Wednesday, 31 December 2025

கேள்வி-பதில் (14.11.2025)

 

 

கேள்வி-பதில்

 

 

 

1. கேள்வி: பீஹாரில் லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மஹாகத்பந்தன் கூட்டணி, "குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவோம்" என்று தேர்தல் வாக்குறுதி அளித்தது. இருந்தாலும் அந்தக் கூட்டணி பீஹார் மாநிலத் தேர்தலில் தற்போது படு தோல்வி அடைந்திருக்கிறது. அரசு வேலை வேண்டாம் என்றா மக்கள் நினைத்திருப்பார்கள்?


பதில்:
இல்லை. 'தேஜஸ்வி யாதவின் லட்சணத்திற்கு அவர் தலைமை ஏற்கும் அரசே வேண்டாம்' என்று பீஹார் மக்கள் நினைத்திருப்பார்கள். அந்த மக்கள் மஹாகத்பந்தனின் மஹா மோசடி வாக்குறுதிக்குப் பலியாகாமல் இருந்தது, நமது ஜனநாயகத்திற்கு ஒரு டானிக்.

 

 

 

2. கேள்வி: உச்ச நீதிமன்றம் சொத்துக் குவிப்பு குற்றத்திற்காக சசிகலாவைத் தண்டித்தது. தண்டனை பெற்ற ஊழல் குற்றவாளியான சசிகலாவை எடப்பாடி பழனிசாமி அதிமுக-விலிருந்து தள்ளி வைத்திருப்பது சரிதானே?


பதில்: அந்த இருவருக்குள் உள்ள கணக்கு நமக்குத் தெரியாது. முன்பு சசிகலா உள்ளே தள்ளிவிட்டதால், எடப்பாடி அதிமுக-வின் தமிழக முதல்வர் ஆனார். பின்னர் எடப்பாடி வெளியே தள்ளிவிட்டதால், சசிகலா இப்போது கட்சியில் இல்லை. இருவரும் தமது நலனுக்காக ஒருவரை ஒருவர் தள்ளி விட்டவர்கள்!

 

 

 

3. கேள்வி: டெல்லி கார் குண்டு வெடிப்பிற்குப் பின் கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே தனது அறிக்கையில், "உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குப் பிரதமர் மோடி இன்னும் கல்தா கொடுக்காமல் இருக்கக் காரணம், மோடி பற்றிய ரகசியங்களை அமித் ஷா அறிந்து வைத்திருப்பது தான்" என்று கூறி இருக்கிறாரே?


பதில்:
இந்திரா காந்தியின் பேரன் என்பதால் ராகுல் காந்தியின் கோமாளிப் பேச்சுகளை சகிக்கிறோம். ராகுலின் கைப்பொம்மை என்பதால் காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜுன் கார்கேயின் அசட்டுப் பேச்சுகளை நாடு கேட்கிறது. அவருடைய மகன் என்பதால் பிரியங்க் கார்கேயின் பிதற்றலுக்கு பப்ளிசிடி கிடைக்கிறது. 'உளறிக் கொட்டினால் அப்பாவுக்கு அடுத்து ராகுல் காந்திக்கு நெருக்கமாக வரத் தகுதி பெறுவோம்' என்று இவர் நினைக்கிறாரோ?

 

 

 

4. கேள்வி: சீமான் திமுக-வைக் கடுமையாக எதிர்க்கிறார். பாஜக-வையும் எதிர்க்கிறார். விஜய்யும் அதையே செய்கிறார். இருவரின் கட்சிகளும் ஏன் இந்த ஒரே நோக்கத்திற்காக ஒன்று சேரவில்லை? அட் லீஸ்ட், இவர்களுக்குள் தேர்தல் கூட்டணி வாய்ப்பும் தெரியவில்லையே?

 
பதில்:
சீமானின் அரசியல் பார்வையில் அவர் தான் அதி முக்கியம். விஜய்யின் அரசியலிலும் அதைப் போன்ற 'தான்' சிந்தனைதான் இருக்கிறது.


சினிமாவில் தனக்கென்று ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை விஜய் சேர்த்து வைத்துக் கொண்டு அரசியலுக்கு வந்தவர். சினிமா டைரக்ஷன் துறையிலிருந்து அரசியலுக்கு வந்த சீமான், அது மாதிரி ஆரம்பப் பலன் கிட்டாமல் விஜய் மீது சற்றுப் பொறாமையாக இருப்பார். இதைத் தவிர, சீமான் மாதிரி விஜய்க்கு அதிக விவரங்கள் சொல்ல வருவதில்லை, நைசாகக் கோணல் லாஜிக் பேசத் தெரியவில்லை, விஜய் நான்சென்ஸ் பேசினாலும் அவருக்கு அதிகக் கூட்டம் வருகிறது - இது சீமானுக்கு மேலும் கசக்கும்.


இந்த இருவரின் மன நிலையில் இவர்கள் நெருங்கி வருவது கடினம். ஆனால் தமிழகத்தில் பாஜக ஏற்றம் பெற்றால், மாநிலத்தில் அதன் எதிரிகள் அனைவரும் தங்களுக்குள் கூட்டு வைப்பது எளிது.

 

 

 

5. கேள்வி: பசுமாடு ஏன் சார் 'அம்மா' என்கிற மாதிரிக் கத்துகிறது?


பதில்:
'அப்பா' என்கிற மாதிரிக் கத்தினால் மு. க. ஸ்டாலின் வந்துவிடுவாரே சார்!

 

 

பகுதி 14 // 14.11.2025

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

 

No comments:

Post a Comment