Friday, 20 September 2024

ஹரியானா தேர்தலில் பெண்களுக்குப் பண வாக்குறுதி – காங்கிரஸ் 2,000! பாஜக 2,100!


-- ஆர். வி. ஆர்

 

தேர்தல் வாக்குறுதிப் போட்டா போட்டிகளில், காங்கிரஸ் கட்சியும் பாஜக-வும் ஹரியானாவில் தீவிரமாக இறங்கி இருக்கின்றன.  

 

ஹரியானா மாநிலத்தில் பாஜக இப்போது ஆட்சி செய்து வருகிறது. மாநில சட்டசபைக்கான அடுத்த தேர்தல், வரும் அக்டோபர் 5-ம் தேதி நடக்கவிருக்கிறது. பெண் வாக்காளர்களை ஈர்ப்பதற்காகக் காங்கிரஸ் கட்சியும் பாஜக-வும் இப்போது மல்லுக் கட்டுகின்றன.

 

18 முதல் 60 வயதுள்ள ஹரியானா பெண்களுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் உதவித் தொகை அளிப்போம் என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் சொன்னது. அடுத்த நாள் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த மகளிருக்கு மாதம் இரண்டாயிரத்து நூறு ரூபாய் உதவித் தொகை வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தது. மற்ற பல வாக்குறுதிகளையும் அந்த இரண்டு கட்சிகள் கொடுத்திருக்கின்றன.

 

'நாங்கள் தொழில்வளத்தைப் பெருக்குவோம், வேலை வாய்ப்பை அதிகரிப்போம், கேஸ் சிலிண்டர்கள் குறைந்த விலையில் தருவோம், மருத்துவ சிகிச்சை வசதிகள் லட்சக் கணக்கில் தருவோம்', என்று ஒரு கட்சி என்ன வாக்குறுதி அளித்தாலும், சுமாரான வருமானம் கிடைக்கும் அல்லது ஏழ்மையில் இருக்கும் மக்களுக்கு அவை பெரிய பொருட்டல்ல. சில வாக்குறுதிகள் மிக நிச்சயம் அல்ல என்பதும் அந்த மக்களுக்குத் தெரியும்.

 

ஒரு அரசியல் கட்சி, ‘எங்கள் அரசு மாதா மாதம் பண உதவி செய்யும்’ என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தால் அது சாதாரண மக்களால் கேள்வியின்றி வரவேற்கப் படும்.  ஏனென்றால் ஆட்சிக்கு வரும் கட்சி அந்த வாக்குறுதிப்படி பாவமான மக்களின் கைகளில் அந்தப் பணம் உடனே கிடைக்கச் செய்யமுடியும். அதற்காகக் காலமெடுக்கும் தயார் நடவடிக்கைகள் அவசியமில்லை.

 

இப்படியான பண விநியோக வாக்குறுதியைப்  பொறுப்பற்ற முறையில் ஒரு அரசு செயல்படுத்தினால், என்ன ஆகும்? அரசு கஜானா சுகவீனம் ஆகும். ஆக்க பூர்வமான பல திட்டங்கள் படுக்கும். ரோடுகள் பாடாவதியாகப் பல்லிளிக்கும்.  அரசுப் பேருந்துகள் டப்பாவாக ஓடும். அரசு ஆஸ்பத்திரிகளில் போதிய அளவு டாக்டர்கள், நர்சுகள் இருக்க மாட்டார்கள். அதாவது, ஏற்கனவே சந்தி சிரிக்கும் இந்தப் பரிதாபங்கள் இன்னும் விகாரமாகும். இந்த விளைவுகளை அரசின் மாதா மாதப் பண விநியோகம் பெரிதளவு சரிசெய்யும். அப்படித்தான் நமது மக்கள் அவலமாக வைக்கப் பட்டிருக்கிறார்கள் – சுதந்திரம் கிடைத்து 77 ஆண்டுகள் ஆகியும்.

 

நமது சாதாரண மக்களின் திக்கற்ற நிலையை நன்றாக உணர்ந்தாலும் அவர்களைப் பற்றி கவலைப் படாத கட்சி, காங்கிரஸ் கட்சி. அரசுப் பணத்தை இப்படி விநியோகம் செய்யும் வாக்குறுதியை அளித்து ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அந்த ஆட்சி மக்கள் நலனில் பெரிதாக ஒன்றும் செய்யாது.  அரசாங்கப் பணத்தில் அது ‘என்னவெல்லாம்’ செய்ய நினைக்குமோ, அதைச் செய்யும். இப்படியான காங்கிரஸ் கட்சியைத் தேர்தலில் எதிர்க்கும் பாஜக, தேர்தல் களத்தைச் சரியாகக் கையாள வேண்டும்.  

 

நமது சாதாரண மக்கள் அப்பாவிகள், பொதுவாக நல்லவர்கள், அடிப்படைத் தேவைகளுக்கே அதிகப் பணம் வேண்டி இருப்பவர்கள். மாதா மாதம் பண விநியோகம் செய்வதாக ஒரு கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்தால், சாதாரண மக்கள் அந்தக் கட்சிக்கே நல்லதனமாக, விசுவாச எண்ணத்துடன், வாக்களிக்கலாம்.

 

நமது பெரும்பாலான அரசியல்வாதிகள் குயுக்தியானவர்கள். நாட்டுக்கு, மக்களுக்கு, எது தொலைநோக்கில் நல்லது என்பது அவர்களுக்குப் பொருட்டல்ல. தங்களுக்கு, தங்களின் வம்சப் பரம்பரைக்கு, எது நல்லது என்பது பற்றியே அவர்கள் சிந்திப்பார்கள். சாதாரண மக்களின் நல்லதனத்தை அந்த அரசியல்வாதிகள் நன்றாக அறிந்தவர்கள்.  ஆனால் அந்த அரசியல்வாதிகளின் கெட்ட நோக்கத்தை அந்த மக்கள் அறியாதவர்கள்.

 

இந்த நிலையில், பாஜக மாதிரி தேச நலனைச் சிந்திக்கும் ஒரு கட்சி, இப்படி யோசிப்பதைத் தவிர்க்க முடியாது. எப்படியென்றால்:

 

‘மக்களுக்குப் பெரிதாக நல்லது செய்ய, மக்களின் ஓட்டுக்களைப் பெற்று ஆட்சிக்கு வந்தால்தான் முடியும்.  ஹரியானா தேர்தலுக்காக, பெண்களுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் தருவதாகக் காங்கிரஸ் கட்சி நல்லெண்ணம் இல்லாமல் வாக்குறுதி அளித்தால், நாம் நல்லெண்ணத்துடன் இரண்டாயிரத்து நூறு தருவதாகத் தேர்தல் வாக்குறுதி அளிப்போம். மக்களின் ஓட்டுக்களைப் பெற்று, தேர்தலில் வென்று, நல்லாட்சி செய்து, நிர்வாகத்தைச் செம்மையாக நடத்தி, மாநிலத்தில் தொழில்வளம் பெருக்கி, மக்களுக்கு நாம் உண்மையிலேயே நன்மை செய்யவேண்டும்.’

 

ஹரியானா தேர்தல் நேரத்தில் பாஜக இப்படித்தான் நினைத்திருக்க முடியும். அது புரிந்து கொள்ளக் கூடியது.

 

இன்றைய காங்கிரஸ் கட்சி ஒரு மாநிலத்திலோ மத்தியிலோ ஆட்சிக்கு வாராமல் பார்த்துக் கொள்வதும் நாட்டு நலனுக்கு உகந்தது. அதற்காக அந்தக் கட்சியின் சில தந்திர வாக்குறுதிகளைச் செயலிழக்கச் செய்யும் விதமாக பாஜக-வும் தேர்தல் வாக்குறுதிகள் தந்து பின்னர் தனது அனைத்து வாக்குறுதிகளைச் செயல்படுத்துவதும் பாஜக-வின் நல்ல நோக்கம் அல்லவா?  

 

பாஜக இன்றைய தேதியில் இதைச் செய்யாமல், சாதாரண மக்களின் ஓட்டுக்களைக் காங்கிரஸ் கட்சி எளிதாகவும் குயுக்தியாகவும் ஈர்க்க அனுமதித்து, பின்னர் ‘காங்கிரஸ் கவர்ச்சியான வாக்குறுதிகளை அளித்து சாதாரண மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டது’, என்று பாஜக அலுத்துக் கொண்டால் யாருக்கு என்ன லாபம்?

 

ஒரு தேர்தலின் முடிவை நாம் துல்லியமாகக் கணிக்க முடியாது. இருந்தாலும் ஹரியானவில் பாஜக காண்பித்திருக்கும் நல்லெண்ணத்தை, நல் முயற்சியை,  வாழ்த்தலாம்.  

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

 

 

Monday, 16 September 2024

ராகுல் காந்தி பேசியது சரியா? இந்தியா ஒரு நியாயமற்ற தேசமா?


-- ஆர். வி. ஆர்

 

சமீபத்தில் அமெரிக்கா சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவில் அமலில் இருக்கும் இட ஒதுக்கீடு பற்றி – நமது சட்டசபைகளிலும் அரசு வேலைகளிலும் உள்ள இட ஒதுக்கீடு பற்றி – கருத்து சொன்னார். அவர் பேசியது:

 

“தற்போது இந்தியா ஒரு நியாயமற்ற இடம். அது நியாயமான இடமாக ஆகும்போது, இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது பற்றி நாங்கள் சிந்திப்போம்.”

 

ராகுல் மேலும் விளக்கினார்: “இந்தியாவின் 90 சதவிகித மக்கள் செயல்பட்டு முன்னுக்கு வரமுடியவில்லை.  இந்தியாவில் உள்ள தொழில்துறைத் தலைவர்கள் பட்டியலைப் பாருங்கள். அதில் ஒரு பழங்குடி மனிதனைக் காண்பியுங்கள். ஒரு தலித்தைக் காண்பியுங்கள். ஒரு ஓபிசி வகுப்பினரைக் காண்பியுங்கள்.  அந்தப் பட்டியலில் ஒரு ஓபிசி மனிதர் மட்டும் இருக்கிறார் என்று நினைக்கிறேன். ஓபிசி மக்கள் இந்தியாவின் ஐம்பது சதவிகிதம். இப்படியான மக்களுக்கு இந்தியா வரவேற்பு முகம் காட்டவில்லை. இதுதான் பிரச்சனை.”

 

“அனைத்து மக்களும் முன்னேற இட ஒதுக்கீடு மட்டும் கருவியல்ல. மற்ற கருவிகளும் இருக்கின்றன. ஆனால் இந்தியா ஒரு நியாயமான இடமாகும் போது (when India becomes a fair place) நாங்கள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது பற்றி யோசிப்போம்” என்று முடித்தார் ராகுல் காந்தி.

 

என்ன சொல்கிறார் ராகுல் காந்தி? பழங்குடிகள், தலித்துகள், ஓபிசி வகுப்பு மக்கள் – அல்லது வேறு சமூகத்து மக்கள் – ஆகியோரிலிருந்து பத்து இருபது மனிதர்கள் தொழில்துறைத் தலைவர்கள் ஆகிவிட்டால், அந்த அந்த சமூகத்து சாதாரண மக்கள் அனைவரும் பயனடைந்ததாக அர்த்தமா?

 

வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், கல்வி, வருவாய் ஆகியவை ஒரு  மனிதனுக்கு அவன் எந்த மதமோ, ஜாதியோ, பிராந்தியமோ – எளிதில் கிடைப்பதில்லை, அதைப் பெறும் வழிகளை அந்த நாட்டு அரசாங்கம் ஏற்படுத்தவில்லை, விரிவாக்கவில்லை,  என்ற சூழ்நிலை இருந்தால் அந்தக் குறைதானே ஒரு மனிதனுக்கு நேரும் அநியாயமும் அநீதியும்?

 

அரசாங்கத்தை நடத்தும் அரசியல்வாதிகள், நாட்டில் தொழில் வளர்ச்சியைப் பெருக்கும் திட்டங்களை வகுத்து அவற்றை முறையாகச் செயல்படுத்த வேண்டும். அதோடு, ஆளும் அரசியல்வாதிகள் நேர்மையாகவும் திறமையாகவும் நிர்வாகம் செய்து, லஞ்ச ஊழல் தவிர்த்து, மக்கள் நலனைப் பிரதானமாகக் கவனிக்க வேண்டும். ராகுல் பிரசங்கம் செய்த அமெரிக்காவில் அரசாங்கம் அப்படி நடப்பதால் தானே அங்கு மக்களின் அடிப்படை வாழ்க்கை வசதிகள் தரமாக இருக்கின்றன?

 

ஒரு காலத்தில் அடிமைகளாக அமெரிக்காவுக்குக் கொண்டுவரப் பட்ட கறுப்பர்கள் இன்று அந்த நாட்டு மக்களில் 14 சதவிகிதம். அமெரிக்க அரசியல்வாதிகளின் பொதுவான நேர்மையான ஆட்சியால், திறமையான நிர்வாகத்தால், இப்போது நல்ல வாழ்க்கை வசதிகள் பெறும் வழிகளைக் காண்பவர்கள் அங்கு வாழும் கறுப்பர்கள் – இந்தியாவில் கிடைப்பது போலான இட ஒதுக்கீட்டினால் அல்ல.

 

ராகுல் காந்தி பேசுவதைப் பார்த்தால், அமெரிக்காவில் 86 சதவிகித மக்கள் 14 சதவிகித மக்களிடம் நியாயமாக நடந்து அந்தப் பதினாலு சதவிகித மக்களும் முன்னேற உதவுகிறார்கள் – ஆனால் இந்தியாவில் 10 சதவிகித மக்கள் 90 சதவிகித மக்களிடம் அநியாயமாகச் செயல்பட்டு, அந்தத் தொண்ணூறு சதவிகித மக்களை நலிவுறச் செய்கிறார்களா? ஆளும் அரசியல்வாதிகள் முயன்றாலும் இதை 77 ஆண்டுகளாகத் தடுக்க முடியவில்லையா? ராகுல் பிதற்றுகிறார், பித்தலாட்டம் செய்கிறார்.

 

சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் கட்சி 54 வருடங்கள் மத்திய ஆட்சியை நடத்தியது - சில வருடங்கள் தோழமைக் கட்சிகளுடன். மாநிலங்கள் பலவற்றிலும் அந்தக் கட்சி ஆட்சி செய்தது. இன்றும் ஒன்றிரண்டு மாநிலங்களில் ஆட்சி செய்கிறது.

 

ஒரு அரசாங்கமாக, காங்கிரஸ் தலைவர்கள் ஆட்சி செய்து நாட்டை ஓரளவுக்குத்தான் முன்னேற்ற முடிந்தது. லால் பகதூர் சாஸ்திரி காலத்துக்குப் பின்னர்  வந்த மத்திய காங்கிரஸ் ஆட்சியில் பொதுமக்களைத் தவிர யார் யாரோ அதி வேகமாக முன்னேறினார்கள். அதுவும் 2004-2014 பத்தாண்டுகளில், சில அதிர்ஷ்டசாலிகள் ராக்கெட் வேகத்தில் முன்னேறினார்கள். 

 

இந்திய மக்களை முன்னேற்ற இட ஒதுக்கீடு தவிர மற்ற கருவிகள் இருக்கின்றன என்றும் ராகுல் பேசினாரே,  இவைதான் அந்தக் கருவிகள்: அரசாங்கம் நடத்தும் அரசியல்வாதிகளிடம் காணவேண்டிய முனைப்பு, திறமை, தன்னலமற்ற அர்ப்பணிப்பு, நேர்மை, நாணயம், வாரிசு-அரசியல் செய்யாமை, லஞ்ச ஊழல் தவிர்த்தல், தூய்மையான தேசாபிமானம் ஆகியவைதான் அந்தக் கருவிகள். இவை லால் பகதூர் சாஸ்திரிக்குப் பின் மத்தியில் ஆட்சி செய்த  காங்கிரஸ் கட்சியிடம் இருந்தனவா? ஆராய்ச்சிக்கு உரியது.

 

நமது நாட்டில் பெருவாரியான மக்கள் (அது 90 சதவிகிதமோ, கூடக் குறையவோ) இன்றும் சாதாரண நிலையில் தவழ்கிறார்கள். இதற்கு, நாம் ஒரு பரந்துபட்ட பன்முகம் கொண்ட நாடு, அதை நிர்வகிப்பதில் சிக்கல்கள் உண்டு என்பது ஒரு காரணம்.  மற்றபடி, நம்மை ஆட்சி செய்த காங்கிரஸ் ஆட்சியாளர்கள் நமது மக்களின் சாதாரண வாழ்க்கை நிலைக்கு முக்கிய காரணம் – கடைசியாக ஆட்சி செய்தவர்கள் சற்று அதிகமாக.

 

இந்தக் காரணங்களை ராகுல் காந்தி வெளிப்படையாக ஏற்றுக் கொண்டால், அவர் கட்சியும் அவரது தாயும் தந்தையும், அதற்கு உண்டான பொறுப்பை ஏற்கவேண்டுமே? அதனால், இந்தியா ஒரு நேர்மையான இடமல்ல என்று தேசத்தையே மட்டம் தட்டி ஒரு புளுகை அவிழ்த்து விட்டார் ராகுல். அவர் பேசியதில் ஒரு சுயலாபக் கணக்கும் இருக்கிறது.

 

என்ன இருந்தாலும் பெருவாரியான இந்திய மக்கள் அப்பாவிகள். ராகுல் காந்தி என்பவர் நேரு வம்சத்தவர் என்ற காரணத்துக்காக, ராகுல் என்ன பிதற்றினாலும், அவர் என்ன கோமாளித்தனம் செய்தாலும், அவர் தலைமையே ஏற்க, அவர் சொல்படி ஓட்டளிக்க, அந்த மக்களில் பலர் தயாராக இருக்கிறார்கள். அப்பாவிகளான அவர்கள் சரியாகக் கிரகிக்க முடியாத ஒரு விஷயம் உண்டு.

 

ஒரு காலத்துக்கு மேல், ஒரு அளவுக்கு மேல், இட ஒதுக்கீடு தொடர்ந்தால், அதற்குக் காரணம் அரசியல்வாதிகளின் கையாலாகாத் தனம், கபடம், அப்பாவி மக்களை மயக்கி ஏமாற்ற நினைக்கும் குயுக்தி என்று அர்த்தம். இதை அந்த மக்கள் நலனில் ஒருவர் எடுத்துச் சொன்னால், அவர் அடித்தட்டு மக்கள் நலனுக்கு விரோதி என்று அவர்மீது பல அரசியல் கட்சிகள் கீழ்த்தரமாகக் குற்றம் சொல்லும். ஆகையால் இட ஒதுக்கீடு என்பது நடைமுறையில் ஒரு சிக்கலான விஷயம். அரசியலில் இருக்கும் நல்லவர்கள் கூட இதில் எச்சரிக்கையாக இருந்தவாறு,  விட்டுப் பிடிக்கத்தான்  நினைப்பார்கள்.  

 

அப்பாவி இந்திய மக்களிடம் ராகுல் காந்தி வில்லத்தனமாகச் சொல்ல விரும்புவது: “நீங்கள் இந்திய ஜனத்தொகையில் 90 சதவிகிதம். இந்தியா உங்களுக்கு அநியாயம் செய்வதால் நீங்கள் முன்னேறவில்லை. பாஜக-வும் மோடியும்தான் இதற்குக் காரணம். நான் பிரதமரானால்  நீங்கள் ஏதாவது தொழில் தொடங்கி முன்னேற, அல்லது உங்களுக்கு வேலை வாய்ப்புகள் ஓஹோவென்று அதிகரிக்க, உங்கள் வாழ்க்கை வசதிகள் பெருக, நான் இட ஒதுக்கீட்டையும் அதிகரித்து வழி செய்வேன். எங்கள் கட்சிக்கும் கூட்டணிக்கும் ஓட்டளியுங்கள்.”  

 

90 சதவிகித இந்திய மக்களுக்கு அநியாயம் செய்யும் அரசியல் தலைவர் யாரென்று  தெரிகிறதே!

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

Saturday, 14 September 2024

ராகுல் காந்தி: அமெரிக்காவிலும் அதே அசடு!

 

-- ஆர். வி. ஆர்

 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் ஒரு விசேஷ குணம் உண்டு. என்னவென்றால்: தனது சிறுபிள்ளைத்தனம், முதிர்ச்சியின்மை இரண்டையும் மேடை போட்டுக் காட்சிப் படுத்துவார். காங்கிரஸ் கட்சியும்  அதைக் கொண்டாடும்.

 

சமீபத்தில் இதற்காகவே மூன்று நாட்கள் அமெரிக்கா சென்று வந்தார் ராகுல் காந்தி. சில பல்கலைக்கழக விவாத அரங்குகளில், வேறு சில இடங்களில், அவர் பேசினார். கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது, பிரதமர் மோடி வழிநடத்தும் இந்திய அரசை அவர் பல வகையில் குறை சொன்னார். அங்கு அவர் பேசியவற்றில் இவையும் உண்டு:

 

“இந்தியாவில் சீக்கியர்கள் டர்பன் அணிவதற்குப்  பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்”.  (ஓஹோ! மோடி மந்திரி சபையில் இருக்கும் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி என்ற ஒரே சீக்கியர்தான் தற்போது இந்தியாவில் சுதந்திரமாக டர்பன் அணிகிறாரா?)

 

“இந்தியாவில் திறன்களை அழிப்பது அதிகம் நடந்துவருகிறது. அதை நிறுத்த வேண்டும். மேலும் திறன்களை வளர்க்க வேண்டும்.”  (காங்கிரஸ் கட்சிக்குள் கூட  சிறிதும் திறன் நுழையாமல் வளராமல் பார்த்துக் கொண்டது நீங்களும் உங்கள் அன்னையும்தானே, ராகுல்!)

 

பல ஆண்டுகளாக பாஜக-வும் பிரதமர் மோடியும் மக்களிடையே பயத்தைப் பரப்பினார்.  ஆனால் 2024 தேர்தலுக்குப் பிறகு மக்களின் அச்ச உணர்வு மறைந்துவிட்டது (காங்கிரஸ் இடம் பெற்ற 'இண்டி' கூட்டணிக்கு மக்கள் 2024 லோக் சபா தேர்தலில் பெரும்பான்மை தராதது, யார் மீதான அச்சத்தினால்?)

 

நான் இந்தியாவில் 4000 கிலோமீட்டர் பாரத் ஜோடோ என்ற பெயரில் யாத்திரையாக நடந்தேன். காரணம், தொலைக் காட்சிகளும் மற்ற ஊடகமும் எங்கள் பேச்சுக்களை மக்களிடம் கொண்டு செல்லவில்லை.  இந்தியாவில் அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களும் முடக்கப்பட்டன. இந்த நிலையில் நான் நேரடியாகச் சென்று மக்களைத் தொடர்பு கொண்டேன்” (அப்படியா? நீங்கள் யாத்திரை போகமலே, அமெரிக்காவில் இப்படிப் பேசியது எப்படி இந்திய ஊடகங்களில் வந்தது?)

 

 

“பிரதமர் மோடியை நான் உண்மையில் வெறுக்கவில்லை. அவர்மீது எனக்கு அனுதாபம்தான் ஏற்படுகிறது.”  (“தேசத்தின் காவலாளி மோடி ஒரு திருடர்” என்று முன்பு நீங்கள் பேசிவந்தீர்கள். அவர் மீதான அனுதாபத்தை நீங்கள்  எப்படியெல்லாம் வெளிப்படுத்தினீர்கள்! மெய் சிலிர்க்கிறதே, ராகுல்!)

 

இந்தியா அனைத்து தரப்பினருக்கும் நியாயமான இடமாக மாறும்போது இடஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து காங்கிரஸ் கட்சி யோசிக்கும். இப்போது இந்தியா நியாயமான இடமாக இல்லை.”  (சமத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் அமெரிக்க மண்ணிலிருந்து கருத்து சொல்லும்போது, இந்திய சட்டசபைகள் மற்றும் அரசு வேலைகளில் நீடித்து வரும் இட ஒதுக்கீட்டை நீங்கள் நியாயப் படுத்தத் தயங்கினீர்கள். ஆகையால், இந்தியாவை ‘நியாயமில்லாத நாடு’ என்று நீங்கள் வெட்கமில்லாமல் குறிப்பிட்டு, இட ஒதுக்கீட்டில் நமது அநேக அரசியல் தலைவர்கள் ஆடும் கபட நாடகத்தை மறைத்து விட்டீர்களே, ராகுல்!)

 

நாம் அடுத்த வீட்டில் இருக்கும்போது, நமது வீட்டில் உள்ளவர்களைப் பற்றி இழித்தும் பழித்தும் பேசலாமா? கூடாது. அது பண்பற்றது. அப்படிப் பேசுவதில் உண்மை இல்லை என்றால் நம் வீட்டிலேயே கூட அப்படிப் பேசுவது தவறு. அசட்டுத்தனமும் கெட்ட எண்ணமும் சேர்ந்த ராகுலுக்கு இது புரியாது.

 

        ஒரு நாட்டின் செயல்பாடுகள், அங்கு ஆட்சியில் உள்ள தலைவரின் பேச்சுக்கள், மற்ற சில நாடுகளின் மீது தாக்கம் ஏற்படுத்துகின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது அந்த நாடுகளின் மக்களும் அதில் நாட்டம் கொள்ளலாம், அந்த விஷயம் பற்றிக் கருத்து சொல்லலாம். அதில்லை என்றால், ஒரு நாட்டுத் தலைவரின் பேச்சிலும் செயலிலும் மற்ற நாட்டு மக்களுக்கு என்ன ஆர்வம் இருக்கும்? அவருடைய நாட்டின் அரசியல் அக்கப்போரில் மற்ற நாட்டவர் வெட்டியாகக் கவனம் செலுத்துவார்களா?

 

         இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் உள்ள எதிர்க் கட்சித் தலைவர்கள் இந்தியாவுக்கு வந்து அந்த அந்த நாட்டை ஆளும் மற்ற கட்சிகளைப் பற்றி விமரிசனம் செய்ய வந்தால் தில்லியிலும் ஹைதராபாத்திலும் சென்னையிலும் உள்ளவர்கள் அதில் ஆர்வம் காட்டுவார்களா? ராகுலுக்கு இது ஏன் பிடிபடவில்லை? அவர் சிறுபிள்ளைத்தனம் மிக்கவர், முதிர்ச்சியற்றவர், என்றுதானே அர்த்தம்?

 

சரி, ராகுல் காந்திதான் அறியாதவர். அமெரிக்காவில் இருப்பவர்கள் – அவர்கள் பிறப்பால் இந்தியத் தொடர்பு உள்ளவர்களோ அல்லது அமெரிக்கர்களோ – ஏன் அசட்டு ராகுல் பேச்சைக் கேட்க வருகிறார்கள்? காரணம் இருக்கிறது.

 

ராகுல் காந்தி அரசியலில் அறியாதவராக, விளையாட்டுப் பிள்ளையாக, கிட்டத்தட்ட ஒரு கோமாளியாகவே கூட இருப்பதால், அவர் எங்கும் அப்படிப் பேசுவதால், அவருக்கான பிராபல்யம் அப்படி இருக்கிறது. அவரை இளக்காரத்துடன் பார்த்து ரசிக்க, அப்படிப் பொழுது போக்க, வெளிநாட்டிலும் சிற்சில மனிதர்கள் வரத்தானே செய்வார்கள்? இது போக, பிரதமர் மோடியை எதிர்க்கும் சில வெளிநாட்டுச் சக்திகள், இந்தியா பெரிய அளவில் வளர்வதை விரும்பாத அந்த சக்திகள், அவர்கள் நோக்கத்திற்காக அசட்டு ராகுலை முடிந்தவரை இப்படியெல்லாம் கூட உபயோகித்துக் கொள்ளலாம், யார் கண்டது?

 

பிரதமர் மோடி ரஷ்யாவுக்குச் சென்று அதிபர் புடினுடன் பேசுகிறார். பிறகு உக்ரைனுக்குச் சென்று அந்த நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியுடனும் பேசுகிறார். இரு நாட்டுத் தலைவர்களும் அந்த நாட்டு மக்களும், உலகின் மற்ற நாடுகளும் கூட, மோடியின் இந்தச் செயலை உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். ஏன்? அவர் இரண்டு அண்டை நாடுகளுக்குச் சென்று ராகுல் காந்தியையும் காங்கிரஸ் கட்சியையும் இடித்துப் பேசியதாலா? இல்லை. அந்த இரு நாடுகளுக்கிடையே தொடரும் போரை முடிவுக்குக் கொண்டு வரத் தன்னால் ஆனதை மோடி முயற்சிக்கிறார், அவர் முயற்சிக்கு உலகளவில் மதிப்பும் இருக்கிறது,  என்பதால் மோடி கவனிக்கப் படுகிறார்– முடிவு நம் கையில் இல்லை என்றாலும். ரெண்டாம் கிளாஸ் ராகுலுக்கு இதெல்லாம் பத்தாம் கிளாஸ் விஷயம். 

 

பாவமான ராகுல் காந்தி. பரிதாபமான அவர் கட்சி. இவரால், இவர் கட்சியின் லட்சணத்தால், பயனடைந்து  அவரவர் வழியில் சுகிக்கும் அக் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள். இதுதானே, ரத்தம் சிந்திய காலத்துக் காங்கிரஸின் இன்றைய அவல நிலை

* * * * *

                                 Author: R. Veera Raghavan, Advocate, Chennai

Tuesday, 27 August 2024

அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: ராகுல் காந்தியின் கவலை - “ஒரு தலித் பெண் மிஸ் இந்தியா ஆகவில்லையே!”

 

          -- ஆர். வி. ஆர்

 

பிரயாக்ராஜ் நகரத்துல இப்ப காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசிருக்கார். அவர் என்ன பேசினார் தெரிமா? சொல்றேன், சிரிக்காம கேளுங்கோ:

 

“இதுவரை  மிஸ் இந்தியா பட்டம் நிறைய பேருக்கு கிடைச்சதே, அதுல தலித், பழங்குடிகள், ஓபிசி மனுஷா அப்படின்னு எந்தப் பொண்ணுக்காவது கிடைச்சதான்னு தேடிப் பாத்தேன். அந்தப் பட்டம்  அந்த மாதிரிப் பொண்ணுக்குக் கிடைக்கவே இல்லை.”  

 

இப்பிடி அச்சுப்பிச்சு மாதிரி பேசற தலைவர்கள்ள ராகுல் காந்திக்குத்தான் முதல் பிரைஸ் குடுக்கணும். அவர் ஏன் அச்சுப்பிச்சுன்னு சுருக்கமா சொல்லட்டா?

 

விவரம் தெரியாதவான்னு சில மனுஷா இருக்கா.  தனக்கு விவரம் தெரியாதுன்னு அவாளுக்கே ஓரளவு புரிஞ்சிருக்கும். அதுனால, தனக்குத் தெரியாத விஷயத்தைப் பத்தி அவா முந்திண்டு வாயைத் திறக்க மாட்டா. கம்முனு இருப்பா.  

 

அச்சுபிச்சுன்னு சில மனுஷா இருக்கா. அவா மக்கா இருப்பா. இருந்தாலும், தான் ஒரு மக்குன்னு அவாளுக்குப் புரியாது. தான் பெரிய பிரகஸ்பதின்னு நினைச்சுண்டு, அவா பாட்டுக்குத் தத்துப் பித்துன்னு பேசிண்டிருப்பா. ராகுல் காந்தி அச்சுப்பிச்சு ரகம்னு அவர் பேச்சுலயே காட்டிக்கறார் இல்லையா?

 

நம்ம நாடு வசதிப் பட்ட நாடு இல்லை. நிறைய மனுஷா ஏழ்மைல, குறைஞ்ச வருமானத்துல ஜீவனம் பண்றா. நல்ல கல்வி பரவலா கிடைக்கறது இல்லை. வேலை வாய்ப்பும் இளைஞர்களுக்கு அதிகம் வேண்டிருக்கு. பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் வளர்ச்சி, இதுலெல்லாம் நம்ம நிறைய முன்னேறணும்.  இதான் நாட்டு நிலைமை.

 

இப்பிடியான தேசத்துல, ‘நான் மிஸ் இந்தியாவா வரலயே’ன்னு எந்த யவதி ஏங்கிண்டிருப்பா? 18-லேருந்து 22 வயசான எந்தப் பொண்ணோட அம்மா-அப்பா தன் பொண்ணுக்காக வெட்டியா ‘மிஸ் இந்தியா’ கனவெல்லாம் வெச்சுப்பா? மேலை நாடுகள்ள கூட, அழகிப் போட்டிக்குன்னு ஏத்த சில பொண்கள்தான் அழகிப் பட்டத்துக்கு ஆசைப்படும். மத்தவா அவா வேலையைப் பாத்துண்டு போவா. ஏதாவது புரியறதா ராகுல் காந்திக்கு?

 

ராகுல் காந்தி குடும்பத்துல இருக்கற பொண்களை அவரே வேணும்னாலும் கேட்டுத் தெரிஞ்சிக்கட்டும். “நீங்கள்ளாம் சின்ன வயசா இருந்தப்போ அழகிப் போட்டி கிரீடம் வேணும்னு ஆசைப் பட்டேளா?” அப்பிடின்னு.  இதைக் கேட்டார்னா அவர் வாயிலயே அவா பளீர்னு போடுவா. 54 வயசாகியும் ஒரு மனுஷன் இதைக் கூட புரிஞ்சுக்காம மேடைல பேசினார்னா, அவர் சரியான அச்சுப்பிச்சுதான். 

 

ராகுல் காந்தியோட அரசியல் சிந்தனையே கோணல், கொனஷ்டை. என்னன்னா, வாழ்க்கை வசதிகள் குறைவா இருக்கற இந்தியர்கள், ஜீவனத்துக்கே அல்லாடற இந்தியர்கள், கொஞ்சம் அப்பாவிகள்தான். அந்த மக்களுக்கு நல்லது பண்ணி, நிறையக் காரியம் பண்ணி, தேர்தல்ல அவா ஓட்டை வாங்கறதை விட, ஏமாத்துப் பேச்சுப் பேசி அவா ஓட்டை வாங்கறது கோல்மால் அரசியல்வாதிகளுக்கு ஈஸி. அதை ராகுல் காந்தி பண்ணப் பாக்கறார். அதான் விஷயம்.

 

இந்திய ஜனத்தொகைல தலித்துகள், பழங்குடிகள், ஓபிசி, எல்லாருமா கிட்டத்தட்ட அறுபது எழுபது சதவிகிதம் இருப்பா அப்பிடின்னு தகவல் வருது. இத்தனை பேரோட ஓட்டையும் ஒரு நிமிஷப் பேச்சுல பிடிச்சுப் பாக்கெட்ல வைச்சுக்கலாம்னு ராகுல் காந்தி நினைச்சிருக்கணும். அதான் அவர் உதவாக்கறைப் பேச்சுக்குக் காரணம்.

 

மிஸ் இந்தியா அழகிப் போட்டின்னா, அதுல முதல் பிரைஸ் ஒருத்தருக்குத்தான் கிடைக்கும். அந்தப் போட்டியும் தனியார் நடத்தறது, அது அரசாங்கம் நடத்தறது இல்லை.   அறுபது எழுபது சதவிகித ஜனங்கள் எல்லாருக்கும்,  அதுல உள்ள எல்லா யுவதிகளுக்கும், நல்ல பாதுகாப்பு, நல்ல கல்வி, நல்ல வாழ்க்கைத் தரம், நல்ல சாலை வசதிகள், போக்குவரத்து வசதிகள், நல்ல வருமானம், இதெல்லாம் முக்கியமா, இல்லை அந்த மக்கள்ள ஒரே ஒரு பொண்ணு மிஸ் இந்தியாவா வர்றது முக்கியமா?

 

“தலித், பழங்குடி, ஓபிசி ஜனங்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், பாதுகாப்பு, கல்வி, வாழ்க்கை வசதிகள் இன்னும் பெரிசா கிடைக்கலை. இது அக்கிரமம், அநியாயம்” அப்படின்னு ராகுல் காந்தி பேசி இருந்தார்னா, அதுல சத்து இருக்கும். அவர் அப்படிப் பேசினா,  ‘இது வரை 50 வருஷத்துக்கு மேல மத்திய அரசாங்கம் நடத்தின காங்கிரஸ் கட்சி என்ன பண்ணினது’ன்னு கேள்வி வருமே? அதுக்கு அந்தக் கட்சி பதில் சொல்ல முடியாதே? அதுனால, தனியார் நடத்தற மிஸ் இந்தியா போட்டில தலித், பழங்குடிகள், ஓபிசி பொண்கள் யாருக்கும் கிரீடம் கிடைக்கலைன்னு ஏதோ பெனாத்தறார் ராகுல் காந்தி.

 

இன்னொண்ணு. அழகிப் போட்டிக்குப் பொண்களை யார் ஆசைப்பட வைப்பா? அழகு சாதனங்கள் விக்கற நிறுவனங்கள் அவா வியாபாரத்துக்கு அதைச் செய்யும்.  ஒரு நாட்டுக்கு, அதுவும் வசதி குறைஞ்ச ஒரு நாட்டுக்கு, பிரதமரா வர ஆசைப்படற ஒரு அரசியல் தலைவர் அதைச் செய்யலாமா? ஒரு அச்சுப்பிச்சுக்கு இதுவும் புரியாது.


ராகுல் காந்தியைப் பத்தி பொதுவா ஒரு விஷயம் சொல்றேன். அவர் சாதாரண அச்சுப்பிச்சு இல்லை. அபாயகரமான அச்சுப்பிச்சு. அது தனி சமாச்சாரம்.

 

ராகுல் காந்தி திருந்தவே மாட்டார். ஆனா நம்ம சாதாரண ஜனங்கள், இந்த அளவு பைத்தியக்கார ஏமாத்துப் பேச்சுக்கு பலியாகாம உஷாரா இருப்பான்னு நினைக்கறேன். நீங்களும் அப்படித்தான நினைப்பேள்?

 

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

Wednesday, 21 August 2024

மதுரை

                 -- ஆர். வி. ஆர்

 

மதுரை

(பாடல்) 


 

மதுரைன்னா மதுரை


மதுரைன்னா மதுரை – தாய்

மீனாட்சி மதுரை
மதுரைன்னா வீர ராணி
மங்கம்மா மதுரை


 

பாண்டி தேச மதுரை – தமிழ்
ஆண்ட பூமி மதுரை

தமிழ் ஆண்ட பூமி மதுரை


 

ஆடி வீதி சித்திரை வீதி
மாசி வீதி அடுத்து
ஆவணிமூல வீதி – வெளி
வீதின்னு இருக்கு

உள்ள நூறு சந்து
வெள்ளை மனசுக்காரவுக
விபூதியும் குங்குமமும்
நெத்தி நெறஞ்ச ஊரு

மதுரைன்னா மதுரை ……


 

வண்டியூரு தெப்பக்குளம்
நாயக்கர் கட்டின மஹாலு
புதுமண்டபம் விளக்குத் தூணு
பாத்தீகளா நீங்க

பாச நேசம் கூட்டி
மரியாதை கலந்த
மதுரைத் தமிழ்
கேட்டீகளா நீங்க

மதுரைன்னா மதுரை ……


 

சிவனே திருவிளையாடல்
நடத்த வந்த ஊரு
கள்ளழகர் பெருமாளும்
வந்து போற ஊரு

திருப்பரங்குன்ற முருகசாமி
தெக்கே இருக்கும் ஊரு
காந்தி மகான் உடையக் குறைச்சு
ஒசந்து நின்ன ஊரு


ஒசந்து நின்ன ஊரு

மதுரைன்னா மதுரை ……


 

மீனாட்சிக்கு கல்யாணம்னா
தாலி மாத்துற ஊரு
பரவசமாத் தெரண்டு வந்து
தேரிழுக்கற ஊரு

ஊருபூராக் கோயில் – எங்க
உலகமே இந்தூருதான்
எம்புட்டு சென்மம் எடுத்தாலும்
மதுரையில வாழணும்

மதுரைன்னா மதுரை ……

 

பாண்டி தேச மதுரை – தமிழ்
ஆண்ட பூமி மதுரை

 

மதுரை …… மதுரை …… மதுரை 

 

* * * * *


 


Sunday, 11 August 2024

“பங்களாதேஷில் நடப்பது இந்தியாவிலும் நடக்கலாம்” - காங்கிரஸ் தலைவர் பிதற்றல்


          -- ஆர். வி. ஆர்

 

சல்மான் குர்ஷித் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மூத்த வழக்கறிஞர். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் சில சட்டங்கள் பயின்றவர். இது போக, அவர் காங்கிரஸ் கட்சியில் ஒரு இரண்டாம் கட்டத் தலைவர். ஆகையால் நாட்டு விஷயங்கள் பற்றி அவர் வெட்கம் விவஸ்தை இல்லாமல் பேசத் தயாரானவர்.

 

சமீபத்தில் ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய சல்மான் குர்ஷித், “பங்களாதேஷில் நடப்பது இந்தியாவிலும்  நடக்கலாம்” என்று தைரியமாகப் பிதற்றி வைத்தார்.  

 

அந்த நாட்டில்  என்ன நடந்தது?

 

பங்களாதேஷின் அரசுப் பணிகளில் 56% இட ஒதுக்கீடு இருந்தது. 1971-ம் வருட சுதந்திரப் போராட்ட வீரர்களின் வழிவந்தவர்களுக்கான 30% இட ஒதுக்கீடும் மகளிருக்கான 10% இட ஒதுக்கீடும் அதில் அடங்கும்.  

 

வேலையின்மை அதிகம் உள்ள பங்களாதேஷில், அந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்களும் இளைஞர்களும் திரண்டனர். அந்த அழுத்தத்தில், 2018-ம் வருடம் பிரதமர் ஷேக் ஹசீனா பங்களாதேஷ் சிவில் பணிகளுக்கான இட ஒதுக்கீட்டை முற்றிலும் ரத்து செய்தார். அது தொடர்பாக அந்த நாட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. ஆனால் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை உயர்  நீதிமன்றம் ஏற்கவில்லை.  

 

ஜுன் 2024-ல் பங்களாதேஷின் உயர் நீதிமன்றம், இட ஒதுக்கீடு ரத்தானது சட்ட விரோதம் என்று தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பால் பங்களாதேஷ் சிவில் பணிகளில் முன்பு இருந்த 56% இட ஒதுக்கீடு உயிர்ப்பிக்கப்பட்டு மீண்டும் சட்டமாகியது. இதைத் தொடர்ந்து, இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம் அந்த நாட்டில் வலுத்தது.

 

உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பங்களாதேஷ் அரசு உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. எகிறும் மக்கள் போராட்டத்தையும் கவனித்த உச்ச நீதிமன்றம், மொத்த இட ஒதுக்கீட்டை 56 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாகக் குறைத்தது. இருந்தாலும் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டம் ஓயவில்லை. உயிரிழப்புகள் அதிகமாயின.  

 

ஆகஸ்டு 5-ம் தேதி போராட்டக்காரர்கள் ஷேக் ஹசீனாவின் இல்லத்தை முற்றுகையிட நெருங்கினார்கள். பாதுகாப்பற்ற ஷேக் ஹசீனா அன்றே வீட்டை விட்டு வெளியேறி ஒரு ராணுவ விமானத்தில் இந்தியாவுக்குத் தப்பி வந்தார்.  மறுநாள் ஆகஸ்டு 6-ம் தேதி, காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் தனது உளறலை வெளிப்படுத்தினார்.  

 

“பங்களாதேஷில் நடப்பது இந்தியாவிலும் நடக்கலாம்” என்று எந்த அர்த்தத்தில் சல்மான் குர்ஷித் பேசினார்?

 

‘இட ஒதுக்கீட்டை எதிர்த்து பங்களாதேஷில் போராட்டம் நடந்ததே, அது போல் நமது நாட்டிலும் நடக்கலாம். ஆகையால் இந்தியா தனது நாட்டின் அரசுப் பணிகளிலும் கல்விச் சேர்க்கைகளிலும் உள்ள இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மறு பரிசீலனை செய்யவேண்டும்’ என்று சொல்ல வந்தாரா சல்மான் குர்ஷித்? அல்லது, ‘பக்கத்து நாட்டில் நடந்த மாதிரி இந்தியாவிலும் ஏதோ காரணத்திற்காக இப்போதுள்ள மத்திய அரசை எதிர்த்துக் கடுமையான போராட்டங்கள் ஏற்படலாம்’ என்று அற்பமாகச் சொல்ல ஆசைப் பட்டாரா?

 

இன்னும் ஒரு படி மேலே சென்று, ‘பிரதமர் ஷேக் ஹசீனா எப்படி பங்களாதேஷை விட்டுத் தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளியேறினாரோ, அதே போல் பிரதமர் மோடியும் இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்கு ஓடி ஒளியும் நாள் வரும்’ என்று ஒரு கீழ்த்தர எண்ணத்தை வெளிப்படுத்தினாரா சல்மான் குர்ஷித்?

 

சல்மான் குர்ஷித், அனுபவம் நிறைந்த ஒரு வக்கீல். இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தவர். வயது 71. ‘பங்களாதேஷில் நடப்பது மாதிரி இந்தியாவில் நடக்கலாம்’ என்று, நேர்மையும் விவஸ்தையும் உள்ள எவருமே சீரியஸாக நினைக்க மாட்டார்களே – அதுவும் இப்போதைய பாஜக ஆட்சியின் போது? ஆனாலும் ஏன் சல்மான் குர்ஷித் போன்ற ஒருவர் இப்படி மலிவாகப் பேசினார்?  காரணம் இருக்கிறது.

 

‘சேராத இடம் தனிலே சேர வேண்டாம்’ என்று நமக்குச் சொல்கிறது உலக நீதி. இதைக் காற்றில் பறக்கவிட்டவர் சல்மான் குர்ஷித். அதுதான் அவர் பேச்சுக்கான காரணம்.

 

பதவிப் பித்து மற்றும் பிள்ளைப் பாசம் மிகுந்த சோனியா காந்தி, பித்துக்குளி ராகுல் காந்தி ஆகியோரைத் தலைவர்களாக ஏற்றுக் கொண்ட காங்கிரஸ்காரர்கள், அந்த இருவரையும் அண்டியே கட்சிப் பதவிகளுக்கு ஆசைப்படுகிறவர்கள், காங்கிரஸ் சார்பில் சட்டசபை அல்லது பாராளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்புகளுக்கு ஏங்குபவர்கள், அந்த இரு தலைவர்களை மகிழ்விக்கும் பேச்சை அவ்வப்போது பேசியாக வேண்டும். சுயலாபத்திற்காக இதை நன்கு உணர்ந்தவர் சல்மான் குர்ஷித்.

 

தான் பிதற்றுவது சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை குஷிப்படுத்தும் என்ற உள்ளுணர்வில் சல்மான் குர்ஷித் ஏதோ டக்கென்று பேசிவிட்டார்.  அவர் நினைத்தபடி அந்த இரு தலைவர்களும் ‘சபாஷ் சல்மான்’ என்று அவரை மனதுக்குள் பாராட்டி இருப்பார்கள். அந்த வகையில் சல்மான் தனக்காக ஆசைப்பட்டது நடந்திருக்கிறது.

 

2024 லோக் சபா தேர்தலில், மக்கள் ‘இண்டி’ கூட்டணியைத் தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்தி பாஜக-வை எதிர்க் கட்சியாக வைத்திருந்தால் – அதாவது, தற்போது ராகுல் காந்தி பிரதமராக அல்லது இண்டி கூட்டணியில் முக்கிய அமைச்சராக இருந்தால் – சல்மான் குர்ஷித் இப்படி உளறுவாரா? மாட்டார். ஆட்சி மாறிய அந்த நிலையில், தனக்கு வருகிற பதவியை அனுபவித்துக் கொண்டு சமர்த்தாக இருப்பார் சல்மான் குர்ஷித்.

 

புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் சல்மான் குர்ஷித் இந்தியாவின் பெயரையும் உச்சரித்தாரே தவிர, இப்போதைய காங்கிரஸ் தலைவரான அவர் தேசத்தைப் பற்றி எல்லாம் எதற்கு வெட்டியாக நினைத்திருக்க வேண்டும்? அப்படித்தானே இருக்கிறது இன்றைய காங்கிரஸ் கட்சியின் மானம் கெட்ட நிலை?

 

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai