Thursday, 26 February 2026

கேள்வி-பதில் (26.02.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: மாநிலத்தின் கடன்களைக் குறைத்து வருவாயை அதிகரித்தால், அதிமுக-வின் தேர்தல் வாக்குறுதியான "ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக பத்தாயிரம் ரூபாய்" வழங்குவது சாத்தியம் என்று, நிருபர்கள் கேள்விக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பதில் கூறியுள்ளாரே?

 

பதில்: சிலர் தங்கள் சகோதரர், சகோதரி செய்யும் பெரிய தவறு அல்லது அநியாயம் பற்றி வெளியில் பேச முடியாது. அது பற்றி மூன்றாம் மனிதர்கள் பேசக் கேட்டால் மௌனமாக இருக்க வேண்டும். காரணம், நெருங்கிய உறவுகளை விட்டுக் கொடுக்க முடியாது. அரசியல் கூட்டணி உறவு என்றால், கூட்டணியின் தலைமைக் கட்சி செய்யும் தவறு அல்லது அநியாயத்தைக் கூட்டணியின் மற்ற கட்சிகள் குறைசொல்லக் கூடாது - அதை ஒருவாறு நியாயப் படுத்தவும் வேண்டும். அண்ணாமலை அதை லாவகமாகச் செய்கிறார்.

 

அதிமுக-வின் பைத்தியக்கார தேர்தல் வாக்குறுதி பற்றி நிருபர்கள் வீசிய கேள்வியை அண்ணாமலை நேர்த்தியாக 'லெக் கிளான்ஸ்' ஆட முடியும் என்றால், அவர் ஆட்சியில் ஒரு முக்கியப் பொறுப்புக்கு வந்தால் எந்தப் பந்துக்கும் அவுட் ஆகாமல் நல்ல ஸ்கோர் எடுப்பார்.

 

 

2. கேள்வி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லக்கண்ணுவின் உடலுக்குக் கலங்கிய கண்களுடன் இறுதி மரியாதை செலுத்திய ரஜினிகாந்த், "ஒருவர் நல்லவராக, நேர்மையானவராக, எளிமையானவராக இருந்தால் அவருக்கு மதிப்பும் மரியாதையும் தானாக வரும் என்பதற்கு உதாரணம் நல்லக்கண்ணு" என்று கூறி இருக்கிறார். இது பற்றி உங்கள் கருத்து?

 

பதில்: நமது மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பு எதையும் நல்லக்கண்ணு வகித்ததில்லை. இருந்தாலும் அவருடைய நல்லதனம், நேர்மை மற்றும் எளிமை பற்றி, முக்கியமாக நேர்மை பற்றி, ரஜினிகாந்த் குறிப்பிட்டதற்கு ஒரு காரணம் - அதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்பதற்காக ரஜினிகாந்த் பேசாவிட்டாலும், அவரது ஆழ்மனதிலிருந்து தானாக வெளிவந்த காரணம் - தமிழகத்தின் ஆட்சியாளர்களிடம் இருக்கவேண்டிய, ஆனால் துளியும் இல்லாத நேர்மை, அத்துடன் நல்லதனம் மற்றும் எளிமை, நல்லக்கண்ணு என்ற அரசியல்வாதியிடம் இருந்தது. இந்த வேறுபாடு அனைவரையும் நல்லக்கண்ணு பற்றிக் கூடுதலாக நெகிழ வைக்கும்.

 

 

3. கேள்வி: "திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒவ்வொரு தேர்தலின் போதும் தங்களுக்கு வேண்டிய அதிகத் தொகுதிகளைக் கேட்பார்கள். அதனால் கூட்டணிக்குள் சலசலப்பு எழுவது சகஜம். அதன் காரணமாக கூட்டணிக்குள் பிளவு ஏற்படாது, கூட்டணிக் கட்சிகள் கூட்டணியை விட்டு விலகாது. திமுக தலைவர் ஸ்டாலின் அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காண்பார்" என்று விசிக தலைவர் திருமாவளவன் சொல்கிறார். இது எப்படி சாத்தியமாகிறது?

 

பதில்: இன்றைய நிலையில், திமுக-வை விட்டால் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு வேறு பெரிய வழி இல்லை,  வேறிடத்தில் பெரிய பலன்கள் இல்லை. திமுக-வும் அவைகளைச் சார்ந்து கூட்டணியாகத்தான் தேர்தலில் வெல்ல முடிகிறது. இருந்தாலும், திமுக கூட்டணியில் அதிகத் தொகுதிகள் கிடைக்காததால், ஆட்சியில் பங்கு உண்டு என்ற உத்தரவாதம் தரப்படாததால், கூட்டணியிலிருந்து ஒரு கட்சி விலகினால் அதற்குப் பெரிய நஷ்டம், திமுக-வுக்குச் சிறிய நஷ்டம்.

 

அதிகத் தொகுதிகளுக்காக முரண்டு பிடித்துக் கூட்டணியிலிருந்து வெளியேறி பெரிய நஷ்டத்தைச் சந்திக்க, திமுக-வின் கூட்டணிக் கட்சி எதுவும் விரும்பாது. காங்கிரஸ் மட்டும், கூட்டணி மாறித் தவெக-வுடன் சேர்ந்து அதிகத் தொகுதிகளில் போட்டியிடுவது லாபமா நஷ்டமா, மாறிச் சேரும் கூட்டணி அமைக்கும் ஆட்சியில் பங்கு கிடைக்கும் என்றாலும் அது ஆட்சிக்கு வருமா இல்லையா, என்று தெரியாமல் இருக்கிறது.

 

இந்தக் காரணங்களால், சலசலப்பு ஏற்படுத்தும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஸ்டாலின் பேசி தொகுதிப் பங்கீட்டை சுமுகமாக முடிக்கிறார் - என்பதைத் திருமாவளவன் மிருதுவாகச் சொல்கிறார்.

 

 

4. கேள்வி: 'கோடைக்கால சிறப்புத் தொகுப்பு' என்று, தமிழக அரசு சார்பில் ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகை பெறுவோருக்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். அடுத்து, அனைத்துக் குடும்பங்களுக்கும் 'கருணைத் தொகை' என்று பத்தாயிரம் ரூபாயை அதிமுக அரசு வழங்கும் என்று ஒரு புதிய தேர்தல் வாக்குறுதியை எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். வாக்காளர்களின் ஓட்டை மேலும் கவர, இனி திமுக மற்றும் அதிமுக வேறு என்ன வாக்குறுதி தர முடியும்?

 

பதில்: ஒவ்வொரு தமிழ் மாதத்தையும் மக்கள் மகிழ்வுடன் வரவேற்கும் விதமாக, அந்த அந்த மாதத்தின் முதல் தேதியன்று, "மாதப்பிறப்பு மகிழ்வுத் தொகை" என்று குடும்பத் தலைவர்களுக்கு ஒரு மாதம், குடும்பத் தலைவிகளுக்கு அடுத்த மாதம், என்று மாற்றி மாற்றி - வருடத்தில் பெண்களுக்கு ஆறு மாதம், ஆண்களுக்கு ஆறு மாதம் கிடைக்கும்படி - அவர்களுக்கு அரசு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக வாக்குறுதி கொடுத்தால் போயிற்று!

 


5. கேள்வி: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பாரதப் பிரதமர் மோடி தோன்றியபோது, அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் 'மோடி மோடி' என்று உற்சாகமாக கோஷம் எழுப்பினார்களே, அது ஏன்?

 

பதில்: இதற்கான காரணத்தை ராகுல் காந்திதான் தெளிவாகச் சொல்வார். அதாவது: இஸ்ரேல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்-காரர்கள்!


பகுதி 60 // 26.02.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

No comments:

Post a Comment