Thursday, 16 July 2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி. தமிழகத்தில் இவை எப்படி?

ஆர். வி. ஆர்

 

மோடி கட்சி எனப் புரிந்துகொள்ளப் படுவது, பாஜக; அண்ணாமலை கட்சி, தற்காலிகமாக 'வீ த லீடர்ஸ்' வேடத்தில் உள்ளது; விஜய் கட்சி, தவெக.

 

2026 தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக, மாநில மக்களின் நிலை இது: மக்களுக்கு முதலில் ஒரு மோசமான ஆட்சியிலிருந்து விடுதலைஅடுத்ததாக நிர்வாகத்தில் லஞ்ச ஊழலை ஊக்கப்படுத்தாத ஒரு புதிய அரசு, பிறகு மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை, வேலை வாய்ப்பை, மக்கள்நலப் பணிகளை முன்னெடுக்கும் ஒரு முதலமைச்சர் ஆகியவை ஒன்றன்பின் ஒன்றாக வேண்டி இருந்தன. இதைக் கருத்தில் கொண்டு சில விஷயங்களை நாம் பார்க்க வேண்டும்.

 

பாஜக-விலிருந்து வெளியேறிய அண்ணாமலை தொடங்கவிருக்கும் கட்சி, தமிழகத்தில் நடக்கப் போகும் தேர்தல்களில் போட்டியிடும்போது பாஜக-வையும் எதிர்த்துப் பிரசாரம் செய்யும். அந்த நேரத்தில், "எங்கள் கட்சி தமிழக பாஜக-வை மட்டும் எதிர்க்கிறது, மத்திய பாஜக-வை அல்ல" என்று அண்ணாமலை கட்சி பேச முடியாது. அதாவது, நரேந்திர மோடி நடுநாயகமாக இருக்கும் பாஜக-வை, அண்ணாமலை கட்சி எதிர்க்கப் போகிறது. "நான் தேசியவாதி, தமிழகத்தில் நல்லாட்சி தர விரும்புகிறேன். இருந்தாலும் மிகச் சிறந்த தேசியவாதியாக இருந்து மத்தியில் 2014-லிருந்து நல்லாட்சி வழங்கி வரும் மோடி, அல்லது அவர் அனுப்பிவைக்கும் வேறு மத்திய பாஜக தலைவர்கள், தமிழக பாஜக வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினாலும், நான் அந்த வேட்பாளர்களை எதிர்த்துக் களமிறங்குவேன் - அப்போது நான் மோடியையும் குறைசொல்லிப் பிரசாரம் செய்வேன்" என்று அண்ணாமலை இப்போதே மறைமுகமாகத் தெரிவிக்கிறார்.

 

தேசநலன் காரணமாக மோடியைத் தீவிரமாக ஆதரிக்கும் பலர், அண்ணாமலைக்காகத் தாங்கள் பாஜக-வை விட்டு விலகிப் போவதை நினைக்க முடியாது. அதே சமயம், அண்ணாமலையின் பேச்சைக் கேட்டு, அவர்மீது நம்பிக்கை வைத்து, மோடி கட்சியான பாஜக-வை எதிர்த்து அண்ணாமலை கட்சிக்காக வேலை செய்யவும் வாக்களிக்கவும் அதிகமானவர்கள், கணிசமானவர்கள், இருப்பார்கள்.

 

அண்ணாமலைக்காக அவர் கட்சிக்கு வாக்களிக்க இருப்பவர்கள் திமுக மற்றும் அதிமுக வேண்டாம் என்று நினைப்பார்கள். அவர்களில் பலர் முன்பு பாஜக-வுக்கு வாக்களித்திருப்பார்கள். மொத்தத்தில், அண்ணாமலை அபிமானிகள் அநேகமாகப் படித்தவர்களாக, விவரம் தெரிந்தவர்களாக இருப்பார்கள்.

 

2026 சட்டசபைத் தேர்தலில் விஜய்யின் தவெக தனித்து நின்று போட்டியிட்டது. இருந்தாலும் அவர் திமுக மற்றும் அதிமுக தலைமையிலான இரு பெரும் கூட்டணிகளை ஒருசேரத் தோற்கடித்து, 234 தொகுதிகளில் 108-ஐ வென்று, சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்கிறார். விஜய் கட்சிக்கு வாக்களித்தவர்களில் பெரும்பாலோர் படித்தவர்கள், பொது அறிவு மிக்கவர்கள், மிக விவரமானவர்கள் என்று இல்லை.  அவர்கள் பெரும்பாலும் சாதாரணமானவர்கள். அவர்களின் நிலை வேறு, அண்ணாமலை அபிமானிகளின் நிலை வேறு. ஆனால் விஜய் வாக்காளர்கள் அண்ணாமலை அபிமானிகளை விட எண்ணிக்கையில் மிக அதிகமாக இருப்பார்கள். அண்ணாமலை அபிமானிகளை, விஜய் ஈர்ப்பது கடினம். விஜய் வாக்காளர்களை, அண்ணாமலை ஈர்ப்பதும் கடினம். இரு தரப்பிலும்  ‘ஜென் சீ’ நபர்கள் நிறைய உண்டு.

 

2026 தமிழக சட்டசபைத் தேர்தலின் போது, முதல் வேலையாக அப்போதிருந்த மோசமான திமுக ஆட்சியை வீழ்த்தினால்தான், அடுத்ததாக நேரான ஆட்சி, மக்களுக்கு வளம் சேர்க்கும் ஆட்சி போன்றவை மாநிலத்தில் சாத்தியமாகும் என்றிருந்தது. அந்தத் தேர்தலில் அந்த முதல் வேலையைச் செய்து காண்பித்தவர், கூட்டணி ஏதுமில்லாமல் திமுக-வைக் குறிவைத்து எதிர்த்த விஜய்.

 

தேர்தல் நேரத்தில் விஜய் மேடையில் சினிமாத்தனமாகப் பேசி இருக்கலாம். அந்த வழிதான் அவருக்குத் தெரிந்தது என்றிருக்கலாம். ஆனாலும் அவர் அநாகரிகமாக, ஆபாசமாகப் பேசவில்லை. அவர் கட்சியைச் சார்ந்தவர்கள் பல தொகுதிகளில் பணவிநியோகம் செய்து வாக்குகளை வாங்கினார்கள் என்ற சீரியஸான குற்றச்சாட்டும் அந்தக் கட்சி மீது கிடையாது. அண்ணாமலையின் சிறந்த கல்வியறிவு, பொது விஷயங்கள் பற்றிய ஆழ்ந்த ஞானம்நுணுக்கமான சிந்தனை ஆகியவை விஜய்யிடம் இல்லை. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக, விஜய் ஒற்றை மனிதராகத் திமுக-வை அந்தத் தேர்தலில் வீழ்த்தினார், அதிமுக-வை ஓரத்தில் கடாசினார். இந்த அரிய சாதனையை விஜய் செய்ததற்குக் காரணம், அவர் சாதாரண மக்கள் பலரையும் தன் பக்கம் ஈர்த்து வைத்திருந்தார் என்பதுதான்.

 

விஜய்க்காக அவர் கட்சிக்கு வாக்களித்த சாதாரண மக்கள் அனைவரின் வாக்குகளும் நமது ஜனநாயகத்தின் முக்கிய அங்கம். அந்த வாக்குகள் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளுக்குச் செல்லாமல் தடுத்து, அவற்றைத் தன் பக்கம் வரவழைத்து, திமுக-வை ஆட்சியிலிருந்து அகற்றிய பெருமை விஜய்க்கு உண்டு, அவருக்கு மட்டும்தான் உண்டு. அதற்கான மகுடத்தை விஜய்க்குத்தான் அணிவிக்க வேண்டும். 

 

2026 தேர்தலின் போதே அண்ணாமலை பாஜக-விலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கி அந்தத் தேர்தலில் அவர் கட்சி போட்டியிட்டிருந்தாலும் (அதுவும் திமுக, அதிமுக-வையும் எதிர்த்துப் போட்டியிட்டிருந்தால்) விஜய்யின் வாக்காளர்களை அண்ணாமலை ஈர்த்திருக்க மாட்டார். அப்போதும் விஜய் கட்சிதான் மிக அதிகத் தொகுதிகளை வென்றிருக்கும். இதையெல்லாம் குறிப்பிடுவதன் நோக்கம், அண்ணாமலையை விட விஜய் சிறந்த அரசியல் தலைவர் என்று சொல்ல வருவதல்ல. படித்தவர்களை விட, விவரமானவர்களை விட, சாதாரண மக்கள் அதிகமுள்ள நம் மாநிலத்தில் திமுக-வை ஆட்சியிலிருந்து வீழ்த்த விஜய்யால் மட்டும் முடிந்தது; அதற்கான பெருமை அவருக்கே உரித்தானது என்பதை நாம் ஒதுக்க முடியாது, கூடாது.

 

மக்கள் நலனில் திமுக-வை ஆட்சியிலிருந்து அகற்றிய முதற்கட்டம் முடிந்தது. அடுத்ததாக, விஜய் லஞ்ச ஊழலை ஊக்கப் படுத்தாத அரசு நிர்வாகத்தை வழங்குவாரா என்பதைப் பார்க்க வேண்டும். அதற்கு முன்பாக நாம் ஒரு விஷயத்தை மறக்கக் கூடாது. அண்ணாமலை படித்தவர்களை, விவரம் தெரிந்தவர்களை, அதிக நேர்மையாளர்களை, தனது புதிய அமைப்பிற்கு, இனி அவர் தொடங்கப் போகும் அரசியல் கட்சிக்கு, இயல்பாக ஈர்ப்பார். ஆனால் அதைப் போன்ற மனிதர்களை சினிமாப் புகழ் விஜய் தன்னுடைய கட்சிக்கு ஈர்த்திருக்க முடியாது. விஜய் கட்சியின் சில தலைவர்கள், சில நிர்வாகிகள், விஜய்யின் பிரபல்யத்தை வைத்துத் தங்களை வளப்படுத்திக் கொள்ள முனைவார்கள். அதை விஜய்யும் அறிந்திருப்பார் – மனிதர்களைப் புரிந்துகொள்வதில் விஜய் கெட்டிக்காரர். அனைத்தையும் உணர்ந்து, ஒரு முதலமைச்சராக லஞ்ச ஊழலுக்கு எதிராக விஜய் இதுவரை பொதுவெளியில் உரத்துக் குரல் கொடுத்தது பெரிய விஷயம். விஜய் இதில் முனைப்பாகச் செயல்படுவார் என்று தோன்றுகிறது. அதைக் கவனித்து அவரைச் சுற்றி உள்ளவர்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்திருக்க வேண்டும் – அதில் அவர்கள் தவறினால், அதற்கான நிரூபணம் வெளிப்பட்டால், விஜய் அதை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை நாம் பார்ப்போம், அதற்கேற்ற விமர்சனத்தை விஜய் அப்போது சந்திக்க வேண்டும். இன்றைய தேதியில், மக்கள் நலன் சார்ந்த இந்த இரண்டாவது விஷயத்தில் விஜய்யின் தொடக்கம் குறை சொல்லும்படியாக இல்லை. பொதுவாகப் பாராட்டும்படி இருக்கிறது.

 

மக்கள் நலனில் மூன்றாவது கட்டமான தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு, மக்கள் நலப் பணிகள் ஆகியவற்றில் விஜய் எப்படிச் செயல்படுகிறார் என்று போகப் போகத் தான் நாம் பார்க்க முடியும். பார்க்கலாம்.

 

இதுதான் 2026 தேர்தலுக்குப் பின் தமிழகத்தில் அரசு நிர்வாகம் பற்றிய நிலை. இதைத் தொடர்ந்து, அண்ணாமலை கட்சியை, மோடி கட்சியை, நாம் இவ்விதம் பார்க்கலாம்.

 

கல்வியில் சிறந்து, பேச்சாற்றல் மிகுந்து, மதிநுட்பம் கொண்டு, பண்பான அரசியலை முன்னெடுத்து, மக்கள் நலனை மனதில் வைத்து அர்ப்பணிப்புடன் செயல்படும் ஒரு தலைவர் அண்ணாமலை. சாதாரண மக்கள் நிறைந்த தமிழகத்தில், அவர்கள் மத்தியில் விஜய் ஒரு முக்கியத் தலைவராக உருவெடுத்துவிட்ட இந்த நேரத்தில், அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கி அதைத் தொடர்ந்து நடத்தி வந்தால் அது மிக அரிதான செயல், வரவேற்கத் தக்க முனைப்பு. தனது பேச்சில் உள்ள ஒருசில முரண்பாடுகளை அண்ணாமலை உணர்ந்து காலப் போக்கில் தன்னைச் சரிசெய்து கொள்கிற வயதும் பக்குவமும் அவரிடம் இருக்கும் என்று நாம் தாராளமாக எதிர்பார்க்கலாம்.

 

அண்ணாமலை போன்ற ஒரு அரிய தலைவரும் தமிழகத்துக்கு அவசியம். ஒரே வீச்சில் திமுக-வை ஆட்சியிலிருந்து அப்புறப் படுத்தி, அதிமுக-வையும் ஓரம் கட்டிய விஜய்யும் பாராட்டுக்கு உரியவர். மத்திய அரசு நிர்வாகத்தில் இமாலயப் புரட்சி செய்த மோடியை முக்கியத் தலைவராகக் கொண்ட பாஜக-வும் தமிழகத்தில் வளர்ந்து மத்தியில் செய்ததற்கு இணையான சாதனைகளை இந்த மாநிலத்திலும் நிகழ்த்த முயற்சிக்க வேண்டும். நடக்கும் நல்லதை வரவேற்று, நடக்கத் தக்க நல்லதையும் நினைத்துப் பார்ப்பதில் தவறில்லை.  

 

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

 

* * * * *
Author: R. Veera Raghavan, Advocate, Chennai

Tuesday, 14 July 2026

கேள்வி-பதில் (14.07.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "நான் ஒரு ஹிந்து. என்னுடைய மதத்தையும் ஜாதியையும் வீட்டில் வைத்துப் பூட்டிவிட்டு, சாமானிய மனிதனாக, அனைவருக்கும் பொதுவானவனாக, உங்கள் முன்னே நிற்கிறேன். ஜாதி, மதத்தின் பெயரால் அரசியல் செய்வது என் நோக்கமல்ல" என்று 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை பொள்ளாச்சி மாநாட்டில் பேசியிருக்கிறாரே?

 

பதில்: இந்தியாவை ஒற்றை தேசமாகப் பெருவாரியான மக்கள் கருதுவதின் அடிப்படைக் காரணம், இந்தியா ஒரு ஹிந்து தேசம் என்று அவர்கள் நினைப்பதால் - நம் அரசியல் சட்டம் சொல்வதால் அல்ல. அந்தச் சிந்தனையை, ஹிந்துவாக இருக்கும் முக்கிய அரசியல் தலைவர்கள் ஏதோ ஒரு வகையில் எதிரொலிக்காவிட்டால், இந்தியா ஒரு ஹிந்து தேசமாக நீடிக்கும் வாய்ப்பு மேலும் மேலும் குறையும், அதன் தொடர்ச்சியாக இந்திய ஒருமைப்பாடும் தேயும். இன்னொன்று: ஹிந்துவாக இருக்கும் ஒரு தலைவர் - குறிப்பாக, ஒரு பிரதமரோ அல்லது முதலமைச்சரோ - தான் ஹிந்து என்பதை மக்களுக்குத் தெளிவாக உணர்த்தி, ஆனாலும் "ஜாதி, மதத்தால் அரசியல் செய்யாமல்" அனைத்து மக்களுக்கும் நல்ல நிர்வாகத்தை அளிக்க முடியும். ஒரு பிரதமராக மோடி அதைச் செய்துவருகிறார்.

 

 

2. கேள்வி: அமெரிக்காவில் நடைபெற்ற 'வீ த லீடர்ஸ்'அமைப்பின் நிகழ்ச்சியில் ஜூலை 6-ம் தேதி பேசிய அண்ணாமலை, "தவெக அரசு தமிழகத்தில் புதிய அரசு. ஒரு பொலிடிகல் டிசிப்ளின் என்பதாக நாம் அதற்கு ஒரு வருட காலம் சப்போர்ட் கொடுப்போம். எக்கிப் பண்ணுவோம். பெட்டர்-ஆ பெர்பார்ம் பண்ணட்டும். தவெக அரசு தமிழ்நாட்டுக்கு நல்லது பண்ணினா அதை முதல் ஆளாக நின்று வரவேற்கப் போறோம்" என்று பேசி இருக்கிறார். இது அவருடைய விசாலமான பார்வை தானே?

 

பதில்: ஆறு நாட்கள் கழித்துப் பொள்ளாச்சியில் ஜூலை 12-ம் தேதி நடைபெற்ற அந்த அமைப்பின் மாநாட்டில் அண்ணாமலை பேசினார். அப்போது, "தமிழகத்தில் 2031-ல் மிகப் பெரிய ஆட்சி மாற்றம் ஏற்படும். 2026-ல் நடந்த மாதிரி, 2031-லும் 39 வயதுக்குக் கீழே உள்ள இளைஞர்கள் ஆட்சி மாற்றத்தைச் செய்து காட்டுவார்கள்" என்று அண்ணாமலை பேசியதைக் கேட்டபோது இரு கைகளால் பிடித்து, என் சுற்றிய தலையை நிறுத்தினேன்.

 

 

3. கேள்வி: மோடி, அமித் ஷாவைத் தலைவர்களாகக் கொண்ட பாஜக-விலிருந்து விலகி - அதிலும் அவர்கள் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சராக இந்தியாவைத் திறம்பட நிர்வகிக்கையில் பாஜக-வை விட்டுவிட்டு - அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கப் போவதன் உண்மையான காரணம் என்ன?

 

பதில்: அது அண்ணாமலைக்கு மட்டும் தெரியும். வெளியில் அவர் தெரிவித்த காரணங்கள் எடுபடவில்லை.

 

ஒரு ஊகம் இது. மோடி முதலமைச்சராக இருந்து குஜராத்தை மேம்படுத்திய மாதிரி, அண்ணாமலை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்து, லஞ்ச ஊழலற்ற திறமையான ஆட்சியைக் கொடுத்து, இந்த மாநிலத்தை முன்னேற்ற விரும்பி இருக்கலாம். அதற்கான நெஞ்சுரமும் திறமையும் அர்ப்பணிப்பும் அவரிடம் உண்டு. ஆனால் தமிழகத்தில் பாஜக தனியாகவோ, அக்கட்சி தலைமை தாங்கும் கூட்டணியாகவோ, தேர்தலில் மெஜாரிட்டி எம்.எல்.ஏ தொகுதிகளை வென்றாலும் அப்போதைய மத்திய பாஜக - அது எந்த வருடம், அந்த நேரத்தில் அங்கே யார் முக்கியத் தலைவர்களாக இருப்பார்கள் என்பதும் இப்போது தெரியாது - அண்ணாமலையை முதலமைச்சர் ஆக்கும் என்ற நிச்சய உணர்வு அவருக்கு இல்லாமல் போகலாம். ஆகையால் அவர் தனிக்கட்சி ஆரம்பிக்க நினைத்திருக்கலாம்.

 

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

 

இன்னொரு புறத்தில், திமுக மற்றும் அதிமுக-வை எதிர்த்து, பாஜக-வையும் எதிர்த்து, 2026 தேர்தலில் தனியாகப் போட்டியிட்டு ஜெயித்து முதல்வரான விஜய் அவரது சினிமா வழி ஈர்ப்பால் சாதாரண மக்கள் பலரையும் தனது தவெக-வின் வாக்காளர்களாக மாற்றி இருக்கிறார். திமுக, அதிமுக (அல்லது அந்த இரு கட்சிகளின் கூட்டணி), பாஜக, அண்ணாமலை கட்சி, தவெக + காங்கிரஸ் ஆகியவை தேர்தலில் பிரிந்து போட்டியிட்டால் 2031-ல் அண்ணாமலை ஆட்சிக்கு வருவது மிகக் கடினம்.

 

 

4. கேள்வி: அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா? சுருக்கமாகப் பதில் சொல்லவும்.

 

பதில்: வேண்டும். அந்தப் பதவிக்கு அவர் மிகப் பொருத்தமானவர். ஆனால் அதன்பொருட்டு அவர் போகும் வழி, தேர்தலில் அவர் கட்சியோ அதன் கூட்டணியோ அவர் முதலமைச்சர் ஆகும் அளவுக்கு வெல்ல உதவுமா என்பது யாருக்கும் தெரியாது. இந்த நிச்சயமின்மைக்கு ஒரு முக்கிய காரணம், சென்ற தேர்தலில் விஜய் கட்சி தனித்து நின்று பெற்ற மகத்தான வெற்றி.

 


5. கேள்வி: 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் பொள்ளாச்சி மாநாட்டு மேடைக்கு வந்த அண்ணாமலை, அந்த மேடையிலேயே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து பார்வையாளர்களை வணங்கினாரே?

 

பதில்: தமிழக மக்கள் புரிந்துகொள்ளும் ஒரு மொழியை அவர் மோடியிடம் கற்றிருக்கலாம்!


பகுதி 113 // 14.07.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

கேள்வி-பதில் (11.07.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "உங்ககிட்ட யாராவது லஞ்சம் கேட்டா, குடுக்க முடியாதுன்னு சொல்லிடுங்க. நான் இருக்கேன் உங்களோட" என்று அண்மையில் முதலமைச்சர் விஜய் கரூர் கூட்டத்தில் பேசி இருக்கிறாரே?

 

பதில்: விஜய் என்ன பேசினாலும், அரசு வேலைகளுக்காக லஞ்சம் கேட்கிறவர்களின் முகத்துக்கு நேராகச் சாதாரண மக்கள் அனைவரும் "தரமுடியாது" என்று சொல்வது எளிதல்ல. இருந்தாலும் விஜய்யின் பேச்சால், அவர் முதலமைச்சராக இருக்கும் காலத்தில் லஞ்சம் கேட்கிறவர்களின் எண்ணிக்கை குறையும், விடாப்பிடியாகக் கேட்கிறவர்கள் எதிர்பார்க்கும் தொகை குறையும். லஞ்சத்தைக் கட்டுப்படுத்த விஜய்யின் பேச்சு ஒரு நல்ல முனைப்பு.

 

முந்தைய முதலமைச்சர்களில் குறிப்பாக சிலர் லஞ்சத்தைத் தீர்க்கமாக எதிர்த்ததில்லை, கண்டித்துப் பேசியதில்லை. காரணம் அவர்களுக்கே தெரியும். நமக்கும் தெரியும்.

 

 

2. கேள்வி: "விஜய் அரசியலிலும் ஆட்சியிலும் புதியவர். எனவே, அவருக்குக் குறைந்தது ஓராண்டு காலம் ஆட்சி நடத்துவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும். அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பது அவசியம் என்றாலும், அது ஆக்கபூர்வமான விமர்சனமாக இருக்க வேண்டும். புதிய அரசு செயல்படத் தேவையான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்" என்று அண்ணாமலை கூறி இருக்கிறார். இது சரியா?

 

பதில்: ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்தில், ஆளும் கட்சியின் மீது எதிர்க்கட்சிகளோ அரசியல் விமர்சகர்களோ வைக்கும் விமர்சனம் எப்போதும் ஆக்கபூர்வமாக இருக்கவேண்டும். அநாகரிகமாக, அல்லது வெறும் காழ்ப்பில், யாரும் ஒரு அரசை விமர்சனம் செய்வது சரியல்ல -  ஆட்சி செய்பவர் அண்மையில் அரசியலுக்கு வந்தவரோ அல்லது அவர் பல வருடங்கள் அரசியலில் குப்பை கொட்டியவரோ.

 

அரசியலுக்கு விஜய் புதியவர், அவர் ஒரு புதிய அரசின் முதலமைச்சர், என்றாலும் அவர் அரசு எடுத்திருக்கும் சில நல்ல முடிவுகளைப் பலரும் பாராட்டுகின்றனர். பொருத்தமான இந்தப் பாராட்டை, யாரும் ஒரு வருடம் தள்ளிப் போடக் கூடாது. அதைப் போல, பொதுநலனைப் பாதிக்கும் ஒரு தவறான செய்கையை அவர் அரசு செய்தால், அதற்கான விமர்சனமும் அவரை நோக்கி உடனே வரவேண்டும்.

 

இதுபோக, விஜய் அரசியலுக்குப் புதியவரானாலும் ஆள் கெட்டியாகத் தெரிகிறார். எந்த மோசமான அல்லது காட்டமான விமர்சனத்தாலும் அவர் துவண்டுவிடுவார் என்று தோன்றவில்லை. மற்றபடி விஜய் அரசு தொடர்ந்து மதிப்பிடப் படும்.

 

 

3. கேள்வி: 2026 தேர்தலுக்கு முன் விஜய் கலந்துகொண்ட கரூர் கூட்ட நெரிசலில் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினர் 31 பேருக்கு, அரசுப் பணி வழங்கி இருக்கிறார் முதல்வர் விஜய். இதில் தவறு இருக்கிறதா?

 

பதில்: கரூர் சம்பவத்தில் இறந்தவர்களுக்கு அது ஒரு விபத்து.  அது தவிர்க்கப் பட்டிருக்கலாமா என்ற கேள்வி வேறு விஷயம்.

 

கரூர் சோகம் தொடர்பான குடும்பத்தினருக்கு நல்ல இழப்புத் தொகையை விஜய்யே தனிப்பட்ட முறையில், அல்லது அவர் கட்சி வழியாக, அளித்திருக்கிறார் - அதை நாம் குறை சொல்லமுடியாது. ஆனால் விஜய் அந்தக் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதன் மூலம், அரசு செலவில் தன் அரசியல் நலனைப் பூர்த்தி செய்திருக்கிறார் என்று அர்த்தம். சட்டம் என்ன சொன்னாலும் அவர் செய்திருப்பது அதிகார துஷ்பிரயோகம்.

 

அன்று விஜய் வந்து சேர்வதற்கு முன்பே கரூர் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்த நிலையை அறிந்த போலீஸ், "கடைசி நேரத்தில் என்னைக் கூட்டத்திற்கு வரவேண்டாம் என்று எச்சரித்திருக்கலாம், அல்லது அவர்களாகவே அந்தக் கூட்டத்தை ரத்து செய்திருக்கலாம்" என்றும் விஜய் இப்போது பேசி இருக்கிறார். அதாவது, அரசு ஊழியர்களான போலீஸ் அதிகாரிகள் அன்று விழிப்புடன் செயல்படாததால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இன்று அரசு வேலை தருகிறோம் என்று அவர் உணர்த்துகிறார். இந்த நியாயம் எடுபடாது.

 

போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள், மின்வாரிய ஊழியர்கள் ஆகியோரின் அஜாக்கிரதையால் மரணிக்கும் குடும்பத்தினருக்கு அரசு வேலை கிடைக்கிறதா? டாஸ்மாக்கில் மது விற்பனை செய்து பல சாதாரணக் குடும்பங்களின் வாழ்வைச் சீரழிக்கும் அரசு, அந்தக் குடும்பத்தினருக்கு ஏதாவது செய்கிறதா?  சாலையைச் சரியாகப் போடாமல், அல்லது பராமரிக்காமல், இருக்கும் உள்ளாட்சிகளின் அலட்சியத்தால் விபத்துகள் நேர்ந்து உயிர்ப்பலி தரும் குடும்பத்தினருக்கு அரசு வேலைகள் கிடைப்பதில்லை.  விஜய் இப்போது செய்தது தவறு.

 

 

4. கேள்வி: "அதிமுக-விலேயே இருக்கவேண்டும் என நினைக்கும் தொண்டர்களைத் தவெக-வினர் மனமாற்றம் செய்யவேண்டாம்" என்று புதுச்சேரி அதிமுக நிர்வாகி அன்பழகன் பொதுமேடையிலிருந்து வேண்டுகோள் விடுத்திருக்கிறாரே?

 

பதில்: இந்த பயந்தாங்கொள்ளிப் பேச்சைக் கேட்ட பிறகும், அதிமுக-வில் தாமாக நீடிக்க விரும்பும் தொண்டர்களைத் தவெக-வினர் மனமாற்றம் செய்ய முடியாது. அந்த அதிமுக நிர்வாகி நிம்மதி கொள்ளலாம்.

 


5. கேள்வி: "திமுக தோற்றுவிட்டதே என்பது ஒரு கவலை. அதைவிட, கண்முன்னே அதிமுக சிதைவது ஒரு கவலை" என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறி இருக்கிறாரே?

 

பதில்: திமுக, அதிமுக, இரு கட்சிகளையும் 2026 சட்டசபைத் தேர்தலில் வீழ்த்திய தவெக, விஜய் தலைமையில் ஆட்சி அமைத்திருக்கிறது; அந்த விஜய்யின் அமைச்சரவையில் ஒரு விசிக பிரதிநிதி அமைச்சராகி இருக்கிறார்; அந்த விசிக-வின் தலைவர் திருமாவளவன், தவெக-வின் வெற்றியை மனமுவந்து போற்றவில்லை; திமுக தோல்வியடைந்தது, அதிமுக கரைந்து வருவது, பற்றி அவர் மனமுடைந்து கவலை தெரிவிக்கிறார். எல்லாவற்றையும் விட நமக்குக் கவலை தருவது, திருமாவளவனிடம் அதிகரிக்கும் மனக் குழப்பம்.


பகுதி 112 // 11.07.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com