Sunday, 7 June 2026

அண்ணாமலையின் புதிய அரசியல் கட்சி. பிளஸ் என்ன, மைனஸ் என்ன?

  

-- ஆர். வி. ஆர்

 

பாஜக-வில் இருந்த அண்ணாமலை, குறுகிய காலத்தில் பேர் பெற்றதற்கு என்ன காரணம்?

 

ஒன்று, அவர் தீர்க்கமாகத் திமுக-வை எதிர்த்தார். அதற்காகப் புள்ளிவிவரங்கள் சொன்னார். மிக லாஜிகலாகப் பேசினார். திமுக பதில் சொல்ல முடியாதவாறு, பொதுமக்கள் நம்பும்படி, அவர் அக்கட்சிக்கு  எதிராகப்  பிரசாரம் செய்தார்.

 

அதிமுக என்பது, சின்ன சைஸ் திமுக - ஹிந்து மதத்தை இளக்காரம் செய்யாத கட்சி அதிமுக என்றாலும். ஆகையால் அண்ணாமலை அதிமுக-வையும் எதிர்த்திருக்கிறார். பின்னர் மத்திய பாஜக 2026 சட்டசபைத் தேர்தலுக்காக அதிமுக-வுடன் கூட்டணி அமைத்ததால், கட்சிக்குக் கட்டுப்பட்டு, கூட்டணியை மதித்து, அவர் அதிமுக-வை விமர்சிக்கவில்லை.

 

மூன்று, அண்ணாமலையின் அரசியல் பணியில் அசாதாரண உத்வேகமும் அர்ப்பணிப்பும் வெளிப்பட்டன. அவருடைய தலைமைப் பண்புகளும் பொதுமக்கள் பலரை அவர்பால் ஈர்த்தன.

 

அண்ணாமலையின் பிரபல்யத்திற்கு இந்த மூன்று காரணங்கள் போக, இன்னொரு அதி முக்கியக் காரணம் உண்டு. என்னவென்றால்: அகில இந்தியாவிலும், பாஜக-வைத் தவிர அனுபவம் மிக்க வேறு எந்தக் கட்சியும் தனது தலைவர்கள் எவருக்கும் உறவினர் அல்லாத ஒரு இளைஞரைக் கட்சியில் சேர்த்து ஒரே வருடத்திற்குள் அவரை ஒரு மாநிலத் தலைவராக ஆக்கி இருக்காது. உயர்ந்த பார்வை கொண்ட, தமிழகத்தின் மீது அக்கறை உள்ள, பாஜக தலைவர் மோடி அதற்குச் சம்மதித்தார் என்பது அந்த மிக முக்கியக் காரணம். அதை யாரும் மறக்கலாகாது.


தற்போது அண்ணாமலை பாஜக-விலிருந்து ராஜினாமா செய்து, ஒரு தனி இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார். இதுபற்றி, ஜூன் 5ம் தேதி சமூக ஊடகங்கள் வாயிலாக மக்களிடம் அவர் பேசினார். அந்த இயக்கம் அரசியல் கட்சியாக மாறி, தமிழகத்தில் நடக்கும் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடும் என்று அவர் அறிவித்தார்.

 

அண்ணாமலை ஏன் பாஜக-வை விட்டு வெளியேறினார்? அவர் பாஜக-வில் இருந்தபோது, திமுக மற்றும் அதிமுக-வை அவர் விரும்புகிற சுதந்திரத்துடன் எதிர்த்து, பாஜக-வைத் தமிழகத்தில் ஒரு ஆளும் கட்சியாக, தனித்தோ அல்லது ஒரு கூட்டணிக் கட்சியாகவோ, அவர் அமர்த்த முடியவில்லை - அல்லது கணிசமான  எண்ணிக்கையில் பாஜக-வுக்கு எம்.எல்.ஏ சீட்டுகளை வென்று கொடுக்க முடியவில்லை - என்பதுதானே அதற்கான பிரதானக் காரணமாக இருக்க முடியும்?

 

பாஜக-வைத் தனது கொள்கை எதிரி என்று அறிவித்து 2026 தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட - இப்போது மற்ற சில கட்சிகளின் ஆதரவுடன் மாநிலத்தில் ஆட்சி அமைத்திருக்கிற - தமிழக வெற்றிக் கழகமும் அண்ணாமலை பொதுவாக எதிர்க்க வேண்டிய ஒரு கட்சியாகத்தான் இருக்க முடியும். தவெக தமிழகத்கை எங்கு நன்றாக நிர்வாகம் செக்கிறதோ, அதற்காக அக்கட்சியைப் பாராட்டலாம். அது வேறு விஷயம்.

 

2026 சட்டசபைத் தேர்தலில், முன்னணிக்  கட்சிகளான திமுக-வும் அதிமுக-வும் பெரிய அடி வாங்கின.  அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக-வுக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. காரணம்: விஜய் தலைமையில் தனிக் கட்சியாக வந்த தவெக என்னும் சூறாவளி, முன்பு ஆட்சி செய்த திமுக மற்றும் அதிமுக-வை, அவற்றின் கூட்டணிக் கட்சிகளோடு துவம்சம் செய்துவிட்டது. இங்கு நாம் கவனிக்க வேண்டியது: கட்சிக்குள் தேவையான சுதந்திரம் அண்ணாமலைக்குக் கிடைக்கவில்லை என்பதால் இந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெல்ல முடியவில்லை என்று ஆகாது.

 

தமிழகத்தில் அடுத்த சட்டசபைத் தேர்தல் வரும்போது – அநேகமாக 2031ல் தான் – களம் இப்படி இருக்கலாம். திமுக, எஞ்சிய அதிமுக, தவெக ஆகிய கட்சிகள் அமைக்கும் கூட்டணிகள் முக்கிய அணிகளாகவும், அடுத்து அண்ணாமலையின் கட்சியும், பாஜக-வும் அவற்றின் கூட்டணிகளுடன் போட்டியாளர்களாக இருக்கலாம். மேற்சொன்ன ஐந்து கட்சிகளில் சில, அந்தத் தேர்தலில் ஒரே கூட்டணியில் இருக்காது என்று இப்போது சொல்வதற்கில்லை. ஆனால், அண்ணாமலையின் கட்சி மற்றும் பாஜக தங்களுக்குள் அப்போது ஒரு சுமூகக் கூட்டணியை அமைக்கவில்லை என்றால், அண்ணாமலை பாஜக-வை எதிர்க்கிறார் என்று ஆகும். அதனால் அவர் மோடியையும் அமித் ஷாவையும் எதிர்க்கிறார் என்றும் ஆகும். என்ன ஆனாலும் அண்ணாமலையின் கட்சியும் பாஜக-வும் தமிழகத்தில் ஒன்றை ஒன்று எதிர்த்து அரசியல் செய்கின்றன, அவ்வாறு தேர்தலில் போட்டியிடுகின்றன, என்பது வருத்தமான காட்சி.

 

ஜூன் 5ல்  பேசிய அண்ணாமலை, "எப்படித் திமுக-வை, அண்ணா திமுக-வை, தவெக-வை, அண்ணன் சீமானை, அண்ணன் அன்புமணியை, பிரேமலதா அம்மாவை, ஐயா வைகோவை, ஜி.கே.வாசன் அவர்களை, பாரிவேந்தர் அவர்களை, ஏ.சி.சண்முகம் அவர்களை, ஜான் பாண்டியன் அவர்களை, எப்படி எல்லாத் தலைவர்களையும் பார்க்கிறோமோ, அப்படித்தான் நான் பாஜக-வையும் பார்ப்பேன். அந்தக் கட்சி மீது எனக்கு வன்மம் கிடையாது. அவர்களுடைய கொள்கையை அவர்கள் முன்னிறுத்துகிறார்கள். நமது இயக்கத்தின் கொள்கையை நாம் முன்னிறுத்துவோம். தரம் பார்த்து மக்கள் நம்மைத் தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடு நாம் மக்கள் முன் நிற்க வேண்டும்" என்று சொன்னார்.

 

பாஜக மீது வன்மம் கிடையாது என்று சொன்ன அண்ணாமலை, 'என்னைப் பொறுத்தவரை இனி பாஜக பத்தோடு பதினொன்று' என்றும் வெளிப்படுத்தி இருக்கிறார். உண்மையில், அண்ணாமலை குறிப்பிட்ட பல கட்சிகளின் தலைவர்களுக்கும் அரசியல் நன்னடத்தைக்கும், அவர்களுக்கும்  அரசியல் நேர்மைக்கும், அதிக தூரம் உண்டு. அந்தக் கட்சிகளையும் பாஜக-வையும் ஒரே மாதிரிப் பார்ப்பாரா அண்ணாமலை? அண்ணன் சீமான், ஐயா வைகோ மாதிரித்தான் அண்ணன் அமித் ஷா, ஐயா மோடியா?

 

'தேசத்திற்குப் பெரும் சேவை செய்த பாஜக-வை ஒரு வடநாட்டுக் கட்சி என்ற வகையில் அன்னியப்படுத்தி, தமிழ்நாட்டில் திமுக விஷ அரசியல் செய்கிறது, மக்களைத் திசை திருப்ப முனைகிறது. அதை எளிதில் முறியடிப்பதற்காக நான் பாஜக-விலிருந்து விலகி ஒரு தமிழனாக தனிக்கட்சி ஆரம்பிக்கிறேன், அந்தக் கட்சியின் மூலம் மக்களைக் கவர்ந்து திமுக எதிர்ப்பு ஓட்டுகளைப் பெற்று அக்கட்சியை நலிவுறச் செய்வேன்.  இதே ரீதியில், திமுக சாயலில் தென்படும் தவெக-வையும் நான் எதிர்க்க வேண்டி இருக்கும்.  இந்தப் பெரும் பணிக்காகத் தமிழகத் தேர்தல்களில் பாஜக-வுடன் தொகுதி ஒப்பந்தங்கள் செய்து கொள்வேன் - அதற்குத் தேவையான விரிவான கூட்டணியை அமைப்பேன், என் கட்சி வெல்லட்டும், பாஜக-வும் வெல்லட்டும், எங்களின் பிற கூட்டணிக் கட்சிகளும் பலன் பெறட்டும். முடிவில் நமது பெரிய இலக்கான திமுக, அதை ஒட்டிய தவெக, வரும் தேர்தல்களில் வீழட்டும்' என்ற கண்ணோட்டத்தில் அண்ணாமலை தொலைநோக்குத் திட்டம் அமைத்து அரசியல் செய்தால், அவர் பாஜக-விலிருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கியது ஒரு பெரு நன்மைக்காக இருக்கும். அதற்கு மாறாக, திமுக, அதிமுக, தவெக மாதிரி பாஜக-வையும் ஒரு போட்டிக் கட்சியாகக் கருதி அண்ணாமலையின் கட்சி பாஜக-வை விமர்சிக்கும், அண்ணாமலையின் புதிய கட்சியின் செயல்பாடும் அவ்விதம் இருக்கும் என்றால் அது நல்லதல்ல, வருத்தம் அளிப்பதாகும்.

 

உலகம் போற்றும் பிரதமர் மோடி பாஜக-விற்குக் கிடைத்தது ஒரு பேரதிர்ஷ்டம். அண்ணாமலை தமிழக பாஜக-விற்குக் கிடைத்ததும் ஒரு அதிர்ஷ்டம். ஆனால் அண்ணாமலை  பாஜக-வில் தங்காதது மட்டுமல்லபாஜக-வையும் பிற கட்சிகள் போல்தான் டீல் பண்ணுவேன் என்கிற அளவில் இப்போது பேசிவிட்டார் – இது பாஜக-வின் துரதிர்ஷ்டம்.

 

தமிழக பாஜக-விற்குப் பல திசைகளில் இருந்தும் துடிப்புள்ள அர்ப்பணிப்புள்ள இளம் தலைவர்கள் கிடைக்கட்டும், அவர்கள் மோடி, அமித் ஷா மாதிரி எதற்கும் அசையாமல், எதையும் சந்தித்து, கட்சியில் நிலைத்து சேவை புரியட்டும் என்று தமிழகத்தின் நன்மைக்காக நாம் நினைத்துக் கொள்ளலாம்.

 

இதுவல்லாமல், தமிழக நலனில் நல்லதாக நாம் வேறென்ன நினைக்க முடியும்? பாஜக இந்தியக் கலாசாரத்தை எப்படி உயர்த்திப் பிடித்து, இந்தியாவின் தோன்றுதொட்ட ஹிந்து மத அடையாளத்தைக் காப்பாற்றி, இந்திய அரசை அற்புதமாக வழிநடத்துகிறதோ, அதே மாதிரி தமிழகத்தைப் போற்றி, தமிழக அரசையும் வெகு சிறப்பாக நடத்தட்டும், அதற்கான வாய்ப்பு வரட்டும், அதற்குத் தேவையான மக்கள் தலைவர்களும் பாஜக-வில் தொடர்ந்து உருவாகட்டும், அவர்கள் அக்கட்சியில் நிலைக்கட்டும், என்று நாம் நினைப்பதா? அல்லது, அந்த நற்காரியங்களை, பாஜக-வின் மாநிலத் தலைவராக இருந்த ஒருவர் கட்சியை விட்டு வெளியேறிச் செய்து காட்ட முற்படட்டும், அகில இந்தியாவில் வலிமையான திறமையான தேசப் பற்றுள்ள பாஜக தமிழகத்தில் நலிவுற்று சப்பைக் கட்சியாக இருக்கட்டும் என்று நாம் நினைப்பதா?

 

* * * * *
Author: R. Veera Raghavan, Advocate, Chennai

 

 

Thursday, 4 June 2026

கேள்வி-பதில் (04.06.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

கேள்வி: அண்ணாமலை பாஜக-விலிருந்து விடுபட்டுத் தனியாக ஒரு இயக்கம், அல்லது புதிதாக ஒரு அரசியல் கட்சி, தொடங்கலாம் என்ற பேச்சு பரவலாக வெளிவந்தவுடன், அவருக்கான ஆதரவும் பொதுவெளியில், சமூக வலைத்தளங்களில், பெருகுகிறது. நாம் என்ன புரிந்து கொள்ளலாம்?

 

பதில்: 'அண்ணாமலையே ஒரு அரசியல் இயக்கம்; அது தமிழகத்தில் வளர வேண்டும்; அதன் தொடர்ச்சியாக, தறிகெட்டிருக்கும் தமிழக அரசியல் நேராக வேண்டும்' என்று விரும்புவோர் பலர் உண்டு. இப்போதைக்குப் பாஜக-வை விட்டு அண்ணாமலை தனியாக ஒரு இயக்கத்தை வழிநடத்தினால், பாஜக-வின் கட்டாயங்களும் கட்டுப்பாடுகளும் இல்லாமல் அவர் மேலும் சுதந்திரமாகச் செயல்பட முடியும், மேலும் சிறப்பான அதிரடியான தாக்கத்தைத் தமிழக அரசியலில் ஏற்படுத்த முடியும் என்று அண்ணாமலை நினைக்கலாம், அவரது ஆதரவாளர்கள் பலருக்கும் அதே எண்ணம் இருக்கலாம். ஆகையால் அண்ணாமலை என்ற தலைவருக்குத் தனியாக ஆதரவு அதிகரிக்கிறது - அல்லது பெரிதும் வெளிப்படுகிறது. இதற்கு ஒரு அடிப்படைக் காரணம், அண்ணாமலை ஒரு அசாதாரண கிரியேட்டிவ் அரசியல் சக்தி, தனித்துவம் மிக்க மக்கள் தலைவர்.

 

சுதந்திரப் போராட்ட காலத்தில், நாடுழுவதும் சுதந்திர உணர்வை ஊக்குவித்து, ஒருங்கிணைத்து, அதை ஆங்கில ஆட்சியாளர்களுக்கு எதிராக வலுவாக இயங்க வைத்தவர் மஹாத்மா காந்தி. அது மாதிரி, 1967-லிருந்து தமிழ்நாட்டு அரசியலில் பெருகி வளர்ந்திருக்கும் ஊழல் மற்றும் நாசகார அரசியல் சக்திகளுக்கு எதிராக மக்கள் சக்தியைத் திரட்டி, வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலம் அந்த அரசியல் சக்திகளை வலுவிழக்கச் செய்யும் உன்னதப் பணியை அண்ணாமலை நினைத்துப் பார்க்கிறார். அவரைப் போன்ற ஒரு மாமனிதரின் தலைமை இல்லாமல் அந்தப் பணிக்குச் சரியான தொடக்கமும் ஏற்றமும் கிடைக்காது என்று அவரது ஆதரவாளர்கள் நினைக்கிறார்கள். ஆகையால் அத்தகைய அண்ணாமலையின் பணிக்கு, அது தொடங்குவதற்கு முன்பே ஆதரவு கூடி எழுகிறது.

 

அந்நிய ஆட்சியாளர்களை எதிர்த்து நமது தலைவர்கள் மேற்கொண்ட போராட்டத்தை விட, சுதந்திர இந்தியாவில் அரசாங்கங்களை நடத்திய, நடத்துகின்ற, பல அரசியல் சக்திகளை எதிர்ப்பதும், அவற்றை அடக்கி வைப்பதும், தேர்தலில் வெல்வதும் கடினம். அந்நியர்கள் என்பதால் வெள்ளைக்கார ஆட்சியாளர்களை இந்திய மக்களின் எதிரிகள் என்று அடையாளப்படுத்துவதில் நமது தலைவர்களுக்குச் சிக்கல் இல்லை. ஆனால் சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டில் ஆட்சி செய்த, செய்கின்ற, பல அரசியல் தலைவர்கள் - நம் மக்கள் மத்தியிலிருந்தே எழுந்த இந்திய அரசியல் தலைவர்கள் - திட்டமிட்டு மக்களைச் சுரண்டிப் பிழைக்கும்போது, அந்தத் தலைவர்கள் நாட்டின் நாசகாரச் சக்திகள் என்று நமது எளிய மக்களுக்கு யாரும் அடையாளப் படுத்துவது எளிதல்ல. ஆகையால் அத்தகைய அரசியல் சக்திகள் வளர்ந்தன, பெருகின, கொழுத்தன. இப்போது அண்ணாமலை தனது பேச்சினால், அத்தகைய நாசகார அரசியல் சக்திகளை மக்களுக்குப் பொதுவெளியில் அடையாளப் படுத்தலாம் - அதற்கான வாய்ப்பு அதிகம். இதை அண்ணாமலை ஷார்ப்பாக உணர்ந்திருப்பார், அவரது ஆதரவாளர்களும் அப்படியே நினைக்கலாம்.

 

இன்னொன்று. தமிழ்நாட்டின் அரசியல் களத்திற்கு ஒரு தனித்துவம் உண்டு. ஆரியம்-திராவிடம், வடக்கு-தெற்கு, பிற்பாடு ஒன்றிய அரசு - திராவிட மாடல் அரசு என்றெல்லாம் பேசிப் பேசி பாஜக வடநாட்டுக் கட்சி, அது தமிழக மண்ணுக்கு  ஒவ்வாத கட்சி, தமிழர்களுக்கு எதிரான கட்சி, என்பது மாதிரியான ஒரு எண்ணத்தைத் தமிழக மக்கள் பலரின் மனதில் விதைத்து விட்டது திமுக. அவ்வாறு அப்பட்டமாகப் பேசாமல், ஆனால் அத்தகைய மக்கள் நினைப்பால் பயனடைய விரும்பும் கட்சிகள் தான் அதிமுக மற்றும் தவெக. சென்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் சேர்ந்திருந்த பல கட்சிகளின் எண்ணமும் அதுதான்.

 

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணி வைக்காவிட்டால், திமுக தன்னை நசுக்கிவிடும், அந்த ஆபத்தைத் தவிர்க்கவேண்டும், என்று எண்ணிய அதிமுக, அப்போது பாஜக-வுடன் கூட்டணி அமைத்தது. மற்றபடி அதிமுக-வும் அதே திமுக-தான் - வலுவற்ற, வாய்ப்புகள் குறைந்த திமுக.

 

இந்தக் காரணங்களுக்காக அண்ணாமலை பாஜக-வின் பிரதிநிதியாக இல்லாமல், தனியாக ஒரு அரசியல் இயக்கம் நடத்தி திராவிட சிந்தனைப் போக்கு உள்ள கட்சிகளை எதிர்த்தால், தமிழகத்தில் அவருக்கு ஒரு அனுகூலம் உண்டு. அப்போது, அண்ணாமலை தமிழர்களுக்கு எதிரான ஒரு வடநாட்டுக் கட்சியின் பிரதிநிதி, ஆகையால் அவரும் தமிழர்களின் விரோதி, என்று அவருக்கு எதிராகத் தமிழ்நாட்டில் யாரும் அரசியல் பிரசாரம் செய்யமுடியாது -  ஈ.வெ.ரா-வை விமர்சித்ததற்காகச் சீமானை யாரும் எதிர்க்க முடியாமல் போன மாதிரி. ஆகையால் தனிக்கட்சி அண்ணாமலைக்குத் திராவிடத் தமிழகத்தில் சக்தி அதிகரிக்கலாம்.

 

தனிக் கட்சியாக அண்ணாமலை பயணம் செய்தால், பெரிய எதிரியை முதலில் வீழ்த்துவதற்காகச் சிறிய எதிரிகளுடன் அவர் முதலில் தேர்தல் கூட்டணி வைக்கலாம். அத்துடன், பாஜக-வுடனும் அவர் ஒரு புரிதல் வைத்திருப்பார். பிறந்த நாள் வாழ்த்துப் பெறுவதற்காக மட்டும் அவர் இன்று டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்திருக்க மாட்டார். கூட்டணி விஷயங்கள் அண்ணாமலையின் தனிப் பயணத்திற்கு இப்போது அவசரமல்ல. இவற்றில் தெளிவு பின்னர் வரும்.

 

அரசியல் களத்தில் அண்ணாமலை தனக்கு ஒரு மிகப் பெரிய மாற்றத்தை எதிர் நோக்குகிறார். தமிழக அரசியலும் மெள்ள மெள்ள அதன் பலனைக் கண்டால் நல்லது. இந்த மாநிலத்திற்கு வேறு நம்பிக்கை தான் ஏது?

 

பகுதி 101 // 04.06.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

Tuesday, 2 June 2026

கேள்வி-பதில் (02.06.2026)

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: தேமுதிக-வின் பொதுச் செயலர் பிரேமலதா, "நான் நினைத்திருந்தால் விஜய்யே வீடு தேடி வந்து எனக்குத் துணை முதலமைச்சர் பதவி கொடுத்திருப்பார். ஆனால் இதற்கெல்லாம் ஆசைப்படும் கட்சியல்ல தேமுதிக" என்று பேசி இருக்கிறார். அவர் பேசியது சரியா?

 

பதில்: பிரேமலதா சிறிது இவ்வாறு மாற்றிப் பேசி இருந்தால் அது சரியாக இருக்கும். "விஜய் நினைத்திருந்தால் அவரே வீடு தேடி வந்து எனக்குத் துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார். ஆனால் இப்படியெல்லாம் கருணை காட்டும் கட்சியல்ல தவெக"

 

 

2. கேள்வி: "தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை நடத்திக் காட்டுவதுதான் முதல்வர் விஜய்யின் லட்சியப் பயணமாக உள்ளது" என்று அமைச்சர் செங்கோட்டையன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறாரே?

 

பதில்: எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் அமைச்சர்கள், ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மட்டத்தில் ஊழல் நடந்தால் அதற்கு நிரூபணம் கிடைப்பது அரிது. கமுக்கமாக நடைபெறும் அத்தகைய ஊழல்கள் பற்றி, அனுபவம் மிக்க அரசியல் பார்வையாளர்கள் அறிய முடியும். அவர்களுக்கு, இந்த விஷயத்தில் விஜய் அரசு பற்றி போகப் போகத் தெரியவரும் - ஊழல் நடக்கிறதா இல்லையா என்று. நாம் பொறுத்திருந்து உண்மை எது எனப் புரிந்து கொள்ளலாம். அமைச்சர்களின் அவசர நன்னடத்தைப் பிரகடனங்கள் மட்டும் நமக்கு உதவாது.

 

 

3. கேள்வி: திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கச் சென்ற முதல்வர் விஜய்யின் பேச்சு எப்படி இருந்தது?

 

பதில்: மு.க. ஸ்டாலினை இன்னமும் வில்லனாகப் பாவித்து வசனங்கள் பேசினார். சினிமாச் சிரிப்புகள் உதிர்த்தார். நடுவில் சில அழுத்தமான பேச்சும் உண்டு.

 

இனி எதிர்க் கட்சிகளுக்குத்தான் ஆட்சி குறித்த மேடைப் பேச்சுகள் மற்றும் விமர்சனங்கள் முக்கியம். விஜய்க்கு, பேச்சைவிட அரசின் செயல்பாடுதான் கணக்கு. அதில்தான் அவர் அதிக மார்க்குகள் பெற வேண்டும், அதைத்தான் நாம் அதிகம் கவனிக்க வேண்டும்.

 

 

4. கேள்வி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொகிதீன், "அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நான்கு பேர் தமது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தவெக-வில் இணைகின்றனர். இது குதிரைப் பேரம் இல்லை" என்று கூறி இருக்கிறாரே?

 

பதில்: திமுக கூட்டணியில் இணைந்து சட்டசபைத் தேர்தலில் தவெக-வைத் தீவிரமாக எதிர்த்த கட்சி, முஸ்லிம் லீக். அந்தத் தவெக, மெஜாரிட்டிக்குச் சற்றுக் குறைவான எண்ணிக்கையில் வென்றபோது காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மாதிரி, முஸ்லிம் லீக் கட்சியும் தனது இரண்டு எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைத் தவெக-வுக்கு, அது ஆட்சி அமைப்பதற்கு, அளித்தது.  அந்த இருவரில் ஒருவர் விஜய் அமைச்சரவையில் அங்கம். மற்றபடி குதிரைப் பேரத்தில் எந்த எந்தக் கட்சி எம்.எல்.ஏ-க்கள் அடக்கம், இன்னும் எந்த எந்த எம்.எல்.ஏ-க்கள் ஆர்வத்துடன் வெயிட்டிங் என்பது நமக்குத் தெரியாது.

 

நமக்குத் தெரிந்தது இது: ஒரு குதிரைக் குழுவின் குதிரைகளுக்கு, அவற்றின் நிர்வாகிகளுக்கு, அக்குழுவின் எல்லாக் குதிரைகளின் வண்டவாளமும் தெரியும். ஆனால் அக்குழுவின் எந்தக் குதிரையும், எந்த நிர்வாகியும், குழுவின் எந்தக் குதிரையையும் காட்டிக் கொடுக்காமல் பேசுவது வழக்கம். காதர் மொகிதீன் இப்போது ஏதோ பேசுகிறார்.

 


5. கேள்வி: அதிமுக பெற்று வந்த எம்.ஜி.ஆர் ஓட்டுகள் விஜய்க்கு மாற வாய்ப்புண்டா? வாய்ப்பு உண்டென்றால், தமிழகத்தில் அண்ணாமலையின் எதிர்காலம் என்ன?

 

பதில்: எம்.ஜி.ஆர் ஓட்டுகள் என்பவை, அவர் நடித்த திரைப்படங்களின் தாக்கத்தால் அவரது விசிறிகளும் அபிமானிகளும் அவருக்கு - அவர் கட்சியான அதிமுக-வுக்கு -  அளித்தவை. கருணாநிதியை எதிர்த்தவர்களின் ஓட்டுகளும் அங்கு பெருமளவு சேர்ந்தன. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் பிரதிநிதியாகப் பார்க்கப்பட்டு எம்.ஜி.ஆர் ஓட்டுகள் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக-வுக்குக் கிடைத்தன. ஜெயலலிதா மறைந்த பின், எம்.ஜி.ஆரின் பிரதிநிதி என்று யாரும் கிடையாது. இருந்தாலும், எம்.ஜி.ஆர் ஓட்டுகள் பெரிதும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்குக் கிடைத்து வருகின்றன.

 

விஜய் நடித்த திரைப்படங்களின் ஈர்ப்பால், அவருடைய விசிறிகளும் அபிமானிகளும் அவர் கட்சியான தவெக-வுக்கு ஓட்டளிக்கின்றனர். எம்.ஜி.ஆர் ஓட்டு வைத்திருப்பவர்களில் பலர் தற்போது விஜய்யால் ஈர்க்கப்பட்டுத் தங்களின் வாக்குகளை சிறிது சிறிதாக விஜய்க்கு மாற்றி அவர் கட்சிக்குப் போடலாம். இது தமிழ்நாடு, இது சாத்தியம்.

 

அண்ணாமலையின் அரசியல் ஈர்ப்பு என்பது, சினிமாவின் பொய்த்தன்மை மற்றும் கவர்ச்சியில் தொடங்கவில்லை. மனசாட்சி வழிநடத்த,  மக்கள் நலம் சார்ந்த, தேசப்பற்றும் மதியூகமும் நிறைந்த கடுமையான அரசியல் பணியை அவர் செய்துவருகிறார். அது எம்.ஜி.ஆர் மற்றும் விஜய் வழி அல்ல. தமிழகத்தில் பெரிதாகக் கால் ஊன்றாத பாஜக-வில் சேர்ந்து, இளம் வயதில் அவர் தனக்கென்று சேர்த்திருக்கும் மக்கள் சக்தி - தற்போது அது மிகப் பெரிதில்லை என்றாலும் - நினைத்துப் பார்க்க முடியாதது, வியக்கத் தக்கது.

 

எம்.ஜி.ஆர் பாணியில், சினிமாவில் உயர்ந்து அதன் தொடர்ச்சியாக விஜய் அரசியலில் மேலும் வளரலாம் - அத்தகைய மேல் வளர்ச்சி சற்று எளிது. தனக்கென்று ஒரு பாணியை வைத்திருக்கும் அண்ணாமலை, அரசியலில் மேலும் மேலும் வளர்ந்து தனக்கான மக்கள் சக்தியைப் பெருக்கலாம் - அத்தகைய மேல் வளர்ச்சி மிகக் கடினம். ஆனால் அண்ணாமலை அதை உணர்ந்து மனதளவில் அதற்குத் தயாரானவர் போல் தெரிகிறது. தேசநலனில் நாம் அவரை வாழ்த்தி, மற்றதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


பகுதி 100 // 02.06.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr