Sunday, 5 April 2026

கேள்வி-பதில் (05.04.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "திமுக-வை ஆட்சியிலிருந்து அகற்றத் தமிழகம் எங்கும் பிரசாரம் செய்வதற்கு வசதியாக, வரும் சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை" என்று பாஜக தலைவர் அண்ணாமலை சொல்கிறார். அதுபோல் "திமுக-வை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்குப் பிரசாரம் செய்வதற்காக நான் தேர்தலில் போட்டியிடவில்லை" என்று ஏன் உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கவில்லை?

 

பதில்: தமிழகத்தில் பாஜக-வுக்காக ஓட்டு ஈர்க்கும் சக்தி, பாதிக்கு மேல் அண்ணாமலையின் தனிப்பட்ட மக்கள் செல்வாக்கிலிருந்து கிடைக்கிறது. ஆகவே அவர் தேர்தலில் போட்டியிடாமல் பல இடங்களுக்கும் சென்று பிரசாரம் செய்வது பலன் அளிக்கும்.

 

திமுக-வின் ஓட்டு ஈர்க்கும் சக்தி, அக் கட்சியில் அண்ணா ஆரம்பித்து கருணாநிதி வளர்த்த கட்சிக் கட்டமைப்பிலிருந்து கிடைக்கிறது.  அத்துடன் திமுக-வின் தலைமைக்கும் கட்சியின் மற்ற தலைவர்களுக்கும் இடையே கருணாநிதி தொடங்கிவைத்து, ஸ்டாலின் விரிவாக்கிய,  'ஒண்ணுக்குள்ள ஒண்ணு' பிணைப்பிலிருந்து அதிகம் கிடைக்கிறது. உதயநிதிக்கு, அவர் தந்தை ஸ்டாலினுக்கு, தனிப்பட்ட மக்கள் செல்வாக்கு என்று பெரிதாக இல்லை. ஆகையால் உதயநிதி தேர்தலில் போட்டியிடாமல் பிரசாரம் செய்வதால் திமுக-வுக்குப் பலன் இருக்காது.

 

இன்னொன்று. திமுக ஆட்சிக்கு வந்து உதயநிதி அமைச்சர் ஆகவில்லை என்றால், ஒரு மாபெரும் நஷ்டத்தை யார் ஈடு செய்வது?

 

 

2. கேள்வி: "தமிழகத்தில் என்.டி.ஏ ஆட்சி வந்தால், நமது மாநிலத்தின் பெயரை 'தட்சிண பிரதேஷ்' என்று மாற்றவும் அவர்கள் தயங்க மாட்டார்கள்" என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசி இருக்கிறாரே?

 

பதில்: அந்த அந்தப் பிரதேச மக்களுக்கு அவரவர் தாய்மொழியின் மீது உணர்வுபூர்வமான அபிமானம் இருக்கும். 'தமிழ்நாடு' என்ற பெயரில் உள்ள 'தமிழ்' என்ற சொல்லை நீக்கிவிட்டு, நமது மாநிலத்துக்கு வேறு பெயர் வைக்க எந்த அரசியல் கட்சியும் நினைத்துப் பார்க்காது, திமுக-வைத் தவிர. அந்தக் கட்சி நமது மாநிலத்துக்கு ஒரு புதிய பெயரை ஆசையுடன் கற்பனை செய்து பார்க்கலாம், தனது ஆரம்பகாலக் கனவில். திராவிட நாடு.

 

 

3. கேள்வி: "இள வயதில் நான் தலைச் சுமையாக கத்தரிக்காய் சுமந்து விற்றவன்" என அமைச்சர் துரைமுருகன் தனது தொகுதி மக்களிடம் உருக்கமாகத் தெரிவித்துள்ளாரே?

 

பதில்: துரைமுருகன் இப்போது மு. க. ஸ்டாலினையும் உதயநிதியையும் சுமக்கிறார். சொத்தைக் கத்தரிக்காய்.

 

 

4. கேள்வி: ஈரானுடனான போர் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தினம் தினம் மாறுபாடான கருத்துகள் கூறி வருவதைக் குறிப்பிட்ட பிரெஞ்சு அதிபர் மேக்ரான், "நீங்கள் தினம் தினம் பேச வேண்டியதில்லை" என்று டிரம்புக்கு அறிவுரை சொல்லியிருக்கிறாரே?

 

பதில்: டிரம்புக்கான அறிவுரை சரிதான். அதில் 'தினம் தினம்' என்ற வார்த்தையை மேக்ரான் தவிர்த்திருக்கலாம்.

 

 

5. கேள்வி: திமுக கூட்டணியில் வைகோ-வின் மறுமலர்ச்சி திமுக-வுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, அதில் மூன்று தொகுதிகளில் திமுக-வின் உதயசூரியன் சின்னத்தில் மறுமலர்ச்சி திமுக போட்டியிடும், ஒரு தொகுதியில் தனது சின்னத்தில் அக்கட்சி போட்டியிடும் என்று ஒப்பந்தம் ஆனது. ஆனால் திடீரென்று, நான்கு தொகுதிகளிலுமே மறுமலர்ச்சி திமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்று வைகோ அறிவிக்க, அந்த முடிவைத் திமுக தலைவர் ஸ்டாலினும் வரவேற்றிருக்கிறாரே?

 

பதில்: திமுக-வுடன் பின்னிப் பிணைந்துவிட்ட வைகோ, தன் கட்சியின் பெயரை மாற்றி வைக்கலாம். மறுசுழற்சி திமுக.

 

பகுதி 77 // 05.04.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

கேள்வி-பதில் (04.04.2026)


 

கேள்வி-பதில்

 

 

கேள்வி: வரும் சட்டசபைத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது.  பாஜக வேட்பாளர்களில் அண்ணாமலையின் பெயர் இல்லை என்பது அவரின் பல ஆதரவாளர்களுக்கும் வருத்தம் தருகிறது. அவர் ஒரு வேட்பாளராக இல்லை என்ற காரணத்தால் அதிமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு, குறிப்பாக பாஜக-வின்  வெற்றி வாய்ப்பு, இந்தத் தேர்தலில் பாதிக்கப் படுமா?

 

பதில்: இந்தத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிட விரும்பவில்லை என்று அவர் ஏற்கனவே பாஜக-வின் தலைமைக்குத் தெரியப்படுத்தி விட்டதாக அவரே தெரிவித்திருக்கிறார். அந்தக் கூற்றை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

 

அண்ணாமலை எப்படி விருப்பப் பட்டாலும், பாஜக-வின் மத்தியத் தலைமை அதை உதாசீனம் செய்து ஏன் அவரைப் போட்டியிடுமாறு நிர்பந்திக்கவில்லை? ஏனென்றால், அண்ணாமலை மீது, பாஜக-வின் மத்தியத் தலைமை பெரு மதிப்பு வைத்திருக்கிறது. அதற்கு ஒரே காரணம்: அவர் தமிழகத்தில் பரவலான மக்கள் செல்வாக்குப் பெற்று அதன் மூலம் கட்சிக்கு வலிமை சேர்க்கிறார்; இப்போதும் அவர் தேர்தலில் போட்டியிடாமல் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்காகத் தமிழகம் முழுவதும் பணியாற்றப் போவதாகச் சொல்லியிருக்கிறார்; தேர்தலில் போட்டியிடாமல் அவர் அந்தப் பணியை அதிகம் செய்ய முடியும்; அதுவும் பாஜக-வுக்கு நன்மை செய்யும், அதிமுக கூட்டணிக்கும் உதவும்.

 

தான் போட்டியிட விரும்பவில்லை என்று சொல்லிவிட்டு, அண்ணாமலை மாதிரி மக்கள் செல்வாக்குள்ள ஒரு தலைவர், தேர்தல் பணியில் ஈடுபடாமல் இருந்தால்தான் அது பாஜக வேட்பாளர்களுக்கு உதவாது, அந்த நிலை கட்சிக்கும் நல்லதல்ல.  ஆனால் நடப்பது வேறு.

 

அண்ணாமலை போட்டியிடாவிட்டாலும், அவர் தேர்தல் களத்தில் இருக்கப் போகிறார், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்காக - குறிப்பாக பாஜக வேட்பாளர்களுக்காக - தேர்தல் பிரசாரம் செய்யப் போகிறார் என்றால், அது அவரின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. இதனால் கட்சியினர் மத்தியிலும் அவருடைய அபிமானிகள் மனத்திலும் அவருடைய மதிப்பு போகப் போக  உயரும்.

 

வருகின்ற சட்டசபைத் தேர்தலில் பாஜக 27 தொகுதிகளில் தான் போட்டியிடுகிறது. பாஜக பெரும்பான்மை இடங்களை வெல்வதற்கு, அல்லது அதன் அருகில் வருவதற்கு, சாத்தியமில்லாத தேர்தல் இது. இதில் அண்ணாமலை போட்டியிடாததால், பாஜக முக்கியப் பங்கு வகிக்கப் போகும் ஆட்சியில் பங்காற்றும் வாய்ப்பை அவர் இழக்கிறார் என்று ஆகாது. ஆகையால் இந்தத் தேர்தலில் அவர் போட்டியிடாமல், கட்சியின் அனைத்து வேட்பாளர்களுக்கும் - பொதுவாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு - பாடுபட்டால் அதுவும் கட்சிக்கு நல்லதுதான். அவரே இந்தப் பெரிய பணியைத் தேர்வு செய்ததால், கட்சியும் அதை ஏற்றுக் கொள்வதை நாம் புரிந்து கொள்ளலாம்.

 

ஒருவேளை அதிமுக கூட்டணி வென்று, வரப்போகும் ஆட்சியில் பாஜக-வும் பங்கேற்கும் என்றாலும், அந்த சூழ்நிலை பற்றி இப்போது நிச்சயமாக ஒன்றும் சொல்வதற்கில்லை, அதை அப்போது பார்த்துக் கொள்ளலாம். இப்போதைய நிச்சயத் தேவை, பாஜக வேட்பாளர்களுக்காக அண்ணாமலை பிரசாரம் செய்வது; அண்ணாமலை தேர்தலில் போட்டியிடாமல் அவர் அந்தப் பணியை மேலும் பரவலாக, சிறப்பாக, செய்யமுடியும்.

 

அண்ணாமலை தேர்தலில் போட்டியிடவில்லை என்று தெரிய வந்ததும், அவருடைய அபிமானிகளும் ஆதரவாளர்களும் சட்டென்று வருத்தம் கொள்ளலாம். அது இயற்கை. ஆனால் அவர் பாஜக வேட்பாளர்களுக்காகப் பிரசாரம் செய்யும் போது, ஓட்டுக் கேட்கும் போது, அந்த மக்கள் மனமுவந்து அவ்விதம் வாக்களிப்பார்கள். ஏதோ கோபத்தையும் வருத்தத்தையும் மனதில் கொண்டு, அண்ணாமலையின் வேண்டுகோளையும் புறம் தள்ளி, தேர்தலில் ஓட்டுப் போடாமல் இருப்பது, அல்லது அதிமுக கூட்டணியை எதிர்க்கும் வேறு கட்சிக்கு வாக்களிப்பது, ஆகிய பயனற்ற செய்கைகளை அந்த மக்கள் செய்ய மாட்டார்கள்.  ஆகையால், அண்ணாமலை போட்டியிடாததால் - அந்தக் காரணத்தால் - அதிமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பும், பாஜக-வின் வெற்றி வாய்ப்பும்,  பாதிப்படையாது.

 

இன்னொன்று: அண்ணாமலையின் தன்னலமற்ற செய்கையால், அவருடைய அசாதாரண அர்ப்பணிப்பால், அவர் பாஜக-வுக்குச் சில புதிய வாக்காளர்களையும் ஈர்க்கலாம்.

 

1963-ம் வருடம், தான் வைத்திருந்த தமிழக முதல் அமைச்சர் பதவியை விட்டு விலகி, "நான் முழு நேர கட்சிப் பணிக்கு வருகிறேன்" என்று சொல்லி கட்சிக்காக வேலை செய்ய வந்தார் ஒரு மக்கள் தலைவர். அவர் காமராஜ். இப்போது, "நான் தேர்தலில் போட்டியிடவில்லை, கட்சி வேட்பாளர்களுக்காக - அதோடு கூட்டணிக்காக - பிரசாரம் செய்கிறேன்" என்று வந்திருக்கிறார் அண்ணாமலை, அவருடைய கட்சியும் அதை ஏற்றுக் கொண்டிருக்கிறது. தொலைநோக்கில், இது நல்லது. 

 

சட்டடபைத் தேர்தல் முடிவுகள் எப்படி அமைந்தாலும், அண்ணாமலையின் எண்ணமும் செய்கையும் வியக்கத் தக்கவை. தமிழகத்தில் மட்டுமல்ல, அகில இந்திய அளவிலும், கட்சிக்குள் அண்ணாமலையின் மதிப்பு மேலும் உயரும். அவருக்கு வயது நிறைய இருக்கிறது. சிந்திக்கும் திறன் இருக்கிறது. தேசப்பற்று இருக்கிறது. தன்னலமற்ற அர்ப்பணிப்பு இருக்கிறது. கட்சியில் வேலையும் நிறைய இருக்கிறது. மற்றவை காலப் போக்கில் தானாக நடக்கும்.

 

பகுதி 76 // 04.04.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

Thursday, 2 April 2026

கேள்வி-பதில் (31.03.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

கேள்வி: சட்டசபைத் தேர்தலுக்காக அதிமுக-பாஜக இடையே கூட்டணி அமைந்ததில், அண்ணாமலையை பாஜக உதாசீனம் செய்து விட்டதா? தமிழக பாஜக-வில் மற்ற தலைவர்கள் அண்ணாமலையை முன்னுக்கு வரவிடாமல் தடுக்க முனைகிறார்களா?

 

பதில்: தமிழக பாஜக-வுக்கும் தமிழக அரசியலுக்கும் அண்ணாமலையை ஒரு பொக்கிஷமாகப் பார்க்கும் பலரின் மனதில் மேற்காணும் கேள்விகள் எழலாம். சில விஷயங்களை நாம் அமைதியாக, கூர்மையாகப் பார்த்தால் நமக்குத் தெளிவு கிடைக்கும்.

 

நம் அனைவரையும் விட மோடியும் அமித் ஷாவும் ஒன்றைத் தீர்க்கமாக உணர்ந்தவர்கள். வரும் சட்டசபைத் தேர்தலில் பாஜக-வின் முக்கிய குறிக்கோள் இது: திமுக-வைத் தோற்கடித்து ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும். அதே சமயம், எந்த அளவு சாத்தியமோ அந்த அளவு திமுக-வை விட ஒரு சிறந்த ஆட்சியைத் தமிழகத்தில் நிறுவ வேண்டும்.

 

இந்த முக்கிய குறிக்கோளை இழந்து, திமுக மறுபடியும் ஜெயித்து ஆட்சி அமைத்தாலும் பரவாயில்லை, அது நடக்கையில் பாஜக-வும் தமிழகத்தில் தனது வாக்கு சதவிகிதத்தை அதிகரித்துக் காட்டி, அதைச் சொல்லி மார் தட்டலாம் என்று நினைப்பது முதிர்ச்சியற்ற, தொலைநோக்கில்லாத, பார்வை. முற்றிலும் தீய திமுக-வைத் தேர்தலில் தோற்கடிப்பது எல்லாவற்றையும் விடப் பிரதானமானது. மற்ற அனைத்தும் பிறகு.

 

பாதத்தில் பெரிய எலும்பு முறிவு ஏற்பட்டால், முதலில் அதற்கான கட்டுப் போட்டு கட்டிலில் படுத்து பாதத்தைச் சரி செய்துகொள்ள வேண்டும். எலும்பு முறிவு ஏற்பட்ட பாதத்திலுள்ள பித்த வெடிப்புக்கு முதலில் வைத்தியம் பார்க்கிறேன், எலும்பு முறிவு சிகிச்சைக்கான கட்டை அப்புறம் போட்டுக் கொள்கிறேன் என்று நாம் இருக்க மாட்டோம். இங்கு எது அதி முக்கியமோ, அதைப் போல் முக்கியம் திமுக-வை ஆட்சியிலிருந்து இறக்குவது.

 

அதிமுக தூய்மையான அரசியல் கட்சி அல்ல. அவர்களிடம் ஆட்சி இருந்தால் அவர்கள் தூய்மையாக, நேர்மையாக, திறமையாக, ஆட்சி செய்வார்கள் என்று மோடியும் அமித் ஷாவும் நினைக்க மாட்டார்கள். ஆனால் திமுக-வைப் போல தேச விரோத, ஹிந்து விரோத, சூப்பர் கில்லாடித்தனமான ஆட்சியாக அதிமுக ஆட்சி இருக்காது என்பது நிச்சயம். ஒரு மாம்பழம், ஒரு செவ்வாழைப் பழம் மட்டும் ஒரு கடைக்காரரிடம் இருக்கின்றன. மாம்பழம் மிகவும் அழுகியது, செவ்வாழைப்பழம் மிகவும் கனிந்தது என்றால், நாம் செவ்வாழைப் பழத்தை வாங்குவோம். அப்படியான வாழைப் பழம், அதிமுக - இப்போதைக்கு வயிறு நிறைய உதவும்.

 

அண்ணாமலையின் வரவுக்குப் பின் தமிழகத்தில் பாஜக-வின் வாக்கு சதவிகிதம் அதிகரித்திருக்கும் - அதற்கு முக்கிய காரணம் அவர்தான்.

ஆனாலும் மாநிலத்தில் தற்போதைய பாஜக வாக்கு சதவிகிதம், அதிமுக-வின் வாக்கு சதவிகிதத்தை விடக் குறைவுதான். அதிமுக-வின் ஜென்ம எதிரி திமுக என்பதால், திமுக-வைத் தேர்தலில் வீழ்த்தும் நோக்கில் பாஜக அதிமுக-வுடன் கூட்டணி அமைத்தாக வேண்டும். தமிழகத்தில் பிற்கால நல்லாட்சி குறித்தும் தேசநலன் பற்றியும் அதிகம் சிந்திக்கும் பாஜக-வுக்கு இந்தக் கூட்டணி அமைந்தது மிக முக்கியம் - அதிமுக இதைத் தன் பக்கத்திலிருந்து அவ்வளவு முக்கியமாகக் கருதியதோ இல்லையோ.

 

2026 சட்டசபைத் தேர்தலுக்காக அதிமுக-வுடன் கூட்டணி அமைக்க விரும்பிய பாஜக-விடம், "எங்கள் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் உங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் ஒத்துவராது. ஆகையால் இந்தக் கூட்டணி ஏற்படவேண்டும் என்றால், அண்ணாமலை பாஜக-வின் தமிழகத் தலைவராக நீடிக்கக் கூடாது, அவர் இடத்தில் வேறு ஒருவரைப் பாஜக நியமிக்க வேண்டும்" என்று அதிமுக நிபந்தனை விதித்ததா, அதைப் பாஜக மேலிடம் ஏற்றுக் கொண்டுதான் அவ்வாறு செயல்பட்டதா என்பது பொதுவெளியில் யாருக்கும் தெரியாது. அது உண்மை என்றாலும், மாநில ஆட்சியிலிருந்து திமுக-வை இறக்க வேண்டும், அதைத் தீவிரமாக முயற்சிப்பதற்கு அதிமுக-வுடனான கூட்டணி அவசியம் என்று பாஜக நினைத்துச் செயல்பட்டால் அது நல்ல அரசியல் யுக்தி.

 

அண்ணாமலை தமிழக பாஜக-வின் தலைவராக வருவதற்கு, அல்லது அதையும் விடக் கட்சியிலும் அரசாங்கத்திலும் உயர்ந்த இடங்களை அடைவதற்கு, அவருக்கு வயது இருக்கிறது. அதுபோன்ற கால சௌகரியம் அற்றது, திமுக ஆட்சியிலிருந்து விடுபடக் காத்திருக்கும் தமிழகம்.

 

வரும் தேர்தலில் அதிமுக துணையுடன் திமுக-வைத் தோற்கடிக்க முடிந்தால், அதன் பிறகு பாஜக-வின் நோக்கங்கள் இவ்வாறு இருக்கும்: திமுக-வை ஆட்சியிலிருந்து தள்ளியே வைத்திருக்க வேண்டும்; அதற்காகக் கூடிய வரை அதிமுக-வுடன் கூட்டணி தொடர வேண்டும்; அதே நேரம் பாஜக-வைத் தமிழகத்தில் மேலும் வளரச் செய்ய வேண்டும்; பிறகு தனது கட்சி பிரதான கூட்டணிக் கட்சியாக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் நிலையை பாஜக எட்ட வேண்டும். மோடியும் அமித் ஷாவும் - குறைந்த பட்சம் அமித் ஷா மட்டுமாவது - தேக ஆரோக்கியத்துடன் தீவிர அரசியலில் இருக்கும்போதே இந்த நோக்கங்களைப் பெருமளவு நிறைவேற்ற - அதற்கான வலுவான அடித்தளம் அமைக்க - பாஜக முயற்சிக்க வேண்டும். அதுதான் விவேகம்.

 

இதே எண்ண ஓட்டம், அண்ணாமலைக்கும் இருக்கும் என்று நாம் கருதலாம்.

 

அடுத்ததாக, தமிழக பாஜக தலைவர்கள் அண்ணாமலை மீது, அவருடைய வளர்ச்சி மீது, பொறாமை கொண்டு, கட்சிக்குள் அவருக்கு ஒத்துழைப்பு தராமல் இருக்கிறார்களா என்று பொதுமக்களில் சிலர் சந்தேகம் கொள்கிறார்கள், அதைச் சமூக வலைத் தளங்களில் வெளிப்படுத்துகிறார்கள், அதன் மறுபக்கமாக மற்ற தமிழக பாஜக தலைவர்களைக் கண்டனம் செய்கிறார்கள். இது, நல்ல எண்ணத்தில் செய்யப்படும் தவறு.

 

அண்ணாமலையின் வரவால், அவரது தடலடியான பேச்சுகளால், அவருக்குக் கிடைக்கும் எழுச்சியான மக்கள் ஆதரவால், சில சீனியர் தமிழக பாஜக தலைவர்களுக்கு அவர் மீது சிறிதளவு பொறாமை ஏற்பட்டிருந்தாலும், அது சாதாரண மனித குணம், உலக இயல்பு. அது ஏற்பட்டாலும் அந்த சீனியர் தலைவர்கள் பண்பு மிக்கவர்கள், அவர்களின் அர்ப்பணிப்பும், தேச சேவையும் மதிப்பு மிக்கவை, பிற கட்சிகளில் காணக் கிடைக்காதவை. அவர்களும் பாஜக-வின் சொத்து.

 

அண்ணாமலையும் அந்த சீனியர் தலைவர்களும் காலப் போக்கில் ஒருவருக்கு ஒருவர் சரியாகி விடுவார்கள். நல்லவர்களுக்கு இடையில் இதுதான் நடக்கும். அவர்கள் தங்களுக்குள் சரியாகிக் கொண்டிருந்தாலும், பாஜக ஆதரவாளர்கள் எதையும் ஊதி ஊதிப் பார்க்காமல் இருப்பது நல்லது. இந்த இயல்புகள், இந்தப் போக்குகள் அனைத்தையும் அண்ணாமலை உணர்ந்திருப்பார் என்று நாம் நம்பலாம்.

 

அரசியல் ஆட்டம் என்பது தினம் தினம் சோதனைகளும் சவால்களும் நிரம்பியது - கட்சிக்கு உள்ளே சில, கட்சிக்கு வெளியே சில என்றிருக்கும். எல்லாக் கட்சிகளுக்கும் அதுதான் விதி.   அவற்றைப் பொறுமையாகக் கடந்து, கட்சியில் உள்ள சீனியர்களையும் அரவணைத்து அவர்களின் ஒத்துழைப்பையும் பெற்று இன்று உச்சம் தொட்டிருப்பவர்கள் மோடியும் அமித் ஷாவும். அந்த வழியில் அண்ணாமலையும் பயணிக்க வேண்டும்.

 

மோடியும் அமித் ஷாவும் அண்ணாமலைக்கு அரவணைப்பாகக் கிடைத்த மாதிரி, மோடி மத்திய அரசியலுக்கு வரும்போது அவருக்குக் கிடைக்கவில்லை. அந்த வகையில், பாஜக-வுக்குள் காலடி வைக்கும் போதே அண்ணாமலைக்கு அதிக அதிர்ஷ்டம் உண்டு. அவர் பொறுமை காத்து பாஜக-வில் உயர்ந்த இடத்தை அடைவார், திமுக எதிர்ப்பிலும் தமிழகத்திற்குப் பெரும் சேவை செய்வார்.

 

இப்போது அனைவருக்கும் தேவை பொறுமை. அது பாஜக-வுக்கும் நாட்டுக்கும் நல்லது செய்யும்.

 

பகுதி 75 // 31.03.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr