Wednesday 8 July 2020

நண்பன் மறைந்தாலும் நட்பு ஏன் மரிப்பதில்லை?


        -- ஆர். வி. ஆர்

உங்கள் வயதை ஒட்டிய நீண்ட கால நண்பரை, உங்கள் இருவருக்கும் உடல் சக்தியும் தெம்பும் இருக்கும்போது இழந்திருக்கிறீர்களா? அப்போது நீர் கோர்த்த கண்களும் கனத்த இதயமும் உங்கள் வெட்கத்தை விலக்கி உங்கள்   நட்பை உணர்த்தும். சமீபத்தில் எனது நாற்பத்தி-ஐந்து ஆண்டுகால நண்பரின் அகால மறைவு  அப்படி எனக்கு உணர்த்தியது.   

கல்லூரி நாட்களில் இருந்தே மணிவண்ணன்  மதுரையில் நடைபெற்ற பல கவியரங்கங்களில் மேடை ஏறிப்  பாராட்டு பெற்றவர்.  நல்ல கவிஞர்.  வசீகர மேடைப் பேச்சாளர்.  இந்த அடையாளங்கள் இன்னும் சிலருக்கு இருந்தாலும், தேசப் பற்றும் தேசிய சிந்தனைகளும் கொண்டு  தனியாகத் தெரிந்தவர் அவர். காமராஜர் மீது அபிமானம் பெருகி அவர் பிறந்த ஊரையும் சிலாகித்து, “விருதுநகர்ப் புழுதி நம் திருவெண்ணீறு” என்று மேடையில் பாடியவர்.    

மணிவண்ணனின் தமிழ் அறிவும், எனது தமிழார்வமும், எங்கள் இருவரது பொதுநல நோக்கமும் எங்களை ஒன்று சேர்த்தன. அப்போது மதுரை சட்டக் கல்லூரியின்   மாணவர்கள் நாங்கள் - அவர் எனக்கு அடுத்த வருடம்.  வகுப்புகள் முடிந்தவுடன் பல நாட்கள்  நாங்கள்  இருவரும் கல்லூரியில் இருந்து பேசிக்கொண்டே மத்தியப்  பேருந்து நிலையம் வரை 6 கி.மீ நடந்தோம். நட்பும் வளர்ந்தது.  

அந்த நாட்களில் எனக்குத் தமிழ் மொழியின் அழகு அவர் மூலம் தெரிந்தது.  தமிழில் எனக்குத் துளிர்விட்ட ஆரவத்தை அவர் மேலும் தூண்டினார்.

கல்லூரி வருடங்கள் முடிந்த பின், 'ஜன்னல்' என்ற பெயரில்  மாத அச்சுப்  பத்திரிகை ஆரம்பித்து அதற்கு ஆசிரியராக இருந்தார் மணிவண்ணன். ஒரு வருட காலம் பத்திரிகை நடந்தது. அதற்கான கடைசிப் பக்கத்தை 'கடைசிக் கம்பி' என்று பெயரிட்டார். அதை நான் எழுதினேன்.  பத்திரிகையின் சிறிய வாசகர் வட்டத்தில் அந்தப் பக்கத்திற்குப் பரவலான அங்கீகாரம் கிடைத்தது. அந்த வாய்ப்பைத் தந்த  ஆசிரியரையும் நான் மறக்கவில்லை.

சமீபத்திய வருடங்களில்,  நாங்கள் இருவரும் நரேந்திர மோடியைப் போற்றுதலுக்கு உரிய அரிய பெரிய தலைவராகப் பார்த்தோம், அது பற்றிப் பேசினோம்.   

இள வயதில் எனக்கு எழுதுகின்ற வாய்ப்புத் தந்தவர் என்பதைத் தவிர்த்து, மணிவண்ணனிடம் ஒரு உண்மையான சிறப்பு உண்டு. எங்கள் நட்பு உருவான காலத்திலேயே கவிஞர், மேடைப் பேச்சாளர் என்று அவர் அறியப்பட்டவர், ஆனால் எனக்கு அது போன்ற சிறப்பு கிடையாது. நிறைய  பத்திரிகைகள் படிப்பேன், அரசியலையும் பொது விஷயங்களையும் ஆர்வமாக விவாதிப்பேன், அவ்வளவுதான்.   அந்த குணங்களும்  அவரிடம் உண்டு.  ஆனால் தனக்கிருந்த அதிகத் தகுதிகள் காரணமாக என்னிடமும் பிற  நண்பர்களிடம் மணிவண்ணன் ஹோதா, தலைதூக்கல்  என்று காட்டியதில்லை. நட்பில் நேராக எளிமையாக இருந்தார்.  அதனால்தான் அவரது நட்பு வட்டம் விரிந்து பலர் மனதையும் அவர் கவர்ந்தார். கடைசி வரை அப்படி இருந்தார்.

ஒருவரின் புத்தியும் திறமையும் இயற்கை கொடுப்பது. படித்து ஆராய்ந்து அறியும் விஷயங்கள் கூட, அதற்கான புத்தியும் திறமையும்  இல்லாமல் நடக்காது. இருக்கும் திறமையை  எப்படி வெளிக்  கொண்டுவருவது என்பதும் ஒரு திறமைதான், அதுவும் இயற்கையின் பரிசுதான். இதற்கு அப்பால் எதற்கும் அதிர்ஷ்டம் வேண்டும் என்பது வேறு விஷயம். ஆகையால், ஒரு திறமைசாலிக்கு மூன்று   வினாடிக்கு மேல் சுய பெருமை காண்பதற்கு ஒன்றும் இல்லை – மூன்று வினாடிக்குள், தன் திறமைக்குத் தான் காரணம் இல்லை என்பது புரிந்துவிடும்.  இதை உணர்பவருக்கு உள் மனதில் பணிவு இருக்கும். மணிவண்ணன் அப்படித் தெரிந்தார்.        

சிலருடன் அறிமுகங்கள் சந்தர்ப்ப வசத்தில் கிடைத்து,  ஒரு வசதிக்காக இரு பக்கமும்  நிலைத்திருக்கும்.  அதில் ஒருவர் வேலை மாறி, வீடு மாறி, ஊர் மாறி, உலகம் மாறிப் போனால் மற்றவருக்கு  வருத்தம் இருக்காது.  இருப்பவர்கள், விட்ட வசதியை வேறு இடத்தில் பார்த்துக் கொள்வார்கள் – பழைய உடையை விட்டுப் புது உடை உபயோகிப்பது போல்.  ஆனால் மனதுக்கு இதமான நண்பர் அப்படி அல்ல.  நினைவிருக்கும் வரை உங்கள் மனது  அவரை மறக்காது. அவர் மறைந்து போனாலும் அவரது நினைப்பே உங்கள் மனதை நிரப்பும். அந்த உணர்வை நீங்கள் இன்னொருவரிடம் சரியாகப் பகிர்ந்து கொள்ள முடியாமல்  போகலாம். ஆனால் உங்களுக்குள் அவரது நட்பிற்கு முடிவு கிடையாது. ஏனென்றால், இதமளிக்கும் எதையும் மறக்குமா மனது?
* * * * *

Copyright © R. Veera Raghavan 2020

9 comments:

  1. A very good homage to manivannan RVR !!!.

    ReplyDelete
    Replies
    1. இது என்ன self appreciationஆ 😉

      Delete
    2. அன்புள்ள திரு கண்ணன்: என் பெயர் கொண்ட ஒரு வாசக நண்பர் - வேறொரு நபர் - எழுதிய 'கமெண்டை', கட்டுரை ஆசிரியரான நானே என்னைப் பாராட்டி எழுதினேன் என்று தவறாக நினைத்து வீட்டிர்கள் - ஆர்.வி.ஆர்

      Delete
    3. I knew him briefly only, as a student from the same school that studied. May Time heal your loss.

      Delete
  2. Can understand how you feel. May the Almighty give you and the bereaved family solace.

    ReplyDelete
  3. Dear Shri R.V.

    I have been following your blogs invariablly. Intitutively I perceive you as a good hearted well meaning person with an understanding of life. I have observed that you practically echo all my views.I don't read Tamil or English papers/magazines but pick my views on events and issues from perusal of net and TV English channels. I have a macro view of our nation and it's growth and the various economic,social and geo political issues confronting it and as to how the present Govt. Is sincerely trying to resolve it. Keep up with your constructive observations and in enhancing the public's general awareness of the right and benefucial approach you advocate on variousissues on national growth and well being.

    Let Shri.Manikandan now float in an ocean of tranquility having rid himself of his body-mind carriage of burden.
    Regards. V.Raghuraman

    ReplyDelete
  4. Excellent sir..shall i share this article..need your permission.
    Radhekrishna.
    https://www.facebook.com/srinivasan.kannan.77/timeline?lst=100000964744167%3A100000964744167%3A1594523185

    ReplyDelete