Thursday 23 July 2020

"திமுக ஹிந்துக்களுக்கு எதிரானது அல்ல" - ஸ்டாலின் தமாஷ்


         -- ஆர். வி. ஆர்

2019 லோக் சபா தேர்தல் பிரசாரத்தின் போது  பாளையங்கோட்டையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியது காற்றோடு போயிருக்கும். அவர் சொன்னது: "திமுக ஹிந்துக்களுக்கு எதிரான அமைப்பு அல்ல. மத சார்பின்மையிலும் சமத்துவத்திலும் திமுக முழு   நம்பிக்கை கொண்டது.” - (thehindu.com, 9.4.2019).   

ஸ்டாலின் என்ன பொருளில் பேசினார் என்றால், ‘அனைத்து மதங்களையும் சமமான கண்ணோட்டத்தில், பாரபட்சம் இல்லாமல் திமுக பார்க்கும்.  ஆகையால் திமுக ஹிந்துக்களுக்கு மட்டும் எதிரானது என்ற விமர்சனம் தவறு என்று அர்த்தம் வரும்படி சொன்னார்.  திமுக இதை மறுப்பதற்கில்லை. பின்பற்றுவதும் இல்லை.       

சமீபத்தில் கறுப்பர் கூட்டம் என்ற ஒரு குழு, கந்த சஷ்டி கவசம் பாடலை ஆபாசமாக இழிவு செய்து ஹிந்துக்களைப் புண்படுத்தியது. இதற்கு திமுக-வின் மறைமுக ஆதரவு உண்டு என்ற பரவலான குற்றச்சாட்டும் எதிர்ப்பும் எழுந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, ஸ்டாலின் இப்போது ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார் (thehindu.com, 21.7.2020). அதில்,   "திமுக-வின் எதிரிகள்  தகவல் தொழில் நுட்பத்தின் உதவியுடன் நமது கட்சியை ஹிந்துக்களுக்கு எதிரான வகையில் சித்தரிக்கிறார்கள். திமுக-வினர் இந்த குற்றச்சாட்டிற்கு  எதிர்வினை செய்யாமல், இதை வெறும் தமாஷாகப் பார்க்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். நல்ல தமாஷ்தான்.

திமுக ஹிந்துக்களுக்கு எதிரானதா இல்லையா என்பது திமுக தலைவர்களின் சில பேச்சுக்களிலில் இருந்தும் சில செய்கைகளில் இருந்தும் விளங்கும். ஆனால் ஸ்டாலின் பூசி மெழுகிச் சொல்வது இதுதான்:  “திமுக ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி. ஆகவே ஹிந்துக்கள் யாரும் திமுக-வில் சேர வேண்டாம், திமுக-விற்கு ஓட்டுப் போடவும் வேண்டாம் - என்று திமுக தலைவர்கள் யாரும் அப்பட்டமாகச் சொன்னார்களா? இல்லையே! ஆகையால் திமுக ஹிந்துக்களுக்கு எதிரானது அல்ல  என்பது நிரூபணம் ஆகிவிட்டது”.  இது ஸ்டாலின் செய்யும் தமாஷ்.

சாதாரணமாக ஒரு தமாஷை விளக்கிச் சொல்லக் கூடாது.  ஆனால் திமுக செய்யும் தமாஷ் தமிழக ஹிந்துக்களுக்கே சரியாகப் புரியவில்லை என்பதால் இதை சற்று விவரிக்கலாம்.

2011-ம் வருஷ ஜனத்தொகை கணக்கின்படி, தமிழ் நாட்டில் ஹிந்துக்கள் கிட்டத்தட்ட 88 சதவிகிதம், முஸ்லிம்கள் 6 சதவிகிதத்திற்கு சற்று குறைவு, கிறிஸ்தவர்கள் 6 சதவிகிதத்திற்கு சற்று மேல் என்று உள்ளார்கள்.  இவர்களில் எந்த மதத்தினருக்கு அவர்களின் முக்கிய பண்டிகைக் காலங்களில் ஸ்டாலின் வாழ்த்து சொல்கிறார்? ரம்ஜானுக்கு உண்டு. கிறிஸ்துமஸுக்கு உண்டு. 88 சதவிகித  ஹிந்துக்களின் தீபாவளிக்குக் கிடையாது, விநாயக சதுர்த்திக்கும் கிடையாது.

ஒருமுறை ஸ்டாலின் விநாயக சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லியதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வந்தது. இது நடந்தது 29.8.2014-ம் தேதி. அனைவரும் ஆச்சரியப்பட, இரண்டு நாட்களில் திமுக-வின் தலைமைக் கழகம் பத்திரிகைகளுக்கு இப்படி ஒரு செய்திக்குறிப்பு அனுப்பியது (dinamalar.com, 31.8.2014):

“மு. க. ஸ்டாலினின் இணையதளத்தை பாராமரிக்கின்றவர்களில் சிலர் ஆர்வமிகுதியின் காரணமாக, எல்லோரும் தெரிவிப்பதைப் போல மு,கஸ்டாலினும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக வெளியிட்டுள்ளனர். இது  மு. க. ஸ்டாலினின் முன் அனுமதியின்றி நடைபெற்ற செயலாகும். இந்த வாழ்த்துச் செய்தி அவரது விருப்பப்படியானது இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.”  

நன்றாகக் கவனியுங்கள். விநாயக சதுர்த்திக்கு ஒருவர் வாழ்த்து சொல்வது என்பது,  “எல்லோரும் தெரிவிப்பதைப் போல” என்ற உண்மை திமுக-வின் செய்திக் குறிப்பிலேயே இருக்கிறது. தமிழ் நாட்டின் 88 சதவிகித மக்களுக்கு, தமிழ் நாட்டின் ஆட்சியில் பலமுறை இருந்த ஒரு கட்சியின் முக்கியத் தலைவர் - அப்போது ஸ்டாலின் கட்சியின் பொருளாளர் - விநாயக சதுர்த்தி வாழ்த்து சொல்வதை விரும்பவே மாட்டார், அது அவருக்குக் கசக்கும், என்பது கட்சியின் அதிகாரபூர்வ செய்தி. 

ஸ்டாலின் மட்டும் அல்ல. 2018-ல் மறைந்த அவரது தந்தையும் திமுக-வின்  தலைவராகவும் இருந்த மு. கருணாநிதியும்  விநாயக சதுர்த்திக்கோ மற்ற ஹிந்து பாண்டிகைகளுக்கோ வாழ்த்து சொன்னதில்லை – காரணம், அவரும் அப்படி வாழ்த்து சொல்வதை விரும்ப மாட்டார்.  அப்படியானால் திமுக ஹிந்துக்களின் உணர்வுகளுக்கு எதிரானது என்பது உதய சூரியன் மாதிரி பளிச்சென்று தெரிகிறதா இல்லையா?

நமக்குத் தெரிந்தவர்களுக்கு, நம்மிடம் வேலை செய்பவர்களுக்கு, ஏதேனும் கெட்டது நேர்ந்தால் அவர்களுக்கு ஆறுதல் சொல்வதும், நல்லது நடந்தால் – அல்லது அவர்கள் கொண்டாடும் நிகழ்ச்சி வந்தால் – அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதும் ஒரு பண்பு, ஒரு நாகரிகம்.  தமிழ் நாட்டு ஹிந்துக்கள் திமுக-வுக்கு ஓட்டளித்து பல முறை அந்தக் கட்சியை மாநிலத்தில் ஆட்சியில் அமர்த்தி இருக்கிறார்கள். அப்படி  அரசை நடத்திப் பலவிதமான பயன்களையும் அனுபவித்தும், அந்த மக்கள் குதூகலமாகக் கொண்டாடும் தீபாவளிக்கோ விநாயக சதுர்த்திக்கோ திமுக-வின் தலைவர் வாழ்த்து சொல்வதில்லை, ஆனால் ரம்ஜானுக்கும் கிறிஸ்துமஸுக்கும் அந்தந்த மதத்தவர்களுக்கு அவர் வாழ்த்து சொல்லுவார் என்றால்  என்ன அர்த்தம்? ஹிந்துக்களிடம் எந்த பாரபட்சமும்  காட்டாமல், ‘மத சார்பின்மையிலும் சமத்துவத்திலும் முழு நம்பிக்கை கொண்டது திமுக’ என்று அர்த்தமா? என்ன தமாஷ் இது?

நமது ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம் ஒரு முஸ்லிம். அவர் நாட்டு மக்களுக்கு ரம்ஜான் பண்டிகையின் போது வாழ்த்து சொன்னதுண்டு. அதே போல் தீபாவளிக்கும் கிறிஸ்துமஸுக்கும் வாழ்த்து சொல்லியிருக்கிறார். ஹிந்துவான பிரதமர் மோடியும் எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் அப்படிச் செய்கிறார்கள்.  கடவுள் நம்பிக்கை இல்லாத கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயனும் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் ஆகிய மூன்று மதப் பண்டிகைகளுக்கும் மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார். ஆனால் தமிழ் நாட்டில், திமுக-வின் பகுத்தறிவுத் தலைவர்கள் ஹிந்து பண்டிகைகளின் போது மட்டும் அடாவடியாக மௌனம் காப்பார்கள்.

வெளி நாடுகளைப் பாருங்கள். அமெரிக்க அதிபர் டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர்  கிறிஸ்தவர்கள். அந்த மூவரும் தங்கள் நாட்டு கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்கிறார்கள். அதோடு, தங்கள் நாட்டில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு ரம்ஜான் வாழ்த்தும் இந்திய வம்சாவளி ஹிந்துக்களுக்கு தீபாவளி வாழ்த்தும் சொல்கிறார்கள்.   இது மட்டுமல்ல. துபாய் நாட்டு முஸ்லிம் அரசரும் முஸ்லிம்களுக்கு ரம்ஜான் வாழ்த்து சொல்வதோடு, தனது நாட்டில் வசிக்கும் ஹிந்துக்களுக்கு தீபாவளி வாழ்த்தும் தெரிவிக்கிறார். இத்தனைக்கும் அவர் ஸ்டாலின் மாதிரி தனது பிரதேச ஹிந்துக்களின் ஓட்டுக்களை தாஜா செய்து வாங்கி அவ்வப்போது பதவியைப் பிடிக்க வேண்டாம்.  இருந்தாலும் வேற்று மதத்தினாரான ஹிந்துக்களிடம் அவர் காட்டும் பண்பு, ஆட்சிக்கு அலையும் திமுக தலைவர்கள் அறியாதது.

இப்படி அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, துபாய் நாடுகளில் ஆட்சி செய்பவர்கள் யாராவது தங்கள்  நாட்டிலுள்ள தம் மதத்து மக்களின் முக்கிய பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாமல், தமது தேசத்து சிறுபான்மை மக்களின் திருநாளுக்கு மட்டும் வாழ்த்து சொல்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  அப்படியானால்,  அந்தந்த நாட்டின் மக்கள் தங்களின் தலைவர்களை, அரசரை, என்ன நினைப்பார்கள்? ‘சொந்த மத வெறுப்பாளன்’ மற்றும் ‘வக்கிர புத்தி உடையவன்’, என்றுதானே வாழ்த்துக் கிடைக்காத அந்த மக்கள் நினைப்பார்கள்? அப்படியானால் அதுவும் சரிதானே? ஆனால் பல விஷயங்களில், பல நேரங்களில்,  ஹிந்துக்கள் தம் நலன் அறியாதவர்கள், மிகவும் பொறுமைசாலிகள். இதை நன்றாக அறிந்து லாபம் அடைகிறவர்கள் இந்திய அரசியல்வாதிகள் – அதில் திமுக-வினர் கில்லாடிகள்.   

    கருணாநிதி காலத்தில் அவர் ஹிந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்லாமல் இருந்ததற்குக் காரணம் இதுவாகத்தான் இருக்க முடியும்.  அதாவது, ஹிந்துக்களை வேண்டுமென்றே இப்படி மலிவாகப் புறக்கணித்தால் 'சிறுபான்மை மக்கள் திமுக-வுக்கு நேசமாக இருப்பார்கள்,  அவர்கள் ஓட்டுக்களை மொத்தமாகப் பெற இதுவும் ஒரு யுக்தி' என்று கணக்குப் போட்டார். சிறுபான்மை மக்களோ அவர்களின் தலைவர்களோ அதைக் கருணாநிதியிடம் எதிர்பார்க்கவில்லை, அதற்காக மகிழவும் இல்லை. அவரது துர் சிந்தனையின் விளைவுதான் அந்த பாரபட்சம். தந்தை செய்ததை இப்போது ஸ்டாலினும் தொடர்கிறார்.

ராஜீவ் காந்தி காங்கிரஸின் பெரிய தலைவராக இருந்தபோது, “நான் ஒரு ஹிந்து” என்று உரக்கச் சொல்லி ஓட்டு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இப்போது ஹிந்துக்களின் ஓட்டுக்கள் தங்களுக்கு உத்தரவாதமல்ல, அவை வட இந்தியாவில் இன்னொரு கட்சிக்கு அதிகம் செல்கின்றன என்பதை காங்கிரஸும் மற்ற கட்சிகளும்  2014 லோக்சபா தேர்தல் முடிவுகளில் உணர்ந்துவிட்டன. ஆகவே 2019 லோக் சபா தேர்தலுக்கு முன்கூட்டி ஆயத்தம் செய்கிறபோது, காங்கிரஸ் கட்சியே அதன் தலைவர்  ராகுல் காந்தியைப் பற்றி “அவர் ஒரு பூணூல் அணிந்த ஹிந்து” என்று பகிரங்கமாக அறிவித்தது.  அதைத் தொடர்ந்து ராகுலும் தான் இன்ன கோத்திரம் என்பதை குறிப்பிட்டு சொல்லி, தான் ஒரு ஹிந்து, காஷ்மீர் பிராமணர்,  என்றும் விளக்கி சொல்லிக் கொண்டார்.  அப்பா செய்ய வேண்டாததைப்  பையன் செய்தார்.
  
ஸ்டாலினைப் பொறுத்தவரை, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அளவுக்கு வக்கிர எண்ணமும் அதை மறைக்கும் சாமரத்தியமும் அவர் மகனுக்குக் கிடையாது. அதனால்தான், “என் மனைவியே தினமும் கோவிலுக்குப் போகிறவர்” என்ற அளவிறக்காவது – அதாவது, திமுக ஹிந்து மக்களைப் புறக்கணிக்கும் கட்சி அல்ல, நான் அப்படியான தலைவர் அல்ல, என்று சொல்வதற்காக - அவர் தயங்காமல் பேச முடிகிறது. இருந்தாலும் அவர் திமுக-வின் பழைய பிம்பத்தைச் சார்ந்துதான் ஒரு கட்டாயத்துடன்  நிற்க முடிகிறது. அதைத் தாண்டி அவருக்குத் தெளிவான சிந்தனையும் இல்லை, திடமான மனதும் இல்லை.

தமிழக ஹிந்துக்கள் திமுக-வை எதிர்த்து அதிக அளவில் ஓட்டளித்தால், ஸ்டாலினும் ராகுல் காந்தி மாதிரி தந்தை பேசாதாதைப் பேசுவார். அப்போது,  “எங்கள் குடும்பம் ஹிந்து குடும்பம்தான். என் குல தெய்வம் இந்த மாவட்டத்தில் இந்த ஊரில் தான்  இருக்கிறது. என் மனைவி கோவில்களுக்கு சென்றும் நான் மானசீகமாகவும் பல கடவுள்களை வழி படுகிறேன். கழகத் தொண்டர்கள்  அனைவரையும் ‘ஒன்று தொழுவோம் வா’ என்று அன்புடன் அழைக்கிறேன்” என்ற அறிவிப்பை ஸ்டாலினிடம்  எதிர்பார்க்கலாம் அல்லவா?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2020

Thursday 16 July 2020

கந்த சஷ்டி கவசத்தைப் பழித்த வெறுப்பர் கூட்டம்


        -- ஆர். வி. ஆர்
'கறுப்பர் கூட்டம்' என்று அதிகம் பெயர் தெரியாத ஒரு அமைப்பு திடீரென்று பெரிய செய்தியாகி விட்டது. பெரிதாக எதுவும் சாதித்தோ சேவை செய்தோ அல்ல. பிக்பாக்கெட் ஆசாமி வங்கிக் கொள்ளையில் பிடிபட்டு பேர் பரவிய வகையில் அந்த அமைப்பு பிரபலம் அடைந்திருக்கிறது.

மிக அதிகமான  ஹிந்துத் தமிழர்கள் இறைவனைத்  துதிக்கும் பாடல், கந்த சஷ்டி கவசம். தங்களின் எல்லாவித நலங்களுக்காக முருகப்பெருமானின் அருள் கிடைக்க அவர்கள் உச்சரிக்கும் பிரார்த்தனை அது. 

கந்த சஷ்டி கவசத்தின் சில வரிகளை மிக வக்கிரமாக விமரிசித்து ஆபாசமாகக் கிண்டல் செய்து  யூ-டியூபில் ஒரு வீடியோ வெளியிட்டது கறுப்பர் கூட்டம். அந்த பாதகச் செயலுக்கு ஹிந்து மக்களிடைய பலமான எதிர்ப்புகள் இப்போது கிளம்பி இருக்கின்றன.  அந்த அமைப்பின் மேல் வழக்கு பதியப்பட்டு  ஒருவர் கைதாகி இருக்கிறார்.

தமிழ்நாட்டில் ஹிந்துக்களையும் ஹிந்து தெய்வங்களையும் பகிரங்கமாக இழித்துக் கேவலம் செய்வதைத் தொடங்கியவர் 'தந்தை பெரியார்' என்று அழைக்கப்படும் ஈ.வே.ராமசாமி. அவர் தொடங்கியது திரரவிடர் கழகம். அவரது சீடர்கள் ஆரம்பித்த அரசியல் கட்சி தி.மு.க. இந்த அமைப்புகளின் தலைவர்கள் தங்களைப் 'பகுத்தறிவுவாதிகள்' என்று பெருமையாகச் சொல்வதுண்டு. அவர்களது பகுத்தறிவு, ஹிந்துக்களையும் ஹிந்துக் கடவுள்களையும், ஹிந்து பழக்க வழக்கங்களையும் வெறுப்புடன் இகழ்வது, கேலி செய்வது, மற்ற மதத்தவர்களின் ஒன்றுசேர்ந்த ஓட்டையும் தோள் வலிமையையும் மதித்து அவர்களுக்கு வணக்கம் சொல்வது.

ஒருவர் கற்றவராக இருக்கலாம், கெட்டிக்காரராக இருக்கலாம், திறமைசாலியாக இருக்கலாம் - அதே சமயம் நல்ல நோக்கமும் தூய சிந்தனையும் அற்றவராக இருக்கலாம், பாசாங்கு வாதங்கள் செய்யலாம். ஈ.வே.ரா-வும் தி.மு.க-வின் கலைஞர் கருணாநிதியும் அப்படியானவர்கள். அவர்கள் மறைந்தாலும் அவர்களின் போக்கும் நோக்கமும் இன்றும் தொடர்வதால் அவர்களைக் குறிப்பிடும் அவசியம் இருக்கிறது.    

ஹிந்துக்களின் ஓட்டுக்களை வாங்கி, ஆட்சியைப் பலமுறை பிடித்து  அதன் பலவாறான பலன்களைக் கண்டவர் கருணாநிதி. அந்தப் பலன்கள்  இன்று அவர் பேரன் வரை வளர்ந்து கொள்ளுப்பேரனையும் தொடுகின்றன. அவர் ஹிந்துக்களை இகழ்ந்தவாறே தலைமுறைகளுக்கும் அப்படிப் பயன் அடைந்தவர்.  இருந்தாலும்தனது 78-வது வயதில் ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் நடந்த கூட்டத்திற்கு சென்று அந்த மதத்தினர் முன்னிலையில் ஹிந்துக்களை பழித்துப் பேசினார். அதாவது,   "இந்து என்றால் திருடன்" என்று ஏதோ ஒரு அகராதியில் இருப்பதாக நாக்கு கூசாமல் பேசியவர், வழக்கு வந்தவுடன் “உள்ளம் கவர்ந்த கள்வன்” என்ற விதத்தில் பேசியதாக தப்பிக்கும் விளக்கத்தை கொடுத்தார்.  பின்னர் அவரது மகன் ஸ்டாலின்ஒரு திருமணத்திற்குச் சென்று, ஹிந்து திருமண மந்திரங்களை இழிவு செய்து அவற்றைக்  ‘கேவலம்’ என்று  மைக்கில் வர்ணித்தார். ஹிந்துக்களின் அமோக ஆதரவுடன் அடுத்த முதல் அமைச்சர் ஆக ஆசைப்படும் தற்போதைய தி.மு.க தலைவர் இவர்.

கறுப்பர் கூட்டத்திற்கு தி.க-வின் ஆதரவு உண்டு. தி.க-விற்கு தி.மு.க-வின் நேசமும் பாசமும் உண்டு. மூன்று அமைப்புகளுக்கும் ஹிந்து மதத்தின் பால் உதாசீனம் அல்லது  இகழ்ச்சி உண்டு. அப்படியானால் கறுப்பர் கூட்டத்தின் இழிச் செயலுக்கு ஆதரவும் பாதுகாப்பும் எதுவரை நீளும் என்று ஊகிக்கலாம்.

எல்லா மதங்களிலும் கடவுள் நம்பிக்கைகள், புராணக் கதைகள், ஸ்தோத்திரங்கள், பழக்க வழக்கங்கள் என்று உண்டு. அவைகள் நமது தர்க்க வாதங்களுக்கும் கேள்விகளுக்கும் தர்க்க ரீதியான பதில்கள் தராது. ஒரு மதத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள், மற்றவர்களைப் புண்படுத்தாமல் தங்கள்  மார்க்கத்தில்  தங்கள் வாழ்க்கையில் கவலைகளையும் துயரங்களையும் எதிர் கொள்கிறார்கள், அமைதி தேடிக் கொள்கிறார்கள் என்றால் மற்ற யாரும் அதில் குறுக்கீடு செய்யக் கூடாது. இது போக, போலீஸ்காரர்கள் இல்லாமல் மக்களிடையே ஓரளவிற்கு  இணக்கத்தையும் கட்டுப்பாட்டையும் கூட கடவுள் நம்பிக்கை ஏற்படுத்துகிறது.   

பல மொழிகள் பேசும் பரந்து விரிந்த இந்தியா ஒரே தேசமாக மக்கள் மனதில் நிலைத்து நிற்பதற்கான காரணம், அதன் அரசியல் சட்டம் அல்ல - மிகப் பெருவாரியான ஹிந்துக்கள், நாட்டின் பல பகுதிகளில் நிறைந்திருக்கும் புண்ணிய ஸ்தலங்கள், புண்ணிய நதிகள் மற்றும் புண்ணிய கடல்பகுதிகளில் நாட்டம் கொண்டு ‘அந்தப் பிரதேசங்களை உள்ளடக்கிய நாடு எம் நாடு’ என்று மனதில் போற்றுகிறார்கள். அதனால்தான் இந்தியா எளிதாக ஒன்றுபட்டு நிற்கிறது.

மதத்தின் துணை இல்லாமல், வழிபாடுகள் செய்யாமல்,  ஒருவர் தன் வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களை சந்திக்க முடியும் என்றால் அவர் அப்படி இருக்கலாம். அப்படிப்பட்ட எவரையும் ‘கோவிலுக்கு வா, தெய்வ நம்பிக்கை வை, பிரார்தனை செய்’ என்று ஹிந்து மதம் சொல்வதில்லை, ஹிந்துக்களுக்கும் அப்படி விலகி இருக்கும் மனிதரை சட்டை செய்வதில்லை. இவ்வளவு பெருந்தன்மையான மதத்தினரின் ஓட்டுக்களை வாங்கி ஆட்சியில் அமர்ந்து வேண்டியதை அனுபவித்து அந்த மக்களின் மதத்தையும் மத நம்பிக்கைகளையும் இழித்துப் பேசுவது அற்பமானது, அநாகரிகமானது, அயோக்கியத்தனமானது. சமீப காலம்  வரை இதை சுருக்கென்று உணராத பெருந்தன்மை கொண்டவர்களாக ஹிந்துக்கள் இருந்தார்கள்.

ஹிந்துக்களின் மத நம்பிக்கையை தி.க-வும், தி.மு.க-வும் அவர்கள் தாங்கிப் பிடிக்கும் எந்தக் கூட்டமும் குலைக்காது. தமிழக ஹிந்துக்களும், தங்களின் நம்பிக்கைகளை ஏளனம் செய்பவர்களை எதிர்க்கும் உணர்வை இப்போது பரவலாகப் பெற்றுவிட்டார்கள். இது வாக்குச் சாவடியிலும் காட்டப் பட்டால்தான் ஹிந்து மத எதிர்ப்பின் அரசியல் பின்புலம் உடையும். 

தீவிரமான எதிர்ப்புகளைப் பார்த்து, கறுப்பர் கூட்டம் தனது ஆபாச விமரிசன விடியோவிற்காக மன்னிப்பு கேட்டுவிட்டது, தனது வீடியோவை யூ-டியூபிலிருந்து அகற்றிவிட்டது என்ற செய்தி வருகிறது. ஆனால் தமிழகத்தின்  ஹிந்து மத எதிர்ப்பாளர்கள் சீன தேசம் மாதிரி. இவர்களின் பின்வாங்கல் எதுவும் நிரந்தரம் அல்ல. இவர்களின் அரசியல் ஆதரவாளர்களுக்கு, ஹிந்து மத வெறுப்பினால் பதவிகளும் கிடைக்காது, அதன் பலன்களும் கிட்டாது என்று உறுதியாகத்  தெரிய வைத்தால்தான், அவர்களின் பகுத்தறிவு வாலைச்   சுருட்டும்.

ஹிந்துக்கள் நிரம்பிய இந்தியா, சட்டத்தினால் மட்டும் ஒன்றாக நிலைப்பதில்லை. அது போல, ஹிந்து மதத்தை எதிர்ப்பவர்களையும் வெறும் சட்ட நடவடிக்கையால் மட்டும் வீழ்த்த முடியாது. ஒன்று பட்ட அதே ஹிந்து மத உணர்வால்தான் முடியும். அதற்கான வேளை விரைந்து வருகிறது.  

ஹிந்து மத எதிர்ப்பை ஒரு அரசியல் கட்சி வெளிப்படையாகக் காட்டிய மாதிரி, ஹிந்து மத ஆதரவையும் ஒரு அரசியல் கட்சி பகிரங்கமாக  வெளிப்படுத்தி அதற்காகப்  பாடுபட்டால் சமாதானத்தை எப்போதும் விரும்பும் ஹிந்துக்களுக்கு நல்லது. இதுவும் நடக்கிறது.  இன்னமும் நல்லது நடக்கட்டும்.

* * * * *

Copyright © R. Veera Raghavan 2020



Wednesday 8 July 2020

நண்பன் மறைந்தாலும் நட்பு ஏன் மரிப்பதில்லை?


        -- ஆர். வி. ஆர்

உங்கள் வயதை ஒட்டிய நீண்ட கால நண்பரை, உங்கள் இருவருக்கும் உடல் சக்தியும் தெம்பும் இருக்கும்போது இழந்திருக்கிறீர்களா? அப்போது நீர் கோர்த்த கண்களும் கனத்த இதயமும் உங்கள் வெட்கத்தை விலக்கி உங்கள்   நட்பை உணர்த்தும். சமீபத்தில் எனது நாற்பத்தி-ஐந்து ஆண்டுகால நண்பரின் அகால மறைவு  அப்படி எனக்கு உணர்த்தியது.   

கல்லூரி நாட்களில் இருந்தே மணிவண்ணன்  மதுரையில் நடைபெற்ற பல கவியரங்கங்களில் மேடை ஏறிப்  பாராட்டு பெற்றவர்.  நல்ல கவிஞர்.  வசீகர மேடைப் பேச்சாளர்.  இந்த அடையாளங்கள் இன்னும் சிலருக்கு இருந்தாலும், தேசப் பற்றும் தேசிய சிந்தனைகளும் கொண்டு  தனியாகத் தெரிந்தவர் அவர். காமராஜர் மீது அபிமானம் பெருகி அவர் பிறந்த ஊரையும் சிலாகித்து, “விருதுநகர்ப் புழுதி நம் திருவெண்ணீறு” என்று மேடையில் பாடியவர்.    

மணிவண்ணனின் தமிழ் அறிவும், எனது தமிழார்வமும், எங்கள் இருவரது பொதுநல நோக்கமும் எங்களை ஒன்று சேர்த்தன. அப்போது மதுரை சட்டக் கல்லூரியின்   மாணவர்கள் நாங்கள் - அவர் எனக்கு அடுத்த வருடம்.  வகுப்புகள் முடிந்தவுடன் பல நாட்கள்  நாங்கள்  இருவரும் கல்லூரியில் இருந்து பேசிக்கொண்டே மத்தியப்  பேருந்து நிலையம் வரை 6 கி.மீ நடந்தோம். நட்பும் வளர்ந்தது.  

அந்த நாட்களில் எனக்குத் தமிழ் மொழியின் அழகு அவர் மூலம் தெரிந்தது.  தமிழில் எனக்குத் துளிர்விட்ட ஆரவத்தை அவர் மேலும் தூண்டினார்.

கல்லூரி வருடங்கள் முடிந்த பின், 'ஜன்னல்' என்ற பெயரில்  மாத அச்சுப்  பத்திரிகை ஆரம்பித்து அதற்கு ஆசிரியராக இருந்தார் மணிவண்ணன். ஒரு வருட காலம் பத்திரிகை நடந்தது. அதற்கான கடைசிப் பக்கத்தை 'கடைசிக் கம்பி' என்று பெயரிட்டார். அதை நான் எழுதினேன்.  பத்திரிகையின் சிறிய வாசகர் வட்டத்தில் அந்தப் பக்கத்திற்குப் பரவலான அங்கீகாரம் கிடைத்தது. அந்த வாய்ப்பைத் தந்த  ஆசிரியரையும் நான் மறக்கவில்லை.

சமீபத்திய வருடங்களில்,  நாங்கள் இருவரும் நரேந்திர மோடியைப் போற்றுதலுக்கு உரிய அரிய பெரிய தலைவராகப் பார்த்தோம், அது பற்றிப் பேசினோம்.   

இள வயதில் எனக்கு எழுதுகின்ற வாய்ப்புத் தந்தவர் என்பதைத் தவிர்த்து, மணிவண்ணனிடம் ஒரு உண்மையான சிறப்பு உண்டு. எங்கள் நட்பு உருவான காலத்திலேயே கவிஞர், மேடைப் பேச்சாளர் என்று அவர் அறியப்பட்டவர், ஆனால் எனக்கு அது போன்ற சிறப்பு கிடையாது. நிறைய  பத்திரிகைகள் படிப்பேன், அரசியலையும் பொது விஷயங்களையும் ஆர்வமாக விவாதிப்பேன், அவ்வளவுதான்.   அந்த குணங்களும்  அவரிடம் உண்டு.  ஆனால் தனக்கிருந்த அதிகத் தகுதிகள் காரணமாக என்னிடமும் பிற  நண்பர்களிடம் மணிவண்ணன் ஹோதா, தலைதூக்கல்  என்று காட்டியதில்லை. நட்பில் நேராக எளிமையாக இருந்தார்.  அதனால்தான் அவரது நட்பு வட்டம் விரிந்து பலர் மனதையும் அவர் கவர்ந்தார். கடைசி வரை அப்படி இருந்தார்.

ஒருவரின் புத்தியும் திறமையும் இயற்கை கொடுப்பது. படித்து ஆராய்ந்து அறியும் விஷயங்கள் கூட, அதற்கான புத்தியும் திறமையும்  இல்லாமல் நடக்காது. இருக்கும் திறமையை  எப்படி வெளிக்  கொண்டுவருவது என்பதும் ஒரு திறமைதான், அதுவும் இயற்கையின் பரிசுதான். இதற்கு அப்பால் எதற்கும் அதிர்ஷ்டம் வேண்டும் என்பது வேறு விஷயம். ஆகையால், ஒரு திறமைசாலிக்கு மூன்று   வினாடிக்கு மேல் சுய பெருமை காண்பதற்கு ஒன்றும் இல்லை – மூன்று வினாடிக்குள், தன் திறமைக்குத் தான் காரணம் இல்லை என்பது புரிந்துவிடும்.  இதை உணர்பவருக்கு உள் மனதில் பணிவு இருக்கும். மணிவண்ணன் அப்படித் தெரிந்தார்.        

சிலருடன் அறிமுகங்கள் சந்தர்ப்ப வசத்தில் கிடைத்து,  ஒரு வசதிக்காக இரு பக்கமும்  நிலைத்திருக்கும்.  அதில் ஒருவர் வேலை மாறி, வீடு மாறி, ஊர் மாறி, உலகம் மாறிப் போனால் மற்றவருக்கு  வருத்தம் இருக்காது.  இருப்பவர்கள், விட்ட வசதியை வேறு இடத்தில் பார்த்துக் கொள்வார்கள் – பழைய உடையை விட்டுப் புது உடை உபயோகிப்பது போல்.  ஆனால் மனதுக்கு இதமான நண்பர் அப்படி அல்ல.  நினைவிருக்கும் வரை உங்கள் மனது  அவரை மறக்காது. அவர் மறைந்து போனாலும் அவரது நினைப்பே உங்கள் மனதை நிரப்பும். அந்த உணர்வை நீங்கள் இன்னொருவரிடம் சரியாகப் பகிர்ந்து கொள்ள முடியாமல்  போகலாம். ஆனால் உங்களுக்குள் அவரது நட்பிற்கு முடிவு கிடையாது. ஏனென்றால், இதமளிக்கும் எதையும் மறக்குமா மனது?
* * * * *

Copyright © R. Veera Raghavan 2020