Thursday, 16 July 2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி. தமிழகத்தில் இவை எப்படி?

ஆர். வி. ஆர்

 

மோடி கட்சி எனப் புரிந்துகொள்ளப் படுவது, பாஜக; அண்ணாமலை கட்சி, தற்காலிகமாக 'வீ த லீடர்ஸ்' வேடத்தில் உள்ளது; விஜய் கட்சி, தவெக.

 

2026 தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக, மாநில மக்களின் நிலை இது: மக்களுக்கு முதலில் ஒரு மோசமான ஆட்சியிலிருந்து விடுதலைஅடுத்ததாக நிர்வாகத்தில் லஞ்ச ஊழலை ஊக்கப்படுத்தாத ஒரு புதிய அரசு, பிறகு மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை, வேலை வாய்ப்பை, மக்கள்நலப் பணிகளை முன்னெடுக்கும் ஒரு முதலமைச்சர் ஆகியவை ஒன்றன்பின் ஒன்றாக வேண்டி இருந்தன. இதைக் கருத்தில் கொண்டு சில விஷயங்களை நாம் பார்க்க வேண்டும்.

 

பாஜக-விலிருந்து வெளியேறிய அண்ணாமலை தொடங்கவிருக்கும் கட்சி, தமிழகத்தில் நடக்கப் போகும் தேர்தல்களில் போட்டியிடும்போது பாஜக-வையும் எதிர்த்துப் பிரசாரம் செய்யும். அந்த நேரத்தில், "எங்கள் கட்சி தமிழக பாஜக-வை மட்டும் எதிர்க்கிறது, மத்திய பாஜக-வை அல்ல" என்று அண்ணாமலை கட்சி பேச முடியாது. அதாவது, நரேந்திர மோடி நடுநாயகமாக இருக்கும் பாஜக-வை, அண்ணாமலை கட்சி எதிர்க்கப் போகிறது. "நான் தேசியவாதி, தமிழகத்தில் நல்லாட்சி தர விரும்புகிறேன். இருந்தாலும் மிகச் சிறந்த தேசியவாதியாக இருந்து மத்தியில் 2014-லிருந்து நல்லாட்சி வழங்கி வரும் மோடி, அல்லது அவர் அனுப்பிவைக்கும் வேறு மத்திய பாஜக தலைவர்கள், தமிழக பாஜக வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினாலும், நான் அந்த வேட்பாளர்களை எதிர்த்துக் களமிறங்குவேன் - அப்போது நான் மோடியையும் குறைசொல்லிப் பிரசாரம் செய்வேன்" என்று அண்ணாமலை இப்போதே மறைமுகமாகத் தெரிவிக்கிறார்.

 

தேசநலன் காரணமாக மோடியைத் தீவிரமாக ஆதரிக்கும் பலர், அண்ணாமலைக்காகத் தாங்கள் பாஜக-வை விட்டு விலகிப் போவதை நினைக்க முடியாது. அதே சமயம், அண்ணாமலையின் பேச்சைக் கேட்டு, அவர்மீது நம்பிக்கை வைத்து, மோடி கட்சியான பாஜக-வை எதிர்த்து அண்ணாமலை கட்சிக்காக வேலை செய்யவும் வாக்களிக்கவும் அதிகமானவர்கள், கணிசமானவர்கள், இருப்பார்கள்.

 

அண்ணாமலைக்காக அவர் கட்சிக்கு வாக்களிக்க இருப்பவர்கள் திமுக மற்றும் அதிமுக வேண்டாம் என்று நினைப்பார்கள். அவர்களில் பலர் முன்பு பாஜக-வுக்கு வாக்களித்திருப்பார்கள். மொத்தத்தில், அண்ணாமலை அபிமானிகள் அநேகமாகப் படித்தவர்களாக, விவரம் தெரிந்தவர்களாக இருப்பார்கள்.

 

2026 சட்டசபைத் தேர்தலில் விஜய்யின் தவெக தனித்து நின்று போட்டியிட்டது. இருந்தாலும் அவர் திமுக மற்றும் அதிமுக தலைமையிலான இரு பெரும் கூட்டணிகளை ஒருசேரத் தோற்கடித்து, 234 தொகுதிகளில் 108-ஐ வென்று, சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்கிறார். விஜய் கட்சிக்கு வாக்களித்தவர்களில் பெரும்பாலோர் படித்தவர்கள், பொது அறிவு மிக்கவர்கள், மிக விவரமானவர்கள் என்று இல்லை.  அவர்கள் பெரும்பாலும் சாதாரணமானவர்கள். அவர்களின் நிலை வேறு, அண்ணாமலை அபிமானிகளின் நிலை வேறு. ஆனால் விஜய் வாக்காளர்கள் அண்ணாமலை அபிமானிகளை விட எண்ணிக்கையில் மிக அதிகமாக இருப்பார்கள். அண்ணாமலை அபிமானிகளை, விஜய் ஈர்ப்பது கடினம். விஜய் வாக்காளர்களை, அண்ணாமலை ஈர்ப்பதும் கடினம். இரு தரப்பிலும்  ‘ஜென் சீ’ நபர்கள் நிறைய உண்டு.

 

2026 தமிழக சட்டசபைத் தேர்தலின் போது, முதல் வேலையாக அப்போதிருந்த மோசமான திமுக ஆட்சியை வீழ்த்தினால்தான், அடுத்ததாக நேரான ஆட்சி, மக்களுக்கு வளம் சேர்க்கும் ஆட்சி போன்றவை மாநிலத்தில் சாத்தியமாகும் என்றிருந்தது. அந்தத் தேர்தலில் அந்த முதல் வேலையைச் செய்து காண்பித்தவர், கூட்டணி ஏதுமில்லாமல் திமுக-வைக் குறிவைத்து எதிர்த்த விஜய்.

 

தேர்தல் நேரத்தில் விஜய் மேடையில் சினிமாத்தனமாகப் பேசி இருக்கலாம். அந்த வழிதான் அவருக்குத் தெரிந்தது என்றிருக்கலாம். ஆனாலும் அவர் அநாகரிகமாக, ஆபாசமாகப் பேசவில்லை. அவர் கட்சியைச் சார்ந்தவர்கள் பல தொகுதிகளில் பணவிநியோகம் செய்து வாக்குகளை வாங்கினார்கள் என்ற சீரியஸான குற்றச்சாட்டும் அந்தக் கட்சி மீது கிடையாது. அண்ணாமலையின் சிறந்த கல்வியறிவு, பொது விஷயங்கள் பற்றிய ஆழ்ந்த ஞானம்நுணுக்கமான சிந்தனை ஆகியவை விஜய்யிடம் இல்லை. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக, விஜய் ஒற்றை மனிதராகத் திமுக-வை அந்தத் தேர்தலில் வீழ்த்தினார், அதிமுக-வை ஓரத்தில் கடாசினார். இந்த அரிய சாதனையை விஜய் செய்ததற்குக் காரணம், அவர் சாதாரண மக்கள் பலரையும் தன் பக்கம் ஈர்த்து வைத்திருந்தார் என்பதுதான்.

 

விஜய்க்காக அவர் கட்சிக்கு வாக்களித்த சாதாரண மக்கள் அனைவரின் வாக்குகளும் நமது ஜனநாயகத்தின் முக்கிய அங்கம். அந்த வாக்குகள் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளுக்குச் செல்லாமல் தடுத்து, அவற்றைத் தன் பக்கம் வரவழைத்து, திமுக-வை ஆட்சியிலிருந்து அகற்றிய பெருமை விஜய்க்கு உண்டு, அவருக்கு மட்டும்தான் உண்டு. அதற்கான மகுடத்தை விஜய்க்குத்தான் அணிவிக்க வேண்டும். 

 

2026 தேர்தலின் போதே அண்ணாமலை பாஜக-விலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கி அந்தத் தேர்தலில் அவர் கட்சி போட்டியிட்டிருந்தாலும் (அதுவும் திமுக, அதிமுக-வையும் எதிர்த்துப் போட்டியிட்டிருந்தால்) விஜய்யின் வாக்காளர்களை அண்ணாமலை ஈர்த்திருக்க மாட்டார். அப்போதும் விஜய் கட்சிதான் மிக அதிகத் தொகுதிகளை வென்றிருக்கும். இதையெல்லாம் குறிப்பிடுவதன் நோக்கம், அண்ணாமலையை விட விஜய் சிறந்த அரசியல் தலைவர் என்று சொல்ல வருவதல்ல. படித்தவர்களை விட, விவரமானவர்களை விட, சாதாரண மக்கள் அதிகமுள்ள நம் மாநிலத்தில் திமுக-வை ஆட்சியிலிருந்து வீழ்த்த விஜய்யால் மட்டும் முடிந்தது; அதற்கான பெருமை அவருக்கே உரித்தானது என்பதை நாம் ஒதுக்க முடியாது, கூடாது.

 

மக்கள் நலனில் திமுக-வை ஆட்சியிலிருந்து அகற்றிய முதற்கட்டம் முடிந்தது. அடுத்ததாக, விஜய் லஞ்ச ஊழலை ஊக்கப் படுத்தாத அரசு நிர்வாகத்தை வழங்குவாரா என்பதைப் பார்க்க வேண்டும். அதற்கு முன்பாக நாம் ஒரு விஷயத்தை மறக்கக் கூடாது. அண்ணாமலை படித்தவர்களை, விவரம் தெரிந்தவர்களை, அதிக நேர்மையாளர்களை, தனது புதிய அமைப்பிற்கு, இனி அவர் தொடங்கப் போகும் அரசியல் கட்சிக்கு, இயல்பாக ஈர்ப்பார். ஆனால் அதைப் போன்ற மனிதர்களை சினிமாப் புகழ் விஜய் தன்னுடைய கட்சிக்கு ஈர்த்திருக்க முடியாது. விஜய் கட்சியின் சில தலைவர்கள், சில நிர்வாகிகள், விஜய்யின் பிரபல்யத்தை வைத்துத் தங்களை வளப்படுத்திக் கொள்ள முனைவார்கள். அதை விஜய்யும் அறிந்திருப்பார் – மனிதர்களைப் புரிந்துகொள்வதில் விஜய் கெட்டிக்காரர். அனைத்தையும் உணர்ந்து, ஒரு முதலமைச்சராக லஞ்ச ஊழலுக்கு எதிராக விஜய் இதுவரை பொதுவெளியில் உரத்துக் குரல் கொடுத்தது பெரிய விஷயம். விஜய் இதில் முனைப்பாகச் செயல்படுவார் என்று தோன்றுகிறது. அதைக் கவனித்து அவரைச் சுற்றி உள்ளவர்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்திருக்க வேண்டும் – அதில் அவர்கள் தவறினால், அதற்கான நிரூபணம் வெளிப்பட்டால், விஜய் அதை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை நாம் பார்ப்போம், அதற்கேற்ற விமர்சனத்தை விஜய் அப்போது சந்திக்க வேண்டும். இன்றைய தேதியில், மக்கள் நலன் சார்ந்த இந்த இரண்டாவது விஷயத்தில் விஜய்யின் தொடக்கம் குறை சொல்லும்படியாக இல்லை. பொதுவாகப் பாராட்டும்படி இருக்கிறது.

 

மக்கள் நலனில் மூன்றாவது கட்டமான தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு, மக்கள் நலப் பணிகள் ஆகியவற்றில் விஜய் எப்படிச் செயல்படுகிறார் என்று போகப் போகத் தான் நாம் பார்க்க முடியும். பார்க்கலாம்.

 

இதுதான் 2026 தேர்தலுக்குப் பின் தமிழகத்தில் அரசு நிர்வாகம் பற்றிய நிலை. இதைத் தொடர்ந்து, அண்ணாமலை கட்சியை, மோடி கட்சியை, நாம் இவ்விதம் பார்க்கலாம்.

 

கல்வியில் சிறந்து, பேச்சாற்றல் மிகுந்து, மதிநுட்பம் கொண்டு, பண்பான அரசியலை முன்னெடுத்து, மக்கள் நலனை மனதில் வைத்து அர்ப்பணிப்புடன் செயல்படும் ஒரு தலைவர் அண்ணாமலை. சாதாரண மக்கள் நிறைந்த தமிழகத்தில், அவர்கள் மத்தியில் விஜய் ஒரு முக்கியத் தலைவராக உருவெடுத்துவிட்ட இந்த நேரத்தில், அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கி அதைத் தொடர்ந்து நடத்தி வந்தால் அது மிக அரிதான செயல், வரவேற்கத் தக்க முனைப்பு. தனது பேச்சில் உள்ள ஒருசில முரண்பாடுகளை அண்ணாமலை உணர்ந்து காலப் போக்கில் தன்னைச் சரிசெய்து கொள்கிற வயதும் பக்குவமும் அவரிடம் இருக்கும் என்று நாம் தாராளமாக எதிர்பார்க்கலாம்.

 

அண்ணாமலை போன்ற ஒரு அரிய தலைவரும் தமிழகத்துக்கு அவசியம். ஒரே வீச்சில் திமுக-வை ஆட்சியிலிருந்து அப்புறப் படுத்தி, அதிமுக-வையும் ஓரம் கட்டிய விஜய்யும் பாராட்டுக்கு உரியவர். மத்திய அரசு நிர்வாகத்தில் இமாலயப் புரட்சி செய்த மோடியை முக்கியத் தலைவராகக் கொண்ட பாஜக-வும் தமிழகத்தில் வளர்ந்து மத்தியில் செய்ததற்கு இணையான சாதனைகளை இந்த மாநிலத்திலும் நிகழ்த்த முயற்சிக்க வேண்டும். நடக்கும் நல்லதை வரவேற்று, நடக்கத் தக்க நல்லதையும் நினைத்துப் பார்ப்பதில் தவறில்லை.  

 

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

 

* * * * *
Author: R. Veera Raghavan, Advocate, Chennai

No comments:

Post a Comment