Tuesday, 3 March 2026

கேள்வி-பதில் (28.02.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: மூன்று முறை அதிமுக முதல்வராகப் பதவி வகித்த ஓ. பன்னீர்செல்வம், கடைசியில் அதிர்ச்சிகரமாகத் திமுக-வில் சேர்ந்துவிட்டாரே?

 

பதில்: திமுக-வில் கருணாநிதி, எம்.ஜி.ஆர் இடையேயான தனிப்பட்ட விரோதத்தின் பிரதான காரணமாக எம்.ஜி.ஆர் துவக்கிய கட்சி, அண்ணா திமுக. மற்றபடி இந்த இரண்டு கட்சிகளுக்கும் நாளடைவில் - குறிப்பாக அவர்கள் ஆட்சியில் வெளிப்படைத் தன்மை மற்றும் நீதி நேர்மையைக் கடுகளவு மட்டும் வைத்திருப்பதில் - வித்தியாசம் இல்லை என்றானது.

 

இரண்டு கட்சிகளிலும் உள்ள முன்னணி இரண்டாம் கட்டத் தலைவர்கள் அரசியலுக்கு வந்த நோக்கம் ஒன்றுதான். ஆகையால் திமுக தலைமையிடம் உள்ள ஹிந்து மத அலர்ஜி, பிரிவினையைத் தொடும் மாநில சுயாட்சிப் பற்று, ஆகியவை அக்கட்சியின் பெருவாரியான இரண்டாம் மற்றும் அடுத்த கட்டத் தலைவர்களுக்குப் பொருட்டல்ல - அரசியலில் அந்தத் தலைவர்களின் பிரதான நோக்கம் நிறைவேறினால் அது போதும் அவர்களுக்கு.

 

பன்னீர்செல்வம் திமுக-வில் சேர்ந்தது அவரைப் பொறுத்து, திமுக-வைப் பொறுத்து, முரண்பாடானதோ நினைத்துப் பார்க்க முடியாததோ அல்ல. அதுவும் கருணாநிதி, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இல்லாத இந்த நாளில், திமுக மற்றும் அதிமுக இடையே அதிக வலிமை கொண்ட கட்சி மற்ற கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களை ஈர்க்கும் - இந்த முறை திமுக அடுத்த கட்சியிலிருந்து ஒரு முன்னாள் முதல்வரையே கூட்டிக் கொண்டது. இரண்டில் எந்த ஒரு கட்சியின் தலைவர் மற்ற கட்சிக்குத் தாவினாலும், "பெரியார், அண்ணாவின் கொள்கைகளை இந்தக் கட்சிதான் பின்பற்றுகிறது" என்று நமுட்டுச் சிரிப்போடு காரணம் சொல்லலாம்.

 

 

2. கேள்வி: "அண்ணா தொடங்கிய தாய்க் கழகமான திமுக-வில்" பெருமகிழ்ச்சியோடு இணைவதாக ஓ.பன்னீர்செல்வம் கூறி இருக்கிறார். அதிமுக-வில் இருப்பவர்களுக்கு, திமுக தங்களின் தாய்க் கழகம் என்ற உணர்வு இருக்குமா?

 

பதில்: தாய்க் கழகம், சேய்க் கழகம் என்பதெல்லாம் காரியம் ஆக உதவுகிற வார்த்தைகள். இரண்டு கழகங்களையும் ரத்தினச் சுருக்கமாக "ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்" என்று அர்த்தம் பொதிந்த வார்த்தைகளில் சொன்னார் காமராஜ். அதற்கு ஒரு அர்த்தம்: ஒரு மட்டையில் அமர்ந்திருக்கும் சில ஈக்கள் - அதாவது தலைவர்கள் - அடுத்த மட்டையில் உட்கார, உட்கார்ந்து உண்ண, வசதியாக இருந்தால் அந்த மட்டைக்குப் பறக்கும், அவ்வளவுதான்.

 

 

3. கேள்வி: அதிமுக-வை விட்டுத் திமுக-வில் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம், "அதிமுக-வின் பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அதிமுக-வை அழிவுப்பாதையை நோக்கிக் கொண்டு செல்கிறார்" என்று கூறி இருக்கிறாரே?

 

பதில்: பாவம். தான் சேர்ந்த திமுக-வை திருப்திப் படுத்த எண்ணி, ஓ.பி.எஸ் திமுக-வைச் சாடுகிறார்.

 

ஒரு கற்பனையாகப் பாருங்கள்: பழனிசாமி, திமுக-வை அரசியல் களத்தில் மிகவும் பலவீனப்படுத்தி உள்ளார். ஏன், 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியைத் தோற்கடித்து அதிமுக கூட்டணியை ஆட்சியில் அமர்த்த வழி செய்துவிட்டார் பழனிசாமி. அல்லது, 2024 லோக் சபா தேர்தலில் திமுக கூட்டணியைத் தமிழகத்தில் வீழ்த்தி அதிமுக கூட்டணி மிக அதிக லோக் சபா தொகுதிகளைக் கைப்பற்ற அவர் உதவினார். நிஜத்தில் இப்படி நடந்திருந்தால், பழனிசாமி அதிமுக-வை அழிவுப் பாதையில் கொண்டு சென்றதாக யாரும் சொல்லமுடியாது. மாறாக, தனது இயலாமையால் பழனிசாமி திமுக-வை மேலும் பலம் கொள்ளச் செய்தார், திமுக-வுக்கு அதிக எம்.எல்.ஏ மற்றும் எம்.பி-க்கள் கிடைக்கும் அளவுக்கு அதிமுக-வை அவர் திமுகவிடம் கேவலமாகத் தோற்கச் செய்தார் என்பதால் தான், அதிமுக அழிவுப் பாதையில் செல்கிறது என்கிறார் ஓ.பி.எஸ்.

 

அதாவது, திமுக ஒரு தீய அரசியல் சக்தி, அதை எடப்பாடி பழனிசாமி கட்டுப்படுத்தவில்லை, தேர்தல்களில் தோற்கடிக்கவில்லை என்பதை அல்லவா பழனிசாமியின் குறையாகச் சொல்கிறார் ஓ.பி.எஸ்? திமுக-வில் சேர்ந்தவுடன், அதிமுக தலைவரைக் குறை சொல்ல நினைத்துத் திமுக-வையே தீய கட்சி என்று சொல்லாமல் சொல்லித் தாக்குகிறாரே ஓ.பி.எஸ்!

 

 

4. கேள்வி: அதிமுக-வில் மூன்று முறை முதல்வர் ஆக்கப் பட்டவர் ஓ. பன்னீர்செல்வம். தனது கட்சியை விட்டு அவரால் எப்படித் திமுக-வில் சேர முடிந்தது?

 

பதில்: மூன்று தருணங்களில் அதிமுக முதல்வராக ஆக்கப் பட்ட ஓ.பி.எஸ்-சை பழனிசாமி தலைமையிலான அதிமுக முற்றிலும் நிராகரித்தது. தன்னை நிராகரித்த அதிமுக-வைத் தற்போது அரசியல் ரீதியாக அடக்கி வைத்திருக்கும் திமுக-வில் இணைந்ததன் மூலம் ஓ.பி.எஸ் சற்று நிம்மதி அடைவார்.

 

திமுக-வில் ஓ.பி.எஸ்-க்கு முடிவுகள் எடுக்கும் இடம் எதுவும் தரப்படாது, அவரும் எதிர்பார்க்க மாட்டார். திமுக-வின் முக்கிய நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றால், அவருக்கு ஒரு முக்கிய நாற்காலி தரப்படலாம். மற்றபடி திமுக-வுக்குள் அவருக்கான பெரிய மதிப்பு என்னவென்றால், அவர் வருகை அதிமுக முகத்தில் கரி பூச உதவியது என்பது.

 

என்ன இருந்தாலும் எடப்பாடி பழனிசாமிக்கு சமர்த்து போதாது.

 

 

5. கேள்வி: அதிமுக-வில் இருந்தபோது ஓ. பன்னீர்செல்வம் 'தர்ம யுத்தம்' என்று ஏதோ நடத்தினாரே, அதன் பொருள் என்ன?

 

பதில்: பெரிதாக ஒன்றுமில்லை. ஏதோ தர்மத்துக்கு செய்யப்பட்ட யுத்தம்!

 

பகுதி 61 // 28.02.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

Thursday, 26 February 2026

கேள்வி-பதில் (26.02.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: மாநிலத்தின் கடன்களைக் குறைத்து வருவாயை அதிகரித்தால், அதிமுக-வின் தேர்தல் வாக்குறுதியான "ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக பத்தாயிரம் ரூபாய்" வழங்குவது சாத்தியம் என்று, நிருபர்கள் கேள்விக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பதில் கூறியுள்ளாரே?

 

பதில்: சிலர் தங்கள் சகோதரர், சகோதரி செய்யும் பெரிய தவறு அல்லது அநியாயம் பற்றி வெளியில் பேச முடியாது. அது பற்றி மூன்றாம் மனிதர்கள் பேசக் கேட்டால் மௌனமாக இருக்க வேண்டும். காரணம், நெருங்கிய உறவுகளை விட்டுக் கொடுக்க முடியாது. அரசியல் கூட்டணி உறவு என்றால், கூட்டணியின் தலைமைக் கட்சி செய்யும் தவறு அல்லது அநியாயத்தைக் கூட்டணியின் மற்ற கட்சிகள் குறைசொல்லக் கூடாது - அதை ஒருவாறு நியாயப் படுத்தவும் வேண்டும். அண்ணாமலை அதை லாவகமாகச் செய்கிறார்.

 

அதிமுக-வின் பைத்தியக்கார தேர்தல் வாக்குறுதி பற்றி நிருபர்கள் வீசிய கேள்வியை அண்ணாமலை நேர்த்தியாக 'லெக் கிளான்ஸ்' ஆட முடியும் என்றால், அவர் ஆட்சியில் ஒரு முக்கியப் பொறுப்புக்கு வந்தால் எந்தப் பந்துக்கும் அவுட் ஆகாமல் நல்ல ஸ்கோர் எடுப்பார்.

 

 

2. கேள்வி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லக்கண்ணுவின் உடலுக்குக் கலங்கிய கண்களுடன் இறுதி மரியாதை செலுத்திய ரஜினிகாந்த், "ஒருவர் நல்லவராக, நேர்மையானவராக, எளிமையானவராக இருந்தால் அவருக்கு மதிப்பும் மரியாதையும் தானாக வரும் என்பதற்கு உதாரணம் நல்லக்கண்ணு" என்று கூறி இருக்கிறார். இது பற்றி உங்கள் கருத்து?

 

பதில்: நமது மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பு எதையும் நல்லக்கண்ணு வகித்ததில்லை. இருந்தாலும் அவருடைய நல்லதனம், நேர்மை மற்றும் எளிமை பற்றி, முக்கியமாக நேர்மை பற்றி, ரஜினிகாந்த் குறிப்பிட்டதற்கு ஒரு காரணம் - அதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்பதற்காக ரஜினிகாந்த் பேசாவிட்டாலும், அவரது ஆழ்மனதிலிருந்து தானாக வெளிவந்த காரணம் - தமிழகத்தின் ஆட்சியாளர்களிடம் இருக்கவேண்டிய, ஆனால் துளியும் இல்லாத நேர்மை, அத்துடன் நல்லதனம் மற்றும் எளிமை, நல்லக்கண்ணு என்ற அரசியல்வாதியிடம் இருந்தது. இந்த வேறுபாடு அனைவரையும் நல்லக்கண்ணு பற்றிக் கூடுதலாக நெகிழ வைக்கும்.

 

 

3. கேள்வி: "திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒவ்வொரு தேர்தலின் போதும் தங்களுக்கு வேண்டிய அதிகத் தொகுதிகளைக் கேட்பார்கள். அதனால் கூட்டணிக்குள் சலசலப்பு எழுவது சகஜம். அதன் காரணமாக கூட்டணிக்குள் பிளவு ஏற்படாது, கூட்டணிக் கட்சிகள் கூட்டணியை விட்டு விலகாது. திமுக தலைவர் ஸ்டாலின் அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காண்பார்" என்று விசிக தலைவர் திருமாவளவன் சொல்கிறார். இது எப்படி சாத்தியமாகிறது?

 

பதில்: இன்றைய நிலையில், திமுக-வை விட்டால் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு வேறு பெரிய வழி இல்லை,  வேறிடத்தில் பெரிய பலன்கள் இல்லை. திமுக-வும் அவைகளைச் சார்ந்து கூட்டணியாகத்தான் தேர்தலில் வெல்ல முடிகிறது. இருந்தாலும், திமுக கூட்டணியில் அதிகத் தொகுதிகள் கிடைக்காததால், ஆட்சியில் பங்கு உண்டு என்ற உத்தரவாதம் தரப்படாததால், கூட்டணியிலிருந்து ஒரு கட்சி விலகினால் அதற்குப் பெரிய நஷ்டம், திமுக-வுக்குச் சிறிய நஷ்டம்.

 

அதிகத் தொகுதிகளுக்காக முரண்டு பிடித்துக் கூட்டணியிலிருந்து வெளியேறி பெரிய நஷ்டத்தைச் சந்திக்க, திமுக-வின் கூட்டணிக் கட்சி எதுவும் விரும்பாது. காங்கிரஸ் மட்டும், கூட்டணி மாறித் தவெக-வுடன் சேர்ந்து அதிகத் தொகுதிகளில் போட்டியிடுவது லாபமா நஷ்டமா, மாறிச் சேரும் கூட்டணி அமைக்கும் ஆட்சியில் பங்கு கிடைக்கும் என்றாலும் அது ஆட்சிக்கு வருமா இல்லையா, என்று தெரியாமல் இருக்கிறது.

 

இந்தக் காரணங்களால், சலசலப்பு ஏற்படுத்தும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஸ்டாலின் பேசி தொகுதிப் பங்கீட்டை சுமுகமாக முடிக்கிறார் - என்பதைத் திருமாவளவன் மிருதுவாகச் சொல்கிறார்.

 

 

4. கேள்வி: 'கோடைக்கால சிறப்புத் தொகுப்பு' என்று, தமிழக அரசு சார்பில் ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகை பெறுவோருக்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். அடுத்து, அனைத்துக் குடும்பங்களுக்கும் 'கருணைத் தொகை' என்று பத்தாயிரம் ரூபாயை அதிமுக அரசு வழங்கும் என்று ஒரு புதிய தேர்தல் வாக்குறுதியை எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். வாக்காளர்களின் ஓட்டை மேலும் கவர, இனி திமுக மற்றும் அதிமுக வேறு என்ன வாக்குறுதி தர முடியும்?

 

பதில்: ஒவ்வொரு தமிழ் மாதத்தையும் மக்கள் மகிழ்வுடன் வரவேற்கும் விதமாக, அந்த அந்த மாதத்தின் முதல் தேதியன்று, "மாதப்பிறப்பு மகிழ்வுத் தொகை" என்று குடும்பத் தலைவர்களுக்கு ஒரு மாதம், குடும்பத் தலைவிகளுக்கு அடுத்த மாதம், என்று மாற்றி மாற்றி - வருடத்தில் பெண்களுக்கு ஆறு மாதம், ஆண்களுக்கு ஆறு மாதம் கிடைக்கும்படி - அவர்களுக்கு அரசு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக வாக்குறுதி கொடுத்தால் போயிற்று!

 


5. கேள்வி: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பாரதப் பிரதமர் மோடி தோன்றியபோது, அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் 'மோடி மோடி' என்று உற்சாகமாக கோஷம் எழுப்பினார்களே, அது ஏன்?

 

பதில்: இதற்கான காரணத்தை ராகுல் காந்திதான் தெளிவாகச் சொல்வார். அதாவது: இஸ்ரேல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்-காரர்கள்!


பகுதி 60 // 26.02.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

Wednesday, 25 February 2026

கேள்வி-பதில் (25.02.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: 'இந்த சட்டசபைத் தேர்தல், விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர்" என்று தவெக தலைவர் விஜய் வேலூரில் பேசியிருக்கிறாரே?

 

பதில்: விஜய் பிதற்றுகிறார். ஸ்டாலினைத் தீவிரமாக எதிர்த்து வரும் அதிமுக-வுக்கும், பாஜக-வுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் தேர்தல் களத்தில் மதிப்பே இல்லையா?

 

இன்னொன்று: கடந்த பல தேர்தல்களில் திமுக-வுடன் ஒரு கூட்டணிக் கட்சியாக அதன் கூடவே வரும் காங்கிரஸை விஜய் ஏன் எதிர்க்கவில்லை? திமுக எனும் 'தீய சக்தி'க்குப் பக்கபலமாக இருந்து வரும் காங்கிரஸ், இந்தத் தேர்தலில் விஜய் கட்சியோடு கூட்டணி வைக்கலாம் என்று அவர் காத்திருப்பதால், காங்கிரஸை விஜய் தற்காலிகமாக மன்னித்து விட்டாரா?

 

விஜய்யின் மேடைப் பேச்சில் முன்பைவிட இப்போது சினிமாத்தனம் கொஞ்சம் - கொஞ்சம் தான் - குறைந்திருக்கிறது. ஓட்டைகள் கொஞ்சமும் குறையவில்லை.

 

 

2. கேள்வி: தங்கள் ஆட்சியில் ஒவ்வொரு குடும்பதிற்கும் கருணைத் தொகையாகப் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று ஒரு சட்டசபைத் தேர்தல் வாக்குறுதியை அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி புதிதாக அறிவித்துள்ளாரே?

 

பதில்: அவர் அப்படி அறிவித்த பின், "திமுக அரசு ஐயாயிரம் ரூபாய் வழங்கியது சூப்பர் ஹிட் ஆகிவிட்டது. எதிர்க் கட்சிகள் நிலைகுலைந்து போய் உள்ளன" என்று முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறார்.

 

மிகுந்த ரொக்கத்தையும் இலவசங்களையும் பல தரப்பட்ட மக்களுக்குத் தங்கள் அரசு வழங்கும் என்று அறிவித்திருக்கும் திமுக-வுக்கும் அதிமுக-வுக்கும், வரும் சட்டசபைத் தேர்தலில் தனி மெஜாரிட்டி கிடைக்காமல் போவது நல்லது. அப்படியானால் வாக்காளர்கள் அந்த இரு கட்சிகளும் தனியாக ஆட்சி செய்வதை அங்கீகரிக்கவில்லை என்றாகும். அப்போது தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால், அதற்குத் தலைமை வகிக்கும் திமுக-வோ அதிமுக-வோ அளித்த தேர்தல் வாக்குறுதிகள் - அவற்றின் இலவச அறிவிப்புகள் - கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள் ஆகாது, அவற்றை அந்தக் கூட்டணி அரசு அப்படியே முழுதாகச் செயல்படுத்த தார்மீக அவசியமும் இல்லை. இந்த வழியிலாவது திமுக-வையும் அதிமுக-வையும் பிடித்த இலவசப் பைத்தியம் தெளியட்டும். இந்த நல்லெண்ணம், தவெக-வின்  பைத்தியக்கார தேர்தல் வாக்குறுதிகளுக்கும் பொருந்தும்.

 

 

3. கேள்வி: ஒரு அரசியல் கட்சியானது தீய கட்சி, குறுகலான கண்ணோட்டம் உடைய கட்சி என்று சொன்னால், அந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுகிற மக்கள் அப்படியானவர்களா?

 

பதில்: இல்லை.

 

ஒரு அரசியல் கட்சி தனது பேச்சினாலும் செயலினாலும், ஓரளவு நடுநிலை எண்ணம் கொண்ட பொதுமக்கள் பலரை ஈர்க்க முடியும். பின்னாளில் இன்னொரு கட்சி, தனது மாறுபட்ட பேச்சினாலும் செயலினாலும் அந்த மக்களில் பலருக்கு மனமாற்றம் ஏற்படுத்தி அவர்களைத் தனது பக்கம் ஈர்க்க முடியும். அந்த அந்தக் கட்சிகளின் தலைமைப் பண்புகளுக்கு,  யுக்திகளுக்கு, இதில் பெரிய பங்கு உண்டு. சரியான கூட்டணி சேர்க்கைகளும் இதில் வேலை செய்யும்.

 

ஒரு தீய கட்சியின் தலைவர்களைப் போல், கெடுதல் செய்து கொழிக்க நினைப்பவர்கள் அல்ல பொதுமக்கள். அவர்கள் கெடுதல் செய்யப்பட்டு ஏமாற்றப் படுகிறவர்கள். அந்த மக்கள் மாற்றி ஓட்டுப் போட முடியும் - படிப்பறிவு பெரிதாக இல்லாது, அரசியல்வாதிகளின் வஞ்சகத்திற்கு அவ்வப்போது இரையாகும் மக்கள் உள்ள நம் நாட்டிலும். ஆகையால் நமது ஜனநாயகத்தின் மீது இறுதி நம்பிக்கை வைக்க முடிகிறது. அந்த நம்பிக்கை, 2014-ல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மத்தியில் தோற்றபோது பளிச்சென்று நிறைவேறியது, அங்கு இன்னும் நிலைநிற்கிறது.

 

 

4. கேள்வி: "ராமாயணம் மஹாபாரதம் போன்ற கதைகளை, ஆயிரம் இரண்டாயிரம் வருடங்களாக மக்கள் திரும்பத் திரும்பப் படிக்கிறார்கள், அதே கதைகளைப் படிக்கிறார்கள்.

ராமாயணம் மஹாபாரதம் போல, ஸ்டாலின் அரசின் காரியங்களை மக்களிடம் நாங்களும் திரும்பத் திரும்பச்  சொல்கிறோம்" என்று அமைச்சர் கே.என். நேரு பொதுமக்கள் முன் நின்று பேசி இருக்கிறாரே?

 

பதில்: ராமனின் வீரத்தையும் உயர் பண்புகளையும் மையமாக வைத்து சொல்லப் படுவது ராமாயணம். பாண்டவர்கள் தம் பக்கம் இருந்த தர்மத்திற்காகப் போராடியதை, அவர்கள் இறுதியில் வென்றதை, விவரிக்கும் கதை மஹாபாரதம். அவை இரண்டும் மக்களுக்குத் திரும்பத் திரும்ப சொல்லப்படுவது, மக்கள் அவற்றைப் படிப்பது, நல்லது.

 

ராவணன் அணி போன்ற ஒரு அக்கிரமக் கட்சி, "வெல்வோம் அதர்மமாக" என்பதை ஒரு தேர்தல் முழக்கமாகத் தன் மனதிற்குள் சொல்கிற கட்சி, ராமாயண மஹாபாரதக் கதைகளைப் பொதுமக்களிடம் குறிப்பிடவே கூடாதே? சரி, சரி. தேர்தல் ஜன்னியில் ஒருவர் வேண்டாததையும் பேசுவாரே!

 


5. கேள்வி: "உலகில் எட்டு போர்களை நான் நிறுத்தி இருக்கிறேன்" என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் மீண்டும் பேசி வருகிறாரே?

 

பதில்: அமைதிக்கான நோபல் பரிசு மீது டிரம்புக்கு நேர் கண், ஓரக் கண், இரண்டும் உண்டு. அந்த நோபல் பரிசைப் பெறுவது, இந்தியாவில் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கான தகுதி மாதிரி என்று டிரம்ப் நினைக்கிறார். அந்தப் பரிசு கிடைக்க, எப்படியோ எட்டு போட்ட மாதிரிக் காண்பித்தால் மட்டும் போதாது!


பகுதி 59 // 25.02.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr