Thursday, 25 June 2026

கேள்வி-பதில் (24.06.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "2026 தேர்தலுக்குப் பின், அதிமுக-வின் நிலை கவலைக்குரியதாக மாறும் என, தேர்தலுக்கு முன்பே பலமுறை சுட்டிக் காட்டினேன். நான் கூறியது இன்று நடந்துவிட்டது" என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறுகிறாரே?

 

பதில்: ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுக-வில் மக்களை வசீகரிக்கும் தலைவர் யாரும் இல்லை; 'எங்க பாட்டன் சொத்து' என்பதாக இரட்டை இலை சின்னத்தை மட்டும் நம்பி நடத்தப்படும் கட்சி அது; மக்கள் நம்பிக்கையைப் பெற்ற தலைவர் ஒருவரும் இல்லாத அக்கட்சி மெள்ள மெள்ளத் தேயும்; தேர்தல்களுக்காகக் கூடியவரை கூட்டணி சேர்த்து மூச்சு விட்டுக் கொண்டிருக்கலாம் - என்பதை அறிந்து சொல்ல அபாரமான அரசியல் ஆராய்ச்சியாளர் தேவையில்லை. யாரும் சொல்லலாம். திருமாவளவனும் சொல்லலாம்.

 

 

2. கேள்வி: "மேகதாது அணை விவகாரத்தில் முதல்வர் விஜய்க்குத் தெளிவில்லை என்று கூறுவதை விட, எதிர்க் கட்சித் தலைவர்களுக்குத் தான் தெளிவில்லை என்று கூறவேண்டும்" என மதிமுக பொதுச்செயலர் வைகோ சொல்கிறாரே?

 

பதில்:  திமுக கூட்டணியை விட்டுத் தவெக பக்கம் மதிமுக சாய்கிற நிலையில், தெளிவு பற்றி வைகோ பேசுகிறார். வைகோ எதிலோ மிகத் தெளிவாக இருக்கிறார்.

 

 

3. கேள்வி: விஜய் நடித்த, முகம் சுளிக்கவைக்கும் வார்த்தைகள் கொண்ட, ஒரு சினிமாப் பாடல் மதுரை அருகிலுள்ள ஒரு அரசுப் பள்ளி வளாகத்திலுள்ள மேடையில் ஒலிபரப்பப் பட்டது. அந்த மேடையில் நின்றிருந்த மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதனும் சேர்ந்து அந்தப் பாடலுக்கு ஜிங் ஜிங் டான்ஸ் ஆடி இருக்கிறாரே?

 

பதில்: தனது சினிமா பிரபல்யத்தால் மக்களின் வாக்குகளை அதிகம் ஈர்த்தவர் விஜய். அவர் முதலமைச்சர் ஆனபின் தனது சினிமா பர்சனாலிடியை விட்டுவிட்டுத் தன்னை ஒரு மக்கள் பிரதிநிதியாக, மக்கள் சேவகராக, மட்டும் முன்னிறுத்துவது, தனது அமைச்சர்களும் கட்சி நிர்வாகிகளும் அவ்விதம் தன்னை முன்னிறுத்துவதை அவர் உறுதி செய்வது, நல்லது. அது சிறுவர்களின், இளைஞர்களின், எதிர்காலத்திற்கு அவசியம்.

 

பள்ளி மாணவர்களுக்கு அதீத ஒழுக்கமும் உயரிய நேர்மையும் நல்ல கட்டுப்பாடும் போதிக்கப் படவேண்டும். இவ்வாறு போதிக்கப்படும் அளவுகளில் பின்னர் அவர்களிடம் பாதியாவது தங்கலாம். அவர்களுக்குப் போதிக்கப்படும் அளவுகளே, அவர்களின் கண் முன் காண்பிக்கப்படும் உதாரணங்களே, துளியளவாக இருந்தால் அவர்களிடம் என்னதான் தங்கும்?

 

 

4. கேள்வி: இந்தமுறை மருத்துவ சேர்க்கைகளுக்காக நடந்த நீட் தேர்வின் வினாத்தாள் முன்னரே கசிந்தது என்பதால் நாடெங்கும் மறுதேர்வு நடத்தப்பட்டது. மறுதேர்வுக்கான வினாத்தாள்களை இடம் மாற்ற ராணுவம் பயன்படுத்தப் பட்டது. தேர்வு மையங்களுக்குள் நுழையும் மாணவர்களுக்கும் தீவிர பாதுகாப்பு சோதனைகள் செய்யப்பட்டன. அதிகப்படியான இந்த நடவடிக்கைகளை 'வீ த லீடர்ஸ்' தலைவர் அண்ணாமலை குறை சொல்லி இருக்கிறாரே?

 

பதில்: நீட் தேர்வு தேவை இல்லை, என்கிறது திமுக. நீட் தேர்வு மையங்களில் நுழையும் மாணவர்களுக்கு இத்தனை பாதுகாப்பு சோதனைகள் தேவை இல்லை, என்கிறார் அண்ணாமலை. இரண்டுமே மாணவர்கள் நலனிற்காக சொல்லப்படுவதல்ல. பாஜக-வைக் கண்டனம் செய்யவேண்டும், தனியார் மருத்துவக் கல்லூரிகளை மனம் குளிர்விக்க வேண்டும் என்பது திமுக-வின் திட்டம். பாஜக-வை அவ்வப்போது குறை சொல்லாமல் விடக்கூடாது என்பது அண்ணாமலையின் எண்ணமோ?

 


5. கேள்வி: சமீபத்திய ஜி-7 உச்சி மாநாட்டின்போது, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தன்னுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள தன்னைக் கெஞ்சினார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்ல, அது உண்மையல்ல என்று அந்தப் பெண்மணி மறுத்தவுடன் டிரம்ப் மறுபடியும் தான் பேசியது உண்மை என்று சாதிக்கிறாரே?

 

பதில்: மக்கு ட்ரம்பிற்கு ஒன்று புரியவில்லை, அல்லது அது பற்றி அவர் கவலைப்பட வில்லை.

 

டிரம்ப் மெனக்கெட்டு தனக்காகச் சேர்த்த மதிப்பும் மரியாதையும் உலகுக்கு உணர்த்துவது என்னவென்றால்: அவர் மெலோனியைச் சிறுமைப்படுத்திச் சொன்னதை இத்தாலியில், அமெரிக்காவில், உலகின் மற்ற நாடுகளில், எந்தப் பெண்ணும் நம்பமாட்டாள். எந்த ஆணும் கூட நம்பமாட்டான்.


பகுதி 106 // 24.06.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

Sunday, 21 June 2026

கேள்வி-பதில் (21.06.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "கமிஷன், கரப்ஷன் என்ற சொற்களுக்கு இடமில்லாமல் இயங்குகிற அரசு ஜோசப் விஜய்யின் அரசு" என்று மதிமுக தலைவர் வைகோ பேசி இருக்கிறார். வைகோவைப் பாராட்டலாமா?

 

பதில்: ஒரு அரசு நிர்வாகத்தில் கமிஷன், கரப்ஷன் இருக்கிறதா இல்லையா என்பது வைகோவுக்குத் தெரிந்துவிடும் என்று அவர் உணர்த்துகிறார். அதன்படி, தற்போதைய விஜய் ஆட்சியில் கமிஷன், கரப்ஷன் இல்லை என்கிறார் அவர். சரி, போகட்டும்.

 

சென்ற திமுக அரசில் - வைகோ கட்சி ஆதரித்த அந்த அரசில் - கமிஷன், கரப்ஷன் இருந்ததில்லை என்றால், "ஸ்டாலின் ஆட்சி மாதிரியே விஜய் ஆட்சியிலும் கமிஷன், கரப்ஷன் இல்லை" என்று வைகோ கூறி இருக்க வேண்டும். அவர் அப்படிச் சொல்லவில்லை.

 

என்ன இருந்தாலும், 'சென்ற திமுக ஆட்சியில் கமிஷன், கரப்ஷன் இல்லை என்று நான் சர்டிபிகேட் தரமுடியாது' என்று வைகோ சொல்வதாக அர்த்தம். அதோடு, 'ஒரு அரசு நிர்வாகத்தில் கமிஷன், கரப்ஷன் இருக்கிறதா இல்லையா என்பது எனக்குப் பொருட்டல்ல. நான் ஒரு அரசை ஆதரிப்பதால், அதை அமைத்த கட்சியைப் பாராட்டுவதால், மதிமுக-வுக்கு அந்த நேரத்தில் பலன் உண்டா என்பதுதான் என் கணக்கு' என்றும் வைகோ தெரிவிப்பதாக அர்த்தம். இதில் அவரைப் பாராட்ட என்ன இருக்கிறது?

 

 

2. கேள்வி: 'அதிமுக எம்.எல்.ஏ-க்களின் பதவி விலகல் குதிரை பேரமா' என்ற கேள்விக்குப் பதிலளித்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம், "அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்கள் எம்.எல்.ஏ-க்கள் பதவியில் இருந்து விலகுகிறார்கள்; அவர்கள் அந்தக் கட்சியில் இல்லை; தேர்தல் நடந்தால் அவர்கள் நிற்பார்களா, ஒருவேளை நின்றால் எந்தக் கட்சி சார்பில் நிற்பார்கள் என்றெல்லாம் தெரியாது. ஆகையால் அதை எப்படிக் குதிரை பேரம் என்று சொல்ல முடியும்?" என்று கேட்கிறார். அவர் கேள்வி சரியா?

 

பதில்: காங்கிரஸை விடமுடியாத ப. சிதம்பரம், வெட்கத்தை விட்டுத்தான் காங்கிரஸ் சார்பில், கூட்டணிக் கட்சிகள் சார்பில், அடிக்கடி அபத்தமாகப் பேசவேண்டும்.

 

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் சிலர் பதவி விலகுவதால் சட்டசபையில் உள்ள மொத்த எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கை குறையும். அந்தக் குறைந்த எண்ணிக்கையில், முன்பு விஜய் அரசுக்குச் சபையில் இருந்த மெஜாரிட்டி சக்தி இப்போது தானாக அதிகரிக்கும்; அதன் விளைவாக, சபையில் மெஜாரிட்டியை எட்டுவதற்காக விஜய் அரசுக்கு ஆரம்பத்தில் தேவைப்பட்ட கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ-க்களின் தயவு ஒவ்வொன்றாகக் குறையும். பிறகு, காலியான தொகுதிகளில் வரும் இடைத் தேர்தலில் விஜய் கட்சி வெல்வதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களின் பதவி விலகல் இறுதியில் விஜய் கட்சிக்குச் சட்டசபையில் நிரந்தரமாகப் பலம் சேர்க்கும். இப்படியான அதிக பலம் தவெக-வுக்குக் கிடைக்கும் என்று தெரியாமல், அல்லது அதற்கான பிரதிபலன் தங்களுக்கு வேண்டவே வேண்டாம், இனிமேல் தாங்கள் விவசாயம் செய்து பிழைக்கலாம் என்றெண்ணி, அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்திருப்பார்களா?

 

குதிரைகள் நேராகக் குதிரைகளாகவே விற்பனை ஆவது ஒருவகைப் பேரம். முதலில் அவற்றைக் கழுதைகள் ஆக்கிப் பாதி பேரத்தை முடித்து, பின்னர் அவற்றைப் பல விதமான குதிரைகளாக மாற்றி மீதியை முடிப்பது இன்னொரு வகைப் பேரம். சிதம்பரம் அனைத்தையும் உணர்ந்திருப்பார், ஆனால் அழுகல் வாதம் பேசுவார்.

 

 

 3. கேள்வி: "சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வந்து எந்த அணிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், நாங்கள் அதிமுக-வுடன் கூட்டணி அமைத்து ஒரு அரசை நிறுவுவதற்காக அக்கட்சியுடன் பேசவில்லை. அப்படியே பேசியிருந்தாலும் அது உலக மகா தப்பா? அதிமுக பகையாளி இல்லை, எங்கள் பங்காளிதான்" என்று இப்போது திமுக-வின் அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி சொல்கிறாரே?

 

பதில்: திமுக-வுடன் கூட்டணி வைத்துத் தேர்தலில் தவெக-வை எதிர்த்துவிட்டு, தேர்தலுக்குப் பின் புதிய ஆட்சி அமைக்க ஓடிப் போய் தவெக பக்கம் நின்றது காங்கிரஸ் கட்சி. அதே எண்ணத்தில் எதிரணியை நோக்கி மெதுவாக நடந்து தவெக-வுடன் கைகோர்த்தன விசிக மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகள். இந்த மூன்று கட்சிகள் செய்ததை விட, அதைத் தவெக மகிழ்ந்து ஏற்றதை விட, திமுக மற்றும் அதிமுக தமக்குள் ஏதோ கூட்டணி வைத்து அரசமைப்பது பற்றி முன்பு பேசி இருந்தாலும் அது தவறல்ல. ஆட்சி அமைப்பதற்காக அரசியலில் வழக்கமாக நடக்கக் கூடியதைத் தான் ஆர்.எஸ்.பாரதி சொல்லி இருக்கிறார்.

 

 

4. கேள்வி: வங்க தேசத்தில் ஹிந்துக்கள் போராட்டங்கள், பேரணிகள் என்று இப்போது நடத்துகிறார்கள். இது எப்படி சாத்தியமாகிறது?

 

பதில்: பெரிய அண்டை நாடான இந்தியாவில் மோடி சக்திமிக்க பிரதமராக இருக்கிறார் என்பது ஒரு காரணம். சமீபத்திய தேர்தல் மூலம், இந்தியாவின் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் ஆட்சி வீழ்த்தப்பட்டு அங்கு பாஜக நல்ல மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்திருக்கிறது என்பது ஒரு காரணம். அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மைக் காலமாக மோடியை வெகுவாகப் பாராட்டி வருகிறார், இந்தியாவைப் போற்றுகிறார், வங்க தேசத் தலைமையை ஆகா ஓகோ என்று புகழவில்லை, என்பதும் ஒரு காரணம். என்ன இருந்தாலும், நீண்ட காலத்தில் பாகிஸ்தானிலும் வங்க தேசத்திலும் ஹிந்துக்களின் பாதுகாப்பு கேள்விக்குறிதான்.

 


5. கேள்வி: "ஜி-7 உச்சி மாநாட்டில், என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளுமாறு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி என்னிடம் கெஞ்சினார்" என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சொல்ல, அதற்கு மறுப்புத் தெரிவித்த இத்தாலி பிரதமர், "அமெரிக்க அதிபர் கூறுவது முழுக்க முழுக்கப் பொய். நானோ அல்லது இத்தாலியோ யாரிடமும் எப்போதும் கெஞ்சவேண்டிய அவசியமில்லை" என்று ஒரு வீடியோ செய்தி வெளியிட்டிருக்கிறார். டிரம்ப் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்?

 

பதில்: பிரதமர் ஜார்ஜியா மெலோனி வசீகரமான பெண். அதிபர் டிரம்போ அசடு, அகராதி, பித்துக்குளி என மூன்றுமானவர். தன்னோடு ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள மெலோனி தன்னிடம் கெஞ்சினார் என்று கதை கட்டினால், யுவன் யுவதிகளிடம் தனக்கு கெத்து கூடும் என்று டிரம்ப் நினைத்திருப்பார். அதனால் தள்ளாடிவிட்டார்.


பகுதி 105 // 21.06.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

Thursday, 18 June 2026

கேள்வி-பதில் (18.06.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: அமெரிக்க அதிபர் டிரம்ப், விசிக தலைவர் திருமாவளவன் - இருவர் பேசும் முறையை ஒப்பிடுக.

 

பதில்: இன்று சொன்னதற்கு அப்பட்டமாக நேர் மாறாக அடுத்த நாள் பேசுபவர் டிரம்ப். இன்று பேசியதற்கு நியாயம் சொல்ல வந்து, அடுத்த நாள் விதவிதமாக மாறுதலாகப் பேசுபவர் திருமாவளவன்.

 

 

2. கேள்வி: "அதிமுக என்ற கப்பலை தவெக மூழ்க விடாது" என்று சொல்கிறார் தவெக தலைவர் ஆதவ் அர்ஜுனா. அதற்கு என்ன அர்த்தம்?

 

பதில்: ஒரு புதிய கப்பலின் ஓனர், நடுக்கடலில் தத்தளிக்கும் வேறொருவரின் பழைய கப்பலின் மாலுமிகள் பலரையும் தன்னிடம் வேலைக்குச் சேர்த்து, அந்தப் பழைய கப்பலை இழுத்துக் கரையோரத்தில் கடாச நினைத்தால், "நாங்கள் பழைய கப்பலை மூழ்கவிட மாட்டோம்" என்று புதிய கப்பலின் மேனேஜர் ஒருவர் தம்பட்டம் அடிக்கலாம்.

 

 

 3. கேள்வி: "ரஜினிகாந்த் எந்தக் கட்சியிலும் இல்லை. அவர் எந்தக் கட்சிக்கும் வரமாட்டார் என்று நான் நினைக்கிறேன்" என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி இருக்கிறாரே?

 

பதில்: 'அண்ணாமலையின் புதிய இயக்கத்திற்கு, அவர் தொடங்கவிருக்கும் புதிய அரசியல் கட்சிக்கு, ரஜினிகாந்த் தனது ஆதரவைத் தரமாட்டார் என்று நான் நம்புகிறேன்' என்று நயினார் சொல்ல விரும்புகிறார் - நாம் அவ்வாறும் பொருள் கொள்ளவேண்டும். பாஜக-வின் நலனுக்காக என்றெண்ணி நயினார் அவ்விதம் பேசுகிறார். தவறல்ல.

 

பாஜக-விலிருந்து அண்ணாமலை ராஜினாமா செய்துவிட்டு, அது பற்றியும் அவர் தொடங்கவிருக்கும் இயக்கம் பற்றியும் அவர் பேசுகிற வீடியோவை வெளியிட்ட அண்ணாமலை, "2020ல் நான் பாஜக-வில் சேருவதற்கு முதல் நாள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது இயக்கத்தில் சேர வேண்டுகோள் விடுத்தார். பாஜக-வில் சேரப்போவதாக நான் ஏற்கனவே வாக்குறுதி கொடுத்துவிட்டதால் அதை உடைக்க விரும்பவில்லை என்று தெரிவித்து என்னை மன்னிக்கச் சொன்னேன். பிறகு அவரைப் பார்த்தும் மன்னிப்புக் கேட்டேன் .... இன்றைக்கும் சூப்பர் ஸ்டார் மீது பெருமதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன்" என்றெல்லாம் ரஜினிகாந்துடன் தனக்குள்ள உறவு பற்றி விரிவாகப் பேசினார். மோடியுடன் அண்ணாமலைக்கு இருந்த உறவை விட, ரஜினிகாந்துடன் தனக்கு ஏற்பட்ட தொடர்பு பற்றி அந்த வீடியோவில் சற்று அதிகம் பேசினார் அண்ணாமலை. ரஜினி குறித்த அந்த வார்த்தைகள் மூலம், அண்ணாமலையின் புதிய இயக்கத்திற்கு, அவர் தொடங்கவிருக்கும் புதிய கட்சிக்கு, ரஜினிகாந்த் ரசிகர்களை, அபிமானிகளை, அண்ணாமலை ஈர்க்க முனைவதாகவும் நாம் எடுத்துக் கொள்ளவேண்டும். தனது இயக்கத்தின், தனது கட்சியின், நலனில் அண்ணாமலை அவ்விதம் பேசினார். அதுவும் தவறல்ல.

 

தலைவர்கள் பேசுவதைச் சரியாகப் புரிந்துகொண்டு மொத்தத்தில் எது சரி, எது நியாயம், எது நாட்டுக்கு நல்லது என்று தீர்மானிப்பது நம் கையில் இருக்கிறது.

 

 

4. கேள்வி: "பிரதமர் மோடி அமைதியானவர், 'கூல்' மனிதர், அசத்தலானவர். நான் அவரைப் போல் அல்ல" என்று அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜி7 உச்சி மாநாட்டுக்கு இடையே நமது பிரதமரைப் பாராட்டி இருக்கிறாரே?

 

பதில்: அதிபர் டிரம்பின் நல்வார்த்தைகள், கடும் சொற்கள் - இரண்டுமே அவருக்கு வெறும் ஆயுதங்கள். அவர் இனிய சொற்கள் மூலம் அடுத்தவருக்கு ஐஸ் வைத்துக் காரியம் சாதிக்க விரும்புவார், அல்லது கடும் சொற்கள் பேசி எதிராளிக்குப் பயம் காட்டித் தன் வழிக்குக் கொண்டுவர முனைவார். அவருடைய இரண்டு ஆயுதங்களும் இப்போது முக்கால் மொண்ணை. முன்பு மோடி மற்றும் இந்தியா குறித்துக் கடும் வார்த்தைகள் சொல்லியும் அவை பலன் தராததால், இப்போது மோடியிடம் ஐஸ் ஆயுதத்தைப் பிரயோகிக்கிறார் டிரம்ப்.

 


5. கேள்வி: "திமுக ஆட்சியில், தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தைப் புதுப்பிக்க ஆண்டு தோறும் ஆயிரம் பள்ளிகளிடம் தலா 5 லட்ச ரூபாய், ஒரு தடையில்லாச் சான்றிதழ் வழங்க பள்ளிகளிடமிருந்து 25 லட்ச ரூபாய், லஞ்சமாக வசூலிக்கப் பட்டது" என்று தனியார் பள்ளிகளின் ஒரு கூட்டமைப்பு புகார் சொல்கிறது. லஞ்சம் கொடுத்தவர்கள் சார்பாக, சென்ற ஆட்சியில் இவ்வாறு நடந்தது என்று ஒரு அமைப்பு வெளிப்படையாக எந்த தைரியத்தில் சொல்ல முடிகிறது?

 

பதில்: தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில், அந்த தைரியத்தில்.


பகுதி 104 // 18.06.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr