Tuesday 17 August 2021

ஜாதிகள் இருக்குதடி பாப்பா!

        -- ஆர். வி. ஆர்

  

“சாதிகள் இல்லையடி பாப்பா” என்று மகாகவி பாரதி பாடியதன் உள்ளர்த்தம் என்ன? அதை அடுத்த வரியில் அவரே சொல்கிறார் – “குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” என்று. அதாவது, நம்மிடையே பல ஜாதிகள் இருந்தாலும் அதன் பேரில் நமக்குள் உயர்வு-தாழ்வு எண்ணங்கள் கூடாது என்ற மேலான  சிந்தனையை பாரதி வெளிப்படுத்துகிறார்.

அறுபது ஆண்டுகளுக்கு முன்பாகத் தமிழ்நாட்டில் பல ஹிந்து ஆண்கள் – அதிலும் நாற்பத்தைந்து அல்லது ஐம்பது  வயது கடந்தவர்கள் – அவர்களின் ஜாதிப் பெயரோடு அறியப்பட்டார்கள். உதாரணம்: மஹாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, உ. வே. சாமிநாத ஐயர், ஏ. ராமசாமி முதலியார்,  முத்துராமலிங்கத் தேவர், எஸ். எஸ். ராமசாமி படையாட்சி.

 

ஊரில் எங்கள் தற்போதைய வீட்டை அடுத்த இரண்டு வீடுகளைப் ‘பிள்ளை வீடு’, ‘தேவர் வீடு’ என்றுதான் மரியாதையோடு குறிப்பிட்டோம். மூன்று ஜாதிகளான எங்களுக்குள் மிகுந்த இணக்கம் உண்டு.  அங்கு நான் முன்னர் வசித்த தெரு, தானப்ப முதலி தெரு. 1960-களில் பிராமணர்கள் மிக அதிகமாக வாழ்ந்த தெரு அது. அதை ஒட்டியது கோபால கொத்தன் தெரு. யாருக்கும் ஒரு பிரச்சனையும் இல்லை. பின்வந்த காலத்தில் தமிழ்நாட்டில் மெள்ள மெள்ள நிலமை மாறிவிட்டது. அதன் சமீபத்திய அறிகுறி நமது மாநில பாடப் புத்தகங்களில் தோன்றுகிறது.   

 

சில தமிழஞர்கள், சாதனையாளர்கள், அவர்களது சிறப்புப் பணி பற்றிய குறிப்புகள் தமிழக பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம் பெறுகின்றன. வழக்கமாக அவர்கள் பெயர்களின் பின்னால் வரும் ஜாதி அடையாள வார்த்தையைக் கத்தரித்து தமிழ்நாடு அரசு – பாடநூல் கழகம் மூலமாக - புதிய பாடப் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது. உ. வே. சாமிநாத ஐயர் ‘சாமிநாதனார்’ என்றும், மீனாட்சி சுந்தரம் பிள்ளை ‘மீனாட்சி சுந்தரனார்’ என்றும், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை ‘ராமலிங்கனார்’ என்றும் அச்சில் சுருங்குகிறார்கள்.

 

தெருப் பெயர்களில் ஜாதியைக் குறிக்கும் பகுதியை முன்பே அரசாங்கம் நீக்கிவிட்டது. இப்போது பாடப் புத்தகங்களைக் கையில் எடுக்கிறது. மேலாகப் பார்த்தால் இந்த நடவடிக்கைகள் சரியாகத் தோன்றலாம். ஆனால் இதற்கு உண்மையான காரணம், அரசாங்கமும் முன்னணி அரசியல்வாதிகளும் காண்பிக்கும் போலியான சமூக அக்கறையும் அதன் அதிர்வலைகளும்.  ஏன், எப்படி?

 

ஒரு ஹிந்துவாகிய எவரும் இன்ன ஜாதியைச் சார்ந்தவர் என்பதை சட்டம் அடையாளம் கொள்ளத் தயாராகவும் ஆர்வமாகவும் இருக்கிறது. பலரும் தங்கள் ஜாதியை அரசாங்கத்திடம் நிரூபித்து அதற்கான ஜாதிச் சான்றிதழைப் பெற்று கல்விக்கூட சேர்க்கைகளிலும் அரசாங்க வேலைகளிலும் அவர்களுக்கு சட்டம் தரும் சலுகைகளைப் பெறலாம். அதற்கான பட்டியலில் அரசாங்கம் எவ்வளவு ஜாதிகளைச் சேர்க்க முடியுமோ, அவைகளைச் சேர்த்து வருகிறது. அவர்களுக்கு எவ்வளவு அதிகச் சலுகைகள் தரமுடியுமோ, அதைப் போட்டி போட்டுச் செய்கிறது. இந்தப் பலன்களுக்காகவும் பல ஜாதிகள் மேலும் தனிப்படுவதும் வலுப்படுவதும் இயற்கை. அப்படியானால் ஒருவரின் ஜாதிப் பெயரைக் குறிக்கும் வார்த்தையைத் தெருப் பெயர்களில் இருந்தும் பாடப் புத்தகங்களில் இருந்தும் அரசாங்கம் ஏன் நீக்க வேண்டும்? ஏன் இந்த முரண்பாடு?

 

ஜாதிப் பெயர்கள் கத்தரிப்பு பற்றி அரசாங்கம் நினைக்கக் கூடிய, சொல்ல முடிகிற காரணம் இதுதான்: “தெருப் பெயர்களில், பாடப் புத்தகங்களில் ஒருவரது ஜாதி அடையாளம் வெளிப்பட்டால் அது ஜாதிப் பாகுபாடுகளைக் களைய உதவாது. அதனால் அரசு குறிப்பிட்ட ஜாதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து மற்ற ஜாதிகளுக்கு முக்கியத்துவம் குறைப்பதாகத் தோன்றும். பல ஜாதி மக்களிடையே கசப்புணர்ச்சி ஏற்படும். மற்ற விபரீதங்களும் நடக்கலாம். இதையெல்லாம் தவிர்த்து சமூக நல்லிணக்கத்தை வளர்த்து சட்டம்-ஒழுங்கையும் பராமரிக்க அரசு இத்தகைய நடவடிக்கை எடுக்கிறது.“ இது போலியான காரணம், எதையோ மறைத்து நம்மை ஏமாற்றுகின்ற விளக்கம். இதைக் கேட்டால் உங்களுக்குப் பூ வாசம் வரலாம். எதிராளி உங்கள் காதில் வைத்த பூவின் மணம் உங்கள் மூக்கையும் எட்டுமே!


ஒரு அடிப்படை விஷயத்தைத் தெளிவு படுத்திவிட்டு மேலே பார்க்கலாம். “ஜாதிகளே இருக்கக் கூடாது. அவைகள் ஒழிய வேண்டும். அப்போதுதான் மக்களிடையே மேல்ஜாதி-கீழ்ஜாதி எண்ணங்கள், ஜாதிப் பூசல்கள் மறையும்” என்று யாராவது பேசினால் அது ஆழமில்லாத சிந்தனை.  ஜாதி ஒழிப்பு நடக்காது, அது தேவையும் இல்லாதது – இது தனியான வேறு விஷயம்  

 

ஜாதி வித்தியாசத்தை மனதில் வைத்து ஒருவர் மற்றவரைத் தாழ்வாகப் பார்ப்பது, வெறுப்பது அல்லது பதிலுக்கு வெறுப்பது என்பது பெரு நகரங்களில் மிகக் குறைவு. கிராமப் புறங்களில் இருக்கும். இதற்கு முக்கிய  காரணம், கிராமங்களில் மனிதர்கள் தங்கள் ஜாதியினரோடு அதிகம் ஒட்டுகிறார்கள், வேற்று ஜாதியினரோடு – குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களோடு – அதிகம் கலந்து பழகுவதில்லை. நகரங்களில், அதுவும் பெரு நகரங்களில், ஒவ்வொரு ஜாதியினரும் பல ஜாதி மக்களோடு பழகும் வாய்ப்பும் நிர்பந்தமும் உண்டாகிறது. அடுத்தவர் என்ன ஜாதிக்காரர் என்பது பெரும்பாலும் ஒருவருக்குத் தெரிவதும் இல்லை. இதனால் நகரங்களில், முக்கியமாகப் பெரு நகரங்களில்,  எல்லா ஜாதி மக்களிடையே ஒருவித கட்டாய இணக்கம் ஏற்பட்டு அது வாழ்க்கை முறை ஆகிறது.

 

மற்ற ஒரு ஜாதி மக்களை சமமாக மதிக்காமல் கீழாக நினைப்பதும் அவர்களுக்குக் தீங்கு செய்ய எண்ணுவதும் முதலில் பண்புக் குறைவானது. அது அறியாமையின் விளைவு. இரு தரப்பினரும் நமது தேசத்து மக்கள் என்பதால், அரசியல் தலைவர்கள் இந்தப் பிரச்சனையை ஊதிப் பெரிதாக்காமல் அனுதாபத்துடனும் அக்கறையுடன் அணுக வேண்டும். ஆனால் அதற்கான தூய சிந்தனையும் மக்கள் மனம் தொடும் சக்தியும் இப்போதய அரசியல் தலைவர்களுக்கு இல்லை.  ஓட்டு வாங்கும் திறமை வேறு, மக்கள் மனதை ஆகர்ஷிக்கும் சக்தி வேறு. ஓட்டு வாங்குவதிலேயே குறியாக இருக்கும் நமது அரசியல் தலைவர்கள், இந்தப் பிரச்சனையிலும் தங்களுக்கு என்ன அரசியல் பலன் கிடைக்குமோ அதை நாடுகிறார்கள்.

 

ஜாதி பேதங்களினால் அராஜகம் அல்லது பெரிய சட்ட மீறல்கள் ஏற்பட்டால் போலீஸ் நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும். மற்றபடி முன்னணி அரசியல் தலைவர்கள் ஒவ்வொரு ஜாதி மக்களிடமும் “உங்கள் ஜாதி மனிதர்களின் உயர்வுக்கும் அவர்களுக்கு அதிக அரசாங்க சலுகைகள் கிடைக்கவும் எங்கள் கட்சி வழி செய்யும். ஆகையால் உங்கள் ஜாதி ஓட்டுக்களை எங்கள் கட்சிக்கே அளியுங்கள்” என்கிற ரீதியில் நடந்து கொள்ளக் கூடாது, அப்படி சமிஞைகள் தரக் கூடாது. ஆனால் நமது முன்னணி அரசியல் தலைவர்கள் அதைத்தான் செய்கிறார்கள். இவர்களா ஜாதிப் பாகுபாடுகளை  நீக்க நிஜமாகவே முனைவார்கள்?

 

எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் இருப்பதால் மேல் ஜாதி-கீழ் ஜாதி என்ற நினைப்பில் ஏற்படும் அநீதி அக்கிரமங்களை அந்தச் சட்டம் பார்த்துக் கொள்ளும் என்று முன்னணி அரசியல்வாதிகள் வேறு ஒன்றும் செய்வதில்லை. ஊழல் தடுப்பு சட்டம் தரும் கடுகளவு பலனைத்தான் இந்தச் சட்டமும் தருகிறது. இரண்டிலும் அதுவே போதும் என்று முன்னணி அரசியல் தலைவர்கள் உள்ளூர எண்ணக் கூடும்.

 

‘தாழ்த்தப் பட்ட மக்களைப் பாதுகாக்க நாங்கள் இருக்கிறோம். நாங்கள்தான் அவர்களின் அரண்’ என்ற தோற்றம் தந்து அந்த மக்களின் நம்பிக்கையைப் பெற்று கமுக்கமாகக் கொழிக்கும் தலைவர்கள் உருவாகிவிட்டார்கள். சில குறிப்பிட்ட ஜாதிகள் நலனுக்காக என்று அப்பட்டமாகச் செயல்பட்டு கூட்டணி பேரங்களில் ஜெயித்து, பதவி அல்லது ஆட்சிக் கனவில் மிதக்கும் தலைவர்களும் உண்டு. அனைத்து ஜாதி மக்கள் ஓட்டுக்களையும் அதிகம் பெற அந்தந்த ஜாதியிலிருந்து குட்டித் தலைவர்களையும் பொடித் தலைவர்களையும் வளர்த்து தேர்தல் வேட்பாளர்களாக நியமித்துப் பல பாதைகளில் தனக்கு, தன்னைச் சார்ந்தவருக்கு, தன் குடும்பத்திற்கு வளம் பெருகச் செய்த பெரிய தலைவர்களும் உண்டு.

 

இப்படியான இரட்டை வேடத் தலைவர்களைத்தான் தமிழகம் பல பத்தாண்டுகளாகப் பார்க்கிறது. இவர்களின் அரசியல் ஏற்றத்திற்கு ஜாதிப் பிரிவினைகள் ஒரு டானிக், அவ்வளவுதான். ஒரு மந்திரத்தால் திடீரென்று தமிழ்நாட்டில் அனைத்து ஜாதி மக்களிடையே நல்லிணக்கம் ஏற்பட்டுவிட்டால் இந்தத் தலைவர்களின் அரசியல் பிழைப்பு தடுமாறும். இருந்தாலும், ஏதோ ஒரு உயர்ந்த நோக்கத்திற்காக  ஜாதிகளைக் குறிக்கும் சொற்களை தெருப் பெயர்கள் மற்றும் பாடப் புத்தகங்களிலிருந்து நீக்கிவிட்டதாக இவர்கள் தோற்றம் தருவது போலித்தனமும்  ஏமாற்று வேலையும் அல்லவா?

 

கடைசியாக, நாம் ஒரு குறிப்பிட்ட வருடத்தைக் கவனத்தில் கொள்ள சினிமாவின் பக்கம் சிறிது திரும்பலாம். சிவாஜி கணேசன் நடித்து 1966-ல் வெளிவந்த ஒரு வெற்றித் திரைப்படம் ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’. அது மாதிரி இன்றைய தயாரிப்பாளர்கள் ஒரு புதிய சினிமாவுக்குப் பெயர் வைக்க மாட்டார்கள். ‘மோட்டார் சுந்தரம்’ என்பதோடு நிற்கும். அல்லது நவீனமாக, ‘மெர்சிடிஸ் சுந்தா’. ஏனென்றால், 1966 வரை தமிழகம் கண்ட முன்னணி அரசியல் தலைவர்கள் வேறு, சமூகத்தில் பொதுவாக அவர்கள் ஏற்படுத்திய தாக்கம் வேறு. 1967-ல் ஆட்சி மாற்றம் வந்து இன்றுவரை திராவிடக் கட்சிகளின் தலைவர்கள் மாறி மாறித் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். மக்கள் மனதில் அவர்கள் ஏற்படுத்துகிற தாக்கமும் கவலையும் அதிர்வலைகளும் வேறு. இந்தத் தலைவர்கள் பெயரளவிற்கு ஏதோ செய்வார்கள். அவ்வளவுதானே?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2021

 

 

 

Thursday 5 August 2021

அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: வாட்ஸ்-அப் வேதாந்தம்

 

        -- ஆர். வி. ஆர்

 

வாட்ஸ்-அப்பே பொழுதுபோக்கு, இதுல என்ன வேதாந்தம்னு  கேக்கறேளா?

 

எங்கயுமே பாருங்கோ, பிக்கல் பிடுங்கல் இல்லாம நிம்மதியா இருக்க வழி தெரிஞ்சா, அதை வேதாந்தம்னு  உசத்தியா நினைக்கலாம். இப்ப நீங்களும் ஏதாவது ஒரு வாட்ஸ்-அப் குரூப்ல இருப்பேள் – ரண்டு மூணு குரூப்லயும் இருப்பேள். அதுல ஒருத்தருக்கொருத்தர் மாறுபட்ட கருத்து சொல்றது, முறைச்சுக்கறது, ஒருத்தர் கோச்சுண்டு விலகறதுன்னு நடந்திருக்குமே?  இதுக்குத்தான் வாட்ஸ்-அப் வேதாந்தம் நிவாரணமா இருக்கும்னு சொல்றேன்.

 

நீங்க எந்த மாதிரியான குரூப்ல இருக்கேள்? முதல்ல சொந்தக்காரா குரூப்லதான் எல்லாரும் சேருவா. கூடப் பிறந்தவா, அதை சேர்த்து அப்பா சைடு மனுஷான்னு ஒரு குரூப் இருக்கும். அடுத்தது, கூடப் பிறந்தவா, அதை சேர்த்து அம்மா சைடு மனுஷான்னு ஒரு குரூப் இருக்கும். பொண்கள்னா, அதிகமா ஒண்ணு ரண்டு குரூப்பும் அமையும் - ஆத்துக்காரரோட சேர்ந்து அவருக்கு அம்மா சைடு, அப்பா சைடுன்னு கூடலாம்.  நம்ம ஜனங்கள் மாதிரி வாட்ஸ்-அப் கம்பெனிக்கு இவ்வளவு பிரபல்யம்  யார் குடுக்க முடியும்?

 

சொந்தக்காரா உங்களுக்கு அமையறதுதான். கூடப் பிறந்தவாளுக்கு அடுத்த ஸ்தானத்துல இருக்கறவாளைப் பாத்தா, “எப்பிடி இருக்க? அம்மா அப்பா சௌக்கியமா?”ன்னு கேட்டு தொடர்பு வைச்சுக்கறது முதல் படி. அடுத்த படிக்கும் போய் அவாகிட்ட அன்னியோன்னியம் வச்சுக்கறது அந்த அந்த மனுஷாளைப் பொறுத்தது. மத்தபடி சொந்தக்காராட்ட சம்பிரதாய தொடர்பு வைச்சுக்க, நல்லது கெட்டது விஷயம் சொல்றதுக்கு வாட்ஸ்-அப் ஒரு வழி, அவ்வளவுதான்.

 

சொந்தக்காரா குரூப்ல உறவுக்கு உதவறதைப் பேசிண்டு, துக்கடா விஷயங்களைப் பகிர்ந்துண்டு, அபிப்பிராய பேதம் எதையும் வாட்ஸ்-அப்புல காட்டிக்காம நீங்க போயிண்டே இருக்கணும். நேரப் பாத்தா ஜாக்கிரதையா பேசிச் சிரிச்சுண்டே போறமே, அதுமாதிரி குரூப்லயும் இருக்கணும்.  நாலு விரல் மடக்கி கட்டை விரலை நிமித்திக் காட்டறது, கை தட்டறது, சிரிக்கற மூஞ்சி, சிரிசரின்னு சிரிக்கற மூஞ்சின்னு பொம்மைச் சித்திரங்கள் இருக்கே, அதுகளைப் போட்டுண்டே இருங்கோ. அதை விட்டுட்டு, ரகசிய கோப தாபங்களை முன்னுக்குக் கொண்டு வந்து “நான் ரைட்டு, நீ தப்பு”ங்கற தொனில எந்த விஷயத்தையும் நீங்க வாட்ஸ்-அப்புல சொந்தக்காரா கிட்ட விவாதம் பண்ண வேண்டாம். இதை மீறி நீங்க வார்த்தைகளை விட்டா, ஒருத்தர் ரண்டு பேர் திடீர்னு குரூப்லேர்ந்து விலகிப்பா. விலகினவாளுக்கு நெருங்கினவாளும் உங்களை விரோதமா பார்ப்பா. சம்பத்தப் பட்டவா அப்பறம் நேர்ல பாத்துண்டா உள்ளுக்குள்ள நெளிய வேண்டிருக்கும். பாருங்கோ, வாட்ஸ்-அப் ஆரம்பிச்ச நோக்கமே இங்க பழுதாப் போறது. இது வேண்டாமே?

 

இப்ப வயசான பலபேர், ஸ்கூல் காலேஜ் ஒண்ணா முடிச்ச பிரண்ட்ஸை தேடிப் பிடிச்சு வாட்ஸ்-அப் குரூப் வச்சுக்கறா. அந்த நண்பர்களோட பேசினாலே, நாம படிச்ச கால அளவுக்கு வயசு குறைஞ்ச மாதிரி ஜில்லுன்னு ஒரு உணர்வு இருக்கும். இதான், இந்த குரூப்போட பெரிய பிரயோஜனம். இந்த குரூப்ல யாரும் அரசியல் பேசாம இருந்தாதான், இது ஆரோக்கியமா இருக்கும். இல்லாட்டி மக்கர் பண்ணும். வெளில போன ஒருத்தரை மத்தவா தாஜா பண்ணி கட்டி இழுத்துண்டு வரணும். சொந்தக்காரா மாதிரி இவா தொடர்பும் நமக்கு அவசியம். அசட்டுப் பேச்சு பேசி நம்மளா அதைக் கெடுத்துக்கப் படாது.  

 

சிலபேர் வேற வகைல தெரிஞ்சவாளா அறிமுகம் ஆகி, அதுல ஒருத்தர் வாட்ஸ்-அப் குரூப் ஆரம்பிச்சு மத்தவாளை சேர்த்துக்கறா. அதுல முக்கியமா பொது விஷயங்களை பகிர்ந்துப்பா. பொது விஷயம்னா, அரசியல் விமரிசனங்கள் அதுல முக்கியமா வரும். அதுபோக சமூக விஷயங்கள் பத்தின கருத்துக்களும் அதுல எட்டிப் பாக்கும். இந்தமாதிரி குரூப்ல சூடா ஏதாவது கொதிச்சுண்டே இருக்கும். மனசுக்கு சேதாரம் இல்லாம இதுல நீங்க சேர்ந்து தங்கணும்னா ரண்டு விஷயம் இருக்கு. முதல்ல, இந்த குரூப்போட அரசியல் எண்ணம், சமூகப் பார்வை என்னவோ, அதுக்கு நீங்க உடன்படணும் – அது பொருந்தி வந்துதான் உங்களை அந்த குரூப்ல சேர்த்திருப்பா. அடுத்தது, குரூப்ல வர்ற சில விமரிசனங்கள் உங்களுக்கு சரின்னு படலையா, அதைப் பத்தி அட்மின்னு ஒருத்தர் இருக்காரே அவர் முடிவு எடுக்கட்டும்னு விட்டுடுங்கோ. இந்த மாதிரி ‘தெரிஞ்சவா குரூப்’ல அட்மின் முடிவெடுக்க விட்டாதான் ஒரு ஒழுங்கு இருக்கும். குரூப்ல இருக்கறவர் அட்மினுக்கு எதிராவே கச்சை கட்டினா சரிப்படாது. இன்னொண்ணு, தெரிஞ்சவா மத்தில அபிப்பிராயங்கள் முன்ன பின்னதான் இருக்கும். எல்லாத்துக்கும் பிலுபிலுன்னு சண்டை போடணும்னு இல்லை. நீங்க பேசாம இருந்தா மத்தவா சொன்னதை அப்படியே ஏத்துக்கறேள்னு அர்த்தமும் இல்லை. சரி, அட்மின் அனுமதிக்கற சில விஷயங்கள் சகிக்கலை, மகா தப்புன்னு நீங்க நினைச்சா குரூப்புக்கு அமைதியா டாட்டா காட்டிட்டு மத்த வேலையைப் பாருங்கோ.   தினம் உங்களுக்கு நிறைய நேரம் கிடைக்கும்.

 

இதெல்லாம் தாண்டி நீங்க வேற கட்சியாவும் இருக்கலாம். அதாவது, “வாட்ஸ்-அப்பே தொந்தரவா இருக்கு. அதுல சேர்ந்தா, தினம் அம்பது நூறுன்னு மெசேஜ் வநதுண்டே இருக்கு.  ஒவ்வொண்ணும் தந்தி மாதிரி எப்ப வேணும்னாலும்  வரது. டிங் டிங்னு ஃபோன்ல  சத்தம் வேற. ஒரு வீடியோவைத் திறந்தாத்தான் அது எதைப் பத்தின்னு தெரியறது, அதுவும் மியூசிக், கிராபிக்ஸ்லாம் முடிஞ்சதுக்கு அப்பறம்தான் என்ன சமாசாரம்னே புரிய ஆரம்பிக்கறது. எக்கச்சக்க மெசேஜ் வந்தா, நேத்திக்கு என்ன பாத்தேன்னு இன்னிக்கு ஞாபகம் இல்லை. நாளானா ஃபோனும் அடைஞ்சு போய் அதுல குப்பைய நீக்கிண்டே இருக்கணும். இதுனால நல்ல புஸ்தகங்கள் படிக்க முடியலை. முக்கிய வேலைகளும் தடைப் படறது. இனிமே வாட்ஸ்-அப்பே வேண்டாம்”னு சொல்றேளா? அப்படின்னா நீங்க சாதாரண வேதாந்தி இல்லை. மகரிஷி. குருவே நமஹ.

 

* * * * *

Copyright © R. Veera Raghavan 2021

Friday 30 July 2021

ஜார்ஜ் பொன்னையா: "பிச்சை ஓட்டின் பெருமை எமதே!"

-- ஆர். வி. ஆர்


கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு கிறிஸ்தவப் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா. சமீபத்தில் அங்கு ஒரு கண்டனக் கூட்டத்தில் அவர் பேசிய வீடியோக் காட்சி பலரது மொபைல் போன்களில்  தெரிந்தது. அவரது சில வார்த்தைகள்:

 

“திமுக-வினரே, நீங்க உங்களோட திறமையை வச்சு ஓட்டு வாங்கி தேர்தல்ல ஜெயிக்கலை. அது கிறிஸ்தவ மக்களும் முஸ்லிம் மக்களும் உங்களுக்குப் போட்ட பிச்சை.”

 

“எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ, செருப்புப் போடமாட்டார். ஏன்னா பூமாதேவியை  செருப்பால மிதிக்கமாட்டாராம். நாங்க ஏன் ஷூ போடறோம்னா, பாரத மாதாவோட அசிங்கம் நம்மகிட்ட தொத்திரக் கூடாதுன்னு. அதுனால நமக்கு சொறி சிரங்கு வந்துரக் கூடாதுன்னு ......”

 

"நாங்க நாப்பத்திரண்டு சதவிகிதம் இருந்தோம். இப்ப அறுபத்திரண்டு சதவிகிதம் தாண்டியாச்சு. இன்னும் கொஞ்சம் நாள்ள எழுபது சதவிகிதம் ஆயிருவோம்.  நாங்க வளர்றதை தடுக்க முடியாது.....”

 

          திமுக-வின் சட்டசபைத் தேர்தல் வெற்றிக்கான காரணம் குறித்துப் பொன்னையா பேசியதை அந்தக் கட்சி அதிகாரபூர்வமாக ஆட்சேபிக்கவில்லை. பொன்னையா வெளியிட்டது  பொய்யான கருத்தா அல்லது கசப்பான உண்மையா? எது சரி என்பதை நீங்களே ஊகிக்க முடியும். உங்கள் சரியான ஊகத்தை ஊர்ஜிதம் செய்ய இரண்டு காட்சிகளை நீங்கள் மனக்கண்ணில் பாருங்கள்.   

 

நல்ல உடம்புள்ள ஒருவன் தலை சொறிந்து பல்லிளித்து உங்களிடம் அடிக்கடி பிச்சை எடுத்து வந்தால் உங்களுக்கு அவன்மீது இளக்காரம் வரும். கோபத்தில் அவனைப்  “பிச்சைக்காரப் பயலே” என்று நீங்கள் திட்டினாலும் அவன் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டான். ‘எல்லாரும் கேக்கறபடி அவர் என்னைத் திட்டியிருக்க வேண்டாமே’ என்று அவன் நினைத்தாலும், உங்களிடம் கையேந்துவதை நிறுத்த மாட்டான்.  

 

   அதே சமயம்,  ராமகிருஷ்ண மடம்  போன்ற ஒரு தொண்டு நிறுவனத்தால் நீங்கள் ஈர்க்கப்பட்டு அதற்கு ஒரு பெரிய தொகையை அவ்வப்போது நன்கொடையாக வழங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதைப் பிச்சை அளிப்பது என்று நீங்கள் நினைக்கமாட்டீர்கள். உங்களுக்கு மன நிறைவு தருகிற ஒரு நல்ல காரியமாகத்தான் பார்ப்பீர்கள். அந்த நிறுவனமும் தங்களின் சமுதாய நலப் பணிகளுக்காகப்  பெறும் நன்கொடைகளைப் பிச்சை வாங்குவது என்று நினைக்காது. இப்படி இருக்கையில், உங்களுக்குக் கிறுக்குப் பிடித்து அந்தத் தொண்டு நிறுவனத்தைப் பார்த்து ‘பிச்சை எடுக்கிறவர்களே!’ என்று நீங்கள் இழித்துப் பேசினால், பிறகு அவர்கள் உங்களிடம் நன்கொடை பெறமாட்டார்கள். அதற்கான மானம் மரியாதை அவர்களிடம் உண்டு.  

 

இந்த இரண்டு உதாரணங்கள் மூலமே பொன்னையாவின் எண்ணமும் திமுக-வின் நிலையும் பளிச்சென்று தெரியும்.

 

‘ஓட்டுப் போடுவது குடிமக்களின் ஜனநாயகக் கடமையும் பொறுப்பும். அதன் மூலம் நல்லாட்சி தரும் ஒரு கட்சியைத் தேர்ந்தடுப்பது, நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையானது’ என்று பொன்னையா நினைத்தாரா? இல்லை. ‘நம்மைத் கும்பிட்டு நம் ஸ்தாபன காரியங்களுக்கு உதவுகிற ஒரு விசுவாசமான வேலைக்காரன் அரசாங்கத்தைப் பிடிக்க, நம் சமூகத்து ஓட்டுக்களை அவனுக்குப் பிச்சையாக அளிக்கச் செய்வோம்’ என்கிற யுக்தியைத்தான் பொன்னையா வெளிப்படையாகப் பேசிவிட்டார்.  இருவரின் போக்கும் நம் தேசத்திற்கு நல்லதல்ல.

 

ஹிந்துக்களின் கௌரவத்தையும் உரிமைகளையும் பா.ஜ.க. பாரபட்சமின்றிப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் 2014-லிருந்து அதிகமான ஹிந்துக்கள் அந்தக் கட்சிக்கு நாடெங்கும் ஆதரவு தருகிறார்கள். அது நமது கடமை, அது நமக்கும்  நமது தேசத்திற்கும் அதன் பாரம்பரியத்திற்கும்  நல்லது என்ற நினைப்போடு அப்படி ஆதரவு அளிக்கிறார்கள். தாங்கள் பா.ஜ.க-விற்கு ஓட்டளிப்பது அந்தக் கட்சிக்குப் போடும் பிச்சை என்று ஹிந்துக்களோ ஹிந்து மதத் தலைவர்களோ நினைப்பதில்லை. ஆனால் ஜார்ஜ் பொன்னையா மாதிரியான கிறிஸ்தவப் பாதிரியார்களும் வேறு சில சிறுபான்மை மதத் தலைவர்கள் மட்டும் தாங்கள் அளித்து வரும் திமுக ஆதரவை ஏன் அவர்கள் இடும் பிச்சை என்று எண்ணுகிறார்கள்? காரணம் இருக்கிறது.

 

தங்களின் பேச்சு, செயல்களின் மூலம் ஹிந்துக்களை, ஹிந்து உணர்வுகளை உதாசீனம் செய்யும் கட்சியாகத் திமுக பல சமயம் தோற்றம் அளிக்கிறது.  விவரம் தெரிந்த நிறைய ஹிந்துக்களும் அப்படி உணர்கிறார்கள். ஹிந்து உணர்வுகளைப் புறம் தள்ளாமல் மதிக்கும் கட்சியாக பா.ஜ.க  தலையெடுத்து விட்டதால், தன்னைப் பா.ஜ.க-வின் எதிரி என்று காட்டிக் கொள்ள திமுக தனது ஒரிஜினல் குணாதிசயத்தை இன்னும் வலுவாக நிலைநிறுத்த முனைகிறது. அதற்கு ஒரு வழி, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மத அமைப்புகளிடம் பாசம், நேசம், பவ்யத்தை அதிகம் காட்டி தேர்தல் வெற்றிக்காக  அவர்களின் ஆதரவைத் தொடர்ந்து வேண்டி நிற்பது.  அந்த மத அமைப்புகளின் சில தலைவர்களுக்கும் திமுக-வின் இந்தப் போக்கு உதவுகிறது. இருந்தாலும் தங்கள் கட்சியின், தங்கள் கட்சித் தலைவர்களின் வசதி வளர்ச்சிக்காக ஒரு கட்சி இப்படிப் பணிந்து வந்தால், அதற்குத் துணை செய்யும் அந்த மதத் தலைவர்கள் தாங்கள் செய்யும் உதவியைப் பிச்சை என்று கருதுவது இயற்கை.

 

ஆனால் ஒன்று. திமுக-விற்கு ஓட்டளிக்கும் சாதாரண சிறுபான்மை மக்கள் யாரும் தாங்கள் அந்தக் கட்சிக்குப் பிச்சை எதுவும் போடுவதாக நினைப்பதில்லை.  அப்படியெல்லாம் நினைக்க அவர்களுக்குத் திராணியும் இல்லை, ஒரு பலனும் இல்லை. அவர்களே பாவம், அவர்களின் மதத் தலைவர்கள் பலரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்கள்.  சாதாரண சிறுபான்மை மனிதர் யாராவது ‘பாரத மாதாவின் மீது என் கால் பட்டால் சொறி சிரங்கு வரும்’ என்று தீர்மானித்து, பாரத மாதாவைக் குறிப்பாக அப்படி நினைத்தா செருப்பு அணிவார்? பொன்னையா மாதிரி குரூர ஹிந்து-விரோத எண்ணம் கொண்ட ஒரு மதத் தலைவர்தான் அப்படி எண்ணவும்  பேசவும்  முடியும்.  

 

   ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் தங்கள் எண்ணிக்கை எழுபது சதவிகிதம் எட்டப் போகிறது என்று ஹிந்துக்களைக் கீழ்நோக்கும் இறுமாப்புடன் கொக்கரித்தார் பொன்னையா. ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியாவில், ஹிந்துக்களின் உயர்ந்த நேசத்தைப் பெற்று அரசியல் சட்டம் வழியாக சில பிரத்தியேக உரிமைகளையும் பெற்றவர்கள் இந்திய சிறுபான்மையினர். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் ஹிந்துக்களுக்கு அதே மாதிரியான விசேஷ உரிமைகள் தரப்பட வேண்டும் என்று இந்தியாவின் சிறுபான்மை மதத் தலைவர்கள் குரல் கொடுப்பதில்லை. அதைக்கூட ஒதுக்கலாம், அதனால் பாதகமில்லை. ஆனால் இந்தியாவிற்குள்ளேயே ஹிந்துக்களின் சகிப்புத் தன்மையையும் தோழமை உணர்வையும் சிறுபான்மை மதத் தலைவர்கள் பலர் ஒரு பலவீனமாகக் கருதுகிறார்கள். ஜார்ஜ் பொன்னையா அதன் வெளிப்பாடு. இந்தப் போக்கு நிதானமாக, ஆனால் உறுதியாக, களையப்பட வேண்டும். ஹிந்துக்கள் பொறுத்திருக்கட்டும். ஆனால் விழித்திருக்கட்டும்.


* * * * *


Copyright © R. Veera Raghavan 2021


Monday 19 July 2021

நாயுடன் நான் 20 நாட்கள்

         -- ஆர். வி. ஆர் 



ஆக்ஸிஸ். அதுதான் அவன் பெயர். என் வீட்டருகில் அந்தப் பெயர் கொண்ட ஒரு வங்கியின் ஏ.டி.எம் அறை இருக்கிறது. அதுவே அந்தத் தெரு நாயின் இளைப்பாறும் இடமானதால் அந்த வங்கியின் பெயரை அவனுக்குச் சூட்டினோம். தடியான தேகம், களையான முகம் உடையவன்.

 

பக்கத்துக் காலனிவாசி ஒருவர் ஆக்ஸிஸை இரண்டு வயது வரை வீட்டில் பராமரித்துப் பின் ஊர் மாறியபோது எங்கள் தெருவில் விட்டு நழுவினார். கைவிட்ட அரக்கரை மன்னித்து அக்கம் பக்கத்தினருடன் சிநேகம் காட்டி அந்த ஏ.டி.எம்-மின் ஏ.சி குளிர்நிலையில் தினமும் பலமணி  நேரம் சுகித்து வளர்ந்தான் ஆக்ஸிஸ்.  இப்போது அவன் வயது  எட்டோ ஒன்பதோ.  

 

எனது குடியிருப்புக் கட்டிடத்தின் எதிர்ப்புறத்தில் சற்றுத் தள்ளி இருக்கிறது அந்த ஏ.டி.எம். அதனுள் ஆக்ஸிஸ் போக நினைத்தால்முதலில் அதன் கண்ணாடிக் கதவு  ஓரத்தைச் சற்று மூக்கால் தள்ளுவான். கிடைத்த இடைவெளியில் முகத்தைச் சொருகி வழியை அகலப்படுத்தி உடலையும் நுழைத்தெடுத்து ஓரமாகப் படுப்பான். பின்னர் வெளியேறுகிற எண்ணம் வந்தால், உள்ளே வந்த ஒருவர் கதவை இழுத்து வெளியே செல்கையில் அவரை நாசூக்காகத் தொடர்வான். ஏ.டி.எம்-மில் அவன் இருக்கும்போது அங்கு நுழைபவர் அவனைப் பார்த்து அஞ்சாதிருக்க, வருகின்ற மனிதரைத் துளியும் ஏறெடுத்துப் பார்க்காமல் ஒரு துணிமூட்டை மாதிரிப் பாவமாகக் கிடப்பான் ஆக்ஸிஸ். காலப் போக்கில் அந்த ஏ.டி.எம் கஸ்டமர்களுக்கு அவன் இருப்பது பழகிவிட்டது. நம்பர் ஒன்று இரண்டு என்ற செயல்களை ஏ.டி.எம்-மிற்குள் நிகழ்த்தாமல் அவன் சமர்த்தாகவும் இருப்பான்.  ஜென்டில்மேன்!

 

தெருவில் வந்து போகிற எவரும் தன்னைக் கவனித்தால், அதுவும் கருணையுடன் பார்த்தால், அவரைச் சரியாகக் குறிப்பான் ஆக்ஸிஸ். அவர் அருகே சென்று வாலாட்டி நட்பு காட்டி அவரிடம் பரிதாபம் ஊறவைப்பான். அதன் மூலம் அவர் பிஸ்கட்டோ வேறு உணவோ வாங்கித் தரத் தூண்டுவான். அருகில் உள்ள போட்டோ கடைக்காரரை வசியம் செய்து, அவர் தினமும் இரவு கடை அடைத்த பின் ஒரு பாக்கெட் பிஸ்கட்டை அவனுக்கு தானம் செய்யும் புனிதக் கடமையை அவருக்கு ஏற்படுத்தினான் ஆக்ஸிஸ்.

 

எனது குடியிருப்புக் கட்டிடத்தின் வாட்ச்மேனுக்கும் ஆக்ஸிஸ் தோஸ்த் ஆகி அவ்வப்போது சாப்பாடு பெற்றான்.  பிராணிகளை விரும்பும் என் மனைவியிடமும் அவனுக்கு எப்போதும் பிஸ்கட்டுகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒருவர் கொடுத்தால் போதும் என்று மனிதத்தனமாக நினைத்து நான் அவனுக்குத் தனியாகத் தீனி கொடுக்காமல் இருந்தேன் – ஆனால் என் லாஜிக் அவனிடம் எடுபடவில்லை. 

   

பல சமயம் எங்கள் காம்பவுண்டில் உள்ள கார்ப் பாதையில் ஆக்ஸிஸ் அமர்ந்திருப்பான். ஆனால் எங்கள் கட்டிடத்திற்குள் அவன் வருவதில்லை - எங்கள் வாட்ச்மேனும் அதை அனுமதித்ததில்லை. நான் வந்துபோகும்போது ஆக்ஸிஸை வாஞ்சையுடன் பார்ப்பதை அறிந்து, நான் அவனுக்குத் தீனி கொடுக்காத அதர்மத்தை நானே உணரும்படி செய்தான்.  நான் எனது காரில் ஏறும்போதோ, அல்லது திரும்பி வந்து இறங்கும்போதோ, அருகில் வந்து என் கால்களில்  உரசி அன்பாகக் குரைத்து என்னை உருக்கி  வழிப்படுத்தினான் ஆக்ஸிஸ். பிறகு நானும் அவனுக்கு பிஸ்கட் தோழன் ஆனேன். கில்லாடிப் பயல்!

 

ஒரு நாள் எங்கள்  வாட்ச்மேன் வேலையை விட்டான். வாரக் கணக்கில் வேறு வாட்ச்மேனும் கிடைக்கவில்லை. அப்போது பல சமயங்களில் எங்கள் மெயின் கேட்டும்  கட்டிடத்தின் பாதுகாப்புக் கதவும் திறந்திருக்க, ஆக்ஸிஸ் கட்டிடத்திற்குள் வந்து படியேறி மூன்றாவது மாடியில் உள்ள எனது குடியிருப்பின் வாசலில் அமர்ந்துவிட்டான்.  அவ்வப்போது வெளியே சென்றும் வருவான். இரண்டு நாட்கள் கழித்து, மேல் மாடி வீட்டுக் காரர் அவனைக் கட்டிடத்தில் இருந்து  விரட்ட எண்ணி ஒரு பிரம்பால் அடிக்க,  அவன் தற்காப்பில் பலமாக உறுமியும் குரைத்தும் அவரைப் பயமுறுத்தினான். சத்தம் கேட்டு வீட்டுக் கதவைத் திறந்த என் மனைவி திடுக்கிட்டு, இருவருக்கும் சமாதானம் சொல்லி ஆக்ஸிஸை எங்கள் வீட்டிற்குள் கூட்டி வந்தாள். அன்றிலிருந்து இருபது நாட்கள் அவனுடன் நாங்கள் வாழ்ந்தோம்.  

 

தெருவில் இல்லாத அரவணைப்பும் பாதுகாப்பும் என் வீட்டில் கிடைத்ததை உணர்ந்தான் ஆக்ஸிஸ். அதை எனக்கும் நன்றாக உணர்த்தினான். சிறுசக்கரங்கள் பொருத்திய நாற்காலியில் அமர்ந்து நான் என் அறைக்குள் வேலை செய்யும் போது, என் நாற்காலிக்கு மிகப் பின்னால் அனாயாசமாகப் பக்கவாட்டில் படுத்து உறங்குவான். அவனது மூக்கோ காலோ எனது நாற்காலிச் சக்கரத்தைத் தொட்டிருந்தாலும், நான் மூடத்தனமாக நாற்காலியைப் பின்நகர்த்தி  அவனது உடல் உறுப்புகள் எதையும் காயப்படுத்த மாட்டேன் என்று நம்பினான் – நான்தான் அப்படி நம்பவில்லை.

 

பல நேரங்கள் நான் நாற்காலியில் இருந்து வெளிவந்து, அருகில் கண்மூடிப் படுத்திருக்கும் ஆக்ஸிஸின் உடலை அரிசி மூட்டையைத் தள்ளுவது மாதிரி தரையிலேயே இரண்டடி தள்ளி நகர்த்தினாலும், கண்ணைத் திறக்காமல் அப்படியே கிடப்பான். சாலையில் ஒரு வண்டி தூரத்தில் வந்தாலே பாதுகாப்பாக விலகும் அவன், வீட்டிற்குள் என்னால் அவனுக்கு ஒரு தீங்கும் வராது என்று நம்பிவிட்டான். அவனது நம்பிக்கையைச் சோதிக்க, கண்மூடிக் கால்கள் நீட்டி அவன் பக்கவாட்டில் படுத்திருக்கும்போது அவன் உடல்மீது நான் எனது உள்ளங்காலை வைத்தாலும், அது நான் என்று தெரிந்து அசைய மாட்டான்.  மிக லேசாக என் காலை அவன் மீது அழுத்தினாலும் அப்படியே கிடப்பான்.  அடுத்து என் காலை அவன் கழுத்தின் மீது – அதாவது குரல்வளையின் மேல் - மெதுவாக வைத்துப் பார்த்தாலும், “இந்த ஆள் விளையாட்டுப் பிள்ளையாக இருக்கிறானே!” என்று அதையும் பொறுத்துக் கண் திறக்காமல் சுவாசிப்பான். ஒரு ஜீவன் உங்கள் மீது பூரண நம்பிக்கையும் நேசமும் வைத்து அதைத் தன் முகத்திலும் உடல் மொழியிலும் காட்டுவது உங்களுக்கு உன்னத அனுபவம்.

 

கழுத்துப் பட்டை, பிடி கயிறுடன் ஆக்ஸிஸை தினமும் இரண்டு வேளை வீதியில் கூட்டிச் சென்றேன். முன்பு அநாதையாகத் திரிந்த வருடங்களில் அவன் ஈர்த்த பழவண்டிக்காரன், கோவில் பக்கமான பூக்காரி, காற்று வாங்க உலாத்தும் வெப் டிசைனர், இன்னும் சிலர் இப்போது எதிர்ப்பட்டு அவனைத் தட்டி நலம் விசாரித்தனர். பிறகு அவனுடன் நான் வீட்டில் இருக்கையில் அவன் முதுகை வருடுவது,  கழுத்தைத் தடவிக் கொடுப்பது, அவனிடம் செல்லப் பேச்சுகள் பேசுவது என்பதாக எனக்கு நாட்கள் கழிந்தன. அவனது தெரு வாசத்தில் கடந்த சில வருடங்களாக அவனுக்கு மிகவும் பழக்கமாகி உணவும் அளித்து வந்த ஒரு பெண்மணி, இனிமேல் அவனைத் தனது வீட்டில் வைத்துப் பராமரிக்க விரும்பினார். நடைமுறை நன்மைகளுக்காக நானும் மனைவியும் அவனுக்கு விடைகொடுக்கச் சம்மதித்தோம்.    

 

இப்போது ஆக்ஸிஸ் அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்றுவிட்டான். அந்தக் குடும்பத்தினருக்கும் மகிழ்வைக் கொடுத்துத் தனது மகிழ்ச்சியைப் பெருக்கிக் கொள்கிறான் என்று தெரிந்தது. நமது வாழ்விலும் நாம் மகிழ்ச்சி காண்பதற்கான ஒரு பாதையை ஆக்ஸிஸ் வாழ்ந்து காட்டுகிறானோ?

 

* * * * *

Copyright © R. Veera Raghavan 2021

 

 

 

Sunday 13 June 2021

ஊரடங்கு வீதியில் ஒரு பெண் வக்கீல் போலீஸுடன் லடாய்.

          - ஆர்.வி.ஆர்


இது போன வாரம் சென்னையின் பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்தது. அந்த நிகழ்வின் வீடியோவை வாட்ஸ்-அப் உங்களுக்குக் காட்டியிருக்கும். 

 

காட்சியின் மத்திய நபர் ஆக்ரோஷத்தில் இருக்கும் ஒரு பெண் வக்கீல். அருகிலேயே வக்கீலுக்குப் படிக்கும் அவரது இள வயதுப் பெண். அவர்களுக்கு எதிரே போக்குவரத்துப் போலீஸ்காரர்கள் மூன்று நான்கு பேர். ஒரு போலீஸ்காரர் அந்த இளம் பெண் ஓட்டிவந்த காரை சேத்துப்பட்டில் நிறுத்தி, கொரோனா ஊரடங்கு நேரத்தில் அவர் வெளிவந்த காரணம், அவர் இ-பதிவு செய்தாரா என்று விசாரித்து அவருக்குச் சலான் வழங்க, அங்கிருந்தே அந்தப் பெண் தனது வக்கீல் தாயிடம் தகவல் சொல்ல அவரும் தனது சொகுசுக் காரில் ஸ்தலத்துக்கு விரைந்திருக்கிறார். வந்து போலீஸாரை நோக்கி வெடித்துப் பேசும் அந்தப் பெண் வக்கீலின் சுடு சொற்கள் சில:

 

"என்னைப் பாத்து யாருங்கறயா? இப்பக் காட்டட்டா? மவனே உன் யூனிபார்ம் கழட்டிருவேன்.  நான் அட்வகேட்."

 

(தெருவில் போகும் சில கார்களைக் காட்டி) "இதோ இந்தக் காரை நிறுத்து. அந்தக் காரை நிறுத்து. எல்லாக் காரையும் நிறுத்துரா"

 

"நான் எக்ஸ்டார்ஷன் போடட்டா?"

 

"மவனே சாவடிச்சுருவேன்."

 

(அவர் முகக் கவசம் அணியுமாறு ஒரு போலீஸ்காரர் சொன்னபோது)  "போடா!" 

 

போலீஸிடம் பேசுவதற்காக அவர் ஒரு விலை உயர்ந்த காரில் வந்திறங்கினார்.  அவர் ஒரு வக்கீல், அதுவும் பெண் வக்கீல்.  யாருக்காக வாதாட வந்தாரோ, அந்த நபர் பேச வந்தவரின் மகள், ஒரு இளம் பெண்ணும் கூட.  பகல் நேரம். தெருவில் வாகனங்கள் மற்றும் ஜனங்கள் உண்டு. போலீஸார் எச்சரிக்கையாக நடந்து கொள்ள இதற்கு மேல் ஒரு சூழ்நிலை வேண்டாம். அந்தப் பெண்ணிடம் போலீஸார் பேசிய வார்த்தைகள் - அதாவது முடிந்த அளவிற்குப் பேசியது - தவறில்லாதவை. அவர்களின் தொனியும் நிதானமானவை. அதற்கு நேர் மாறாக இருந்தது அந்தப் பெண்ணின் வீதிமணம் கமழும் உக்கிரப் பேச்சு. வீடியோ எல்லாவற்றையும் வெட்ட வெளிச்சமாக்குகிறது. 

 

தொழில் புரிபவர்கள் வக்கீல், டாக்டர், சார்டர்டு அக்கவுண்டன்ட் இப்படிப் பல துறைகளில் இருக்கலாம். ஒரு டாக்டரோ ஒரு சார்டர்டு அக்கௌண்டன்டோ தெருவில் நின்றுகொண்டு அந்த வீடியோக் காட்சி நபர் மாதிரி போலீஸ்காரர்களிடம் பேசுவதை நீங்கள் கற்பனை செய்ய முடியுமா?  அது நிஜத்தில் நடக்காது. காரணம், வக்கீல் தொழிலை விட மற்றவர்களின் தொழில் கடினமானது, கண்ணியமானது என்பதல்ல. 

 

பிற தொழில்களை விட கண்ணியம் குறைந்ததல்ல வக்கீல் உத்தியோகம். அவர்கள் படிக்கவேண்டியது ஏராளம்.  அதற்கு மேல் ஓட்டமும் நடையும் நிறைந்தது அவர்கள் வாழ்க்கை. நீதிபதியிடம் பணிவு காட்டி, கோர்ட்டில் நிதானமாக சாமர்த்தியமாகப் பேச வேண்டியவர்கள் வக்கீல்கள். வழக்குக்காக கட்சிக்காரர்களிடம் பேசுவதற்கே அவர்களுக்கு நேரம் போதாது. முழு விவரங்கள் கிடைக்காமல், பல அர்த்தங்கள் சொல்லும் சட்டத்திற்கு நடுவில் நீதிபதிக்குத் தங்கள் கட்சியை விளக்கி வாதாட வேண்டிய வக்கீல்களின் வேலை கடினமானது. எல்லாவற்றையும் வைத்தே அவர்களின் பணிக்கு "மேன்மையான தொழில்" (noble profession) என்ற பெயர் கொடுக்கப் பட்டது

 

சரி, அப்படியானால் இன்று பொதுமக்கள் மனதில் வக்கீல்களுக்கு ஏன் உயர்ந்த மதிப்பு இல்லை? அதை ஊர்ஜிதம் செய்கிற மாதிரி ஒரு பெண் வக்கீல் கூட போலீஸாரிடம் நடந்து கொள்கிறாரே? இதற்கும் காரணம் உண்டு.

 

வக்கீல்கள் அர்ப்பணிப்புடன் பணி புரிந்து சமூகத்தில் பெரிதும் மதிக்கப்பட்ட காலம் இருந்தது. சுதந்திரப் போராட்டத்தின் முன்னணியில் பல வக்கீல்கள் இருந்தார்கள். உதாரணம்: மஹாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல், சித்தரஞ்சன் தாஸ், ராஜாஜி மற்றும் தீரர் சத்தியமூர்த்தி. பிரிடிஷ் ஆட்சியின் போது அந்த வக்கீல்களுக்கும் மற்றவர்களுக்கும் அரசியல் என்பது தேச விடுதலைக்காகக் கூடுவதும் உழைப்புதும்தான்.  அவர்களின் விடுதலை உணர்வினால் அந்த வக்கீல்களுக்கு மக்கள் மதிப்பு அதிகரித்தது.  

 

சுதந்திரத்திற்குப் பிறகும் வக்கீல்களின் அரசியல் பங்கு இன்றுவரை தொடர்கிறது - இந்தக் கால அரசியலுக்கு ஏற்ப. இன்றைய இந்தியாவில் வக்கீல்கள் கணிசமாகத் திசை மாறியது, தடம் புரண்டது, நமது சீரழிந்த அரசியல் தளத்திலும் அதன் தொடராகவும்தான். 

 

சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் அரசியல் தலைவர்கள் நேராகவும் சுயநலம் அற்றவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் ஈர்த்த வக்கீல்களும் மற்றவர்களும் ஒரு பொதுக் காரியத்துக்கான அர்ப்பணிப்புடன் காணப்பட்டார்கள். சுதந்திரத்திற்குப் பின் - அதுவும் பிரதமர் சாஸ்திரிக்குப் பின் - அரசியலில் அர்ப்பணிப்பும் நேர்மையும் குறைந்து கயமையும் ஊழலும் படிப் படியாக வளர்ந்து இன்று பல அரசியல் கட்சிகளின் தலைமைப் பீடத்தில் அமர்ந்திருக்கின்றன.  சட்டத்தினால் மட்டும் அந்தத் தலைவர்களை, அவர்களின் கொட்டத்தை, ஒடுக்க முடியாது.  அவர்களோடு இணைந்து சில முக்கிய கட்சிகளின் அங்கமாக அரசியல் செய்யும் பெரிய வக்கீல்கள் இந்தியாவெங்கும் உண்டு. 

 

சில கட்சிகளின் தலைவர்களும் சில பெரிய வக்கீல்களும் தங்களின் சுய நலன்களுக்காக ஒருவரை ஒருவர் காப்பாற்றி புத்திசாலி அரசியல் செய்கிறார்கள்.  அந்தப் பெரிய வக்கீல்களைப் பார்த்து, அடுத்த அடுத்த மட்டத்தில் இருக்கும் சில வக்கீல்களும்  தங்கள் நிலைக்கு ஏற்ற பல அரசியல் கட்சித் தலைவர்களிடம் நெருக்கம் காட்டி அந்த அளவிற்கான தப்பு அரசியல் செய்கிறார்கள்.  கட்சித் தலைவர்களின் கண்ணசைவில் வக்கீல்களுக்கு அங்கே இங்கே சில பதவிகளும் கிடைக்கின்றன. 


அனைத்து விதமான அரசியல்வாதிகளோடு சேரும்போது, அப்படியான வக்கீல்களுக்குள்ளும் பந்தா, சவால், சவடால்,  அநாகரிகப் பேச்சு என்ற அரசியல் கல்யாண குணங்கள் ஊறுகின்றன.  அவர்களைக் கவனித்து, தாங்கள் அரசியலுக்கு வராவிட்டாலும் சுய கட்டுப்பாடில்லாத மற்ற வக்கீல்களுக்கும் இந்த குணங்கள் ஒட்டிக் கொள்கின்றன.  இதன் எதிரொலிதான் அந்தப் பெண் வக்கீல் நடுத்தெருவில் தன் நிலை இழந்து போலீஸாரிடம் காண்பித்த ஆட்டம்.  டாக்டர்கள், சார்டர்டு அக்கௌண்டன்டுகள், மற்ற தொழில் செய்பவர்கள் யாரும் அனேகமாக அரசியலுக்கே வருவதில்லை என்பதால் அவர்கள் மாசுபடவில்லை, தங்கள் கௌரவத்தைக் காப்பாற்றி வருகிறார்கள்.  இருந்தாலும் பொறுப்பான கௌரவமான வக்கீல்கள் பலரை இன்றும் எல்லா ஊர்களிலும் காணலாம் என்பதும் உண்மை.  

 

பிரச்சனை தலைக் காவிரியில் – அதாவது அரசியல் தலைவர்களிடம் – இருக்கிறது.   அதுவே மிகக் கலங்கி அழுக்கைப் பிரவாகமாகக் கீழே அனுப்புகிறது. அதை வக்கீல்கள் தூய்மைப் படுத்த முடியாது. தலைக் காவிரியே தானாகத் தெளிந்தால்தான் உண்டு. அந்தப் பெரு நதியோடு ஒரு உப நதியாகச் சேராமல் இருந்தால் வக்கீல்கள் தங்கள்  தொழில் குடும்பத்தைச் சீர் செய்து தங்களின் பழைய பெருமையைப் பெருமளவு மீட்க முடியும்.  அதுவோ இதுவோ நடக்கிற காரியமா? 

* * * * *

Copyright © R. Veera Raghavan 2021