Saturday, 16 May 2026

கேள்வி-பதில் (16.05.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்-னு வள்ளுவர் சொன்னதுதான் எங்கள் வழி" என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் சொல்வது சரியா?

 

பதில்: உதயநிதியின் தாத்தா மு. கருணாநிதி அந்தக் குறளுக்கு எழுதிய உரை இது: "பிறப்பினால் அனைவரும் சமம். செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையினால் மட்டுமே வேறுபாடு காணமுடியும்."

 

இந்தக் குறள் காட்டும் வழிதான் திமுக-வின் வழியா? பிறப்பை ஒதுக்கிவைத்து, ஒருவரின் திறமையின் அடிப்படையில் மட்டும்தான் திமுக-வில் பதவிகள் தரப்படுமா, திறமையின் அடிப்படையில் மட்டும் திமுக-விற்குள் வேறுபாடுகள் காணப்படுமா?

 

பிறப்பால் - அதாவது, மு. கருணாநிதியின் மகன் என்பதால் - மு.க. ஸ்டாலின் முன்பு எளிதாக எம்.எல்.ஏ ஆனார். பிறகு மந்திரி, துணை முதலமைச்சர், முதலமைச்சர் என்று உயர்ந்தார். மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதியும் பிறப்பால் எம்.எல்.ஏ, மந்திரி, துணை முதலமைச்சர் என்று ஆனவர். திமுக-வின் அடுத்த மட்டங்களிலும் இந்த வழி பரவலாகப் பின்பற்றப் படுகிறது.

 

இதுதான் திமுக-வின் வழி என்றாலும், 'பிறப்பொக்கும்' குறளை உதயநிதி கூசாமல்  மேற்கோள் காட்டுவதற்குக் காரணம் இருக்கிறது. தன்னைப் போல் அநேகத் தமிழர்கள் அந்தக் குறளை முழுதாகப் படித்துப் புரிந்துகொண்டிருக்க மாட்டார்கள், ஆனாலும் எடுப்பாகத் துவங்கும் அந்தக் குறளை மேற்கோள் காட்டுவது அரசியல் தலைவர்களுக்கு ஒரு பேஷன் என்று அவர் நினைக்கிறார். அவர் நினைப்பு சரி.

 

 

2. கேள்வி: சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து விஜய் முதல்வராவதற்கு முன்பு, "திமுக-வும் அதிமுக-வும் இணைந்து என்னை முதல்வராக்க முயற்சிக்கின்றன என நண்பர்கள் தெரிவித்தனர். அது குறித்த விவரம் எனக்குத் தெரியாது" என்று விசிக தலைவர் திருமாவளவன் சொல்கிறாரே?

 

பதில்: திருமாவளவனின் வி. சி கட்சிக்குச் சட்டசபையில் 2 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். திமுக-வும் அதிமுக-வும் இணைந்து, திருமாவளவனைக் கலந்து ஆலோசிக்காமல், அவரை முதல்வராக்க முயற்சித்திருந்தால், அவரைத் தங்கள் சௌகரியத்திற்காக, தங்களைத் தேர்தலில் மண்ணைக் கவ்வ வைத்த விஜய் முதல்வர் ஆவதைத் தடுப்பதற்காக, ஒரு பொம்மை முதல்வராகத் திருமாவளவனை வைத்திருக்க நினைத்தார்கள் என்று அர்த்தம். அந்த முயற்சி பற்றிக் கேள்விப்பட்ட திருமாவளவனுக்கும் அது புரிந்திருக்கும். இருந்தாலும் அப்படி ஒரு முதல்வராக வருவதைத் திருமாவளவன் விரும்பவில்லையா என்ன? அது மாதிரித் தெரியவில்லை.

 

எதிர்காலத்தில் திருமாவளவன் ஒரு பொம்மை முதல்வராக ஆக்கப்பட வாய்ப்பு இருந்தால், அதற்கு அவர் தயார் என்று சூசகமாக இப்போது அனைவருக்கும் தெரிவித்து விட்டார். வேறு விஷயமில்லை.

 

 

3. கேள்வி: பெட்ரோல் டீசல் விலையை மத்திய எண்ணை நிறுவனங்கள் லிட்டருக்கு மூன்று ரூபாய் ஏற்றியதற்கு முதல்வர் விஜய் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அது ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், அந்த விலை உயர்வைத் திரும்பப் பெறவேண்டும் என்றும் கேட்டிருக்கிறார். விஜய்யின் கண்டனம் சரியா?

 

பதில்: மேற்காசியப் போரின் உலகளாவிய பாதிப்பு என்ன என்று அறியாதவர் போல விஜய் சினிமா டயலாக் பேசியிருக்கிறார்.

 

விஜய் முதல்வராகப் பதவி ஏற்றவுடன் தனது பகட்டான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அவகாசம் கேட்டது - எத்தனை நாட்களுக்கு என்றும் சொல்லாமல் அவகாசம் கேட்டது - ஏழை எளிய நடுத்தர மக்களைப் பாதிக்காதா? இருந்தாலும் அவர் அவகாசம் கேட்டது பரவாயில்லை, போகட்டும் - மற்றபடி அவர் தமிழக அரசின் கஜானாவை ஒரு பைசா கூட நஷ்டம் இல்லாமல் காப்பாற்றினால்.

 

திமுக-வை வீழ்த்திவிட்டு, அதிமுக-வையும் ஓரம் கட்டிவிட்டு ஆட்சிக்கு வந்த விஜய், நடிகர் என்ற நன்மதிப்பாலும் அவருடைய முகராசியாலும் ஆட்சிக்கு வந்திருக்கிறார். அவர் மக்களிடம் உலகப் பொருளாதார உண்மையை மறைத்து, அவர்களின் கண்களைக் கட்டி, அவர்களுக்கு ஐஸ் வைத்து, ஆட்சி செய்ய அவசியமில்லை. இது புரிவதற்கு அவரிடம் நேரான சிந்தனையும் தொலைநோக்குப் பார்வையும் இருப்பது அவசியம். இருப்பதாகத் தெரியவில்லை.

 

 

4. கேள்வி: "பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு மோடி அரசின் தவறே காரணம்" என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளாரே?

 

பதில்: அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் நாட்டின் மீது குண்டுகள் வீசித் தாக்கியது, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது, இவற்றுக்கு மோடி அரசின் தவறா காரணம்? உலகெங்கும் தற்போது பெட்ரோல் டீசலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதும், அவற்றின் சில்லறை விலை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, என்று பல நாடுகளில் - ஐக்கிய அரபு எமிரேட்சில் கூட - உயர்ந்ததும், மோடி அரசின் தவறினாலா?

 

சமீபத்தில் தமிழ்நாட்டில் வெயில் மக்களை வறுத்தெடுத்தது. சொல்லுங்கள் ராகுல்: இதற்கும் படுபாவி மோடிதானே காரணம்?

 

 

5. கேள்வி: "சி.வி. சண்முகம் தரப்பு அதிமுக ஆதரவு, விஜய்க்குத் தேவை இல்லை. விஜய்யால் 5 ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சியைத் தரமுடியும்" என்று காங்கிரஸ் தலைவர் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளாரே?

 

பதில்: கார்த்தி சொல்வதன் அர்த்தம் இது: 'எப்போது வேண்டுமானாலும் விஜய்யின் காலை வாரி ஆட்சியைக் கவிழ்க்கும் சக்தி காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு மட்டும் இருக்கவேண்டும், திரைமறைவாகத் திமுக-விற்கும் அந்த சக்தி இருக்கட்டும். இந்த எல்லாக் கட்சிகளின் சக்தியையும் சைபர் ஆக்கிவிடும் சி.வி. சண்முகம் தரப்பு அதிமுக ஆதரவு விஜய்க்குக் கிடைக்க வேண்டாம்'. கார்த்தி சிதம்பரத்திற்கு விஜய்யின் பதில் இதுவாக இருக்கும்: 'ஆசை தோசை அப்பளம் வடை!'

 

பகுதி 91 // 16.05.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

Monday, 11 May 2026

கேள்வி-பதில் (11.05.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: தமிழகத்தின் புதிய முதலமைச்சர் விஜய்யிடம் உள்ள மூன்று பாசிடிவ் பாயிண்டுகளைச் சொல்லவும்.

 

பதில்: ட்ரிம், ஃபிட்டாக இருக்கிறார்; பொதுவில் தோன்றும்போது இனிமையான முகம் காண்பிக்கிறார்; பதவி ஏற்றவுடன் பேசும்போது,  "நான் தப்பு செய்ய மாட்டேன், தப்பு செய்யவும் விடமாட்டேன். எந்த பவர் சென்டரையும் என்னைச் சுற்றி உருவாக விடமாட்டேன். 'ஜெயிச்சிட்டோம், ஒரு ஆட்டம் ஆடலாம்'னு யாரும் நினைக்க வேண்டாம்" என்று பகிரங்கமாகச் சொல்லி, ஆட்சிக்கு நேராகவும் மறைமுகமாகவும் ஆதரவளித்த பாசக்கார வேஷக்காரக் கட்சிகளுக்கு வயிற்றில் கொஞ்சம் புளியைக் கரைத்திருக்கிறார்.

 

 

2. கேள்வி: முதல்வராகப் பதவி ஏற்ற தவெக தலைவர் விஜய், அந்த சமயத்தில் தமிழர் உடையான வேட்டி சட்டை அணியாமல் கோட் சூட் அணிந்திருந்தது சரியா?

 

பதில்: மாநிலத்தில் திமுக அரசு முடிவுக்கு வந்து ஆட்சி மாற்றம் வரவேண்டும், அதிமுக-வையும் ஆட்சியிலிருந்து தள்ளி வைத்தால் அதுவும் நல்லது என்ற நிலை இருந்தது. பேராச்சரியமாக, அந்த இரண்டு காரியத்தையும் விஜய் ஒருசேரச் செய்திருக்கிறார். இனி தவெக எப்படி  ஆட்சி செய்கிறது என்று பார்க்கவேண்டும். இதெல்லாம் முக்கியம் எனும்போது, அவருடைய பதவி ஏற்பு ஆடையின் முக்கியத்துவம் குறைகிறது.

 

 

3. கேள்வி: இந்தச் சட்டசபையின் எம்.எல்.ஏ-வாக, உறுதிமொழி ஏற்க மைக் அருகில் வந்த திமுக தலைவர் உதயநிதி, பார்வை படும் தூரத்தில் கிட்ட அமர்ந்திருந்த முதல்வர் விஜய்யை வேண்டுமென்றே பார்க்காமலிருந்து, பண்புக்காக அவருக்கு வணக்கம் சொல்லாமலும் இருந்தார். இதற்கு என்ன அர்த்தம்?

 

பதில்: எதிலும் உதயநிதியின் பார்வை, அவர் செய்கை, இரண்டுமே கோளாறானவை. இதை அவர் எப்போதும் நிரூபிக்கிறார்.

 

 

4. கேள்வி: மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, இந்த இருவரிடமிருந்தும் விஜய் எவ்வாறு வேறானவர்?

 

பதில்: ஸ்டாலினுக்கும் பழனிசாமிக்கும் மக்கள் மனதுடன் நேரடிப் பிணைப்பு சொற்பம், விஜய்க்கு அதிகம். ஸ்டாலினுக்குப் பரம்பரை ரத்தமும் பலவாறான சேமிப்புகளும் இருப்பதால் கட்சியின் மீது அவருடைய பிடி கெட்டியானது. பழனிசாமிக்கு அதுவும் இல்லை.

 

 

5. கேள்வி: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் அரசு வீழ்ந்ததற்கும், தமிழகத்தில் ஸ்டாலின் அரசு வீழ்ந்ததற்கும் என்ன வேறுபாடு?

 

பதில்: மக்களை வஞ்சிக்கிற, மக்களைச் சுரண்டுகிற, ஆட்சியாளர்கள் வீழ்ந்தார்கள் எனும்போது, அது ராட்சசியானால் என்ன, ராட்சசனானால் என்ன?

 

பகுதி 89 // 11.05.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

Saturday, 9 May 2026

கேள்வி-பதில் (09.05.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "ஸ்டாலின் எப்படியாப் பட்ட தலைவர்! அவரே வெற்றி வாய்ப்பை இழக்குமாறு மக்கள் ஓட்டுப் போட்டிருக்கிறார்களே! என்று சொல்லி மனதில் கஷ்டப் பட்டார் எங்கள் தலைவர் எடப்பாடி பழனிசாமி" என்று, சட்டசபைத் தேர்தலில் திமுக தலைவர் தோற்றது பற்றி அதிமுக தலைவர் சி. வி. சண்முகம் பேசியிருக்கிறாரே?

 

பதில்: எங்கு உட்காரப் போகிறோம் என்பது சிலருக்கு நிச்சயம் இல்லை என்றால், பார்க்கிற ஒன்றிரண்டு காலி இடங்களில் அவர்கள் டக்கென்று துண்டைப் போட்டு வைப்பார்கள். சி. வி. சண்முகம் அதைச் செய்திருக்கிறார்.

 

ஆட்சி அமைப்பதற்கான கூட்டணி யாருக்கு எப்படி வாய்க்கும், தங்கள் கட்சிக்கு அதில் சான்ஸ் உண்டா, என்பதில் தெளிவு வந்தவுடன் - சான்ஸ் இல்லை என்று தெரிந்தவுடன் - முன்பு எச்சரிக்கையாகத் துண்டைப் போட்ட மனிதர் அதை  அமைதியாகத் திரும்ப எடுத்துக் கொள்வார். 

 

 

2. கேள்வி: சட்டசபைத் தேர்தலுக்குப் பின்பாக திமுக-வும் அதிமுக-வும் தங்களுக்குள் ஒரு புதிய கூட்டணி அமைத்து, தேர்தலுக்கு முன்னர் அந்த இரு கட்சிகளும் தனித் தனியாக அமைத்த கூட்டணிகளில் அங்கம் வகித்த கட்சிகளையும் அந்தப் புதிய கூட்டணியில் சேர்த்து தமிழகத்தில் ஆட்சிக்கு வருவதில் அந்த இரு கட்சிகளுக்குள் என்ன பிரச்சனை - திமுக-வை எட்டி உதைத்துத் தவெக பக்கம் போன காங்கிரஸ் கட்சி, ஒரு தொகுதி வென்ற பாஜக அந்தப் புதிய கூட்டணியில் சேரவில்லை என்றாலும்?

 

பதில்: திமுக அல்லது அதிமுக மட்டும் தனியாக ஆட்சி செய்தால், சில விஷயங்களைக் காதும் காதும் வைத்த மாதிரி கமுக்கமாகக் கவனித்துக் கொள்ள முடியும். பிற கட்சிகளை ஆட்சியில் சேர்த்தால் எதுவும் எப்போதும் அம்பலம் ஆகலாம். இதுபோக, ஆட்சியில் பங்குபெறும் கட்சிகளுக்கு வேண்டியது கிடைக்கவில்லை என்றால் அவை எப்போது வேண்டுமானாலும் ஒரு மெல்லிய மெஜாரிட்டி ஆட்சியைக் கவிழ்க்கலாம். சீக்கிரம் அடுத்த தேர்தல் வரலாம். அதில் விஜய் தனி மெஜாரிட்டி எட்டலாம். ஆகையால் இப்போதைக்கு அசிரத்தை பாவனையில் வேடிக்கை பார்ப்பது நல்லது என்று திமுக-வும் அதிமுக-வும் நினைக்கலாம்.

 

 

3. கேள்வி: சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின்போது 'தீய சக்தி' என்று விஜய் இகழ்ந்த திமுக-வின் சில முக்கிய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைத்தான், ஆட்சி அமைக்கும் மெஜாரிட்டிக்காக விஜய் இப்போது சலிக்காமல் நாடுகிறார். அந்த சில கட்சிகள்தான், இப்போது விஜய் ஆட்சி அமைப்பதை விரும்புகின்றன, அவர் ஆட்சி அமைக்க ஆதரவு தர முன்வருகின்றன. இந்த முரண்பாடு, திமுக கூட்டணியில் அங்கம் வகித்த அந்தச் சில கட்சிகளை உறுத்தாதா?

 

பதில்: விஜய் கட்சி இப்போது ஆட்சி அமைக்க முடியாமல், திமுக மற்றும் அதிமுக-வும் ஒரு ஸ்திரமான கூட்டணி ஆட்சியைத் தர முடியாமல், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வந்து அடுத்த தேர்தலும் சீக்கிரம் வந்தால், தற்போதுள்ள திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களில் - அதைப் போல் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களில் - யாருக்கு சீட் கிடைக்குமோ, கிடைத்தாலும் மறு தேர்தலில் அவர்கள் விஜய் கட்சி வேட்பாளரை எதிர்த்து வெல்ல முடியுமா என்பதில் நிச்சயம் இல்லை. அத்தகைய மறு தேர்தலின் போது, அதிமுக அமைக்கும்  கூட்டணியில் பாஜக சேராது, சீமானும் யாருடனாவது கூட்டணி சேருவார், என்றால் அந்தத் தேர்தல் முடிவு எப்படி அமையுமோ? தற்போது ஒரே ஒரு எம்.எல்.ஏ வைத்திருக்கும் பாஜக-வுக்கு மட்டும் இந்தப் பெரிய கவலைகள் இருக்காது.

 

இவ்வளவு இருக்கும்போது, முரண்பாடாவது முருங்கைக் காயாவது!

 

 

4. கேள்வி: தமிழகத்தில் ஆட்சி அமைக்க மெஜாரிட்டி தேடி, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விசிக, ஆகிய கட்சி அலுவலகங்களுக்கு விஜய்யும் அவர் கட்சித் தலைவர்களும் மாறி மாறிக் கும்பிடு போட்டபடி சென்று வருகிறார்கள். விஜய்யின் நிலை என்ன, அவருடைய முயற்சிகளின் வெற்றி நிலையாக இருக்குமா?

 

பதில்: ஆட்சி அமைவதற்கு முன்பே, ஆளும் கூட்டணி அமைவதற்காக விஜய் சில கட்சித் தலைவர்களை நோக்கிக் கும்பிட்ட கையும் சிரித்த முகமும் அணைக்கும் கரங்களாகக் காட்சி தந்தபடி இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. ஆட்சி அமைத்தபின் அவர்களில் எந்தத் தலைவர் எந்தக் கையை முறுக்குவாரோ, எந்த விலாவில் உதைப்பாரோ, எந்தக் காலை வாருவாரோ, என்ன தெரியும்?  சிந்தனையில் தெளிவும், ஆட்சியில் நேர்மையும், சீரிய தலைமைப் பண்பும் இருந்தால்தான் - அதாவது, மோடி மாதிரி - சொந்தக் கட்சியினரின் அத்துமீறல்களையும், கூட்டணிக் கட்சிகளின் சில்மிஷங்களையும், விஜய் கட்டுப்பாட்டில் வைத்து சமாளிக்க முடியும். விஜய் அப்படியானவராகத் தோன்றவில்லை.

 

விஜய் ஆட்சி அமைத்தால் அரசு நிர்வாகத்திற்கு என்ன பயன், மக்களுக்கு என்ன பயன், என்பது பற்றித் தெளிவான அறிகுறி ஏதுமில்லை. நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

 

 

5. கேள்வி: மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் கட்சியைப் பாஜக தீர்க்கமாக வென்றிருக்கிறது. இதில் பாஜக-வுக்கு என்ன செய்தி இருக்கிறது?

 

பதில்: நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில், விஜய் கட்சியின் தாக்கத்தால் ஜாம்பவான் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக-வுக்குப் பெரிய சரிவு ஏற்பட்ட மாதிரி, பாஜக-வுக்கும் ஏற்பட்டிருக்கிறது. தேச நலன், மக்கள் நலன், இரண்டையும் முன்வைத்து சாமர்த்தியமாக அரசியல் செய்ய முடிகிற பாஜக, சரியான மாநிலத் தலைமையின் கீழ் தமிழகத்திலும் பெரிய உயரத்தை எட்டும். எந்தப் பெரிய வெற்றிக்கும் நம்பிக்கை பெரிய அடித்தளம். இவை பாஜக-வுக்கான முக்கியச் செய்தி என்று பாஜக எடுத்துக் கொள்ளலாம்.

 

பகுதி 88 // 09.05.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr