|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாள் வாழ்த்தரங்கில்
பேசிய கமல் ஹாசன், "மக்களைக்
குடும்பமாக நினைக்கும் தலைவர்கள் எல்லாம் குடும்ப அரசியல்தான் செய்கிறார்கள்
அதுதான் தொடர வேண்டும்” என்று பேசி இருக்கிறார். அதற்கு என்ன அர்த்தம்? பதில்: "மக்களைத்
தன் குடும்பமாக நினைத்து அவர்களுக்காக ஒரு தலைவர் ஆட்சி செய்தால் அது நல்லது; ஆனால் தன் குடும்பத்தை மட்டும் மக்களாக நினைத்து
அவர்களுக்காக அவர் ஆட்சி செய்வது நல்லதல்ல" என்று கமல் பேச்சை நாம் முழுதாக
அர்த்தம் கொள்ளலாம். எப்போதும் அவர் பேசுவதில் பாதிதான் வெளிப்படையாகப் புரியம்.
மீதிப் பாதியை நாமாக நல்ல விதத்தில் அர்த்தம் செய்து கொள்வோம். |
|
2. கேள்வி: ''இண்டி கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ஆக்கும் வகையில், முதல்வர்
ஸ்டாலினை தேசிய அரசியலில் களம் காண வைப்போம்'' என்றும் கமல் பேசி
இருக்கிறாரே? பதில்: அதிமுக தலைவர் ஜெயலலிதாவிடம், "நான் உங்களுக்கு அடங்கிக்
கட்டுப்படுகிறேன்" என்று சொல்ல நினைத்தவர்கள் அவரை நோக்கித் தரையில்
விழுந்தார்கள். அதையே திமுக தலைவர் ஸ்டாலினிடம் சொல்ல நினைப்பவர்கள் அவரை
நோக்கிச் சொல்லில் விழுகிறார்கள். இரண்டு வந்தனங்களின் ஸ்டைல் வேறு. நோக்கம்
ஒன்றுதான் - க்ளியர் கம்யூனிகேஷன். |
|
3. கேள்வி: திமுக மற்றும் காங்கிரஸ் இடையே, தமிழக
சட்டடசபைத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சு இழுபறியாக இருக்கிறது. இந்தக் கட்சிகளின் கூட்டணி நீடிக்குமா என்பது இதுவரை
கேள்விக்குறி. இந்த நிலையில் ப.சிதம்பரம் ஸ்டாலினை சந்தித்துப் பேசி
இருக்கிறார். சிதம்பரத்தின் முயற்சி என்னவாக இருக்கும்? பதில்: தமிழகத்தில்
காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கும் பொதுமக்கள், அது
தேச விடுதலைக்காகப் போராடிய கட்சி; காந்தி, நேரு, காமராஜ் இருந்த
கட்சி என்று பெருமையாக நினைப்பவர்களும், அவர்களின்
பேச்சை மதிக்கும் குடும்ப உறுப்பினர்களும் ஆவர். அந்த ஆதரவாளர்களை ஒரு தலைவராக
ஆகர்ஷிக்கிறவர் அல்ல சிதம்பரம் - அல்லது மற்ற தமிழக காங்கிரஸ் தலைவர்களும். ஆட்சியில் திமுக என்ன முறைகேடுகள் செய்தாலும், என்ன ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டாலும், அதன் அரசியல் பலத்தைச் சார்ந்து இருந்தால் தமிழக
காங்கிரஸ் மூச்சு விட்டுக் கொண்டிருக்குமே, அதை
விட்டு தவெக-வோடு கூட்டணி வைத்தால் காங்கிரஸின் நிலை என்ன ஆகுமோ, அதோடு தனது, தனது
மகனின், அரசியல் மதிப்பு என்ன ஆகுமோ, என்று நினைக்கிறவர் சிதம்பரம். காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை
தேசநலனுக்காக வளர்க்கும் தலைவர்கள் மத்தியிலும் தமிழகத்திலும் பல வருடங்களாகக்
காணவில்லை என்பது அதன் தலைவிதி. அதைத் திமுக தனது வளர்ச்சிக்காகப் பெரிதும்
பயன்படுத்தியது. அதில் சிதம்பரமும் எளிதான பலன் கண்டார். இதன் காரணமாகவும்
ஸ்டாலினும் சிதம்பரமும் சந்தித்துத் திமுக-காங்கிரஸ் கூட்டணியைக் காப்பாற்ற
முயற்சிக்கலாம். |
|
4. கேள்வி: ஈரான் நாடு அணு ஆயுதம் தயாரிக்க முனைந்தாலும் அது
தவறா? அது அப்படி
முனைகிறது, அதை அனுமதிக்க
மாட்டோம் என்று சொல்லி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் நாட்டின் மீது ராணுவ
நடவடிக்கைகள் எடுத்தது சரியா? பதில்: இந்தக் கேள்விகளுக்குப் பாரபட்சமற்ற
பதில்கள் கிடைப்பது கடினம். கூட்டிக் கழித்துப் பார்த்தால், மனிதனின் ஆறாம் அறிவு மனித குலத்துக்கு
ஆதரவாக மட்டுமல்ல, எதிராகவும் நன்றாக வேலை செய்கிறது. எந்தப் பக்கம் அது இறுதியில் வெல்லும்
என்று தெரியாது. |
|
5. கேள்வி: தேர்தல் நேரத்தில் பல காரணங்கள் சொல்லி அரசுக்
கருவூலம் மூலமாக மக்களுக்குப் பணத்தை வாரி இறைக்கிறது திமுக அரசு. இந்தப் பண
விநியோகம் அனைத்தையும் சிலாகித்துச் சுருக்கமாக திமுக-வுக்காக எப்படி விளம்பரம்
செய்யலாம்? பதில்: பழைய
தங்க நகைகளை வாங்கும் ஒரு நிறுவனத்திற்காக டிவி விளம்பரங்களில் தோன்றும் நடிகை
ரம்யா கிருஷ்ணனை, ஒரு விளம்பர வீடியோவில் இவ்வாறு பேச
வைக்கலாம்: "தேர்தல்னா காசு, அதை
வாங்கணும்னா திமுக!" |
|
பகுதி 62 // 03.03.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
No comments:
Post a Comment