Wednesday, 31 December 2025

கேள்வி-பதில் (03.12.2025)

 

 

கேள்வி-பதில்

 

 

 

1. கேள்வி: "பார்லிமென்ட் என்பது, நாடகத்தை அரங்கேற்றும் இடம் அல்ல" என்று பிரதமர் மோடி எதிர்க் கட்சிகளைப் பார்த்துச் சொல்லி இருக்கிறாரே?


பதில்:
பாவம் எதிர்க் கட்சிகள். அவர்களுக்குத் தெரிந்த ஒரே அரசியல் நடவடிக்கை, நடிப்பும் நாடகமும். அதிலும் வில்லன் நடிப்பு என்றால், எதிர்க் கட்சி உறுப்பினர்களின் பெர்பார்மன்ஸ் அலாதியானது.

 

எதிர்க் கட்சி முக்கியஸ்தர்கள் ஒன்று சேர்ந்து ஆக்ரோஷமாக நடிக்க விரும்பும் சீன், பார்லிமென்ட் சீன். அந்தக் காட்சியை எதிர்க் கட்சியினர் அரங்கேற்றித் தங்களின் மேலான நடிப்புத் திறமையை வெளிப்படுத்த வேண்டாம் என்று மோடி சொல்கிறாரே, அவர் அரக்க மனம் படைத்தவரா?

 

 

 

2. கேள்வி: மாநில கவர்னர் இல்லத்தை 'ராஜ் பவன்' என்ற பெயரிலிருந்து 'லோக் பவன்' என்று மாற்றுவதை விட "சிந்தனை மாற்றமே தேவை" என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சரியா?


பதில்:
ராஜ் பவன் என்ற பெயரை மாற்றினால் கூட கவர்னரையும் மத்திய அரசையும் இடித்து கமென்ட் கொடுப்பாரா ஒரு முதல்வர்? சிந்தனை மாற்றம் மிக அவசியம் தான் - ஸ்டாலினுக்கு.

 

 

 

3. கேள்வி: கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து மரணம் அடைந்த 67 பேர்களின் குடும்பங்களுக்குத் தமிழக அரசு தலா பத்து லட்சம் ரூபாய் நிவாரணம் தந்தது. அதே அரசு, சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே இரண்டு அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள் மோதியதால் இறந்த 11 பேர்களின் குடும்பங்களுக்கு, மூன்று லட்ச ரூபாய் தருகிறது. ஏன் இந்த வேறுபாடு?

பதில்:
கள்ளச் சாராயம் தயாரிப்பதும் விற்பதும் குற்றம். போலீசாரின் அனுசரணை இல்லாமல் ஒருவர் அதைப் பெரிய அளவில் செய்ய முடியாது. கள்ளச் சாராயத்தால் இறந்தவர்களின் குடும்பங்கள், அந்த விவகாரத்தைச் சட்ட ரீதியாகப் பல கோணங்களில் பெரிதாக்காமல் இருக்க - அவர்களுக்குப் பத்து லட்சம்.

 

அரசு போக்குவரத்துக் கழகங்கள் பஸ் விடுவது குற்றமல்ல. அந்த பஸ்கள் ஏற்படுத்திய விபத்தில் டிரைவர் மற்றும் 10 பயணிகள் இறந்ததை யாரும் பெரிது படுத்தி, அந்த விவகாரத்தில் ஒரு அரசுத்துறையின் கைகள் கறைபடிந்ததாக அம்பலப்படுத்த வழியில்லை.

 

அரசு பத்து லட்சம் கொடுத்தது, பெரிதும் தன்னைப் பாதுகாக்க. மூன்று லட்சம் கொடுப்பது, பெரிதும் ஒரு நிவாரணமாக.

 

 

 

4. கேள்வி: பூமிக்கடியில் ஒரு புராதன ஹிந்துக் கோவில் இருக்க, அதன் மீது ஒரு மசூதி எழுப்பப் பட்டது என்பது நிரூபணம் ஆகி, அந்த மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் வரலாம் என்று சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பாகி விட்டது.

 

ஒரு முருகன் மலையே ஆதி காலத்திலிருந்து ஹிந்துக்களுக்குப் புனிதம் என்கிற போது, அதன் உச்சியில் ஒரு தர்கா தொடர்ந்து இருக்கிறது, அங்கு வழிபாடு நடக்கிறது, என்றால் என்ன அர்த்தம்? ஏற்கனவே தர்கா இருந்த இடத்தின் அடியில், பின்னர் யாராவது முருகன் மலையைப் பெரிதாக எழுப்பினார்களா? அல்லது ஏற்கனவே இருந்த முருகன் மலையின் உச்சியில், பின்னர் என்ன காரணத்தாலோ யாராவது தர்கா அமைத்தார்களா? புரியாமல் கேட்கிறேன், இதில் நல்லவர்களின் தீர்வு என்னவாக இருக்க வேண்டும்?


பதில்:
ஒரு பேச்சுக்காக, ஒரு மலை முழுவதும் காலம் காலமாய் இஸ்லாமியர்களுக்குப் புனிதமாக இருந்து வருகிறது என்றும், இடையில் அந்த மலை உச்சியில் யாரோ என்ன காரணத்தாலோ சிறிய பிள்ளையார் கோவிலை அமைத்து அங்கு இப்போதும் வழிபாடு நடக்கிறது என்றும் வைத்துக் கொள்ளுங்கள். அந்த நிலையில் திமுக மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் கேள்வி கேட்பது மாதிரி நீங்கள் தற்போது கேட்கிறீர்கள்!

 

 

 

5. கேள்வி: பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, நரேந்திர மோடி, இருவரையும் பற்றி?


பதில்:
இருவரும் அவரவர் காலத்து மக்கள் அபிமானம் பெற்றவர்கள். ஒருவர், சைனா பாகிஸ்தான் விஷயத்தில் தடுமாறினார். இன்னொருவர் விஷயத்தில், சைனா பாகிஸ்தான் தடுமாறுகின்றன.

 

 

பகுதி 21 // 03.12.2025

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

No comments:

Post a Comment