Monday, 2 June 2025

வந்தனம் சேவாலயா

               

    -- ஆர். வி. ஆர்


 

சேவாலயா ஒரு தொண்டு நிறுவனம். சென்னை அதன் தலைமையிடம். தனது சேவைகளில் ஒன்றாக, சேவாலயா முதியோர் இல்லங்கள் நடத்துகிறது. அங்கு 60 வயதுக்கு மேற்பட்ட, ஆதரவும் வசதியும் அற்ற, முதியோர்களுக்கு இலவச உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம், கூடவே வாழ்வின் அடிப்படைக் கண்ணியம், ஆகியவற்றை அளித்து வருகிறது சேவாலயா.

 

சேவாலயாவின் மகத்தான பணியை நினைத்து, அங்கிருக்கும் முதியோர்களின் மனம் இந்தப் பாடல் வரிகளை எண்ணிப் பார்க்கலாம்.

 


 
Photo credit: sevalaya.org

  

 

சேவாலயா ..... சேவாலயா .....

எமக்கெலாம் ..... தாயாகினாய் ..... நீ

தாயாகினாய் .....   

 

 

யாருக்கும் வேண்டவில்லை

யாரும் மதித்ததில்லை

காலம் கட்டி இழுத்து – எம்மைச்

சேர்த்து விட்டது இங்கு

   வாழ்வில் புது கண்ணியம் – இன்று

காணும் மனிதர்கள் நாம்

 

 

சேவாலயா ..... சேவாலயா .....

எமக்கெலாம் ..... தாயாகினாய் ..... நீ

தாயாகினாய் .....

 

    01.06.2025

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

Sunday, 25 May 2025

மகிழ்வோமே!

     
-- ஆர். வி. ஆர்



 

மகிழ்வோமே!

(முதியோர் கீதம்)

 

[ஒரு முதியோர் இல்லத்தினருக்காக எழுதப்பட்டது]

 

   

 மகிழ்வோமே மனம் மகிழ்வோமே!

நிறைவோமே நெஞ்சம் நிறைவோமே!

மகிழ்வோமே மனம் மகிழ்வோமே!

நிறைவோமே நெஞ்சம் நிறைவோமே!

 

வருத்தம் இல்லை ஒரு வெறுப்பும் இல்லை! காயம் இல்லை ஒரு கசப்பும் இல்லை!

வருத்தம் இல்லை ஒரு வெறுப்பும் இல்லை! காயம் இல்லை ஒரு கசப்பும் இல்லை!

 

யாரையும் அண்டாமல் எவரையும் சாராமல்

நல்மனதுடன் நாம் ஜீவிப்போம்!

நல்மனதுடன் நாம் ஜீவிப்போம்!

நல்மனதுடன் நாம் ஜீவிப்போம்!

 



Author: R. Veera Raghavan, Advocate, Chennai


Friday, 23 May 2025

எத்தனை போர் விமானங்களை இந்தியா இழந்தது? ராகுல் காந்தியின் பாப்பா கேள்வி

 

          -- ஆர். வி. ஆர்

 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இப்போது பொதுவெளியில் அசட்டுத்தனமாக ஒரு கேள்வியை இரு முறை எழுப்பி இருக்கிறார் – வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை நோக்கி.

 

‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல்களை இந்தியா தொடங்குவதற்கு முன்பாக, இந்தியா அது பற்றிப் பாகிஸ்தானுக்கு முன்னதாகத் தகவல் தெரிவித்தது' என்று ஜெய்சங்கர் சொன்னதாக வைத்துக் கொண்டார் ராகுல் காந்தி. அதன்படி அவர் தனது கேள்வியை முன் வைத்திருக்கிறார். ராகுல் கேட்டது:

 

"நமது தாக்குதல் பற்றிப் பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தெரிந்ததால், எத்தனை போர் விமானங்களை இந்தியா இழந்தது? நாட்டிற்கு உண்மை தெரிய வேண்டும்".

 

ராகுல் காந்தியின் கேள்விக்கு வெளிவிவகாரத் துறை பதில் சொல்லிவிட்டது. என்னவென்றால்: இந்தியா தனது தாக்குதலைத் துவங்குவதற்கு முன்னதாக அது பற்றிப் பாகிஸ்தானுக்குத் தகவல் சொல்லவில்லை, இந்தியா தனது ஆரம்ப அடியை அடித்த பின்னர், அந்தத் தாக்குதலானது பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது மட்டும் நடத்தப் பட்டது, அந்நாட்டின் ராணுவத் தளங்களின் மீது இந்தியா தாக்குதல் நடத்தவில்லை என்று பாகிஸ்தானுக்குத் தெரிவிக்கப் பட்டது, இதைத்தான் அமைச்சர் ஜெய்சங்கர் சமீபத்தில் அறிவித்திருந்தார், ஆனால் அவர் பேச்சு திரிக்கப் படுகிறது

 

பயங்கரவாத முகாம்கள் மீது மட்டும் முதலில் தாக்குதல் நடத்திய இந்தியா, பின்னர் ஏன் அது பற்றிப் பாகிஸ்தானிடம் தகவல் சொன்னது? ஏனென்றால், அந்த அடியை வாங்கிய கலக்கத்தில் பாகிஸ்தான் இந்திய ராணுவத் தளங்களின் மீது தாக்குதல் செய்யக் கூடாது, அது நடந்தால் இந்தியா பாகிஸ்தானின் ராணுவத் தளங்களையும் தீவிரமாகத் தாக்க வேண்டியிருக்கும், பிறகு அது நீண்ட போருக்கு வழிவகுக்கும், முடிந்தவரை போரைத் தவிர்க்கலாம், என்ற மேலான எண்ணத்தில் இந்தியா பாகிஸ்தானிடம் பின்னர் அந்தத் தகவலைச் சொன்னது.

 

ஒரு பயில்வான் தன்னை அனாவசியமாக அடித்து ஓடும் ஒரு தெருக் காவாலியைப் பிடித்து, தன்னை அடித்த கையைப் பற்றி முறுக்கி அதன் மணிக்கட்டில் பலமாக ரண்டு போட்டு, அதன் பின் “பாரு, இத்தோட விட்றேன். இனிமே நீ பேஜார் பண்ண, பெண்டை நிமித்திருவேன். ஜாக்கிரதை!” என்று அந்தக் காவாலியை எச்சரிக்கும் செயலைப் போல் இந்தியா செய்தது – தனது முதல் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தானுக்கு அளித்த தகவலின் மூலமாக.

 

ராகுல் காந்தியின் கேள்வியைச் சற்று ஆராயலாம்.

 

காங்கிரஸின் முடிசூடா மன்னர் ராகுல் காந்தி. அவர்தான் லோக் சபாவில் எதிர்க் கட்சித் தலைவர். எதுவானாலும் அவர் இப்படி ஒரு மழலையாக, பாகிஸ்தானை மகிழ்விக்கும் விதமாக, நமது மத்திய அமைச்சரைப் பார்த்துக் கேட்கலாமா என்ற கேள்வி உங்களுக்குள் எழுகிறதாஅப்படியானால் நீங்கள் தேசபக்தர்.


ராகுல் காந்தியின் கேள்விக்கான பின்னணி நமக்குத் தெரியும்.

 

சென்ற மாதம் பாகிஸ்தான் ராணுவம் நான்கு பயங்கரவாதிகளை இந்தியாவின் பஹல்காமிற்கு அனுப்பி 25 அப்பாவி சுற்றுலாப் பயணிகளின் படுகொலையை நிகழ்த்தியது. அதை அடுத்து, இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்னும் ராணுவ நடவடிக்கை மூலமாக பாகிஸ்தானை வெளுத்து வாங்கிப் பணிய வைத்தது - நான்கே நாட்களில்.  நிலைகுலைந்த பாகிஸ்தான் போர் நிறுத்தம் கேட்க, போர் நின்றது.  

 

சமீபத்திய ஜெய்சங்கரின் அறிவிப்பைத் தொடர்ந்து, ராகுல் காந்தி ஏன் தனது பிதற்றல் கேள்வியைக் கேட்டார்? அரசியல் முதிர்ச்சி இல்லாத ராகுல் காந்தி தன்னைச் சுற்றித் தானே பின்னிக் கொண்ட வலைதான் அவரை அப்படிக் கேட்க வைத்தது.

 

2004-2014 ஆகிய பத்து வருடங்கள், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் எதிர்பார்ப்பை மதித்துச் செயல்படும் மன்மோஹன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பிரதமராக இருந்தார். அந்தக் கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகித்தது.   

 

2014-ம் ஆண்டிலிருந்து இன்றுவரை, 11 வருடங்களாக, மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி நடக்கிறது.

 

மோடி ஆட்சியில் சாதாரண மக்களுக்கான குடிநீர், சமையல் எரிவாயு, கழிப்பறை வசதிகள், மருத்துவக் காப்பீடு, வீடு கட்ட உதவி போன்ற தேவைகள் மத்திய அரசின் திட்டங்கள் மூலம் பெரிதும் நிறைவேறுகின்றன. தேசிய நெடுஞ்சாலைகள், ரயில் போக்குவரத்து வசதிகள் அதிகரிக்கின்றன. இன்னும் பல சாதனைகளும் மோடி ஆட்சியில் உண்டு. இந்த ஆட்சியில் மத்திய அரசு செய்யும் வேலைகளில் – அதுவும் உயர் மட்டத்தில் – லஞ்ச ஊழல் இல்லாமல் போனது. நாட்டில் பயங்கரவாத நிகழ்வுகளும் வெகுவாகக் கட்டுப்படுத்தப் பட்டிருக்கின்றன.

 

இது போன்ற பரவலான பெரிய சாதனைகளை, இவற்றுக்கு இணையானதை, மன்மோஹன் சிங்கின் பத்தாண்டு ஆட்சி – அதாவது, சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் லகான் பிடித்த ஆட்சி – செய்யவில்லை. அப்போது மத்தியில் ஊழல் ஊற்றெடுத்தது. 

 

கோணல் புத்தியில், ராகுல் காந்தி தனது அம்மா சோனியா காந்தியை ஓரம் கட்டியவர். கொழுப்புப் பேச்சில் அவர் எவரையும் மிஞ்சியவர். அடுத்த பிரதமருக்கான ஆசையில் மோடியை எப்படியும் எதிர்க்க வேண்டும் என்று அவர் துடிக்கிறார். “எங்கள் மன்மோஹன் சிங்கின் பத்தாண்டு ஆட்சி சாதனைகள் மாதிரி, மோடி அரசு தனது பதினோரு ஆண்டுகளில் மக்களுக்காக எதையும் செய்யவில்லை” என்று ராகுல் காந்தியால் பேச முடியாது, அப்படிப் பேசி அவர் மோடி அரசை எதிர்க்க முடியாது. எரிச்சலான ராகுல் காந்தி அவ்வப்போது என்ன செய்கிறார்?

 

"தேசத்தின் காவலாளி மோடி, ஒரு திருடர். சீனாவின் எல்லைக் கட்டுப்பாட்டு அத்துமீறல்களை அவர் ராணுவ ரீதியாக எதிர்க்க முடியாமல் நமது நிலத்தை சீனாவுக்கு விட்டுக் கொடுக்கிறார். ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் மோடி முறைகேடு செய்கிறார்” என்ற வகையில் மலிவான பொய்களை மட்டும் ராகுல் காந்தியால் பேச முடிகிறது.  

 

இப்போது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் மோடியின் பேரும் புகழும் இந்திய மக்களிடையே மேலும் உயர்கிறது. பார்த்தார் ராகுல் காந்தி. மோடியின் பேரை உடனே ரிப்பேர் செய்யவேண்டும் என்று எண்ணினார். ‘ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் மோடி அரசு முட்டாள்தனமாக பாகிஸ்தானுக்கு இந்தியத் தாக்குதல் பற்றி முன்கூட்டியே தகவல் கொடுத்தது, அதனால் நாம் சில போர் விமானங்களை இழந்தோம், தேசப் பாதுகாப்பு நடவடிக்கையில், நமது போர் விமானிகள் உயிரைக் காப்பதில், ராகுல் காந்தியான நான்தான் கிங்கு என்று அவிழ்த்து விடுவோம். வேறு வகையில் மோடி அரசை நம்மால் எதிர்க்க முடியவில்லை என்றால் இதைச் செய்வோம்’ என்று நினைத்தார் ராகுல் காந்தி. விளைவு, அவரது பாப்பா கேள்வி. இதுதான் விஷயம்.

 

நல்ல வேளை. ஆபரேஷன் சிந்தூரின் நியாயத்தை எடுத்துச் சொல்ல பிற நாடுகளுக்கு இந்தியா அனுப்பி வரும் குழுக்கள் எதிலும் ராகுல் காந்தி இல்லை. அந்தக் குழு ஒன்றில் அவர் சேர்க்கப் பட்டிருந்தால் என்ன ஆகியிருக்குமோ?


ஒரு குழு உறுப்பினராக ராகுல் காந்தி ஏதாவது வெளிநாட்டுக்குச் செல்கையில் அந்த நாட்டு அரசாங்கப் பிரதிநிதிகளின் முன்னால் அமர்ந்து, “பஹல்காம் பயங்கரவாதத்திற்கு முன்பாக மோடி அரசு நான்கு பேரைப் பாகிஸ்தானுக்கு அனுப்பி அங்கு 25 அப்பாவி பாகிஸ்தானியர்களைக் கொன்று போட்டதோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது, அதை ஜெய்சங்கர் தீர்த்துவைக்க வேண்டும்!” என்று அவர் உச்சகட்டமாக உளறுவாரோ?

 

* * * * *


Author: R. Veera Raghavan, Advocate, Chennai

Monday, 19 May 2025

ப. சிதம்பரமே பாஜக-வைப் பாராட்டுகிறார். என்ன செய்தது பாஜக?


-- ஆர். வி. ஆர்

 

 ப. சிதம்பரம் ஒரு நெடுநாள் காங்கிரஸ் தலைவர், அரசியல் புத்திசாலி, கெட்டிக்கார வக்கீல். அரசியலில் தரை தட்டாமல் பறப்பதும் உயர்வதும் மிதப்பதும் அவருக்குக் கைவந்த கலை.

 

சமீபத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர் இரண்டு விஷயங்கள் சொன்னார்.

 

ஒன்று: “இண்டி கூட்டணி இன்னமும் ஒன்றிணைந்து இருப்பதாக இந்தப் புத்தகத்தின் இரு ஆசிரியர்களில் ஒருவர் சொல்கிறார். ஆனால் எனக்குச் சந்தேகமாக இருக்கிறது.

 

இரண்டு: “பாஜக மாதிரி வலிமையாக, அசைக்க முடியாதபடி அமைக்கப் பட்ட (formidably organised) ஒரு அரசியல் கட்சி வேறெதுவும் இல்லை. இதை எனது அனுபவத்திலும் சரித்திரம் படித்ததன் வாயிலாகவும் நான் சொல்கிறேன்.

 

இந்த இரண்டு விஷயங்களைச் சிதம்பரம் தெளிவாகச் சொன்னாலும், அவை அவர் மூலமாகப் பொதுவெளியில் தெரிவிக்கப் படுவது அதிர்ச்சி தரலாம், கட்சிக்குள் அவரே கேள்வி கேட்கப் படலாம் என்பதால், தனது பேச்சிலேயே சில ‘ஷாக் அப்சார்பர்’ வார்த்தைகளையும் சேர்த்து அவர் பேசி இருந்தார். என்ன இருந்தாலும், சிதம்பரமே சொன்னதால் அந்த இரண்டு விஷயங்களின் உண்மைத் தன்மைக்கு 200 சதவிகித உடனடி கேரண்டி உண்டு.

 

இண்டி கூட்டணியின் பல்வேறு கட்சிகளிடையே ‘நம்மில் யார் அடுத்த பிரதமர்?’ என்ற உள் போட்டி இருப்பதால், அந்தக் கூட்டணி கரைந்து கிடக்கிறது. அது ஊரறிந்தது.  பாஜக-வின் வலிமை பற்றிச் சிதம்பரம் சொன்னதை மட்டும் உன்னிப்பாகப் பார்க்கலாம்.

 

ஒரு அமைப்பு அல்லது அரசியல் கட்சியின் வலிமை அதை வழிநடத்தும் மனிதர்களின் தலைமைப் பண்புகளிலிருந்து, அவர்களின் மதியூகத்திலிருந்து, ஆரம்பிக்கிறது – அங்குதான் பெரிதும் தங்கி இருக்கிறது.

 

காங்கிரஸ் மாதிரி சுயநலம் மிக்க தலைவர்கள், ஆட்சியில் முறைகேடுகளுக்கு வழிசெய்து கொடுக்கும் தலைவர்கள், குடும்பவழித் தலைமையை வளர்க்கும் தலைவர்கள், நிறைந்த கட்சி ஒரு ஜனநாயகத்தில் வலிமையான கட்சியாக நீடிக்க முடியாது. தில்லுமுல்லுகள் சில காலம் அவர்களின் கட்சியை உயர்த்தி வைத்திருக்கும் – அதாவது மக்களின் அறியாமை நீடிக்கும் காலம் வரை. மக்கள் விழித்துக் கொள்ளாத நிலையில், எந்த அரசியல் கட்சி போட்டிக் கட்சிகளை விடக் கில்லாடியாக அரசியல் நாடகங்கள் நடத்துமோ அது வலிமை பெறும்  – தமிழகத்தில் திமுக மாதிரி.

 

சரி, பாஜக வலிமையான கட்சி என்று சிதம்பரம் சொல்கிறாரே, அப்படியானால் இந்தியாவின் பல மாநிலங்களின் அரசியல் களத்தில் அக்கட்சி முன்னிலை வகிக்கிறதே, அங்கெல்லாம் சாதாரண மக்களின் அறியாமை அகன்று விட்டதா? அங்கெல்லாம் இனிமேல் மக்களை எளிதில் ஏமாற்றி, ஜிகினா வாக்குறுதிகளை வாரி வழங்கி, ஒரு அரசியல் கட்சி தேர்தலில் வெல்ல முடியாதா? அதெல்லாம் இல்லை.

 

பாஜக-வின் அரசியல் வெற்றி ஏன் பிரமிக்கத் தக்கது என்றால், அந்தக் கட்சி மக்களின் அறியாமையைத் துஷ்பிரயோகம் செய்யாமல் வலிமை பெற்றிருக்கிறது. காங்கிரஸ் தலைவர் சிதம்பரத்தால், அந்த வழியில் பாஜக பெற்ற தேர்தல் வெற்றிகளையும் அதன் வலிமையையும் நினைத்தே பார்த்திருக்க முடியாது. இருந்தாலும் பாஜக-வின் வலிமையை உணர்ந்து அதைப் பொதுவெளியிலும் ஒப்புக் கொண்டுவிட்டார் – ஆள் ஒரு வினாடி அசந்திருந்தாலும் இருக்கலாம்!

 

அகில இந்திய அளவில், நரேந்திர மோடியின் தலைமையில், பாஜக படிப்படியாக வலிமை பெறும் போது பிற அரசியல் கட்சிகள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு சாதாரண மக்களின் ஏழ்மையை, இயலாமையை, அறியாமையை, துஷ்பிரயோகம் செய்து குயுக்தி அரசியல் செய்து வருகின்றன. இந்திரா காந்தி காலம் தொடங்கி இன்று வரையிலான காங்கிரஸ் கட்சியும் அதில் அடக்கம். பாஜக அந்த வழியில் செல்லாமல் போட்டிக் கட்சிகளைத் தாண்டி அதிக மக்கள் செல்வாக்கைப் பெற்றுவிட்டது. 2014, 2019, 2024 ஆகிய மூன்று லோக் சபா தேர்தல்களிலும் கூட்டணிக் கட்சிகளோடு சேர்ந்து வெற்றி பெற்று மத்தியில் மோடி தலைமையில் ஆட்சி அமைத்தது.  இது எப்படிச் சாத்தியம் ஆனது?

 

தன்னலம், தன் குடும்ப நலன், ஆகிய நோக்கங்களைக் கொண்டு, அரசியலில் கவர்ச்சி வார்த்தைகள் பேசி, ஏமாற்று வேலைகள் செய்து, பொய்யான தேர்தல் வாக்குறுதிகள் அளித்து,  மற்ற அரசியல் கட்சிகள் இயங்கி வருகின்றன. சமீப காலம் வரை இவற்றில் ஒரு கட்சியை அல்லது ஒரு கூட்டணியைத் தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்துவதை விட சாதாரண மக்களுக்கு வேறு வழி இல்லாமல் போனது – மத்தியிலும் மாநிலங்களிலும். இன்னும் சாதாரண மக்களின் அறியாமை அவர்களுக்கு ஒரு விலங்காக இருக்கிறது.

 

பாஜக மாறுதலாகச் செயல் படுகிறது. தனது நேர்மையான ஆட்சியின் மூலம் சாதாரண மக்களுக்கு அசாத்திய  நன்மைகள் செய்து கொடுத்து, அவர்கள் மனதில் இடம் பிடித்துத் தனது மக்கள் செல்வாக்கைக் கூட்டிக் கொள்கிறது பாஜக. அதன் மூலம் அந்தக் கட்சியின் வலிமையும் அதிகரிக்கிறது. இதைப் பெரிய அளவில் செய்து காட்டியது, நரேந்திர மோடி. இது நடந்தது, பன்னிரண்டரை ஆண்டுகள் (அக். 2001 முதல் மே 2014 வரை) அவர் தொடர்ச்சியாக குஜராத் மாநிலத்தின் முதல் அமைச்சராக இருந்த போது.

 

பின்னர் 2014-ல் இருந்து இன்றுவரை மோடி இந்தியாவின் பிரதமராக இருக்கையில் பாஜக-வின் வலிமை மேலும் கூடி வருகிறது. மோடியின் தனிப்பட்ட மனிதப் பண்புகளும் குணாதிசயமும் பாஜக-வின் வலிமைக்கு முக்கிய காரணங்கள்.

 

நிர்மலா சீதாராமன் பாஜக-வில் சேர்ந்த 6 ஆண்டுகளில் மத்திய மந்திரிசபையில் சேர்க்கப் பட்டார். ஜெய்சங்கர் மத்திய மந்திரிசபையில் வெளிவிவகார அமைச்சரான அடுத்த மாதம்தான்  பாஜக-வில் சேர்ந்தார். அண்ணாமலை கட்சியில் சேர்ந்த பதினோரு மாதங்களில் தமிழக மாநிலத் தலைவர் ஆனார்.

 

திறமைசாலிகள் எங்கிருந்தாலும், அவர்கள் நீண்ட நாள் கட்சியில் உறுப்பினராக இல்லாவிட்டாலும், நாட்டு நலனையும் கட்சி நலனையும் முன்னிட்டு அவர்களை மத்திய மந்திரிகள் ஆக்கியது, மாநிலத் தலைவர் ஆகியது, மோடி. சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் கோலோச்சும் காங்கிரஸ் கட்சியில், அந்தக் கட்சி தலைமை ஏற்கும் ஆட்சியில், இதை எண்ணிப் பார்க்க முடியுமா?

 

நாட்டு நலனை நெஞ்சில் நிறுத்தி, அதற்காகத் தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் வழங்குகிறார் மோடி.  பொதுமக்களைச் சந்திக்கும் போது பெரும் பணிவை வெளிப்படுத்துகிறார். அதோடு, சாதாரண மக்களின் அன்றாட வாழ்வைத் தொடும் பல சவுகரியங்களை ஒவ்வொன்றாக அரசு மூலமாக ஏற்படுத்திக் கொடுக்கிறார்.

 

சாதாரண மக்கள் எளிதில் நேரடியாக உணர முடியாத ஒரு சக்தியும் மோடிக்கு உண்டு: குயுக்தியான எதிர்க் கட்சிகளை வீழ்த்த, அவர்களை விட இரண்டு மடங்கு சாமர்த்தியத்துடன் அரசியல் செய்கிறார். இதில் அமித் ஷா மோடியின் தளபதியாக இருப்பது மோடிக்கு யானை பலம்.

 

மோடியைப் போல் ஒரு உன்னதத் தலைவருடன் பணி செய்வது தங்களின் பாக்கியம் என்று கருதி, அதனால் உற்சாகமும் உத்வேகமும் கூடி, அவரது அமைச்சரவை சகாக்கள் வேலை செய்து சாதனைகள் புரிகிறார்கள்.  அதனாலும் பாஜக பெரும் வலிமை கொள்கிறது. வார்த்தைகளால் எளிதில் முழுவதும் விளக்க முடியாத மோடியின் பெருமை அந்த வலிமையின் மையம்.

 

சரி, கெட்டிக்கார சிதம்பரத்திற்கு பாஜக-வின் வலிமை மட்டும் தான் தெரியும், அதிலுள்ள மோடியின் பெரும் பங்கு தெரியாதா? தெரியும். ஆனால் மோடியின் தனிப்பட்ட பெருமையையும் பொதுவில் எடுத்துச் சொல்லி, ராகுல் காந்தியின் சீற்றத்துக்கு ஆளாகி நஷ்டப் படும் அளவுக்குச் சிதம்பரம் அப்பாவியோ அசடோ அல்லவே!   

 

* * * * *


Author: R. Veera Raghavan, Advocate, Chennai


Friday, 16 May 2025

பஹல்காம்: இந்தியாவைப் பெருமைப் படுத்தும் மோடி

 

          -- ஆர். வி. ஆர்

 

பாகிஸ்தானின் ஆதரவோடு நான்கு பயங்கரவாதிகள்  சென்ற ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமிற்கு வந்து 25 சுற்றுலாப் பயணிகளை – அவர்கள் அனைவரும் ஹிந்துக்கள் என்று ஊர்ஜிதம் செய்த பின்னர் – படுகொலை செய்தனர். சீறி எழுந்தது மோடியின் இந்தியா.

 

தனது ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதிகளில் இந்தியா மின்னல்வேகத் துல்லியத் தாக்குதல்கள் நடத்தியது. அங்கு செயல்பட்ட 9 பயங்கரவாத முகாம்களை அழித்து நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளைக் கொன்றது. சில பாகிஸ்தான்  ஊர்களின் வான்வெளிப் பாதுகாப்புக் கவசங்களை நொறுக்கிவிட்டு, அந்நாட்டின் 11 ராணுவ விமானத் தளங்களின் ஓடுபாதைகளையும் இந்தியா உருக்குலைத்தது.

 

பாகிஸ்தானின் எதிர் ராணுவ நடவடிக்கைகளால் இந்தியாவுக்குச் சில வருந்தத்தக்க உயிரிழப்புகள் ஏற்பட்டன. வேறு பெரிய பாதிப்பில்லை.

 

ஒரு கிரிக்கெட் டெஸ்ட் மேட்ச் காலத்திற்குள், நான்கே நாட்களில் போரைச் சுத்தமாக முடித்து பாகிஸ்தானைப் போர் நிறுத்தம் கேட்க வைத்தது இந்தியா. அந்த நாட்டை முடக்கிய பிரதமர் மோடியின் பேரும் புகழும் இந்தியர்களிடம் இப்போது அதிகரிக்கும். ஏனென்றால் உலகறிய அவர் தலைமையில் கிடைத்த பிரும்மாண்ட வெற்றி அது. பின்னாளில் பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறிச் செயல்பட்டால், இந்தியா ஓங்கித் திருப்பி அடிக்கும் என்பது பாகிஸ்தானின் புதிய உள்ளுணர்வு.

 

முன்னதாக, பஹல்காம் படுகொலைகள் நடந்த இரண்டாவது நாள் பீஹாரில் பேசிய பிரதமர் மோடி, “கொலையாளிகள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தொடரப் படுவார்கள். அவர்களையும் அவர்களின் பின்னால் இருப்பவர்களையும் தேடிப் பிடித்து தண்டிப்போம்” என்று சூளுரைத்தார். கொலையாளிகளை ஏவிய பாகிஸ்தான் கதறக் கதற தண்டிக்கப் பட்டுவிட்டது. கொலை பாதகர்கள் தேடப் படுகிறார்கள்.

 

நமது எதிர்க் கட்சி அரசியல் தலைவர்களின் அணுகுமுறை எப்படி இருந்தது?

 

பிரதமர் மோடி பொருத்தமாகப் பாகிஸ்தானைப் பழி வாங்குவார், அதற்குத் தேவையான தீவிரமும் மன உறுதியும் அவரிடம் உண்டு, தனது பதில் நடவடிக்கைகளை உலக நாடுகள் ஏற்கச் செய்யும் ஆற்றலும் கொண்டவர் மோடி, என்பது இந்தியாவின் எதிர்க் கட்சிகள் அனைத்திற்கும் தெரியும்.

 

மோடியை எதற்கும் எப்போதும் எதிர்க்கும் எதிர்க் கட்சிகள், பஹல்காம் விஷயத்தில் ஆரம்பம் முதலே மத்திய அரசின் நடவடிக்கைகளுக்குத் துணை நிற்பதாக அறிவித்தன. இப்போது மோடியை எதிர்த்துவிட்டுப் பின்னால் நாம் தனிமைப்படக் கூடாது, ஜாக்கிரதையாக இருப்போம், என்ற எண்ணமும் எதிர்க் கட்சிகளுக்கு உண்டு. சில கசக்கும் கற்பனைகள் இந்த உண்மையைப் பளிச்சென்று காட்டும்.


பஹல்காம் படுகொலைகள் நிகழ்ந்த நாளில் மோடிக்குப் பதிலாக, நம் தலைவிதியாக ராகுல் காந்தி பிரதமராக இருக்கிறார், அல்லது இன்னும் திகிலாக மம்தா பானர்ஜிதான் அப்போதைய பிரதமர், அல்லது படு பயங்கரமாக மு. க. ஸ்டாலின் அன்றைய பிரதமர் என்றெல்லாம் நினைத்துப் பாருங்கள். அவர்கள் எவ்விதம் பேசுவார்கள்? மோடி மாதிரி பாகிஸ்தானுக்கு எதிராக தில்லாகக் குரல் எழுப்புவார்களா? அப்படி நடக்காது. 

 

ராகுல் காந்தி இப்படி உளறுவார்: "எனக்கு முந்தைய பத்தாண்டு மோடி அரசு, பட்டியலின மக்கள், பழங்குடி மக்கள், ஓபிசி மக்கள் ஆகியோருக்கு நியாயம் வழங்கவில்லை, அதன் விளவை நாம் பஹல்காமில் பார்த்தோம். இனி பாஜக தனியாகவோ கூட்டணியாகவோ மத்தியில் ஆட்சிக்கு வராது என்று நமது நண்பன் பாகிஸ்தானுக்குத் தெரிவிப்போம். அவர்களுடன் நட்பை வளர்ப்போம்."

 

மம்தா பானர்ஜியின் பிதற்றல் இப்படிப் போகும்: "பாஜக தான் நான்கு நபர்களை பஹல்காமுக்கு அனுப்பி அங்கிருந்த சுற்றுலாப் பயணிகளிடம் அவர்களின் மதம் பற்றிக் கேட்க வைத்துப் பின் கொலைகளை அரங்கேற்றியது. இதற்காகப் பாகிஸ்தான் மீது இந்தியா நடவடிக்கை எடுத்தால், அதன் விளைவாக நம் நாட்டில் கலவரங்களை உண்டாக்கி எனனைப் பிரதமர் பதவியிலிருந்து இறக்கி விடலாம் என்பது தானே பாஜக-வின் கனவு? அது நடக்காது. மக்கள் என் பக்கம்."

 

மு. க. ஸ்டாலினின் குழந்தைப் பேச்சு இப்படி இருக்கலாம்: "மோடி அவர்களே! என் அன்பிற்குரிய சிறுபான்மையினரும் மற்றவர்களும் இந்தியாவில் ஒருவருக்கொருவர் இன்முகத்துடன் சகோதர பாசத்துடன் பழகி வருவது உங்களுக்கு வேப்பங்காயாக இருக்கிறதா? அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காஷ்மீரத்தில் சில நிகழ்வுகள் நடந்தால், நீங்கள் ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்கலாமா? எனது அருமை நண்பர் பாகிஸ்தானின் ராணுவத் தளபதிக்கு நான் சொல்லிக் கொள்கிறேன்: இந்திய மக்கள் நன்மக்கள். நீங்கள் வைத்திருக்கும் காஷ்மீர் பகுதி பகிஸ்தானுக்கே வேண்டும் என்றால், அதை இந்திய மக்கள் அன்பளிப்பாக உங்கள் நாட்டுக்கு வழங்கிட சம்மதிப்பார்கள் என்று நான் இந்த நேரத்தில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்!"

 

எதிர்க் கட்சிகளின் கூட்டணி இப்போது மத்தியில் ஆட்சி செய்தால், பஹல்காம் படுகொலைகளுக்காகப் பாகிஸ்தானைத் தட்டிக் கேட்கும் தைரியம் அவற்றில் ஒரு கட்சிக்கும்  இருக்காது, முழு மனதும் இருக்காது. அந்தப் பயங்கரவாத நாட்டின் மீது வலுவான ராணுவ நடவடிக்கை எடுக்கத் தேவையான நெஞ்சுரமும் தலைமைக் குணங்களும் எதிர்க் கட்சிகளிடம் கிடையாது. ஆனால் மோடி வேறு மாதிரியான பிரதமர் – இது எதிர்க் கட்சிகளே அறிந்தது.

 

பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளுக்குத் தமது ஆதரவை முன்னதாகவே சொல்லி வைத்தால், இப்போதே அவர் பின்னால் நின்றால், சில கைதட்டல்கள் நமக்கும் வந்து சேரும் – அல்லது பரவலான வசவுகளாவது வராது – என்பது பல முக்கிய எதிர்க் கட்சிகளின் எண்ணம். அதன்படி அவர்கள் செயல்பட்டார்கள்.  

 

2020-ம் ஆண்டு சீனா எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் அத்துமீறல் செய்த போது, அப்போது மோடியைத் தொடர்ந்து சீண்டியவர் தானே ராகுல் காந்தி?  சீனாவுக்கு எதிரான நமது அன்றைய ராணுவ நகர்வுகள் மிதமாக, கமுக்கமாக நடைபெற வேண்டி இருந்தன. அப்போது தேச நன்மையை உயர்த்திப் பிடிப்பதும், மத்திய அரசின் பின்னால் நிற்பதும் ராகுல் காந்திக்கு அரசியல் லாபம் தருவதாகத் தோன்றவில்லை. இப்போது மட்டும் அவருக்கு எல்லாவற்றையும் விட தேச நலன் முக்கியம் என்று நாம் கருத முடியுமா?  பிற எதிர்க் கட்சித் தலைவர்களும் அப்படித்தானே?

 

பாகிஸ்தான் ராணுவம் தனது படைபலத்தையும் ஆயுதங்களையும் வைத்து, அந்நாட்டு அரசியல்வாதிகளுக்கு உயிர்ப் பயத்தை உண்டாக்கி, ராணுவம் முன்னதாகத் தேர்ந்தெடுத்தவர்கள் தான் தேர்தலில் ஜெயித்து எம்.பி-க்களாகவும் பிரதமராகவும் வரமுடியும் என்று ஒரு நடைமுறை விதியை ஏற்படுத்தி இருக்கிறது. இது ராணுவ பயங்கரவாதம். அந்த ராணுவம், சீருடை இல்லாத குட்டி பயங்கரவாதிகளைத் தொடர்ந்து தனது நாட்டில் உருவாக்கி வருகிறது. அந்தக் குட்டி பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ராணுவத்திற்குப் பிடிக்காத லோக்கல் அரசியல்வாதிகளின் கதையை முடிக்க உதவுவார்கள், இந்தியாவில் அவ்வப்போது படுகொலைகளும் செய்தார்கள்.

 

நமக்கு இப்படியான, நம் வசமுள்ள காஷ்மீரையும் அபகரிக்க நினைக்கும், ஒரு அண்டை நாடு. இதைத் தவிர, சிறுபான்மை மக்களிடம் தாஜா அரசியல்  செய்து, முறைகேடுகளில் மூழ்கி, தேச நலனையும் பாதுகாக்காத, எதிர்க் கட்சிகள் நிரம்பியதுதான் நமது நாடு. இவர்களுக்கு இடையில் மோடி பைத்தியம் பிடிக்காமல் தேர்தலில் போட்டியிடுகிறார், பிரதமர் ஆகிறார், இந்தியாவையும் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் பெருமைப் படுத்துகிறார். எப்படி அவரால் முடிகிறது?

 

பல இந்தியர்கள் தமது நலன் அறியாத அப்பாவிகளாக இருந்தாலும், பல சமயங்களில் சரியான வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போடத் தெரியாமல் இருந்தாலும், அவர்களின் பூர்வ ஜென்ம பலன் மோடி காலத்தில் வேலை செய்கிறதோ? வேறு எப்படி நினைத்தாலும் நமது ஜனநாயகம் இடிக்கிறதே!

 

* * * * *


Author: R. Veera Raghavan, Advocate, Chennai