Sunday, 24 May 2026

கேள்வி-பதில் (24.05.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: சென்ற சட்டசபைத் தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது. பிறகு, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக மற்றும் முஸ்லீம் லீக் கட்சி எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுடன் தவெக தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்ற பின் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது கட்சியினர் முன் பேசும்போது, "இன்னிக்கு நம்ம ஆட்சிய இழக்கலை. நம்ம தயவுலதான் ஆட்சியே நடக்குது. உங்களுக்கு என்னன்னு புரியும்" என்று சொல்லி இருக்கிறாரே?

 

பதில்: முன்பு ஆட்சி செய்த திமுக பதவியிலிருந்து இறக்கப் பட்டு, தவெக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி நடக்கும்போது அந்த ஆட்சிக்கு ஏன் திமுக 'தயவு' காட்ட நினைக்க வேண்டும்? பயம்தான் காரணம் - தவெக தலைமையில் ஒரு ஆட்சி அமையாமல், வேறு எந்த வகைக் கூட்டணியும் ஆட்சி அமைப்பதற்கான மெஜாரிட்டியை எட்ட முடியாமல், ஜனாதிபதி ஆட்சி வந்து சட்டசபை முன்கூட்டியே கலைக்கப் பட்டு இன்னொரு தேர்தல் வருமானால், சென்ற தேர்தலில் திமுக-வுக்குக் கிடைத்த 59 எம்.எல்.ஏ-க்களை விட அக்கட்சி அநேகமாகக் குறைவான எம்.எல்.ஏ-க்களைப் பெறலாம்.

 

தவெக-வைப் பொறுத்தவரை, இப்போது ஆட்சி பெரிதும் நம் கையில் இருக்கிறது, அடுத்த சட்டசபைத் தேர்தல் ஐந்தாண்டுகள் கழித்தே வரட்டும் என்று அக்கட்சி நினைக்கிறது. ஆகையால் தவெக-வின் தயவில் திமுக-வின் சட்டசபை எண்ணிக்கை சார்ந்த மானம் மேலும் சரியாமல் பிழைக்கிறது. இங்கு தயவு காட்டுவது தவெக, தயவை அனுபவிப்பது திமுக. திமுக காட்டுவது தயவு அல்ல, பந்தா.

 

 

2. கேள்வி: தவெக தலைமையிலான அமைச்சரவையில் விசிக மற்றும் ஐ.யூ.எம்.எல் கட்சிகள் பங்கேற்றதை ஆபாசமாக விமர்சித்து - பெண்களையும் இழிவு செய்து - திமுக-வின் ஆ. ராசா எக்ஸ் தளத்தில் ஒரு கருத்தை வெளியிட்டார். அதை ஒட்டி, திமுக தலைவர் ஸ்டாலின், "கட்சியினர் யாரையும் புண்படுத்தும்படி கடும் சொற்களைப் பேசவேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவரான எனது அன்பு வேண்டுகோள்" என்று வலைத்தளம் மூலமாகச் சொல்லி இருக்கிறார்.

 

ஆ. ராசாவின் ஆபாசம் மிக்க விமர்சனத்தைக் கண்டிக்காமல், ஸ்டாலின் ஏன் அவரிடம் அன்பான வேண்டுகோள் வைக்கிறார்?

 

பதில்: ஆபாசம் மிக்க ஆ. ராசா. பாசம் மிக்க ஸ்டாலின்.

 

 

3. கேள்வி: தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே தனது கட்சிக்கு வியக்கத் தக்க எண்ணிக்கையில் எம்.எல்.ஏ-க்களைப் பெற்று ஆட்சி அமைத்திருக்கும் விஜய், ஏன் வியக்கத் தக்க நல்லாட்சி தர முடியாது, தர மாட்டார்?

 

பதில்: இன்னொருவர் தனக்காக, தன் விருப்பப்படி, எழுதிய சினிமா வசனங்களைச் சிறப்பாகப் பேசி, அதற்கேற்ற வகையில் சிறப்பாக நடித்துப் பேர் வாங்குவது வேறு. அதை விஜய் கச்சிதமாகச் செய்தார். ஆனால் நல்லாட்சி என்பது, தான் விரும்பும் டிராக்கில் மக்களின் தேவைகளையும் பிரச்சனைகளை அமைத்து, ஆட்சிக்கான சட்டங்களையும் விதிகளையும் தனக்குப் பிடித்த மாதிரி டான்ஸ் ஆடவைத்து, எல்லாப் பத்திரிகைகள், செய்திச் சேனல்கள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டை எப்போதும் இதமான மியூசிக் போடவைத்து, கடைசியில் வணக்கம் போடுவதல்ல.

 

முதலமைச்சரை ஆவென்று பார்த்தபடி இருந்து, தனக்கு அமைச்சர் பதவி கிடைத்ததால் முதலமைச்சரிடம் நன்றி விசுவாசம் காட்டும் நெஞ்சோடு வலம் வருகின்ற அமைச்சர்களைத் தான் விஜய் பெற முடியும் - ஒன்றிரண்டு நன்கு படித்தவர்கள் சந்தடி சாக்கில் விஜய் கட்சியில் சேர்த்து எளிதாக அமைச்சர்களாகி விடுவது அவர்களுக்கு கெத்தாக இருக்கலாம், அது வேறு விஷயம். சுயமாக விசாலமாகச் சிந்தித்து, உயர் திறமையுடன் செயல்படும் மனிதர்களை விஜய் ஈர்த்துத் தேர்தலில் வேட்பாளர்களாகப் போட்டியிட வைத்து, அவர்கள் ஜெயித்து வந்தபின் அவர்களை அமைச்சர்களாக ஆக்கியதாகத் தெரியவில்லை. கூட்டணி ஆட்சியில் இணைந்த பிற கட்சி அமைச்சர்களும் வெறும் லக்கி பிரைஸ் அமைச்சர்களாகத் தெரிகிறார்கள். விஜய் தலைமையிலான இத்தகைய அமைச்சரவை, வியக்கத்தக்க நல்லாட்சி தருவதற்கான சுபாவமும் திறமையும் கொண்டது என்று நம்பமுடியவில்லை.

 

 

4. கேள்வி: "பதவியை என் தலையிலிருக்கும் முடிக்குச் சமமாகக் கருதுகிறவன் நான்" என்று விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருக்கிறாரே?

 

பதில்: கடவுள் மனிதனைப் படைத்து அவனுக்குத் தலைமுடியையும் சேர்த்துப் படைத்திருக்கையில், பேதம் காட்டாமல் அந்தத் தலைமுடியையும் உயர்வாக மதிக்கும் திருமாவளவனின் மனப்பாங்கு வியக்கத் தக்கது.

 

 

5. கேள்வி: திமுக-வின் தேர்தல் கூட்டணிக் கட்சிகளான விசிக மற்றும் ஐ.யூ.எம்.எல் கட்சிகள், தவெக தலைமையிலான அமைச்சரவையில் பங்கேற்றதை விமர்சித்து, திமுக-வின் ஆ. ராசா வெளியிட்ட ஆபாசப் பதிவை அவரே நீக்கிவிட்டார். பிறகு அவர், "என் வீட்டுத் தோட்டத்துத் தென்னை கூனி வளைந்து எதிர் வீட்டுக்கு இளநீர் தந்தால், இலக்கியத்தில் அதற்குப் பெயர் 'முடத்தெங்கு'! அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்? வாழ்க தமிழ்!" என்று கவிதை ரீதியில் இன்னொரு பதிவைப் போட்டிருக்கிறாரே?

 

பதில்: தமிழக மக்கள் என்ற உரிமையாளரின் தென்னந்தோப்பில் எண்ணிலடங்கா தென்னை மரங்கள் உண்டு. அந்தத் தென்னை மரங்களின் எண்ணிக்கை, அவற்றில் காய்த்து இளநீர் வழங்கும் தேங்காய்களின் எண்ணிக்கை ஆகியவை அந்தத் தோப்பின் காவல்காரனுக்கு மட்டும் அத்துப்படி. அந்தக் காவல்காரனும் அவன் குடும்பத்தவரும் தங்களுக்கென்று நைஸாகப் பறித்துக் கொண்ட பெரு மதிப்புள்ள இளநீர்த் தேங்காய்களின் எண்ணிக்கை, அவற்றில் ரகசியமாக வெளிநாட்டுக்கு அனுப்பப் பட்ட இளநீர்த் தேங்காய்களின் எண்ணிக்கை, ஆகியவற்றுக்கு, சமூகத்தில் 'ஆட்டை' என்று பெயர். இலக்கியத்தில் என்ன பெயர் வைக்கலாம்? வாழ்க ஜனநாயகம்!

 

பகுதி 96 // 24.05.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

Friday, 22 May 2026

கேள்வி-பதில் (22.05.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: விஜய் கட்சியான தவெக, தனியாகத் தேர்தலில் போட்டியிட்டு தமிழகத்தில் ஆட்சி அமைத்திருக்கிறது. இதில் அதிக முக்கியத்துவம் எதற்கு இருக்கிறது? பலம் வாய்ந்த திமுக-வை ஆட்சியிலிருந்து இறக்கியதற்கா? ஒரு புத்தம் புதிய கட்சி தனது முதல் தேர்தலிலேயே ஆட்சியைக் கைப்பற்றியதற்கா?

 

பதில்: இரண்டுக்கும் சேர்த்து. அத்துடன் இதில் வேறொரு முக்கியத்துவம் உண்டு. என்னவென்றால்: நமது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் நம்பகத் தன்மை பளிச்சிடுகிறது.

 

விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றபோது, மேடையில் புன்னகைத்து அமர்ந்திருந்த ராகுல் காந்தி சிம்பிளான இந்த மூன்றாவது விஷயத்தை ஏற்க மாட்டார். அதை ஏற்றால், பாஜக மத்தியிலும் பிற மாநிலங்களிலும் பெற்றுவரும் தேர்தல் வெற்றிகளை 'ஓட்டுத் திருட்டு' என்று ராகுல் மலிவாக இகழ முடியாது என்பதால்.

 

விஜய் பெற்ற ஓட்டுகளை உண்மைத் தன்மையுடன் பதிவு செய்து வெளிக்காட்டிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை, விஜய்யாவது ஏற்றுக் கொண்டு அந்த இந்திய அதிசயத்தைப் பாராட்ட வேண்டும். அதைச் செய்வதற்கு புத்திசாலித்தனம் தாண்டிய, நடிப்பைத் தாண்டிய, நல்மனது அவருக்குத் தேவை.

 

 

2. கேள்வி: விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் இப்போது விசிக சார்பாகவும் ஒருவர் சேர்ந்திருக்கிறார். அதாவது, இந்த அரசு விசிக-வும் இணைந்த கூட்டணி ஆட்சி என்று ஆகிவிட்டது. இனி மாநில அரசைத் திமுக குறை சொன்னால், அரசுக்கு ஆதரவாகவும் திமுக விமர்சனத்தை மறுத்தும் விசிக தலைவர் திருமாவளன் அறிக்கை வெளியிடுவாரா?

 

பதில்: அது திருமாவளவனுக்கே இப்போது தெரியாது. அந்த இக்கட்டான தருணங்களில், "அரசியல் ரீதியாக நாங்கள் தவெக கூட்டணி மந்திரிசபையில் இருக்கிறோம். கருத்தியல் ரீதியாக திமுக கூட்டணியில் எங்களுக்கான இடம் உண்டு" என்று ஆரம்பித்து அவர் ஏதாவது ஒரு கத்தரிக்கா-அவியல் அறிக்கை தரலாம். இப்போது ஒன்றும் சொல்வதற்கில்லை.

 

 

3. கேள்வி: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நோக்கி, அக்கட்சியின் அதிருப்தி அணித் கலைவர் சி.வி. சண்முகம், "என் புள்ளையையும் உங்க புள்ளையையும் இங்க நிறுத்துங்க. என் புள்ளை தலையில அடிச்சு சத்தியம் பண்றேன் - திமுக-வுடன் கூட்டணி அமைக்கலாம்னு நீங்க சொன்னீங்கன்னு. அதை மறுத்து உங்க புள்ளை தலையில அடிச்சு நீங்க சத்தியம் பண்ணத் தயாரா?" என்று கேட்டிருக்காரே?

 

பதில்: மலிவான திராவிட அரசியல் சவால்களைக் கேட்கும் நாம்தான் தலையில் அடித்துக் கொள்ளவேண்டும்.

 

 

4. கேள்வி: சட்டசபைத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் இடம்பெற்ற விசிக மற்றும் முஸ்லீம் லீக் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள், விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இணைந்து விட்டனர்.  இது அந்தக் கட்சிகள் திமுக-வுக்குச் செய்யும் துரோகம் என்று சொல்லவந்த திமுக தலைவர் ஆ. ராசா, மிக ஆபாசமாகப் பதிவிட்டிருக்கிறாரே?

 

பதில்: ஆட்சியில் இருக்கும்போது எதிரிகளைத் தகாத வார்த்தைகளில் விமர்சிக்கும் திமுக, எதிர்க் கட்சியானால் அந்தத் தகாத சொற்களை இரட்டிப்பாகும். ஆட்சியில் இருக்கையில் அவை ஏன் குறைவு என்றால், அப்போது பல தகாத செயல்களிலும் அது கவனம் செலுத்துகிறது. தவறானது, தகாதது, தேசியத்துக்கு எதிரானது, என்பவை திமுக-வின் கேரக்டர். இது மாறாது.

 

முன் காலத்தில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற சொற்களைத் திமுக பிரபலம் செய்தது. சமீப காலமாக அவற்றை உச்சரிக்கத் திமுக-வுக்கே கூச்சமாக இருக்கிறது. திமுக இப்போது பிரபலம் செய்திருக்கும் வேறு மூன்று சொற்கள்: டெங்கு, கொசு, மலேரியா.

 

 

5. கேள்வி: "திமுக எதிர்ப்பு என்பதற்காக மட்டும் நாங்கள் தவெக-வை ஆதரிக்கிறோம். பதவிக்காக அல்ல. நாங்கள் அமைச்சர் பதவி கேட்கவில்லை. நாங்கள் அமைச்சர் பதவி கேட்பதாகச் செய்யப்படும் பிரசாரம் தவறானது" என்று, அதிமுக-விற்குள் இயங்கும் பழனிசாமி எதிர்ப்பு அணித் தலைவர் வேலுமணி கூறியிருக்கிறாரே?

 

பதில்: இது மக்களிடம் ஓரளவு மரியாதை பெறத்தக்க அணுகுமுறை - பின்னணி உண்மைகள் நமக்குத் தெரியாது என்றாலும்.

 

திமுக எதிர்ப்பைப் பிரதானமாகச் சொல்லி சட்டசபைத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுவிட்ட கட்சி தவெக - அதை அறைகூவலாகச் சொன்னது விஜய் என்பது அதற்குப் பெரிய காரணம்.

 

இனி தமிழக அரசியலில் திமுக எதிர்ப்பு செய்து தேர்தலில் வெல்ல நினைக்கும் வேறு எந்தக் கட்சியும், தவெக-வின் விரலைப் பிடித்து நின்றால் அங்கேயே நிற்கவேண்டியதுதான். திமுக-வை எதிர்ப்பதோடு, தவெக-வையும் தீவிரமாக எதிர்க்கும் காரணங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி - அதற்கான காரணங்கள் நிறைய உண்டு - அரசியல் செய்தால்தான் இன்னொரு கட்சி பெரிதாக எழ முடியும். அந்த வழியில் தவெக-வை நோக்கிச் சொல்லப்படும் வெறும் சாடல்கள், லாஜிக் பேச்சுகள், புள்ளி விவரங்கள் மட்டும் இங்கு உதவாது - அவையும் அவசியம் என்றாலும். இந்த விஷயத்தில், மக்களின் மனதைக் கவரும் ஒரு தலைவர் வரமாய்க் கிடைக்க வேண்டும், அவர் தவெக-வையும் எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும்.

 

காலம் சத்தம் போட்டு பாஜக-வின் அண்ணாமலையை அழைக்கிறது.

 

பகுதி 95 // 22.05.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

கேள்வி-பதில் (21.05.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "பெரும் பொருளாதாரப் புயல் இந்தியாவை நெருங்குகிறது, நம் நாட்டைத் தாக்கப் போகிறது. அதை யாராலும் தடுக்க முடியாது. அது நீங்களோ நானோ வாழ்நாளில் கண்டிராத ஒன்று. அது அம்பானி, அதானி, மோடியைத் தாக்காது. இளைஞர்கள், தொழிலாளர்கள், சிறு வணிகர்களைத் தாக்கும்" என்று ராகுல் காந்தி கூறி இருக்கிறாரே?

 

பதில்: 'மத்தியில் பாஜக கூட்டணிக்கு மாற்றாகக் காங்கிரஸ் கட்சிக்கு அல்லது காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் வாக்களித்தால், நாங்கள் சிறப்பான ஆட்சி தருவோம்' என்று ராகுல் காந்தி பேசினால் அது மக்களிடம் எடுபடுவதில்லை. இது அவருக்கும் புரிகிறது. ஆகையால் 'பாஜக-வின் மோடி ஆட்சியில் காத்து, கருப்பு மற்றும் பல இன்னல்கள் மக்களை வாட்டி எடுக்கும்' என்று பேசினால், சாதாரண மக்கள் கலக்கம் கொண்டு மோடி அரசை வெறுக்கலாம் என்று அற்பமாக யோசிக்கிறார் ராகுல். அதன் விளைவு, அவரது பேச்சு.

 

மேற்காசியப் போரினால் கச்சா எண்ணை விலை கிடுகிடுவென்று உயர்ந்து உலகப் பொருளாதாரமே கடுமையாகப் பாதிக்கப் பட்டிருக்கிறது. அதன் தாக்கம் இந்தியாவிலும் இருக்கும். ஆனால் சோதனையான நேரத்தில் மக்களுக்கு மேலும் வேதனை தர முயல்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

 

தன் சரித்திரத்தில் காங்கிரஸ் கட்சி கண்டிராத ராகுல் காந்தி என்னும் கோரப் புயல் அந்தக் கட்சியை நெருங்கித் தாக்கிவிட்டது. அதை யாரும் தடுக்க முடியவில்லை. அது சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராபர்ட் வத்ரா ஆகியோரைத் தாக்கவில்லை. ஏனைய காங்கிரஸ் கட்சியினரைத் தாக்கி அவர்களை முடக்கி வைத்திருக்கிறது.

 

 

2. கேள்வி: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நினைவைப் போற்றுகிற வகையில் முதலமைச்சர் விஜய் பதிவிட்டிருக்கிறாரே?

 

பதில்: திராவிட மாடலின் சில சாயல்கள் தவெக மாடலில் அவ்வப்போது தெரிகின்றன.

 

இது தொடர்பாக இன்னொன்று. தனது ஆட்சியின் முதல் ஒன்று-ஒன்றரை வருடத்திற்குள் முதலமைச்சர் விஜய் சாதனைத் திட்டங்களைச் செயல்படுத்த முடியாமல் இருக்கலாம். அது புரிந்துகொள்ளத் தக்கது. ஆனால் முதல் வாரத்திலிருந்து அவர் மற்றும் அவரது அமைச்சர்கள் பேச்சிலும் செயலிலும் பெரிய தவறுகள் செய்யாமல், அதீத அசட்டுத்தனங்கள் நிகழ்த்தாமல், பார்த்துக் கொள்ள வேண்டியது அவர் பொறுப்பு. அவரது எண்ணங்கள் நேராக, திடமாக இருந்தால், அவருடைய அமைச்சர்கள் மற்றும் உயர் அரசு அதிகாரிகள் மீது அவருக்குச் சரியான தொடர்பும் பிடியும் இருந்தால், இது சாத்தியம். அந்த சாத்தியம் அவரிடம் பளிச்சென்று தெரியவில்லை.

 

 

3. கேள்வி: திருப்பூரில் ஆடுகள் ஏற்றிவந்த சரக்கு வாகனங்களை ஒரு போலீஸ் எஸ்.எஸ்.ஐ நிறுத்தி, டிரைவர்களிடம் தலா 200 ரூபாய் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைத் தளங்களில் பரவ, அவர் சஸ்பெண்ட் செய்யப் பட்டிருக்கிறார். இந்த உடனடி நடவடிக்கைக்குத் தமிழக அரசைப் பாராட்டலாமா?

 

பதில்: தமிழகத்தில் பல பத்தாண்டுகளாக நடக்கும் ஆட்சி முறைக்கு, அதன் கன்னாபின்னா ஆட்டத்திற்கு, 'திராவிட மாடல்' என்ற ஸ்டைலான பெயரை ஸ்டாலின் சென்ற ஆட்சியில் வழங்கினார். அதன்படி, காதும் காதுமாக அரசு அலுவலர்கள் லஞ்சம் வாங்கினால் அது அரசால் கண்டுகொள்ளப் படாது. ஆனால் அவர்கள் லஞ்சம் வாங்கியதற்கு, மறுக்கமுடியாத வலுவான ஆதாரம் வெளிப்படும் அளவுக்கு அந்த அலுவலர்கள் கிறுக்குத்தனமாக நடந்துகொண்டால், அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும். அரசு அலுவலர்கள் விஷயத்தில் தவிர்க்க முடியாமல் எடுக்கப்படும் இந்த நடவடிக்கை, அமைச்சர்கள் விஷயத்தில் வாலை ஆட்டாமல் கப்சிப் ஆகிவிடும். இன்றுவரை லஞ்ச ஊழல் மீதான அரசு நடவடிக்கைகளின் நிலை இது. இனி புதிய அரசை உன்னிப்பாகக் கவனித்தால்தான்,  லஞ்ச ஊழலை இந்த அரசு எப்படிக் கையாள்கிறது என்று தெரிய வரும். அதற்கு இரண்டு வருடங்களாவது ஆகும். அவசரப் படேல்!

 

 

4. கேள்வி: தமிழகத்தில் தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, அமைச்சரவையில் பங்கேற்பது பற்றி ஆலோசிக்கிறது என்கிறார் விசிக தலைவர் திருமாவளவன். அமைச்சரவையில் விசிக இணைந்தால், அரசுக்கு வெளியிலிருந்து விசிக ஆதரவு என்பது, இனி உள்ளிருந்து ஆதரவு என்று மாறுவதாக அர்த்தமா?

 

பதில்: வெளியிலிருந்து குடைச்சல் என்பது மாறி, உள்ளிருந்தே குடைச்சல் என்றும் இருக்கலாம். அமைச்சரவையில் விசிக பங்கேற்றால், அனுபவிக்கப் போகும் விஜய்க்குத்தான் அது முழுமையாகத் தெரிய வரும்.

 

 

5. கேள்வி: தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்த தவெக-வை விமர்சிக்க நினைத்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்,  "பலரைச் சில காலம் ஏமாற்றலாம். சிலரைப் பல காலம் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது" என்று ஒரு மேல்நாட்டு அறிஞர் சொன்ன வார்த்தைகளை மறுபதிவு செய்திருக்கிறாரே?

 

பதில்: 1967-ல் முதன்முறை தமிழகத்தில் ஆட்சி அமைத்த திமுக - சமீப வருடங்களாக ஸ்டாலின் தலைமை தாங்கி அவர் குடும்பம் பெரும் பங்கு பெறும் திமுக - சட்டசபைத் தேர்தலில் விஜய்யின் புதிய கட்சியிடம் படுதோல்வி அடைந்திருக்கிறது. இந்தத் தருணத்தில், அவர் பதிவிடும் சொற்களின் உடனடி அர்த்தம் புரியாமல் ஸ்டாலின் ஏதோ சொல்லிவிட்டார். சரி, இதற்காக ஸ்டாலினுக்குக் கிரெடிட் கொடுக்கவேண்டும் என்றால், 'தோல்வியிலும் மனிதர் தன்னை மறைக்காமல் பேசுகிறார்' என்று அவரைப் போற்றலாம்.

 

பகுதி 94 // 21.05.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr