Saturday, 17 January 2026

கேள்வி-பதில் (17.01.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: முந்தைய ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் பெருமைப்படுத்தும் புதிய திரைப்படம், பராசக்தி. முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து, திமுக தரப்பு ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோகம் செய்திருக்கும் படம். தமிழகத்தில் அதற்கு ஏன் பெரிதாக வரவேற்பில்லை?

 

பதில்: இன்றையத் தமிழ்நாடு, ஹிந்தி எதிர்ப்பை உள்ளூர எதிர்க்கிறது. அன்றைய ஹிந்தி எதிர்ப்பைப் பெருமையாகக் காண்பித்து, இன்றையத் தமிழ் மக்களுக்கும் ஹிந்தி எதிர்ப்பைப் புகட்ட முனையும் படம் பராசக்தி. படத்தின் இந்த அம்சம் முன்கூட்டியே பரப்பப்பட்டு, அது அனைவராலும் உணரப்பட்டது.  அதனால் பெருவாரியான மக்களுக்கும் பராசக்தி முன்கூட்டியே ரசிக்காமல் போய்விட்டது என்று நினைக்கிறேன்.

 

 

2. கேள்வி: ஹிந்துக்கள் சூரியனை வழிபடும் விழா, பொங்கல் திருவிழா. அதற்குச் 'சமத்துவப் பொங்கல்' என்று பெயரிட்டு, பொங்கல் சமைத்து உண்ணும் விழாவாக மட்டும் அதைத் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னின்று நடத்தி இருக்கிறார். ஹிந்துக்கள் தொடர்பான வேறு எந்த தினத்தைத் திமுக சமத்துவப் படுத்தலாம்?

 

பதில்: ஹிந்து உணர்வுகளை உதாசீனப்படுத்தி, திமுக எந்த அக்கிரமத்தையும், எந்த அசட்டுத்தனத்தையும், கோணல் சிந்தனையுடன் செய்யும். ஆகையால் இப்போதய திராவிட மாடல் அரசு, சந்திரன் தொடர்பான அமாவாசை தினத்தை "சந்திரன் மறையும் அமாவாசை அனைவருக்கும் பொதுவானது. இனி தமிழகத்தில் அந்த தினம் சமத்துவ அமாவாசை என அழைக்கப்படும்" என்று அறிவித்து, அரிசி கார்டு வைத்திருக்கும் எல்லா ரேஷன் கார்டுதாரர்களுக்கும் அமாவாசைக்கு அமாவாசை இருநூற்றி ஐம்பது ரூபாயை 'அமாவாசை அன்பளிப்பாக' தமிழக அரசு வழங்கும் என்று அறிவித்தால் ஆச்சரியம் இல்லை. சட்டமன்றத் தேர்தலும் வரப் போகிறது.

 

 

3. கேள்வி: வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மச்சாதோ, அமைதிக்காகத் தனக்குக் கிடைத்த 2025 நோபல் பரிசுப் பதக்கத்தை அமெரிக்க அதிபர் டிரம்பிடம் கொடுக்க, அதைப் பெற்றுக்கொண்ட டிரம்ப் "நான் ஆற்றிய பணிக்காக மச்சாதோ அந்தப் பதக்கத்தை என்னிடம் கொடுத்தார்" என்று சொல்லி மச்சாதோவைப் பாராட்டி இருக்கிறாரே?

 

பதில்:  அமைதிக்கான அந்த நோபல் பரிசு அறிவிக்கப்படும் முன், அது தனக்கு வழங்கப்பட வேண்டும் என்று குதித்தவர் டிரம்ப். தான் பெற்ற நோபல் பதக்கத்தை இப்போது பித்துக்குளி டிரம்பிடம் மச்சாதோ கொடுத்திருப்பது ஒரு மதியூகமாக இருக்கும். இனி அந்தப் பதக்கத்திற்காக டிரம்ப்பின் ராணுவம் தன்னைக் கைது செய்து நாடுகடத்தி வழக்குப் போட்டுத் தன்னைத் துன்புறுத்தாது என்ற நிம்மதி மச்சாதோவுக்கு   வந்திருக்குமே!

 

 

4. கேள்வி: மஹாராஷ்டிராவில் மொத்தம் 29 மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில், 25ஐ பாஜக கூட்டணி கைப்பற்றும் நிலையைத் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. யாரால், அல்லது எதனால், பாஜக கூட்டணிக்கு இந்த அபார வெற்றி கிடைத்திருக்கிறது?

 

பதில்: மோடியினால், அவர் ஈர்த்த சிறந்த மனிதர்களால்.

 

தூய சிந்தனை கொண்ட பேராற்றல் மிக்க தலைவர், பிரதமர் மோடி. அவர் நாட்டின் பல பகுதிகளில் ஆற்றலும்  அர்பணிப்பும் கொண்ட பிரதேசத் தலைவர்களை ஈர்த்து, தனது உதாரணத்தால் அவர்களுக்கு உத்வேகம் அளித்து, அந்த அந்தப் பிரதேசங்களில் அவர்களின் வளர்ச்சிக்கும் தேர்தல் வெற்றிகளுக்கும் மறைமுக வித்தாக இருக்கிறார். சில பிரதேசங்களில் இந்த நிகழ்வு ஏற்பட நாள் பிடிக்கும்.

 

 

5. கேள்வி: "காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்" என்பது பழமொழி. காற்று இருக்கும்போது மட்டும்தான் தூற்ற வேண்டுமா?

 

பதில்: கட்சி மாறினாலும் தூற்றலாம். வெளியேறிய, அல்லது வெளியே அனுப்பிய, கட்சியின்  தலைவரைத் தூற்றினால், புதிதாகச் சேர்ந்த கட்சியின் தலைவர் மகிழ்வார்.

 

பகுதி 39 // 17.01.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 


Friday, 16 January 2026

'சோ'வுடன் ஐந்து நிமிடங்கள்

 

-- ஆர். வி. ஆர்

 

எழுத்தாளர் பாலகுமாரன் ஒரு சமயம் பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேயிடம் ஒரு கட்டுரை எழுதித்தரக் கேட்டார். பாலகுமாரனே தன்னிடம் கேட்டது, தனக்கு எவ்வளவு உத்வேகம் தந்தது என்று பாண்டே ஒரு மேடையில் சொல்கிறார். அதுபோல் எனக்கும் ஒரு உத்வேகம் அளித்தவர், 'துக்ளக்' ஆசிரியர் சோ. அது நிகழ்ந்தது 1988 வாக்கில் - அப்போது துக்ளக், மாதம் இருமுறை.

 

அன்றைய ரங்கராஜ் பாண்டே அளவு கூட நான் அறியப்படாத நாளில், நான் எழுதிய சில அரசியல் கட்டுரைகளைத் துக்ளக்கிற்காக அந்தப் பத்திரிகையின் அலுவலகத்தில் கொடுத்திருந்தேன். அவற்றைப் படித்த சோ, அடுத்த முறை இன்னொரு கட்டுரையுடன் நான் துக்ளக் அலுவலகம் சென்றபோது என்னை மேலே வரச் சொன்னார். எதற்கு என்ற ஆவலுடன் படியேறி அவர் அறைக்குச் சென்ற என்னிடம், என் கட்டுரைகள் நன்றாக இருக்கின்றன, ஆனால் துக்ளக்கில் பக்கங்கள் இல்லை என்று அவர் சொன்னார். என் எழுத்தைப் பற்றிய நல்வார்த்தையை அவரிடம் நேர்முகமாகக் கேட்டபோது, உற்சாகத்தில் சடாரென்று என் நாற்காலியில் நான் காற்றாகிப் போனேன். அப்போது சோ இன்னும் ஒருபடி மேலே போய், "So please excuse me" என்றும் சொல்லி என்னை உருக்கி என் எழுத்தின் மீது எனக்கிருந்த நம்பிக்கையைக் காலத்திற்கும்  கெட்டிப் படுத்தினார்.

 

எனது ஒரு கட்டுரையைச் சோ துக்ளக்கில் பிரசுரித்துவிட்டு, என்னைக் கூப்பிட்டுப் பேச அவசியம் இல்லை என்று நினைத்திருந்தால் ('அதான் ஒரு கட்டுரை போட்டாயிற்றே! எல்லாக் கட்டுரைகளையும் போட முடியுமா?') எனக்கு அவரிடமிருந்து ஒரு வாழ்நாள் டானிக் கிடைத்திருக்காது. அது மட்டுமல்ல. ஒரு எழுத்தாளனின் பெருந்தன்மையையும் அன்று எனக்கு தரிசனம் செய்துவைத்தார் சோ.

15.01.2026

Thursday, 15 January 2026

கேள்வி-பதில் (13.01.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "திமுக-வின் வஜ்ராயுதம், உதயநிதி" என்று அவரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே அக்கட்சியின் மூத்த தலைவர் துரைமுருகன் பேசியிருக்கிறாரே?

 

பதில்: இந்திரனின் ஆயுதமான வஜ்ராயுதம் சக்திமிக்க எதிரிகளையும் அழிக்க வல்லது. உதயநிதி டைப் வஜ்ராயுதம் வேறு. மாற்றுக் கட்சி எதிரிகளைப் பெரிதாக எதுவும் செய்யாது. சொந்தக் கட்சி திமுக-வின் சீனியர் தலைவர்களையும் உதயநிதியின் காலடியில் கிடத்தி அவரை வணங்கிப் புகழச் செய்யும்.

 

 

2. கேள்வி: ஜல்லிக்கட்டு வீர விளையாட்டா?

 

பதில்: ஒரு ஆட்டத்தில் பங்கு பெறும் இரு தரப்பினரும், பங்கேற்கும் அனைவரும், ஆர்வத்தோடு பங்கு கொண்டால் அது விளையாட்டு. நீங்கள் ஒரு நாயுடன் ஓடியாடினால் அதில் இருவருக்கும் ஆர்வம் இருக்கும், அது இருவருக்கும் விளையாட்டு. ஜல்லிக்கட்டு அப்படியல்ல.

 

ஜல்லிக்கட்டு காளைமாட்டை மற்ற நேரத்தில் பாருங்கள். அதன் உடல் உயர்ந்து வலுவாகத் தெரியும். அதன் கண்களில் சாந்தம் இருக்கும், திமிர் இருக்காது. தனது உடல் வலிமையை அது மனிதர்களிடம் காட்ட விரும்பாது.

 

ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்படும் காளைமாடுகள், மிரட்சியுடன் மனிதர்களிடமிருந்து தப்பி ஓடுகின்றன. அதற்குத் தடையாக மாடுபிடி வீரர்கள் குறுக்கே வந்தால் அவர்களை முட்டி விலக்கித் தப்பி ஓட முயல்கின்றன. ஜல்லிக்கட்டில் வீரம் இல்லை. விளையாட்டு இல்லை. மற்றது உண்டு.

 

 

3. கேள்வி: அயலகத் தமிழர் தின விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்று திராவிட இயக்கம் தமிழ் மண்ணில் விதைத்தது" என்று பேசி இருக்கிறாரே?

 

பதில்: திராவிட மேடைகளிலிருந்து மக்களிடம் சொல்லப்படும் வெற்று அலங்கார வார்த்தைகள் அவை.

 

தமிழகத்தில் திமுக ஆட்சிகளின் லட்சணம் நாம் அறிந்தது. அதன் பரவலான தாக்கத்தில் மக்களிடம் சாதாரணத் தமிழ் தடுமாறுவதும் நம் செவிகள் அறிந்தது. ஆக, திமுக ஆட்சியாளர்கள் தங்களைப் பற்றி, தமிழ் வளர்ச்சிக்குத் தாங்கள் செய்தது பற்றி, ரகசியமாக இப்படிச் சொல்லிக் கொள்ளலாம்: 'தாழ்வது நாமாக இருந்து தவழ்வது தமிழாக இருக்கட்டும்.'

 

 

4. கேள்வி: "தற்போது இன்ஜினியர்கள், டாக்டர்கள், ஆராய்ச்சியாளர்கள் என வெளிநாடுகளில் தமிழர்கள் குடும்பத்தோடு வசிக்கின்றனர். இதுதான் திமுக அரசின் சாதனை" என்று துணை முதல்வர் உதயநிதி பேசி இருக்கிறாரே?

 

பதில்: ஒருவேளை, 'தமிழ்நாட்டு இன்ஜினியர்கள், டாக்டர்கள், ஆராய்ச்சியாளர்கள் போன்ற நன்கு படித்த சமூகம் பெரும்பாலும் திமுக-வுக்கு ஓட்டளிக்க மாட்டார்கள், அவர்கள் தமிழ்நாட்டில் ஓட்டுப்போட முடியாமல் குடும்பத்துடன் வெளிநாடுகளில் இருக்கட்டும்' என்ற நினைப்பை உதயநிதி இப்படிச் சொல்கிறாரோ? என்ன இருந்தாலும் அசட்டுப் பேச்சு.  

 

 

5. கேள்வி: சிரிப்பதற்கு ஒன்று சொல்ல முடியுமா?

 

பதில்: ஒன்று


பகுதி 38 // 13.01.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

கேள்வி-பதில் (11.01.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: சீமான், விஜய், எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், அண்ணாமலை - இந்த ஐவர் இன்று மேடையில் நின்று அரசியல் பேசுவதற்கு உறுதுணையாக இருப்பது என்ன?

 

பதில்: சீமான், தொண்டைத் தண்ணி; விஜய், நடிப்புப் பயிற்சி; ஸ்டாலின், மக்கள் மறதி; எடப்பாடி பழனிசாமி, சசிகலாவின் சிறைவாசம்; அண்ணாமலை, அறச் சீற்றம்.

 

 

2. கேள்வி: "உங்க கனவை சொல்லுங்க" என்று தமிழக அரசு சார்பில் பொதுமக்களிடம் கேட்கப்படுகிறது. உங்களிடம் கேட்டால் என்ன சொல்வீர்கள்?

 

பதில்: உணவு, உடை மற்றும் இருப்பிடம் என் வருமானத்தில் கிடைப்பதற்கான வேலை வாய்ப்பு; அதோடு தரமான சாலைகள், பஸ் வசதி, சுத்தமான குடிநீர், சிறந்த அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு மருத்துவ சேவைகள் - இவை அனைத்தும் மக்களுக்குக் கிடைக்கும் வகையில், வீடு வீடாகச் சென்று சர்வே எடுக்காமல், தன் பொறுப்பை உணர்ந்து வேலை செய்யும் மாநில அரசு என் கனவு.

 

 

3. கேள்வி: தவெக தலைவர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம், சென்ஸார் போர்டு சான்றிதழ் தொடர்பான சிக்கலால் திரைக்கு வருவது தாமதமாகிறது. அதனால் முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசைக் கண்டித்து - அதனால் விஜய் படத்துக்கு ஆதரவாக - குரல் கொடுத்திருக்கிறாரே?

 

பதில்: ஒன்று: திமுக-வில் விஜய்க்கு ரசிகர்கள் இருப்பார்கள், ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ரசிகர்கள் இருக்க மாட்டார்கள்.

 

இரண்டு: திமுக-விற்கு, தவெக மற்றும் பாஜக இரண்டும் எதிரிகள். ஆனால் தவெக போல் அல்லாமல், பாஜக பழம் தின்று கொட்டை போட்ட கட்சி, நிலையான கட்சி, லாலு பிரசாத் மற்றும் உத்தவ் தாக்கரே கட்சிகளை அடக்கியது போல் பாஜக திமுக-வின் பலத்தைக் குறைக்க அரசியல் நகர்வுகள் செய்ய வல்லது.

 

மூன்று: ஜனநாயகன் விஷயத்தில் பாஜக-வைத் திமுக ஒரு இடி இடித்தால், திமுக-வில் இருக்கும் பல விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுஜன விஜய் ஆதரவாளர்கள் பலர், விஜய்க்காகக் குரல் கொடுத்த திமுக-விற்கு ஓட்டுப் போடலாம் என்பது ஸ்டாலினின் நப்பாசை - அரசியலில் இது இயல்பு.

 

 

4. கேள்வி: "எனக்கு நிதி நிலைமை பற்றித் தெரியவில்லை. ஆனால், நான் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தால் மகளிர் உரிமைத் தொகையாக, மாதம் ஆயிரத்துக்குப் பதிலாக 2,000 ரூபாய் நிச்சயமாகக் கொடுப்பேன்" என்று காங்கிரஸ் கட்சி எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியிருக்கிறாரே?

 

பதில்: அரசின் நிதி நிலைமை பற்றித் தெரியாவிட்டாலும் அவர் முதல்வராக இருந்தால் மகளிருக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் உரிமைத் தொகையாக வழங்குவாரா? கார்த்தியின் உரிமைப் பிதற்றல்.

 

 

5. கேள்வி: ஆண்களிடம் பெண்கள் நல்ல பெயர் எடுப்பது கடினமா, பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் எடுப்பது கடினமா?

 

பதில்: இரண்டையும் விட, ஆண்கள் ஆண்களிடம் நல்ல பெயர் எடுப்பதும், பெண்கள் பெண்களிடம் நல்ல பெயர் எடுப்பதும் கடினம். பாம்பின் கால் பாம்பறியும்.


பகுதி 37 // 11.01.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 


கேள்வி-பதில் (09.01.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "என்னை எதிர்ப்பவர்கள் எல்லோரும் என் எதிரிகள் அல்ல. நான் யாரை எதிர்க்கிறேனோ அவர்தான் என் எதிரி. அந்த வகையில் தம்பி விஜய் என் எதிரி அல்ல" என்று தவெக குறித்து சீமான் பேசியிருக்கிறாரே?

 

பதில்: இது ஜோராகக் காதில் ஒலிக்கிறது. ஆனால் வெத்துப் பேச்சு. 2026 தேர்தலின் போது, ஒரே தொகுதியில் நாம் தமிழர் கட்சி மற்றும் தவெக வேட்பாளர்கள் போட்டியிட்டால், அங்கு பிரசாரம் செய்யும் நா.த.க வேட்பாளரோ, சீமானோ தவெக-வை எதிர்த்து, விஜய்யை எதிர்த்து, மூச்சே விடமாட்டார்களா?

 

 

2. கேள்வி: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற அப்பீல் கோர்ட் உத்தரவு பிறப்பித்த உடன், "முதலில் சட்டத்தை மீறி நீதி மன்றத்தை அவமானப்படுத்தியது போலீஸ் கமிஷனரும் கலெக்டரும்தான். குறைந்த பட்சம் இருவரும் மன்னிப்பாவது கேட்கவேண்டும்" என்று பாஜக-வின் எச். ராஜா சொல்லி இருக்கிறாரே?

 

பதில்: தமிழக அரசின் பல உயர் அதிகாரிகளை பொம்மலாட்ட பொம்மைகளாக ஆட்டுவிக்கிறது குரூர திராவிட மாடல் அரசு. அதற்கு ஏற்ப, அந்த அதிகாரிகள் தனி நீதிபதியின் முந்தைய உத்தரவை மதிக்காமல், தீபத் தூணில் தீபம் ஏற்றத் தடை செய்தனர்.

 

பொம்மைகள் தானாக மன்னிப்புக் கேட்பதை பொம்மலாட்டக்காரன் எப்படி அனுமதிப்பான்? கோர்ட் அவமதிப்பு வழக்கை சந்திக்கையில், தங்கள் பொம்மை உத்தியோகம் நிலைக்க அந்த பொம்மைகள் மன்னிப்புக் கேட்டால்தான் உண்டு. அப்போது பொம்மைகள் மீது நீதிபதி கருணை காட்டுவாரா என்று இப்போது தெரியாது.

 

 

3. கேள்வி: "ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று மதிமுக சார்பில் தப்பித் தவறி ஒரு சொல் கூடப் பேசியது கிடையாது. நேற்று வரையிலும் இந்தக் கோரிக்கையை வைக்கவில்லை; இனியும் வைக்க மாட்டோம்" என்று திமுக-விடம் தனது கட்சியின் எதிர்பார்ப்பு குறித்து வைகோ பேசி இருக்கிறாரே?

 

பதில்: பாஜக தலைவர் அமித் ஷா, 'தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்போம்' என்று சொல்கிறார். அந்தக் கூட்டணிக்குத் தமிழகத்தில் தலைமை தாங்கும் அதிமுக-வின் எடப்பாடி பழனிசாமி, 'தமிழகத்தில் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும்' என்று கூறுகிறார். அதாவது, பாஜக-வை ஆட்சியில் சேர்க்கமாட்டோம் என்கிறார் எடப்பாடி. அந்த மனிதரை 'பாஜக-வின் அடிமை' என்று சொல்லி வருகிறார் ஸ்டாலின்.

 

வைகோ இப்போது பேசியதைப் பார்த்தால், ஸ்டாலின் அகங்காரத்துடன் வழங்கும் அடிமைப் பட்டத்திற்குத் தகுதியானவர் எடப்பாடி பழனிசாமி அல்ல, அது மற்றொருவர்.

 

 

4. கேள்வி: "சுடுகாடு இருக்கும் இடத்தில்தான் பிணத்தை எரிப்பார்கள். வேறு எந்த இடத்திலும் பிணத்தை எரிக்க மாட்டார்கள். அதுபோல், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் இடத்தில்தான் தீபம் ஏற்ற வேண்டும். புதிய இடமான தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை அனுமதிக்க முடியாது" என்று அமைச்சர் ரகுபதி பேசி இருக்கிறாரே?

 

பதில்: ஒரு மதிப்பான இடத்தில் தகுதியான மனிதர் இருந்தால்தான் அவரது பேச்சும் செயலும் அவர் இடத்திற்குப் பொருத்தமாக இருக்கும். சுடுகாட்டு வெட்டியானை சங்கீத வித்வான் மேடையில் அமர்த்தினால் அபஸ்வரம் அதிகமாகக் கேட்கும்.

 


5. கேள்வி: நாயின் குழந்தை நாய்க் குட்டி, பூனையின் குழந்தை பூனைக் குட்டி, ஆட்டின் குழந்தை ஆட்டுக் குட்டி. ஆனால் மாட்டின் குழந்தை மாட்டுக் குட்டி இல்லை, கன்றுக் குட்டி. ஏன் இந்த வேறுபாடு?

 

பதில்: இதை ஆராய வேண்டாம். இது பெரிய விஷயமில்லை. குட்டி விஷயம்!


பகுதி 36 // 09.01.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr