Thursday, 19 February 2026

கேள்வி-பதில் (19-02-2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதை முழுமுதல் கொள்கையாக ஏற்றுக் கொண்ட திமுக ஆட்சி, இந்தியாவுக்கே வழிகாட்டும் முன்னெடுப்பைத் துவங்கி உள்ளது...... அனைத்து மாநிலங்களும் சுயாட்சி பெற்றவையாக இருக்கவேண்டும். அனைத்து மாநிலங்களும் இணைந்து நடத்தும் கூட்டாட்சி அரசாக, மத்திய அரசு செயல்பட வேண்டும் என்பது நம் கொள்கை" என்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேசி இருக்கிறாரே?


பதில்:
அரசியல் சட்டப்பிரிவு 370 முழு உயிர்ப்போடு இருந்தபோது, ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனுபவித்த விசேஷ அந்தஸ்தும் விசேஷ உரிமைகளும் இப்போது அனைத்து மாநிலங்களுக்கும் தரப்பட வேண்டும் - இல்லை, அதற்கும் மேலாக உரிமைகள் தரப்பட வேண்டும் - என்கிறாரா ஸ்டாலின்? அவர் எண்ணப்படி, சிபிஐ, வருமானவரித் துறை, அமலாக்கத் துறை போன்ற மத்திய அமைப்புகள் ஒரு மாநிலத்தில் நிகழும் குற்றங்களை விசாரிக்கலாமா, கூடாதா? கூடாது என்றால், அரசு கஜானாக் கொள்ளையர்கள் கும்மி அடிப்பார்களே?


இன்னொன்று. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது, சாலைகள் பல்லிளிக்கின்றன, குடிநீருக்காக ஆங்காங்கே மக்கள் காத்திருந்து குடம் சுமக்கிறார்கள். இதற்கான மாநில அரசுத் துறைகளின் அவல நிலைக்கு, மத்திய அரசிடம் தங்கிவிட்ட அதிகாரங்களா காரணம்?

 
அடுத்ததாக, ஸ்டாலின் கருத்துப்படி தமிழகத்தில் கூட்டணி
ஆட்சி ஒத்துவராது, ஆனால் மத்தியில் அனைத்து மாநிலங்களும் இணைந்து நடத்தும் கூட்டாட்சி அமைய வேண்டுமா, அது மட்டும் ஒத்துவருமா?


சிந்தனை ஒரு இன்ஜின் என்றால், ஸ்டாலினிடம் உள்ளது டப்பா இன்ஜின், டுபாக்கூர் இன்ஜின்.

 

 

2. கேள்வி: "விளையாட்டை விடப் பெரிய தியானம் இருக்க முடியாது. விளையாட்டை விட, கவனக் குவிப்புக்கு உதவும் நல்ல யுக்தி இருக்க முடியாது" என்று முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறாரே?


பதில்:
ஸ்டாலின் விளையாட்டுத்தனமாகப் பேசுகிறார்.

 
தியானம் என்பது, ஆதி காலத்திலிருந்து ஹிந்து மதத்தைச் சார்ந்தவர்கள் தமது மன அமைதிக்காகவும், தமது செயல்பாடுகளில் மனதை ஒருமுகப்படுத்தும் ஆயத்தப் பயிற்சியாகவும் மேற்கொள்ளும் வழி. ஒரு அம்சத்தில் இப்போது தியானம் என்பது கடவுள் நினைப்பைக் கடந்து நின்று, எந்த மதத்தவரும், எந்த தேசத்தவரும், தமது மனநலனுக்காக மேற்கொள்ளலாம் என்றாகி விட்டது. அது யோகாவுக்கு இணையாகவும் பயன் தருகிறது. இருந்தாலும், ஏதாவது ஆதியில் துளி ஹிந்துமதம் சம்பந்தம் கொண்டிருந்தாலும் அதை நேராகவோ மறைமுகமாகவோ தாழ்த்திக் கருத்து சொல்வது ஸ்டாலினுக்கு ஒரு குதூகல விளையாட்டு. அதை ஆடியிருக்கிறார்.

 

 

3. கேள்வி: வருகின்ற சட்டசபைத் தேர்தலுக்காக, திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்து விட்டதே?


பதில்:
பிரேமலதா தலைமையிலான தேமுதிக அவ்வாறு இணைந்தது எதிர்பாராதது அல்ல. விஜயகாந்த் ஆரம்பித்த தேமுதிக அவ்வாறு இணைந்தது, அதுவும் இன்றைய திராவிட மாடல் திமுகவு-டன் கூட்டணி அமைத்தது, விஜயகாந்தின் தேசிய எண்ணத்தைப் போற்றியவர்களுக்குச் சற்று அதிருப்தி தரும். இருந்தாலும், நல்லதை நோக்கி நடப்பவர்களுக்கு எல்லாத் தடைகளையும் கடந்து செல்லும் பொறுமையும் முனைப்பும் அவசியம். அது இந்தியாவில் ஒரு பிரதான கட்சியிடம் இருப்பது பற்றி நாம் திருப்தி கொள்ளலாம்.

 

 

4. கேள்வி: "மகளிருக்கு அரசு உரிமைத் தொகை அளிப்பது மக்களைக் கையேந்த வைக்கும், நாட்டைக் கடன்கார நாடாக்கும். நான் அதை எதிர்க்கிறேன். நான் வந்தால் அதை ஒழித்து என் மக்களின் வருவாயைப் பெருக்குவேன்" என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறாரே?


பதில்:
அவர் மனதில் அந்த எண்ணம் இருப்பது உண்மை. அந்த எண்ணம் நல்லது, அர்த்தமுள்ளது. ஆனால் ஒரு கட்சியின் தலைவர் அதைப் பட்டவர்த்தனமாக வெளியில் சொல்வது, ஆட்சி அமைப்பதற்கான அதன் வெற்றியைப் பாதிக்கும்.


திமுக-வை ஆட்சியிலிருந்து ஒரு கட்சி வெளியேற்ற நினைத்தால், அந்தக் கட்சி தனியாகவோ அல்லது கூட்டணியாகவோ தேர்தலில் திமுக கூட்டணியை முதலில் தோற்கடிக்க வேண்டும். அந்தப் பெரிய நோக்கத்திற்குப் பழுது ஏற்படுத்தும் ஒன்றைப் பேசாமல் இருப்பது விவேகம்.


ஆளுகின்ற ஒரு கட்சி, அப்பாவி மக்களைப் பாதி பிச்சைக்காரர்களாக வைத்திருந்து அவர்களுக்கு இலவசங்களையும் ரொக்கத்தையும் அரசு கஜானாவிலிருந்து கொடுத்து வந்தால், அந்த விநியோகத்தைப் பலமாக மக்கள் மத்தியில் எதிர்த்துப் பேசி அந்தக் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்ற முடியாது. அதைப் பற்றி எதிர் அணியினர் பொதுவெளியில் விரிவாகப் பேசாமல், அதைக் குறிப்பாக எதிர்க்காமல், மக்கள் நம்பிக்கையைப் பெற்றுத் தேர்தலில் வென்றாக வேண்டும். அதுதான் ஜனநாயகம் தரும் சாய்ஸ். அதைச் செயலாற்றுவது ஒரு கலை.

 


5. கேள்வி: "நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்" என்று சுதந்திரப் போராட்ட காலத்தில் மகாகவி பாரதி பாடினார். இதே பாணியில், இன்று தமிழ்நாட்டின் ஒரு பிரதான அரசியல் கட்சி தனது செயல்பாடுகளை எவ்விதம் எண்ணிப் பார்க்கும்?


பதில்:
"நமக்குத் தொழில் கதை விடுதல், நாட்டைச் சுரண்டுதல், தேசியத்தில் சேராதிருத்தல்."


பகுதி 54 // 19.02.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

Wednesday, 18 February 2026

கேள்வி-பதில் (18.02.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக ஃபைல்ஸ் என்ற தலைப்பில் வெளியிட்ட சில தகவல்களுக்காக அவர் மீது திமுக எம்.பி-யான டி.ஆர்.பாலு கிரிமினல் அவதூறு வழக்குப் போட்டிருக்கிறார். இது பாலுவுக்கு எந்த வகையில் பயன் தரும்?


பதில்:
எந்த வகையிலும் பயன் தராது.


அண்ணாமலை மீது அவதூறு வழக்குப் போட்டதால் டி. ஆர். பாலு என்ன சொல்ல நினைக்கிறார்? பாலு இந்த வழக்கைப் போடாமல் இருந்தால், அவர் மீது அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை என்று பொதுமக்கள் நினைப்பார்கள், ஆனால் வழக்கைப் போட்டுவிட்டால் பாலு அப்பழுக்கற்றவர் என்று அதே மக்கள் நினைத்து விடுவார்களா?


இந்த வழக்கின் முடிவு என்ன ஆனாலும் பாலு பாலுதான்,
அண்ணாமலை அண்ணாமலைதான். ஒரு அரசியல்வாதியாக, பாலு பலே கில்லாடி; வழக்குப் போட்டவராக, படு அசடு.

 

 

2. கேள்வி: திமுக எம்.பி-யான டி.ஆர். பாலு அண்ணாமலை மீது தொடர்ந்த அவதூறு வழக்கில், அண்ணாமலையே பாலுவைக் குறுக்கு விசாரணை செய்து வருகிறார். பதில்கள் அளிக்கும் பாலு, "எனக்கு 1.46 கோடி ரூபாய் கடன் உள்ளது. எனக்குக் கடன் தந்த நிறுவனத்தின் உரிமையாளர் என் மகனா என்று கேட்டால், அது எனக்குத் தெரியாது" என்று சொல்கிறாரே?


பதில்:
'டாடா கம்பெனியில் வேலை செய்யலாம், டி.வி.எஸ் அல்லது பஜாஜ் கம்பெனி பைக் வாங்கலாம்' என்று சாதாரண மக்களே நினைக்கிறார்கள். இரண்டு கப்பல் வாங்கத் தெரிந்த பாலுவுக்கு, தான் கடன் கேட்ட நிறுவனத்தின் உரிமையாளர் தன் மகனா இல்லையா என்று தெரியவில்லையா?


போகட்டும். தனக்கு ஓட்டுப் போட்டவர்கள் தமிழக மக்கள் என்பதையாவது பாலு கண்டறிந்து, கப்பல் வாங்குவதில் அவர் காண்பித்த ஆழ்ந்த அக்கறையை அந்த மக்கள் நலனிலும் செலவிடலாம்.

 

 

3. கேள்வி: "அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கியது அதிமுக அரசு. அதற்குத் திமுக சொந்தம் கொண்டாடுவதா?" என்று சட்டசபையில் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆவேசம் காட்டி இருக்கிறாரே?


பதில்:
இதன் உண்மை நிலை ஒருபுறம் இருக்கட்டும்.


திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே, "நாங்கள் மக்களுக்கு இதையும் அதையும் தூக்கிக் கொடுத்தோம், அள்ளித் தந்தோம்" என்று அரசுப் பணத்தை, அரசு சலுகைகளை, தாங்கள் காரண காரியமாக வழங்கியதைப் பறை சாற்றுவார்கள். மக்களுக்குச் சுய கௌரவம் அளிக்கும் தரமான கல்வி, போதிய வருமானம், நல்ல இருப்பிடம், தூய்மையான குடிநீர் போன்றவை பரவலாகக் கிடைக்கத் திட்டமிட்டு வழிவகை செய்ய மாட்டார்கள்.


குரங்குகள் ஆட்சி செய்தால் அவை தேங்காயைத் தின்றுவிட்டு, மிஞ்சிய தேங்காய் ஒட்டிய கொட்டாங்கச்சியை விநியோகம் செய்யும். தின்று தீர்த்தது தெரியாது. கொட்டாங்கச்சி பேசப்படும்.

 

 

4. கேள்வி: "தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் பங்கு கேட்பதில் தவறில்லை" என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறி இருக்கிறாரே?


பதில்:
ஒரு கூட்டணிக் கட்சியாக, ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்பது தவறில்லை என்றால், கேட்பது சரி என்று அர்த்தம். கேட்பது சரி என்றால், திமுக கொடுக்க மறுப்பது தவறு என்று அர்த்தம். காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு கிடைக்கும் போது, மற்றொரு கூட்டணிக் கட்சி விசிக கைகட்டி ஓரமாக நிற்காது, அப்போது விசிக-வுக்கும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று அர்த்தம்.

 

தன் கட்சிக்காக நினைத்ததைக் காங்கிரஸ் தோளில் நின்று திருமா சொல்லி விட்டார் – ஆட்சியில் பங்கு கேட்டுத் திமுக-வுக்கு விசிக அழுத்தம் தராது என்று அவர் அர்த்தமில்லாமல் சொல்லி வந்தாலும்.

 


5. கேள்வி: மணிசங்கர் அய்யர், காங்கிரஸ் கட்சியை 'முட்டாள் கட்சி' என்று ஒரு பேட்டியில் விமர்சனம் செய்துவிட்டு, "நான் இன்னும் காங்கிரஸில் தான் உள்ளேன்" என்று அதே பேட்டியில் சொல்லி இருக்கிறாரே?


பதில்:
மணிசங்கர் அய்யர் ஒன்றைப் படாரென்று பேசுகிறார். இன்னொன்றைப் பூடகமாகச் சொல்கிறார். இரண்டுமே சரிதான்.


பகுதி 53 // 18.02.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

கேள்வி-பதில் (17.02.2026)

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "நாங்கள் உங்களுக்கு மரியாதை கொடுக்கிறோம். நீங்களும் எங்களுக்கு அதே மரியாதையைக் கொடுக்க வேண்டும். எங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றால் திருப்பி அடிப்போம்" என்று திமுக-வை நோக்கிக் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் பேசி இருக்கிறாரே?

 

பதில்: காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தேய்ந்து போன நிலையில், மற்ற பல மாநிலங்களிலும் அந்தக் கட்சிக்கு மக்கள் ஆதரவு சரிந்த நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர்களைத் திமுக பெரிதாக மதிக்காது.

 

சுதந்திர சமூகத்தில் ஒருவருக்கான மதிப்பு என்பது அவர் தானாக சம்பாதித்துக் கொள்ளும் சக்தி. அதன் விளைவாக அடுத்தவர் அந்த சக்தியை அங்கீகரிப்பார். இந்தப் பொது நியதியை - அதுவும் ஒருவர் காலை மற்றவர் வாரும் அரசியல் உலகில் - காங்கிரஸ் உணர்ந்து தனக்கான மரியாதையை வெல்ல வேண்டும். மக்கள் செல்வாக்கைப் பெற வாய்ப்புள்ள இளைஞர்கள் கட்சிக்குள் முன்னேற, தலைவர்களாக மத்தியிலும் மாநிலங்களிலும் பரிணமிக்க, முதலில் காங்கிரஸ் வழி செய்துகொடுக்க வேண்டும். இல்லையென்றால் காங்கிரஸ் மிஞ்சி மிஞ்சி செய்யத் தக்கது: முக்கல், முனகல், பொருமல்.

 

 

2. கேள்வி: "வரும் சட்டசபைத் தேர்தல் டெல்லி அணிக்கும் தமிழ்நாட்டு அணிக்கும் நடக்கும் போட்டி. வெல்லப் போவது டெல்லி அணியா, தமிழ்நாட்டு அணியா என்பது கேள்வி" என்று முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறாரே?


பதில்:
'திராவிடம்' என்று மர்ம அர்த்தத்தில் முழங்கும் திமுக, தமிழகத்தில் மட்டும் பிரதானமாக இயங்குகிறது. தேசியத்தைப் போற்றும் பாஜக-வின் மத்தியத் தலைமை டெல்லியில் இருக்கிறது, தற்போது அக்கட்சி தமிழகத்திலும் ஸ்திரமாக நின்று வளர்கிறது. திமுக-வை மொத்தத் தமிழக அணியாகக் கற்பனை செய்து, தமிழக பாஜக-வை டெல்லி அணி என்று அந்நியப்படுத்திப் பிதற்றுகிறார் ஸ்டாலின்.

 

பாரதத்திலிருந்து தமிழகத்தைத் தனிமைப்படுத்த நினைக்கும் கட்சி திமுக. அதைத் தீர்க்கமாக எதிர்க்கிற கட்சி பாஜக என்கிற உண்மை ஸ்டாலின் உள்மனதில் கசந்து அதுவே தொண்டை வரை வந்து அவர் அடக்கிவைத்த வார்த்தைகள்: 'வெல்லப் போவது தமிழ்நாட்டு அணியா, இந்திய அணியா?'

 

 

3. கேள்வி: தவெக தலைவர் விஜய், திமுக அரசின் முறைகேடுகளை எதிர்க்க வல்லவராகத் தெரிகிறார். மேடைகளில் அவ்விதம் பேசுகிறார். அவர் கட்சியை விட, பாஜக எந்த வகையில் சிறந்தது?


பதில்:
ஆட்சியில் முறைகேடுகள் செய்த திமுக-வை, அந்தக் காரணங்கள் சொல்லி எதிர்ப்பது எந்த எதிர்க் கட்சிக்கும் சுலபம். இதுவரை எங்கும் ஆட்சியில் அமராத தவெக-வுக்கு அது வெகு சுலபம். ஆனால் மோடியின் கீழ் மத்தியில் 11 ஆண்டுகளுக்கு மேல் ஊழலற்ற ஆட்சியைக் கொடுத்து, தேசத்திற்கு அசாத்திய நன்மைகள் செய்து உலகளவில் பாரதத்தின் பெருமையை உயர்த்திப் பிடித்த பாஜக-வை எதிர்க்கிறார் விஜய். ஊழல் செய்யாத, மத்திய அரசில் சாதனைகள் புரிந்த, கட்சியையும் விஜய் எதிர்த்தால் என்ன அர்த்தம்?


இன்னொன்று. மத்திய அரசு நிர்வாகத்தில் மெகா முறைகேடுகள் நிகழ்த்திய கட்சி, காங்கிரஸ். தனது தலைமையிலான மத்தியக் கூட்டணி அரசில் அங்கம் வகித்த திமுக-வை, பகாசுர முறைகேடுகள் புரிய அனுமதித்து அரவணைத்த கட்சி, காங்கிரஸ். அந்தக் காங்கிரஸ் கட்சியுடன் தமிழக சட்டசபைத் தேர்தலுக்காகக் கூட்டணி வைக்கக் காத்திருக்கிறார் விஜய். ஊழல் காங்கிரஸுடன் கைகோர்த்து, காங்கிரஸ் அரவணைத்த திமுக-வின் ஊழலை எதிர்ப்பாரா விஜய்?


விஜய் கட்சி, பாஜக மாதிரியானது அல்ல. விஜய்க்கு ஊழல் எதிர்ப்பு பிரதானம் அல்ல. முதல் அமைச்சர் ஆவது மட்டும்தான் அவர் குறி. ஆட்சியில் அமர்ந்தால் விஜய் என்ன செய்வார், எதை அனுமதிப்பார், எதற்குப் பாராமுகமாக இருப்பார் என்பது தெரியாது.

 

 

4. கேள்வி: தமிழக சட்டசபைத் தேர்தலுக்காகக் காங்கிரஸ் கட்சியோடு தேர்தல் கூட்டணி வைக்க முயலும் தவெக, ஊழலோடு கை கோர்க்க நினைக்கிறது என்றால் அதிமுக-வுடன் தேர்தல் கூட்டணி அமைத்த பாஜக அதைச் செய்தே விட்டது என்று அர்த்தமில்லையா?


பதில்:
தவெக காங்கிரஸுடன் கூட்டணி வைத்தால், கூட்டணிக்குள் எப்போதும் தவெக-வின் கை ஓங்கி இருக்கும். அதுதான் இன்றைய நிலை. எதிர்காலத்தில் அதில் மாற்றம் ஏற்படுகிற மாதிரியான தலைமை காங்கிரஸ் கட்சியில் இல்லை.

 
பாஜக தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்தாலும், அதை ஒரு யுக்தியாக வைத்து எதிர்காலத்தில் பாஜக மாநிலத்தில் தனியாக வலிமை பெறும், மாநிலத்தில் நல்லாட்சி அமைக்க வழி கிடைக்கும். 'எங்க பாட்டன் சொத்தாக' மட்டும் தற்போது நடத்தப்படும் அதிமுக போகப் போக நலிவுறும். அதுதான் இன்றைய நிலை.

 

செஸ் ஆட்டம் மாதிரி, தனது நகர்வுகளில் ஒரு தற்போதைய சமரசம் செய்துகொண்டு தமிழகத்தை மீட்டு எதிர்காலத்தில் மாநிலத்தில் நல்லாட்சி வழங்கும் பெரும் வெற்றியைக் கணக்கிடுகிறது பாஜக. தவெக செய்ய நினைப்பது வேறு, பாஜக செய்திருப்பது வேறு.

 


5. கேள்வி: வீடுகளில் விளக்கேற்ற நாம் தனியாகப் பயன்படுத்தாத எண்ணைக்கு, ஏன் விளக்கெண்ணை என்ற பெயர்? அந்தப் பெயரில் விளக்குக்கு என்ன வேலை?


பதில்:
அது விளக்க முடியாத விளக்கு!


பகுதி 52 // 17.02.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 


Sunday, 15 February 2026

கேள்வி-பதில் (15.02.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: தமிழக அரசின் "உங்க கனவைச் சொல்லுங்க" திட்டத்தின் கீழ், முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கான தன் கனவை எப்படி விவரிப்பார்? சுருக்கமாகச் சொல்லவும்.

 

பதில்: உதயநிதி, இன்பநிதி.

 

 

2. கேள்வி: "போன மீட்டிங்ல நான் ஒரு பொலிடிகல் பாம் (political bomb) சொன்னேன். அதாவது, ஆட்சிலயும் பங்கு, அதிகாரத்திலயும் பங்குன்னு சொன்னேன். இப்ப அந்த பொலிடிகல் பாம் எல்லாக் கூட்டணிலயும் வெடிக்குது" என்று விஜய் பேசி இருக்கிறாரே?

 

பதில்: உண்மை. திமுக கூட்டணிக்குள், விஜய் போட்ட குண்டு வெடித்து, அதை ஒட்டி 'ஆட்சியில் பங்கு வேண்டும்' என்ற காங்கிரஸ் பிரமுகர்களின் கோரிக்கைச் சத்தம் பெரிதாக ஒலிக்கிறது. அதிமுக கூட்டணிக்குள், "கூட்டணியாகத் தேர்தலைச் சந்திப்போம், ஆட்சியை அதிமுக மட்டும் அமைக்கும்" என்று எடப்பாடி பழனிசாமி முதலில் உரத்து எழுப்பிய குரலை, மோடி மற்றும் அமித் ஷாவின் "என்.டி.ஏ ஆட்சி" முழக்கம் பெரிதாகவும், விஜய் குண்டு அடுத்ததாகவும், அமுக்கி வைத்து விட்டன.

 

 

3. கேள்வி: "தமிழகத்தில் திமுக அரசு கொண்டுவந்த மகளிர் உரிமைத் திட்டம் மட்டுமே தேர்தல் வெற்றியை உறுதிப் படுத்தும் என்று நம்புவது மூட நம்பிக்கை" என்று காங்கிரஸ் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்திருக்கிறாரே?

 

பதில்: 'தமிழகத்தில் திமுக-வுக்கு வால் பிடித்து மட்டும் காங்கிரஸ் அரசியல் செய்தால் இந்த மாநிலத்தில் காங்கிரஸ் வளரும் என்று நம்புவது மூட நம்பிக்கை' என்று அவர் சொல்வதாகப் பொருள் காண்க.

 

 

4. கேள்வி: "ஊழல் செய்த திமுக அமைச்சர்கள் சட்டத்திலிருந்து தப்ப முடியாது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறாரே?

 

பதில்: யார் அதிமுக-வின் தலைவராக இருந்து இதைச் சொன்னாலும் அதற்குப் பெரிய மதிப்பும் நம்பகத் தன்மையும் கிடைக்காது என்பது வருத்தம் தரும் உண்மை.

 

அதிமுக-வை விடவும் பாஜக-வைத் தீவிரமாக திமுக எதிர்க்கிறது. காரணம்: மோடி தலைமை வகிக்கும் பாஜக ஊழலைத் திடமாக அனுமதிக்காது, தமிழகத்தில் பாஜக-வும் பெரிதாக வளர வாய்ப்புண்டு என்பதால். வரும் சட்டசபைத் தேர்தலுக்காக அதிமுக, பாஜக-வுடன் கூட்டணி வைக்கக் காரணம்: அப்படிக் கூட்டணி வைக்காவிட்டால் முதலுக்கே மோசம் என்பது நிச்சயம். அதாவது, தமிழகத்தில் ஆட்சிக்கு வராவிட்டால் - அல்லது கணிசமான எம்.எல்.ஏ-க்களைப் பெறாவிட்டால் - கட்சி மேலும் தேயும், என்ற நிலைக்கு அதிமுக வந்துவிட்டதால். மற்றபடி, இதுவரை அதிமுக ஊழல் எதிர்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சியல்ல.

 


5. கேள்வி: புறநானூறு காலத்தில், நெற்களத்தில் நெல் தூற்றிக் கொண்டிருந்த ஒரு தமிழ்ப் பெண், அப்போது வந்த புலியை வெறும் முறத்தால் வீரத்துடன் விரட்டியதாக மரபுவழிக் கதைகள் சொல்கின்றன. ஒரு தமிழ்ப் பெண்ணின் முறமா புலியைத் திரும்பிப் போகச் செய்திருக்கும்?

 

பதில்: 'நிராயுதபாணியாக இருக்கும் ஒருவரை, அதுவும் ஒரு பெண்ணை, தாக்க வேண்டாம், அவருக்கும் அவரது ஓங்கிய கையில் இருக்கும் முறத்திற்கும் பெருமை கிடைத்தாலும் பரவாயில்லை, திரும்பிவிடலாம்' என்று அந்தப் புலியும் நினைத்திருக்கலாம். ஒரு தமிழ்ப் புலியின் அறம்!


பகுதி 51 // 15.02.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr