|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: தமிழகத்தில் தவெக ஆட்சி அமைத்த சில நாட்கள் கழித்து, திமுக தலைவர்
மு.க. ஸ்டாலின் தன் கட்சியினர் முன் பேசும்போது, "இன்னிக்கு நாம
ஆட்சிய இழக்கலை. நம்ம தயவுலதான் ஆட்சியே நடக்குது. உங்களுக்கு என்னன்னு
புரியும்" என்று கூறி இருக்கிறார். எனக்குப் புரியவில்லை. எந்த அர்த்தில்
"நாம ஆட்சிய இழக்கலை" என்று அவர் பேசினார்? பதில்: கொலை, கொள்ளைகள், பெண்களுக்கு
எதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் கஞ்சாப் புழக்கம் தமிழகத்தில் குறையாமல்
இருப்பதால், திமுக ஆட்சி தொடர்கிறது என்ற
மயக்கத்தில் ஸ்டாலின் இருக்கிறார். அதன்படி பேசிவிட்டார். |
|
2. கேள்வி: சட்டசபைத் தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்த பின்
அக்கட்சியின் இளைஞர் அணிக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தங்கள்
கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி குறித்து, "காங்கிரஸ் நம்
முதுகில் குத்திவிட்டது. காங்கிரஸ் கட்சிக்குத் தமிழக மக்கள் நிச்சயம் பாடம்
கற்றுக் கொடுப்பார்கள்" என்று பேசி இருக்கிறாரே? பதில்: தமிழக மக்கள் இரண்டு கட்சிகளுக்குச்
செமத்தியாகக் கற்பித்த பாடங்களை, உதயநிதி நினைவு கொள்ளவில்லை. ஒன்று: நடந்து
முடிந்த சட்டசபைத் தேர்தலில் தமிழக வாக்காளர்கள் திமுக-வுக்குக் கற்றுக் கொடுத்த
பாடம். இரண்டு: 1967 தேர்தலிலேயே காங்கிரஸ் கட்சிக்கும் அவர்கள் வழங்கிய பாடம். 59 வருடங்களாகியும் தமிழக காங்கிரஸ் தனது பாடத்தைச் சரியாகக் கற்கவில்லை.
திமுக கற்பதற்கு எத்தனை வருடங்கள் ஆகுமோ? |
|
3. கேள்வி: முதல்வர் விஜய்யைச் சந்தித்து, சின்னத்திரை
நிகழ்ச்சி தயாரிப்பாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக அவரிடம் கோரிக்கைகள்
அளித்துவிட்டு வந்த பாஜக தலைவர் குஷ்பு, "தமிழகத்தில்
மிகப் பெரிய மாற்றம் வரப் போகிறது. முதல்வருக்கு அவகாசம் கொடுங்கள்" என்று
பேட்டி கொடுத்திருக்கிறாரே? பதில்: முதல்வரிடம்
தங்களுக்காகக் கோரிக்கைகள் வைத்துவிட்டு வந்த ஒருவர், அதே முதல்வர் பற்றி நல்லதாக மட்டும் சொல்லவேண்டியதைக்
குஷ்பு சொல்லி இருக்கிறார். மற்றபடி, தேர்தலில்
தன்னை நிரூபித்த விஜய், இப்போது வேறொரு தளத்தில் - அரசு
நிர்வாகத்தில், அரசு கஜானாவைப் பாதுகாத்து
மேம்படுத்துவதில் - தன்னை நிரூபிக்க வேண்டியவர். தமிழகத்திற்காக முதல்வர் விஜய் பெரிய பணிகள், நல்ல காரியங்கள், செய்ய
முடிந்தால் அவற்றின் முக்கிய அறிகுறிகளாவது அவர் ஆட்சியின் முதல் ஆறு மாதம்
முதல் ஒரு வருடத்திற்குள் வெளிப்பட வேண்டும். நிர்வாகத்தில் பெரிய தவறுகள்
நடக்காமல், கோணல்கள் நிகழாமல், தடுக்க அவருக்கு அவகாசம் ஏதும் கிடையாது. இதையெல்லாம்
அவர் உணர்ந்திருப்பார். நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். உற்சாகமாக விசில்
அடித்துக் கொண்டே இருக்க முடியாது. |
|
4. கேள்வி: அதிமுக-வின் வேலுமணி-சி.வி. சண்முகம் தரப்பு மூன்று
எம்.எல்.ஏ-க்கள் சட்டசபை சபாநாயகரைச் சந்தித்துத் தங்களின் எம்.எல்.ஏ பதவிகளை
ராஜினாமா செய்வதாகக் கடிதம் கொடுக்க, சபாநாயகரும் அந்த ராஜினாமாக்களை ஏற்றுக்
கொண்டிருக்கிறார். சபாநாயகர் ஏற்ற ராஜினாமாக்களை அவர் திரும்பப் பெறவேண்டும், இல்லையென்றால்
அது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் என்று இ.பி.எஸ் தரப்பு அதிமுக எம்.பி
இன்பதுரை சொல்கிறாரே? பதில்: உடனடியாக விற்பனை ஆகவேண்டிய சில குதிரைகளை
சீக்கிரம் பைசல் செய்யவேண்டும். காத்திருந்தால் நல்ல விலை கிடைக்கத் தக்க சில
குதிரைகளை, பின்னால் தள்ளி விடலாம். ஜனநாயக விளையாட்டு விளையாடும் குதிரைகள், தாங்களாகவே முடிவு செய்து இப்போது அல்லது
பிற்பாடு விலைபோக முயலும். விலையைப் பொறுத்தவரை, குதிரைகளை வாங்குபவர் தனக்கு அவசரத் தேவை என்ன, சல்லிசாகக் கிடைக்கும் நேரம் எது என்று ஒரு
கணிப்பில் தான், சிறிது ரிஸ்க் எடுத்துதான், செயல்பட முடியும். அவரவர் அதிர்ஷ்டமும்
இங்கு வேலை செய்யும். குதிரைகள் இருக்கும்வரை, குதிரைகள் விற்பது வாங்குவது, அதற்கான பேரம், நடக்கும். ராஜினாமாக்கள், அதில் ஓரமாக நடக்கும் ஒரு சிறு நடைமுறை.
அதிமுக-வின் எடப்பாடி பழனிசாமி மற்றும் இன்பதுரை இதை நன்கு அறிவார்கள். |
|
5. கேள்வி: "தவெக குதிரை வேகத்தில் குதிரை பேரத்தில்
ஈடுபடுகிறது" என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறி இருக்கிறாரே? பதில்: குதிரைகளை
ஜெட் வேகத்தில் வாங்க முடிகிறவர், தற்போது
நொடித்திருக்கும் தனது நிலையில் ஒரு குதிரையும் தன்னிடம் விலைக்கு வராது, வந்தால் அதற்குக் கொள்ளு கிடைக்காது என்று
குதிரைகளுக்கே தெரியும் என்பதை அறிந்து, அங்கும்
இங்கும் ஓடும் குதிரைகளைப் பார்த்து ஆதங்கத்தில் ஏதோ சொல்லலாம். |
|
பகுதி 97
// 26.05.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |