Sunday, 13 April 2025

அண்ணாமலை தமிழக பாஜக-வின் மாநிலத் தலைவராக நீடிக்கவில்லை. அதன் வலிமை குறையுமா?

 

-- ஆர். வி. ஆர்

 

தமிழக பாஜக-வில் தற்போது நடந்த மாநிலத் தலைவர் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவில்லை. போட்டியிட்ட ஒரே வேட்பாளரான நயினார் நாகேந்திரன் ஏக மனதாக அக் கட்சியின் புதிய மாநிலத் தலைவர் ஆகியிருக்கிறார்.

 

அண்ணாமலை மாநிலத் தலைவராக இல்லாத தமிழக பாஜக-வின் வலிமை குறையுமா? இந்தக் கேள்வி பல சாதாரண பாஜக ஆதரவாளர்களிடம் இருப்பது வியப்பல்ல. அதற்குக் காரணம் இருக்கிறது.

 

தமிழகத்தில் ஓட்டு வாங்கும் சக்தியை வைத்துப் பார்த்தால், திமுக மற்றும் அதிமுக பெரிய கட்சிகள்.  அவற்றுக்கு அடுத்த நிலைக்குத் தனது இளம் வயதில், மூன்றே முக்கால் வருடங்களில், பாஜக உயரப் பெரும் பங்களிப்பு செய்தது, கட்சியின் முந்தைய மாநிலத் தலைவர் அண்ணாமலை.

 

திமுக எப்படியான கட்சி? அராஜகம், அடாவடி, ஆட்சியில் முறைகேடுகள், ஹிந்து மத துவேஷம், இலைமறை காயாக இருக்கும் பிரிவினைப் போக்கு, ஆகியவை திமுக-வின் பல முகங்கள்.  

 

தமிழகத்தில் மாறி மாறி வரும் ஆட்சிகளின் அவலங்களிலிருந்து தங்களை மீட்கும் ஒரு நம்பிக்கை முகத்தைத் தமிழக மக்கள் ஐம்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் உலகில் பார்க்க முடியவில்லை – ஒரு சில தலைவர்களிடம் அவர்கள் முன்பு பற்று வைத்தாலும். இந்தச் சூழ்நிலையில், அத்தகைய புதிய நம்பிக்கை முகமாகப் பலருக்கும் அண்ணாமலை தெரிய ஆரம்பித்தார். அதுதான் குறுகிய காலத்தில் தமிழக பாஜக-வை சாதாரண மக்களிடையே பெரிய அளவில் பிரபலப் படுத்தியது.

 

இத்தகைய அண்ணாமலை மீண்டும் தமிழக பாஜக-வின் மாநிலத் தலைவராக வரவில்லை என்றால், அவரால் ஈர்க்கப் பட்ட மக்கள் பலரும் பாஜக மீது சற்று அதிருப்தி கொள்வது இயற்கை. ஆனால் உண்மையில் அண்ணாமலையின் அபிமானிகளுக்கு இருக்கும் அச்சமும் கவலையும் தேவையற்றது – இது நாளுக்கு நாள் தெளிவாகிறது.    

 

சமீபத்தில் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அண்ணாமலை பாஜக-விற்கு அளித்த மகத்தான பங்களிப்பை எழுத்து மூலம் வெளிப்படுத்தினார். தனது முதல் பதவிக் காலம் முடிந்தவுடன் ஒரு மாநிலத் தலைவர் – அதுவும் திமுக கோலோச்சும் தமிழ்நாட்டு மாநிலத் தலைவர் – பாஜக-வின் தேசியத் தலைமையிடமிருந்து தனது இளம் வயதில் இத்தகைய பாராட்டைப் பெறுவது நினைத்துப் பார்க்க முடியாதது. பாஜக-வில் அண்ணாமலைக்கான முக்கியத்துவம்  இன்னும் குறையவில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்.


அண்ணாமலை இனி மாநிலத் தலைவராக இல்லாவிட்டாலும் அவர் முன்பு போல் மக்களிடம் நேரடியாகப்  பேச முடியும், திமுக-வின் பிரதான எதிர்ப்பாளராகத் தமிழக பாஜக-வில் தொடர முடியும், அதில் சந்தேகம் வேண்டாம், என்கிற செய்தி நயினார் நாகேந்திரனின் வார்த்தைகளிலும் உடல் மொழியிலும் தெரிகிறது. பாஜக-வின் தேசியத் தலைமையும் அதே சமிக்ஞையைக் காண்பிக்கிறது. இவை அனைத்தும் அண்ணாமலை அபிமானிகளுக்கு இருக்கக் கூடிய சந்தேகத்தை முற்றிலும் போக்க வல்லவை.

 

இப்போது அமித் ஷா முன்னிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக மீண்டும் இணைந்திருக்கிறது. 2026 தமிழக சட்டசபைத் தேர்தலில் அந்த இரண்டு கட்சிகளும் அதிமுக தலைமையில் ஒரே கூட்டணியாகப் போட்டியிடப் போகின்றன. இந்த நேரத்தில், பாஜக-வின் தமிழக மாநிலத் தலைவர் பதவியில் அண்ணாமலையை அடுத்து நயினார் நாகேந்திரன் தேர்வாகி இருக்கிறார்.   

 

அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று அண்ணாமலை மீண்டும் தமிழக பாஜக-வின் மாநிலத் தலைவராகத் தொடராமல் வேறு ஒருவர் அப்பதவிக்கு வந்திருக்கலாமோ என்ற சந்தேகம், அண்ணாமலை ஆதரவாளர்கள் பலருக்கு வரலாம். இந்த விஷயத்தை நாம் இப்படிப் புரிந்து கொள்வது சரியாக இருக்கும்.

 

அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், அண்ணாமலைக்கும் இடையே முன்பு வார்த்தைப் போர்கள் இருந்தன.. அவரவர் கட்சி நலன் என்று கருதி அவர்கள் அப்படிப் பேசி இருப்பார்கள். ஆனால் தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்து ஆட்சிக்கு வராமல், மக்கள் நலனுக்குப் பெரிதாக இரண்டு கட்சிகளும் ஒன்றும் செய்யமுடியாது, அவைகள் வளரவும் முடியாது.  2026 தேர்தல் மூலம் இன்னும் வளர வேண்டியது தமிழக பாஜக-வுக்கு மிக அவசியம்.

 

தேர்தல் விளையாட்டும் தேர்தல் கணக்குகளும் தனியானவை. ஒரு கிரிக்கெட் உதாரணத்தை வைத்து – அதாவது, கற்பனையான ஒரு ‘தேர்தல் கிரிக்கெட்’ உதாரணத்தின் மூலமாக – இதை விளக்கலாம்.


திமுக-வின் தேர்தல் கிரிக்கெட் அணியில் பல கட்சிகளைச் சேர்ந்த பதினோரு வீரர்கள் கூட்டாக, ஒரு கூட்டணியாக, இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். திமுக அணியில் சேராத மற்ற வீரர்கள், ஆறு பேர் மற்றும் ஐந்து பேர் ஒன்றாக ஒரே எதிர் அணியில் கூட மறுக்கிறார்கள். இருந்தாலும் தேர்தல் கிரிக்கெட் விதிகள் படி, அந்த ஆறு மற்றும் ஐந்து வீரர்கள் தனித்தனி அணிகளாக, களத்திற்கு வந்து திமுக கூட்டணியை எதிர்த்து தேர்தல் கிரிக்கெட்  விளையாடலாம், அவர்கள் அப்படி ஆடுகிறார்கள் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். 

 

திமுக அணி பேட்டிங் செய்கிறது. எதிர்ப்புறம் இரண்டு பிரிவு வீரர்களும் பந்து வீசுகிறார்கள். திமுக அணியின் பதினோரு வீரர்கள் கூட்டாக 250 ரன்கள் எடுக்கிறார்கள். அந்த 250 ரன்களும் திமுக அணியின் கணக்கில்  சேர்கிறது. எதிர் அணியில் உள்ள ஆறு வீரர் பிரிவு 150 ரன்கள் எடுக்க, ஐந்து வீரர் பிரிவு 125 ரன்கள் எடுக்கிறார்கள். அவர்கள் ஒற்றை அணியாக, ஒரு கூட்டணியாக, விளையாடி இருந்தால் அவர்கள் கணக்கிற்கு மொத்தமாக 275 ரன்கள் சேர்ந்து, அந்த எதிர் அணியின் பதினோரு வீரர்களும் ஜெயித்த அணியாக விளங்குவார்கள், திமுக அணி தோற்கும். 


திமுக அணியை எதிர்த்த வீரர்கள் இரண்டு பிரிவாக ஆடியதால், அந்த இரு பிரிவுகள் அவரவர் கணக்கிற்கு எடுத்த ரன்கள்  (150 மற்றும் 125) தனித் தனியாக திமுக அணியின் 250-ஐ விடக் குறைவு என்பதால், அந்த இரு பிரிவினரும் தோற்றார்கள், திமுக அணி ஜெயித்தது என்றாகும்.  இதுதான் தேர்தல் கிரிக்கெட் விதிகள். இப்படித்தான் தேர்தல் கிரிக்கெட் வீரர்கள் இந்த ஆட்டத்தை ஆட முடியும். இதனால் தான் அதிமுக மற்றும் பாஜக ஒரு கூட்டணியாகச் சேர்ந்து, இன்னும் சில கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு, திமுக கூட்டணியை வலுவாகத் தேர்தலில் எதிர்கொள்ள வேண்டும்.

 

அண்ணாமலை ஆதரவாளர்கள் புரிந்துகொள்ள வேண்டிய இன்னும் ஒன்று இருக்கிறது.  

 

அண்ணாமலை பாஜக-வின் மாநிலத் தலைவராக இல்லாமல் போவதை அதிமுக தலைவர் பழனிசாமி விரும்புகிறார் என்றே இருக்கட்டும். அது பாஜக-வுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் இப்போது பொருட்டல்ல. எது முக்கியம் என்றால், அண்ணாமலை நினைப்பதைத் தேர்தல் கிரிக்கெட்டில் திமுக அணிக்கு எதிராக முயன்று பார்க்க முடியும் – கேப்டனாக இல்லாவிட்டாலும் சச்சின் டெண்டுல்கர் அடித்து ஆடி இந்திய அணிக்கு ரன்கள் சேர்த்த மாதிரி.  கூட்டணி சேர்ந்ததால் அதிமுக-வோடு பாஜக-வும் வெற்றி பெறும் வாய்ப்பு உண்டு. மற்ற அனைத்தும் இப்போது இரண்டாம் பட்சம். அது அதற்குக் காலம் உண்டு.

 

என்ன ஆனாலும் அதிமுக-பாஜக கூட்டணியால் 2026 தேர்தலுக்குப் பின் தமிழக பாஜக-வுக்கு அதிக எம்.எல்.ஏ-க்கள் கிடைக்கும் வாய்ப்பு பிரகாசம், அரசியலில் அதிக வெளிச்சமும் கிடைக்கும். அண்ணாமலையின் சக்தியும் அதிகரிக்கும்.

 

கட்சித் தலைவர் என்ற பதவியில் இல்லாமல் எப்படி மோடிக்கும் அமித் ஷாவுக்கும் தேசிய அளவில் மதிப்பும்  மரியாதையும் உள்ளதோ, அதேபோல் அண்ணாமலைக்கும் தமிழக அளவில் தனி மதிப்புக் கூடி வருகிறது. வரும் வருடங்களில் அது பலப்படும். இதில் அவருக்குத் துணையாக பாஜக-வின் தேசியத் தலைமையும் இருக்கிறது.

 

அண்ணாமலை முன்பு முன்னிருந்து செய்ததை, இப்போது பக்கவாட்டிலிருந்து செய்யப் போகிறார். அதை முற்றிலும் உணர்ந்துதான், அவரே புதிய மாநிலத் தலைவர்  நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாகப் பேசி இருக்கிறார். நயினார் நாகேந்திரனை வாழ்த்தி, அண்ணாமலையின் அபிமானிகள் தொடர்ந்து பாஜக-வுக்கு ஆதரவு தரவேண்டும்.  பாஜக மூலமாகத் தமிழ்நாட்டுக்கு விடிவு பிறக்கும் நேரம் வந்து கொண்டிருக்கிறது.  வேறென்ன வேண்டும்?

 

* * * * *

 

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

 

 

Friday, 11 April 2025

பொன்முடியின் ஆபாசப் பேச்சு. பாதிக் காரணம், திமுக தலைவர் ஸ்டாலின்


-- ஆர். வி. ஆர்

 

திமுக-வின் உயர் மட்டத் தலைவர்களின் பொதுவான குணம் இது: ஹிந்து மதத்தை இடித்துப் பேசுவது, இழித்துப் பேசுவது. கிறிஸ்துவ மதத்தையும் இஸ்லாம் மதத்தையும் போற்றிப் பேசுவது, அந்த மதத் தலைவர்களிடம் குழைந்து பணிந்து நடப்பது. திமுக-வின் துணைப் பொதுச் செயலாளர் மற்றும் மாநில அமைச்சரான பொன்முடியும் இதில் ஒருவர்.  

 

மிக அநாகரிகமாக, ஆபாசமாக, பெண்கள் கூடி இருக்கும் அவையில், பொன்முடி சமீபத்தில் பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது. ஹிந்து மத சம்பிரதாயங்களான சைவத்தையும் வைணவத்தையும் குறிப்பிட்டு ஏதோ கீழ்த்தரமாகப்  பேசி, கேட்பவர்கள் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தார் பொன்முடி. திமுக-வின் இன்னொரு துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியே  கண்டனம் தெரிவிக்கும் வகையில் இருந்தது பொன்முடியின் எட்டாந்தரப் பேச்சு.

 

பொன்முடியின் ஆபாசப் பேச்சைத் தொடர்ந்து, திமுக-வின் தலைவர் மு. க. ஸ்டாலின் பொன்முடியைத் துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி இருக்கிறார் – காரணம் குறிப்பிடாமல். பொன்முடி இதுவரை தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை. தெரிவித்தாலும் அது போலியாக இருக்கும்.

 

தனது ஆபாசப் பேச்சால் கட்சிப் பொறுப்பில் இருக்கும் தகுதியைப் பொன்முடி இழந்தார், ஆகையால் அவருடைய கட்சிப் பதவி பறி போனது என்றாகிறது. கட்சிப் பொறுப்புக்கு லாயக்கில்லாத பொன்முடி, அமைச்சர் பதவிக்கும் லாயக்கில்லாதவர் ஆயிற்றே? சரி சரி, கண்துடைப்புக்காக எடுத்த நடவடிக்கையில் லாஜிக் பார்க்க முடியுமா?

 

கீழ்த்தரமாக, ஆபாசமாகப் பொதுமேடையில் பேசிய பொன்முடி, அனுபவமில்லாத இளவயதுக் காரரா? படிப்பறிவும் பெரிதாக இல்லாதவரா? இல்லை. அவருக்கு வயது 75 ஆகப் போகிறது. திமுக-வின் சீனியர் தலைவர்களில் ஒருவர். 18 வருடங்கள் கல்லூரி ஆசிரியராக வேலை செய்தவர். இதையும் நம்புங்கள்: அவர் மூன்று துறைகளில் எம்.ஏ, அது தவிர பி.எட், பி.எல் மற்றும் பி.எச்.டி பட்டங்கள் பெற்றவர்.  என்ன இருந்து என்ன? கடைசியில் அவர் ஒரு முன்னணி திமுக தலைவர், கட்சித் தலைமைக்கு நம்பிக்கையானவர். அவர்களுக்குள் அதில் நிறைய விஷயம் இருக்கிறது.

 

நினைத்துப் பாருங்கள். தமிழகத்தில் ஒரு பாஜக தலைவரோ, அல்லது காங்கிரஸ் தலைவரோ, பொன்முடி பாணியில்  ஆபாசமாக, ஹிந்து மதத்தை மலிவாக இழித்தும், பேசியிருக்க முடியுமா? முடியாது. அதற்குக் காரணம், அது போன்ற அருவருப்பான பேச்சுகளை பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தேசியத் தலைமையில் உள்ள தலைவர்கள் பேசுவதில்லை. ஆனால் திமுக-வின் தலைமை அப்படி அல்ல.

 

நீங்கள் ஒரு அமைப்பில் பணி செய்கிறீர்கள், அந்த அமைப்பின் தலைவர் நாகரிகமாகப் பேசுகிறவர் என்றால் உங்களுக்கே பிறரிடம் அநாகரிகமாகப் பேசக் கூச்சமாக இருக்கும். ‘அநாகரிகமாகப் பேசினால் தலைமையின் கண்டனத்திற்கு நாம் ஆளாவோம், இந்த அமைப்பிலும் நாம் வளர முடியாது’ என்ற உள்ளுணர்வு உங்களிடம் இயற்கையாக இருக்கும். அப்படியான உள்ளுணர்வு  கொண்டவர்கள் தான் அந்த அமைப்பிலும் வந்து சேருவார்கள்.

 

நீங்கள் பணி செய்யும் அமைப்பின் தலைவரே அநாகரிகமாகப் பேசுகிறவர் என்றால் நீங்களும் பிறரிடம் அநாகரிகமாகப் பேச முனைவீர்கள். ‘அநாகரிகமாகப் பேசினால் நாம் தலைமையால் மெச்சப் படுவோம், இந்த அமைப்பிலும் எளிதாக வளரலாம்’ என்ற உள்ளுணர்வு உங்களுக்கு இயல்பாக வரும் – ஒரு ரவுடிக் கூட்டத்தில் உள்ள மாதிரி. அப்படியான உள்ளுணர்வு  கொண்டவர்கள் அந்த அமைப்பில் அதிகம் வந்து சேருவார்கள். அப்படித் திமுக-வில் சேர்ந்து வளர்ந்தவர் பொன்முடி.

 

திமுக தலைவர்களின் முறைகேடுகளும் முறையற்ற பேச்சுகளும், ஹிந்து மத விரோதப் போக்கும், சமீப காலமாகத் தமிழக பாஜக-வால் கடுமையாக எதிர்க்கப் படுகின்றன. அதனால் பேச்சு அளவிலாவது இதில் திமுக தலைமை சற்றுப் பின் வாங்கி வருகிறது. அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலும் நடக்கப் போகிறது. இந்த நேரத்தில், ஹிந்து மதத்தை இழித்துப் பேசுவது, ஆபாசச்  சொற்கள்  பேசுவது ஆகிய செயல்களைத் திமுக காரண காரியமாகக் கட்சிக்குள் சற்று மட்டுப் படுத்த விரும்பும். அப்படி இருக்கையில் அமைச்சர் பொன்முடி சமீபத்தில் பேசிய அருவருப்பான பேச்சு, திமுக தலைவர் ஸ்டாலினையே பாதித்திருக்கும். அதனால் பொன்முடியின் கட்சிப் பதவி பறிபோயிருக்கிறது.

 

சிறிது பள்ளிப் படிப்பு மட்டும் படித்த காமராஜ், அன்றைய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து கண்ணியமான பேச்சுக்கள் பேசிய பெருந்தலைவராக விளங்கினார். பொறியியல் படிப்பு மற்றும் எம்.பி.ஏ படித்து ஐ.பி.எஸ்-ஸிலும் தேர்வான அண்ணாமலை இன்று ஒரு பாஜக தலைவராக நாகரிகமாகப் பேசுகிறார். ஆனால் பதினெட்டு ஆண்டுகள் கல்லூரி ஆசிரியராக இருந்த பொன்முடி, எம்.ஏ, பி.எட், பி.எல், பி.எச்.டி என்று பல கல்விப் படங்கள் பெற்ற பொன்முடி, காது கூசும் கீழ்த்தரமான பேச்சை – அதுவும் ஹிந்து மதத்தை அநாகரிகமாகத் தொடும் பேச்சை – பேசக் கூடியவர் என்றால் என்ன அர்த்தம்?

 

நாகரிகமான சிந்தனையும் பேச்சும் கொண்டவர்கள் திமுக-வில் உயர்வது விதி விலக்கானது, இயல்பானது அல்ல. தரம் தாழ்ந்தவர்கள் திமுக-வில் உயர்வதற்குக் காரணம், அந்தக் கட்சியின் தலைவர் பதவி விகித்தவர்கள் காண்பித்த முன்மாதிரி. அவர்களில் திமுக-வின் முந்தைய நெடுநாள் தலைவர் கருணாநிதி முக்கியமானவர். அவரது புதல்வர் ஸ்டாலினும் முடிந்தவரை தந்தைக்கு இதில் ஈடுகொடுக்க அவ்வப்போது முனைகிறார் – தந்தையின் வீரியம் ஸ்டாலினிடம் இல்லை என்றாலும்.

 

கிட்டத் தட்ட ஏழு வருடங்களாகத் திமுக-வின் தலைவர் பதவியில் இருப்பவர் ஸ்டாலின். அவர் நினைத்தால், அதற்கான உறுதி அவரிடம் இருந்தால், இந்த ஏழு வருடங்களில் அவர் திமுக-வினரின் கீழ்த்தர அநாகரிகப் பேச்சுகளுக்குத் தடை விதித்திருக்கலாம், அவரும் அந்தத் தடையைக்  கடைப் பிடித்திருக்கலாம்.  ஆனால் ஸ்டாலின் அதைச் செய்யவில்லை. ஏனென்றால் அவரும் திமுக-வின் கலாசாரத்தை உயர்த்திப் பிடிப்பவர். 

 

அந்நியரைக் கடிக்க உங்கள் நாயை நீங்கள் அனுமதித்து ரசித்தால், அது அடுத்தவரை எந்த அளவு கடிக்கும் என்பதை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது. அது ஒருவரைக் கன்னா பின்னாவென்று கடித்த பின், ஊருக்காக நீங்கள் விரல் அசைத்து அதைக் கண்டிக்கலாம்.  ஆனாலும் அது உங்கள் அருமைப் பிராணி. நீங்கள் அதற்கு வேண்டிய இறைச்சி கிடைக்க வழி செய்வீர்கள். உங்களுக்கு வேண்டியது உங்களுக்குக் கிடைக்க அது துணையாக இருக்கும், காவலாக நிற்கும். பிறகென்ன?

 

* * * * *

 

Author: R. Veera Raghavan, Advocate, Chennai


Saturday, 5 April 2025

அண்ணாமலை நீடிப்பாரா, மாற்றப் படுவாரா?

 

-- ஆர். வி. ஆர்


 

திமுக, அதிமுக-விலிருந்து ஆரம்பிக்கலாம்.  

 

கருணாநிதியால்  திமுக-விலிருந்து வெளியேற்றப் பட்ட எம். ஜி. ஆர், திமுக-வுக்குப் போட்டியாக ஆரம்பித்த கட்சி, அதிமுக. அந்த இரு தலைவர்களும் இன்று இல்லை. ஆனால் அந்த இரண்டு கட்சிகளும் ஒரே இயல்பு கொண்டவை. ஒரு கட்சியில் ஹிந்து விரோதப் பேச்சு இருக்கும், அராஜகப் போக்கும் காணப்படும். இன்னொரு கட்சியில் அவை இருக்காது. மற்றபடி, தங்கள் நலன்களை நன்றாகக் கவனித்துக் கொண்டு மக்கள் நலனுக்கு எதிராக ஆட்சி செய்யும் தலைவர்கள்தான் இரண்டு கட்சிகளிலும் இருக்கிறார்கள்.  

 

1967 தேர்தலில் திமுக-வால் மாநிலத்தில் வீழ்த்தப்பட்ட காங்கிரஸ் சென்ற பல வருடங்களாகத் திமுக-வின் காலடியில் கிடக்கிறது, திமுக-வை எதிர்த்து மறுபடியும் ஆட்சியில் அமரக் காங்கிரஸ் முனையவில்லை. திமுக, அதிமுக இரண்டு கட்சிகள் மட்டும் மாறி மாறித் தமிழகத்தில் 1967-லிருந்து ஆட்சி செய்கின்றன.  

 

தமிழகத்திற்கு நல்லாட்சி கிடைக்க, இப்போது நடக்கவேண்டிய முதல் காரியம் இது. அதாவது, ஆட்சியில் இருக்கும் திமுக கூட்டணியை 2026 சட்டசபைத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். அது முடியாவிட்டால், அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி மிகக் குறைந்த உறுப்பினர் எண்ணிக்கையில் மட்டும் ஜெயிக்கும் வகையில் எதிரணியின் உறுப்பினர் எண்ணிக்கை உயரவேண்டும். அதன் மூலம், திமுக-வுக்கு எதிரான மக்கள் சக்தி திரண்டு வருகிறது என்கிற செய்தியை திமுக-வுக்கு உரத்துச் சொல்லி, 2031 சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி தோற்கடிக்கப் பட்டு, பாஜக முக்கிய அங்கம் வகிக்கும் ஒரு கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும்.

 

வருகின்ற 2026 சட்டசபைத் தேர்தலில், திமுக-வுக்கு வலுவான எதிர்ப்பை எந்தக் கட்சியின் தலைவர் மக்களிடையே காண்பிக்க முடியும்? சீமான் அவர் பாணியில் திமுக-வை எதிர்க்கிறார், விஜய்யும் அவர் பாணியில் எதிர்க்கிறார். ஆனால் இந்த இருவரும் தமிழகத்தில் நல்லாட்சி தருவதற்கான போக்கும் தகுதியும் கொண்டவர்கள் அல்ல. இந்த இரு தலைவர்களும் பாஜக-வின் தேசிய சிந்தனை துளியும் இல்லாதவர்கள். இந்த இருவரும் பாஜக-வுடன் ஒரு கூட்டணியில் இணைந்து திமுக-வை எதிர்க்க முன் வருவது சந்தேகம்.  

 

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, திமுக-வை எதிர்க்கும் முக்கியக் கட்சியாக இருக்கிறது. ஆனால், சீமானுக்கோ விஜய்க்கோ உள்ள தனிப்பட்ட வாக்காளர் பின்புலம் பழனிசாமிக்கு இல்லை, அவர் கட்சியில் மற்ற தலைவர்களுக்கும் கிடையாது. இருந்தாலும் எம்.ஜி.ஆர் பிரபலப் படுத்திய இரட்டை இலை சின்னம் இன்றும் அதிமுக-வின் கணிசமான வாக்கு வங்கிக்குக் காரணமாக இருக்கிறது – அது குறைந்து வந்தாலும்.

 

இந்த சூழ்நிலையில், பாஜக-வின் திமுக எதிர்ப்புக்கும் மக்களிடையே ஆதரவு பெருகி வருகிறது. அதற்குக் காரணம் பாஜக என்ற கட்சி ஸ்தாபனம் அல்ல. மோடி, அமித் ஷா போன்ற கட்சியின் தேசியத் தலைவர்களும் காரணம் அல்ல. அண்ணாமலை தமிழக பாஜக-வின் மாநிலத் தலைவர் ஆவதற்கு முன்பிருந்த மாநிலத் தலைவர்களோ, அல்லது கட்சியின் பிற மூத்த தலைவர்களோ காரணம் அல்ல.

 

யார் மீதும் குறை சொல்லாமல் ஒரு உண்மையை நாம் அறியலாம். அதாவது, அண்ணாமலை கட்சியின் மாநிலத் தலைவர் ஆன பின்பு அவருடைய பேச்சினால், செயலினால், துணிவினால், மன உறுதியினால், அர்ப்பணிப்பால், தலைமைப் பண்பினால்வார்த்தைகளால் எளிதில் விளக்க முடியாத அவரது  அம்சத்தால், அவர் இன்று தமிழகத்தில் திமுக-வின் முக்கிய எதிர்ப்பு முகமாக – அதாவது, பிரதானமாகத் திமுக-வை எதிர்க்கும் ஒரு குரலாக – பார்க்கப் படுகிறார். திமுக-வே அப்படி நினைக்கும். அதை வைத்து பாஜக தமிழகத்தில் ஒரு சக்தி மிக்க தேர்தல் கூட்டணியை உருவாக்க வேண்டும். அதை பாஜக முனைகிறது. 

 

இப்படி இருக்கையில், 2026 தேர்தல் சமயத்தில் அண்ணாமலை பாஜக-வின் மாநிலத் தலைவராக இல்லாமல் போகலாம், ஒரு கட்சிக் கோட்பாட்டினால் – அல்லது ஒரு அரசியல் யுக்தியாக – அவர் இப்போது மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விடுவிக்கப் படலாம் என்ற பேச்சு பரவலாக எழுகிறது. அது நடந்தால் என்ன ஆகும்? பாஜக-வின் திமுக எதிர்ப்பானது முனை மழுங்கும்.

 

திமுக, மிக ஆக்ரோஷமாகப் பந்து வீசும் கிரிக்கெட் பவுலர்கள் மாதிரி. அவர்களைத் திறமையாக எதிர் கொண்டு, வரும் பந்துகளை ஃபோர், சிக்சர் என்று திறமையாக அடித்து விளையாடி பவுலர்களைச் சோர்வடையச் செய்யும் ஒரு பேட்ஸ்மேன் எதிரிலுள்ள பாஜக அணிக்குத் தேவை. அதை அண்ணாமலை செய்ய முடியும் என்றால் அவரை ஆடுகளத்தில் இருக்கச் செய்வது நல்லது. நமது அணியில் மற்றவர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக, அல்லது வேறு காரணத்திற்காக, அண்ணாமலையை இந்த மேட்சில் ஆடுகளத்துக்கு அனுப்பாமல் இருப்பது  நமக்கு வெற்றி தருமா?

 

மற்ற பேட்ஸ்மேன்களால் மூர்க்கமான பவுலர்கள் வீசும் பந்துகளை ஆட்டமிழக்காமல் அடித்து ஆட முடியாது, அவ்வப்போது ஒன்று, இரண்டு ரன்கள் மட்டும் எடுக்க முடியும், மற்ற எல்லாப்  பந்துகளையும் டொக்கு டொக்கு என்று ஆடுவார்கள் என்றால் அவர்களால் பெரிய பயன் உண்டா?

 

தமிழகத்தில் பாஜக-வின் மூத்த தலைவர்கள் பலரையும் தாண்டி, கட்சிக்கே புதியவரான அண்ணாமலையை எதற்காகக் கட்சியின் தேசியத் தலைமை 2021-ம் ஆண்டு தமிழகத்தின் மாநிலத் தலைவர் ஆக்கியது? ஏனென்றால், தமிழகத்தின் திராவிட அரசியல் களம் வினோதமானது, கொடுமையானது. மீண்டும் ஆட்சியில் அமர்ந்துள்ள திமுக-வை அண்ணாமலையால் மற்ற பாஜக தலைவர்களை விடப் பலமாக எதிர்க்க முடியும், அதற்கான குணாதிசயங்கள் அவரிடம் தெரிகின்றன, என்ற கணிப்பில், எதிர்பார்ப்பில். அந்தக் கணிப்பை, அந்த எதிர்பார்ப்பை, அவர் 2021 ஜூலை மாதத்திலிருந்து நிரூபித்து வருகிறார். அப்படியானால் 2026 சட்டசபைத் தேர்தல் வருவதற்கு முன் அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விடுவிக்கப் பட்டால், அது கட்சிக்கு நன்மை செய்யுமா?

 

பாஜக என்ற அதிசயக் கட்சியும், மோடி என்ற அற்புதத் தலைவரும், தமிழகத்தில் திமுக-வுக்கு எதிராக மக்களைத் திருப்ப முடியவில்லை. அண்ணாமலையால் அது சிறிதளவாவது முடிந்திருக்கிறது. இப்போது அவரை மாநிலத் தலைவர் பதவியலிருந்து நீக்கினால், கட்சியின் மகிமையும் மோடியின் நற்பெயரும் தமிழக பாஜக-வைத் தூக்கி நிறுத்தாதே? அவர் மாநிலத் தலைவராக இல்லாவிட்டால், அவரால் பாஜக-வுக்கு ஈர்க்கப்பட்ட வாக்காளர்கள் 2026-ல் பாஜக-வுக்கு வாக்களிப்பார்களா என்பதும் ஒரு கேள்வி. 

 

‘அண்ணாமலை மாநிலத் தலைவராக இல்லாவிட்டாலும் அவர் தனது மாநிலப் பணிகளைத் தொடர்ந்து செய்வார், அதில் பாதகம் ஏற்படாது’ என்று எண்ணினால் அதில் சாரமில்லை.

 

அண்ணாமலை மாநிலத் தலைவராகத் தொடராவிட்டால், முன் போல் அவரால் பத்திரிகையாளர் சந்திப்புகளை அடிக்கடி நடத்த முடியுமா? புதிய தலைவரைத் தவிர்த்து அவரே திமுக-வுக்குப் பதிலடிகள் கொடுத்துக் கொண்டே இருக்க முடியுமா? அண்ணாமலை மாநிலத் தலைவராக இல்லாவிட்டாலும் அது முடியும், முன் போல் அவர் அதே வெளிச்சத்தில் இருப்பார் என்றால், புதிய மாநிலத் தலைவர் எதற்கு?

 

இன்னொன்று. ‘2026 சட்டசபைத் தேர்தலின் போது அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்து அந்தத் தேர்தலில் பாஜக கூட்டணி தோற்றால், அது அண்ணாமலைக்குப் பின்னடைவாகும். அதனால் இப்போது அண்ணாமலையை வேறு கட்சிப் பணியில் அல்லது மத்திய அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டு, 2031 தமிழக சட்டசபைத் தேர்தல் நேரத்தில் அவரை மீண்டும் தமிழக மாநிலத் தலைவர் ஆக்கலாம்’ என்ற ஒரு யோசனையும் காற்றில்  வருகிறது.

 

அண்ணாமலை நல்ல பேட்ஸ்மேன் என்று தெரிந்தும், மூர்க்கமாகப் பந்து வீசும்  எதிர் அணி விளையாடும் இந்த மேட்சில் அவரை இறக்காமல், அடுத்த மேட்சுக்கு அவர் வரட்டும் என்பது ஒரு யுக்தியாகுமா?

 

நமக்குத் தெரிந்தது இது. கிரிக்கெட்டில் ஏதாவது திருப்பம் வருமா, அல்லது ஒன்றும் வராதா, என்று தெரியாது. நாம் என்ன செய்யலாம்? மேட்ச் பார்க்கலாம். செய்வோம்.

  

* * * * *

 

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

 

 

Thursday, 3 April 2025

அமித் ஷாவின் அண்ணாமலைக் கணக்கு சரிதான்!

 

-- ஆர். வி. ஆர்

 

கடந்த சில நாட்களாகத் தமிழக பாஜக ஆதரவாளர்களுக்குச் சோர்வு தரும் ஒரு தகவல் ஊடகங்களில், வாட்ஸ் அப்பில், விறுவிறுவென்று உலா வருகிறது, விவாதிக்கப் படுகிறது. அதன் இரண்டு அம்சங்கள் இவை:

 

1) பாஜக தலைவர் அண்ணாமலை, மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அந்தப் பதவியில் வேறொருவர் நியமிக்கப்பட  இருக்கிறார்.

 

2)    வரப்போகும் இந்த மாற்றத்துக்கான காரணம், அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி. அதாவது, அண்மையில் பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்தபோது, ‘2026 தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக-வும் பாஜக-வும் கூட்டணி அமைக்க வேண்டும் என்றால் அண்ணாமலையை பாஜக மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அகற்ற வேண்டும்என்னோடு இணக்கம் கொள்ளும் வேறு ஒருவரை அந்த இடத்தில் அமர்த்த வேண்டும்’ என்று கேட்டாராம். அதிமுக-வுடன் கூட்டணி இல்லாமல் திமுக-வைத் தேர்தலில் தோற்கடிக்க முடியாது என்று நினைத்த அமித் ஷாவும் அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டாராம். 

  

பாஜக-வின் தேசியத் தலைமையிலிருந்து இந்த மாறுதல், அதன் காரண காரியம், பற்றி அதிகாரபூர்வமாக ஒரு செய்தியும் வரவில்லை.

 

நிதானமாக யோசித்தால் இந்தச் செய்தியை, ஊடகத்தில் இது விரிவாகப் பரவுவதை, நாம் எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?

 

2024 லோக் சபா தேர்தலுக்காக, பாஜக-வுடன் தேர்தல் கூட்டணி வைக்க அதிமுக-வுக்கு அவசியமில்லை என்று கருதினார் பழனிசாமி. பாஜக-வுடன் முன்பிருந்த கூட்டணி தொடர்ந்தால் சிறுபான்மையினர் ஓட்டுகளை அதிமுக இழக்கும், அந்த இழப்பை பாஜக-வுடனான கூட்டணி ஈடு செய்யாது என்றும் அப்போது அவர் நினைத்தார். அது போக, பாஜக-வுடன் தேர்தல் கூட்டணி தொடர்ந்தால் மக்கள் செல்வாக்கு உயர்ந்து வரும் பாஜக தலைவர் அண்ணாமலையால், அரசியலில் தனக்குள்ள மதிப்பு இன்னும் குறையும், அதிமுக-வுக்குள் தன் செல்வாக்கு குறையும் என்று தனக்காகவும் கவலைப் பட்டார் பழனிசாமி. இதனால் 2024 லோக் சபா தேர்தலுக்கு முன்பாக பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக-வை விலக்கினார் பழனிசாமி. அதனால் இரண்டு கட்சிகளும் அந்தத் தேர்தலில் இழப்பைச் சந்தித்தன.

 

இப்போது காட்சி மாறுகிறது. வரப்போகும் 2026 தமிழக சட்டசபைத் தேர்தலுக்காக, மீண்டும் பாஜக-அதிமுக கூட்டணி அமைப்பது பற்றிப் பேச பழனிசாமியை எது அமித் ஷாவிடம் கூட்டிச் சென்றது?  

 

கடந்த மூன்றே முக்கால் வருடங்களில் அண்ணாமலை தனது அசாத்தியத் துணிவால், திறமையால், சாதுர்யத்தால், அர்ப்பணிப்பால், தமிழகத்தில் பாஜக வுக்குச் சேர்த்து வைத்திருக்கும் மக்கள் ஆதரவு தான் – அது தொடர்ந்து அதிகரிப்பதுதான் – பழனிசாமியைப் பாஜக பக்கம் இழுக்கிறது.

 

முன்பு பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகிப் போவதற்கு முக்கிய காரணமாக எந்த அண்ணாமலை கருதப்பட்டாரோ, அதே அண்ணாமலையால் தமிழக பாஜக பெற்றிருக்கும் கூடுதலான மக்கள் சக்தி, அதிமுக-வை பாஜக பக்கம் இழுக்கிறது. அந்த இரு கட்சிகள் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டால் அதிமுக-வுக்கும் நிச்சயப் பலன் உண்டு, முன்பு அதிமுக விலகிப் போனதால் தவறவிட்ட அந்தப் பலன் 2026-ல் அதிமுக-வுக்கும் கிடைக்கட்டும் என்று பழனிசாமி இப்போது நினைக்கிறார்.   

 

ஆனால் ஒன்று. 'போவேன், வருவேன்' என்று போக்குக் காட்டும் பழனிசாமி கேட்டதால், அரசியலில் கூர்மதியும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட அமித் ஷா – மோடியின் வலது கரமாக விளங்கும் ஒரு பாஜக தலைவர் – மக்கள் அபிமானம் பெற்ற துடிப்பான இளம் தலைவன் ஒருவனைத் தன் கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து ஒதுக்கி வைப்பாரா? அப்படி நடந்தால் அது கட்சியின் பல எதிர்காலத் தலைவர்களையும் பாதித்து பின்னாளில் அவர்களையும் கட்சிப் பணியில் சுணங்க வைக்கும் என்று அமித் ஷா நினைப்பாரே?

 

அண்ணாமலை பதவி விலகிய பிறகு பாஜக-வுடன் அதிமுக கூட்டணி அமைத்துவிட்டு, மீண்டும் பழனிசாமி  அந்தக் கூட்டணிக்கு டாடா காட்டிவிட்டுப் போனால் பழனிசாமிக்காக தமிழக பாஜக இழந்த இளம் தலைவர்களை மீண்டும் பெற முடியாது என்ற பிரக்ஞை பாஜக-வின் தலைமைக்கு இருக்கத் தானே செய்யும்?

 

இதையெல்லாம் மற்றவர்கள் சொல்லி மோடிக்கும் அமித் ஷாவுக்கும் தெரிய வேண்டியதில்லை. சாதாரண மக்கள் மனங்களை அறியும் அந்த இரு தலைவர்கள், கட்சியின் அடுத்த அடுத்த நிலைத் தலைவர்களின் எண்ணங்கள் பற்றியும் நன்கு அறிவார்கள்.

 

சரி, பிறகு யார் எதற்காக அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து மாற்றப் படுவார் என்ற தவறான தகவலைக் கசிய விட்டிருப்பார்கள்? ஊடகத்தில் பலமாகப் பரவச் செய்திருப்பார்கள்?

 

தமிழகத்தில் எந்த அரசியல் கட்சிக்கு அண்ணாமலை நாளொரு தொல்லையும் பொழுதொரு குடைச்சலும் அரசியல் ரீதியாகக் கொடுத்து வருகிறாரோ, அந்தக் கட்சியால் சொகுசாக வாழ்கிறவர்கள் செய்த காரியமாகத்தான் இது இருக்க வேண்டும். அவர்கள் ஏன் இதைச் செய்ய வேண்டும்?

 

பாஜக ஆதரவாளர்கள் சோர்வடைந்து, அந்தக் கட்சியின் தேசியத் தலைமையின் மீது பிடிப்பிழந்து, “சீச்சீ! என்ன கட்சி இது!” என்று அவர்கள் நினைக்கட்டும் என்பது பாஜக-வைத் தீவிரமாக வெறுக்கும் ஒரு கட்சியின் கணக்காக இருக்கும்.  அதோடு, நடப்பதைப் பார்த்து அண்ணாமலையும் வெறுப்படைந்து பதவி விலகலாம் என்பதும் அந்தக் கட்சியின் நப்பாசையாக இருக்கும். ஆனால் அமித் ஷாவும் அண்ணாமலையும் பனங்காட்டு நரிகள்.

 

இரண்டு விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒன்று, தமிழகத்தில் திமுக-வை வீழ்த்த, திமுக பாணி அரசியலைக் கட்டுக்குள் வைக்க,  பாஜக  தீவிரமாகச் செயல்படுகிறது. அது நடந்தேற, போகிற போக்கில் பாஜக தன்னை அதிமுக-வுடன் அரசியலில் சமன் செய்துகொள்ள வேண்டும், காலப் போக்கில் அதிமுக-வை முந்தவும் வேண்டும். அப்படி இருக்கையில் அதிமுக சொல்கிற படி தமிழகத்தில் பாஜக தனது தலைவரையும் மாற்றும் என்பது நினைத்துப் பார்க்க முடியாத விஷயம்.

 

இன்னொன்று.  தமிழகத்தில் அண்ணாமலை சேர்த்து வைத்திருக்கும் மக்கள் செல்வாக்கின் முக்கிய காரணம் இது. அதாவது, தீய சக்தியான திமுக-வை அண்ணாமலை நேர்மையாக, விடாப்பிடியாக எதிர்க்கிறார், அம்பலப் படுத்துகிறார். அண்ணாமலையை ஆதரிக்கும் மக்கள் அந்த எதிர்ப்பைப் பிரதானமாக வரவேற்கிறார்கள், என்பது அந்தக் காரணம்.  அனைவரையும் விட பிரதமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் இது தெரியும். பிறகு ஏன் அந்த இருவரும் அண்ணாமலையை மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து 2026 தேர்தலுக்கு முன் விடுவிக்க நினைக்க வேண்டும்?

 

‘எல்லாம் சரி. அண்ணாமலை தமிழகத் தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப் படுவார் என்பது தவறான தகவலானால், அதை அமித் ஷா உடனே மறுத்து அறிக்கை வெளியிடலாமே, அவர் ஏன் அதைச் செய்யவில்லை?’ என்று சிலர் கேட்கலாம்.

 

பாஜக-வுக்கு எதிரான கட்சிகள், அதுவும் தமிழகத்தில் உள்ள ஒரு முக்கியக் கட்சி, பாஜக-வின் தேசியத் தலைமை தனது உள் கட்சி விவகாரங்களில் ஏதோ முடிவு எடுத்திருக்கிறது, அதை செயல்படுத்தப் போகிறது, எடுக்கப் போகிறது என்று ஒரு தவறான தகவலை ஊடகத்தில் பரவ விட்டால், அதை பாஜக மறுத்து அறிக்கை விட அவசியம் இல்லை. பாஜக அப்படிச் செய்ய ஆரம்பித்தால், விஷமத் தனமான எதிர்க் கட்சிகள் பாஜக தேசியத் தலைமை பற்றிப் புதிய புதிய தவறான தகவல்களை அவ்வப்போது ஊடகத்தில் பரப்பும்.  ஒவ்வொரு முறையும் பாஜக அவற்றை மறுத்துக் கொண்டிருக்க முடியாது.  காலப் போக்கில் மக்கள் எது உண்மை என்று புரிந்து கொள்வார்கள்.

 

அமித் ஷா – பழனிசாமி – அண்ணாமலை பற்றிய இந்தப் பொய்ச் செய்தியை உருவாக்கியவர்கள், பாஜக-வுக்கு ஒரு நன்மை செய்திருக்கிறார்கள். இந்தப் பொய்ச் செய்தி பரவியதால், அண்ணாமலையின் எண்ணற்ற ஆதரவாளர்கள் அவர்மீது மாறாத அபிமானம்  உடையவர்கள் என்பது அவர்கள் பலவாறாக வெளிப்படுத்திய கவலையின் மூலம் வெளிப்பட்டிருக்கிறது.  அது பாஜக-வின் தேசியத் தலைமைக்கும் தெரிய வந்திருக்கும். ஒரு சிறந்த மாநிலத் தலைவரை உருவாக்கிய திருப்தியும் ஊர்ஜிதமும் மோடிக்கும் அமித் ஷாவுக்கும் மீண்டும் கிடைத்திருக்கும்.


சரிதானே?

 

* * * * *

 

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

 

 

 

 

  

 

Saturday, 29 March 2025

அண்ணாமலை, ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ், சீமான், விஜய் – இவர்களில் யார் எப்படி?

         

          -- ஆர். வி. ஆர்

 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, மக்கள் செல்வாக்கு நாளுக்கு நாள் ஒரு அலாதியான காரணத்தினால் கூடுகிறது.  அது என்ன?

 

திமுக-விலிருந்து ஆரம்பிக்கலாம்.

 

மு. க. ஸ்டாலின் தலைமை தாங்கும் திமுக ஒரு அராஜகக் கட்சி என்பது தமிழக மக்களின் பரவலான எண்ணம். வேண்டாதவர்களிடம் முஷ்டி வீசுதல், எட்டி உதைத்தல், காது கூசும் சொற்கள் பேசுதல் போன்ற அநாகரிகச் செயல்கள் அக் கட்சியின் கீழ் மட்டத்திலும் நடு மட்டத்திலும் இயல்பாகப் பரவியிருக்கிறது என்பது தமிழ்நாட்டில் பலரின் கருத்து. அந்தக் கட்சியினரைப் பகைக்கிற மாதிரி வெளியில் பேசவோ செயல்படவோ சாதாரண மக்கள் பயப்படுவார்கள்.

 

தமிழ்நாட்டில் சில அரசியல் தலைவர்கள் திமுக-வை எதிர்க்கலாம், ஆனால் தமது சுயலாபத்திற்காக மட்டும் எதிர்க்கிறார்கள், அல்லது அவர்கள் திமுக மாதிரி தில்லானவர்கள் கிடையாது, சமத்து சாதுப் பேர்வழிகள், அவர்களை நம்பிப் பயனில்லை, என்பதும் பெருவாரியான சாதாரண மக்களின் கருத்து. இந்த நிலையில் தமது அறியாமையால், இயலாமையால், அடாவடிக் கட்சி திமுக-வுக்கு ஓட்டுப் போடுவது பாதுகாப்பானது என்ற ஒரு எண்ணத்தில் சாதாரண மக்கள் அந்தக் கட்சியை வேறு வழி தெரியாமல் ஆதரிக்கிறார்கள். இருக்கிற ஏழ்மையில் வருகிற பணத்தை அவர்கள் தேர்தல் காலங்களில் வாங்கிக் கொள்வது வேறு விஷயம். திமுக-வுக்கு அநேக சாதாரண மக்கள் வாக்களிப்பதன் பிரதான காரணம் பணம் அல்ல.  

 

எம்.ஜி.ஆர் மீதுள்ள பற்றால், அவரது இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டுப் போடும் 55+ வயதுள்ள வாக்காளர்கள் இன்றும் அதிமுக-வை ஆதரிக்கிறார்கள் – தலைமைக் குணம் இல்லாத, தகுதிக்கு மீறிய பேராசைகள் நிறைந்த, எடப்பாடி பழனிசாமிக்காக அல்ல. பழனிசாமியோ அல்லது அதிமுக-வின் வேறு முன்னாள் இந்நாள் தலைவரோ இன்று மக்களை ஈர்க்கும் தலைவர்கள் அல்ல. அவர்கள் இரட்டை இலையின் நிழலில் இளைப்பாறுகிறவர்கள்.

 

ராமதாஸின் பாமக, அடிப்படையில் ஒரு ஜாதிக் கட்சியாகவே தெரிகிறது. அதனால் பிற ஜாதி மக்கள் பலரும் அந்தக் கட்சியிலிருந்து தள்ளி இருக்க விரும்புவார்கள். மற்ற மக்களுக்கும் அவரவர் ஜாதிகள் மேல் பிடிப்பு இருப்பதால், அவர்களில் பலரும் பாமக-வில் சேர, அந்தக் கட்சியை நேரடியாக ஆதரிக்க, விரும்ப மாட்டார்கள்.  தன் ஜாதி மக்களை முக்கியமாக ஈர்த்திருக்கும் ராமதாஸ், ஒவ்வொரு தேர்தல் நிலவரப்படியும் திமுக மற்றும் அதிமுக-வுடன் மாறி மாறிக் கூட்டணி வைத்தாலும் தன் கட்சியினரின் ஆதரவை அவர் இழக்க மாட்டார்.

 

நாம் தமிழர் கட்சியின் சீமான் மேடைகளில், பத்திரிகையாளர் சந்திப்புகளில், கைகள் வீசி, முக பாவங்கள் மாற்றி, குரலை ஏற்றி இறக்கி, பஞ்ச் டயலாக் பேசி, நாடகத் தனம் செய்கிறார். துடிப்பான உணர்ச்சி மிகுந்த இள வயதினரை, அதுவும் ஆண்களை, அவர் கவர்கிறார். போட்டிக் கட்சிகளின் அரசியல் தலைவர்களிடம் சீமான் டெக்னிக் இல்லை. மற்றபடி அவர் ஒரு திமுக பாணி கட்சியாகவும், திமுக-வுக்குப் போட்டியாகவும், வளர நினைக்கிறார்.  மற்ற யாரும் கவுரமான தலைவர்களாக அவர் கட்சியில் உருவாக முடியாது. அவர்தான் கட்சி.

 

நடிகர் விஜய்க்கு சினிமா ரசிகர்கள் ஏராளம். அரசியலுக்கு வந்து அரசியல்வாதியாக உழைத்துச் செயல்பட்டு மக்கள் ஆதரவைத் திரட்டியவர் அல்ல விஜய்.  தனக்கு ரெடிமேடாக இருக்கும் சினிமா ரசிகர்களின் ஆதரவை,  தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்காளர் ஆதரவாகப் பெற்றவர் அவர். அவர் எந்தக் கட்சியை ஆதரித்தாலும் எதிர்த்தாலும் அவரது ரசிகர்களின் ஆதரவு அவருக்கு உண்டு. அவரிடம் முதிர்ச்சி ஏதும் காணப்படவில்லை. அரசியலில் விஜய் நிலைப்பாரா, வெற்றி அடைவாரா, என்று தெரியாது. அவர் இன்னொரு எம். ஜி. ஆரும் அல்ல.

 

இவர்கள் அனைவரிலிருந்தும் வேறுபட்டவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. 41 வயதுதான் ஆகப் போகிறது. கட்சியில் சேர்ந்த பதினோரு மாதங்களில் தமிழக பாஜக தலைவர் ஆக்கப் பட்டார். அதைத் தொடர்ந்து, கடந்த மூன்றே முக்கால் வருடங்களில் அவர் மக்களிடம் தனக்கென்று ஒரு அபரிதமான செல்வாக்கை வளர்த்துக் கொண்டிருக்கிறார்.

 

தமிழகத்தில் ஏற்கனவே மிகப் பிரபலமான ஒரு கட்சித் தலைவரின் மடியில் தவழ்ந்தோ, காலில் விழுந்தோ, விரல் பிடித்தோ, அடியொற்றி நடந்தோ மக்களிடம் அறிமுகமாகி வளர்ந்தவர் அல்ல அண்ணாமலை. அவர் ஒரு சுயம்பு – அதை சரியாக அடையாளம் கண்டவர் பிரதமர் மோடி.

 

அண்ணாமலை மற்றும் தமிழக பாஜக-வின்  ‘அநியாய அக்கிரம அராஜகத்திற்கு’ப் பயந்து, அதன் காரணமாக அதிகமான மக்கள் அண்ணாமலையை ஏற்கிறார்கள் என்பதில்லை. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா மாதிரி, தோற்றக் கவர்ச்சியும் இல்லாத தலைவர் அண்ணாமலை. ராமதாஸ் மாதிரி, தன் ஜாதி மக்களை நம்பி, தன் ஜாதி மக்களுக்காக அரசியலுக்கு வந்தவர் அல்ல அண்ணாமலை. சீமானின் நாடகப் பாசாங்கும் அவரிடம் கிடையாது. விஜய் மாதிரி தமிழகத்தில் ரெடிமேட் ஆதரவாளர்கள் கொண்டவரும் அல்ல அவர்.  ஏற்கனவே உள்ள பாஜக-வில் சேர்ந்து, எப்படி அவரால் தமிழக பாஜக-வுக்குப் புத்துயிர் அளிக்க முடிந்தது, அவரும் நாளுக்கு நாள் அதிகம் பிரபலம் அடைகிறார்?

 

அண்ணாமலையின் தனிப்பட்ட மக்கள் செல்வாக்கிற்கான காரணம் இதுதான்.  ‘அராஜக திமுக-வை, முறைகேடுகள் நிறைந்த திமுக-வை, தைரியமாக, தில்லாக, தெனாவெட்டாக, நேருக்கு நேர், வார்த்தைக்கு வார்த்தை, பளீர் சுளீரென்று எதிர்க்க வல்ல ஒரே தமிழகத் தலைவர் அண்ணாமலை, அதையும் அவர் தனது சுயலாபத்திற்காகச் செய்யவில்லை, நமக்காகச் செய்கிறார். அவர் பேச்சும் தெளிவாக, நேராக, நியாயமாக, நச்சென்று இருக்கிறது. இந்த மனிதர் நமக்குப் பாதுகாப்பாகவும் இருப்பார். இவரை நம்பலாம்’ என்ற எண்ணம் அதிகமான தமிழர்களின் மனதில் பதிகிறது. இதுதான் அண்ணாமலையின் தனிப்பட்ட மக்கள் செல்வாக்கின் அடித்தளம்.  

 

ஒரு காலத்தில் காஷ்மீரில் இந்திய ராணுவத்தினரை நோக்கிக் கல்லெறிந்தனர் சாதாரண மக்கள். ஏனென்றால் அப்போது காஷ்மீரில் தீவிரவாதிகளின் கை ஓங்கி இருந்தது. தில்லான தீவிரவாதிகள்தான் தமக்கு அதிகப் பாதுகாப்பு என்று நினைத்து, தீவிரவாதிகளின் கட்டளைப்படி காஷ்மீரில் அன்று சாதாரண மக்கள், கைகள் கட்டப்பட்ட நமது ராணுவத்தினர் மீது கல் வீசினர். ஆனால் அரசியல் சட்டப் பிரிவு 370 நீக்கப் பட்ட பிறகு,  தீவிரவாதிகளை அடித்து நொறுக்கி துவம்சம் செய்யும் ராணுவத்தை வைத்திருக்கும் மத்திய அரசின் மீது இப்போது காஷ்மீர் மக்கள் அதிக நம்பிக்கை வைக்கிறார்கள்.

 

யார் தில்லானவர்களோ, யார் சக்தி மிக்கவர்களோ, அவர்களை ஆதரிக்கும், அவர்களுக்கு ஓட்டுப் போடும் இந்தியர்கள் அதிகம். அந்த சக்திமான்கள் நல்லவர்களாகவும் இருந்துவிட்டால் சாதாரண மக்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் அந்த நல்ல வல்லவர்களின் பின்னால் நிற்பார்கள்.  அப்படியாகத்தான் திமுக-வைத் துணிவோடு எதிர்த்துப் பேசி, அதற்கான காரண காரியங்களை விரிவாக, பொறுமையாக, எடுத்துச் சொல்லும் அண்ணாமலையைத் தமிழக மக்கள் பலரும் ஆதரிக்கிறார்கள்.

 

ஒரு அரசியல் கட்சியைக் குறியாக, தில்லாக, தளராமல் எதிர்ப்பதால் மட்டும் ஒரு புதிய பெரிய தலைவர் மக்களிடையே உருவாக முடியும் என்று காண்பித்தவர் அண்ணாமலை. அது ஏன் சாத்தியம் என்பதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, அப்படி ஒதுக்கப்பட வேண்டிய பெரும் தீய சக்தி திமுக என்று சாதாரண மக்களே பரவலாக நினைக்கிறார்கள். இரண்டு, அந்த நினைப்பை அரசியல் உலகில் செயல்படுத்தக் கூடிய நேர்மையான, உறுதியான, நெஞ்சுரம் மிக்க, ஒரே தலைவர் அண்ணாமலை என்றும் மக்கள் நம்புகிறார்கள்.  

 

தமிழகத்தில் பாஜக ஒரு கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வருவது, வரமுடியாமல் போவது, வேறு விஷயம். ஏனென்றால் தேர்தல் வெற்றிக்கான சரியான கூட்டணிக் கணக்குகள் தனியானவை, அவை மெய்ப்பட வேண்டும். ஆனால் அண்ணாமலை தமிழக அரசியலில் ஒரு விடிவெள்ளி, தமிழக பாஜக-வுக்கும் தமிழக மக்களுக்கும் ஒரு வரப் பிரசாதம் என்பது நிச்சயம் தானே?


* * * * *

 

Author: R. Veera Raghavan, Advocate, Chennai