|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: "1000 ஆண்டுகள் நின்று பேசக்கூடிய சாதனைகளை 5 ஆண்டுகளில்
செய்திருக்கிறோம்" என்று முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறாரே? பதில்: தமிழக
சட்டசபைத் தேர்தல் நெருங்கும்போது ஸ்டாலின் இப்படிப் பேசி இருக்கிறார். ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்தலாம் என்பது பேச்சு வழக்கு.
ஆயிரம் ஆண்டு நிலைக்கும் சாதனை என்று சொல்லியாவது ஒரு தேர்தலைச் சந்திக்கலாம்
என்பது ஸ்டாலினின் கண்டுபிடிப்பு. இரண்டுமே கோணல் சிந்தனை, ஏமாற்று வழிகள். |
|
2. கேள்வி: "அடுத்து அமையும் திமுக ஆட்சியில் சீனியாரிட்டி, மூத்தவர் என்ற
தகுதியெல்லாம் இனி பொருந்தாது. அதிக வெற்றியைப் பெற்றுத் தருபவர்களுக்கே
அமைச்சர் பதவி கிடைக்கும்" என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசியிருக்கிறாரே? பதில்: திமுக தலைமையின் எதிர்பார்ப்பின்படி, அதிகம் பெற்றுத் தருவது அவசியம்தான்.
சம்பந்தப் பட்டவர்கள் இதை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். |
|
3. கேள்வி: "அரசியலுக்கு வந்து சிஸ்டத்தை மாற்றவேண்டும்
என்று முயன்ற நடிகர் ரஜினியை
அரசியலுக்கு வரவிடாமல் திமுக மிரட்டியது. அதனால் ரஜினி அரசியலுக்கு
வரவில்லை. அரசியலுக்கு வரும் மன தைரியம் விஜய்க்கு மட்டும்தான் உள்ளது"
என்று விஜய் கட்சியின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசி, பின்னர் ரஜினி பற்றி
அப்படிப் பேசியதற்காக அவர் மன்னிப்பு கேட்டார். ரஜினி மற்றும் விஜய் பற்றி, ஆதவ் அர்ஜுனா
குறிப்பிட்டது முற்றிலும் தவறா? பதில்: ஒரு
தமிழ்நாட்டு நடிகர் அரசியலுக்கு வரவேண்டும், திமுக
மற்றும் அதிமுக கட்சிகளை எதிர்த்து நேராக அரசியல் செய்யவேண்டும் (அதாவது, வெறும் பணப்பெட்டி அரசியல் செய்யவேண்டாம்), என்று நினைத்து சில அடிகள் எடுத்து வைப்பதற்கே
அசாத்திய தைரியம் வேண்டும். ஆரம்பத்தில் அது ரஜினியிடம் இருந்தது. போகப்போக ரஜினியின் அந்த தைரியம் நிலைக்கவில்லை. அதற்கு மிக முக்கிய
காரணம்: ரஜினி அரசியல் கட்சி தொடங்கும் எண்ணத்திலிருந்து பின்வாங்கிய போது அவர்
வயது 70, அவருடைய உடல் ஆரோக்கியமும் ஆஹா என்றில்லை. அந்த வயதில், அந்த உடல்நிலையில், அவர்
தனது செல்வாக்கை மட்டும் நம்பி ஒரு கட்சியை ஆரம்பித்து, அவருடைய வாழ்நாளில் அதை ஸ்திரப்படுத்தி, ரஜினிக்குப் பின்னரும் அந்தக் கட்சியே தனக்கான நல்ல
தலைவர்களை உருவாக்கிக் கொள்ளும் என்ற சாத்தியம் கிடையாது என்பதை, அவர் முன்னர் உணராவிட்டாலும் தாமதமாக உணர்ந்தார். அவர்
ஒரு கட்சியை ஆரம்பித்துத் தீவிர அரசியலுக்கு வரும் முடிவைக் கைவிட அதுவே போதுமான
காரணம். அதுதான் அவரது அப்போதைய 70
வயதில், அவருடைய உடல்நிலையில், அவருக்கான விவேகம். அதைத் தாண்டி அதில் தைரியத்திற்கு
இடமில்லை. நடுத்தர வயதுள்ள விஜய் அரசியலுக்கு வர, திமுக-வை
எதிர்க்க, அவருக்குத் தைரியம் இருக்கிறது என்று
அர்த்தமாகும். ஆனால் ஒரு கடினமான
காரியத்தைச் செய்வதற்கு, தூய எண்ணம் இல்லாமல் எழும் தைரியம்
மட்டுமே போற்றத் தகுந்தது அல்ல. இது புரியாவிட்டால், சந்தன வீரப்பனும் ஹீரோ மாதிரித்தான். ஆதவ் அர்ஜுனாவும்
அனுமார் மாதிரித்தான். |
|
4. கேள்வி: அமெரிக்காவின் தீவிரவாத எதிர்ப்பு மைய இயக்குனர்
கென்ட், ஈரான் நாட்டின்
மீது அமெரிக்கா போர் புரிய நியாயமில்லை என்று கூறித் தனது பதவியை ராஜினாமா
செய்திருக்கிறாரே? பதில்: ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் போர் பற்றிய
நியாயம் என்னவாக இருந்தாலும், அந்தப் போர் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அவ்வப்போது மார் தட்டி, தோள் தட்டி, தொடைகள் தட்டி விடுக்கும் அறிக்கைகள், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு
மதிப்பளிக்கவில்லை. "நான்தாண்டா உலக மகா பயில்வான்" என்பது மாதிரி
அவர் அறைகூவல் விட்டுக் கொண்டே இருக்கக் கூடாது, அது அவசியமில்லை. எதுவானாலும் டிரம்பின் கீழ் வேலை செய்யப்
பல அதிகாரிகளுக்கு சங்கடம் ஏற்படும். சிலர் அதை ராஜினாமா மூலம்
வெளிப்படுத்தலாம். சிலர் பல்லைக் கடித்தோ, பல்லைக் காட்டியோ, சம்பளம் பெற்றுப் போகலாம். |
|
5. கேள்வி: அதிமுக-வை விட்டுத் திமுக-வில் சேர்ந்திருக்கும் ஓ.
பன்னீர்செல்வம், அண்மையில்
திருநெல்வேலியில் திமுக-வினர் முன்பு பேசியபோது விசில் சத்தம் வர, "விசில் சத்தம்
தான் நம் தேசிய கீதம்; விசில் சத்தம் கேட்டால் நம் வெற்றி உறுதி"
என்று உற்சாகமாகப் பேசியிருக்கிறாரே? பதில்: ஓ.பி.எஸ் தனது சிந்தனையில் ஒரு பாதியை
மட்டும் வெளியிட்டார். "கறுப்பு சிவப்புக் கொடிதான் நம் தேசியக் கொடி. அது
தோரணமாகத் தொங்கினால் நம் வெற்றி மேலும் உறுதி" என்றும் சொல்லி, எதையும் மறைக்காமல் அவர் முழுப் பைத்தியமாகவே பேசி
இருக்கலாம். |
|
பகுதி 68 // 18.03.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
Saying As I Feel ~ உறைத்ததும் உரைப்பதும்
Wednesday, 18 March 2026
கேள்வி-பதில் (18.03.2026)
Sunday, 15 March 2026
கேள்வி-பதில் (15.03.2026)
|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: "முதல்வர் ஸ்டாலினுக்கு 73 வயது போல்
தெரியவில்லை; 37 வயது இளைஞரைப்
போல் செயல்படுகிறார். திமுக-வும் ஸ்டாலினும் இருந்தால் மட்டுமே தமிழகத்திற்கும்
மக்களுக்கும் பாதுகாப்பு" என்று நடிகர் வடிவேலு கூறி இருக்கிறாரே? பதில்: வடிவேலு
ஒரு நகைச்சுவை நடிகர். எப்போதுமே அவர் நகைச்சுவை டாப் கிளாஸ். |
|
2. கேள்வி: கவிஞர் வைரமுத்துக்கு இலக்கியத்துக்கான ஞானபீட விருது
வழங்கப் படுவது சரியா? பதில்: இதில் இலக்கியத்துக்கான வைரமுத்துவின்
பங்களிப்பு என்பது ஒன்று. அது ஒரு புறம் இருக்கட்டும். அது வேறு. இன்னொரு புறம், எளிதில் ஒதுக்கித் தள்ள முடியாத பல
பெண்களின் பாலியல் குற்றச்சாட்டுகள் வைரமுத்து மீது இருக்கின்றன. அந்த
அடிப்படையில் மட்டும், பாரதத்தின் பழமையான உயர்ந்த இலக்கிய விருதுக்கு வைரமுத்துவின் பெயர்
பரிசீலிக்கப் பட்டிருக்கக் கூடாது - அதை வழங்குவது ஒரு தனியார் அமைப்பு
என்றாலும். இலக்கியம் வாழ்க்கையின் பல பரிமாணங்களை
வெளிப்படுத்தும். ஆனால் வாழ்க்கையின் கேவலத்தைக் கொண்டாடாது. பாலியல் குற்றம்
பெண்மையை அவமானம் செய்வது, ஆகையால் கேவலமானது. 'வைரமுத்துக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகம் இருந்தாலும் அவை
கோர்ட்டில் நிரூபிக்கப் படவில்லை; ஆகையால் அந்த விதத்தில் பாரதத்தின் உயர்ந்த
இலக்கிய விருதை அவருக்கு வழங்கத் தடையில்லை' என்று ஞானபீட அமைப்பு கருதினால் அதில்
வெகுளித்தனம் மற்றும் அசட்டுத்தனம் உண்டு; ஞானம் இல்லை, ஞானத்தின் அங்கமான விவேகம் இல்லை.
மொத்தத்தில் சரியில்லை. |
|
3. கேள்வி: "அப்போலோ ஆஸ்பத்திரியில் தலித், பழங்குடியினர், இதர
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற ஒருவரும் டாக்டராக இல்லை" என்று அந்த
மக்களுக்கு ஆதரவாக, ராகுல் காந்தி
பொது வெளியில் தனது மனக்குறையை வெளிப்படுத்தி இருக்கிறாரே? பதில்: ராகுல்
காந்தி என்ன சொல்ல வருகிறார்? 'கல்லூரிப் படிப்பிற்கு வரும் ஒருவர்
மருத்துவம் படித்து டாக்டர் ஆவதுதான் சிறப்பானது, வேறு
எதைப் படித்தாலும் வேஸ்ட்'; 'ஒருவர் டாக்டர் ஆகிவிட்டாலும், அவர் அப்போலோ ஆஸ்பத்திரியில் ஸ்டெதாஸ்கோப்
மாட்டிக்கொண்டு உலவுவது தான் கெத்தானது, பயனுள்ளது.
வேறு தனியார் ஆஸ்பத்திரியிலோ அரசாங்க ஆஸ்பத்திரியிலோ அவர் வேலை செய்வது வெட்கக்
கேடானது'; 'ஆகையால் அப்போலோ ஆஸ்பத்திரியில்
டாக்டராக வேலை பார்க்காத தலித், பழங்குடியினர்
மற்றும் ஓபிசி மக்கள், வாழ்க்கையில் தோற்றவர்கள். குறிப்பாக, அவர்கள் இந்தியாவின் பிற ஜாதியினரால் வஞ்சிக்கப்
படுகிறார்கள்';
என்கிறாரா ராகுல் காந்தி? ஒரு சாதாரண இந்தியருக்கு - அவர் என்ன ஜாதியோ எந்த மதமோ - உணவு, உடை, குடிநீர், இருப்பிடம், போக்குவரத்து
வசதிகள், வேலை வாய்ப்புகள், போதிய வருமானம் அனைத்தும் நாம் நாட்டில் கிடைத்து
விட்டதா? அதெல்லாம் அமோகமாகக் கிடைத்தது போக, டாக்டராகி அப்போலோவில் வேலை பார்க்காததுதான் அவருக்கான
பெரிய இழுக்கா இப்போது? அதனால்தான் அவர்களுக்காக ராகுல் காந்தி
மனம் கசிந்து வருத்தம் கொள்கிறாரா? ராகுல் காந்தி வெளிப்படுத்தியது அவருடைய மனக்குறை அல்ல. புத்திக் குறை
மற்றும் நேர்மைக் குறை. அதற்கு நிவர்த்தியே இல்லை. |
|
4. கேள்வி: "மகளிர் ஆதரவு இருக்கும் வரை திமுக-வை யாரும்
வெல்ல முடியாது" என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி இருக்கிறாரே? பதில்: எல்லாக் கட்சிகளும் அப்படிப் பேச
நினைக்கும். ஆனால் "ஆண்களின் ஆதரவு இருக்கும் வரை எங்கள் கட்சியை யாரும்
வெல்ல முடியாது" என்று எந்தக் கட்சியின் தலைவரும் பேச நினைப்பதில்லை. காரணம்: உரிமைத் தொகை, சலுகைகள் மற்றும் இலவசங்கள் மூலமாகப்
பெண்களைத் தான் எளிதில் ஏமாற்றி அவர்களின் வாக்குகளை ஈர்க்கலாம் என்று எல்லாக்
கட்சிகளும் நினைக்கின்றன. உண்மை நிலை வேறு. முக்கிய சிறுபான்மையின ஆண்களும் பெண்களும்
அவரவர் மதத் தலைவர்களின் சொற்களுக்கு ஏற்ப ஒரே கட்சிக்கு அல்லது ஒரே கூட்டணிக்கு
வாக்களிக்கலாம். ஆனால் ஹிந்துப் பெண்கள் - ஹிந்து ஆண்களைப் போல் அல்லாமல் - ஒரு
கட்சியிடம் ஏமாறுவது போல் போக்குக் காட்டி, தாங்கள் ஏற்கனவே தீர்மானித்து வைத்த
கட்சிக்கு வாக்களிக்கலாம். ஓட்டோ ரகசியம். மற்றபடி வருவது வரட்டுமே! |
|
5. கேள்வி: அதிமுக-வில் மூன்று முறை முதல்வராக இருந்துவிட்டு
இப்போது திமுக-வில் இணைந்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம், "நான் 18 வயதிலேயே
திமுக-வில் இணைந்தவன் தற்போது மீண்டும் தாய்க் கழகத்தில் இணைந்துள்ளேன்"
என்று விளக்கம் தந்துள்ளாரே? பதில்: தாய்க் கிழவி மற்றும் தாய்க் கழகம் -
இரண்டும் சிறந்த நடிப்புக்காகத் தற்போது கவனம் பெறும் வேடங்கள். |
|
பகுதி 67 // 15.03.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
கேள்வி-பதில் (13.03.2026)
|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: திமுக-வின்
உதயநிதி ஸ்டாலின், பாஜக-வின்
அண்ணாமலை - இருவரையும் சுருக்கமாக ஒப்பிடவும். பதில்: பெற்ற
பாசத்தால் மு.க. ஸ்டாலினும், சுய
லாபத்திற்காகத் திமுக-வின் மற்ற தலைவர்களும், உதயநிதியைத்
தாங்குகிறார்கள். மக்கள் மனதை விட, கட்சிக்குள்
உதயநிதிக்கு அதிக முக்கியத்துவம். தங்களின் வாழ்க்கை நலனுக்காக, தமிழக
நன்மைக்காக, எண்ணற்ற பொதுமக்கள் அண்ணாமலையை
நம்புகிறார்கள். கட்சியின் மாநில அமைப்பை விட, மக்கள்
மத்தியில் அவருக்கு அதிக முக்கியத்துவம். |
|
2. கேள்வி: தமிழக சட்டசபைத் தேர்தலுக்காக, அதிமுக
கூட்டணியில் தவெக சேராது என்ற தற்போதைய நிலையில், "தவெக 234 தொகுதிகளிலும்
போட்டியிட்டு வெற்றி பெறும். யாரோ ஒருவரை முதல்வராக்க நாங்கள் இளிச்சவாயர்களா?" என்று தவெக
தலைவர் செங்கோட்டையன் கூறி இருக்கிறாரே? பதில்: தனித்துப் போட்டியிடுவதால் தவெக-வுக்கு
மெஜாரிட்டி கிடைக்குமோ இல்லையோ, 'அதிமுக-வின் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கத் தேர்தலில் போட்டியிட்டு
உழைப்பதற்கு நாங்கள் இளிச்சவாயர்கள் அல்ல' என்று விஜய் கட்சி நினைப்பது சிறிதளவு சரி.
எடப்பாடி பழனிசாமியும் இப்படி நினைக்கலாம்: 'ஏற்கனவே முதல்வராக இருந்து, இரட்டை சிலை சின்னத்தைக் கொண்ட அதிமுக-வின்
பொதுச் செயலர் பதவியை அடைந்திருக்கும் நான், நேற்று அரசியலுக்கு வந்த விஜய்யை
முதல்வராக்க இளிச்சவாயன் அல்ல'. எல்லாக் கட்சிகளுக்கும் இனிய
இளிச்சவாயர்களாக இருப்பது, பொதுமக்கள். அது புரிந்து அந்தப் பாதுகாப்பில், "நான் இளிச்சவாயன் அல்ல" என்ற தன்மானச்
சிலிர்ப்பு கொண்டவர்கள் அரசியல் தலைவர்கள். |
|
3. கேள்வி: திமுக கூட்டணியில் மதிமுக-வுக்கு நான்கு தொகுதிகள்
ஒதுக்கப் பட்டாலும், அவற்றில் மதிமுக
ஒரு தொகுதியில் மட்டும் தனிச் சின்னத்தில் போட்டியிடும், மீதி மூன்று தொகுதிகளில்
திமுக-வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்று ஒப்பந்தம் ஆகியிருக்கிறதே? பதில்: வெளியில்
டீ குடிப்பதற்கு, தெருவோர டீக்கடைக்குப் போகும்
அளவுக்குத்தான் உங்களுக்குப் பொருளாதார சக்தி இருக்கிறது என்றால் நீங்கள் அங்கு
போய் கிளாசில் டீ வாங்கிக் குடிக்கவேண்டும். குடிப்பதற்குத் தனியாகத் தண்ணீரும்
கிடைக்காது. ஒரு ஹோட்டலுக்குப் போகும் பொருளாதார சக்தி உங்களுக்கு இருக்குமானால்
நீங்கள் உட்கார சேர், குடிநீர், பளபளவென்ற கோப்பையில் டீ, எல்லாம் அங்கு வழங்குவார்கள். திமுக பெரிய ஹோட்டல் மாதிரித் தான். ஆனால் தேறாத சில கஸ்டமர்களைத் திமுக
தனது பில்டிங் வாசலில் அமைத்திருக்கும் சின்ன டீக்கடையில் மட்டும் அனுமதித்து, அவர்களுக்கு உண்டான சேவையை அளித்து அனுப்பிவிடும். |
|
4. கேள்வி: வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக-வை
எதிர்க்கும் எல்லாக் கட்சிகளும் திமுக தலைமையிலான ஒரே கூட்டணியில் இணைந்து
விட்டன. ஆனால் திமுக-வைக் கடுமையாக எதிர்க்கும் தவெக மற்றும் நாம் தமிழர் கட்சி, அதிமுக
தலைமையிலான கூட்டணியில் சேராமல் தனியாகப் போட்டியிட எண்ணுகின்றன. அதனால்
திமுக-வுக்கு எதிரான வாக்குகள் பிளவுபட்டுத் தேர்தலில் திமுக-வுக்கு வலிமை
தரும். இது புரியாதவர்களா விஜய்யும் சீமானும்? பதில்: இது புரியாத மண்டூகம் அல்ல இருவரும். 'நான் முதல்வன்' என்ற கனவில் இருக்கும் விஜய், தேர்தல் முடிவால் தனது கனவுலகம் சிதைந்தால்
இன்னும் சில ஆண்டுகள் கழித்தும் அவரை வரவேற்கத் திரையுலகம் காத்திருக்கும் என்று
அறிந்தவர். "என் கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் பெரிய வெற்றி பெறாது. இருந்தாலும் நான்
அரசியல் செய்வதின் ரகசியம் எனக்கு மட்டும் தெரியும்" என்று சொல்வதுபோல்
தெரிகிறவர் சீமான். என்ன ஆனாலும் அந்த இருவருக்கும் தனிப்பட்ட
முறையில் நஷ்டம் இல்லை. ஆகையால் அதிமுக கூட்டணியில் தங்கள் கட்சியை அவர்கள்
சேர்க்காமலே இருக்கலாம், கடைசி நிமிடத்தில் சேர்க்கவும் செய்யலாம். மற்ற பல கட்சிகளின்
தலைவர்களைப் போல், தங்கள் சுய தேவை மற்றும் ஆதாயம் எந்தப் பக்கம் அதிகம் கைகூடும் என்று
அந்த இருவரும் கணிப்பதைப் பொறுத்து அவர்களின் கூட்டணி முடிவு இருக்கும். வேறு
கொள்கை கொத்தவரங்காய் இதில் ஏதுமில்லை. |
|
5. கேள்வி: பிப். 24-ம் தேதி, சசிகலா தனது புதிய கட்சியின் கொடியை அறிமுகம்
செய்தார். 17 நாட்கள்
கழித்து, கட்சியின் பெயர்
"அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்" என்று
செய்தியாளர்கள் முன்பாக அறிவித்திருக்கிறார். கட்சியின் பெயரை அறிவிக்க ஏன்
இத்தனை நாட்கள்? பதில்: கட்சியின்
பெயரை சசிகலா சில நாட்கள் மனனம் செய்ய முயன்றதில் தாமதம் ஏற்பட்டிருக்கும்.
இறுதியாக அவர் கட்சியின் பெயரைக் கேமரா முன் நின்று அறிவிக்கையில், "அனைத்திந்திய" என்று சொல்லி நிறுத்தி, மேஜை மீதிருந்த உதவும் காகிதத்தை ஒருமுறை
பார்த்துவிட்டு மீதிப் பெயரை அறிவித்தார். கட்சிப் பெயரை சுருக்கிச் சொல்வதற்கு
(அஇபுமமுக?) இன்னும் அதிக ஞாபக சக்தி, தெளிவான தமிழ் உச்சரிப்பு, தேவை. சசிகலா, பெயரளவுக்கும்
யோசிக்கவில்லை. |
|
பகுதி 66 // 13.03.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |