Monday, 19 May 2025

ப. சிதம்பரமே பாஜக-வைப் பாராட்டுகிறார். என்ன செய்தது பாஜக?


-- ஆர். வி. ஆர்

 

 ப. சிதம்பரம் ஒரு நெடுநாள் காங்கிரஸ் தலைவர், அரசியல் புத்திசாலி, கெட்டிக்கார வக்கீல். அரசியலில் தரை தட்டாமல் பறப்பதும் உயர்வதும் மிதப்பதும் அவருக்குக் கைவந்த கலை.

 

சமீபத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர் இரண்டு விஷயங்கள் சொன்னார்.

 

ஒன்று: “இண்டி கூட்டணி இன்னமும் ஒன்றிணைந்து இருப்பதாக இந்தப் புத்தகத்தின் இரு ஆசிரியர்களில் ஒருவர் சொல்கிறார். ஆனால் எனக்குச் சந்தேகமாக இருக்கிறது.

 

இரண்டு: “பாஜக மாதிரி வலிமையாக, அசைக்க முடியாதபடி அமைக்கப் பட்ட (formidably organised) ஒரு அரசியல் கட்சி வேறெதுவும் இல்லை. இதை எனது அனுபவத்திலும் சரித்திரம் படித்ததன் வாயிலாகவும் நான் சொல்கிறேன்.

 

இந்த இரண்டு விஷயங்களைச் சிதம்பரம் தெளிவாகச் சொன்னாலும், அவை அவர் மூலமாகப் பொதுவெளியில் தெரிவிக்கப் படுவது அதிர்ச்சி தரலாம், கட்சிக்குள் அவரே கேள்வி கேட்கப் படலாம் என்பதால், தனது பேச்சிலேயே சில ‘ஷாக் அப்சார்பர்’ வார்த்தைகளையும் சேர்த்து அவர் பேசி இருந்தார். என்ன இருந்தாலும், சிதம்பரமே சொன்னதால் அந்த இரண்டு விஷயங்களின் உண்மைத் தன்மைக்கு 200 சதவிகித உடனடி கேரண்டி உண்டு.

 

இண்டி கூட்டணியின் பல்வேறு கட்சிகளிடையே ‘நம்மில் யார் அடுத்த பிரதமர்?’ என்ற உள் போட்டி இருப்பதால், அந்தக் கூட்டணி கரைந்து கிடக்கிறது. அது ஊரறிந்தது.  பாஜக-வின் வலிமை பற்றிச் சிதம்பரம் சொன்னதை மட்டும் உன்னிப்பாகப் பார்க்கலாம்.

 

ஒரு அமைப்பு அல்லது அரசியல் கட்சியின் வலிமை அதை வழிநடத்தும் மனிதர்களின் தலைமைப் பண்புகளிலிருந்து, அவர்களின் மதியூகத்திலிருந்து, ஆரம்பிக்கிறது – அங்குதான் பெரிதும் தங்கி இருக்கிறது.

 

காங்கிரஸ் மாதிரி சுயநலம் மிக்க தலைவர்கள், ஆட்சியில் முறைகேடுகளுக்கு வழிசெய்து கொடுக்கும் தலைவர்கள், குடும்பவழித் தலைமையை வளர்க்கும் தலைவர்கள், நிறைந்த கட்சி ஒரு ஜனநாயகத்தில் வலிமையான கட்சியாக நீடிக்க முடியாது. தில்லுமுல்லுகள் சில காலம் அவர்களின் கட்சியை உயர்த்தி வைத்திருக்கும் – அதாவது மக்களின் அறியாமை நீடிக்கும் காலம் வரை. மக்கள் விழித்துக் கொள்ளாத நிலையில், எந்த அரசியல் கட்சி போட்டிக் கட்சிகளை விடக் கில்லாடியாக அரசியல் நாடகங்கள் நடத்துமோ அது வலிமை பெறும்  – தமிழகத்தில் திமுக மாதிரி.

 

சரி, பாஜக வலிமையான கட்சி என்று சிதம்பரம் சொல்கிறாரே, அப்படியானால் இந்தியாவின் பல மாநிலங்களின் அரசியல் களத்தில் அக்கட்சி முன்னிலை வகிக்கிறதே, அங்கெல்லாம் சாதாரண மக்களின் அறியாமை அகன்று விட்டதா? அங்கெல்லாம் இனிமேல் மக்களை எளிதில் ஏமாற்றி, ஜிகினா வாக்குறுதிகளை வாரி வழங்கி, ஒரு அரசியல் கட்சி தேர்தலில் வெல்ல முடியாதா? அதெல்லாம் இல்லை.

 

பாஜக-வின் அரசியல் வெற்றி ஏன் பிரமிக்கத் தக்கது என்றால், அந்தக் கட்சி மக்களின் அறியாமையைத் துஷ்பிரயோகம் செய்யாமல் வலிமை பெற்றிருக்கிறது. காங்கிரஸ் தலைவர் சிதம்பரத்தால், அந்த வழியில் பாஜக பெற்ற தேர்தல் வெற்றிகளையும் அதன் வலிமையையும் நினைத்தே பார்த்திருக்க முடியாது. இருந்தாலும் பாஜக-வின் வலிமையை உணர்ந்து அதைப் பொதுவெளியிலும் ஒப்புக் கொண்டுவிட்டார் – ஆள் ஒரு வினாடி அசந்திருந்தாலும் இருக்கலாம்!

 

அகில இந்திய அளவில், நரேந்திர மோடியின் தலைமையில், பாஜக படிப்படியாக வலிமை பெறும் போது பிற அரசியல் கட்சிகள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு சாதாரண மக்களின் ஏழ்மையை, இயலாமையை, அறியாமையை, துஷ்பிரயோகம் செய்து குயுக்தி அரசியல் செய்து வருகின்றன. இந்திரா காந்தி காலம் தொடங்கி இன்று வரையிலான காங்கிரஸ் கட்சியும் அதில் அடக்கம். பாஜக அந்த வழியில் செல்லாமல் போட்டிக் கட்சிகளைத் தாண்டி அதிக மக்கள் செல்வாக்கைப் பெற்றுவிட்டது. 2014, 2019, 2024 ஆகிய மூன்று லோக் சபா தேர்தல்களிலும் கூட்டணிக் கட்சிகளோடு சேர்ந்து வெற்றி பெற்று மத்தியில் மோடி தலைமையில் ஆட்சி அமைத்தது.  இது எப்படிச் சாத்தியம் ஆனது?

 

தன்னலம், தன் குடும்ப நலன், ஆகிய நோக்கங்களைக் கொண்டு, அரசியலில் கவர்ச்சி வார்த்தைகள் பேசி, ஏமாற்று வேலைகள் செய்து, பொய்யான தேர்தல் வாக்குறுதிகள் அளித்து,  மற்ற அரசியல் கட்சிகள் இயங்கி வருகின்றன. சமீப காலம் வரை இவற்றில் ஒரு கட்சியை அல்லது ஒரு கூட்டணியைத் தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்துவதை விட சாதாரண மக்களுக்கு வேறு வழி இல்லாமல் போனது – மத்தியிலும் மாநிலங்களிலும். இன்னும் சாதாரண மக்களின் அறியாமை அவர்களுக்கு ஒரு விலங்காக இருக்கிறது.

 

பாஜக மாறுதலாகச் செயல் படுகிறது. தனது நேர்மையான ஆட்சியின் மூலம் சாதாரண மக்களுக்கு அசாத்திய  நன்மைகள் செய்து கொடுத்து, அவர்கள் மனதில் இடம் பிடித்துத் தனது மக்கள் செல்வாக்கைக் கூட்டிக் கொள்கிறது பாஜக. அதன் மூலம் அந்தக் கட்சியின் வலிமையும் அதிகரிக்கிறது. இதைப் பெரிய அளவில் செய்து காட்டியது, நரேந்திர மோடி. இது நடந்தது, பன்னிரண்டரை ஆண்டுகள் (அக். 2001 முதல் மே 2014 வரை) அவர் தொடர்ச்சியாக குஜராத் மாநிலத்தின் முதல் அமைச்சராக இருந்த போது.

 

பின்னர் 2014-ல் இருந்து இன்றுவரை மோடி இந்தியாவின் பிரதமராக இருக்கையில் பாஜக-வின் வலிமை மேலும் கூடி வருகிறது. மோடியின் தனிப்பட்ட மனிதப் பண்புகளும் குணாதிசயமும் பாஜக-வின் வலிமைக்கு முக்கிய காரணங்கள்.

 

நிர்மலா சீதாராமன் பாஜக-வில் சேர்ந்த 6 ஆண்டுகளில் மத்திய மந்திரிசபையில் சேர்க்கப் பட்டார். ஜெய்சங்கர் மத்திய மந்திரிசபையில் வெளிவிவகார அமைச்சரான அடுத்த மாதம்தான்  பாஜக-வில் சேர்ந்தார். அண்ணாமலை கட்சியில் சேர்ந்த பதினோரு மாதங்களில் தமிழக மாநிலத் தலைவர் ஆனார்.

 

திறமைசாலிகள் எங்கிருந்தாலும், அவர்கள் நீண்ட நாள் கட்சியில் உறுப்பினராக இல்லாவிட்டாலும், நாட்டு நலனையும் கட்சி நலனையும் முன்னிட்டு அவர்களை மத்திய மந்திரிகள் ஆக்கியது, மாநிலத் தலைவர் ஆகியது, மோடி. சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் கோலோச்சும் காங்கிரஸ் கட்சியில், அந்தக் கட்சி தலைமை ஏற்கும் ஆட்சியில், இதை எண்ணிப் பார்க்க முடியுமா?

 

நாட்டு நலனை நெஞ்சில் நிறுத்தி, அதற்காகத் தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் வழங்குகிறார் மோடி.  பொதுமக்களைச் சந்திக்கும் போது பெரும் பணிவை வெளிப்படுத்துகிறார். அதோடு, சாதாரண மக்களின் அன்றாட வாழ்வைத் தொடும் பல சவுகரியங்களை ஒவ்வொன்றாக அரசு மூலமாக ஏற்படுத்திக் கொடுக்கிறார்.

 

சாதாரண மக்கள் எளிதில் நேரடியாக உணர முடியாத ஒரு சக்தியும் மோடிக்கு உண்டு: குயுக்தியான எதிர்க் கட்சிகளை வீழ்த்த, அவர்களை விட இரண்டு மடங்கு சாமர்த்தியத்துடன் அரசியல் செய்கிறார். இதில் அமித் ஷா மோடியின் தளபதியாக இருப்பது மோடிக்கு யானை பலம்.

 

மோடியைப் போல் ஒரு உன்னதத் தலைவருடன் பணி செய்வது தங்களின் பாக்கியம் என்று கருதி, அதனால் உற்சாகமும் உத்வேகமும் கூடி, அவரது அமைச்சரவை சகாக்கள் வேலை செய்து சாதனைகள் புரிகிறார்கள்.  அதனாலும் பாஜக பெரும் வலிமை கொள்கிறது. வார்த்தைகளால் எளிதில் முழுவதும் விளக்க முடியாத மோடியின் பெருமை அந்த வலிமையின் மையம்.

 

சரி, கெட்டிக்கார சிதம்பரத்திற்கு பாஜக-வின் வலிமை மட்டும் தான் தெரியும், அதிலுள்ள மோடியின் பெரும் பங்கு தெரியாதா? தெரியும். ஆனால் மோடியின் தனிப்பட்ட பெருமையையும் பொதுவில் எடுத்துச் சொல்லி, ராகுல் காந்தியின் சீற்றத்துக்கு ஆளாகி நஷ்டப் படும் அளவுக்குச் சிதம்பரம் அப்பாவியோ அசடோ அல்லவே!   

 

* * * * *


Author: R. Veera Raghavan, Advocate, Chennai


Friday, 16 May 2025

பஹல்காம்: இந்தியாவைப் பெருமைப் படுத்தும் மோடி

 

          -- ஆர். வி. ஆர்

 

பாகிஸ்தானின் ஆதரவோடு நான்கு பயங்கரவாதிகள்  சென்ற ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமிற்கு வந்து 25 சுற்றுலாப் பயணிகளை – அவர்கள் அனைவரும் ஹிந்துக்கள் என்று ஊர்ஜிதம் செய்த பின்னர் – படுகொலை செய்தனர். சீறி எழுந்தது மோடியின் இந்தியா.

 

தனது ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதிகளில் இந்தியா மின்னல்வேகத் துல்லியத் தாக்குதல்கள் நடத்தியது. அங்கு செயல்பட்ட 9 பயங்கரவாத முகாம்களை அழித்து நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளைக் கொன்றது. சில பாகிஸ்தான்  ஊர்களின் வான்வெளிப் பாதுகாப்புக் கவசங்களை நொறுக்கிவிட்டு, அந்நாட்டின் 11 ராணுவ விமானத் தளங்களின் ஓடுபாதைகளையும் இந்தியா உருக்குலைத்தது.

 

பாகிஸ்தானின் எதிர் ராணுவ நடவடிக்கைகளால் இந்தியாவுக்குச் சில வருந்தத்தக்க உயிரிழப்புகள் ஏற்பட்டன. வேறு பெரிய பாதிப்பில்லை.

 

ஒரு கிரிக்கெட் டெஸ்ட் மேட்ச் காலத்திற்குள், நான்கே நாட்களில் போரைச் சுத்தமாக முடித்து பாகிஸ்தானைப் போர் நிறுத்தம் கேட்க வைத்தது இந்தியா. அந்த நாட்டை முடக்கிய பிரதமர் மோடியின் பேரும் புகழும் இந்தியர்களிடம் இப்போது அதிகரிக்கும். ஏனென்றால் உலகறிய அவர் தலைமையில் கிடைத்த பிரும்மாண்ட வெற்றி அது. பின்னாளில் பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறிச் செயல்பட்டால், இந்தியா ஓங்கித் திருப்பி அடிக்கும் என்பது பாகிஸ்தானின் புதிய உள்ளுணர்வு.

 

முன்னதாக, பஹல்காம் படுகொலைகள் நடந்த இரண்டாவது நாள் பீஹாரில் பேசிய பிரதமர் மோடி, “கொலையாளிகள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தொடரப் படுவார்கள். அவர்களையும் அவர்களின் பின்னால் இருப்பவர்களையும் தேடிப் பிடித்து தண்டிப்போம்” என்று சூளுரைத்தார். கொலையாளிகளை ஏவிய பாகிஸ்தான் கதறக் கதற தண்டிக்கப் பட்டுவிட்டது. கொலை பாதகர்கள் தேடப் படுகிறார்கள்.

 

நமது எதிர்க் கட்சி அரசியல் தலைவர்களின் அணுகுமுறை எப்படி இருந்தது?

 

பிரதமர் மோடி பொருத்தமாகப் பாகிஸ்தானைப் பழி வாங்குவார், அதற்குத் தேவையான தீவிரமும் மன உறுதியும் அவரிடம் உண்டு, தனது பதில் நடவடிக்கைகளை உலக நாடுகள் ஏற்கச் செய்யும் ஆற்றலும் கொண்டவர் மோடி, என்பது இந்தியாவின் எதிர்க் கட்சிகள் அனைத்திற்கும் தெரியும்.

 

மோடியை எதற்கும் எப்போதும் எதிர்க்கும் எதிர்க் கட்சிகள், பஹல்காம் விஷயத்தில் ஆரம்பம் முதலே மத்திய அரசின் நடவடிக்கைகளுக்குத் துணை நிற்பதாக அறிவித்தன. இப்போது மோடியை எதிர்த்துவிட்டுப் பின்னால் நாம் தனிமைப்படக் கூடாது, ஜாக்கிரதையாக இருப்போம், என்ற எண்ணமும் எதிர்க் கட்சிகளுக்கு உண்டு. சில கசக்கும் கற்பனைகள் இந்த உண்மையைப் பளிச்சென்று காட்டும்.


பஹல்காம் படுகொலைகள் நிகழ்ந்த நாளில் மோடிக்குப் பதிலாக, நம் தலைவிதியாக ராகுல் காந்தி பிரதமராக இருக்கிறார், அல்லது இன்னும் திகிலாக மம்தா பானர்ஜிதான் அப்போதைய பிரதமர், அல்லது படு பயங்கரமாக மு. க. ஸ்டாலின் அன்றைய பிரதமர் என்றெல்லாம் நினைத்துப் பாருங்கள். அவர்கள் எவ்விதம் பேசுவார்கள்? மோடி மாதிரி பாகிஸ்தானுக்கு எதிராக தில்லாகக் குரல் எழுப்புவார்களா? அப்படி நடக்காது. 

 

ராகுல் காந்தி இப்படி உளறுவார்: "எனக்கு முந்தைய பத்தாண்டு மோடி அரசு, பட்டியலின மக்கள், பழங்குடி மக்கள், ஓபிசி மக்கள் ஆகியோருக்கு நியாயம் வழங்கவில்லை, அதன் விளவை நாம் பஹல்காமில் பார்த்தோம். இனி பாஜக தனியாகவோ கூட்டணியாகவோ மத்தியில் ஆட்சிக்கு வராது என்று நமது நண்பன் பாகிஸ்தானுக்குத் தெரிவிப்போம். அவர்களுடன் நட்பை வளர்ப்போம்."

 

மம்தா பானர்ஜியின் பிதற்றல் இப்படிப் போகும்: "பாஜக தான் நான்கு நபர்களை பஹல்காமுக்கு அனுப்பி அங்கிருந்த சுற்றுலாப் பயணிகளிடம் அவர்களின் மதம் பற்றிக் கேட்க வைத்துப் பின் கொலைகளை அரங்கேற்றியது. இதற்காகப் பாகிஸ்தான் மீது இந்தியா நடவடிக்கை எடுத்தால், அதன் விளைவாக நம் நாட்டில் கலவரங்களை உண்டாக்கி எனனைப் பிரதமர் பதவியிலிருந்து இறக்கி விடலாம் என்பது தானே பாஜக-வின் கனவு? அது நடக்காது. மக்கள் என் பக்கம்."

 

மு. க. ஸ்டாலினின் குழந்தைப் பேச்சு இப்படி இருக்கலாம்: "மோடி அவர்களே! என் அன்பிற்குரிய சிறுபான்மையினரும் மற்றவர்களும் இந்தியாவில் ஒருவருக்கொருவர் இன்முகத்துடன் சகோதர பாசத்துடன் பழகி வருவது உங்களுக்கு வேப்பங்காயாக இருக்கிறதா? அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காஷ்மீரத்தில் சில நிகழ்வுகள் நடந்தால், நீங்கள் ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்கலாமா? எனது அருமை நண்பர் பாகிஸ்தானின் ராணுவத் தளபதிக்கு நான் சொல்லிக் கொள்கிறேன்: இந்திய மக்கள் நன்மக்கள். நீங்கள் வைத்திருக்கும் காஷ்மீர் பகுதி பகிஸ்தானுக்கே வேண்டும் என்றால், அதை இந்திய மக்கள் அன்பளிப்பாக உங்கள் நாட்டுக்கு வழங்கிட சம்மதிப்பார்கள் என்று நான் இந்த நேரத்தில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்!"

 

எதிர்க் கட்சிகளின் கூட்டணி இப்போது மத்தியில் ஆட்சி செய்தால், பஹல்காம் படுகொலைகளுக்காகப் பாகிஸ்தானைத் தட்டிக் கேட்கும் தைரியம் அவற்றில் ஒரு கட்சிக்கும்  இருக்காது, முழு மனதும் இருக்காது. அந்தப் பயங்கரவாத நாட்டின் மீது வலுவான ராணுவ நடவடிக்கை எடுக்கத் தேவையான நெஞ்சுரமும் தலைமைக் குணங்களும் எதிர்க் கட்சிகளிடம் கிடையாது. ஆனால் மோடி வேறு மாதிரியான பிரதமர் – இது எதிர்க் கட்சிகளே அறிந்தது.

 

பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளுக்குத் தமது ஆதரவை முன்னதாகவே சொல்லி வைத்தால், இப்போதே அவர் பின்னால் நின்றால், சில கைதட்டல்கள் நமக்கும் வந்து சேரும் – அல்லது பரவலான வசவுகளாவது வராது – என்பது பல முக்கிய எதிர்க் கட்சிகளின் எண்ணம். அதன்படி அவர்கள் செயல்பட்டார்கள்.  

 

2020-ம் ஆண்டு சீனா எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் அத்துமீறல் செய்த போது, அப்போது மோடியைத் தொடர்ந்து சீண்டியவர் தானே ராகுல் காந்தி?  சீனாவுக்கு எதிரான நமது அன்றைய ராணுவ நகர்வுகள் மிதமாக, கமுக்கமாக நடைபெற வேண்டி இருந்தன. அப்போது தேச நன்மையை உயர்த்திப் பிடிப்பதும், மத்திய அரசின் பின்னால் நிற்பதும் ராகுல் காந்திக்கு அரசியல் லாபம் தருவதாகத் தோன்றவில்லை. இப்போது மட்டும் அவருக்கு எல்லாவற்றையும் விட தேச நலன் முக்கியம் என்று நாம் கருத முடியுமா?  பிற எதிர்க் கட்சித் தலைவர்களும் அப்படித்தானே?

 

பாகிஸ்தான் ராணுவம் தனது படைபலத்தையும் ஆயுதங்களையும் வைத்து, அந்நாட்டு அரசியல்வாதிகளுக்கு உயிர்ப் பயத்தை உண்டாக்கி, ராணுவம் முன்னதாகத் தேர்ந்தெடுத்தவர்கள் தான் தேர்தலில் ஜெயித்து எம்.பி-க்களாகவும் பிரதமராகவும் வரமுடியும் என்று ஒரு நடைமுறை விதியை ஏற்படுத்தி இருக்கிறது. இது ராணுவ பயங்கரவாதம். அந்த ராணுவம், சீருடை இல்லாத குட்டி பயங்கரவாதிகளைத் தொடர்ந்து தனது நாட்டில் உருவாக்கி வருகிறது. அந்தக் குட்டி பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ராணுவத்திற்குப் பிடிக்காத லோக்கல் அரசியல்வாதிகளின் கதையை முடிக்க உதவுவார்கள், இந்தியாவில் அவ்வப்போது படுகொலைகளும் செய்தார்கள்.

 

நமக்கு இப்படியான, நம் வசமுள்ள காஷ்மீரையும் அபகரிக்க நினைக்கும், ஒரு அண்டை நாடு. இதைத் தவிர, சிறுபான்மை மக்களிடம் தாஜா அரசியல்  செய்து, முறைகேடுகளில் மூழ்கி, தேச நலனையும் பாதுகாக்காத, எதிர்க் கட்சிகள் நிரம்பியதுதான் நமது நாடு. இவர்களுக்கு இடையில் மோடி பைத்தியம் பிடிக்காமல் தேர்தலில் போட்டியிடுகிறார், பிரதமர் ஆகிறார், இந்தியாவையும் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் பெருமைப் படுத்துகிறார். எப்படி அவரால் முடிகிறது?

 

பல இந்தியர்கள் தமது நலன் அறியாத அப்பாவிகளாக இருந்தாலும், பல சமயங்களில் சரியான வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போடத் தெரியாமல் இருந்தாலும், அவர்களின் பூர்வ ஜென்ம பலன் மோடி காலத்தில் வேலை செய்கிறதோ? வேறு எப்படி நினைத்தாலும் நமது ஜனநாயகம் இடிக்கிறதே!

 

* * * * *


Author: R. Veera Raghavan, Advocate, Chennai

 

 

 

 

Tuesday, 13 May 2025

ஸ்டாலின் நடத்திய உடான்ஸ் பேரணி!

 

-- ஆர். வி. ஆர் 

 

முதலில் ‘உடான்ஸ்’ பற்றி ஒரு பொருள் விளக்கம்: அது ஒரு கேலிச் சொல். தன் தவற்றை மறைக்க ஒருவர் சொல்லும்  எளிதான பொய்யை, நடத்தும் பேரணியை, ‘உடான்ஸ்’ என்று தள்ளலாம்.

 

 ‘இந்திய ராணுவத்துக்குத் துணை நிற்போம்’ என்ற பெயரில், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தனது தலைமையில் இந்த மே மாதம் 10-ம் தேதி சென்னையில் ஒரு பேரணி நடத்தினார் – நாலு கிலோமீட்டர் தூரத்திற்கு. இதன் பின்னணி என்ன?

 

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சென்ற ஏப்ரல் 22-ம் தேதி ஒரு பயங்கரவாதம் நிகழ்ந்தது. பாகிஸ்தான் அனுப்பிய நான்கு பயங்கரவாதிகள் அந்த ஊருக்கு வந்து அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் ஹிந்துக்கள் என்பதை அவர்களிடமே கேட்டறிந்து அவர்களில் 25 ஆண்களை – இந்தியர்கள் 24, நேபாளி 1 – அவர்களின் மனைவி குழந்தைகள் முன்னிலையில் படுகொலை செய்தனர்.

 

பாதகம் செய்த பாகிஸ்தான் மீது, மே 7-ம் தேதி அதிகாலையில் அதிரடி ராணுவ நடவடிக்கையைத் துவங்கியது இந்தியா. அன்று விடிவதற்கு முன்பாகவே, பாகிஸ்தானில் இயங்கிய 9 பயங்கரவாதப் பயிற்சி முகாம்களை இந்திய ஏவுகணைகள்  தகர்த்து அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை மேலோகம் அனுப்பின. அன்றைய தினமே மோடியின் துணிவு மிக்க அரசியல் தலைமை உலகெங்கும் ஒளிர்ந்தது.

 

அடுத்த நாளில் (மே 8) பாகிஸ்தானின் சில ஊர்களில் இருந்த வான்வெளிப் பாதுகாப்புக் கட்டமைப்பை இந்தியா சின்னாபின்னம் செய்தது. இடையில் நமது ராணுவத் தளங்கள் மீது பாகிஸ்தான் தாக்க முயற்சித்ததையும் முறியடித்தது இந்தியா.

.

இந்த நிலைமையில், மூன்றாவது நாளான மே 9-ம் தேதி காலை ஸ்டாலின் தனது பேரணியை அறிவித்தார். அதற்கு அவர் என்ன காரணம் சொன்னார்?


“தீவிரவாதத்தை வளர்த்தெடுத்து, தான் கெட்டதோடு இந்தியாவிலும் அத்துமீறல்களில் ஈடுபடுகிறது பாகிஸ்தான். நம்மைக் காக்க வீரத்துடன் போர் நடத்தும் இந்திய இராணுவத்தினருக்கு நாம் ஆதரவை வெளிபடுத்தும் நேரம் இது” என்று சொல்லிய ஸ்டாலின், அதற்காக மறுநாள் மே 10-ம் தேதி மாலை 5 மணிக்குச் சென்னையில் ஒரு பேரணி நடக்கும் என்று அறிவித்தார். அதன்படி பேரணி நடத்தினார்

 

மே 10-ம் தேதி அன்று, ஸ்டாலின் தனது பேரணியைத் துவங்குவதற்கு முன்பாக, இந்தியா தனது ஏவுகணைகளைச் செலுத்தி பாகிஸ்தானின் 11 ராணுவ விமானத் தளங்களைத் துவம்சம் செய்தது.

 

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிய பாகிஸ்தான், மே 10-ம் தேதி பிற்பகலில், இந்தியாவை அழைத்துப் போர்நிறுத்தம் கேட்டு அழுதது. அதன்படி அன்று மாலை 5 மணியிலிருந்து இரண்டு நாடுகளும் போர் நிறுத்தத்தை அமல் செய்ய ஒப்புக் கொண்டு அதன்படி போர் நின்றது. அன்று மாலை ஸ்டாலின் அவரது பேரணியில் நடந்த போது, பாதி வழியிலேயே போர் நிறுத்தம் ஏற்பட்டதையும் அறிந்திருப்பார்.

 

இந்தப் போர் அதி விரைவில் முடிந்ததற்கு ஒரு முக்கியக் காரணம், தொடக்கத்திலிருந்தே இந்தியா பாகிஸ்தானை ராட்சசப் புரட்டு புரட்டி அதற்குக் கைகால் விளங்காமல் செய்தது. இன்னொரு முக்கியக் காரணம்: அத்தகைய போர் நடவடிக்கைக்கான ஒப்புதலை அளித்து, அதன் விளைவுகளுக்கான பொறுப்பையும் தானே ஏற்கும் அரசியல் துணிவு பிரதமர் மோடியிடம் இருந்தது என்பதாகும்.

 

போர் விஷயத்தில் ஸ்டாலின் மோடியை ஒரு வார்த்தை கூடப் பாராட்டவில்லை. ஏதோ நமது முப்படைகளின் தளபதிகள் பாகிஸ்தான் மீது இன்ன தேதியில் இன்ன தாக்குதல்கள் நடத்தவேண்டும் என்று தாமாகவே திட்டம் வகுத்து அவர்களாகவே செயல்பட்டார்கள், மோடி பல்லுப் போன கொள்ளுத் தாத்தா மாதிரி ஓரத்தில் அமைதியாக படுத்துத் தூங்கினார் என்று ஸ்டாலின் நினைக்கிறாரா?   

 

பேரணி பற்றி ஸ்டாலின் அறிவித்த வார்த்தைகளைப் பாருங்கள். பாகிஸ்தான் ‘தீவிரவாதத்தை’ வளர்த்தெடுத்து இந்தியாவில் ‘அத்துமீறல்கள்’ செய்கிறதாம். அதற்காக  வீரத்துடன் பாகிஸ்தானுடன் போர் புரியும் நமது ராணுவத்திற்கு நாம் ஆதரவாக நிற்கும் நேரம் இதுவாம். அதன் பொருட்டு ஸ்டாலின் பேரணி நடத்துகிறாராம்.  

 

பாகிஸ்தான் தனது நாட்டில் பாலூட்டி வளர்ப்பது பயங்கரவாதம் (terrorism) – அது வெறும் தீவிரவாதம் (extremism) அல்ல. ஒன்று சிறுத்தை, மற்றது ஓநாய். தனது பேரணி அறிவிப்பில் பயங்கரவாதத்தின் பெயரைக் கூடச் சொல்ல ஸ்டாலினுக்கு என்ன பயம்? இதில் பம்முவதால் சிறுபான்மையினரின் ஓட்டுக்களை ஈர்க்க முடியும் என்று நினைக்கிறாரா ஸ்டாலின்?

 

அடுத்து, பஹல்காமில் பாகிஸ்தான் பாதகர்கள் செய்தது ஸ்டாலின் பாஷையில் ‘அத்துமீற’லாம். “உன் மதம் என்ன?” என்று சுற்றுலாப் பயணிகளைக் கேட்டு அவர்கள் ஹிந்துக்கள் என்று அறிந்து அவர்களை சுட்டுக் கொன்றார்கள் அந்தப் பயங்கரவாதிகள். அந்தக் கிராதகர்களின் அப்பட்டமான மத வெறுப்பைக் கண்டனம் செய்யாமல், அவர்கள் ஏதோ கையை ஆட்டி சுற்றுலாப் பயணிகளைப் “போ போ” என்று ஊரை விட்டு விரட்டி விட்டார்கள், அதுதான் அவர்கள் செய்த ‘அத்துமீறல்’ என்பது மாதிரிச் சொல்கிறாரே ஸ்டாலின்?

 

போரிட்ட நமது முப்படை வீரர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள். இதில் சந்தேகம் இல்லை. போருக்குப் பின் மே 12-ல் டி.வி மூலம் இந்தியர்களிடம் பேசிய பிரதமர் மோடியும் நமது படைவீரர்களுக்கு, விஞ்ஞானிகளுக்கு மற்றும் உளவுத் துறையினருக்கு சல்யூட் வைத்தார். அது மோடியின் பணிவாலும் பண்பாலும் வந்த சல்யூட். அதாவது, நாட்டை வழிநடத்தும் பிரதமர் என்ற முறையில், போர் வெற்றியில் தனக்கு இயல்பாகக் கிடைக்கும் பெருமையைப் போரில் ஈடுபட்ட இந்தியப் படை வீரர்களுக்கும் நமது வெற்றிக்குப் பங்களித்த பிறருக்கும் கொடுத்தார் மோடி. அது மெச்சத் தக்கது. ஆனால் ஸ்டாலின் விஷயம் வேறு.

 

மோடியை எதிலும் எப்போதும் தனது அரசியல் எதிரியாகப் பார்க்கும் ஸ்டாலின், மோடிக்கு என்ன பெருமை சேர்ந்தாலும் அதை உதாசீனம் செய்வதில் அற்ப திருப்தி கொள்வார். ஆகையால் போர் விஷயத்தில் மோடிக்கு உரித்தான பாராட்டை ஸ்டாலின் சிறிதும் வெளிப்படுத்தவில்லை.

 

இப்படியும் பாருங்கள். தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியது யார் என்று கேட்டால் ஸ்டாலின் என்ன சொல்வார்? ராஜ ராஜ சோழன் என்பரா, இல்லை சோழ நாட்டுக் கொத்தனார்கள் என்று பதில்  சொல்வாரா?

 

ஒரு நாட்டின் படைவீரர்களுக்குத் தில்லும் திறமையும் இருக்க வேண்டும். அவர்களிடம் முறையான ஆயுதங்களும் தளவாடங்களும் இருக்க வேண்டும்.  அதற்கும் மேலாக, போர் என்று வந்தால் நாட்டின் போர்ப்படைத் தளபதிகளின் நம்பிக்கையைப் பெற்று அவர்களை ஊக்கப் படுத்தி அவர்கள் பின்னால் வலுவாக நிற்கும் ஒரு அரசியல் தலைவனும் அந்த நாட்டிற்குத் தேவை. இந்த நேரத்தில் மோடி அப்படி ஒரு தலைவனாக இருக்கிறார். இது ஸ்டாலினுக்குப் புரியுமா?

 

கடைசியாக ஒன்று. உண்மையில் ஸ்டாலின் எதற்குத்  தனது பேரணியை நடத்தினார்? காரணம் உண்டு.

 

பயங்கரவாத பாகிஸ்தானுக்கு மோடி செமத்தியாகப் பாடம் புகட்டியதற்காக, அவருக்கு இந்திய மக்கள் நன்றி சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அதில் தேச உணர்வும் கலந்து வருகிறது. தாமும் இப்போது தேச உணர்வை வெளிப் படுத்தியது போல் இருக்கட்டும், அதே சமயம் முனகலாகக்  கூட மோடிக்கு பாராட்டு சொல்லக் கூடாது, என்று நினைத்து ஒரு மலிவான நாடகத்தை நடத்தி இருக்கிறார் ஸ்டாலின். தனது பேரணிக்காக ஸ்டாலின் சொன்ன காரணத்தை, அவரது பேரணியை, எப்படி எடுத்துக் கொள்வது? வேறென்ன? உடான்ஸ்! 


* * * * *


Author: R. Veera Raghavan, Advocate, Chennai

 

Friday, 9 May 2025

பஹல்காம்: ஆபரேஷன் சிந்தூர் தரும் பலன் என்ன?

 

          -- ஆர். வி. ஆர்

 

சென்ற ஏப்ரல் 22ம் தேதி, பாகிஸ்தான் அரவணைக்கும் 4 பயங்கரவாதிகள் இந்தியாவின் பஹல்காமில் 25 சுற்றுலாப் பயணிகளைப் படுகொலை செய்தனர். அதற்குத் தற்போது இந்தியா பதிலடி கொடுக்கிறது – ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில்.

 

ஆபரேஷன் சிந்தூரின் முதற் கட்டமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 வெவ்வேறு இடங்களில் நிறுவப் பட்டிருந்த பயங்கரவாதக் கட்டமைப்புகளை ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தி அழித்தது இந்தியா. அதில் ஒரு இடம் 82 ஏக்கர் விஸ்தீரணம் கொண்டது, இன்னொன்று 15 ஏக்கர். அந்த அனைத்து இடங்களிலும் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப் பட்டனர்.

 

இந்தியாவால் கொல்லப் பட்ட பயங்கரவாதிகள் பலரின் உடல்களின் மீது பாகிஸ்தானின் கொடியைப் போர்த்தி, பாகிஸ்தானின் ராணுவ வீரர்களே அவற்றைச் சுமந்து அடக்கம் செய்ய உதவியது அந்த நாடு. "எங்கப்பன் பயங்கரவாத முகாமில் இல்லை" என்பது போல்.

 

பாகிஸ்தான் எதற்காகப் பயங்கரவாதக்  கட்டமைப்புகளையும் பயிற்சி முகாம்களையும் தனது நாட்டிற்குள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், அமைய அனுமதித்தது – அதாவது பாகிஸ்தான் நாடே அவற்றை அமைத்தது

 

பாகிஸ்தான் உருவாக்கும் அந்தப் பயங்கரவாதிகள் ஒரு எதிரி நாட்டில் அவ்வப்போது புகுந்து நாசவேலைகள் புரியட்டும், படுகொலைகள் செய்யட்டும், என்று பாகிஸ்தான் கெடுதலாக நினைப்பதுதான் அதற்கான காரணம். பாகிஸ்தான் கூறு கெட்டு பாவிக்கும் ஒரே எதிரி நாடு இந்தியா.  ஆகையால் இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்றத் தான் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை வளர்த்து வருகிறது.

 

பாகிஸ்தான் ராணுவ ரீதியாக இந்தியாவுடன் நேருக்கு நேர் பெரிய அளவில் மோதினால், பாகிஸ்தானை இட்லிப் பொடியாக அரைத்து விடும் வல்லமை இந்தியாவுக்கு உண்டு. அது அந்த நாட்டிற்கும் தெரியும். ஆகையால் பாகிஸ்தான் வேறு ஒன்றைச் செய்கிறது. அதாவது, பாகிஸ்தான் நிர்வகிக்கும் நிலத்தில் பயங்கரவாதிகளுக்கான முகாம்களை அமைத்து, அவற்றில் பயங்கரவாதிகளை உருவாக்கிப் பயிற்சி அளித்து, அவர்கள் மூலம் இந்திய ராணுவத்தினர் மற்றும் இந்தியப் பொதுமக்கள் மீது அவ்வப்போது கொலைவெறித் தாக்குதல் நடத்தி வருகிறது அந்த நாடு.

 

தற்போது மோடி பிரதமராகவும் அமித் ஷா உள்துறை அமைச்சராகவும் இருக்கும் இந்தியாவை பாகிஸ்தான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா இப்போது என்ன செய்தது என்றால்: ஆபரேஷன் சிந்தூரை ஆரம்பித்து வைத்து, தனது பதிலடி நடவடிக்கையை சற்று நிறுத்திப் பாகிஸ்தானைக் கவனித்தது இந்தியா – 9 பயங்கரவாத முகாம்களைத் தகர்த்த பின் பாகிஸ்தான் வாலைச் சுருட்டி சும்மா இருக்குமா என்று தெரிந்து கொள்ள.

 

ஆபரேஷன் சிந்தூரின் முதற் கட்ட நடவடிக்கையில் நூற்றுக்கும் மேலான பயங்கரவாதிகள் மடிந்த பின், எஞ்சியுள்ள பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தலைவர்கள் அந்த நாட்டு ராணுவத் தலைமையிடம் என்ன கேட்பார்கள்?

 

“இந்தியாவில் நாச வேலைகள் நடத்தவும் படுகொலைகள் செய்யவும் அந்த வேலைகளின் போது எங்களில் பலர் இந்திய ராணுவத்தால் சுடப்பட்டு மடியவும் தானே எங்களை வளர்த்து வைத்திருக்கிறீர்கள்? அப்படி மடிந்தால் அது புனிதம் என்றீர்கள், நாங்களும் அதை நம்பி இந்தியாவில் பயங்கரவாதம் செய்ய ரெடியாக இருக்கிறோம். ஆனால் பாகிஸ்தானில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், உள்ள எங்கள் முகாம்களை ஏவுகணைகள் அனுப்பித் தகர்த்து எங்களையும் நூற்றுக் கணக்கில் இந்தியா மேலோகம் அனுப்புவதை  நாங்கள் எப்படி ஏற்க முடியும்? இந்த மண்ணிலாவது எங்களைக் காக்க, நீங்கள் இந்தியாவின் மீது எதிர்த் தாக்குதல் நடத்துங்கள். இல்லாவிட்டால் நாங்கள் பயங்கரவாதிகளாக உங்கள் ராணுவத்திற்கு வேலை பார்ப்பதில் அர்த்தமில்லை.”

 

தனக்காகவும், தன் சேவகர்களின் நியாயமான எதிர்பார்ப்பை நிறைவேற்றவும், பாகிஸ்தான் ஒன்று செய்தது. அதாவது, ஆபரேஷன் சிந்தூரின் முதற்கட்ட நடவடிக்கைக்கு எதிராக, மறுநாள் இந்தியாவின் 15 எல்லைப் பகுதி ஊர்களின் மீது, இந்தியாவின் சில விமானத் தளங்களின் மீது,  ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை அனுப்பித் தாக்குதல் நடத்த முனைந்தது பாகிஸ்தான். அவை அனைத்தையும் இந்தியா வெற்றிகரமாக வான்வெளியிலேயே தடுத்து வீழ்த்தியது. பாகிஸ்தானின் இந்த ஆரம்ப ராணுவத் தாக்குதல் முயற்சியில் அது ‘ஷேம் ஷேம்’ தோல்வி அடைந்தது.

 

இப்போது ஆபரேஷன் சிந்தூரின் அடுத்த கட்டத்திற்கு இந்தியா நகர வேண்டி இருந்தது. அதன்படி – வேறு வழி இல்லாமல் – பாகிஸ்தான் நாட்டு ராணுவத் தளங்களை இந்தியா ஏவுகணைகள் கொண்டு தாக்கியது. அந்த நாட்டில் பல இடங்களில் உள்ள வான்வழிப் பாதுகாப்புக் கட்டமைப்புகள் பலவற்றை – முக்கியமாக லாகூர் நகரின் வான்வழிப் பாதுகாப்புக் கவசத்தை –  ஏவுகணைகள் மூலம் நாசம் செய்தது இந்தியா.

 

பயங்கரவாத முகாம்களை ஒன்பது இடங்களில் அடித்து நொறுக்கிய மறு நாளில், பாகிஸ்தானின் ராணுவத் தளங்கள் சிலவற்றையும் அழித்திருக்கிறது இந்தியா.  பாகிஸ்தானிலோ, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலோ, இயங்கும் பயங்கரவாதிகள் முகாம்கள் நிஜத்தில் பாகிஸ்தான் ராணுவத்தின் பினாமி முகாம்கள் தான். ஆகையால் இந்தியா அவற்றைத் துவம்சம் செய்தது, முகமூடி அணிந்த பாகிஸ்தானின் ராணுவ முகத்தில் குத்திய மாதிரி – இதில் முகமூடிக்குப் பின்னால் உள்ள அந்த ராணுவ முகத்திற்கு வலிக்கும்.  இதுபோக பாகிஸ்தான் நாட்டில் பல இடங்களின் வான்வழிக் கவசத்தை இந்தியா நொறுக்கியது,  முகமூடி இல்லாத பாகிஸ்தானின் ராணுவ முகத்தில் நேராகக் குத்து விட்ட மாதிரி.

 

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிடையே ஒரு போர் ஏற்பட்டால், இந்தியாவின் கை ஓங்கி நிற்கும் என்பதை இந்தியா இப்போது பாகிஸ்தானுக்குத் தெளிவாக்கி இருக்கிறது, உலகத்திற்கும் புரிய வைத்திருக்கிறது. நாம் இதற்காக நமது ராணுவத்திற்கு ஒரு சல்யூட்டும் பிரதமர் மோடிக்கு ஒரு சல்யூட்டும் வைக்கலாம்.

 

இனி உலகம் இந்திய ராணுவ வலிமையின் மீது, அதன் போர்த் தந்திரங்களின் மீது, அறிந்து மரியாதை வைக்கும். அது நமது தேசத்தின் மீதான ஒட்டுமொத்த மதிப்பை, நமது வர்த்தக வலிமையை, உயர்த்தும். அதோடு இன்னும் ஒரு பலன் நமக்குக் கிடைக்கும்.

 

 இந்தியாவைப் பார்த்து உதார் விடுவது பயனில்லை,  இனி பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு அனுப்பினால் லாகூர், ராவல்பிண்டி மற்றும் கராச்சி வரை பாகிஸ்தானுக்கு சேதம் ஏற்படும், என்பதெல்லாம் இப்போது பாகிஸ்தானுக்கு உறைக்கும். அதுபோக, சமீபத்தில் இந்தியா அறிவித்தது போல்  இந்திய வழி நதிகளிலிருந்து பாகிஸ்தானுக்குத் தண்ணீர் செல்வதையும் இந்தியா நிறுத்தினால் – அதைச் செய்ய நாட்கள் பிடித்தாலும் – பாகிஸ்தானில் மக்களே அங்கு வீதிக்கு வந்து தண்ணீர் கேட்பார்கள். ராணுவம் மக்களை லத்தியால் அடித்தோ துப்பாக்கியால் சுட்டோ அவர்களின் தண்ணீர்த் தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்ற கவலையும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு வரும். இதனால் பாகிஸ்தானுக்கு இந்தியா மீது ஒரு அச்சம் கலந்த மரியாதை ஏற்பட வழி உண்டு. அது ஏற்பட்டால், பாகிஸ்தான் தனது பயங்கரவாதத்தை இந்தியாவில் பிரயோகிக்கத் தயங்கும்.   

 

பைத்தியக்காரன் பத்தும் செய்வான், அதன் விளைவையும் ஏற்பான். அதனால் எந்தக் காலத்திலும் – இப்போது சில நாட்களில் கூட – பாகிஸ்தானின்  ராணுவ அக்கிரமங்கள் அல்லது பினாமி பயங்கரவாதச் செயல்கள் இந்தியாவில் நிகழலாம். அவற்றை முதலில் எப்படி அளவோடு கையாள்வது, பிறகு பாகிஸ்தானை எப்படி அடிப்பது என்பதில்  நம் நாட்டிற்கு அனுபவமும் ராணுவத் திறனும் உண்டு. பாகிஸ்தானுக்கு இன்னொரு நாடு என்றும் ஆயுதங்கள் தரலாம். தண்ணீர்?

 

எல்லாவற்றுக்கும் மேலாக, பாகிஸ்தானை அண்டை நாடாகக் கொண்டிருக்கும் இந்தியா தனக்கு இதைச் சொல்லிக் கொள்ள வேண்டும்: அடி உதவுவது போல் அடுத்த நாடு உதவாது!

 

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

 

Wednesday, 7 May 2025

பாகிஸ்தான் மீது இந்தியா ராணுவ நடவடிக்கை எடுத்தது சரியா?

  

          -- ஆர். வி. ஆர்

 

“பாகிஸ்தான் மீது இந்தியா ராணுவ நடவடிக்கை எடுத்தது சரியா? நமது நாட்டு ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களின் பெரிய உயிரிழப்புக்கு அது வழி வகுக்காதா?

 

இந்தக் கேள்விகளை நம்மில் சிலர் – சிலர் அப்பாவியான நல்லெண்ணத்திலும், சிலர் மறைமுக மோடி எதிர்ப்பாகவும் – எழுப்புகிறார்கள்.

 

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு நாம் பாகிஸ்தான் மீது துப்பாக்கி-குண்டு நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது. ஏனென்றால்:

 

எப்படியான நாடு இந்தியா? இந்து சமவெளி நாகரிகம் வளர்ந்த நாடு. உலகில் மிக அதிக மக்கள் தொகை உடைய நாடு. நான்காவது பெரிய பொருளாதாரம், பிற நாடுகளைக் காட்டிலும் வேகமான வருடாந்திரப் பொருளாதார வளர்ச்சி, இவற்றோடு உலகம் போற்றும் தலைவரைப் பிரதமராகத் கொண்ட நாடு.

 

இப்படியான நமது நாட்டிற்குள் அடுத்த நாடு சில பயங்கரவாதிகளை அவ்வப்போது அனுப்பி நம் ராணுவ வீரர்களையும் அப்பாவி மக்களையும் கொன்று குவிக்கும், அதை நம் நாடு கண்டனம் செய்துவிட்டு ஐ. நா சபைக்குச் சென்று அழுவதோடு நிறுத்திக் கொள்ளவேண்டும் என்றால் நமது பெருமையை, நமது முக்கியத்துவத்தை, நமது மக்களுக்கான கடமையை, உணராத நாடு இந்தியா என்று அர்த்தமாகும்.

 

நம் மண்ணில் நம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் துணியாத நாடாக இருந்து நாம் வளர முடியாது, உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்க முடியாது.  நாம் அப்படிச் செயலற்று இருந்தால், வளர்ந்த மற்ற நாடுகள் நம்மைக் கிள்ளுக் கீரையாக நினைக்கும், வியாபாரம் மற்றும் பொருளாதார விஷயங்களில் நம்மை அடிபணிய வைக்கும், நம்மை வஞ்சித்து உறிஞ்சும்.

 

பாகிஸ்தான் நம்மை எந்த வகையில் தாக்கி வருகிறது? நம் நாட்டிற்குள் தனது ராணுவத்தை அனுப்பாமல், நூற்றுக் கணக்கில் பயங்கரவாதிகளைத் தயார் செய்து நம் நாட்டிற்குள் அனுப்பிப்  படுகொலைகளையும் நாசவேலைகளையும் செய்கிறது. இவற்றுக்குப் பதிலடி என்பதாக, நாமும் இந்தியாவில் பயங்கரவாதிகளைத் தயார் செய்து அவ்வப்போது பாகிஸ்தானுக்குள் ரகசியமாக அனுப்பி அந்த நாட்டு எல்லைக்குள் நாசவேலைகளை அரங்கேற்ற முடியாது. பாகிஸ்தானுக்கு நாம் ராணுவ ரீதியாக நடவடிக்கை எடுத்துத் தான் புரியவைக்க முடியும். அதை இந்தியா இப்போது - இன்று 7.5.2025 அதிகாலை - மிகக் கவனமாகச் செய்திருக்கிறது.

 

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில், ஒன்பது இடங்களில் பாகிஸ்தானின் ஆசியுடன் அமைக்கப் பட்ட பயங்கரவாதக்  கட்டமைப்புகளை இன்று ஏவுகணைகள் வீசி அழித்திருக்கிறது இந்தியா. இது குறித்து இந்தியர்கள் மகிழ்வது இயற்கை, அதை அவர்கள் வெளிப்படுத்துவதும் இயல்பானது.

 

இன்று இந்தியா எடுத்த அளவான ராணுவ நடவடிக்கைக்கு எதிராக, சில நாட்களில் அல்லது பின்னாளில்  பாகிஸ்தான் கண்ணை மூடிக்கொண்டு கன்னா பின்னாவென்று நாம் நாட்டின் மீது ராணுவத் தாக்குதல் நடத்துமா, அதில் இந்தியாவின் பக்கம் கணிசமான உயிர்ச் சேதம் நிகழுமா, என்று நமக்குத் தெரியாது. அதை நினைத்து இந்தியா பாகிஸ்தான் மீது இன்றைய ராணுவ நடவடிக்கையை  எடுக்காமல் இருக்க முடியாது. பாகிஸ்தான் அப்படி ஒரு ராணுவத் தாக்குதல் செய்தால், செய்ய எத்தனித்தால், நமது மோடி அரசு அதைத் திறமையாகக்  கையாளும் என்று நாம் நம்பலாம்.

 

அதிக பட்சமாக எந்த அளவு ஒரு அரசு எல்லா பக்கங்களிலும் சிந்திக்க முடியுமோ, திட்டமிட முடியுமோ, அதைச் செய்து இந்தியா இன்றைய அளவான ராணுவ தாக்குதலில் வெற்றி கண்டது பற்றிப் பல இந்தியர்களுக்கு இப்படி ஒரு உணர்வு இருக்கும்.  "தானாக வந்து நம்மை அவ்வப்போது செவிட்டில் அறைந்து ஒடும் அடுத்த வீட்டுக்காரனை, நாம் ஒரு முறை அவன் வீட்டுக்குள் சென்று அவன் முதுகில் போட்டு ரண்டு எத்து எத்தினோமே!" என்ற திருப்தியும் தன்மான மகிழ்வும் இந்தியர்களுக்கு ஏற்பட்டிருக்கும்.

 

மத்தியில் உள்ள மோடி அரசு பொறுப்பானது.  தேவையில்லாமல் பாகிஸ்தானுடன் பெரிய போரை ஆரம்பித்து, அல்லது வளர்த்து, நமது நாட்டு உயிர்களையும் பொருளாதார முன்னேற்றத்தையும் தானாகப் பலி தராது என்று நாம் நம்பலாம். இந்த நேரத்தில் மோடி போன்ற ஒரு தலைவர் நாட்டின் பிரதமராக இருப்பது இந்தியாவுக்கு யானை பலம்.

 

சரி, ராணுவ ரீதியாகப் பாகிஸ்தானை நன்றாகப் போட்டதில், இனி பாகிஸ்தான் நம் நாட்டுக்குள் பயங்கரவாதிகளை அனுப்பாது, நாசவேலைகள் செய்யாது என்பது நிச்சயமா? அது நிச்சயம் இல்லை.

 

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் தலைமையகம் எங்கிருக்கிறது? உண்மையில் அந்த இடம் அந்நாட்டு ராணுவத் தலைமையகம்.  பாகிஸ்தான் திருந்தாத, திருத்த முடியாத நாடு. அந்த நாட்டை எதிர்த்து இந்தியா என்னென்ன தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்கவேண்டும், என்னென்ன நேரடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது அவ்வப்போதைய பாதுகாப்பு நிலைமையைப் பொறுத்தது. 

 

மேற்கே ரவுடி ராணுவ பாகிஸ்தான், கிழக்கே நன்றியில்லாத பங்களா தேஷ், வடக்கே ராட்சஸ சீனா என்று இந்தியா காலம் தள்ள வேண்டியபோது, ஊழலுக்கும் சுயநலத்திற்கும் பெயர் வாங்கிய அரசியல்வாதிகளும் உள்நாட்டில் மத்திய அரசைக் கைப்பற்றினால், அதைவிடப் பெரிய நரகம் இந்தியாவுக்கு இல்லை.

 

தேசத்தை நேசிக்கும் பொதுமக்களக்கிய நாம் இதைத்தான் செய்யலாம். நாட்டு நலன் பற்றி அக்கறையுள்ள ஒரு பொறுப்பான திறமையான மத்திய அரசு டெல்லியில் எப்போதும் இருக்கட்டும் என்று நாம் பிரார்த்திக்கலாம். சரிதானே?

 

* * * * *


Author: R. Veera Raghavan, Advocate, Chennai