|
கேள்வி-பதில் |
|
1.
கேள்வி: தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைத்தால், ஆண்களும் அரசு பஸ்களில் இலவசமாகப்
பயணிக்கலாம் என்று அக்கட்சி அறிவித்த பின், "இனிமேல்
மனைவியோடும் காதலியோடும் ஆண்கள் அரசு பஸ்ஸில் சினிமா செல்லலாம், ஊர் சுற்றலாம்" என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
பேசி இருக்கிறாரே? பதில்: தத்துப்பித்து
பேச்சு. "எங்கள் ஆட்சியில் அரசு
பஸ்களில் இலவசமாக ஊர் சுற்றுகிறவர்களின் கூட்டம் வழியும் என்பதால், ஜேப்படிக்காரர்களுக்கு வருமானம் பெருகும்" என்று ராஜேந்திர பாலாஜி
கூடுதலாகப் பிதற்றவில்லை. அது ஆறுதல். |
|
2.
கேள்வி: ஒரு அரசியல் கட்சியின் முக்கிய இரண்டாம்
கட்டத் தலைவர்கள் மீது அடுக்கடுக்காக 500 கோடி,
ஆயிரம் கோடி, பல்லாயிரம் கோடி ரூபாய் என்ற
கணக்கில் லஞ்ச ஊழல் புகார்கள் வருகின்றன, ஆதாரங்களும்
அம்பலமாகின்றன. அதுபற்றி அந்தக் கட்சியின் தலைவர் கண்டுகொள்ளவே இல்லையே? என்ன அர்த்தம்? பதில்: தங்கள் மீது மெகா
லஞ்ச ஊழல் புகார்கள் வந்தாலும், கட்சியின் தலைவர் கண்டுகொள்ள மாட்டார் என்று
அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கு நன்றாகத் தெரிகிறது. சாதாரண மக்கள்
பலருக்கும் இதுபற்றி, இதன் உள்விஷயங்கள் பற்றி, புரியாது. இதுபற்றி அவர்களுக்குக் கவலையில்லை. உதாரணமாக, சாதாரண மக்கள் பலருக்கு பங்கு மார்க்கெட் புரியாது.
பங்கு பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. அவர்கள்தான் மிகப் பெருவாரியான
மக்கள். அதுபோல் அவர்களுக்கு இந்த விஷயமும் புரியாது. புரிகிறவர்களுக்குப்
புரியும். |
|
3.
கேள்வி: மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக்
கூட்டணியின் பெரிய பொதுக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 2026 தேர்தலில் அந்தக் கூட்டணி
வென்று தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று ஒருதடவைக்கு மேல் சொன்னார்.
அடுத்துப் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தில் அமையப் போகும்
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி என்று அடிக்கடி குறிப்பிட்டார். ஏன் இந்த
மாறுபட்ட பேச்சுகள் தொடர்கின்றன? பதில்: பழனிசாமியை
இரண்டு எண்ணங்கள் தொந்தரவு செய்கின்றன. ஒன்று, ஓ.பி.எஸ்-ஸை அதிமுக-வில் சேர்த்துக் கொண்டால், கட்சிக்குள் தனக்கென்று பழனிசாமி பிடித்து வைத்திருக்கும்
இடம் ஆட்டம் காணலாம் என்ற அச்சம். இன்னொன்று, தேர்தலில்
வென்ற பின் பாஜக-வுக்கு மாநில ஆட்சியில் பங்களித்தால், தான்
விரும்பியபடி ஆட்சி செய்யமுடியாது, தமிழகத்தில்
அதிமுக-வுக்கு எதிர்ப்புறமாக பாஜக வேகமாக வலுப் பெறும் என்ற கவலை. மற்றபடி தமிழக
மக்கள் கூட்டணி ஆட்சியை விரும்ப மாட்டார்கள் என்று பழனிசாமி சொல்வது (அல்லது
ஸ்டாலின் சொன்னாலும்), கப்ஸா. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக
அங்கம் வகித்து கூட்டணி பலத்தில் ஜெயித்து, ஆட்சியை
அதிமுக மட்டும் தனியாக அமைக்கும் என்றால் மக்கள் அவ்விதம் வாக்களித்து திமுக-வை
விரட்டுவார்கள்; ஆனால் வெல்லப் போகும் ஜனநாயகக் கூட்டணியே
மாநிலத்தில் ஆட்சியும் அமைக்கும் என்றால், மக்கள் தேசிய
ஜனநாயகக் கூட்டணிக்கு மெஜாரிட்டி அளிக்க மாட்டார்கள் என்பது சரியல்ல. தேர்தல்
வேலைகள் நடக்கட்டும். மற்றவை பின்னர். |
|
4.
கேள்வி: பிரதமர் மோடியின் மதுராந்தகம்
பொதுக்கூட்டம் பற்றி கருத்து சொன்ன முதல்வர் ஸ்டாலின், "பிரதமர் சொல்லும் 'டபுள் என்ஜின்' எனும் 'டப்பா
என்ஜின்' தமிழ்நாட்டில் ஓடாது" என்று கூறி
இருக்கிறாரே? பதில்: ஸ்டாலின் தன்னை
மக்களிடம் நெருக்கப்படுத்திச் சொல்லும் 'அப்பா' என்ஜின் அதிக பெட்ரோல்
குடித்து, பெரிய சத்தம் எழுப்பி, கரும்புகை
வெளியேற்றுகிறது, அதோடு ரிவர்ஸில் மட்டும் ஓடுகிறதே! |
|
5.
கேள்வி: நான் ஆவிகளைப் பார்க்க ஆசைப்படுகிறேன்.
அவற்றை வரவழைக்க என்ன வழி? பதில்: வென்னீர் வைக்கவும். |
|
பகுதி 42 // 23.01.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
No comments:
Post a Comment