Saturday, 21 February 2026

கேள்வி-பதில் (21.02.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "ததும்பும் தமிழ்ப் பெருமிதம்" என்ற தலைப்பில் முதல்வர் ஸ்டாலின் ஒரு புத்தகம் எழுதி இருப்பது, அவருடைய தமிழ்ப் பற்றைக் காண்பிக்கிறதா?

 

பதில்: ஈ.வெ.ரா-விடமிருந்து அண்ணாதுரையும் சிலரும் வேறுபட்டு விலகி ஆரம்பித்த கட்சி, திமுக. அது இன்று ஈ.வெ.ரா-வைக் கொண்டாடுகிறது. ஈ.வெ.ரா இழித்துப் பழித்த தமிழை இன்று போலியாகப் போற்றுவதும் திமுக.

 

ஒன்று ஈ.வெ.ரா, இன்னொன்று தமிழ், இரண்டுமே திமுக-வின் பித்தலாட்டங்களை, ஆட்சி முறைகேடுகளை, மறைப்பதற்கு அந்தக் கட்சி பயன்படுத்தும் முகமூடிகள்.

 

இந்த இரண்டு முகமூடிகளில் ஒன்றுக்கு முற்றிலும் மாறாக மற்றது இருந்தால் பாதகமில்லை. முகமூடிகளுக்குள் என்ன லாஜிக்? இரண்டையும் திமுக அவ்வப்போது துடைத்து வைக்கும், அவற்றுக்கு ஏதாவது கோணல் மாணலாக வண்ணம் தீட்டும். தமிழ் முகமூடிக்கு இப்போது ஸ்டாலின் ஏதோ வண்ணம் தீட்டுகிறார், அவ்வளவுதான்.

 

 

2.கேள்வி: கடைசியில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திமுக தலைவர் ஸ்டாலினிடம் சரண்டர் ஆகிவிட்டாரே?

 

பதில்: சொத்துக்குவிப்பு வழக்கின் முதல் தீர்ப்பால் ஜெயலலிதாவின் முதல்வர் பதவிக்கு இக்கட்டு வந்தபோது, அவரால் தமிழகத்தின் முதல்வராக அமர்த்தப் பட்டவர் ஓ.பி.எஸ்.

 

இப்போது அதிமுக-வுக்கு மீண்டும் திரும்ப முடியவில்லை, தனிக்கட்சி நடத்தும் திராணியும் இல்லை, என்றால் ஓ.பி.எஸ் அரசியலில் இருந்து கெளரவமாக ஓய்வு பெறலாம். அதைச் செய்யாமல், தனக்கு அரசியலில் உயர்வு கொடுத்த ஜெயலலிதா மீது ஊழல் வழக்கு நடத்திய திமுக-விடம் ஓ.பி.எஸ் சரண் அடைந்து அந்தக் கட்சியை சிலாகிக்கிறார். திமுக-வில் கருணாநிதி, அவர் மகன் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, ஆட்சியில் இமாலய முறைகேடுகளைச் செய்ததில்லையா, செய்யவில்லையா? செய்தது உண்டு.

 

விவேகம் இல்லாமல், எதுவானாலும் பதவி வெளிச்சத்தில் லயிக்க ஆசைப்படுகிறார் ஓ.பி.எஸ். ஆள், திமுக-வுக்கு வசதியான அசடு.

 

 

3. கேள்வி: முன்னாள் அதிமுக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தற்போது தனித்து விடப்பட்டு திமுக-வில் சரணாகி இருக்கிறார். இதற்கு எடப்பாடி பழனிசாமி காரணம் ஆவாரா?

 

பதில்: ஒரு விதத்தில் ஆவார்.

 

இப்போதைய அதிமுக-வின் தலைமை, ஒரு சிங்கக் கூட்டத்தின் தலைமை மாதிரி. அதாவது, அந்தக் கூட்டத்தின் தலைமைச் சிங்கம் நலிவுற்றால், காத்திருக்கும் இன்னொரு சிங்கம் நலிவுற்ற சிங்கத்தை விரட்டியடித்து அந்தக் கூட்டத்தைக் கைப்பற்றித் தன் கீழ் வைத்திருக்கும். அப்படியாகத் தற்போது அதிமுக-வின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் எடப்பாடி பழனிசாமி. முன்னர் தன்னால் விரட்டப்பட்ட சிங்கங்களை அவர் தனது கூட்டத்திற்குள் இதுவரை அனுமதிக்கவில்லை. அதில் ஒன்று போக்கற்று நரிக்கூட்டத்தில் சரணடைந்தாலும் ஆகும்.

 

 

4. கேள்வி: 'அவசர பொருளாதார சட்டத்தைப் பயன்படுத்தி எந்த ஒரு நாட்டிற்கும் வரி விதிக்கும் அதிகாரம் அமெரிக்க அதிபருக்கு இல்லை' என்று அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இது டிரம்புக்குப் பின்னடைவா?

 

பதில்: அமெரிக்காவின் சட்ட நிலை அநேகமாக இப்படித்தான் இருக்கும் என்று முன்பே அறிந்தவர் டிரம்ப்.

 

பல உலகத் தலைவர்களைக் கேவலமாகப் பேசும் இவரது தரைமட்ட தெனாவெட்டு, பிற நாடுகளை இவரது எண்ணத்திற்கு அடிபணியச் செய்ய நினைக்கும் தாதாத்தனம், ஆகியவற்றுக்கு அமெரிக்காவின் உச்ச நீதிமன்றமும் பயந்து உடன்படும் என்று கணக்கிட்டார் டிரம்ப். அது நடக்கவில்லை. இருந்தாலும், ஒரு அதிபராகத் தன்னால் முடிகிற அடாவடிகளை அவர் தொடர்ந்து செய்வார். வெட்கமில்லாத அவருக்கு மானம் போவது, அரசியல் உலகில் பின்னடைவு, பற்றிக் கவலை இருக்காது.

 


5. கேள்வி: காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் மற்றும் பல காங்கிரஸ் தலைவர்கள் 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு' என திமுக-வை நோக்கிக் குரல் எழுப்பி வருகையில், மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் 'வெள்ளைக்காரனையே விரட்டிய காங்கிரஸ், இந்த கொள்ளைக்காரனிடம் அடிபணிவோமா?' என்று காங்கிரஸ் தரப்பில் போஸ்டர் ஒட்டப் பட்டிருக்கிறதே?

 

பதில்: கொள்ளைக்காரனுடன் சேர்ந்து வேலை செய்து பயன்பெறத் துடிப்பவர்களுக்கு என்ன பெயர்?


பகுதி 56 // 21.02.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

கேள்வி-பதில் (20.02.2026)


 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: பிரேமலதா தலைமையிலான தேமுதிக, சட்டசபைத் தேர்தலுக்காகத் திமுக கூட்டணியில் சேர்ந்துவிட்டது. வைகோ, திருமாவளவன் போன்றோர் தங்கள் கட்சிகளைத் திமுக கூட்டணியில் இணைத்ததைப் போல் தானே இந்தச் சேர்க்கையும்? இதில் சரி-தப்பு என்று என்ன இருக்கிறது?

 

பதில்: விஜயகாந்தின் அரசியல் முகம் விசேஷமானது. அரசுத் துறைகளில் காணப்படும் லஞ்ச லாவண்யத்தை எதிர்ப்பவராகத் திரையில் தோன்றியவர் விஜயகாந்த். மக்களுக்கு அரசு இழைக்கும் அநீதியைத் தனது அரசியல் மேடைகளிலிருந்தும் அவர் ஆக்ரோஷமாகக் கண்டித்தார். அதனால் அவருக்குத் தனியான மக்கள் செல்வாக்கு உருவாகியது.

 

வைகோவும் திருமாவளவனும் - மற்ற திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களும் - பொதுவாழ்வில், அரசுத் துறைகளில், காணப்படும் அநீதி அக்கிரமத்தை விஜயகாந்த் மாதிரி இதய சுத்தியோடு எதிர்ப்பவர்கள் அல்ல. எந்த அநீதி அக்கிரமத்தை விஜயகாந்த் சீறி எழுந்து எதிர்த்தாரோ, அவற்றின் மொத்த உருவாகத் திமுக இருக்கிறது. ஆகையால் விஜயகாந்த் தோற்றுவித்த கட்சி திமுக-வுடன் தேர்தல் கூட்டணி வைப்பது, அநேக விஜயகாந்த் அபிமானிகளுக்கு நெருடலாக இருக்கலாம், சங்கடம் தரலாம்.

 

 

2. கேள்வி: பிரேமலதா, விஜயகாந்தின் மனைவி. அவர்கள் ஒருவரை மற்றவர் புரிந்தவர்களாக இருந்திருப்பார்கள். விஜயகாந்த் தோற்றுவித்த தேமுதிக, தற்போது திமுக-வுடன் தேர்தல் கூட்டணி வைப்பதை விஜயகாந்த் விரும்பி இருப்பாரா மாட்டாரா என்று பிரேமலதா சரியாகக் கணித்திருக்க மாட்டாரா?

 

பதில்: தனிப்பட்ட வாழ்க்கை வேறு; அரசியல் வாழ்க்கையும் பொது வாழ்க்கையும் வேறு. அரசுத் துறைகள் மக்களுக்கு இழைக்கும் அநீதியை எதிர்த்த விஜயகாந்தின் நியாய உணர்வும் உத்வேகமும் சீற்றமும் அவரது மனைவியிடம், மகன்களிடம், இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. ராஜீவ் காந்தி கொண்டிருந்த அரசியல் பார்வை அவர் மனைவி சோனியா காந்திக்கு இல்லை.

 

இன்னொன்று. திமுக-வுடன் தேர்தல் கூட்டணி அமைப்பதற்கு முன்பாக, தேமுதிக தலைவர் பிரேமலதா, "எந்தக் கூட்டணி மக்கள் நலனுக்காக அதிகம் உழைக்குமோ, அந்தக் கூட்டணியில் நாங்கள் இணைவோம்" என்று சொல்லவில்லை. மாறாக, "எங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் இடத்தில் கூட்டணி வைப்போம்" என்று சொன்னார். 'உரிய மரியாதை' என்றால், அதிக சட்டசபைத் தொகுதிகள், ராஜ்ய சபா சீட், மற்ற ஏதோ என்று ஆகும். அதாவது, தேமுதிக-வை எந்தக் கூட்டணி அதிக ஏலத் தொகைக்கு எடுக்குமோ, அந்தக் கூட்டணியில் தேமுதிக சேரும் என்கிற மாதிரி பிரேமலதா அறிவித்துவிட்டார். இதில் விஜயகாந்த் எந்தக் கூட்டணியை விரும்பி இருப்பார் என்ற கேள்வி முக்கியத்துவம் இழந்தது.

 

 

3. கேள்வி: என்ன இருந்தாலும், விஜயகாந்த் தோற்றுவித்த தேமுதிக என்ற கட்சி, திமுக கூட்டணியில் சேர்ந்துவிட்டது. தேமுதிக ஆதரவாளர்களின் ஓட்டு அனைத்தும் திமுக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்குத் துணை செய்யும் அல்லவா?

 

பதில்: இதில் தெளிவாகக் கணிக்க முடியாத சில விஷயங்கள் உள்ளன. திமுக கூட்டணியில் தேமுதிக இணைவதற்கு முன்பு, தேமுதிக நடத்திய பொதுக்கூட்டத்திற்கு விஜயகாந்த் அபிமானிகள் நிறையப் பேர் வந்திருப்பார்கள். ஆனால் இப்போது விஜயகாந்த் அபிமானிகளில் கணிசமானோர் திமுக கூட்டணியின் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார்களா, விஜயகாந்த் அந்தச் செய்கையை ஏற்கமாட்டார் என்று கருதி வேறு கட்சி வேட்பாளர்களுக்கு - அதிமுக கூட்டணி அல்லது தவெக வேட்பாளர்களுக்கு - வாக்களிப்பார்களா என்று நமக்குத் தெரியாது.

 

 

4. கேள்வி: திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததை, "விஜயகாந்தின் ஆன்மா மன்னிக்காது" என்று தமிழக பாஜக சொல்கிறது. சரியா?

 

பதில்: ஒரு வகையில் பிரேமலதா அனுதாபத்துக்கும் பரிதாபத்துக்கும் உரியவர். எப்படியென்றால்: தனி வாழ்க்கையிலும் அலுவல் வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும், ஒரு மனிதர் சில நேரங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கும் இடத்தில் இருப்பார். அப்போது சரியான முடிவுகளை எடுக்கும் சமநிலை, சுற்றுமுற்றுப் பார்வை, தெளிவான சிந்தனை அவரிடம் இருக்கவேண்டும். பிரேமலதாவிடம் அது அதிகமில்லை. ஆகையால் தன் மனைவியின் பரிதாப நிலையை உணர்ந்த விஜயகாந்தின் ஆன்மா, அவரை அனுதாபத்துடன் மன்னிக்கலாம்!

 


5. கேள்வி: விஜயகாந்த் இருந்தபோது, தேமுதிக 2016-ல் திமுக-வுடன் கூட்டணி சேரவேண்டும் என்று சிலர் எண்ணினார்கள். அதை விரும்பிய திமுக தலைவர் கருணாநிதியும் "பழம் நழுவிப் பாலில் விழலாம்" என்று அப்போது சொன்னார். "அன்று அது நடக்கவில்லை. பத்து வருடங்கள் கழித்து இன்று நடந்திருக்கிறது" என்று திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்த பிறகு பிரேமலதா கூறி இருக்கிறாரே?

 

பதில்: அந்தப் பழம் இப்போது பாதி அழுகிவிட்டது. அந்தப் பால் இப்போது இன்னும் புளிக்கிறது.


பகுதி 55 // 20.02.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

Thursday, 19 February 2026

கேள்வி-பதில் (19-02-2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதை முழுமுதல் கொள்கையாக ஏற்றுக் கொண்ட திமுக ஆட்சி, இந்தியாவுக்கே வழிகாட்டும் முன்னெடுப்பைத் துவங்கி உள்ளது...... அனைத்து மாநிலங்களும் சுயாட்சி பெற்றவையாக இருக்கவேண்டும். அனைத்து மாநிலங்களும் இணைந்து நடத்தும் கூட்டாட்சி அரசாக, மத்திய அரசு செயல்பட வேண்டும் என்பது நம் கொள்கை" என்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேசி இருக்கிறாரே?


பதில்:
அரசியல் சட்டப்பிரிவு 370 முழு உயிர்ப்போடு இருந்தபோது, ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனுபவித்த விசேஷ அந்தஸ்தும் விசேஷ உரிமைகளும் இப்போது அனைத்து மாநிலங்களுக்கும் தரப்பட வேண்டும் - இல்லை, அதற்கும் மேலாக உரிமைகள் தரப்பட வேண்டும் - என்கிறாரா ஸ்டாலின்? அவர் எண்ணப்படி, சிபிஐ, வருமானவரித் துறை, அமலாக்கத் துறை போன்ற மத்திய அமைப்புகள் ஒரு மாநிலத்தில் நிகழும் குற்றங்களை விசாரிக்கலாமா, கூடாதா? கூடாது என்றால், அரசு கஜானாக் கொள்ளையர்கள் கும்மி அடிப்பார்களே?


இன்னொன்று. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது, சாலைகள் பல்லிளிக்கின்றன, குடிநீருக்காக ஆங்காங்கே மக்கள் காத்திருந்து குடம் சுமக்கிறார்கள். இதற்கான மாநில அரசுத் துறைகளின் அவல நிலைக்கு, மத்திய அரசிடம் தங்கிவிட்ட அதிகாரங்களா காரணம்?

 
அடுத்ததாக, ஸ்டாலின் கருத்துப்படி தமிழகத்தில் கூட்டணி
ஆட்சி ஒத்துவராது, ஆனால் மத்தியில் அனைத்து மாநிலங்களும் இணைந்து நடத்தும் கூட்டாட்சி அமைய வேண்டுமா, அது மட்டும் ஒத்துவருமா?


சிந்தனை ஒரு இன்ஜின் என்றால், ஸ்டாலினிடம் உள்ளது டப்பா இன்ஜின், டுபாக்கூர் இன்ஜின்.

 

 

2. கேள்வி: "விளையாட்டை விடப் பெரிய தியானம் இருக்க முடியாது. விளையாட்டை விட, கவனக் குவிப்புக்கு உதவும் நல்ல யுக்தி இருக்க முடியாது" என்று முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறாரே?


பதில்:
ஸ்டாலின் விளையாட்டுத்தனமாகப் பேசுகிறார்.

 
தியானம் என்பது, ஆதி காலத்திலிருந்து ஹிந்து மதத்தைச் சார்ந்தவர்கள் தமது மன அமைதிக்காகவும், தமது செயல்பாடுகளில் மனதை ஒருமுகப்படுத்தும் ஆயத்தப் பயிற்சியாகவும் மேற்கொள்ளும் வழி. ஒரு அம்சத்தில் இப்போது தியானம் என்பது கடவுள் நினைப்பைக் கடந்து நின்று, எந்த மதத்தவரும், எந்த தேசத்தவரும், தமது மனநலனுக்காக மேற்கொள்ளலாம் என்றாகி விட்டது. அது யோகாவுக்கு இணையாகவும் பயன் தருகிறது. இருந்தாலும், ஏதாவது ஆதியில் துளி ஹிந்துமதம் சம்பந்தம் கொண்டிருந்தாலும் அதை நேராகவோ மறைமுகமாகவோ தாழ்த்திக் கருத்து சொல்வது ஸ்டாலினுக்கு ஒரு குதூகல விளையாட்டு. அதை ஆடியிருக்கிறார்.

 

 

3. கேள்வி: வருகின்ற சட்டசபைத் தேர்தலுக்காக, திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்து விட்டதே?


பதில்:
பிரேமலதா தலைமையிலான தேமுதிக அவ்வாறு இணைந்தது எதிர்பாராதது அல்ல. விஜயகாந்த் ஆரம்பித்த தேமுதிக அவ்வாறு இணைந்தது, அதுவும் இன்றைய திராவிட மாடல் திமுகவு-டன் கூட்டணி அமைத்தது, விஜயகாந்தின் தேசிய எண்ணத்தைப் போற்றியவர்களுக்குச் சற்று அதிருப்தி தரும். இருந்தாலும், நல்லதை நோக்கி நடப்பவர்களுக்கு எல்லாத் தடைகளையும் கடந்து செல்லும் பொறுமையும் முனைப்பும் அவசியம். அது இந்தியாவில் ஒரு பிரதான கட்சியிடம் இருப்பது பற்றி நாம் திருப்தி கொள்ளலாம்.

 

 

4. கேள்வி: "மகளிருக்கு அரசு உரிமைத் தொகை அளிப்பது மக்களைக் கையேந்த வைக்கும், நாட்டைக் கடன்கார நாடாக்கும். நான் அதை எதிர்க்கிறேன். நான் வந்தால் அதை ஒழித்து என் மக்களின் வருவாயைப் பெருக்குவேன்" என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறாரே?


பதில்:
அவர் மனதில் அந்த எண்ணம் இருப்பது உண்மை. அந்த எண்ணம் நல்லது, அர்த்தமுள்ளது. ஆனால் ஒரு கட்சியின் தலைவர் அதைப் பட்டவர்த்தனமாக வெளியில் சொல்வது, ஆட்சி அமைப்பதற்கான அதன் வெற்றியைப் பாதிக்கும்.


திமுக-வை ஆட்சியிலிருந்து ஒரு கட்சி வெளியேற்ற நினைத்தால், அந்தக் கட்சி தனியாகவோ அல்லது கூட்டணியாகவோ தேர்தலில் திமுக கூட்டணியை முதலில் தோற்கடிக்க வேண்டும். அந்தப் பெரிய நோக்கத்திற்குப் பழுது ஏற்படுத்தும் ஒன்றைப் பேசாமல் இருப்பது விவேகம்.


ஆளுகின்ற ஒரு கட்சி, அப்பாவி மக்களைப் பாதி பிச்சைக்காரர்களாக வைத்திருந்து அவர்களுக்கு இலவசங்களையும் ரொக்கத்தையும் அரசு கஜானாவிலிருந்து கொடுத்து வந்தால், அந்த விநியோகத்தைப் பலமாக மக்கள் மத்தியில் எதிர்த்துப் பேசி அந்தக் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்ற முடியாது. அதைப் பற்றி எதிர் அணியினர் பொதுவெளியில் விரிவாகப் பேசாமல், அதைக் குறிப்பாக எதிர்க்காமல், மக்கள் நம்பிக்கையைப் பெற்றுத் தேர்தலில் வென்றாக வேண்டும். அதுதான் ஜனநாயகம் தரும் சாய்ஸ். அதைச் செயலாற்றுவது ஒரு கலை.

 


5. கேள்வி: "நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்" என்று சுதந்திரப் போராட்ட காலத்தில் மகாகவி பாரதி பாடினார். இதே பாணியில், இன்று தமிழ்நாட்டின் ஒரு பிரதான அரசியல் கட்சி தனது செயல்பாடுகளை எவ்விதம் எண்ணிப் பார்க்கும்?


பதில்:
"நமக்குத் தொழில் கதை விடுதல், நாட்டைச் சுரண்டுதல், தேசியத்தில் சேராதிருத்தல்."


பகுதி 54 // 19.02.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

Wednesday, 18 February 2026

கேள்வி-பதில் (18.02.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக ஃபைல்ஸ் என்ற தலைப்பில் வெளியிட்ட சில தகவல்களுக்காக அவர் மீது திமுக எம்.பி-யான டி.ஆர்.பாலு கிரிமினல் அவதூறு வழக்குப் போட்டிருக்கிறார். இது பாலுவுக்கு எந்த வகையில் பயன் தரும்?


பதில்:
எந்த வகையிலும் பயன் தராது.


அண்ணாமலை மீது அவதூறு வழக்குப் போட்டதால் டி. ஆர். பாலு என்ன சொல்ல நினைக்கிறார்? பாலு இந்த வழக்கைப் போடாமல் இருந்தால், அவர் மீது அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை என்று பொதுமக்கள் நினைப்பார்கள், ஆனால் வழக்கைப் போட்டுவிட்டால் பாலு அப்பழுக்கற்றவர் என்று அதே மக்கள் நினைத்து விடுவார்களா?


இந்த வழக்கின் முடிவு என்ன ஆனாலும் பாலு பாலுதான்,
அண்ணாமலை அண்ணாமலைதான். ஒரு அரசியல்வாதியாக, பாலு பலே கில்லாடி; வழக்குப் போட்டவராக, படு அசடு.

 

 

2. கேள்வி: திமுக எம்.பி-யான டி.ஆர். பாலு அண்ணாமலை மீது தொடர்ந்த அவதூறு வழக்கில், அண்ணாமலையே பாலுவைக் குறுக்கு விசாரணை செய்து வருகிறார். பதில்கள் அளிக்கும் பாலு, "எனக்கு 1.46 கோடி ரூபாய் கடன் உள்ளது. எனக்குக் கடன் தந்த நிறுவனத்தின் உரிமையாளர் என் மகனா என்று கேட்டால், அது எனக்குத் தெரியாது" என்று சொல்கிறாரே?


பதில்:
'டாடா கம்பெனியில் வேலை செய்யலாம், டி.வி.எஸ் அல்லது பஜாஜ் கம்பெனி பைக் வாங்கலாம்' என்று சாதாரண மக்களே நினைக்கிறார்கள். இரண்டு கப்பல் வாங்கத் தெரிந்த பாலுவுக்கு, தான் கடன் கேட்ட நிறுவனத்தின் உரிமையாளர் தன் மகனா இல்லையா என்று தெரியவில்லையா?


போகட்டும். தனக்கு ஓட்டுப் போட்டவர்கள் தமிழக மக்கள் என்பதையாவது பாலு கண்டறிந்து, கப்பல் வாங்குவதில் அவர் காண்பித்த ஆழ்ந்த அக்கறையை அந்த மக்கள் நலனிலும் செலவிடலாம்.

 

 

3. கேள்வி: "அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கியது அதிமுக அரசு. அதற்குத் திமுக சொந்தம் கொண்டாடுவதா?" என்று சட்டசபையில் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆவேசம் காட்டி இருக்கிறாரே?


பதில்:
இதன் உண்மை நிலை ஒருபுறம் இருக்கட்டும்.


திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே, "நாங்கள் மக்களுக்கு இதையும் அதையும் தூக்கிக் கொடுத்தோம், அள்ளித் தந்தோம்" என்று அரசுப் பணத்தை, அரசு சலுகைகளை, தாங்கள் காரண காரியமாக வழங்கியதைப் பறை சாற்றுவார்கள். மக்களுக்குச் சுய கௌரவம் அளிக்கும் தரமான கல்வி, போதிய வருமானம், நல்ல இருப்பிடம், தூய்மையான குடிநீர் போன்றவை பரவலாகக் கிடைக்கத் திட்டமிட்டு வழிவகை செய்ய மாட்டார்கள்.


குரங்குகள் ஆட்சி செய்தால் அவை தேங்காயைத் தின்றுவிட்டு, மிஞ்சிய தேங்காய் ஒட்டிய கொட்டாங்கச்சியை விநியோகம் செய்யும். தின்று தீர்த்தது தெரியாது. கொட்டாங்கச்சி பேசப்படும்.

 

 

4. கேள்வி: "தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் பங்கு கேட்பதில் தவறில்லை" என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறி இருக்கிறாரே?


பதில்:
ஒரு கூட்டணிக் கட்சியாக, ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்பது தவறில்லை என்றால், கேட்பது சரி என்று அர்த்தம். கேட்பது சரி என்றால், திமுக கொடுக்க மறுப்பது தவறு என்று அர்த்தம். காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு கிடைக்கும் போது, மற்றொரு கூட்டணிக் கட்சி விசிக கைகட்டி ஓரமாக நிற்காது, அப்போது விசிக-வுக்கும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று அர்த்தம்.

 

தன் கட்சிக்காக நினைத்ததைக் காங்கிரஸ் தோளில் நின்று திருமா சொல்லி விட்டார் – ஆட்சியில் பங்கு கேட்டுத் திமுக-வுக்கு விசிக அழுத்தம் தராது என்று அவர் அர்த்தமில்லாமல் சொல்லி வந்தாலும்.

 


5. கேள்வி: மணிசங்கர் அய்யர், காங்கிரஸ் கட்சியை 'முட்டாள் கட்சி' என்று ஒரு பேட்டியில் விமர்சனம் செய்துவிட்டு, "நான் இன்னும் காங்கிரஸில் தான் உள்ளேன்" என்று அதே பேட்டியில் சொல்லி இருக்கிறாரே?


பதில்:
மணிசங்கர் அய்யர் ஒன்றைப் படாரென்று பேசுகிறார். இன்னொன்றைப் பூடகமாகச் சொல்கிறார். இரண்டுமே சரிதான்.


பகுதி 53 // 18.02.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr