Friday 30 July 2021

ஜார்ஜ் பொன்னையா: "பிச்சை ஓட்டின் பெருமை எமதே!"

-- ஆர். வி. ஆர்


கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு கிறிஸ்தவப் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா. சமீபத்தில் அங்கு ஒரு கண்டனக் கூட்டத்தில் அவர் பேசிய வீடியோக் காட்சி பலரது மொபைல் போன்களில்  தெரிந்தது. அவரது சில வார்த்தைகள்:

 

“திமுக-வினரே, நீங்க உங்களோட திறமையை வச்சு ஓட்டு வாங்கி தேர்தல்ல ஜெயிக்கலை. அது கிறிஸ்தவ மக்களும் முஸ்லிம் மக்களும் உங்களுக்குப் போட்ட பிச்சை.”

 

“எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ, செருப்புப் போடமாட்டார். ஏன்னா பூமாதேவியை  செருப்பால மிதிக்கமாட்டாராம். நாங்க ஏன் ஷூ போடறோம்னா, பாரத மாதாவோட அசிங்கம் நம்மகிட்ட தொத்திரக் கூடாதுன்னு. அதுனால நமக்கு சொறி சிரங்கு வந்துரக் கூடாதுன்னு ......”

 

"நாங்க நாப்பத்திரண்டு சதவிகிதம் இருந்தோம். இப்ப அறுபத்திரண்டு சதவிகிதம் தாண்டியாச்சு. இன்னும் கொஞ்சம் நாள்ள எழுபது சதவிகிதம் ஆயிருவோம்.  நாங்க வளர்றதை தடுக்க முடியாது.....”

 

          திமுக-வின் சட்டசபைத் தேர்தல் வெற்றிக்கான காரணம் குறித்துப் பொன்னையா பேசியதை அந்தக் கட்சி அதிகாரபூர்வமாக ஆட்சேபிக்கவில்லை. பொன்னையா வெளியிட்டது  பொய்யான கருத்தா அல்லது கசப்பான உண்மையா? எது சரி என்பதை நீங்களே ஊகிக்க முடியும். உங்கள் சரியான ஊகத்தை ஊர்ஜிதம் செய்ய இரண்டு காட்சிகளை நீங்கள் மனக்கண்ணில் பாருங்கள்.   

 

நல்ல உடம்புள்ள ஒருவன் தலை சொறிந்து பல்லிளித்து உங்களிடம் அடிக்கடி பிச்சை எடுத்து வந்தால் உங்களுக்கு அவன்மீது இளக்காரம் வரும். கோபத்தில் அவனைப்  “பிச்சைக்காரப் பயலே” என்று நீங்கள் திட்டினாலும் அவன் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டான். ‘எல்லாரும் கேக்கறபடி அவர் என்னைத் திட்டியிருக்க வேண்டாமே’ என்று அவன் நினைத்தாலும், உங்களிடம் கையேந்துவதை நிறுத்த மாட்டான்.  

 

   அதே சமயம்,  ராமகிருஷ்ண மடம்  போன்ற ஒரு தொண்டு நிறுவனத்தால் நீங்கள் ஈர்க்கப்பட்டு அதற்கு ஒரு பெரிய தொகையை அவ்வப்போது நன்கொடையாக வழங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதைப் பிச்சை அளிப்பது என்று நீங்கள் நினைக்கமாட்டீர்கள். உங்களுக்கு மன நிறைவு தருகிற ஒரு நல்ல காரியமாகத்தான் பார்ப்பீர்கள். அந்த நிறுவனமும் தங்களின் சமுதாய நலப் பணிகளுக்காகப்  பெறும் நன்கொடைகளைப் பிச்சை வாங்குவது என்று நினைக்காது. இப்படி இருக்கையில், உங்களுக்குக் கிறுக்குப் பிடித்து அந்தத் தொண்டு நிறுவனத்தைப் பார்த்து ‘பிச்சை எடுக்கிறவர்களே!’ என்று நீங்கள் இழித்துப் பேசினால், பிறகு அவர்கள் உங்களிடம் நன்கொடை பெறமாட்டார்கள். அதற்கான மானம் மரியாதை அவர்களிடம் உண்டு.  

 

இந்த இரண்டு உதாரணங்கள் மூலமே பொன்னையாவின் எண்ணமும் திமுக-வின் நிலையும் பளிச்சென்று தெரியும்.

 

‘ஓட்டுப் போடுவது குடிமக்களின் ஜனநாயகக் கடமையும் பொறுப்பும். அதன் மூலம் நல்லாட்சி தரும் ஒரு கட்சியைத் தேர்ந்தடுப்பது, நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையானது’ என்று பொன்னையா நினைத்தாரா? இல்லை. ‘நம்மைத் கும்பிட்டு நம் ஸ்தாபன காரியங்களுக்கு உதவுகிற ஒரு விசுவாசமான வேலைக்காரன் அரசாங்கத்தைப் பிடிக்க, நம் சமூகத்து ஓட்டுக்களை அவனுக்குப் பிச்சையாக அளிக்கச் செய்வோம்’ என்கிற யுக்தியைத்தான் பொன்னையா வெளிப்படையாகப் பேசிவிட்டார்.  இருவரின் போக்கும் நம் தேசத்திற்கு நல்லதல்ல.

 

ஹிந்துக்களின் கௌரவத்தையும் உரிமைகளையும் பா.ஜ.க. பாரபட்சமின்றிப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் 2014-லிருந்து அதிகமான ஹிந்துக்கள் அந்தக் கட்சிக்கு நாடெங்கும் ஆதரவு தருகிறார்கள். அது நமது கடமை, அது நமக்கும்  நமது தேசத்திற்கும் அதன் பாரம்பரியத்திற்கும்  நல்லது என்ற நினைப்போடு அப்படி ஆதரவு அளிக்கிறார்கள். தாங்கள் பா.ஜ.க-விற்கு ஓட்டளிப்பது அந்தக் கட்சிக்குப் போடும் பிச்சை என்று ஹிந்துக்களோ ஹிந்து மதத் தலைவர்களோ நினைப்பதில்லை. ஆனால் ஜார்ஜ் பொன்னையா மாதிரியான கிறிஸ்தவப் பாதிரியார்களும் வேறு சில சிறுபான்மை மதத் தலைவர்கள் மட்டும் தாங்கள் அளித்து வரும் திமுக ஆதரவை ஏன் அவர்கள் இடும் பிச்சை என்று எண்ணுகிறார்கள்? காரணம் இருக்கிறது.

 

தங்களின் பேச்சு, செயல்களின் மூலம் ஹிந்துக்களை, ஹிந்து உணர்வுகளை உதாசீனம் செய்யும் கட்சியாகத் திமுக பல சமயம் தோற்றம் அளிக்கிறது.  விவரம் தெரிந்த நிறைய ஹிந்துக்களும் அப்படி உணர்கிறார்கள். ஹிந்து உணர்வுகளைப் புறம் தள்ளாமல் மதிக்கும் கட்சியாக பா.ஜ.க  தலையெடுத்து விட்டதால், தன்னைப் பா.ஜ.க-வின் எதிரி என்று காட்டிக் கொள்ள திமுக தனது ஒரிஜினல் குணாதிசயத்தை இன்னும் வலுவாக நிலைநிறுத்த முனைகிறது. அதற்கு ஒரு வழி, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மத அமைப்புகளிடம் பாசம், நேசம், பவ்யத்தை அதிகம் காட்டி தேர்தல் வெற்றிக்காக  அவர்களின் ஆதரவைத் தொடர்ந்து வேண்டி நிற்பது.  அந்த மத அமைப்புகளின் சில தலைவர்களுக்கும் திமுக-வின் இந்தப் போக்கு உதவுகிறது. இருந்தாலும் தங்கள் கட்சியின், தங்கள் கட்சித் தலைவர்களின் வசதி வளர்ச்சிக்காக ஒரு கட்சி இப்படிப் பணிந்து வந்தால், அதற்குத் துணை செய்யும் அந்த மதத் தலைவர்கள் தாங்கள் செய்யும் உதவியைப் பிச்சை என்று கருதுவது இயற்கை.

 

ஆனால் ஒன்று. திமுக-விற்கு ஓட்டளிக்கும் சாதாரண சிறுபான்மை மக்கள் யாரும் தாங்கள் அந்தக் கட்சிக்குப் பிச்சை எதுவும் போடுவதாக நினைப்பதில்லை.  அப்படியெல்லாம் நினைக்க அவர்களுக்குத் திராணியும் இல்லை, ஒரு பலனும் இல்லை. அவர்களே பாவம், அவர்களின் மதத் தலைவர்கள் பலரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்கள்.  சாதாரண சிறுபான்மை மனிதர் யாராவது ‘பாரத மாதாவின் மீது என் கால் பட்டால் சொறி சிரங்கு வரும்’ என்று தீர்மானித்து, பாரத மாதாவைக் குறிப்பாக அப்படி நினைத்தா செருப்பு அணிவார்? பொன்னையா மாதிரி குரூர ஹிந்து-விரோத எண்ணம் கொண்ட ஒரு மதத் தலைவர்தான் அப்படி எண்ணவும்  பேசவும்  முடியும்.  

 

   ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் தங்கள் எண்ணிக்கை எழுபது சதவிகிதம் எட்டப் போகிறது என்று ஹிந்துக்களைக் கீழ்நோக்கும் இறுமாப்புடன் கொக்கரித்தார் பொன்னையா. ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியாவில், ஹிந்துக்களின் உயர்ந்த நேசத்தைப் பெற்று அரசியல் சட்டம் வழியாக சில பிரத்தியேக உரிமைகளையும் பெற்றவர்கள் இந்திய சிறுபான்மையினர். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் ஹிந்துக்களுக்கு அதே மாதிரியான விசேஷ உரிமைகள் தரப்பட வேண்டும் என்று இந்தியாவின் சிறுபான்மை மதத் தலைவர்கள் குரல் கொடுப்பதில்லை. அதைக்கூட ஒதுக்கலாம், அதனால் பாதகமில்லை. ஆனால் இந்தியாவிற்குள்ளேயே ஹிந்துக்களின் சகிப்புத் தன்மையையும் தோழமை உணர்வையும் சிறுபான்மை மதத் தலைவர்கள் பலர் ஒரு பலவீனமாகக் கருதுகிறார்கள். ஜார்ஜ் பொன்னையா அதன் வெளிப்பாடு. இந்தப் போக்கு நிதானமாக, ஆனால் உறுதியாக, களையப்பட வேண்டும். ஹிந்துக்கள் பொறுத்திருக்கட்டும். ஆனால் விழித்திருக்கட்டும்.


* * * * *


Copyright © R. Veera Raghavan 2021


Monday 19 July 2021

நாயுடன் நான் 20 நாட்கள்

         -- ஆர். வி. ஆர் 



ஆக்ஸிஸ். அதுதான் அவன் பெயர். என் வீட்டருகில் அந்தப் பெயர் கொண்ட ஒரு வங்கியின் ஏ.டி.எம் அறை இருக்கிறது. அதுவே அந்தத் தெரு நாயின் இளைப்பாறும் இடமானதால் அந்த வங்கியின் பெயரை அவனுக்குச் சூட்டினோம். தடியான தேகம், களையான முகம் உடையவன்.

 

பக்கத்துக் காலனிவாசி ஒருவர் ஆக்ஸிஸை இரண்டு வயது வரை வீட்டில் பராமரித்துப் பின் ஊர் மாறியபோது எங்கள் தெருவில் விட்டு நழுவினார். கைவிட்ட அரக்கரை மன்னித்து அக்கம் பக்கத்தினருடன் சிநேகம் காட்டி அந்த ஏ.டி.எம்-மின் ஏ.சி குளிர்நிலையில் தினமும் பலமணி  நேரம் சுகித்து வளர்ந்தான் ஆக்ஸிஸ்.  இப்போது அவன் வயது  எட்டோ ஒன்பதோ.  

 

எனது குடியிருப்புக் கட்டிடத்தின் எதிர்ப்புறத்தில் சற்றுத் தள்ளி இருக்கிறது அந்த ஏ.டி.எம். அதனுள் ஆக்ஸிஸ் போக நினைத்தால்முதலில் அதன் கண்ணாடிக் கதவு  ஓரத்தைச் சற்று மூக்கால் தள்ளுவான். கிடைத்த இடைவெளியில் முகத்தைச் சொருகி வழியை அகலப்படுத்தி உடலையும் நுழைத்தெடுத்து ஓரமாகப் படுப்பான். பின்னர் வெளியேறுகிற எண்ணம் வந்தால், உள்ளே வந்த ஒருவர் கதவை இழுத்து வெளியே செல்கையில் அவரை நாசூக்காகத் தொடர்வான். ஏ.டி.எம்-மில் அவன் இருக்கும்போது அங்கு நுழைபவர் அவனைப் பார்த்து அஞ்சாதிருக்க, வருகின்ற மனிதரைத் துளியும் ஏறெடுத்துப் பார்க்காமல் ஒரு துணிமூட்டை மாதிரிப் பாவமாகக் கிடப்பான் ஆக்ஸிஸ். காலப் போக்கில் அந்த ஏ.டி.எம் கஸ்டமர்களுக்கு அவன் இருப்பது பழகிவிட்டது. நம்பர் ஒன்று இரண்டு என்ற செயல்களை ஏ.டி.எம்-மிற்குள் நிகழ்த்தாமல் அவன் சமர்த்தாகவும் இருப்பான்.  ஜென்டில்மேன்!

 

தெருவில் வந்து போகிற எவரும் தன்னைக் கவனித்தால், அதுவும் கருணையுடன் பார்த்தால், அவரைச் சரியாகக் குறிப்பான் ஆக்ஸிஸ். அவர் அருகே சென்று வாலாட்டி நட்பு காட்டி அவரிடம் பரிதாபம் ஊறவைப்பான். அதன் மூலம் அவர் பிஸ்கட்டோ வேறு உணவோ வாங்கித் தரத் தூண்டுவான். அருகில் உள்ள போட்டோ கடைக்காரரை வசியம் செய்து, அவர் தினமும் இரவு கடை அடைத்த பின் ஒரு பாக்கெட் பிஸ்கட்டை அவனுக்கு தானம் செய்யும் புனிதக் கடமையை அவருக்கு ஏற்படுத்தினான் ஆக்ஸிஸ்.

 

எனது குடியிருப்புக் கட்டிடத்தின் வாட்ச்மேனுக்கும் ஆக்ஸிஸ் தோஸ்த் ஆகி அவ்வப்போது சாப்பாடு பெற்றான்.  பிராணிகளை விரும்பும் என் மனைவியிடமும் அவனுக்கு எப்போதும் பிஸ்கட்டுகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒருவர் கொடுத்தால் போதும் என்று மனிதத்தனமாக நினைத்து நான் அவனுக்குத் தனியாகத் தீனி கொடுக்காமல் இருந்தேன் – ஆனால் என் லாஜிக் அவனிடம் எடுபடவில்லை. 

   

பல சமயம் எங்கள் காம்பவுண்டில் உள்ள கார்ப் பாதையில் ஆக்ஸிஸ் அமர்ந்திருப்பான். ஆனால் எங்கள் கட்டிடத்திற்குள் அவன் வருவதில்லை - எங்கள் வாட்ச்மேனும் அதை அனுமதித்ததில்லை. நான் வந்துபோகும்போது ஆக்ஸிஸை வாஞ்சையுடன் பார்ப்பதை அறிந்து, நான் அவனுக்குத் தீனி கொடுக்காத அதர்மத்தை நானே உணரும்படி செய்தான்.  நான் எனது காரில் ஏறும்போதோ, அல்லது திரும்பி வந்து இறங்கும்போதோ, அருகில் வந்து என் கால்களில்  உரசி அன்பாகக் குரைத்து என்னை உருக்கி  வழிப்படுத்தினான் ஆக்ஸிஸ். பிறகு நானும் அவனுக்கு பிஸ்கட் தோழன் ஆனேன். கில்லாடிப் பயல்!

 

ஒரு நாள் எங்கள்  வாட்ச்மேன் வேலையை விட்டான். வாரக் கணக்கில் வேறு வாட்ச்மேனும் கிடைக்கவில்லை. அப்போது பல சமயங்களில் எங்கள் மெயின் கேட்டும்  கட்டிடத்தின் பாதுகாப்புக் கதவும் திறந்திருக்க, ஆக்ஸிஸ் கட்டிடத்திற்குள் வந்து படியேறி மூன்றாவது மாடியில் உள்ள எனது குடியிருப்பின் வாசலில் அமர்ந்துவிட்டான்.  அவ்வப்போது வெளியே சென்றும் வருவான். இரண்டு நாட்கள் கழித்து, மேல் மாடி வீட்டுக் காரர் அவனைக் கட்டிடத்தில் இருந்து  விரட்ட எண்ணி ஒரு பிரம்பால் அடிக்க,  அவன் தற்காப்பில் பலமாக உறுமியும் குரைத்தும் அவரைப் பயமுறுத்தினான். சத்தம் கேட்டு வீட்டுக் கதவைத் திறந்த என் மனைவி திடுக்கிட்டு, இருவருக்கும் சமாதானம் சொல்லி ஆக்ஸிஸை எங்கள் வீட்டிற்குள் கூட்டி வந்தாள். அன்றிலிருந்து இருபது நாட்கள் அவனுடன் நாங்கள் வாழ்ந்தோம்.  

 

தெருவில் இல்லாத அரவணைப்பும் பாதுகாப்பும் என் வீட்டில் கிடைத்ததை உணர்ந்தான் ஆக்ஸிஸ். அதை எனக்கும் நன்றாக உணர்த்தினான். சிறுசக்கரங்கள் பொருத்திய நாற்காலியில் அமர்ந்து நான் என் அறைக்குள் வேலை செய்யும் போது, என் நாற்காலிக்கு மிகப் பின்னால் அனாயாசமாகப் பக்கவாட்டில் படுத்து உறங்குவான். அவனது மூக்கோ காலோ எனது நாற்காலிச் சக்கரத்தைத் தொட்டிருந்தாலும், நான் மூடத்தனமாக நாற்காலியைப் பின்நகர்த்தி  அவனது உடல் உறுப்புகள் எதையும் காயப்படுத்த மாட்டேன் என்று நம்பினான் – நான்தான் அப்படி நம்பவில்லை.

 

பல நேரங்கள் நான் நாற்காலியில் இருந்து வெளிவந்து, அருகில் கண்மூடிப் படுத்திருக்கும் ஆக்ஸிஸின் உடலை அரிசி மூட்டையைத் தள்ளுவது மாதிரி தரையிலேயே இரண்டடி தள்ளி நகர்த்தினாலும், கண்ணைத் திறக்காமல் அப்படியே கிடப்பான். சாலையில் ஒரு வண்டி தூரத்தில் வந்தாலே பாதுகாப்பாக விலகும் அவன், வீட்டிற்குள் என்னால் அவனுக்கு ஒரு தீங்கும் வராது என்று நம்பிவிட்டான். அவனது நம்பிக்கையைச் சோதிக்க, கண்மூடிக் கால்கள் நீட்டி அவன் பக்கவாட்டில் படுத்திருக்கும்போது அவன் உடல்மீது நான் எனது உள்ளங்காலை வைத்தாலும், அது நான் என்று தெரிந்து அசைய மாட்டான்.  மிக லேசாக என் காலை அவன் மீது அழுத்தினாலும் அப்படியே கிடப்பான்.  அடுத்து என் காலை அவன் கழுத்தின் மீது – அதாவது குரல்வளையின் மேல் - மெதுவாக வைத்துப் பார்த்தாலும், “இந்த ஆள் விளையாட்டுப் பிள்ளையாக இருக்கிறானே!” என்று அதையும் பொறுத்துக் கண் திறக்காமல் சுவாசிப்பான். ஒரு ஜீவன் உங்கள் மீது பூரண நம்பிக்கையும் நேசமும் வைத்து அதைத் தன் முகத்திலும் உடல் மொழியிலும் காட்டுவது உங்களுக்கு உன்னத அனுபவம்.

 

கழுத்துப் பட்டை, பிடி கயிறுடன் ஆக்ஸிஸை தினமும் இரண்டு வேளை வீதியில் கூட்டிச் சென்றேன். முன்பு அநாதையாகத் திரிந்த வருடங்களில் அவன் ஈர்த்த பழவண்டிக்காரன், கோவில் பக்கமான பூக்காரி, காற்று வாங்க உலாத்தும் வெப் டிசைனர், இன்னும் சிலர் இப்போது எதிர்ப்பட்டு அவனைத் தட்டி நலம் விசாரித்தனர். பிறகு அவனுடன் நான் வீட்டில் இருக்கையில் அவன் முதுகை வருடுவது,  கழுத்தைத் தடவிக் கொடுப்பது, அவனிடம் செல்லப் பேச்சுகள் பேசுவது என்பதாக எனக்கு நாட்கள் கழிந்தன. அவனது தெரு வாசத்தில் கடந்த சில வருடங்களாக அவனுக்கு மிகவும் பழக்கமாகி உணவும் அளித்து வந்த ஒரு பெண்மணி, இனிமேல் அவனைத் தனது வீட்டில் வைத்துப் பராமரிக்க விரும்பினார். நடைமுறை நன்மைகளுக்காக நானும் மனைவியும் அவனுக்கு விடைகொடுக்கச் சம்மதித்தோம்.    

 

இப்போது ஆக்ஸிஸ் அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்றுவிட்டான். அந்தக் குடும்பத்தினருக்கும் மகிழ்வைக் கொடுத்துத் தனது மகிழ்ச்சியைப் பெருக்கிக் கொள்கிறான் என்று தெரிந்தது. நமது வாழ்விலும் நாம் மகிழ்ச்சி காண்பதற்கான ஒரு பாதையை ஆக்ஸிஸ் வாழ்ந்து காட்டுகிறானோ?

 

* * * * *

Copyright © R. Veera Raghavan 2021