Wednesday, 31 December 2025

கேள்வி-பதில் (23.12.2025)

 

 

கேள்வி-பதில்

 

 

 

1. கேள்வி: தவெக சார்பில் நடந்த 'சமத்துவ கிறிஸ்துமஸ்' விழாவில் பேசும்போது ஒரு பைபிள் கதையைக் குறிப்பிட்ட விஜய், "ஒரு இளைஞர் தனக்குத் துரோகம் செய்த சகோதரர்களை வென்று தனது நாட்டுக்கே அரசனாகி, தனது எதிரிகள் உட்பட அனைத்து மக்களுக்கும் நல்லது செய்தான்" என்று அந்தக் கதையை விவரித்தார். நல்ல கதை அல்லவா?


பதில்:
நல்ல கதை. அடுத்த தீபாவளிக்கு முன்பாக தவெக 'சமத்துவ தீபாவளி' என்று ஒரு விழா எடுக்க வேண்டும். விழா மேடையில், "ஐந்து சகோதரர்களுக்குத் துரோகம் செய்த மற்ற நூறு சகோதரர்களை அந்த ஐவர் ஒரு அவதார புருஷரின் வழிகாட்டுதலுடன் போரில் வென்று நாட்டைக் கைப்பற்றி மக்களுக்கு நல்லாட்சி கொடுத்தனர்" என்ற மஹாபாரதக் கதையையும் விஜய் சொன்னால் அதுவும் நன்றாக இருக்கும். சமத்துவம் சந்தேகமில்லாமல் வெளிப்படும்.

 

 

 

2. கேள்வி: ஒரு கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "தமிழகத்தின் அமைதியை எப்படிச் சீர்குலைக்கலாம் எனப் பலர் யோசிக்கின்றனர்" என்று சொல்லி இருக்கிறாரே?


பதில்:
முதல்வர் மாற்றிச் சொல்கிறார். அமைதியாக இருக்கும் பெரும்பான்மை ஹிந்துக்களின் நம்பிக்கைகளை அவமதித்தால் சிறுபான்மையினரைக் கவரலாம் என்றுதான் பல அரசியல் தலைவர்கள் யோசிக்கிறார்கள். அதில் ஸ்டாலின் முதல்வர்.

 

 

 

3. கேள்வி: உயர் நீதிமன்ற உத்தரவு இருந்தும் திருப்பரங்குன்றம் மலைமீது ஒற்றை மனிதர் சென்று கூட அங்குள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவிடாமல் போலீஸ் தடுத்தது. இந்த நிலையில், சந்தனக் கூடு விழாவுக்குக் கொடியேற்ற அதே மலை மீது நான்கு முஸ்லிம்கள் செல்ல போலீஸ் அனுமதிக்கிறதே?


பதில்:
சிறுபான்மையினரின் மத நம்பிக்கைக்கு ஆதரவாக, போலீஸால் மெஜாரிடி மக்களைக் கட்டுக்குள் வைக்க முடியும்; ஆனால் மெஜாரிடி மக்களின் மத நம்பிக்கைக்கு ஆதரவாக, கோர்ட் உத்தரவு இருந்தும் போலீஸால் சிறுபான்மை மக்களைக் கட்டுக்குள் வைக்க முடியாது, அப்போது தான் மதக்கலவரம் வரும் என்று போலீஸ் அபத்தமாகக் கருதுகிறதா? போலீஸை வைத்து திமுக அரசு நடத்தும் 'சிறுபான்மையினர் ஓட்டில் குறி' என்ற நாடகம் இந்தக் கட்டத்தில் ஜொலிக்கிறது.

 

 

 

4. கேள்வி: "மற்ற மாநிலங்களை விடத் தமிழ்நாடு 20 ஆண்டுகள் முன்னோக்கிப் பயணிக்கிறது" என்று முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறாரே?


பதில்:
சுதந்திரத்தை அடுத்த முதல் 20 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சி தமிழகத்தில் வலுவான ஒரு பொருளாதார மற்றும் நிர்வாக அடித்தளத்தை அமைத்தது. அது அடுத்த 57 ஆண்டு காலத்தின் ஊழல் திராவிட ஆட்சியை மீறித் தமிழகத்தை இன்றும் ஒரு முன்னணி மாநிலமாக வைக்க உதவுகிறது.

 

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் சீர் சிறப்புகளைப் பேசும் நேர்மை ஸ்டாலினிடம் இல்லை. அவற்றை மக்களிடம் விளக்கும் தைரியம், திமுக-விடம் சீட் பிச்சை கேட்கும் காங்கிரஸ் கட்சியிடம் இல்லை.

 

 

 

5. கேள்வி: ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்க ஆயத்தமான நீண்ட நாட்களில், தமிழருவி மணியனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். "ரஜினியுடன் மூன்று வருடம் பேசியதில் எனக்குக் கிடைத்தது மிளகு ரசம் தான்" என்று அந்த அனுபவம் பற்றித் தமிழருவி மணியன் இப்போது சொல்லி இருக்கிறாரே?

 

பதில்: தமிழருவி மணியனின் மேடைப் பேச்சுகளைக் கேட்பது யாருக்கும் ஒரு ரசமான அனுபவம். அவருக்கு ரசத்தையே அனுபவமாக அளித்தவர் ரஜினிகாந்த்.

 

 

பகுதி 29 // 23.12.2025

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

No comments:

Post a Comment