Wednesday, 22 April 2026

கேள்வி-பதில் (22.04.2026)


 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால், பாஜக-வுக்குக் கைகட்டி நிற்கும் அதிமுக பொதுச் செயலர் பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்" என்று திமுக தலைவர் கனிமொழி கூறியுள்ளாரே?

 

பதில்: அடுத்த ஜென்மம் இருந்தால், ஊழல் மற்றும் தேசவிரோத அரசியல்வாதிகளை அடக்கி வைக்கும் குஜராத் மனிதர் நரேந்திர மோடி தமிழகத்தில் பிறக்கட்டும்.

 

 

2. கேள்வி: "மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்பட்டால்தான், மாநில வளர்ச்சி நன்றாக இருக்கும்" என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்னையில் கருத்து தெரிவித்திருக்கிறாரே?

 

பதில்: சுய நலன் மற்றும் மகன் மருமகன் நலன்களில் குறியாக இருக்கும் ஒருவர், மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்பட்டால், அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சி நன்றாக இருக்காது என்று அவருக்குத் தெரியும். அது பற்றிக் கவலைப்படாத சந்திரபாபு நாயுடு எதுவும் பேசலாம்.

 

 

3. கேள்வி: தமிழகம் வந்த ஆம் ஆத்மி கட்சித் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் சென்னையில் அளித்த பேட்டியில், "பிரசாரத்தின் போது தமிழக மக்கள் என்னை உற்சாகத்துடன் வரவேற்றனர்.  தமிழக மக்கள் பாஜக மீது வெறுப்புடன் உள்ளனர்" என்று கூறி இருக்கிறாரே?

 

பதில்: தமிழக மக்கள் பாஜக மீது வெறுப்பு கொண்டால் கூடப் பரவாயில்லை. குயுக்தி மன்னன், வெறுப்பரசியல் வேந்தன், அரவிந்த் கெஜ்ரிவாலைத் தமிழ் மக்கள் எதிர்காலத்தில் வரவேற்று ஆதரவு தரும் பாதகத்தைச் செய்யாமல் இருந்தால் போதும்.

 

 

4. கேள்வி: தனது கட்சிக்காகத் தேர்தல் பிரசாரம் செய்யும்போது, "இலங்கை, நேபாளத்தில் நடந்த புரட்சி இந்தியாவில் நடக்காது என்று சொல்ல முடியுமா?" என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கேட்டுள்ளாரே?

 

பதில்: அரசியல் பற்றி சீமான் ஒரு விஷயம் பேசும்போது - அதுவும் தேர்தல் சமயத்தில் வாக்கு சேகரிக்கும்போது -  இன்னொரு விஷயத்துக்குத் தாவுவதில், மரம் விட்டு மரம் மட்டுமல்ல, மலை விட்டு மலையும் தாவுவார். அறிவாந்தவராக இருந்தாலும் அவரிடம் சிந்தனை ஒழுங்கு இல்லை.

 

 

5. கேள்வி: "ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருடன் தவெக தலைவர் விஜய்க்கு நெருக்கமான உறவு இருக்கிறது" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளாரே?

 

பதில்: திருமாவளவனுக்கு நகைச்சுவை உணர்வு அறவே இல்லை என்ற ஒரு குற்றச்சாட்டு இருந்தது. அந்தக் குற்றச்சாட்டை, 'போடா டேய்' என்று சொல்லி அரைச் சிரிப்புடன் இடது காலால் உதைத்துத் தள்ளிவிட்டார் அவர்.

 

 

பிகு: நாளை நடக்கப் போகும் தேர்தலுக்காக, யாரை எதிர்த்தும் யாருக்கு ஆதரவாகவும் செய்யப்படும் பிரசாரம் அல்ல இது. வாக்காளர்கள் அனைவரும் சுதந்திரமாகத் தாங்கள் விரும்பியவர்களுக்கு வாக்களியுங்கள்.

 

பகுதி 83//22.04.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

No comments:

Post a Comment