Sunday, 16 August 2026

கேள்வி-பதில் (16.08.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "காவிரியில் தண்ணீர் வரவேண்டும் என்று நான் பேசியதற்காகத் தான் என்னைக் கைது செய்தார்கள்" என்று உதயநிதி ஸ்டாலின் மேடையில் நின்று விளக்கம் சொல்லி இருக்கிறாரே?"

 

பதில்: பரவாயில்லை. உதயநிதி தஞ்சாவூரில் பேசியதை அப்படியே பொதுவெளியில் சொல்ல அவருக்கும் வெட்கமாக இருக்கிறது என்று தெரிகிறது. 'நீங்கள் ஆபாசமாகப் பேசினால், அதற்காகக் கைதானால், பின்னர் நீங்களும் என்னைப் போல் பொதுவெளியில் ஜகா வாங்கவேண்டும், பூசி மெழுகவேண்டும், கேவலப்பட வேண்டும்' என்ற படிப்பினையை அனைத்து ஆபாசப் பேச்சாளர்களுக்கும் உதயநிதி நாசுக்காகச் சொல்லி இருக்கிறார்.

 

 

2. கேள்வி: "தவெக-வில் இருக்கும் யாரும் ஊழல் செய்ய மாட்டார்கள்" என்று அமைச்சர் ஆனந்த் பேசி இருக்கிறாரே?

 

பதில்: முன்பு ஆட்சியில் இருந்த திமுக மற்றும் அதிமுக-விலிருந்து பலர் தவெக-வில் சேர்ந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் அங்கிருக்கும்போது அமைச்சர்களாக மற்றும் கட்சி நிர்வாகிகளாகப் பதவி வகித்தவர்கள். அந்த இரண்டு கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி வைத்துப் பயனடைந்த மற்ற சில கட்சிகள், இப்போது தவெக-வுடன் கைகோர்த்திருக்கின்றன.

 

தவெக-வுக்குக் கட்சி மாறியிருக்கும் பலர், அணி மாறித் தவெக பக்கம் சேர்ந்திருக்கும் சில கட்சிகள், அரசு வேலைகளிலோ மற்ற வேலைகளிலோ தாங்கள் பயனடையத் தவெக-வை ஒரு புதிய வாய்ப்பாகப் பார்ப்பார்கள். ஆகையால் தவெக அரசும் அக்கட்சியின் நிர்வாகிகளும் விமர்சகர்களின் கண்காணிப்பில் இருந்தாக வேண்டும்.

 

அடுத்தது: ஊழல் செய்வது என்பது ஒருவகை முறைகேடு. ஹிந்து மதம் மற்றும் ஹிந்து கலாசாரம் பிரதானமாகப் பின்பற்றப்படும் இந்தியாவில், அதிகாரத்தில் அமர்ந்து ஹிந்து மதத்தையும் ஹிந்து கலாசாரத்தையும் நைஸாகப் புறந்தள்ளி, வேறு மத நம்பிக்கைகளை உயர்த்திப் பிரதானப்படுத்துவதும் ஒருவகை முறைகேடு - தவெக அரசும், தவெக ஆதரிக்கும் முக்கியஸ்தர்களும், இதைச் செய்ய ஆரம்பித்திருப்பது தெரிகிறது.

 

 

3. கேள்வி: அண்மையில் சுதந்திர தின விழாவின் போது ஶ்ரீநகரில் பேசிய ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, "கடந்த 2019-ல் ஜம்மு-காஷ்மீரின் மாநில மற்றும் சிறப்பு அந்தஸ்து நீக்கப்படாமல் இருந்திருந்தால், பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் ஜம்மு-காஷ்மீருடன் மீண்டும் இணையக் குரல் கொடுத்திருப்பார்கள்" என்று கூறி இருக்கிறாரே?

 

பதில்: சில ஆடுகளைத் திருடி வைத்திருந்தவனிடம் இருந்து அவை போலீசாரால் மீட்கப்பட்ட பின் அவன் சொன்னான்: "நான் சில காலமாக வைத்திருந்த ஆடுகள் என் வசமிருந்து பறிக்கப்படாமல் இருந்தால், முன்னர் அவற்றுடன் ஒன்றாக வளர்ந்து தற்போது இன்னொருவனின் அபகரிப்பில் இருக்கும் வேறு சில ஆடுகள், நான் வைத்திருந்த ஆடுகளுடன் வந்து இணைவதற்காக 'ம்ம்ம்மே' என்று குரல் கொடுத்திருக்கும்"

 

 

4. கேள்வி: டெல்லியில், காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தில் 'வந்தே மாதரம்' தேசியப் பாடல் பாடப்பட்டபோது, அக்கட்சியின் பார்லிமென்ட் குழுத்தலைவர் சோனியா காந்தி சைகை செய்தது, அப்பாடல் பாடப்படாமல் அதை நிறுத்துவதற்கா என்ற கேள்வி எழுந்தது. அதற்கு விளக்கம் அளித்த காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ், "வந்தே மாதரம் பாடலுக்கு சோனியா காந்தி எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. கட்சித் தலைவர் கார்கே நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்ததால், அவருக்கு ஒரு நாற்காலி வழங்கும்படி சைகை மூலம் சோனியா கேட்டார்" என்றார். அவரது விளக்கம் ஏற்கத் தக்கதா?

 

பதில்: ஜெய்ராம் ரமேஷின் விளக்கம் இருக்கட்டும். காங்கிரஸ் இதில் எப்படிச் சிந்திக்கிறது என்று தெரிய ஒரு வருடம் ஆகும்.

 

அடுத்த வருடம் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடக்கப்போகும் சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தில் வந்தே மாதரம் பாடல் இடம் பெறாவிட்டால், இந்த வருடம் சோனியா காந்தி காண்பித்த சைகையைக் காங்கிரஸ் சரியாகப் புரிந்துகொண்டு அதை அடுத்த வருடம் செயல்படுத்துகிறது என்று அர்த்தம். ஒருவேளை அடுத்த வருடம் காங்கிரஸ் மேடையில் அந்தப் பாடல் பாடப்பட்டால், 'வந்தே மாதரம் விஷயத்தில் பாஜக காண்பித்த வழியைக் காங்கிரஸ் பின்பற்றுகிறது என்றானாலும் பரவாயில்லை, காங்கிரஸ் கட்சிக்குச் சொற்ப ஆதரவே அளிக்கும் மேற்கு வங்க மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி அவர்களின் வாக்குகளை அக்கட்சி மேலும் இழக்கக் கூடாது என்ற முன்யோசனை ஜெய்ராம் ரமேஷ்க்கு டக்கென்று இந்த வருடமே வந்தது என்று அர்த்தம்.

 


5. கேள்வி: சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி பேசும்போது, "காட்டுப் பகுதிகளில் இருந்து ஆயுதம் தாங்கிய நக்சல்களை நாம் அப்புறப்படுத்தி விட்டோம், நமது தேசத்தை அவர்களிடமிருந்து மீட்டு விட்டோம். ஆனாலும் அதிகாரப் பாதைகளில் 'நக்சல் எண்ணத்தவர்கள்' இருந்தார்கள். அவர்கள் அரசுக் கமிட்டிகளில் ஆலோசகர்களாகவும் இருந்தார்கள். அவர்களை அடையாளப்படுத்த வேண்டும், தனிமைப்படுத்த வேண்டும். நக்சல் எண்ணத்தவர்கள் வன்முறைக்கான வழிகளை நோட்டமிட்டு, நம் தேசத்தைக் கீழ்நோக்கித் தவறான பாதையில் இழுத்துச் செல்ல விரும்புகிறார்கள்" என்று சொன்னார். பிரதமர் யார் பெயரையும் குறிப்பிடவில்லை. இருந்தாலும் உடனே ப. சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில், "நக்சல் எண்ணத்தவராக இருப்பது எனக்குப் பெருமை!" என்று கருத்துச் சொல்லி இருக்கிறாரே?

 

பதில்: சிதம்பரம் ஒரு நல்ல டாக்டரைப் பார்க்க வேண்டும். "நான் குதிருக்குள் இல்லை" என்றா ஒருவர் குரல் எழுப்புவார்?


பகுதி 124 // 16.08.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

Friday, 14 August 2026

கேள்வி-பதில் (14.08.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: ஒரு பொதுமேடையில் பேசிய ராகுல் காந்தி, "பிரதமர் மோடி, வெளியுறவுக் கொள்கையை எப்படிப் புரிந்து வைத்திருக்கிறார் என்று காண்பிக்கிறேன்" என்று சொல்லிவிட்டு, அருகில் இருந்த ஒரு காங்கிரஸ் நிர்வாகியைக் கவுண்டமணி பாணியில் இறுகத் தழுவிப் பின் விலகி வந்து, "இதுதான் வெளியுறவுக் கொள்கை என்று மோடி நினைக்கிறார்" என்று பிரதமரைக் கேலி செய்திருக்கிறாரே?

 

பதில்: இரு நபர்கள் சந்திக்கும்போது, தமக்குள் அன்பு கலந்த மரியாதையை வெளிப்படுத்தும் விதமாக அவர்கள் ஒருவரை ஒருவர் மெலிதாக அணைக்கும் வழக்கம் மேல் நாடுகளில் இருக்கிறது. இது இந்தியாவிலும், குறிப்பாக மேல்தட்டு மக்களிடம், பரவி வருகிறது.

 

உலக அரங்கில் பிரதமர் மோடியின் நிதானமான, தீர்க்கமான, நல்லெண்ணம் மிக்க சிந்தனையும் பேச்சும் அணுகுமுறையும் பல மேல்நாட்டுத் தலைவர்களை ஈர்த்து, மோடியின் மீது அவை ஒரு அசாதாரண மதிப்பை அத் தலைவர்கள் மனதில் ஏற்படுத்தி உள்ளன. ஆகையால் அவர்கள் மோடியை நேரில் சந்திக்கும்போது அவர் தங்கள் கைகளைப் பற்றுவதோ அல்லது தங்களை மெலிதாக அணைப்பதோ தங்களுக்கு ஒரு கௌரவம் என்று அந்த மேல்நாட்டுத் தலைவர்கள் நினைப்பார்கள்.

 

மேல்நாடுகளில், இன்னொருவரைப் பற்றி ஒன்றும் தெரியாவிட்டால், அல்லது இன்னொருவரின் மீது குறைவான மதிப்பு வைத்திருந்தால், அந்த மனிதரைச் சந்திக்கும்போது அவரை மெலிதாக அணைக்க விரும்பமாட்டார்கள் - வேண்டுமானால் அவருடன் வெறுமனே கைகுலுக்கி விலகி இருப்பார்கள்.

 

சாதாரணமாகவே ராகுல் காந்தி ஒன்றும் தெரியாத பித்துக்குளி. வெறுப்புடன் மோடி பற்றிப் பேசும்போது, சுத்தப் பைத்தியம்.

 

 

2. கேள்வி: 2026 சட்டசபைத் தேர்தலின் போது சைதாப்பேட்டைத் தொகுதியில் திமுக சார்பாக மா.சுப்பிரமணியன் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். இதுகுறித்து கருத்துத் தெரிவித்த திமுக-வின் அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, "சைதாப்பேட்டை வாக்காளர்களுக்கு நல்ல சாவு வராது" என்று பொதுமேடையிலிருந்து அத்தொகுதி வாக்காளர்களைத் திட்டி இருக்கிறாரே?

 

பதில்: ஆர்.எஸ். பாரதி யாரைப் பழித்தாலும் திட்டினாலும் அவர்கள் ஏதோ நல்லது செய்திருக்கிறார்கள் என்று பொருள். அவரது வசவு வார்த்தைகள் மோசமாக இருந்தால், அதைப் பெறுகிறவர்கள் மிக நல்ல காரியம் செய்திருப்பதாக அர்த்தம்.

 

 

3. கேள்வி: மத்திய அரசு உத்தேசித்திருக்கும் லோக் சபா தொகுதி மறுவரையறைக்கு ஆதரவாகத் தமிழக சட்டசபையில் பேசிய தேமுதிக தலைவர் பிரேமலதா, "தற்போது 10 லட்சம் பேருக்கு ஒரு எம்.பி. மட்டுமே இருக்கும் நிலையில், தொகுதி மறுவரையறை செய்வதன் மூலம் 7 லட்சம் முதல் 8 லட்சம் பேருக்கு ஒரு எம்.பி. என எம்.பி-க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதன் மூலம் தமிழகத்துக்கு 59 எம்.பி-க்களுக்கு மேல் கிடைப்பார்கள்" என்ற விளக்கத்தை முன்வைத்தார். இது தேமுதிக-வுக்கு ஏற்புடையதாக இருக்கிறது, ஆனால்  காங்கிரஸ் மற்றும் தவெக-வுக்கு அப்படி அல்ல. ஏன் இந்த வேறுபாடு?

 

பதில்: பாஜக எதைச் செய்தாலும் அதை எதிர்க்கவேண்டும் என்பது காங்கிரஸின் கொள்கை. ஆகையால் தொகுதி மறுவரையறை மசோதாவைக் காங்கிரஸ் எதிர்க்கும்.

 

தவெக-வைப் பொறுத்தவரை, விஜய் எப்படி இருந்தாலும் அந்தப் புதிய கட்சியில் சரியான எம்.பி. வேட்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் கிடைப்பது தற்போது சிரமம். கண்டவர்களும் அதிக அளவில் எம்.பி-யாகத் தேர்வாகி அவர்கள் அசட்டுத்தனமாகப் பேசி அல்லது நடந்துகொண்டு கட்சியின் பெயரை மேலும் மேலும் கெடுக்கவேண்டாம், ஆகவே இருக்கிற எம்.பி. எண்ணிக்கையே தமிழகத்திற்குப் போதுமானது, அதில் இருக்கப் போகும் தவெக எம்.பி-க்களை நாம் சமாளித்தாலே போதும், என்று விஜய் நினைக்கலாம். அத்துடன், பாஜக-வைத் தனது 'கொள்கை எதிரி' என்று முன்பே அறிவித்துவிட்ட தவெக, அதை நிரூபிக்க பாஜக-வின் முக்கிய நடவடிக்கைகளை எதிர்க்க நினைக்கலாம். லாஜிகலாக வேறு ஒன்றும் தெரியவில்லை

 

பிரேமலதாவைப் பொறுத்தவரை, தமிழகத்திற்கு அதிக எம்.பி-க்கள்  கிடைத்தால் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியில் அக்கட்சிக்கு ஒன்றிரண்டு எம்.பி. சீட்டுகள் அதிகமாகக் கேட்டுப் பயனடைய அவர் நினைக்கலாம்.

 

 

4. கேள்வி: 2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன்னர் பிரசாரம் செய்ய விஜய் கரூர் சென்றபோது, அங்கு கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் இறந்தனர். அந்தத் தேர்தலில் விஜய் வென்று முதலமைச்சரான பின், கரூர் நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்தவர்களுக்கு அரசு வேலை வழங்கினார். அதை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்த மனுதாரரிடம், "நடந்தது துயர சம்பவம். அதில் அரசியல் செய்யக் கூடாது" என்று உச்ச நீதிமன்றம் வாய்மொழியாகக் கூறி இருக்கிறதே?

 

பதில்: உச்ச நீதிமன்றத்தின் கருத்து நியாயமானது. இருந்தாலும் தவிர்க்கமுடியாத ஒரு கேள்வி எழுகிறது: வாகன விபத்து, மின்னல் தாக்குதல், மாடு முட்டுதல், நாய்க்கடி, என்று பலவாறாகத் துயர மரணங்கள் வாழ்க்கையில் நிகழ்கின்றன. ஆனால் பாதிக்கபட்ட அந்தக் குடும்பங்களைத் தவிர்த்து, விஜய் கூட்டம் தொடர்பான உயிரிழப்புகளைச் சந்தித்த குடும்பங்களுக்கு மட்டும் விஜய் அரசு வேலை வழங்கினால், அது துயர சம்பவத்தில் அரசியல் செய்வதாகாதா?

 


5. கேள்வி: "எனக்கு மூன்றாம் முறை அமெரிக்க அதிபராவதற்கு விருப்பம். ஆனால் சட்டம் வலுவானது. அது என் விருப்பத்தைக் தடுக்கிறது" என்று அதிபர் டிரம்ப் கூறி இருக்கிறாரே?

 

பதில்: டிரம்ப் மூன்றாம் முறை அதிபராவதைத் தடுக்கும் சட்டத்தினால் ஒரு பாதகமும் இல்லை.  இரண்டு முறைக்கு மேல் டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவிப் வகிக்காத நிலையில், தன்னையறியாமல் அவர் உலகிற்கு ஆற்றப்போகும் சேவை முன்னைவிட அதிகமாக இருக்கும்.


பகுதி 123 // 14.08.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

கேள்வி-பதில் (12.08.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "இந்தியப் பிரதமர் மோடி மனதளவில் வலுவானவர், உறுதி மிக்கவர். அது எனக்குத் தெரியும்" என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு வீடியோ பேட்டியில் கூறி இருக்கிறார். எந்த அனுபவத்தில் டிரம்ப் இதைச் சொல்கிறார்?

 

பதில்: "கற்பாறை வலுவானது, உறுதியானது" என்று தனது மண்டைக் காயத்தைத் தடவியபடி ஒருவர் சொன்னால் அதில் உண்மை இருக்கும்.

 

 

2. கேள்வி: திரைத்துறையில் கமல் ஹாசன் தற்போது 67 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கிறார். இந்த நேரத்தில் அவரைப் பற்றி என்ன சொல்வீர்கள்?

 

பதில்:  மனிதர்கள் தம் வாழ்க்கையில் சிறப்பதற்குக் கமல் ஒரு விதத்தில் படிப்பினையாக இருக்கிறார். அதாவது, "ஒரு துறையில் நீங்கள் சொதப்பினால் (உதாரணம்: அரசியல்) நீங்கள் வேறு காரியத்தில் பரிமளிக்கலாம் (உதாரணம்: நடிப்பு). உங்களுக்கு ஏற்றது எதுவென்று அறிந்து அதில் உங்கள் பிரதான கவனத்தைச் செலுத்துங்கள்" என்று அனைவருக்குமான நற்சிந்தனையைக் கமல் வாழ்ந்து காட்டி இருக்கிறார். அது நல்ல விஷயம்.

 

 

3. கேள்வி: "தென்னிந்தியாவிலிருந்து, தமிழ்நாட்டில் இருந்து, இந்தியாவின் பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்" என்று தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டசபையில் பேசி இருக்கிறாரே? இது சாத்தியமா?

 

பதில்: அதன் சாத்தியம் பற்றி ஆதவ் அர்ஜுனா கவலைப்பட்டிருக்க மாட்டார். அவர் பேசியது, மிக அருகில் அமர்ந்திருந்த முதல்வர் விஜய்யின் காதில் விழுந்தால் போதும் என்று மட்டும் ஆசைப்பட்டிருப்பார். அவர் ஆசை நிறைவேறி விட்டது. விஷயம் முடிந்தது.

 

 

4. கேள்வி: தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் சட்டசபையில் நிதி நிலை அறிக்கையை வாசிக்கும்போது பல தமிழ்ச் சொற்களை அவர் சரியாக உச்சரிக்கவில்லை என்று ஒரு எம்.எல்.ஏ சுட்டிக் காட்டியபோது, அமைச்சர் கோபப்பட்டு ஏதேதோ பேசினாரே - அடுத்த வாரம் தனது தவறான தமிழ் உச்சரிப்பை அவர் ஒப்புக் கொண்டாலும்?

 

பதில்: தமிழகத்தில் தமிழை நன்றாக உச்சரித்து - அதாவது தமிழை அடித்து உதைக்காமல், அல்லது தமிழின் கையை முறுக்காமல் அல்லது காதையாவது திருகாமல் - பேசுகிற தமிழர்களின் சராசரி வயது சுமார் 55-க்கு மேல் இருக்கும். இதற்கு பாதிக் காரணம், திமுக தலைமை பல பத்தாண்டுகளாக மக்களிடையே நேரடியாகவும் மறைமுகமாகவும்  வளர்த்துவிட்ட பொறுப்பில்லாத்தனம்.

 

பொறுப்பில்லாத்தனம் உள்ள ஒருவர் தாய்மொழியைச் சரியாகக் கற்றல், சரியாகப் பேசுதல் உட்பட எந்த சீரியஸ் விஷயத்திலும் அதற்குத் தேவையான நாட்டமும் அக்கறையும் செலுத்த மாட்டார். அப்படியான ஒரு தமிழர், தன் தாய்மொழியைச் சரியாகப் படிக்கவில்லை, பேசவில்லை என்றால் அதை ஒரு தவறாக, ஒரு இழுக்காக உணரமாட்டார். மரிய வில்சனின் பேச்சு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதால், தமிழகத்தில் தமிழ் பரவலாகப் படும் பாடு வெளிச்சத்துக்கு வந்தது.

 

இந்தி தெரியாது போடா!

தமிழும் ததிங்கிணத் தோம்டா!

 


5. கேள்வி: மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக சட்டசபை ஒரு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இது வரவேற்கத் தக்கதா?

 

பதில்: நீட் தேர்வை ரத்து செய்து அதற்குப் பதிலாகத் தமிழகத்தில் பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை நடந்தால், அத்துடன் இன்டர்வியூ எனும் கண்துடைப்பைச் சேர்த்து இன்டர்வியூ மார்க்கையும் மருத்துவச் சேர்க்கைக்கு ஒரு தகுதியாக எடுத்துக் கொண்டால், டொனேஷன் கறக்கும் தனியார் மருத்துவக் கல்லூரி முதலாளிகளின் வளம் பெருகும், புதிய மருத்துவர்களின் தரம் கீழிறங்கும், பொதுமக்களுக்குச் சிறந்த மருத்துவச் சேவை கிடைக்கும் சாத்தியம் மேலும் தள்ளிப் போகும்.

 

போலீஸ் துறையை இழுத்து மூடிவிட்டு, போலீஸ்காரர்களுக்குப் பதிலாக லுங்கி கட்டிய வாட்ச்மேன்களை ரோந்துப் பணிக்கு அமர்த்தினால் போதும் எனச் சட்டம் போட்டு, அதன் மூலம் கிராமப்புற, ஏழை எளிய, பின்தங்கிய மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அரசாங்கம் ரீல் சுற்றினால், அதை ரவுடிகளும் ஜேப்படிக்காரர்களும் குதூகலமாக வரவேற்பார்கள். அந்த வகையிலான கோரிக்கை தான் சட்டசபைத் தீர்மானம்.


பகுதி 122 // 12.08.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com