் பலம், அவரது சினிமா ரசிகர்கள். நடிகர் விஜய்க்கும் அப்படித்தான். ஆட்சியிலிருந்த திமுக-வை எதிர்த்து எம்.ஜி.ஆர் தனது கட்சியை வளர்க்கத் தொடங்கினார். விஜய்யும் அதைச் செய்கிறார். இருவரின் பிரதான நோக்கத்திற்கும் செயல்களுக்கும் என்ன பெரிய வேறுபாடு?

 

பதில்: எம்.ஜி.ஆர் அதிமுக-வைத் துவங்குவதற்கு முன், அவர் திமுக-விலிருந்து வெளியேற்றப் பட்டதால் பொதுமக்களிடமிருந்தும் ஒரு பரவலான அனுதாப அலை அவருக்குக் கிடைத்தது. அவர் அதிமுக-வை ஆரம்பித்தபோது, திமுக-வின் சில முக்கியத் தலைவர்களும் அவர் கட்சியில் சேர்ந்தனர், திமுக-வில் கருணாநிதியை விட எம்.ஜி. ஆரை அதிகம் நேசித்த அக்கட்சியினர் பலர் அதிமுக-வுக்குத் தாவினார்கள். எம்.ஜி.ஆரின் உடனடி அரசியல் ஏற்றத்துக்குக்கு உதவிய இந்தச் சூழ்நிலை விஜய் விஷயத்தில் இல்லை.

 

எம்.ஜி.ஆர் அரசியல் ஞானி இல்லை. சினிமாவில் ஊற்றெடுத்த மக்கள் ஆதரவு அவருக்கு அரசியலில் உச்சம் தந்தது, கடைசிவரை அவர் நிலைத்தார்.

 

விஜய்யும் அரசியல் ஞானி இல்லை. சினிமாப் புகழ் மூலம் கிடைத்த அவரது அரசியல் பலம் குறிப்பிடத்தக்கது என்றாலும் அது எவ்வளவு விரிவானது என்பது தெரியவில்லை. வரும் சட்டசபைத் தேர்தலில் கௌரவமான எண்ணிக்கையில் அவர் கட்சிக்கு எம்.எல்.ஏ-க்கள் கிடைக்காவிட்டால் அவர் அரசியலில் நிலைத்து நிற்பாரா என்பது இப்போது தெரியாது.

 

திமுக-வுக்கு எதிரான ஓட்டுகளை இன்று அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகியவை பிரதானமாகப் பெறுகின்றன. திமுக மற்றும் அந்த மூன்று கட்சிகளுக்கு எதிராகப் போட்டியிட்டு - அதில் அதிமுக-பாஜக கட்சிகளின் கூட்டணியை எதிர்த்து - விஜய் ஆட்சி அமைக்கும் அளவுக்கு ஓட்டுகள் பெற்றால், அது எம்.ஜி.ஆர் செய்ததை விடவும் பெரிய சாதனை - அதைக் கற்பனை செய்ய முடியவில்லை.

 

இதைத் தவிர, எம்.ஜி.ஆரின் நடந்து முடிந்த தேர்தல் வெற்றிகளையும் விஜய்யின் நடக்கப் போகும் தேர்தல் போராட்டத்தையும் ஒப்பிட்டு விஜய்யை இப்போது மதிப்பிட முடியாது. வாக்காளர்களிடம் உள்ள அவருடைய செல்வாக்கின் அளவு, வரும் தேர்தலுக்குப் பிறகுதான் அனைவருக்கும் தெரியும்.

 

எம்.ஜி.ஆருக்கும் விஜய்க்கும் உள்ள ஒரு முக்கிய வேறுபாடு இது. எம்.ஜி.ஆர் மனதளவில் தேசியத்தை எதிர்த்ததாகத் தோன்றவில்லை. விஜய்யிடம் தேசிய சிந்தனை மூடுமந்திரமாகத் தோன்றுகிறது.

 

 

4. கேள்வி: அருப்புக்கோட்டையில் ரூபாய் 15,000 லஞ்சம் வாங்கியதாகக் கையும் களவுமாக ஒரு தொழிலாளர் உதவி ஆய்வாளர் கைது செய்யப் பட்டிருக்கிறார். அரசு அலுவலகங்களில், கீழ் நிலையில் பரவியுள்ள லஞ்ச ஊழலை அமைச்சர்கள் தடுக்க முடியாதா?

 

பதில்: அமெரிக்காவில், இங்கிலாந்தில், சிங்கப்பூரில், அரசு அலுவலகங்களின் கீழ் நிலையில் லஞ்ச ஊழல் காணப்படாது. ஏனென்றால், மேல் நிலையில் - அதுவும் மிக உச்ச நிலையில் - அங்கெல்லாம் கான்ட்ராக்டில் கமிஷன் மற்றும் லஞ்ச ஊழல் என்பவை இருக்காது. இதற்கு மேல் சொல்வதற்கு என்ன இருக்கிறது, புரிவதற்கு என்ன இருக்கிறது?

 


5. கேள்வி: "அடுத்த ஜென்மத்தில் நான் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுகிறேன்" என்று தவெக தலைவர் விஜய் பேசி இருக்கிறாரே?

 

பதில்: இந்த ஜென்மத்தில் அதிக விவசாயிகளின் ஓட்டைப் பெறுவது விஜய்யின் குறி. அது புரியாத அப்பாவி ஜென்மங்கள் விவசாயிகள் என்பது அவர் கணிப்பு.


பகுதி 63 // 05.03.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

Thursday, 5 March 2026

கேள்வி-பதில் (03.03.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாள் வாழ்த்தரங்கில் பேசிய கமல் ஹாசன், "மக்களைக் குடும்பமாக நினைக்கும் தலைவர்கள் எல்லாம் குடும்ப அரசியல்தான் செய்கிறார்கள் அதுதான் தொடர வேண்டும்” என்று பேசி இருக்கிறார். அதற்கு என்ன அர்த்தம்?

 

பதில்: "மக்களைத் தன் குடும்பமாக நினைத்து அவர்களுக்காக ஒரு தலைவர் ஆட்சி செய்தால் அது நல்லது; ஆனால் தன் குடும்பத்தை மட்டும் மக்களாக நினைத்து அவர்களுக்காக அவர் ஆட்சி செய்வது நல்லதல்ல" என்று கமல் பேச்சை நாம் முழுதாக அர்த்தம் கொள்ளலாம். எப்போதும் அவர் பேசுவதில் பாதிதான் வெளிப்படையாகப் புரியம். மீதிப் பாதியை நாமாக நல்ல விதத்தில் அர்த்தம் செய்து கொள்வோம்.

 

 

2. கேள்வி: ''இண்டி கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ஆக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலினை தேசிய அரசியலில் களம் காண வைப்போம்'' என்றும் கமல் பேசி இருக்கிறாரே?

 

பதில்: அதிமுக தலைவர் ஜெயலலிதாவிடம், "நான் உங்களுக்கு அடங்கிக் கட்டுப்படுகிறேன்" என்று சொல்ல நினைத்தவர்கள் அவரை நோக்கித் தரையில் விழுந்தார்கள். அதையே திமுக தலைவர் ஸ்டாலினிடம் சொல்ல நினைப்பவர்கள் அவரை நோக்கிச் சொல்லில் விழுகிறார்கள். இரண்டு வந்தனங்களின் ஸ்டைல் வேறு. நோக்கம் ஒன்றுதான் - க்ளியர் கம்யூனிகேஷன்.

 

 

3. கேள்வி: திமுக மற்றும் காங்கிரஸ் இடையே, தமிழக சட்டடசபைத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சு இழுபறியாக இருக்கிறது. இந்தக்  கட்சிகளின் கூட்டணி நீடிக்குமா என்பது இதுவரை கேள்விக்குறி. இந்த நிலையில் ப.சிதம்பரம் ஸ்டாலினை சந்தித்துப் பேசி இருக்கிறார். சிதம்பரத்தின் முயற்சி என்னவாக இருக்கும்?

 

பதில்: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கும் பொதுமக்கள், அது தேச விடுதலைக்காகப் போராடிய கட்சி; காந்தி, நேரு, காமராஜ் இருந்த கட்சி என்று பெருமையாக நினைப்பவர்களும், அவர்களின் பேச்சை மதிக்கும் குடும்ப உறுப்பினர்களும் ஆவர். அந்த ஆதரவாளர்களை ஒரு தலைவராக ஆகர்ஷிக்கிறவர் அல்ல சிதம்பரம் - அல்லது மற்ற தமிழக காங்கிரஸ் தலைவர்களும்.

 

ஆட்சியில் திமுக என்ன முறைகேடுகள் செய்தாலும், என்ன ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டாலும், அதன் அரசியல் பலத்தைச் சார்ந்து இருந்தால் தமிழக காங்கிரஸ் மூச்சு விட்டுக் கொண்டிருக்குமே, அதை விட்டு தவெக-வோடு கூட்டணி வைத்தால் காங்கிரஸின் நிலை என்ன ஆகுமோ, அதோடு தனது, தனது மகனின், அரசியல் மதிப்பு என்ன ஆகுமோ, என்று நினைக்கிறவர் சிதம்பரம்.

 

காங்கிரஸ் கட்சியின்  செல்வாக்கை தேசநலனுக்காக வளர்க்கும் தலைவர்கள் மத்தியிலும் தமிழகத்திலும் பல வருடங்களாகக் காணவில்லை என்பது அதன் தலைவிதி. அதைத் திமுக தனது வளர்ச்சிக்காகப் பெரிதும் பயன்படுத்தியது. அதில் சிதம்பரமும் எளிதான பலன் கண்டார். இதன் காரணமாகவும் ஸ்டாலினும் சிதம்பரமும் சந்தித்துத் திமுக-காங்கிரஸ் கூட்டணியைக் காப்பாற்ற முயற்சிக்கலாம்.

 

 

4. கேள்வி: ஈரான் நாடு அணு ஆயுதம் தயாரிக்க முனைந்தாலும் அது தவறா? அது அப்படி முனைகிறது, அதை அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் நாட்டின் மீது ராணுவ நடவடிக்கைகள் எடுத்தது சரியா?

 

பதில்: இந்தக் கேள்விகளுக்குப் பாரபட்சமற்ற பதில்கள் கிடைப்பது கடினம். கூட்டிக் கழித்துப் பார்த்தால், மனிதனின் ஆறாம் அறிவு மனித குலத்துக்கு ஆதரவாக மட்டுமல்ல, எதிராகவும் நன்றாக வேலை செய்கிறது. எந்தப் பக்கம் அது இறுதியில் வெல்லும் என்று தெரியாது.

 

 

5. கேள்வி: தேர்தல் நேரத்தில் பல காரணங்கள் சொல்லி அரசுக் கருவூலம் மூலமாக மக்களுக்குப் பணத்தை வாரி இறைக்கிறது திமுக அரசு. இந்தப் பண விநியோகம் அனைத்தையும் சிலாகித்துச் சுருக்கமாக திமுக-வுக்காக எப்படி விளம்பரம் செய்யலாம்?

 

பதில்: பழைய தங்க நகைகளை வாங்கும் ஒரு நிறுவனத்திற்காக டிவி விளம்பரங்களில் தோன்றும் நடிகை ரம்யா கிருஷ்ணனை, ஒரு விளம்பர வீடியோவில் இவ்வாறு பேச வைக்கலாம்: "தேர்தல்னா காசு, அதை வாங்கணும்னா திமுக!"

 

பகுதி 62 // 03.03.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr