|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: 'நாட்டின் நலனைக் கருதி இந்தியா கூட்டணியில்
தொடர்கிறேன்" என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் ஒரு பேட்டியில்
கூறி இருக்கிறாரே? பதில்: கமல்
ஹாசன் ஒரு மஹான். நாட்டுடன் தன்னை முற்றிலும் ஐக்கியப்படுத்திக் கொண்டு, இரண்டில் யாருடைய நலன் எதனுடையது என்று பிரித்துப்
பார்க்க முடியாதபடி திணறுகிறார். அனுதாபப் படலாம். |
|
2. கேள்வி: வைரமுத்துவின் எழுத்துகளுக்கு ஞானபீட விருது
வழங்கப்பட்டதின் நன்மை தீமைகள் என்ன? பதில்: இனி ஞானபீட விருது தனக்குக்
கிடைக்கவில்லையே என்று எந்தத் தமிழ் எழுத்தாளரும் கவலைப்பட மாட்டார். இது நன்மை.
வைரமுத்துவுக்கு வழங்கிய ஞானபீட விருதைத்
தனக்கும் கொடுத்து விடுவார்களோ என்று சில தமிழ் இலக்கிய கர்த்தாக்கள் இனி
அச்சப்படலாம். இது தீமை. |
|
3. கேள்வி: வைரமுத்து ஞானபீட விருது பெற்றதற்காக, அவரிடம்
நேரடியாக வாழ்த்து சொன்னவர்கள், அவருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியவர்கள், என்று 168 பெயர்கள் கொண்ட
ஒரு பட்டியலை அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு அவர்களுக்கு நன்றி
தெரிவித்திருக்கிறார். அத்துடன், பெயர் குறிப்பிடாத 'ஆயிரக்கணக்கான
வாழ்த்தாளர்களுக்கும்' அவர் நன்றி சொல்லி இருக்கிறார். தனக்கு வாழ்த்து சொன்னவர்களின் பெயர்களை, கனகாரியமாக
எதற்கு வைரமுத்து பகிரங்கமாக வெளியிடுகிறார்? பதில்: வைரமுத்துவுக்கு
வாழ்த்து தெரிவித்தவர்களில் சிலர், அவர்
ஞானபீட விருதுக்குத் தகுதியானவர் என்று நினைத்திருக்கலாம். இன்னும் சிலர் -
அநேகமாக இவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் - அது பற்றிக் குறிப்பாகச்
சிந்திக்காமல் சம்பிரதாயமாக, அவருடன்
பரிச்சயம் ஏற்பட்ட நாகரிகத்திற்காக, அவருக்கு
வாழ்த்து சொல்லியிருக்கலாம். 'வைரமுத்து ஞானபீட விருதுக்குத்
தகுதியற்றவர்' என்று பொதுவெளியில் பல தமிழ்
எழுத்தாளர்கள் வலுவான கண்டனக் குரல் எழுப்பி வருகிறார்கள். இந்த நிலையில்
வைரமுத்து இப்படிச் சொல்ல முனைகிறார்: 'ஞானபீட
விருது எனக்குக் கிடைத்ததற்காக, குறிப்பிட்ட 168 நபர்கள் - அதோடு, நான்
பெயர் வெளியிடாத பலர் - என்னை வாழ்த்தி இருக்கிறார்கள். ஆகவே எனக்கு வந்த
வாழ்த்துச் செய்திகள் எனக்கெதிரான எதிர்ப்புக் குரல்களை அடக்கி, எல்லா எதிர்ப்பையும் கரைத்து விட்டன.' இப்படி ஒரு நாலாம் கிளாஸ் லாஜிக்கை மறைமுகமாக எடுத்து
வைப்பதற்காக, தன்னை வாழ்த்தியவர்களின் பெயர்களை -
அவர்களில் சிலர் நீதிபதிகள், ஐ. ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள் - வைரமுத்து
வெளியிட்டிருக்கிறார். தனிப்பட்ட முறையில் ஒரு நாகரிகத்திற்காகத் தனக்கு வாழ்த்துச்
சொன்னவர்களின் பெயர்களை வைரமுத்து இப்போது - தனக்கு அறிவிக்கப் பட்ட விருதுக்கு
பலத்த எதிர்ப்பு வந்த சூழ்நிலையில் - பட்டியலிட்டு வெளியிடுவது நாகரிகம் அல்ல. தனக்கு ஞானபீட விருது அளிக்கப்படுவதற்கு இவ்வளவு நியாயமான வலுவான
குரல்கள் வரும் என்று வைரமுத்து எதிர்பார்த்திருக்க மாட்டார். அவற்றுக்கு
நேரடியாகப் பதில் சொல்ல முடியாமல், முகம்
திருப்பி ஈனஸ்வரத்தில் ஏதோ நன்றி அறிக்கை விட்டிருக்கிறார் வைரமுத்து. "எனக்கு ஞானபீட
விருது அளிக்கப்படுவதற்குத் தமிழ் எழுத்தாளர்கள் பரவலான எதிர்ப்பு காட்டுவதால், நான் அந்த விருதை ஏற்காமல் இருக்கிறேன்" என்று
வைரமுத்து ஒரு அறிக்கை வெளியிட்டு அமைதியாக ஒதுங்கலாம். இல்லாவிட்டால், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் கருணாநிதிக்கு அளித்த
டாக்டர் பட்டத்தின் மதிப்புதான், வைரமுத்து
கைக்கு வரும் ஞானபீட விருதுக்கு வாய்க்கும். |
|
4. கேள்வி: "தமிழ்நாடு வளர்ச்சி அடைய, அடுத்த
ஐந்தாண்டுகளும் திமுக ஆட்சி தொடர வேண்டும்" என்று அக்கட்சியின் தலைவர் மு.
க. ஸ்டாலின் கூறி இருக்கிறாரே? பதில்: எந்த நிலையில் தமிழ்நாடு வளர்ச்சி
அடைந்ததாக ஸ்டாலின் கருதுவாராம்? மகளிருக்கான உரிமைத் தொகை மாதம்
முப்பதாயிரம் ரூபாய், இந்தியாவில் அனைத்து மொழித் திரைப்படங்களும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் வாயிலாக
விநியோகம், டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு நூறு ரூபாய் வசூல், என்று திமுக ஆட்சியில் நாம் காணும் நாளிலா? நமது ஜனநாயகம் தவழ்கிறது, வளரவில்லை. அந்த தைரியத்தில் ஸ்டாலின் பேசி
இருக்கிறார். |
|
5. கேள்வி: "அமெரிக்கா இல்லாமல் நேட்டோ பாதுகாப்பு அமைப்பு
(NATO) ஒரு காகிதப்
புலி" என்று, ஈரான் போரில்
அமெரிக்காவுக்கு ராணுவ ஒத்துழைப்பு தராத நேட்டோ நாடுகளை எச்சரிக்கும் விதமாக
அதிபர் டிரம்ப் அறிக்கை விட்டிருக்கிறாரே? பதில்: தலைமைப்
பண்புகள் இல்லாமல், தோழமை நாடுகளிடம் கூடத் தன் மதிப்பையும்
மரியாதையையும் இழந்தவர் அமெரிக்க அதிபர்
டிரம்ப். யாரும் உள்ளூர மதிக்காத பித்துக்குளி டிரம்ப் தலைமையில்
அமெரிக்கா செயல்படுவதால், நேட்டோ அமைப்பு தனது புலி சொரூபத்தை
இழந்து வேறு காட்சியைத் தருகிறது. கழுதைப் புலி. |
|
பகுதி 70 // 21.03.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
No comments:
Post a Comment