Saturday, 5 April 2025

அண்ணாமலை நீடிப்பாரா, மாற்றப் படுவாரா?

 

-- ஆர். வி. ஆர்


 

திமுக, அதிமுக-விலிருந்து ஆரம்பிக்கலாம்.  

 

கருணாநிதியால்  திமுக-விலிருந்து வெளியேற்றப் பட்ட எம். ஜி. ஆர், திமுக-வுக்குப் போட்டியாக ஆரம்பித்த கட்சி, அதிமுக. அந்த இரு தலைவர்களும் இன்று இல்லை. ஆனால் அந்த இரண்டு கட்சிகளும் ஒரே இயல்பு கொண்டவை. ஒரு கட்சியில் ஹிந்து விரோதப் பேச்சு இருக்கும், அராஜகப் போக்கும் காணப்படும். இன்னொரு கட்சியில் அவை இருக்காது. மற்றபடி, தங்கள் நலன்களை நன்றாகக் கவனித்துக் கொண்டு மக்கள் நலனுக்கு எதிராக ஆட்சி செய்யும் தலைவர்கள்தான் இரண்டு கட்சிகளிலும் இருக்கிறார்கள்.  

 

1967 தேர்தலில் திமுக-வால் மாநிலத்தில் வீழ்த்தப்பட்ட காங்கிரஸ் சென்ற பல வருடங்களாகத் திமுக-வின் காலடியில் கிடக்கிறது, திமுக-வை எதிர்த்து மறுபடியும் ஆட்சியில் அமரக் காங்கிரஸ் முனையவில்லை. திமுக, அதிமுக இரண்டு கட்சிகள் மட்டும் மாறி மாறித் தமிழகத்தில் 1967-லிருந்து ஆட்சி செய்கின்றன.  

 

தமிழகத்திற்கு நல்லாட்சி கிடைக்க, இப்போது நடக்கவேண்டிய முதல் காரியம் இது. அதாவது, ஆட்சியில் இருக்கும் திமுக கூட்டணியை 2026 சட்டசபைத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். அது முடியாவிட்டால், அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி மிகக் குறைந்த உறுப்பினர் எண்ணிக்கையில் மட்டும் ஜெயிக்கும் வகையில் எதிரணியின் உறுப்பினர் எண்ணிக்கை உயரவேண்டும். அதன் மூலம், திமுக-வுக்கு எதிரான மக்கள் சக்தி திரண்டு வருகிறது என்கிற செய்தியை திமுக-வுக்கு உரத்துச் சொல்லி, 2031 சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி தோற்கடிக்கப் பட்டு, பாஜக முக்கிய அங்கம் வகிக்கும் ஒரு கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும்.

 

வருகின்ற 2026 சட்டசபைத் தேர்தலில், திமுக-வுக்கு வலுவான எதிர்ப்பை எந்தக் கட்சியின் தலைவர் மக்களிடையே காண்பிக்க முடியும்? சீமான் அவர் பாணியில் திமுக-வை எதிர்க்கிறார், விஜய்யும் அவர் பாணியில் எதிர்க்கிறார். ஆனால் இந்த இருவரும் தமிழகத்தில் நல்லாட்சி தருவதற்கான போக்கும் தகுதியும் கொண்டவர்கள் அல்ல. இந்த இரு தலைவர்களும் பாஜக-வின் தேசிய சிந்தனை துளியும் இல்லாதவர்கள். இந்த இருவரும் பாஜக-வுடன் ஒரு கூட்டணியில் இணைந்து திமுக-வை எதிர்க்க முன் வருவது சந்தேகம்.  

 

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, திமுக-வை எதிர்க்கும் முக்கியக் கட்சியாக இருக்கிறது. ஆனால், சீமானுக்கோ விஜய்க்கோ உள்ள தனிப்பட்ட வாக்காளர் பின்புலம் பழனிசாமிக்கு இல்லை, அவர் கட்சியில் மற்ற தலைவர்களுக்கும் கிடையாது. இருந்தாலும் எம்.ஜி.ஆர் பிரபலப் படுத்திய இரட்டை இலை சின்னம் இன்றும் அதிமுக-வின் கணிசமான வாக்கு வங்கிக்குக் காரணமாக இருக்கிறது – அது குறைந்து வந்தாலும்.

 

இந்த சூழ்நிலையில், பாஜக-வின் திமுக எதிர்ப்புக்கும் மக்களிடையே ஆதரவு பெருகி வருகிறது. அதற்குக் காரணம் பாஜக என்ற கட்சி ஸ்தாபனம் அல்ல. மோடி, அமித் ஷா போன்ற கட்சியின் தேசியத் தலைவர்களும் காரணம் அல்ல. அண்ணாமலை தமிழக பாஜக-வின் மாநிலத் தலைவர் ஆவதற்கு முன்பிருந்த மாநிலத் தலைவர்களோ, அல்லது கட்சியின் பிற மூத்த தலைவர்களோ காரணம் அல்ல.

 

யார் மீதும் குறை சொல்லாமல் ஒரு உண்மையை நாம் அறியலாம். அதாவது, அண்ணாமலை கட்சியின் மாநிலத் தலைவர் ஆன பின்பு அவருடைய பேச்சினால், செயலினால், துணிவினால், மன உறுதியினால், அர்ப்பணிப்பால், தலைமைப் பண்பினால்வார்த்தைகளால் எளிதில் விளக்க முடியாத அவரது  அம்சத்தால், அவர் இன்று தமிழகத்தில் திமுக-வின் முக்கிய எதிர்ப்பு முகமாக – அதாவது, பிரதானமாகத் திமுக-வை எதிர்க்கும் ஒரு குரலாக – பார்க்கப் படுகிறார். திமுக-வே அப்படி நினைக்கும். அதை வைத்து பாஜக தமிழகத்தில் ஒரு சக்தி மிக்க தேர்தல் கூட்டணியை உருவாக்க வேண்டும். அதை பாஜக முனைகிறது. 

 

இப்படி இருக்கையில், 2026 தேர்தல் சமயத்தில் அண்ணாமலை பாஜக-வின் மாநிலத் தலைவராக இல்லாமல் போகலாம், ஒரு கட்சிக் கோட்பாட்டினால் – அல்லது ஒரு அரசியல் யுக்தியாக – அவர் இப்போது மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விடுவிக்கப் படலாம் என்ற பேச்சு பரவலாக எழுகிறது. அது நடந்தால் என்ன ஆகும்? பாஜக-வின் திமுக எதிர்ப்பானது முனை மழுங்கும்.

 

திமுக, மிக ஆக்ரோஷமாகப் பந்து வீசும் கிரிக்கெட் பவுலர்கள் மாதிரி. அவர்களைத் திறமையாக எதிர் கொண்டு, வரும் பந்துகளை ஃபோர், சிக்சர் என்று திறமையாக அடித்து விளையாடி பவுலர்களைச் சோர்வடையச் செய்யும் ஒரு பேட்ஸ்மேன் எதிரிலுள்ள பாஜக அணிக்குத் தேவை. அதை அண்ணாமலை செய்ய முடியும் என்றால் அவரை ஆடுகளத்தில் இருக்கச் செய்வது நல்லது. நமது அணியில் மற்றவர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக, அல்லது வேறு காரணத்திற்காக, அண்ணாமலையை இந்த மேட்சில் ஆடுகளத்துக்கு அனுப்பாமல் இருப்பது  நமக்கு வெற்றி தருமா?

 

மற்ற பேட்ஸ்மேன்களால் மூர்க்கமான பவுலர்கள் வீசும் பந்துகளை ஆட்டமிழக்காமல் அடித்து ஆட முடியாது, அவ்வப்போது ஒன்று, இரண்டு ரன்கள் மட்டும் எடுக்க முடியும், மற்ற எல்லாப்  பந்துகளையும் டொக்கு டொக்கு என்று ஆடுவார்கள் என்றால் அவர்களால் பெரிய பயன் உண்டா?

 

தமிழகத்தில் பாஜக-வின் மூத்த தலைவர்கள் பலரையும் தாண்டி, கட்சிக்கே புதியவரான அண்ணாமலையை எதற்காகக் கட்சியின் தேசியத் தலைமை 2021-ம் ஆண்டு தமிழகத்தின் மாநிலத் தலைவர் ஆக்கியது? ஏனென்றால், தமிழகத்தின் திராவிட அரசியல் களம் வினோதமானது, கொடுமையானது. மீண்டும் ஆட்சியில் அமர்ந்துள்ள திமுக-வை அண்ணாமலையால் மற்ற பாஜக தலைவர்களை விடப் பலமாக எதிர்க்க முடியும், அதற்கான குணாதிசயங்கள் அவரிடம் தெரிகின்றன, என்ற கணிப்பில், எதிர்பார்ப்பில். அந்தக் கணிப்பை, அந்த எதிர்பார்ப்பை, அவர் 2021 ஜூலை மாதத்திலிருந்து நிரூபித்து வருகிறார். அப்படியானால் 2026 சட்டசபைத் தேர்தல் வருவதற்கு முன் அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விடுவிக்கப் பட்டால், அது கட்சிக்கு நன்மை செய்யுமா?

 

பாஜக என்ற அதிசயக் கட்சியும், மோடி என்ற அற்புதத் தலைவரும், தமிழகத்தில் திமுக-வுக்கு எதிராக மக்களைத் திருப்ப முடியவில்லை. அண்ணாமலையால் அது சிறிதளவாவது முடிந்திருக்கிறது. இப்போது அவரை மாநிலத் தலைவர் பதவியலிருந்து நீக்கினால், கட்சியின் மகிமையும் மோடியின் நற்பெயரும் தமிழக பாஜக-வைத் தூக்கி நிறுத்தாதே? அவர் மாநிலத் தலைவராக இல்லாவிட்டால், அவரால் பாஜக-வுக்கு ஈர்க்கப்பட்ட வாக்காளர்கள் 2026-ல் பாஜக-வுக்கு வாக்களிப்பார்களா என்பதும் ஒரு கேள்வி. 

 

‘அண்ணாமலை மாநிலத் தலைவராக இல்லாவிட்டாலும் அவர் தனது மாநிலப் பணிகளைத் தொடர்ந்து செய்வார், அதில் பாதகம் ஏற்படாது’ என்று எண்ணினால் அதில் சாரமில்லை.

 

அண்ணாமலை மாநிலத் தலைவராகத் தொடராவிட்டால், முன் போல் அவரால் பத்திரிகையாளர் சந்திப்புகளை அடிக்கடி நடத்த முடியுமா? புதிய தலைவரைத் தவிர்த்து அவரே திமுக-வுக்குப் பதிலடிகள் கொடுத்துக் கொண்டே இருக்க முடியுமா? அண்ணாமலை மாநிலத் தலைவராக இல்லாவிட்டாலும் அது முடியும், முன் போல் அவர் அதே வெளிச்சத்தில் இருப்பார் என்றால், புதிய மாநிலத் தலைவர் எதற்கு?

 

இன்னொன்று. ‘2026 சட்டசபைத் தேர்தலின் போது அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்து அந்தத் தேர்தலில் பாஜக கூட்டணி தோற்றால், அது அண்ணாமலைக்குப் பின்னடைவாகும். அதனால் இப்போது அண்ணாமலையை வேறு கட்சிப் பணியில் அல்லது மத்திய அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டு, 2031 தமிழக சட்டசபைத் தேர்தல் நேரத்தில் அவரை மீண்டும் தமிழக மாநிலத் தலைவர் ஆக்கலாம்’ என்ற ஒரு யோசனையும் காற்றில்  வருகிறது.

 

அண்ணாமலை நல்ல பேட்ஸ்மேன் என்று தெரிந்தும், மூர்க்கமாகப் பந்து வீசும்  எதிர் அணி விளையாடும் இந்த மேட்சில் அவரை இறக்காமல், அடுத்த மேட்சுக்கு அவர் வரட்டும் என்பது ஒரு யுக்தியாகுமா?

 

நமக்குத் தெரிந்தது இது. கிரிக்கெட்டில் ஏதாவது திருப்பம் வருமா, அல்லது ஒன்றும் வராதா, என்று தெரியாது. நாம் என்ன செய்யலாம்? மேட்ச் பார்க்கலாம். செய்வோம்.

  

* * * * *

 

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

 

 

Thursday, 3 April 2025

அமித் ஷாவின் அண்ணாமலைக் கணக்கு சரிதான்!

 

-- ஆர். வி. ஆர்

 

கடந்த சில நாட்களாகத் தமிழக பாஜக ஆதரவாளர்களுக்குச் சோர்வு தரும் ஒரு தகவல் ஊடகங்களில், வாட்ஸ் அப்பில், விறுவிறுவென்று உலா வருகிறது, விவாதிக்கப் படுகிறது. அதன் இரண்டு அம்சங்கள் இவை:

 

1) பாஜக தலைவர் அண்ணாமலை, மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அந்தப் பதவியில் வேறொருவர் நியமிக்கப்பட  இருக்கிறார்.

 

2)    வரப்போகும் இந்த மாற்றத்துக்கான காரணம், அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி. அதாவது, அண்மையில் பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்தபோது, ‘2026 தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக-வும் பாஜக-வும் கூட்டணி அமைக்க வேண்டும் என்றால் அண்ணாமலையை பாஜக மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அகற்ற வேண்டும்என்னோடு இணக்கம் கொள்ளும் வேறு ஒருவரை அந்த இடத்தில் அமர்த்த வேண்டும்’ என்று கேட்டாராம். அதிமுக-வுடன் கூட்டணி இல்லாமல் திமுக-வைத் தேர்தலில் தோற்கடிக்க முடியாது என்று நினைத்த அமித் ஷாவும் அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டாராம். 

  

பாஜக-வின் தேசியத் தலைமையிலிருந்து இந்த மாறுதல், அதன் காரண காரியம், பற்றி அதிகாரபூர்வமாக ஒரு செய்தியும் வரவில்லை.

 

நிதானமாக யோசித்தால் இந்தச் செய்தியை, ஊடகத்தில் இது விரிவாகப் பரவுவதை, நாம் எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?

 

2024 லோக் சபா தேர்தலுக்காக, பாஜக-வுடன் தேர்தல் கூட்டணி வைக்க அதிமுக-வுக்கு அவசியமில்லை என்று கருதினார் பழனிசாமி. பாஜக-வுடன் முன்பிருந்த கூட்டணி தொடர்ந்தால் சிறுபான்மையினர் ஓட்டுகளை அதிமுக இழக்கும், அந்த இழப்பை பாஜக-வுடனான கூட்டணி ஈடு செய்யாது என்றும் அப்போது அவர் நினைத்தார். அது போக, பாஜக-வுடன் தேர்தல் கூட்டணி தொடர்ந்தால் மக்கள் செல்வாக்கு உயர்ந்து வரும் பாஜக தலைவர் அண்ணாமலையால், அரசியலில் தனக்குள்ள மதிப்பு இன்னும் குறையும், அதிமுக-வுக்குள் தன் செல்வாக்கு குறையும் என்று தனக்காகவும் கவலைப் பட்டார் பழனிசாமி. இதனால் 2024 லோக் சபா தேர்தலுக்கு முன்பாக பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக-வை விலக்கினார் பழனிசாமி. அதனால் இரண்டு கட்சிகளும் அந்தத் தேர்தலில் இழப்பைச் சந்தித்தன.

 

இப்போது காட்சி மாறுகிறது. வரப்போகும் 2026 தமிழக சட்டசபைத் தேர்தலுக்காக, மீண்டும் பாஜக-அதிமுக கூட்டணி அமைப்பது பற்றிப் பேச பழனிசாமியை எது அமித் ஷாவிடம் கூட்டிச் சென்றது?  

 

கடந்த மூன்றே முக்கால் வருடங்களில் அண்ணாமலை தனது அசாத்தியத் துணிவால், திறமையால், சாதுர்யத்தால், அர்ப்பணிப்பால், தமிழகத்தில் பாஜக வுக்குச் சேர்த்து வைத்திருக்கும் மக்கள் ஆதரவு தான் – அது தொடர்ந்து அதிகரிப்பதுதான் – பழனிசாமியைப் பாஜக பக்கம் இழுக்கிறது.

 

முன்பு பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகிப் போவதற்கு முக்கிய காரணமாக எந்த அண்ணாமலை கருதப்பட்டாரோ, அதே அண்ணாமலையால் தமிழக பாஜக பெற்றிருக்கும் கூடுதலான மக்கள் சக்தி, அதிமுக-வை பாஜக பக்கம் இழுக்கிறது. அந்த இரு கட்சிகள் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டால் அதிமுக-வுக்கும் நிச்சயப் பலன் உண்டு, முன்பு அதிமுக விலகிப் போனதால் தவறவிட்ட அந்தப் பலன் 2026-ல் அதிமுக-வுக்கும் கிடைக்கட்டும் என்று பழனிசாமி இப்போது நினைக்கிறார்.   

 

ஆனால் ஒன்று. 'போவேன், வருவேன்' என்று போக்குக் காட்டும் பழனிசாமி கேட்டதால், அரசியலில் கூர்மதியும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட அமித் ஷா – மோடியின் வலது கரமாக விளங்கும் ஒரு பாஜக தலைவர் – மக்கள் அபிமானம் பெற்ற துடிப்பான இளம் தலைவன் ஒருவனைத் தன் கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து ஒதுக்கி வைப்பாரா? அப்படி நடந்தால் அது கட்சியின் பல எதிர்காலத் தலைவர்களையும் பாதித்து பின்னாளில் அவர்களையும் கட்சிப் பணியில் சுணங்க வைக்கும் என்று அமித் ஷா நினைப்பாரே?

 

அண்ணாமலை பதவி விலகிய பிறகு பாஜக-வுடன் அதிமுக கூட்டணி அமைத்துவிட்டு, மீண்டும் பழனிசாமி  அந்தக் கூட்டணிக்கு டாடா காட்டிவிட்டுப் போனால் பழனிசாமிக்காக தமிழக பாஜக இழந்த இளம் தலைவர்களை மீண்டும் பெற முடியாது என்ற பிரக்ஞை பாஜக-வின் தலைமைக்கு இருக்கத் தானே செய்யும்?

 

இதையெல்லாம் மற்றவர்கள் சொல்லி மோடிக்கும் அமித் ஷாவுக்கும் தெரிய வேண்டியதில்லை. சாதாரண மக்கள் மனங்களை அறியும் அந்த இரு தலைவர்கள், கட்சியின் அடுத்த அடுத்த நிலைத் தலைவர்களின் எண்ணங்கள் பற்றியும் நன்கு அறிவார்கள்.

 

சரி, பிறகு யார் எதற்காக அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து மாற்றப் படுவார் என்ற தவறான தகவலைக் கசிய விட்டிருப்பார்கள்? ஊடகத்தில் பலமாகப் பரவச் செய்திருப்பார்கள்?

 

தமிழகத்தில் எந்த அரசியல் கட்சிக்கு அண்ணாமலை நாளொரு தொல்லையும் பொழுதொரு குடைச்சலும் அரசியல் ரீதியாகக் கொடுத்து வருகிறாரோ, அந்தக் கட்சியால் சொகுசாக வாழ்கிறவர்கள் செய்த காரியமாகத்தான் இது இருக்க வேண்டும். அவர்கள் ஏன் இதைச் செய்ய வேண்டும்?

 

பாஜக ஆதரவாளர்கள் சோர்வடைந்து, அந்தக் கட்சியின் தேசியத் தலைமையின் மீது பிடிப்பிழந்து, “சீச்சீ! என்ன கட்சி இது!” என்று அவர்கள் நினைக்கட்டும் என்பது பாஜக-வைத் தீவிரமாக வெறுக்கும் ஒரு கட்சியின் கணக்காக இருக்கும்.  அதோடு, நடப்பதைப் பார்த்து அண்ணாமலையும் வெறுப்படைந்து பதவி விலகலாம் என்பதும் அந்தக் கட்சியின் நப்பாசையாக இருக்கும். ஆனால் அமித் ஷாவும் அண்ணாமலையும் பனங்காட்டு நரிகள்.

 

இரண்டு விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒன்று, தமிழகத்தில் திமுக-வை வீழ்த்த, திமுக பாணி அரசியலைக் கட்டுக்குள் வைக்க,  பாஜக  தீவிரமாகச் செயல்படுகிறது. அது நடந்தேற, போகிற போக்கில் பாஜக தன்னை அதிமுக-வுடன் அரசியலில் சமன் செய்துகொள்ள வேண்டும், காலப் போக்கில் அதிமுக-வை முந்தவும் வேண்டும். அப்படி இருக்கையில் அதிமுக சொல்கிற படி தமிழகத்தில் பாஜக தனது தலைவரையும் மாற்றும் என்பது நினைத்துப் பார்க்க முடியாத விஷயம்.

 

இன்னொன்று.  தமிழகத்தில் அண்ணாமலை சேர்த்து வைத்திருக்கும் மக்கள் செல்வாக்கின் முக்கிய காரணம் இது. அதாவது, தீய சக்தியான திமுக-வை அண்ணாமலை நேர்மையாக, விடாப்பிடியாக எதிர்க்கிறார், அம்பலப் படுத்துகிறார். அண்ணாமலையை ஆதரிக்கும் மக்கள் அந்த எதிர்ப்பைப் பிரதானமாக வரவேற்கிறார்கள், என்பது அந்தக் காரணம்.  அனைவரையும் விட பிரதமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் இது தெரியும். பிறகு ஏன் அந்த இருவரும் அண்ணாமலையை மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து 2026 தேர்தலுக்கு முன் விடுவிக்க நினைக்க வேண்டும்?

 

‘எல்லாம் சரி. அண்ணாமலை தமிழகத் தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப் படுவார் என்பது தவறான தகவலானால், அதை அமித் ஷா உடனே மறுத்து அறிக்கை வெளியிடலாமே, அவர் ஏன் அதைச் செய்யவில்லை?’ என்று சிலர் கேட்கலாம்.

 

பாஜக-வுக்கு எதிரான கட்சிகள், அதுவும் தமிழகத்தில் உள்ள ஒரு முக்கியக் கட்சி, பாஜக-வின் தேசியத் தலைமை தனது உள் கட்சி விவகாரங்களில் ஏதோ முடிவு எடுத்திருக்கிறது, அதை செயல்படுத்தப் போகிறது, எடுக்கப் போகிறது என்று ஒரு தவறான தகவலை ஊடகத்தில் பரவ விட்டால், அதை பாஜக மறுத்து அறிக்கை விட அவசியம் இல்லை. பாஜக அப்படிச் செய்ய ஆரம்பித்தால், விஷமத் தனமான எதிர்க் கட்சிகள் பாஜக தேசியத் தலைமை பற்றிப் புதிய புதிய தவறான தகவல்களை அவ்வப்போது ஊடகத்தில் பரப்பும்.  ஒவ்வொரு முறையும் பாஜக அவற்றை மறுத்துக் கொண்டிருக்க முடியாது.  காலப் போக்கில் மக்கள் எது உண்மை என்று புரிந்து கொள்வார்கள்.

 

அமித் ஷா – பழனிசாமி – அண்ணாமலை பற்றிய இந்தப் பொய்ச் செய்தியை உருவாக்கியவர்கள், பாஜக-வுக்கு ஒரு நன்மை செய்திருக்கிறார்கள். இந்தப் பொய்ச் செய்தி பரவியதால், அண்ணாமலையின் எண்ணற்ற ஆதரவாளர்கள் அவர்மீது மாறாத அபிமானம்  உடையவர்கள் என்பது அவர்கள் பலவாறாக வெளிப்படுத்திய கவலையின் மூலம் வெளிப்பட்டிருக்கிறது.  அது பாஜக-வின் தேசியத் தலைமைக்கும் தெரிய வந்திருக்கும். ஒரு சிறந்த மாநிலத் தலைவரை உருவாக்கிய திருப்தியும் ஊர்ஜிதமும் மோடிக்கும் அமித் ஷாவுக்கும் மீண்டும் கிடைத்திருக்கும்.


சரிதானே?

 

* * * * *

 

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

 

 

 

 

  

 

Saturday, 29 March 2025

அண்ணாமலை, ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ், சீமான், விஜய் – இவர்களில் யார் எப்படி?

         

          -- ஆர். வி. ஆர்

 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, மக்கள் செல்வாக்கு நாளுக்கு நாள் ஒரு அலாதியான காரணத்தினால் கூடுகிறது.  அது என்ன?

 

திமுக-விலிருந்து ஆரம்பிக்கலாம்.

 

மு. க. ஸ்டாலின் தலைமை தாங்கும் திமுக ஒரு அராஜகக் கட்சி என்பது தமிழக மக்களின் பரவலான எண்ணம். வேண்டாதவர்களிடம் முஷ்டி வீசுதல், எட்டி உதைத்தல், காது கூசும் சொற்கள் பேசுதல் போன்ற அநாகரிகச் செயல்கள் அக் கட்சியின் கீழ் மட்டத்திலும் நடு மட்டத்திலும் இயல்பாகப் பரவியிருக்கிறது என்பது தமிழ்நாட்டில் பலரின் கருத்து. அந்தக் கட்சியினரைப் பகைக்கிற மாதிரி வெளியில் பேசவோ செயல்படவோ சாதாரண மக்கள் பயப்படுவார்கள்.

 

தமிழ்நாட்டில் சில அரசியல் தலைவர்கள் திமுக-வை எதிர்க்கலாம், ஆனால் தமது சுயலாபத்திற்காக மட்டும் எதிர்க்கிறார்கள், அல்லது அவர்கள் திமுக மாதிரி தில்லானவர்கள் கிடையாது, சமத்து சாதுப் பேர்வழிகள், அவர்களை நம்பிப் பயனில்லை, என்பதும் பெருவாரியான சாதாரண மக்களின் கருத்து. இந்த நிலையில் தமது அறியாமையால், இயலாமையால், அடாவடிக் கட்சி திமுக-வுக்கு ஓட்டுப் போடுவது பாதுகாப்பானது என்ற ஒரு எண்ணத்தில் சாதாரண மக்கள் அந்தக் கட்சியை வேறு வழி தெரியாமல் ஆதரிக்கிறார்கள். இருக்கிற ஏழ்மையில் வருகிற பணத்தை அவர்கள் தேர்தல் காலங்களில் வாங்கிக் கொள்வது வேறு விஷயம். திமுக-வுக்கு அநேக சாதாரண மக்கள் வாக்களிப்பதன் பிரதான காரணம் பணம் அல்ல.  

 

எம்.ஜி.ஆர் மீதுள்ள பற்றால், அவரது இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டுப் போடும் 55+ வயதுள்ள வாக்காளர்கள் இன்றும் அதிமுக-வை ஆதரிக்கிறார்கள் – தலைமைக் குணம் இல்லாத, தகுதிக்கு மீறிய பேராசைகள் நிறைந்த, எடப்பாடி பழனிசாமிக்காக அல்ல. பழனிசாமியோ அல்லது அதிமுக-வின் வேறு முன்னாள் இந்நாள் தலைவரோ இன்று மக்களை ஈர்க்கும் தலைவர்கள் அல்ல. அவர்கள் இரட்டை இலையின் நிழலில் இளைப்பாறுகிறவர்கள்.

 

ராமதாஸின் பாமக, அடிப்படையில் ஒரு ஜாதிக் கட்சியாகவே தெரிகிறது. அதனால் பிற ஜாதி மக்கள் பலரும் அந்தக் கட்சியிலிருந்து தள்ளி இருக்க விரும்புவார்கள். மற்ற மக்களுக்கும் அவரவர் ஜாதிகள் மேல் பிடிப்பு இருப்பதால், அவர்களில் பலரும் பாமக-வில் சேர, அந்தக் கட்சியை நேரடியாக ஆதரிக்க, விரும்ப மாட்டார்கள்.  தன் ஜாதி மக்களை முக்கியமாக ஈர்த்திருக்கும் ராமதாஸ், ஒவ்வொரு தேர்தல் நிலவரப்படியும் திமுக மற்றும் அதிமுக-வுடன் மாறி மாறிக் கூட்டணி வைத்தாலும் தன் கட்சியினரின் ஆதரவை அவர் இழக்க மாட்டார்.

 

நாம் தமிழர் கட்சியின் சீமான் மேடைகளில், பத்திரிகையாளர் சந்திப்புகளில், கைகள் வீசி, முக பாவங்கள் மாற்றி, குரலை ஏற்றி இறக்கி, பஞ்ச் டயலாக் பேசி, நாடகத் தனம் செய்கிறார். துடிப்பான உணர்ச்சி மிகுந்த இள வயதினரை, அதுவும் ஆண்களை, அவர் கவர்கிறார். போட்டிக் கட்சிகளின் அரசியல் தலைவர்களிடம் சீமான் டெக்னிக் இல்லை. மற்றபடி அவர் ஒரு திமுக பாணி கட்சியாகவும், திமுக-வுக்குப் போட்டியாகவும், வளர நினைக்கிறார்.  மற்ற யாரும் கவுரமான தலைவர்களாக அவர் கட்சியில் உருவாக முடியாது. அவர்தான் கட்சி.

 

நடிகர் விஜய்க்கு சினிமா ரசிகர்கள் ஏராளம். அரசியலுக்கு வந்து அரசியல்வாதியாக உழைத்துச் செயல்பட்டு மக்கள் ஆதரவைத் திரட்டியவர் அல்ல விஜய்.  தனக்கு ரெடிமேடாக இருக்கும் சினிமா ரசிகர்களின் ஆதரவை,  தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்காளர் ஆதரவாகப் பெற்றவர் அவர். அவர் எந்தக் கட்சியை ஆதரித்தாலும் எதிர்த்தாலும் அவரது ரசிகர்களின் ஆதரவு அவருக்கு உண்டு. அவரிடம் முதிர்ச்சி ஏதும் காணப்படவில்லை. அரசியலில் விஜய் நிலைப்பாரா, வெற்றி அடைவாரா, என்று தெரியாது. அவர் இன்னொரு எம். ஜி. ஆரும் அல்ல.

 

இவர்கள் அனைவரிலிருந்தும் வேறுபட்டவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. 41 வயதுதான் ஆகப் போகிறது. கட்சியில் சேர்ந்த பதினோரு மாதங்களில் தமிழக பாஜக தலைவர் ஆக்கப் பட்டார். அதைத் தொடர்ந்து, கடந்த மூன்றே முக்கால் வருடங்களில் அவர் மக்களிடம் தனக்கென்று ஒரு அபரிதமான செல்வாக்கை வளர்த்துக் கொண்டிருக்கிறார்.

 

தமிழகத்தில் ஏற்கனவே மிகப் பிரபலமான ஒரு கட்சித் தலைவரின் மடியில் தவழ்ந்தோ, காலில் விழுந்தோ, விரல் பிடித்தோ, அடியொற்றி நடந்தோ மக்களிடம் அறிமுகமாகி வளர்ந்தவர் அல்ல அண்ணாமலை. அவர் ஒரு சுயம்பு – அதை சரியாக அடையாளம் கண்டவர் பிரதமர் மோடி.

 

அண்ணாமலை மற்றும் தமிழக பாஜக-வின்  ‘அநியாய அக்கிரம அராஜகத்திற்கு’ப் பயந்து, அதன் காரணமாக அதிகமான மக்கள் அண்ணாமலையை ஏற்கிறார்கள் என்பதில்லை. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா மாதிரி, தோற்றக் கவர்ச்சியும் இல்லாத தலைவர் அண்ணாமலை. ராமதாஸ் மாதிரி, தன் ஜாதி மக்களை நம்பி, தன் ஜாதி மக்களுக்காக அரசியலுக்கு வந்தவர் அல்ல அண்ணாமலை. சீமானின் நாடகப் பாசாங்கும் அவரிடம் கிடையாது. விஜய் மாதிரி தமிழகத்தில் ரெடிமேட் ஆதரவாளர்கள் கொண்டவரும் அல்ல அவர்.  ஏற்கனவே உள்ள பாஜக-வில் சேர்ந்து, எப்படி அவரால் தமிழக பாஜக-வுக்குப் புத்துயிர் அளிக்க முடிந்தது, அவரும் நாளுக்கு நாள் அதிகம் பிரபலம் அடைகிறார்?

 

அண்ணாமலையின் தனிப்பட்ட மக்கள் செல்வாக்கிற்கான காரணம் இதுதான்.  ‘அராஜக திமுக-வை, முறைகேடுகள் நிறைந்த திமுக-வை, தைரியமாக, தில்லாக, தெனாவெட்டாக, நேருக்கு நேர், வார்த்தைக்கு வார்த்தை, பளீர் சுளீரென்று எதிர்க்க வல்ல ஒரே தமிழகத் தலைவர் அண்ணாமலை, அதையும் அவர் தனது சுயலாபத்திற்காகச் செய்யவில்லை, நமக்காகச் செய்கிறார். அவர் பேச்சும் தெளிவாக, நேராக, நியாயமாக, நச்சென்று இருக்கிறது. இந்த மனிதர் நமக்குப் பாதுகாப்பாகவும் இருப்பார். இவரை நம்பலாம்’ என்ற எண்ணம் அதிகமான தமிழர்களின் மனதில் பதிகிறது. இதுதான் அண்ணாமலையின் தனிப்பட்ட மக்கள் செல்வாக்கின் அடித்தளம்.  

 

ஒரு காலத்தில் காஷ்மீரில் இந்திய ராணுவத்தினரை நோக்கிக் கல்லெறிந்தனர் சாதாரண மக்கள். ஏனென்றால் அப்போது காஷ்மீரில் தீவிரவாதிகளின் கை ஓங்கி இருந்தது. தில்லான தீவிரவாதிகள்தான் தமக்கு அதிகப் பாதுகாப்பு என்று நினைத்து, தீவிரவாதிகளின் கட்டளைப்படி காஷ்மீரில் அன்று சாதாரண மக்கள், கைகள் கட்டப்பட்ட நமது ராணுவத்தினர் மீது கல் வீசினர். ஆனால் அரசியல் சட்டப் பிரிவு 370 நீக்கப் பட்ட பிறகு,  தீவிரவாதிகளை அடித்து நொறுக்கி துவம்சம் செய்யும் ராணுவத்தை வைத்திருக்கும் மத்திய அரசின் மீது இப்போது காஷ்மீர் மக்கள் அதிக நம்பிக்கை வைக்கிறார்கள்.

 

யார் தில்லானவர்களோ, யார் சக்தி மிக்கவர்களோ, அவர்களை ஆதரிக்கும், அவர்களுக்கு ஓட்டுப் போடும் இந்தியர்கள் அதிகம். அந்த சக்திமான்கள் நல்லவர்களாகவும் இருந்துவிட்டால் சாதாரண மக்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் அந்த நல்ல வல்லவர்களின் பின்னால் நிற்பார்கள்.  அப்படியாகத்தான் திமுக-வைத் துணிவோடு எதிர்த்துப் பேசி, அதற்கான காரண காரியங்களை விரிவாக, பொறுமையாக, எடுத்துச் சொல்லும் அண்ணாமலையைத் தமிழக மக்கள் பலரும் ஆதரிக்கிறார்கள்.

 

ஒரு அரசியல் கட்சியைக் குறியாக, தில்லாக, தளராமல் எதிர்ப்பதால் மட்டும் ஒரு புதிய பெரிய தலைவர் மக்களிடையே உருவாக முடியும் என்று காண்பித்தவர் அண்ணாமலை. அது ஏன் சாத்தியம் என்பதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, அப்படி ஒதுக்கப்பட வேண்டிய பெரும் தீய சக்தி திமுக என்று சாதாரண மக்களே பரவலாக நினைக்கிறார்கள். இரண்டு, அந்த நினைப்பை அரசியல் உலகில் செயல்படுத்தக் கூடிய நேர்மையான, உறுதியான, நெஞ்சுரம் மிக்க, ஒரே தலைவர் அண்ணாமலை என்றும் மக்கள் நம்புகிறார்கள்.  

 

தமிழகத்தில் பாஜக ஒரு கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வருவது, வரமுடியாமல் போவது, வேறு விஷயம். ஏனென்றால் தேர்தல் வெற்றிக்கான சரியான கூட்டணிக் கணக்குகள் தனியானவை, அவை மெய்ப்பட வேண்டும். ஆனால் அண்ணாமலை தமிழக அரசியலில் ஒரு விடிவெள்ளி, தமிழக பாஜக-வுக்கும் தமிழக மக்களுக்கும் ஒரு வரப் பிரசாதம் என்பது நிச்சயம் தானே?


* * * * *

 

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

Tuesday, 11 March 2025

பள்ளியில் மும்மொழி – மு. க. ஸ்டாலினுக்கு ஒரு தமிழன் எழுதும் கடிதம்

 

-- ஆர். வி. ஆர்

 

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு,

 

வணக்கம். 

 

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை நீங்கள் ஏற்கவில்லை. அதிலும் தேசிய கல்விக் கொள்கையின் ஒரு அங்கமாக, தமிழகப் பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் தவிர மாணவர்கள் விரும்பும் வேறு ஒரு இந்திய மொழியைப் பயிற்றுவிப்பதற்கு உங்கள் கட்சியும் அரசும் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றன.  உங்கள் எதிர்ப்பு சிறுபிள்ளைத் தனம், அசட்டுத்தனம், என்று உங்களுக்குப் புரியவே இல்லையா?

 

"திரைகடலோடியும் திரவியம் தேடு" என்பது ஔவையார் வாக்கு. ‘கடல் கடந்து வெளிநாடு சென்றாவது செல்வத்தைத் தேடவேண்டும்’ என்பது அதன் பொருள்.  

 

ஒளவையார் சொல்லுக்கு நடைமுறையில் என்ன அர்த்தம்? ‘இன்னொரு நாட்டுக்குச் சென்று அந்நாட்டு மக்களை ஒரு வருடம் பொறுமையாகத் தமிழ் கற்க வைத்து, பிறகு தமிழில் மட்டும் அவர்களிடம் பேசிப் பணம் சம்பாதித்துக் கொள், தமிழா!’ என்று அர்த்தமா? அல்லது, ‘தொலைதூரம் செல்லவிருக்கும் நீ, அந்த இடத்து மொழியையும் தேவையான அளவு கற்று அந்த மக்களிடம் எளிதாகப் பொருள் ஈட்டிக் கொள், தமிழா!’  என்று அர்த்தமா?

 

பாரதம் பல மொழிப் பிரதேசங்களைக் கொண்டது.  வேலையின்மை அதிகம் உள்ள நாடு. இங்கிருந்து பிற நாடுகளுக்குச் சென்று சம்பாதிக்க முடிகிறவர்களை விட, உள்நாட்டில் மற்ற பிரதேசங்களுக்குச் சென்று சம்பாதிக்க நினைக்கிற மக்கள் அதிகம் – அது  எளிதில் அவர்களுக்கு சாத்தியமும் ஆகும். அவர்களின் முயற்சி வெற்றி பெற, அந்த மற்ற பிரதேசத்தின் மொழியை அவர்கள் கற்க முன்வர வேண்டும்.  தமிழ் மொழியை நடிகர் ரஜினிகாந்த் கற்றது போல்.

 

இல்லையென்றால் நமது தொழிலைப் பொறுத்து, மற்ற பிரதேசத்து மொழி தெரிந்தவர்களை வேலைக்கு வைத்து அந்தப் பிரதேசத்தில் நாம் தொழில் செய்ய வேண்டும். சன் டிவி பல இந்திய மொழிகளில் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்வதற்காகப் பிற மாநிலங்களில் அலுவலகங்கள் அமைத்து அந்த அந்தப் பிரதேச மொழி தெரிந்தவர்களை வேலைக்கு வைப்பது போல்.

 

என்ன இருந்தாலும், பல மொழிகள் பேசப்படும் இந்தியாவில் தாய்மொழி தவிர இன்னொரு இந்திய மொழி பயில்வது மிகவும் அனுகூலம்.  பள்ளிப் படிப்பின் போதே நமக்கு உணர்வு ரீதியாக அல்லது வேலை நிமித்தமாகப் பொருந்தி வரும் இன்னொரு இந்திய மொழியைத் தேர்வு செய்து கற்பது புத்திசாலித் தனம். முதல்வரே! இந்தக் கட்டம் வரை, இந்த எண்ணத்தின் லாஜிக் பற்றி,  உங்களுக்கு ஆட்சேபணை இருக்காதல்லவா?

 

சரி, பள்ளிகளுக்கான மும்மொழிக் கொள்கையை எதிர்த்து நீங்கள் பேசுவதின் சாராம்சம் என்ன? அதை இப்படிச் சொல்லலாம்: "தமிழகப் பள்ளி மாணவர்கள் பிரதேச மொழி தமிழையும் அதோடு ஆங்கிலத்தையும் பள்ளியில் கற்கட்டும். இன்னொரு இந்திய மொழியை அவர்கள் கற்க விரும்பினால்,  அவர்கள் வேறு எங்காவது போய் அதைக் கற்றுக் கொள்ளட்டும். அதை மாநில அரசு தடுக்காது. ஆனால் அந்த இன்னொரு இந்திய மொழியை அவர்கள்  பள்ளியில் கற்றால், அவர்களே எந்த மொழியைத் தேர்வு செய்தாலும், அது மொழித் திணிப்பு. அது ஹிந்தித் திணிப்பாக உருவெடுக்கும்."

 

உங்கள் எண்ணம் தமிழகத்தின் அரசுப் பள்ளி ஏழை மாணவர்களைக் குறிப்பாக பாதிக்கும். தாம் விரும்பும் இன்னொரு இந்திய மொழியை அவர்கள் எளிதாகப் பள்ளியில் படிக்க முடியாவிட்டால், எங்கே எப்போது அதைக் கற்பார்கள்? அதற்காக அவர்களுக்கு ஏன் வீண் சிரமம், வெட்டிச் செலவு, கால விரயம் ஏற்படுத்துகிறீர்கள்? அவற்றைச் சந்திக்க முடியாமல் அவர்கள் மூன்றாவது மொழியைப் பெரும்பாலும் கற்கவே மாட்டார்களே?

 

உங்கள் நிலைப்பாடு சிறுபிள்ளைத் தனமானது என்று விவரம் அறிந்த அனைவருக்கும் தெரியும். ஆனால் ‘தமிழகத்தில் பெருவாரியான தமிழர்கள் இந்த விஷயத்தில் விவரமானவர்கள் அல்ல, ஆகையால் அநேக தமிழர்கள் என்  எதிர்ப்பை வரவேற்பார்கள்’ என்று நீங்கள் நினைத்தால் அது அசட்டுத்தனம்.

 

நீங்களும் உங்கள் கட்சியினரும் தெருவில் இறங்கி மும்மொழிக் கொள்கையை எதிர்த்துக் கூட்டங்கள் போடலாம், ஆர்ப்பாட்டங்கள் நடத்தலாம். ஆனால் உங்கள் வாதத்தை ஏற்காத பொதுமக்கள் தாமாகத் கூடி தெருவுக்கு வந்து எதிர்க் கோஷம் போட மாட்டார்கள். திமுக என்னும் கட்சியை –மொழி பற்றிய அதன் நிலைப்பாட்டை – வெட்டவெளியில் பகிரங்கமாக எதிர்ப்பது இந்த ஜனநாயகத்தில் தமக்கு ஆபத்தானது என்று உணர்ந்தவர்கள் சாதாரண மக்கள்.

 

இது போக, தங்கள் ஏழ்மையிலும் இயலாமையிலும் தேசிய கல்விக் கொள்கை பற்றி அக்கறை காட்ட முடியாத மிக எளிய மக்களும் தமிழகத்தில் இருக்கிறார்கள். மும்மொழிக் கொள்கை விஷயத்தில் இவர்கள் உங்கள் நிலைப்பாட்டை ஏற்றவர்கள் என்று அர்த்தமல்ல. இவர்களின் நலனும் காக்கப் படவேண்டும்.

 

வேலைக்காக இடம் விட்டு இடம், மாநிலம் விட்டு மாநிலம், மாறும் மக்கள் அதிகம் இருக்கிறார்கள். பரந்த இந்தியாவில், வளர்கிற இந்தியாவில், இடம் பெயர்தல் அதிகம் நிகழும் காலம் இது. அதற்கு ஏற்ப சாலைகள் நீள்கின்றன, புதிய அதிவேக ரயில்கள் விரைகின்றன, புதிய விமான நிலையங்கள் எழுகின்றன.

 

தமிழகத்தில் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக வட மாநிலத்தவர்கள் வந்து எல்லா வேலைகளையும் செய்து பிழைப்பதைத் தமிழர்கள் பார்க்கிறார்கள். இதன் விளைவாக, இன்னொரு இந்திய மொழி நமக்குத் தெரிந்தால் நாம் நல்ல வேலைகள் தேடும் இடம் இந்தியாவில் விரிவடையும் என்று தமிழக இளைஞர்கள் நினைப்பார்கள், பெண்கள்  உட்பட.  இதை நீங்கள் உணரவில்லையா முதல்வரே?

 

வெளி மாநிலம், வெளி நாடு என்று தமிழர்கள் போய் விட்டால், அந்தந்த இடங்களில் தமக்கான கோவில்களைக் கட்டிக் கொள்ளலாம். தமிழ்ச் சங்கங்களும் அமைத்துத்  தங்களின் தமிழ் உணர்வைக் காத்துக் கொள்ளலாம். அது நடக்கிறது.

 

அமெரிக்காவில் பல ஊர்களிலும் ஹிந்துக் கோவில்கள் உண்டு. மிக அதிகமாகத் தமிழ்ச் சங்கங்களும் அந்த நாட்டில் உண்டு. அந்தத் தமிழ்ச் சங்கங்களை ஏற்படுத்தியது அங்கு குடியேறிய தமிழர்களின் தமிழ்ப் பற்றுதானே?  அந்தத் தமிழ்ச் சங்கங்களுக்கும் திமுக தலைவர்களுக்கும் சம்பந்தம்  கிடையாதே?  திமுக-வைத் தவிர்த்து தமிழும் தமிழ் உணர்வும் அங்கு வாழ்கிறதல்லவா, வளர்கிறதல்லவா? தமிழகத்தில் மட்டும் அது நடக்காதா?

 

‘எதுவானாலும், மும்மொழிக் கொள்கையை நான் எதிர்ப்பதால், மக்களின் மொழி உணர்ச்சியை நான்  கிளறுவதால்,  முன்காலம் போல் திமுக-வுக்கு இப்போதும் அதிக ஓட்டுகள் கிடைக்கும்’ என்று ரகசியமாக நினைக்கிறீர்களா? அப்படித்தான் தெரிகிறது. ஆனால் உங்கள் நினைப்பு  சரியல்ல, இக்காலத்தில் அது பயன் தராது.

 

தமிழகச் சிறுவர்கள் தங்கள் பள்ளிகளில் இன்னொரு இந்திய மொழி கற்பதைத் தமிழக மக்கள் பரவலாக விரும்புவதால், மக்களின் அந்த விருப்பத்தை நிறைவேற்ற ஒரு மாற்று அரசியல் சக்தி அசாதாரண உறுதியுடன் தமிழகத்தில் செயல்படுகிறது, வலுப்பெறுகிறது. அதுவே தமிழக மக்களை இந்த விஷயத்தில் தைரியப் படுத்துகிறது.  இதை நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருப்பதும் உங்கள் அசட்டுத்தனம் முதல்வரே!

    

வாழ்த்துகளுடன்:

தமிழக மாணவர்களின் நலம் விரும்பும்,

 

ஒரு தமிழன்


* * * * *


Author: R. Veera Raghavan, Advocate, Chennai