Saturday, 9 May 2026

கேள்வி-பதில் (09.05.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "ஸ்டாலின் எப்படியாப் பட்ட தலைவர்! அவரே வெற்றி வாய்ப்பை இழக்குமாறு மக்கள் ஓட்டுப் போட்டிருக்கிறார்களே! என்று சொல்லி மனதில் கஷ்டப் பட்டார் எங்கள் தலைவர் எடப்பாடி பழனிசாமி" என்று, சட்டசபைத் தேர்தலில் திமுக தலைவர் தோற்றது பற்றி அதிமுக தலைவர் சி. வி. சண்முகம் பேசியிருக்கிறாரே?

 

பதில்: எங்கு உட்காரப் போகிறோம் என்பது சிலருக்கு நிச்சயம் இல்லை என்றால், பார்க்கிற ஒன்றிரண்டு காலி இடங்களில் அவர்கள் டக்கென்று துண்டைப் போட்டு வைப்பார்கள். சி. வி. சண்முகம் அதைச் செய்திருக்கிறார்.

 

ஆட்சி அமைப்பதற்கான கூட்டணி யாருக்கு எப்படி வாய்க்கும், தங்கள் கட்சிக்கு அதில் சான்ஸ் உண்டா, என்பதில் தெளிவு வந்தவுடன் - சான்ஸ் இல்லை என்று தெரிந்தவுடன் - முன்பு எச்சரிக்கையாகத் துண்டைப் போட்ட மனிதர் அதை  அமைதியாகத் திரும்ப எடுத்துக் கொள்வார். 

 

 

2. கேள்வி: சட்டசபைத் தேர்தலுக்குப் பின்பாக திமுக-வும் அதிமுக-வும் தங்களுக்குள் ஒரு புதிய கூட்டணி அமைத்து, தேர்தலுக்கு முன்னர் அந்த இரு கட்சிகளும் தனித் தனியாக அமைத்த கூட்டணிகளில் அங்கம் வகித்த கட்சிகளையும் அந்தப் புதிய கூட்டணியில் சேர்த்து தமிழகத்தில் ஆட்சிக்கு வருவதில் அந்த இரு கட்சிகளுக்குள் என்ன பிரச்சனை - திமுக-வை எட்டி உதைத்துத் தவெக பக்கம் போன காங்கிரஸ் கட்சி, ஒரு தொகுதி வென்ற பாஜக அந்தப் புதிய கூட்டணியில் சேரவில்லை என்றாலும்?

 

பதில்: திமுக அல்லது அதிமுக மட்டும் தனியாக ஆட்சி செய்தால், சில விஷயங்களைக் காதும் காதும் வைத்த மாதிரி கமுக்கமாகக் கவனித்துக் கொள்ள முடியும். பிற கட்சிகளை ஆட்சியில் சேர்த்தால் எதுவும் எப்போதும் அம்பலம் ஆகலாம். இதுபோக, ஆட்சியில் பங்குபெறும் கட்சிகளுக்கு வேண்டியது கிடைக்கவில்லை என்றால் அவை எப்போது வேண்டுமானாலும் ஒரு மெல்லிய மெஜாரிட்டி ஆட்சியைக் கவிழ்க்கலாம். சீக்கிரம் அடுத்த தேர்தல் வரலாம். அதில் விஜய் தனி மெஜாரிட்டி எட்டலாம். ஆகையால் இப்போதைக்கு அசிரத்தை பாவனையில் வேடிக்கை பார்ப்பது நல்லது என்று திமுக-வும் அதிமுக-வும் நினைக்கலாம்.

 

 

3. கேள்வி: சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின்போது 'தீய சக்தி' என்று விஜய் இகழ்ந்த திமுக-வின் சில முக்கிய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைத்தான், ஆட்சி அமைக்கும் மெஜாரிட்டிக்காக விஜய் இப்போது சலிக்காமல் நாடுகிறார். அந்த சில கட்சிகள்தான், இப்போது விஜய் ஆட்சி அமைப்பதை விரும்புகின்றன, அவர் ஆட்சி அமைக்க ஆதரவு தர முன்வருகின்றன. இந்த முரண்பாடு, திமுக கூட்டணியில் அங்கம் வகித்த அந்தச் சில கட்சிகளை உறுத்தாதா?

 

பதில்: விஜய் கட்சி இப்போது ஆட்சி அமைக்க முடியாமல், திமுக மற்றும் அதிமுக-வும் ஒரு ஸ்திரமான கூட்டணி ஆட்சியைத் தர முடியாமல், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வந்து அடுத்த தேர்தலும் சீக்கிரம் வந்தால், தற்போதுள்ள திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களில் - அதைப் போல் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களில் - யாருக்கு சீட் கிடைக்குமோ, கிடைத்தாலும் மறு தேர்தலில் அவர்கள் விஜய் கட்சி வேட்பாளரை எதிர்த்து வெல்ல முடியுமா என்பதில் நிச்சயம் இல்லை. அத்தகைய மறு தேர்தலின் போது, அதிமுக அமைக்கும்  கூட்டணியில் பாஜக சேராது, சீமானும் யாருடனாவது கூட்டணி சேருவார், என்றால் அந்தத் தேர்தல் முடிவு எப்படி அமையுமோ? தற்போது ஒரே ஒரு எம்.எல்.ஏ வைத்திருக்கும் பாஜக-வுக்கு மட்டும் இந்தப் பெரிய கவலைகள் இருக்காது.

 

இவ்வளவு இருக்கும்போது, முரண்பாடாவது முருங்கைக் காயாவது!

 

 

4. கேள்வி: தமிழகத்தில் ஆட்சி அமைக்க மெஜாரிட்டி தேடி, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விசிக, ஆகிய கட்சி அலுவலகங்களுக்கு விஜய்யும் அவர் கட்சித் தலைவர்களும் மாறி மாறிக் கும்பிடு போட்டபடி சென்று வருகிறார்கள். விஜய்யின் நிலை என்ன, அவருடைய முயற்சிகளின் வெற்றி நிலையாக இருக்குமா?

 

பதில்: ஆட்சி அமைவதற்கு முன்பே, ஆளும் கூட்டணி அமைவதற்காக விஜய் சில கட்சித் தலைவர்களை நோக்கிக் கும்பிட்ட கையும் சிரித்த முகமும் அணைக்கும் கரங்களாகக் காட்சி தந்தபடி இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. ஆட்சி அமைத்தபின் அவர்களில் எந்தத் தலைவர் எந்தக் கையை முறுக்குவாரோ, எந்த விலாவில் உதைப்பாரோ, எந்தக் காலை வாருவாரோ, என்ன தெரியும்?  சிந்தனையில் தெளிவும், ஆட்சியில் நேர்மையும், சீரிய தலைமைப் பண்பும் இருந்தால்தான் - அதாவது, மோடி மாதிரி - சொந்தக் கட்சியினரின் அத்துமீறல்களையும், கூட்டணிக் கட்சிகளின் சில்மிஷங்களையும், விஜய் கட்டுப்பாட்டில் வைத்து சமாளிக்க முடியும். விஜய் அப்படியானவராகத் தோன்றவில்லை.

 

விஜய் ஆட்சி அமைத்தால் அரசு நிர்வாகத்திற்கு என்ன பயன், மக்களுக்கு என்ன பயன், என்பது பற்றித் தெளிவான அறிகுறி ஏதுமில்லை. நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

 

 

5. கேள்வி: மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் கட்சியைப் பாஜக தீர்க்கமாக வென்றிருக்கிறது. இதில் பாஜக-வுக்கு என்ன செய்தி இருக்கிறது?

 

பதில்: நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில், விஜய் கட்சியின் தாக்கத்தால் ஜாம்பவான் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக-வுக்குப் பெரிய சரிவு ஏற்பட்ட மாதிரி, பாஜக-வுக்கும் ஏற்பட்டிருக்கிறது. தேச நலன், மக்கள் நலன், இரண்டையும் முன்வைத்து சாமர்த்தியமாக அரசியல் செய்ய முடிகிற பாஜக, சரியான மாநிலத் தலைமையின் கீழ் தமிழகத்திலும் பெரிய உயரத்தை எட்டும். எந்தப் பெரிய வெற்றிக்கும் நம்பிக்கை பெரிய அடித்தளம். இவை பாஜக-வுக்கான முக்கியச் செய்தி என்று பாஜக எடுத்துக் கொள்ளலாம்.

 

பகுதி 88 // 09.05.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

Wednesday, 6 May 2026

பாஜக-வின் அண்ணாமலை. தவெக-வின் விஜய். யார் எப்படி?


-- ஆர். வி. ஆர்

 

 

தமிழக அரசியல் உலகில் பெரிய சாதனை செய்திருக்கிறார் நடிகர் விஜய்.

 

கட்சி ஆரம்பித்த இரண்டு வருடங்களில், 2026 சட்டசபைத் தேர்தலில் கூட்டணி இல்லாமல் போட்டியிட்டு, இரண்டு ஜாம்பவான் கட்சிகளான திமுக-வையும் அதிமுக-வையும் மண்ணைக் கவ்வ வைத்திருக்கிறார் விஜய். அவற்றில் ஒன்றை, அதாவது திமுக-வை, பாஜக-வின் அண்ணாமலையும் ஐந்தாண்டுகள் மேலாகக் கடுமையாக எதிர்த்து வந்தார், அதன் காரணமாக அவர் பரவலாகப் பல வாக்காளர்களைத் தன் பக்கம் திரும்ப வைத்திருந்தார். ஆனால் திமுக, அதிமுக, அவற்றோடு சேர்ந்த கூட்டணிக் கட்சிகள், அனைத்தையும் ஒருசேர இந்தத் தேர்தலில் வென்று வீழ்த்தியது விஜய்யின் தவெக.

 

அண்ணாமலை அதிமுக-வையும், குறிப்பாக அதன் தலைவர் எடப்பாடி பழனிசாமியை, முன்னர் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். பின்னர், ஆளும் திமுக-வை இந்தத் தேர்தலில் வீழ்த்துவதற்காக அதிமுக-வுடன் பாஜக கூட்டணி அமைத்தவுடன், அண்ணாமலை அதிமுக-வை விமர்சிக்கவில்லை.

 

திமுக மற்றும் அதிமுக-வைத் தேர்தலில் வென்று காட்டிய தனிப் பெருமை விஜய்க்கு உண்டு என்பதால் விஷயம் இதோடு முடிகிறதா? இனி அண்ணாமலையும் விஜய்க்கு சல்யூட் அடித்து ஒதுங்கி நிற்க வேண்டுமா? இல்லை, இல்லவே இல்லை.


திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று காலத்தால் அழியாத விமர்சனத்தை வைத்தவர் காமராஜ். அந்த இரண்டு கட்சிகளையும் ஒருசேரத் தேர்தலில் வீழ்த்தியுள்ள விஜய் தற்காலத்தின் காமராஜரா? இல்லை என்றால் ஏன் இல்லை?


அண்ணாமலை எதிர்த்த திமுக-வைத் தான் விஜய் ‘தீய சக்தி’ என்று மேடைக்கு மேடை பேசினார். விஜய் அதிமுக-வைக் குறிப்பாக விமர்சனம் செய்யவில்லை. காரணம், விஜய் அரசியலுக்கு வந்தபோது ஆட்சியில் இருந்தது திமுக. அந்தத்  திமுக-வை ஆட்சியிலிருந்து அகற்றினால்தான் விஜய்யின் குறியான முதல் அமைச்சர் பதவி அவர் கைக்கு வரும். ஆகையால் அவர் திமுக-வைத்தான் எதிர்க்க வேண்டும், அதை அவர் செய்தார்.


விஜய் அரசியலுக்கு வந்தபோது அதிமுக ஆட்சியில் இருந்தால், அதிமுக ஒரு தீய சக்தி என்று அவர் மேடையில் பேசியிருப்பார். அப்போது அவருடைய குறி அதிமுக-வை ஆட்சியிலிருந்து விரட்டிவிட்டு, அவர் முதல்வர் பதவிக்கு வரவேண்டும் என்று இருந்திருக்கும்.


காமராஜ் மாதிரித் திமுக, அதிமுக இரண்டுமே தீய சக்திகள் என்று உணர்ந்து, மலிவு அரசியலையும் ஊழலையும் அரசியல் காவாலித் தனத்தையும் உறுதியாக எதிர்க்கின்ற, அந்த எதிர்ப்பைத் தன் கட்சிக்குள் எல்லா மட்டத்திலும் செயல்படுத்துகின்ற, உன்னதத் தலைவராக விஜய் தெரியவில்லை. தனது முதலமைச்சர் பதவி ஆசைக்காக, கெட்டிக்கார அரசியல்வாதி விஜய் இரண்டு கழகங்களையும் தேர்தலில் வீழ்த்தி இருக்கிறார். இப்போது அவரைப் பற்றி இவ்வளவுதான் சொல்லமுடியும்.


அண்ணாமலை திமுக-வை எதிர்த்தது, அதற்கான காரண காரியங்களை ஊர் ஊராகச் சென்று விளக்கியது, ஊழல் சக்தி ஒழிக்கப் படவேண்டும் என்ற நோக்கத்திற்காக – அவர்  முதல் அமைச்சராக வரவேண்டும் என்பதற்காக அல்ல. ஆனால் அண்ணாமலைக்கு, விஜய்யின் சினிமா பிரபல்யம் கிடையாது என்பதால் அண்ணாமலையின் பேச்சு மக்களை மெள்ள மெள்ளத்தான் சென்றடையும் – அதிலும் சினிமா எட்டமுடிகிற வீச்சு அவருக்குக் கிடைக்காது.


என்ன இருந்தாலும் அண்ணாமலை பேசியதை நீங்களும் நானும் மக்களிடம் பேசினால் ஒன்றும் நடக்காது, பாஜக-வில் மற்றவர்கள் பேசினாலும் ஏதும் நிகழாது, அண்ணாமலை பேசினால் நிகழ்கிறது. அதற்குக் காரணம்: அண்ணாமலையிடம் உள்ள உண்மைத்தன்மையும் நம்பகத்தன்மையும் பொதுமக்கள் மனதில் ஊடுருவுகிறது. அது அவருக்கு இருக்கும் அசாதாரண சக்தி. அதை வாக்கியங்களில் முழுவதுமாக விளக்க முடியாது.


ஆறு வருடங்கள் முன்பு அண்ணாமலையின் வயது 36. அப்போது, கர்நாடகாவில் ஐ.பி.எஸ் வேலையை விட்டுவிட்டு பாஜக-வில் சேர்ந்து தமிழக அரசியலுக்கு அவர் வந்தார்.  அதற்கு முன் அவர் யாரென்று தமிழக மக்களுக்குத் தெரியாது.  விஜய் சுமார் 32 வருடங்கள் தமிழ்ப் படங்களில் கதாநாயகனாக நடித்து மாஸ் ஹீரோவாக நன்கு அறியப்பட்ட நிலையில், இரண்டு வருடங்கள் முன்னர் கட்சி ஆரம்பித்து அரசியலில் நுழைந்தவர். அண்ணாமலையை விட, விஜய் பத்து வருடங்கள் மூத்தவர்.


திரைக் காட்சிகளில் ஒரு கதாநாயகன் கெட்டவர்களைப் புரட்டி எடுப்பதும், போட்டுத் தள்ளுவதும், கதாநாயகியுடன் நடனம் செய்வதும், விதவிதமாகக் கேளிக்கை காண்பிப்பதும் – அதுவும் எடுப்பான முகவெட்டுள்ள ஒரு ஹீரோ அவற்றைச் செய்வது – சாதாரண மக்களைச் சட்டென்று ஈர்க்கும், அவர்களைக் கனவு காண வைக்கும், அந்தக் கதாநாயகன் மீது அவர்களுக்குத் தணியாத பற்றை ஏற்படுத்தும். பல வருடங்கள் அப்படி ஒரு திரைக் கதாநாயகனாக இருந்த விஜய் அரசியலுக்கு வரும்போது சாதாரண மக்களிடம் அவருக்குள்ள சினிமா ஈர்ப்பு அவர் கூடவே வரும். அந்த மக்களின் ஓட்டுகள் அவருக்கு எளிதாகக் கிடைக்கும் – அவர் அரசியலில் யாரை எதிர்த்தாலும், யாரை ஆதரித்தாலும். இந்தத் தேர்தல் நேரத்தில், திமுக போகவேண்டும் என்றும் நிறைய மக்கள் நினைத்தார்கள்; அவர்களுக்கு மாஸ் ஹீரோ விஜய் ஒரு வடிகாலாக அமைந்தார். எல்லாம் இப்படிச் சேர்ந்து, இந்தத் தேர்தலில் தனக்கான ஆதரவு வாக்குகளை விஜய் பாதிக்கு மேல் எளிதாகப் பெற்று விட்டார்.


விஜய்க்குக் கிடைத்திருக்கும் வாக்குகள் அவருடைய சீரிய அரசியல் கேரக்டருக்காக, அவரது தேச நலன் மற்றும் மக்கள் நலன் தொடர்பான முனைப்பிற்காக, அவரைத் தேடி வந்த வாக்குகள் அல்ல. அவை பெரும்பாலும் அவருடைய சினிமா ஈர்ப்பின் பேரில் வந்து சேர்ந்தவை. அப்பாவி மக்கள் நிறைந்த நமது நாட்டில் இது சகஜம். அத்தகைய மக்களுக்கு நல்ல கல்வியைக் கொடுத்து, வேலை வாய்ப்பையும் வருமானத்தையும் கொடுத்து, வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்தி, அவர்களை முன்னேற்றி விடவும் ஒரு அரசியல் தலைவர் இயங்க வேண்டும். விஜய் அப்படியான தலைவராக இருப்பதற்கு லேசான அறிகுறியையும் வெளிப்படுத்தவில்லை. போதாததற்கு, இது இந்தியா என்பதை மறந்து, நல்ல தனிமனித ஒழுக்கத்தையும் அவர் காண்பிக்கவில்லை.


இதுவரை விஜய் மேடையில் பேசிய பேச்சுகள் அநேகமாகத் திமுக-வை எதிர்த்துப் பேசியவை. அவை அனைத்தும் சினிமா டயலாக் ரகம். ஆழமும் அகலமும் இல்லாத டப்பு டுப்பு பேச்சுகள். அவருக்குள்ள சினிமா ஈர்ப்பினால் அந்த டயலாக் பேச்சுகளைக் கேட்க சாதாரண மக்கள் விரும்பினார்கள்.


சினிமா ஈர்ப்பு என்ற கவசம்தான் இன்றைய தேதியில் விஜய்யின் பிரதான அரசியல் சொத்து, அரசியல் பாதுகாப்பு. அந்தக் கவசத்தை அணிந்துகொண்டு, நமது மாநில அரசாங்கத்தை வழி நடத்தப் போகிறவராக, அவர் செய்யவேண்டியதைச் செய்யாமல், செய்யக் கூடாதவற்றைச் செய்து, அந்தக் கவசத்தின் பாதுகாப்பில் தப்பிக்க நினைப்பாரா? அந்த வகையில் அவர் கண்காணிக்கப் படவேண்டியவர்.


அண்ணாமலையைப் பொறுத்தவரை, திமுக ஏன் தீதான அரசியல் சக்தி என்பதை அவர் மக்களுக்கு விளக்கிச் சொன்னார். பொத்தாம் பொதுவாகப் பேசாமல் புள்ளிவிவரங்களுடன் பேசினார். அவருடைய கூரிய அரசியல் பார்வை, தேசாபிமானம், பொது அறிவு, மக்கள் நலன் சார்ந்த எண்ணங்கள், வெளிப்படைத்தன்மை, பொதுவாழ்வில் நம்பகத் தன்மை, ஆகியவை மட்டும்தான் அவருடைய அரசியல் சொத்து. இந்த குணாதிசயங்களுடன் இவரைப் போன்ற ஒரு இளம் அரசியல் தலைவர் உலகில் எங்கும் காணக் கிடைப்பது மிக அரிது. 


விஜய்யைப் பொறுத்தவரை, அவர்தான் கட்சி. அவர் எடுக்கும் முடிவுகளுக்கு அவர் கட்சியில் யாருடைய ஒப்புதலும் அவசியமில்லை, கட்சிக்குள் அனைவரும் அவருக்குத் துணை நின்றாக வேண்டும். பாஜக-வில் இருக்கும் அண்ணாமலை அப்படி அல்ல. அண்ணாமலையின் அரசியல் பணியும் செயல்பாடுகளும் தடையற்றவை அல்ல. அடுத்த சில வருடங்கள் பாஜக-வின் மத்தியத் தலைமையும் அவருக்குத் தொடர்ந்து துணை நிற்பது தமிழக நலனுக்கு அவசியம்.


அண்ணாமலையின் அரசியல் பயணம் – குறிப்பாக திமுக-வைத் தீவிரமாக எதிர்த்து அவர் பிரசாரம் செய்தது – தனது  கை கால்கள் பலத்தில் மனத் துணிவோடு அவர் செய்த கடுமையான மலையேறும் முயற்சியைப் போன்றது.  அந்த நேரத்தில், சினிமா ஈர்ப்பு என்ற ஹெலிகாப்டரில் பறந்து அந்த மலை உச்சியில் இறங்கிப் புன்முறுவலுடன் கையசைப்பவர் விஜய். பெருவாரியான மக்களுக்குத் தற்போது இந்த இரண்டு முயற்சிகளின் வேறுபாடு தெரியாமல் இருக்கும். ஆனாலும் அண்ணாமலை தனது கைகால் பலத்தில், தனது மன வலிமையில், தொடர்ந்து மலை ஏறுவார், தேவைப் படும்போது தவெக எனும் புதிய மலைமீதும் ஏறுவார், சாதிப்பார், அதிகமான மக்கள் மனங்களைத் தனது பயணத்தில் வெல்வார் என்று நாம் நம்பவேண்டும். அவருடைய பயணம் அவருக்காக அல்ல, எண்ணற்ற அப்பாவி ஜனங்களுக்காக.

 

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

Monday, 4 May 2026

கேள்வி-பதில் (04.05.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

கேள்வி: 2026 தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் என்ன சொல்கின்றன?

 

பதில்: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தடாலடியாக முன்னுக்கு வந்திருக்கிறது.

 

திமுக மற்றும் அதிமுக அமைத்த இரண்டு கூட்டணிகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, முதன்முறை தேர்தலில் போட்டியிட்ட - அதுவும் தனியாகப் போட்டியிட்ட - தவெக அதிகத் தொகுதிகளை வென்றிருக்கிறது. ஓட்டு எண்ணப்படும் இன்று மாலை ஆறே முக்கால் மணி அளவில், மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தவெக 107-ல் முன்னிலை; திமுக கூட்டணி 73-ல் முன்னிலை; அதிமுக கூட்டணி 54-ல் முன்னிலை;

 

இந்தத் தேர்தலில் ஒரு விஷயம் தெளிவாகிறது. வாக்காளர்களுக்குப் பணம், பொருள், நகை கொடுத்தால் அவர்கள் வாங்கிக் கொள்வார்கள் - அந்தப் பரிதாப நிலையில் அவர்கள் வைக்கப் பட்டிருப்பதால். ஆனால் அவர்கள் தமது விருப்பப்படி வெறுவிதமாகவும் வாக்களிப்பார்கள். இது நல்லது. முன்பு, வாக்காளர்களுக்கு அதிகப் பணம் கொடுத்தவர்களும், வாக்காளர்கள் ஓட்டளிக்க விரும்பிய வேட்பாளர்களும் ஒரே பக்கம் இருந்திருப்பார்கள்.

 

தேர்தலுக்கு முன்னர் உருவான எந்தக் கூட்டணிக்கும், அல்லது எந்த ஒரு கட்சிக்கும், ஆட்சி அமைக்கும் அளவுக்கான பெரும்பான்மை கிட்டவில்லை. அதற்காக, சட்டசபையில் ஒரு ஒருமித்த பெரும்பான்மை ஏற்படாமல், மாநிலத்தில் புதிய தேர்தல் நடத்த வேண்டியிருக்காது - தேர்வான புதிய எம்.எல்.ஏ-க்கள் மறுபடியும் ஒரு தேர்தல் வராமல் இருக்கத் தேவையான அணி மாற்றத்தைச் செய்து காட்டுவார்கள். அதாவது, மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்காகப் புதிய கூட்டணி உருவாகும். என்னவெல்லாம் நடக்கலாம்?

 

தவெக-வுக்குத்தான் ஆட்சி அமைக்கக் குறைந்த எண்ணிக்கையிலான கூடுதல் எம்.எல்.ஏ-க்கள் தேவை.  ஆனால் அந்த அளவுக்கான  வேறு கட்சி எம்.எல்.ஏ-க்களை மட்டும் கூட்டணி சேர்த்துக் கொண்டு தவெக ஆட்சி அமைப்பது விவேகமல்ல. அப்படிச் சேர்ந்தவர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்கள் ஆதரவை விலக்கி ஆட்சியைக் கவிழ்க்கலாம். ஆகையால் ஒரு புதிய கூட்டணிக்காக, வருகிற அனைத்து சிறிய கட்சி எம்.எல்.ஏ-க்களையும் - அதாவது, அவர்கள் இப்போது இருக்கிற திமுக அல்லது அதிமுக கூட்டணியை உதறிவிட்டு வரும் சிறிய கட்சி எம்.எல்.ஏ-க்களை - தவெக சேர்த்துக் கொள்ளலாம்.

 

இன்னொன்று. அதிமுக-வைத் தொடங்கி நிலைபெறச் செய்த எம்.ஜி.ஆர் மறைந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. மறைந்த ஜெயலலிதாவின் தலைமையும் அந்தக் கட்சியினரால் விரைவில் மறக்கப்படும். வாக்காளர்கள் மனதில் - குறிப்பாக இள வயது வாக்காளர்களின் மனதில் - அந்த இருவரின் இடத்தை விஜய் பெருமளவில் புதிதாக ஆக்கிரமிக்கக் கூடும்.

 

அதிமுக-வின் தற்போதையத் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது கட்சியினரைக் கட்டி இழுக்கும் காந்தத் தலைவரல்ல. அந்தக் கட்சியின் மற்ற நிர்வாகிகளும் தலைமைப் பண்புகள் இல்லாதவர்கள்.  இந்த சாதாரண உண்மையைப் புதிய அதிமுக எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் உணர்வார்கள். ஆகையால் அதிமுக-விலிருந்து மூன்றில் இரண்டு பங்கு புதிய எம்.எல்.ஏ-க்கள் தவெக-வுடன் இணைய வந்தாலும் வரலாம். அது நிகழ்ந்தால் சட்டசபையில் தவெக அசைக்கமுடியாத பலம் பெறும்.

 

மற்ற அரசியல் கட்சிகளிடையே புதிய சேர்க்கைகளோ கூட்டணிகளோ ஏற்படலாம். அரசியல் உலகில் பலம் சேர்த்துக் கொள்ள எந்த இணைப்பும் கூட்டணியும் ஏற்படலாம். "நாங்கள் பங்காளிகள்" என்று வழக்கமான சல்ஜாப்பைச் சொல்லி, திமுக-வும் அதிமுக-வும் கூட இணையலாம். ஒன்றாகக் குழியில் தள்ளிவிடப் பட்ட யார்தான் ஒருவரை ஒருவர் கட்டிக் கொள்ள மாட்டார்கள்?  இருந்தாலும் பாஜக திமுக-வுடன் சேராது என்று எடுத்துக் கொள்ளலாம். பாஜக-வுக்கும் சொற்ப எண்ணிக்கையில் தான் எம்.எல்.ஏ-க்கள் கிடைத்திருக்கிறார்கள்.

 

அடுத்ததாக: சினிமாவிலிருந்து வந்த விஜய் தொடங்கிய கட்சி தேர்தலில் சாதிப்பதும், அவருடைய கட்சி புதிய அரசாங்கத்திற்குத் தலைமை தாங்குவதும் - அவர் முதல் அமைச்சர் ஆவதும் - வரவேற்கத் தக்கதா என்று சிலர் கேட்கலாம். அதற்கான பதில்: தமிழ்நாட்டில் திமுக முதன் முதலில் ஆட்சி அமைத்த 1967-ல் இருந்தே நமது மாநில அரசியலில், இங்கு ஆட்சி அமைப்பதில், சினிமா பின்புலம் தலை தூக்கியாயிற்று. அடுத்து, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா அதிமுக சார்பில் முதல்வர்களாக இருந்தார்கள். வெளியேறப் போகும் திமுக ஆட்சியில் துணை முதல்வராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் நடித்தார், திரைப்படம் தயாரிக்கிறார், திரைப்படம் விநியோகம் செய்கிறார். பாஜக-விலும் சரத்குமார் மற்றும் ராதிகா இருக்கிறார்கள், குஷ்புவும் உண்டு. ஆகையால் விஜய் ஒரு நடிகர் என்பதற்காக, அவர் ஆட்சிக்கு வருவதை ஆட்சேபிக்க முடியாது. இதுதான் தமிழகத்தின் அரசியல் களம் என்று இருக்கும்போது, இந்தக் களத்தைக் குறை சொல்லி இங்கு அரசியல் நடத்துவது, அல்லது விமர்சிப்பது, உதவாது.

 

விஜய் ஆட்சிக்கு வருவதில் ஒரு முக்கிய நன்மை இருக்கிறது. திமுக-வை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் செய்த அளவில் அவர் பெரிய பொதுச் சேவை செய்திருக்கிறார். இருந்தாலும், ஒரு மாநிலத்தின் முதல்வராக வெற்றிகரமாகச் செயல்படுவதற்கு அவருக்கு இன்னும் முதிர்ச்சியும் நிதானமும் தேவை.

 

விஜய் முதல்வரானால் ஊழலற்ற ஆட்சியைத் தருவாரா, திறமையான நிர்வாகத்தை வழங்குவாரா, மாநிலம் முன்னேற வழிவகுப்பாரா என்பது பற்றி நமக்குத் தெளிவான நல்ல அறிகுறிகள் இல்லை. சற்று அச்சம் இருக்கிறது. இதுபோக, தேசிய சிந்தனைகளை வெளிப்படுத்தாத அவர் அந்த வகையில் என்ன பாதிப்புகளை மாநிலத்திற்கு ஏற்படுத்துவார் என்பதும் நமக்குத் தெரியாது. அந்த எல்லா விஷயங்களிலும் விஜய் கண்காணிக்கப் படவேண்டியவர், தன்னை ஆரம்பத்திலிருந்து நிரூபிக்க வேண்டியவர். முடியப்போகும் திமுக ஆட்சி மாதிரி ஒரு மோசமான மர்மமான ஆட்சியைத் தனது முதல் ஐந்தாண்டுகளில் விஜய் முயன்றாலும் தரமுடியாது என்பது யாருக்கும் ஒரு நிச்சய ஆறுதல் - இதுவே பெரிய விஷயம்.

 

தனது முதல் தேர்தலிலேயே ஒரு பெரிய வெற்றியைப் பார்த்த விஜய், அரசியலில் நீடிப்பார். அவருக்கு எதிராகத் தற்போதைய அதிமுக தாக்குப் பிடிப்பது கடினம். அந்தக் கட்சியிலிருந்து அதிகமானோர் தவெக-வுக்கு மாற வாய்ப்பிருக்கிறது. அதற்கு முன்னோடியாகத் திகழ்ந்து எம்.எல்.ஏ ஆகிவிட்டார் செங்கோட்டையன். அவர் அநேகமாக அமைச்சராகவும் ஆவார் - அதனால் இன்னும் பல அதிமுக-வினர் தவெக-வுக்கு ஈர்க்கப் படுவார்கள்.

 

திமுக-வைப் பொறுத்தவரை, அக்கட்சி உதயநிதிக்கும் இன்பநிதிக்கும் அரியாசனம் அமைக்கும் பணியில் கவனம் செலுத்தலாம். கமல் ஹாசன், இனி திரைப்படக் காட்சிகளில் மற்றும் வாய் திறந்தால் போதும். எல்லாத் தேர்தல்களில் தன் கட்சி தோற்றாலும் பிழைக்கும் வித்தை தெரிந்த சீமான், கமுக்கமாகத் தனது வித்தைகளைத் தொடரலாம்.

 

அதிமுக கூட்டணியிலிருந்து தமிழக பாஜக விடுபட்டு, அண்ணாமலையை முன்னிலைப்படுத்தித் தமிழகத்தில் வேகமாக வளரவேண்டிய காலமும் கட்டாயமும் வந்துவிட்டது. அண்ணாமலையின் தடையற்ற தலைமை இல்லாமல் பாஜக-வுக்குத் தமிழகத்தில் வளர்ச்சி இருக்காது - அதுவும் விஜய்யின் புதிய கட்சி, ஆட்சி அமைக்கும் அளவு வளர்ந்த பின்னர். தமிழக அரசியல் செம்மைப்பட, நமது மாநில அரசியலில் பண்பும் படிப்பும் திறமையும் தலையெடுக்க, பாஜக அண்ணாமலையை முன்னிலைப் படுத்துவதை விட வேறு சிறந்த வழி தென்படவில்லை.

 

பகுதி 87//04.05.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr