Wednesday, 11 February 2026

கேள்வி-பதில் (08.02.20226)

 

 

கேள்வி-பதில்

 

 

 1. கேள்வி: என்ன இருந்தாலும், "தமிழன் பிச்சை எடுக்க மாட்டான்" என்று கமல் ஹாசன் ராஜ்ய சபாவில் பேசியது, தமிழன் என்ற பெருமித உணர்வில் பேசியதாகாதா?

 

பதில்: பொய்யில் என்ன பெருமிதம்?

 

சைக்கிள் வெளிநாட்டில் உருவாக்கப் பட்டு பின்னர் இந்தியாவில், தமிழ்நாட்டில், உபயோகத்துக்கு வந்தது. ஆகையால் அந்த வாகனத்துக்கு ஒரு தமிழ்ச் சொல் இருக்கவில்லை. தமிழர்களிடம் பிச்சை இருந்ததால் தானே அதற்கான தமிழ்ப் பெயரும் இருந்து வருகிறது?

 

"கற்கை நன்றே கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே" என்ற வெற்றிவேற்கை வரிகளிலும் அந்தச் சொல் உண்டு.  "தர்மம் தலை காக்கும்" என்ற பழமொழியில் பிச்சை அளிப்பதும் உள்ளடங்கும். தமிழகத்தின் வழிபாட்டுத் தலங்களின் வெளியே கையில் நசுங்கிய தட்டுடன் காத்திருப்பவர்கள் செய்யும் செயல் என்ன? அவர்கள் தமிழர்கள் தானே?

 

பிச்சை எடுப்பதைவிட, கிடைக்கின்ற வேலை செய்தால் அதிக வருமானம் பார்க்கலாம் என்ற நிலையைப் பிச்சைக்காரர்களுக்கு உண்டாக்காமல்,  தமிழ்நாட்டின் பொருளாதாரத்தைத் தூங்கச் செய்தது, மாநிலத்தை ஆள்கின்ற தமிழர்கள்தான் - அந்தத் தமிழர்கள் அனுப்பித்தான் கமல் ஹாசன் ராஜ்ய சபாவில் வெட்டி முழக்கம் செய்தார்.

 

 

2. கேள்வி: "தமிழ்க் கடவுள் முருகன், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாக இருக்கிறார்" என்று அமைச்சர் சேகர்பாபு பேசி இருக்கிறாரே?

 

பதில்: அடுத்த ஆட்சியைத் திமுக அமைத்தால் அப்போதும் தனக்கு மந்திரி பதவி கிடைக்க, சேகர்பாபு இப்போதிலிருந்தே மனமுருகி அர்ச்சனை செய்வது இறைவன் முருகனுக்கு அல்ல, கடவுள் ஸ்டாலினுக்கு.

 

தான் தினமும் பக்தி செலுத்தாவிட்டால் முருகப் பெருமான் கூடத் தன்னை மன்னிப்பார், அதற்காகத் தன்னைத் தண்டிக்க மாட்டார், ஆனால் ஸ்டாலின் பெருமான் அப்படியல்ல என உணர்ந்த அரசியல் ஞானி சேகர்பாபு.

 

 

3. கேள்வி: "பழைய அடிமை, புதிய அடிமை, என எத்தனை அடிமைகள் வந்தாலும் சட்டசபைத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக நிச்சயம் வெற்றி பெறும்" என்று துணை முதல்வர் உதயநிதி தஞ்சாவூரில் அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறாரே?

 

பதில்: அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியை இவ்விதம் இழித்துப் பேசவேண்டும் என்று ஏதோ சொல்லி இருக்கிறார், உதயநிதி. ஆனால் திமுக-விடம் உள்ள பழைய அடிமைகள், அக்கட்சியில் வந்துசேரும் புதிய அடிமைகள், துணையுடன் வருகின்ற தேர்தலில் திமுக ஜெயிக்கும் என்றுதான் ஸ்டாலினும் உதயநிதியும் ஆசைப்படுவார்கள்,  கணக்குப் போடுவார்கள்.

 

எப்போதும் கட்சித் தலைமையின் குறிப்பறிந்து பணிந்து வேலை செய்ய, கட்சித் தலைமையின் புகழ்பாட, கட்சித் தலைமை எதிர்பார்ப்பதைக் கொடுக்க, எதிர்க்கட்சித் தலைவர்களைத் திட்டி கட்சித் தலைமையை மகிழ்விக்க, என்று பல நிலைகளில் பணி செய்யும் நவீன அடிமைகள் திமுக-வில் உண்டு.

 

வாரிசுத் தலைமை, எதேச்சாதிகாரத் தலைமை, உள்ள கட்சிகளில் சுயநலமாகத் தலைமையைத் தொழும்  அடிமைத்தனம் இருக்கும்.

 

 

4. கேள்வி: "இந்தியாவும் மலேசியாவும் தமிழ் மொழி மீதான அன்பினால் ஒன்றுபட்டுள்ளன" என்று மலேசியாவில் பிரதமர் மோடி பேசி இருக்கிறார். அது மலேசியாவில் எடுபடுகிறது. அதுபோன்ற உணர்வோடு, இந்திய தேசியத்துடன் ஒன்றுபட்டு முன்னேறும் நற்சிந்தனை தமிழகத்தின் முக்கிய கட்சியான திமுக-வுக்கு ஏன் இல்லை?

 

பதில்: மலேசியத் தலைவர்கள் அரசியல் பிழைப்புக்காகத் தமிழைப் போற்றுவதில்லை, பல வழிகளில் சுயநலத்தோடு கொழிக்கத் தமிழ் மொழியை ஒரு பாதையாகப் பயன்படுத்துவதில்லை. ஆகையால் மொழி அடிப்படையில் மோடி வெளிப்படுத்திய சிநேக உணர்வை மலேசியா வரவேற்கும், ஆனால் திமுக மோடியிடம் எவ்விதத்திலும் தமிழ் சார்ந்து நேசக்கரம் நீட்டாது.

 

மத்திய அரசு தமிழை நேர்மையாகப் போற்றினால், தாங்கள் தேசியத்தை எதிர்க்கப் பிரயோகிக்கும் தமிழ், தமிழன் என்ற அரசியல் ஆயுதங்கள் மழுங்குவதாக திமுக கவலைப் படும், ஆகையால் மோடியை இன்னும் எதிர்க்கும். ஆனால் கணிசமான தமிழ் மக்களைத் திமுக கட்டிப் போட்டிருப்பது, தனது போலித் தமிழ்ப் பற்றால் அல்ல; அது திமுக-வின் அரசியல் வலிமையால்.

 


5. கேள்வி: 'தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை' என்பது பழமொழி. தந்தையைப் போல யார் இருப்பார்கள்?

 

பதில்: பழமொழியின் படி, இறுதியில் தந்தையைப் போல யாரும் இருக்கமாட்டார்கள். காரணம், பழமொழியின் லாஜிக். தந்தையே அவர் தாயைப் போல இருப்பாரே!


பகுதி 48 // 08.02.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

Sunday, 8 February 2026

கேள்வி-பதில் (06.02.2026)


 

கேள்வி-பதில்

 

 

 1. கேள்வி: கமல் ஹாசன் ராஜ்ய சபாவில் முதன் முதலாகத் தமிழில் பேசியதை டி.வி-யில் பார்த்தீர்களா? புரிந்ததா?

 

பதில்: அவர் தமிழில் பேசி முடித்தவுடன் சொன்ன முக்கியமான இரண்டு ஹிந்தி சொற்கள் மட்டும் புரிந்தன. ஜெய் ஹிந்த்!

 

ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருப்பவர் தனது எண்ணங்களை நேராக, சாதாரண வார்த்தைகளில் பேசுவது நல்லது. கமல் ஹாசன் வார்த்தைகளை, அதுவும் அலங்கார வார்த்தைகளை, வைத்து சர்க்கஸ் காட்டுகிறார்.

 

கமல் ராஜ்ய சபாவில் "தமிழ் பிச்சை எடுக்கக் கூட உதவாதா?" என்ற தொடக்கத்துடன் வார்த்தை சர்க்கஸ் செய்தபோது, கை எங்கு போகிறது, கால் எங்கு போகிறது என்று புரியாமல் விழுந்து புரண்டு கோமாளியாகக் காட்சி கொடுத்தார். அதுவும் நல்ல சர்க்கஸ் வித்தை என்று நினைத்துக் கொண்டார். பாவமாக இருக்கிறது.

 

 

2. கேள்வி: "ஓட்டையும் நாட்டையும் இந்தக் கமல் ஹாசன் விற்கவே மாட்டான்" என்று ராஜ்ய சபாவில் கமல் ஹாசன் மார்தட்டிச் சொன்னார். அவர் பேச்சுக்கு என்ன அர்த்தம்?

 

பதில்: ஏதோ ரைமிங்காகப் பேச ஆசைப்படுகிறார். வேறொன்றுமில்லை.

 

ஒரு கட்சி, சாதாரண மக்களின் ஓட்டுகளைப் பலவாறாக விலைகொடுத்து வாங்குகிறது. அந்தக் கட்சிக்குத் தன் கட்சியையே அடமானம் வைத்திருக்கிறார் கமல் ஹாசன். பிறகு இவர் தனது ஒரு ஓட்டை விற்பது, விற்காதது என்ற பேச்சுக்கே இடமில்லை. இதுபோக, அன்றாடங்காய்ச்சி மக்கள் ஆயிரம், ரண்டாயிரம் என்று வாங்கிக்கொண்டு ஒரு கட்சிக்கு ஓட்டுப்போட சம்மதிக்கலாம். அதுதான் ஓட்டை விற்பது என்று அர்த்தம். செல்வந்தர் கமல் ஹாசன் அதைச் செய்யவில்லை என்பது ஒரு பெருமையா?

 

'நாட்டை விற்பது' என்றால், மத்தியில் ஆளுகின்றவர்கள் தமது சுய லாபத்துக்காக அல்லது அறியாமையால் பிரதிபலன் இன்றி அந்நிய நாட்டுக்கு அதீத வணிகச் சலுகைகள் வழங்குவது, இந்திய நிலப் பரப்பை விட்டுக் கொடுப்பது, அந்தச் செயல்கள் நம் நாட்டைப் பெரிதும் பாதிப்பது என்று அர்த்தம். மத்திய ஆட்சியில் கமல் ஹாசனுக்குத் துளியும் பங்கில்லை. நாட்டை விற்கும் நிலையில் அவர் இல்லை. இல்லாத ஊருக்குப் போகமாட்டேன் என்று ஒருவர் பேசுவது பெருமையா?

 

 

3. கேள்வி: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு அது நிறைவேற்றப்படாத நிலையில் எழுந்த கோர்ட் அவமதிப்பு வழக்கில், "மத மோதல்கள் ஏற்படும் சூழல் இருந்ததாகத் தகவல் வந்ததால், அப்போதைய சூழலைக் கருதி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவை மீறவேண்டும் என்ற எண்ணம் இல்லை" என்று கலெக்டர் பதில் மனு தாக்கல் செய்திருக்கிறார். வாதம் சமர்ப்பித்த தமிழக அரசு சீனியர் வக்கீல் கிரி, "ஹிந்து முஸ்லிம்களுக்கு இடையே பிரச்னை ஏற்படாமல் தவிர்க்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்று கோர்ட்டில் விளக்கம் சொன்னார். இந்த விளக்கங்கள் சரியா?

 

பதில்: கோர்ட் அவமதிப்பு நடந்தது என்று கோர்ட் தீர்மானித்தால், அவமதிப்பு செய்தவருக்குச் சலுகை காட்டுவதா அல்லது அவரை தண்டிப்பதா என்பது வழக்கை விசாரிக்கும் கோர்ட்டைப் பொறுத்தது. இது ஒரு பக்கம்.

 

இன்னொரு பக்கம்: கோர்ட் உத்தரவின்படி தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டால், அது தொடர்பாக யார் யாரை எதிர்த்து மதமோதல்கள் செய்வார்கள் என்று தமிழக அரசு கோர்ட்டில் சொல்கிறது? முஸ்லிம்கள் ஹிந்துக்களுக்கு எதிராக அவ்வாறு செய்வார்கள் என்று தகவல் வந்தது, அதை அரசும் நம்பியது, என்று அரசு பதில் மனுவாகக் கோர்ட்டில் சொன்னதாக அர்த்தமாகும்.

 

சென்ற மாதம் கும்பகோணத்தில் இஸ்லாமியர்கள் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "இஸ்லாமியர்களான நீங்கள் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறீர்கள். திமுக-தான் சிறுபான்மையின மக்களைக் காக்கும் காவல் அரண்" என்று பேசி, ஹிந்துக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக அச்சுறுத்தல் செய்யலாம், அந்த நிலையில் திமுக முஸ்லிம்களைக் காக்கும் என மறைமுகமாக ஹிந்துக்களைப் பழித்தார்.

 

கோர்ட்டில், ஹிந்துக்களுக்கு எதிராக முஸ்லிம்கள் அக்கிரமம், அடாவடி செய்யலாம் என்று சொல்ல வருவது; பொதுமேடையில், முஸ்லிம்களுக்கு எதிராக ஹிந்துக்கள் அக்கிரமம், அடாவடி செய்யலாம் என்று சொல்ல வருவது. இந்த இரட்டை வேடத்தின் பெயர், ஸ்டாலின் மாடல் ஆட்சி.

 

 

4. கேள்வி: வரும் சட்டசபைத் தேர்தலுக்காக அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த இரண்டாம் கட்டத் தேர்தல் வாக்குறுதிகளில், 'மாணவர்களின் வங்கிக் கடன் ரத்து செய்யப்பட்டு அதை  அரசு ஏற்கும்,' 'குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு மூன்று கேஸ் சிலிண்டர்கள் இலவசம்,' 'ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்குப் பத்து லட்சம் ரூபாய்' என்று பல சலுகைகள் இடம் பெறுகின்றன. இவை மக்கள் நலன் சார்ந்தவையா?

 

பதில்: வேகமான தொழில்துறை முன்னேற்றம், வேலை வாய்ப்பு அதிகரிப்பு,  பல்லிளிக்காத சாலைகள், வீடுகளுக்குச் சுத்தமான குடிநீர் இணைப்பு, லஞ்ச ஊழல் தாண்டவம் ஆடாத நிர்வாகம், இவற்றை உறுதி செய்யமுடியாத எந்தக் கட்சியும் கடன் ரத்து மற்றும் இலவசங்களை அறிவித்தால், அவர்கள் என்னவோ துண்டில் போட்டு ஏதோ செய்ய முனைகிறார்கள் என்று அர்த்தம். பார்க்க வேண்டும்.

 


5. கேள்வி: முக்கிய காரியங்கள் நடப்பதற்குச் சிலர் குட்டிக்கரணம் போட்டு முயன்றாலும் அது நடப்பதில்லை. அவர்கள் என்ன செய்யலாம்?  

 

பதில்: தோப்புக் கரணம் போடலாம்.


பகுதி 47 // 06.02.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

Wednesday, 4 February 2026

கேள்வி-பதில் (03.02.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில் கடந்த 2006ல் நடைபெற்ற ஆட்சியைவிட சிறப்பான ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வருகிறார்" என அமைச்சர் கே. என். நேரு பேசி இருக்கிறார். எந்த வகையில் ஸ்டாலின் ஆட்சி அதிகம் சிறந்தது?

 

பதில்: அமைச்சர் நேருவை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

 

நேருவுக்கு எதிராக 1,000 கோடி ரூபாய்க்கு அதிகமான லஞ்சப் புகாரை அமலாக்கத் துறை தமிழக அரசிடம் அளித்திருக்கிறது. ஒருவருக்குத் தாங்கமுடியாத சோதனைகள் ஏற்படும்போது, "கடவுளே! நீ மிகப் பெரியவன். ஈடு இணையற்றவன். சர்வ வல்லமை படைத்தவன். நானும் உனக்கு நிறைய நைவேத்தியங்கள் செய்திருக்கிறேன். என்னைக் காப்பாற்று!" என்று ஒருவர் வேதனையுடன் உரத்து வேண்டிக் கொள்ளலாம். 20 வருடங்களுக்கு முன் அவர் தொழுத கடவுளை அன்று அவர் இப்படிப் போற்றவில்லையே என்று கேட்டால், அப்போது அந்த ஆசாமிக்குப் பெரும் சோதனைகள் வந்திருக்காது என்று அர்த்தம்.

 

 

2.கேள்வி: இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய முதல்வர், "சாதியவாதம், வகுப்புவாதம், பெரும்பான்மை வாதம், எதேச்சாதிகார வாதம் ஆகியவற்றுக்கு எதிராக நாம் ஒற்றுமையோடு ஓரணியில் நின்று பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் உருவான தோழமைதான் நம்முடைய தோழமை" என்று பேசி இருக்கிறார். அந்த இரு கட்சிகளுக்கும் இடையேயான தோழமை அத்தகையதா?

 

பதில்: ஸ்டாலின் பேசியது அர்த்தமில்லாத வார்த்தைகள்.

 

ஆட்சியில் வாரிசுவாதம், சட்டம்-ஒழுங்கு பல்லிளிக்கும்வாதம், நிர்வாகம் குறட்டைவிடும்வாதம், கஜானா போண்டிவாதம், குடும்பத்தினர் மாயவளர்ச்சிவாதம் போன்ற கேடுகள் நிகழாமல் இருக்க, நேர்மை, நிர்வாகத் திறன் மற்றும் மக்கள் நலனுடன் ஆட்சி செய்பவர்கள் தோழமை கொள்ள வேண்டும். ஸ்டாலின் அதில் கோட்டை விட்டிருக்கிறார்.

 

 

3. கேள்வி: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், "நானும் ராணுவ தளபதி ஆசிம் முனீரும் பண உதவி கேட்டு உலகம் முழுவதும் யாசகம் எடுக்கும்போது நாங்கள் வெட்கப் படுகிறோம். எங்களது தலைகள் அவமானத்தால் குனிகின்றன" என்று வெளிப்படையாகப் பேசி இருக்கிறாரே?

 

பதில்: தாங்கள் அடக்குமுறை ஆட்சி செய்து, தனிப்பட்ட முறையில் கொழிக்க வேண்டும் என்பதற்காகப் பாகிஸ்தான் ராணுவத் தலைமையும் அதன் பொம்மையாகப் பிரதமரும் செயல்படும்போது, அந்த நாட்டில் தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதாரம் அதல பாதாளத்தில் இருக்கும். அதற்குத் தொடர் காரணமாகத் தாங்கள் இருக்கிறோம் என்பதற்காக ஷெபாஸ் ஷெரீப்பும் ஆசிம் முனீரும் உண்மையில் வெட்கப்பட வேண்டும்.

 

"நான் இரவில் திருடப் போகும் நேரங்களில் போலீசிடம் மாட்டிக் கொள்வேனோ என்ற அச்சத்தில் பயந்து பயந்து என் வேலையைச் செய்கிறேன்" என்று பேசும் திருடனுக்கு அனுதாபம் கிடைக்காது.

 

 

4. கேள்வி: "தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை கட்சிகளும் எங்களுக்குத் தோழமைக் கட்சிகள்தான். பேசுவது, பழகுவது வேறு, அரசியலில் சேர்வது வேறு. எங்களுக்கு உரிய மரியாதை, எங்களுக்கு உரிய நியாயம் எங்கு கிடைக்கிறதோ அங்குதான் கூட்டணி” என்று தேமுதிக தலைவர் பிரேமலதா கூறியுள்ளார். அவர் என்ன சொல்கிறார்?

 

பதில்: தேர்தல் கூட்டணி அமைப்பது ஒரு டீலிங்தான். இருந்தாலும் பிரேமலதா தனது கட்சியை அதிகத் தொகுதிகளுக்கும் மற்ற பலன்களுக்கும் ஏலம் விடுவது மாதிரி அப்பட்டமாகக் காட்டிக் கொள்ளாமல் இருக்கலாம்.

 

தேமுதிக இணையும் கூட்டணி, தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்று அதன் தலைமைக்கட்சி தனித்தோ அல்லது கூட்டணிக் கட்சிகளுடனோ ஆட்சி அமைத்தால், அப்போது எதிர் அணியினர் தேமுதிக-வுக்கு சிறந்த கூடுதல் 'மரியாதை' வழங்க முன்வந்தால், அப்போதுள்ள ஆட்சிக்குத் தேமுதிக அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொண்டு தேமுதிக மேலும் உரிய மரியாதைகள் பெற அந்தக் கட்சி எதிர் அணியுடன் கூட்டு சேருமா? தனது பகிரங்க ஏலத்தின் மூலம் எல்லா பிரதான கட்சிகளுக்கும் இந்த அச்சத்தைப் பிரேமலதா அட்வான்ஸாகத் தருகிறார்.

 


5. கேள்வி: மனைவி முக்கியமானவள் என்று புதுமொழி சொல்ல வந்து, 'மண்ணானாலும் மனைவி, பூண்டானாலும் பொஞ்சாதி' என்கிறீர்கள். மனைவியை மண், பூண்டு என்றெல்லாம் சொல்வது சரியா?

 

பதில்: சரியா என்று பார்க்கலாம்.

 

'கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்' என்பதற்கு இணையாகச் சொன்னது, மனைவி பற்றிய புதுமொழி. அவர் கல், இவர் மண்; அவர் புல், இவர் பூண்டு. சரிக்கு சரி!


பகுதி 46 // 03.02.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 


Friday, 30 January 2026

கேள்வி-பதில் (30.01.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "திமுக-வினர் எப்போதும் இஸ்லாமியர்கள் பக்கம் நிற்பவர்கள்" என்று கும்பகோணத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறாரே?

 

பதில்: 'திமுக இன்னார் பக்கம் நிற்காது' என்று ஸ்டாலின் ஒருபகுதி மக்களை நினைத்து சூசகமாக இப்படிச் சொல்கிறார். அந்த மற்ற மக்களிடம், 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்கிற மாதிரி திமுக சொல்வது: "நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரியல்ல".

 

நீங்கள் ஒருவரின் எதிரி என்றால் அவரை அடித்து உதைத்துதான் நீங்கள் அவருடைய எதிரி என்று காண்பிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவரிடம் பாராமுகமாக இருப்பது, அவருக்கு உரிய அங்கீகாரத்தையும் மரியாதையையும் வழங்காமல் இருப்பது (ஆனால் பிறருக்கு, விழுந்து விழுந்து வழங்குவது), அவர் வணங்கும் கடவுளை மட்டும் நிராகரிப்பது, நிந்திப்பது, கேலி பேசுவது, அவர் வழிபடும் தெய்வங்களைப் பழித்தவரைப் போற்றுவது, அவருக்கு வாழ்த்து சொல்லவேண்டிய நாட்களில் மவுனம் காப்பது, என்று பல திராவிட மாடல் வழிகளில் நீங்கள் யாருக்கு எதிரி என்பதைக் காட்டலாம்.

 

 

2. கேள்வி: கும்பகோணத்தில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்திய மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "திமுக-தான் சிறுபான்மை இன மக்களைக் காக்கக் கூடிய காவல் அரண்" என்று பேசி இருக்கிறார். அதற்கு என்ன பொருள்?

 

பதில்: யாரிடமிருந்து தமிழக சிறுபான்மையின மக்கள் காக்கப்பட வேண்டியவர்கள் என்று முதல்வர் சொல்ல வருகிறார்? பெரும்பான்மை மக்களிடம் இருந்தா? அந்த அர்த்தம் அவர் பேச்சில் கணிசமாக உள்ளடங்கி இருக்கிறது. ஆனால் பெரும்பான்மை ஹிந்துக்களிடம் இருந்து தாங்கள் காக்கப்பட வேண்டும் என்று தமிழகம் உட்பட இந்தியாவெங்கும் சிறுபான்மை மக்களே நினைப்பதில்லை.

 

நமது நாட்டில் சிறுபான்மையான முஸ்லிம் மக்கள், பாகிஸ்தானில் அசுரப் பெரும்பான்மை (96-97 சதவிகிதம்). இந்தியாவில் சமாதானத்தை விரும்பும் அனைத்து ஹிந்துக்களும், அரசின் போலீசாரும், முஸ்லிம்களைக் காப்பது போல் பாகிஸ்தானில் சாதாரண முஸ்லிம்களுக்கே பாதுகாப்பு இல்லை. அந்த நாட்டில் மெஜாரிட்டி சமூக மக்களின் வாழ்க்கையைக் காக்க பாகிஸ்தான் தலைவர்கள் முனைவதில்லை. தமிழகத்தில் மெஜாரிட்டி சமூக மக்களின் உணர்வுகளை மதிக்க ஸ்டாலின் முனைவதில்லை.

 

 

3. கேள்வி: அமெரிக்க அதிபர் டிரம்ப் மாதிரி வினோதமான தலைவர் வேறு ஒருவர் உண்டா?

 

பதில்: ஜெயலலிதாவின் ஆணவ-அதிகார மனப்பான்மை, ராகுல் காந்தியின் பித்துக்குளிப் பேச்சு, சீமானின் அடாவடி அணுகுமுறை, இவை மூன்றும் கலந்து செய்த கலவை, டிரம்ப். அவ்வப்போது அவற்றில் எது அதிகம் தலைதூக்குகிறதோ அதன்படி அவர் பேசுவார், நடந்துகொள்வார்.

 

 

4. கேள்வி: அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இவர்களில் யார் மற்ற அனைவரையும் விடச் சிறந்த தலைவர், ஏன்?

 

பதில்: மோடி.

 

தனது நாட்டை நிர்வகிக்கும் தலைவரை அபாண்டமாக, கேவலமாக விமர்சித்து, சர்வதேச அளவில் தனது நாட்டின் செல்வாக்கு சரிந்து அதன் மூலமாகவும் அந்தத் தலைவர் மதிப்பிழக்கட்டும் என்று கீழ்த்தரமாகச் செயல்படும் உள்நாட்டு எதிர்க்கட்சிகள் இந்தியாவில் உண்டு, மற்ற நான்கு நாடுகளில் இல்லை. அப்படியும் நிர்வாகத்தில் ஜெயிக்கும் கில்லி, பிரதமர் மோடி. அதோடு, அந்த நான்கு நாடுகளின் தலைவர்களும் வியக்கும் உலகத் தலைவர், மோடி. பித்துக்குளி டிரம்ப் உதார்ப் பேச்சு பேசுவது வேறு விஷயம் ("நான் மோடியின் அரசியல் வாழ்வை நாசம் செய்ய விரும்பவில்லை").

 

 

5. கேள்வி: "ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்" என்று மகாகவி பாரதி அன்று பாடினார். இன்றைக்கு வளமான இந்தியாவை எண்ணி எப்படிப் பாடலாம்?

 

பதில்: 'பாரத தேசம்' பாடலில் வளமான பாரதம் உருவாக எல்லாவற்றையும் சொல்லிவிட்டார் பாரதி. இருந்தாலும், ராஜதந்திரம் மிக்க அரசியல் தலைமை தேவைப்படும் இன்றைய இந்தியாவில், தற்போதைய ஏஐ காலத்தில், நாம் இந்த வரிகளை எண்ணிப் பார்க்கலாம்.

 

ஏஐ கற்போம் பொருள் சேவைகள் விற்போம்;

 

தேவை தீர நாம் பெரும் வேலைகள் செய்வோம்;

 

செம்புலத்து நீர்போல் வாழ்வில் எம்-மோடி-ருக்கும் சக்தி போற்றி.

 

பகுதி 45 // 30.01.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr