Friday, 18 April 2025

அதிமுக-பாஜக கூட்டணி 2026 வரை நிலைக்குமா? பாஜக அவசரப்பட்டு விட்டதா?

 

-- ஆர். வி. ஆர்

 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, போன வாரம் சென்னை வந்து அதிமுக  தலைவர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசினார். முடிவில், 2026 தமிழக சட்டசபைத் தேர்தலுக்காக அதிமுக-பாஜக கட்சிகளிடையே கூட்டணி அமைந்தது என்று அறிவித்தார். அப்போது பழனிசாமியும் அருகில் அமர்ந்திருந்தார்.

 

பழனிசாமியின் ஒரு சமீபத்திய பேச்சால் அதிமுக-பாஜக கூட்டணியில், குறிப்பாக பாஜக பக்கம், அதிர்வலைகள் தென்படுகின்றன. இப்போது பல பாஜக ஆதரவாளர்கள் மனதில் எழக்கூடிய கேள்விகள் இவை. 2026 தேர்தல் வரை இந்தக் கூட்டணி நிலைக்குமா? அதிமுக-வை நம்பி பாஜக கூட்டணி அமைத்தது சரிதானா? பாஜக அவசரப்பட்டு விட்டதா?

 

இதற்கான விடைகளை நாம் பல கோணங்களில் தேட வேண்டும்.

 

அதிமுக-வோ பாஜக-வோ 2026 தேர்தலில் திமுக கூட்டணியை வெல்ல முயற்சிக்க, அவைகளுக்கு ஒரு வலுவான கூட்டணி அவசியம். ஆகையால் அவை திமுக-வை எதிர்க்கப் போகும் ஒரு கூட்டணியைத் தங்களுக்குள் அமைத்திருக்கின்றன. இந்தக் கூட்டணியில் இன்னும் சில கட்சிகளைச் சேர்க்க வேண்டும்.  

 

பழனிசாமியின் தற்போதைய அறிவிப்பு, செய்தியாளர்களிடையே அவர் பேசியபோது வெளிவந்தது. அவர் சொன்னது: ‘அதிமுக-பாஜக கட்சிகள் 2026 தமிழக சட்டசபைத் தேர்தலில் கூட்டணியாக வெற்றி பெற்றால்,  புதிய மாநில அரசில் பாஜக பங்கு பெறாது, அதிமுக மட்டும் தனித்து ஆட்சி அமைக்கும்’. அமித் ஷாவும் அப்படிப் புரிந்து கூட்டணியை அறிவித்தார் என்றும் பேசியிருக்கிறார் பழனிசாமி. ஆனால் பத்திரிகைச் செய்திகள் அந்த ரீதியில் இல்லை.

 

பழனிசாமியின் அறிவிப்பை பாஜக ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருக்க முடியாது. இது பற்றிய கேள்விக்குப் பதில் சொன்ன பாஜக-வின் புதிய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “மாநில ஆட்சியில் அதிமுக-வோடு பாஜக-வும் பங்கு கொள்வது பற்றி அமித் ஷாவும் அண்ணன் எடப்பாடி பழனிசாமியும் உரிய நேரத்தில் கலந்து பேசி முடிவெடுப்பார்கள்” என்று பழனிசாமியின் கருத்தை ஏற்காமலும் மறுக்காமலும் நாசூக்காகப் பேசினார். 

 

அதிமுக தலைவர் பழனிசாமி, அவரது கட்சியினரால்  போற்றப் படுபவரல்ல. தனிப்பட்ட மக்கள் செல்வாக்கு உடையவர் அல்ல. தலைமைப் பண்புகள் கொண்டவரும் அல்ல. அதிமுக-வுக்காக எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பிரபலப் படுத்திய இரட்டை இலை சின்னத்தைக் கொண்ட அந்தக் கட்சிக்கு, சந்தர்ப்ப வசத்தால் தலைவராகி இருப்பவர்.   

 

பாஜக என்ற கட்சியோ, அதன் தமிழகப் பிரிவோ, அதிமுக மாதிரியான கட்சி அல்ல. தமிழக பாஜக-வின் தலைவர்கள், பாட்டன் சொத்தில் சுகிக்கும் வம்சா வழிகள் அல்ல. அவர்கள் அனைவரும் தேசாபிமானத்துடன் துடிப்பாகச் செயல்பட்டுத் தமிழகத்தில் நேர்மையான ஆட்சியும்  திறமையான நிர்வாகமும் நிலவவேண்டும் என்று விரும்புகிறவர்கள்.

 

இத்தகைய தமிழக பாஜக, அதிமுக-வோடு கூட்டணி அமைத்து என்ன செய்யவேண்டும் என்று பழனிசாமி நினைக்கிறார்? அதிமுக-வை ஆட்சியில் அமர்த்திப் பழனிசாமி முதலமைச்சராகத் தேவையான சில எம்.எல்.ஏ-க்களைக் கூட்டணிக்கு நிரந்தரக் காணிக்கையாக்கி பாஜக ஓரமாக அமர்ந்திருக்க வேண்டுமா?  

 

அண்ணாமலை பாஜக-வின் மாநிலத் தலைவராகத் தொடராமல் இருப்பதற்கு பழனிசாமியின்  விருப்பமும் ஒரு காரணமாக இருக்கும் என்ற சந்தேகம் பாஜக அதரவாளர்களிடையே உண்டு – அமித் ஷா இதை லாவகமாகக் கையாளக்கிறார் என்பது வேறு விஷயம். இதுபோக, அதிமுக-பாஜக கூட்டணி 2026 சட்டசபைத் தேர்தலில் வென்றாலும், மாநில ஆட்சியில் பாஜக பங்கு கொள்ளாமல் வைக்கப் படும் என்றால், அது அண்ணாமலை அபிமானிகளுக்கு இரட்டை இடியாக வரும், அதை பாஜக ஏற்பதும் எளிதல்ல. இதைப் பழனிசாமி உணரவில்லையா? 


அதிமுக மட்டும் தனியாக மாநில ஆட்சியில் அமர்ந்து, யாரும் பார்க்காமல் என்ன செய்ய விரும்புகிறது? புரிகிறது, புரியாமலும் இருக்கிறது.

 

இன்னொன்று.  2026 தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்றாலும் அதிமுக-வுக்குத் தனி மெஜாரிட்டி இல்லை, பாஜக எம்.எல்.ஏ-க்களும் ஆதரவு கொடுத்தால் தான் ஆட்சிக்கு மெஜாரிட்டி உண்டு என்றானால், அப்போதும் பாஜக-வை ஆட்சியில் சேர்க்க விரும்பாதா அதிமுக? இல்லை, பாஜக-வுக்கு அந்த அளவு எம்.எல்.ஏ-க்கள் எப்படியும் கிடைக்க முடியாத படி அந்தக் கட்சிக்கு மிகக் குறைந்த தொகுதிகளை ஒதுக்க அதிமுக எண்ணுகிறதா? பழனிசாமியின் அறிவிப்புக்குப் பின்னால் தெளிவான முதிர்ச்சியான சிந்தனை இல்லை.  

 

இதுதான் இப்போதைய நிலை. ஆனால் என்ன இருந்தாலும், பாஜக ஆதரவாளர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.  தங்களுக்குள் அவர்கள் அதிமுக-வைப் பற்றியும், அதன் பேராசைகள் மற்றும் தந்திரங்கள் பற்றியும் வெளிப்படையாகப் பேசலாம்.  அவை அனைத்தும் பாஜக தலைவர்கள் நொடியில் அறிந்தது  தான். ஆனால் மோடி, அமித் ஷா போன்ற தலைவர்கள் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசக் கூடாது, பேசவும் மாட்டார்கள்.

 

மோடியும் அமித் ஷாவும் தாங்கள் கொண்ட உயர்ந்த இலக்கு, ஆகவேண்டிய காரியம், அதில் தான் குறியாக இருப்பார்கள்.  அவர்கள் வெளியில் பேசுவது தேவையான அளவு மட்டும்தான் இருக்கும். ஆகையால் பாஜக ஆதரவாளர்கள் அவர்களின் மதியூகத்தைக் குறைத்து மதிப்பிட வேண்டாம்.

 

எப்படியான மனிதர்களை சமாளித்தவர்கள், வென்றவர்கள், மோடியும் அமித் ஷாவும்? காங்கிரஸ் கட்சியின் சோனியா குடும்பம், ஷரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி, நிதிஷ் குமார், பரூக் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி, சந்திரபாபு நாயுடு மற்றும் கேஜ்ரிவால். மோடிக்கும் அமித் ஷாவுக்கும் பழனிசாமியை அரசியல் ரீதியாக எங்கு விட்டு எங்கு பிடிக்கவேண்டும் என்று பல கணக்குகள் இருக்கும்.  

 

திமுக-வை ஆட்சியிலிருந்து இறக்க வேண்டும் என்பது பாஜக-வின் பிரதான இலக்கு. இதற்காக, முதலில் அதிமுக-வுடன் கூட்டணியைப் பேசி முடித்துவிட்டு பாஜக காத்திருக்கும்.  பின்னர் நாள் ஆக ஆகப் பழனிசாமி கூட்டணிக்கு ஒவ்வாத பேச்சுக்களைப் பேசி முரண்டு பிடித்தால் – யார் கண்டது, நடிகர் விஜய்யிடமிருந்து பழனிசாமிக்கு எப்போது என்ன ஒப்புதல் வருகிறதோ! – அதிமுக  கூட்டணியிலிருந்து வேறு வழி இல்லாமல் பாஜக அப்போது விலகலாம். ஆனால் பாஜக இப்போது அதிமுக-விடமிருந்து விலகி நின்று, தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் அதிமுக-வுடன் கூட்டணி பற்றிப் பேச ஆரம்பிக்க முடியாது. ஆகையால் அதிமுக-வுடன் முதலில் கூட்டணியை அமைத்து வைப்பது பாஜக-வுக்கு அவசியம் நன்றாகப் போனால் அதைத் தொடரலாம். 

 

இது போக, தேர்தலுக்கு முன்போ பின்போ அதிமுக-வில் அதிருப்தி கொண்ட அக் அக்கட்சியின் தலைவர்கள் அதிமுக-வைப் பிளக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நேரம் பழனிசாமியும் பாஜக-விடம் முரண்டு பிடித்து முறைத்துக் கொண்டிருந்தால், அதிமுக-வில் ஏற்படும் பிளவும் பாஜக-விற்கு அனுகூலம் என்றால், அப்போது பாஜக அந்தத் திசையிலும் பார்க்கலாம். இது போன்ற மாற்று வாய்ப்புகள் பாஜக பக்கத்திலிருந்து அதிமுக-வுக்குக் கிடைக்காது.

 

அதிமுக-வுடனான தேர்தல் கூட்டணியைப் பாஜக தொடர்ந்து நிர்வகிப்பது ஒரு செஸ் ஆட்டம் மாதிரி. நாம் வியக்கும் பாஜக செஸ் வீரர் அந்த விளையாட்டில் கில்லி என்றால், அவர் மீது நம்பிக்கை வைத்து நாம் அவரது ஆட்டத்தைக் கடைசி வரை அமைதியாகப் பார்க்க வேண்டும்.

 

நாம் போற்றும் செஸ் வீரர் இந்த ஆட்டத்தின் முடிவில் பெரிய வெற்றி பெறுகிறாரோ இல்லையோ, அவரிடம் சாம்பியனுக்கான ஆட்டத் திறமையும் துடிப்பும் யுக்தியும் இருக்கிறது. இன்றோ நாளையோ, ஒருநாள் அவர் எப்படியும் அபாரமாக வென்று வருவார். அவருக்குக் கை தட்டுவோம்!

 

* * * * *
Author: R. Veera Raghavan, Advocate, Chennai

 

Wednesday, 16 April 2025

மு. க. ஸ்டாலினுக்கு மாநில சுயாட்சி ஜுரம்

 

-- ஆர். வி. ஆர்

 

முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு மீண்டும் மாநில சுயாட்சி ஜுரம் பிடித்திருக்கிறது. திமுக தலைவர்களின் உள்ளே இருக்கும் வேறு கோளாறின் அறிகுறியாக அவர்களுக்கு அவ்வப்போது மாநில சுயாட்சி ஜுரம் வரும்.

 

மாநில சுயாட்சியின் முக்கியத்துவம் பற்றி சட்டசபையில் இப்போது மு. க ஸ்டாலின் பேசி இருக்கிறார். மாநிலங்கள் அனைத்து அதிகாரங்களையும் கொண்டவையாக இருந்தால்தான் அவை வளர்ச்சி அடையும்” என்பதும் அவர் வார்த்தைகள். இது தொடர்பாக அரசமைப்பு சட்டத்தின் விதிகளை ஆராய்ந்து மறு மதிப்பீடு செய்து அறிக்கை தர, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் ஒரு குழுவைத் தமிழக அரசு அமைத்திருக்கிறது என்றார் ஸ்டாலின். 

 

சுயாட்சி என்றால் என்ன அர்த்தம்? 'நம்மை, நமது பிரதேசத்தை, நாமே ஆள்வது' என்பது அதன் நேரடி அர்த்தம். ‘மத்திய அரசின் தலையீடு இல்லாமல், தமிழ் நாடே அனைத்து விஷயங்களிலும் தன்னை ஆள வேண்டும் – ஒரு தனி நாடு மாதிரி' என்ற அர்த்தம் ‘மாநில சுயாட்சி’ என்ற வார்த்தையில் தெரிகிறது. தேவையானால் “ஆமாம், அதுதான் அர்த்தம்” என்று ஓங்கிப் பேசவும், வழக்கு வந்தால் “அதற்கு அர்த்தம் அதுவல்ல. தமிழர்களுக்கு சட்ட ரீதியாக அதிக அதிகாரம் பெறும் மந்திரச் சொல் அது” என்றும் நழுவிக் கொள்ளலாம்.

 

‘சில குறிப்பிட்ட அதிகாரங்கள் இப்போது  மத்திய அரசிடம் இருக்கின்றன. அவற்றை மத்திய அரசிடமிருந்து எடுத்து மாநிலங்களுக்கு மாற்றித் தரவேண்டும்’ என்பதுதான் நடைமுறையில் திமுக கேட்கும் மாநில சுயாட்சியாக இருக்க முடியும்.  இந்தப் புள்ளியிலிருந்து சில விஷயங்களைப் பார்க்கலாம்.

 

திமுக விரும்பும் மாநில சுயாட்சி முன்பே கையில் இருந்தால், திமுக தமிழகத்தை ஆண்ட நாட்களில் மக்கள் நலனுக்காக என்னென்ன சாதனைகள் செய்திருக்கும் என்று ஸ்டாலினால் சொல்ல முடியுமா? முடியாவிட்டால் இப்போது மாநில சுயாட்சி தேவை என்று அவர் பேசுவது ஏமாற்று வேலை.

 

தெருவுக்கு வந்தும் ஒரு விஷயம் பேசலாம். எல்லா மாநிலங்களிலும் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன.  மாநிலங்களில் புதிய புதிய நெடுஞ்சாலைகளை மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அமைக்கிறது. எல்லா தேசிய நெடுஞ்சாலைகளையும் அந்த அமைப்பே பாராமரிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் நல்ல தரம் என்ன, தமிழக அரசு மற்றும் உள்ளாட்சிகள் அமைத்துப் பராமரிக்கும் பல்லிளிக்கும் சாலைகளின் தரம் என்ன? தெரிந்ததுதான். மற்ற துறைகளில் அதிக அதிகாரங்கள் கிடைத்தால் மட்டும் அவற்றை வைத்து ஒரு திமுக ஆட்சி மாநிலத்தில் எதைச் சிறப்பாகச் செய்யும்?

 

மாநில அரசின் அதிகாரங்களை வைத்து, தமிழக அரசு பொதுமக்களின் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டும். இதில் மத்திய அரசு ஒரு முட்டுக்கட்டையும் போட முடியாது. அதாவது, குடிநீர் வழங்கும் விஷயத்தில் மாநில அரசுகளுக்கு வானளாவிய சுயாட்சி உண்டு. நமது மாநில மக்கள் அனைவரும் குடிநீருக்காகக் காத்திருக்காமல், குடம் வாளி தூக்கி அலையாமல், அவர்களுக்குத் தேவையான குடிநீர் கிடைக்கச் செய்துவிட்டதா திமுக? பிறகு எதற்கு மாநில சுயாட்சி?

 

இப்போதைய திமுக ஆட்சியில், முன்பு இரண்டரை வருடங்கள் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. தற்போது அவர் வனத்துறை அமைச்சர். பொதுமேடையில் ஒரு மூன்றாம் தர ஆசாமியும் பேசத் தயங்கும் ஆபாசப் பேச்சை அவர் சமீபத்தில் மேடையேறிப் பேசினார். இத்தனைக்கும் அவர் மூன்று எம்.ஏ பட்டங்கள், பி.எட் பட்டம், பி.எல் பட்டம், அதோடு பி.எச்.டி பட்டமும் வாங்கியவர். எப்படித்தான் அவர் இத்தனை பட்டங்கள் வாங்கினாரோ - வாங்கியவருக்குத் தான் தெரியும்!

 

மாநில சுயாட்சி முன்பே கிடைத்திருந்தால் அதன் கீழ் திமுக என்ன செய்திருக்கும்? மாநில சுயாட்சி அதிகாரத்தைக் கண்ணும் கருத்துமாக உபயோகித்து, உண்மையிலேயே  கல்வியில் சிறந்த, கண்ணியத்திற்கும் உதாரணமான, ஒரு கனவானைத் திமுக உயர்கல்வித் துறை அமைச்சராக்கி இருக்குமா?

 

இப்போது பணச் சலவைக் குற்றங்களை (money laundering) விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்கு, மத்திய அரசின் அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இருக்கிறது. மாநில சுயாட்சிக் கொள்கையின் படி, இத்தகைய விசாரணையை மாநில அரசே செய்ய வேண்டும் என்று திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆசைப் படுவார். அதன் அனுகூலங்கள் அவருக்குத் தெரியும். ஸ்டாலினும் அதையே விரும்புவாரே?

 

ஸ்டாலின் விரும்பும் மாநில சுயாட்சி அதிகாரங்களை விடக் கூடுதல் அதிகாரங்களை முன்பு கொண்ட ஒரு இந்திய மாநிலம், ஜம்மு காஷ்மீர். அதற்கென்று தனியாக ஒரு அரசமைப்புச் சட்டமே இருந்தது. தனிக் கொடியும் இருந்தது. முன்பு மத்திய ஊழல் தடுப்பு சட்டமும் அங்கு அமல் ஆகவில்லை.  

 

அரசியல் சட்டப் பிரிவு 370 மாற்றம் செய்யப் படுவதற்கு முன், மாநில மஹா சுயாட்சி கொண்டிருந்த ஜம்மு காஷ்மீர் அதை வைத்து என்ன முன்னேற்றத்தைக் கண்டது, மக்களின் பொருளாதார நல்வாழ்விற்கு என்ன செய்தது? ஒன்றுமில்லை. அந்த சட்டப் பிரிவு முடக்கப் பட்டபின், மத்திய அரசின் உதவியுடன் – ஜம்மு காஷ்மீர் இன்னும் யூனியன் பிரதேசமாக இருக்கும் நிலையில் – அந்தப் பிரதேசத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் பெரிதும் பரவியிருக்கின்றன. அந்த மக்களுக்கான கல்வி வசதிகள், மருத்துவ வசதிகள், வருமான வாய்ப்புகள் உயர்ந்திருக்கின்றன. அங்கு சட்டம் ஒழுங்கும் மேம்பட்டிருக்கிறது. இதற்கு என்ன பதில் சொல்வார் ஸ்டாலின்?

 

தனது அதிகாரங்களை வைத்து மத்திய அரசு ரயில் போக்குவரத்தை நன்றாக நிர்வகிக்கிறது, ரயில்வே நிலையங்களை சிறப்பாகப் பாராமரிக்கிறது. மாநில அதிகாரங்களின் கீழ் பேருந்து நிலையங்களைத் திமுக அரசு எப்படிப் பராமரித்து வருகிறது? லொட லொட அரசு பஸ்களே நமது மாநில அரசு செயல்படும் லட்சணத்தை சத்தம் போட்டுச் சொல்லுமே?

 

“மாநில அரசுக்கு ரூபாய் நோட்டு அச்சடிக்கும் அதிகாரம் இல்லை. மத்திய அரசைப் போல் அந்த அதிகாரம் எங்களுக்கும் இருந்தால் நிதிப் பிரச்சனை இல்லாமல் மாநிலத்தில் எல்லாப் பணிகளையும் செய்து முடிப்போம்” என்று எந்த அரசியல் தலைவரும் பேசமாட்டார் என்று நாம் பிரார்த்திக்க வேண்டும்.  அந்த அதிகாரம் தமிழகத்திற்கு இருந்தால், லாட்டரி சீட் மாதிரி ஒரே சீரியல் நம்பரில் எத்தனை ஐநூறு ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப் படுமோ, யார் கண்டது!  

 

ஒரு மாநிலத்தை ஆளும் முதலமைச்சரின் சிந்தையில் நேர்மையும், செயலில் முனைப்பும், நெஞ்சில் மக்கள் நலனும் இருந்தால் தற்போதுள்ள மாநில அதிகாரங்களை உபயோகித்தே அவர் மாநிலத்திற்கு எல்லா நன்மைகளும் கிடைக்கச் செய்யலாம். திமுக தலைவர்களிடம் அந்த குணங்கள் இல்லை. அதுதான் அவர்களின் உள் கோளாறு – மாநில சுயாட்சி ஜுரம் அவற்றின் ஒரு வெளி அடையாளம். இதுதான் விஷயம்.

 

மாநில சுயாட்சி இல்லாமல் ஒரு மாநிலத்துக்கு அதன் முதல்வரால் சிறந்த ஆட்சி தர முடியாது என்று ஸ்டாலின் நிஜமாகவே நினைக்கிறாரா? அப்படியானால், மத்தியில் பத்தாண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்தபோதும் நரேந்திர மோடியால் அதே நேரம் குஜராத்தில் எப்படி மிகச்  சிறந்த ஆட்சி தர முடிந்தது என்று ஸ்டாலின் தெளிவு படுத்தட்டும்.

 

மாநில சுயாட்சி ஜுரத்தில் பிதற்றாமல், ஒரு மாநில முதல்வர் பதவியில் இருந்த மோடி எப்படி நாட்டின் பிரதமர் ஆனார் என்பதையும் ஸ்டாலின் புரிந்து கொள்வது அவருக்கே நல்லது.  பிரதமர் கனவில் மிதக்கும் ஸ்டாலினுக்கு அவருடைய கனவு நிறைவேற ஒரு எளிய வழியும் கிடைத்து விடுமே!


* * * * *
Author: R. Veera Raghavan, Advocate, Chennai

Sunday, 13 April 2025

அண்ணாமலை தமிழக பாஜக-வின் மாநிலத் தலைவராக நீடிக்கவில்லை. அதன் வலிமை குறையுமா?

 

-- ஆர். வி. ஆர்

 

தமிழக பாஜக-வில் தற்போது நடந்த மாநிலத் தலைவர் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவில்லை. போட்டியிட்ட ஒரே வேட்பாளரான நயினார் நாகேந்திரன் ஏக மனதாக அக் கட்சியின் புதிய மாநிலத் தலைவராகத் தேர்வு செய்யப் பட்டிருக்கிறார்.


அண்ணாமலை மாநிலத் தலைவராக இல்லாத தமிழக பாஜக-வின் வலிமை குறையுமா? இந்தக் கேள்வி பல சாதாரண பாஜக ஆதரவாளர்களிடம் இருப்பது வியப்பல்ல. அதற்குக் காரணம் இருக்கிறது.

 

தமிழகத்தில் ஓட்டு வாங்கும் சக்தியை வைத்துப் பார்த்தால், திமுக மற்றும் அதிமுக பெரிய கட்சிகள்.  அவற்றுக்கு அடுத்த நிலைக்குத் தனது இளம் வயதில், மூன்றே முக்கால் வருடங்களில், பாஜக உயரப் பெரும் பங்களிப்பு செய்தது, கட்சியின் முந்தைய மாநிலத் தலைவர் அண்ணாமலை.

 

திமுக எப்படியான கட்சி? அராஜகம், அடாவடி, ஆட்சியில் முறைகேடுகள், ஹிந்து மத துவேஷம், இலைமறை காயாக இருக்கும் பிரிவினைப் போக்கு, ஆகியவை திமுக-வின் பல முகங்கள்.  

 

தமிழகத்தில் மாறி மாறி வரும் ஆட்சிகளின் அவலங்களிலிருந்து தங்களை மீட்கும் ஒரு நம்பிக்கை முகத்தைத் தமிழக மக்கள் ஐம்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் உலகில் பார்க்க முடியவில்லை – ஒரு சில தலைவர்களிடம் அவர்கள் முன்பு பற்று வைத்தாலும். இந்தச் சூழ்நிலையில், அத்தகைய புதிய நம்பிக்கை முகமாகப் பலருக்கும் அண்ணாமலை தெரிய ஆரம்பித்தார். அதுதான் குறுகிய காலத்தில் தமிழக பாஜக-வை சாதாரண மக்களிடையே பெரிய அளவில் பிரபலப் படுத்தியது.

 

இத்தகைய அண்ணாமலை மீண்டும் தமிழக பாஜக-வின் மாநிலத் தலைவராக வரவில்லை என்றால், அவரால் ஈர்க்கப் பட்ட மக்கள் பலரும் பாஜக மீது சற்று அதிருப்தி கொள்வது இயற்கை. ஆனால் உண்மையில் அண்ணாமலையின் அபிமானிகளுக்கு இருக்கும் அச்சமும் கவலையும் தேவையற்றது – இது நாளுக்கு நாள் தெளிவாகிறது.    

 

சமீபத்தில் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அண்ணாமலை பாஜக-விற்கு அளித்த மகத்தான பங்களிப்பை எழுத்து மூலம் வெளிப்படுத்தினார். தனது முதல் பதவிக் காலம் முடிந்தவுடன் ஒரு மாநிலத் தலைவர் – அதுவும் திமுக கோலோச்சும் தமிழ்நாட்டு மாநிலத் தலைவர் – பாஜக-வின் தேசியத் தலைமையிடமிருந்து தனது இளம் வயதில் இத்தகைய பாராட்டைப் பெறுவது நினைத்துப் பார்க்க முடியாதது. பாஜக-வில் அண்ணாமலைக்கான முக்கியத்துவம்  இன்னும் குறையவில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்.


அண்ணாமலை இனி மாநிலத் தலைவராக இல்லாவிட்டாலும் அவர் முன்பு போல் மக்களிடம் நேரடியாகப்  பேச முடியும், திமுக-வின் பிரதான எதிர்ப்பாளராகத் தமிழக பாஜக-வில் தொடர முடியும், அதில் சந்தேகம் வேண்டாம், என்கிற செய்தி நயினார் நாகேந்திரனின் வார்த்தைகளிலும் உடல் மொழியிலும் தெரிகிறது. பாஜக-வின் தேசியத் தலைமையும் அதே சமிக்ஞையைக் காண்பிக்கிறது. இவை அனைத்தும் அண்ணாமலை அபிமானிகளுக்கு இருக்கக் கூடிய சந்தேகத்தை முற்றிலும் போக்க வல்லவை.

 

இப்போது அமித் ஷா முன்னிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக மீண்டும் இணைந்திருக்கிறது. 2026 தமிழக சட்டசபைத் தேர்தலில் அந்த இரண்டு கட்சிகளும் அதிமுக தலைமையில் ஒரே கூட்டணியாகப் போட்டியிடப் போகின்றன. இந்த நேரத்தில், பாஜக-வின் தமிழக மாநிலத் தலைவர் பதவியில் அண்ணாமலையை அடுத்து நயினார் நாகேந்திரன் தேர்வாகி இருக்கிறார்.   

 

அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று அண்ணாமலை மீண்டும் தமிழக பாஜக-வின் மாநிலத் தலைவராகத் தொடராமல் வேறு ஒருவர் அப்பதவிக்கு வந்திருக்கலாமோ என்ற சந்தேகம், அண்ணாமலை ஆதரவாளர்கள் பலருக்கு வரலாம். இந்த விஷயத்தை நாம் இப்படிப் புரிந்து கொள்வது சரியாக இருக்கும்.

 

அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், அண்ணாமலைக்கும் இடையே முன்பு வார்த்தைப் போர்கள் இருந்தன. அவரவர் கட்சி நலன் என்று கருதி அவர்கள் அப்படிப் பேசி இருப்பார்கள். ஆனால் தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்து ஆட்சிக்கு வராமல், மக்கள் நலனுக்குப் பெரிதாக இரண்டு கட்சிகளும் ஒன்றும் செய்யமுடியாது, அவைகள் வளரவும் முடியாது.  2026 தேர்தல் மூலம் இன்னும் வளர வேண்டியது தமிழக பாஜக-வுக்கு மிக அவசியம்.

 

தேர்தல் விளையாட்டும் தேர்தல் கணக்குகளும் தனியானவை. ஒரு கிரிக்கெட் உதாரணத்தை வைத்து – அதாவது, கற்பனையான ஒரு ‘தேர்தல் கிரிக்கெட்’ உதாரணத்தின் மூலமாக – இதை விளக்கலாம்.


திமுக-வின் தேர்தல் கிரிக்கெட் அணியில் பல கட்சிகளைச் சேர்ந்த பதினோரு வீரர்கள் கூட்டாக, ஒரு கூட்டணியாக, இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். திமுக அணியில் சேராத மற்ற வீரர்கள், ஆறு பேர் மற்றும் ஐந்து பேர் ஒன்றாக ஒரே எதிர் அணியில் கூட மறுக்கிறார்கள். இருந்தாலும் தேர்தல் கிரிக்கெட் விதிகள் படி, அந்த ஆறு மற்றும் ஐந்து வீரர்கள் தனித்தனி அணிகளாக, களத்திற்கு வந்து திமுக கூட்டணியை எதிர்த்து தேர்தல் கிரிக்கெட்  விளையாடலாம், அவர்கள் அப்படி ஆடுகிறார்கள் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். 

 

திமுக அணி பேட்டிங் செய்கிறது. எதிர்ப்புறம் இரண்டு பிரிவு வீரர்களும் பந்து வீசுகிறார்கள். திமுக அணியின் பதினோரு வீரர்கள் கூட்டாக 250 ரன்கள் எடுக்கிறார்கள். அந்த 250 ரன்களும் திமுக அணியின் கணக்கில்  சேர்கிறது. எதிர் அணியில் உள்ள ஆறு வீரர் பிரிவு 150 ரன்கள் எடுக்க, ஐந்து வீரர் பிரிவு 125 ரன்கள் எடுக்கிறார்கள். அவர்கள் ஒற்றை அணியாக, ஒரு கூட்டணியாக, விளையாடி இருந்தால் அவர்கள் கணக்கிற்கு மொத்தமாக 275 ரன்கள் சேர்ந்து, அந்த எதிர் அணியின் பதினோரு வீரர்களும் ஜெயித்த அணியாக விளங்குவார்கள், திமுக அணி தோற்கும். 


திமுக அணியை எதிர்த்த வீரர்கள் இரண்டு பிரிவாக ஆடியதால், அந்த இரு பிரிவுகள் அவரவர் கணக்கிற்கு எடுத்த ரன்கள்  (150 மற்றும் 125) தனித் தனியாக திமுக அணியின் 250-ஐ விடக் குறைவு என்பதால், அந்த இரு பிரிவினரும் தோற்றார்கள், திமுக அணி ஜெயித்தது என்றாகும்.  இதுதான் தேர்தல் கிரிக்கெட் விதிகள். இப்படித்தான் தேர்தல் கிரிக்கெட் வீரர்கள் இந்த ஆட்டத்தை ஆட முடியும். இதனால் தான் அதிமுக மற்றும் பாஜக ஒரு கூட்டணியாகச் சேர்ந்து, இன்னும் சில கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு, திமுக கூட்டணியை வலுவாகத் தேர்தலில் எதிர்கொள்ள வேண்டும்.

 

அண்ணாமலை ஆதரவாளர்கள் புரிந்துகொள்ள வேண்டிய இன்னும் ஒன்று இருக்கிறது.  

 

அண்ணாமலை பாஜக-வின் மாநிலத் தலைவராக இல்லாமல் போவதை அதிமுக தலைவர் பழனிசாமி விரும்புகிறார் என்றே இருக்கட்டும். அது பாஜக-வுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் இப்போது பொருட்டல்ல. எது முக்கியம் என்றால், அண்ணாமலை நினைப்பதைத் தேர்தல் கிரிக்கெட்டில் திமுக அணிக்கு எதிராக முயன்று பார்க்க முடியும் – கேப்டனாக இல்லாவிட்டாலும் சச்சின் டெண்டுல்கர் அடித்து ஆடி இந்திய அணிக்கு ரன்கள் சேர்த்த மாதிரி.  கூட்டணி சேர்ந்ததால் அதிமுக-வோடு பாஜக-வும் வெற்றி பெறும் வாய்ப்பு உண்டு. மற்ற அனைத்தும் இப்போது இரண்டாம் பட்சம். அது அதற்குக் காலம் உண்டு.

 

என்ன ஆனாலும் அதிமுக-பாஜக கூட்டணியால் 2026 தேர்தலுக்குப் பின் தமிழக பாஜக-வுக்கு அதிக எம்.எல்.ஏ-க்கள் கிடைக்கும் வாய்ப்பு பிரகாசம், அரசியலில் அதிக வெளிச்சமும் கிடைக்கும். அண்ணாமலையின் சக்தியும் அதிகரிக்கும்.

 

கட்சித் தலைவர் என்ற பதவியில் இல்லாமல் எப்படி மோடிக்கும் அமித் ஷாவுக்கும் தேசிய அளவில் மதிப்பும்  மரியாதையும் உள்ளதோ, அதேபோல் அண்ணாமலைக்கும் தமிழக அளவில் தனி மதிப்புக் கூடி வருகிறது. வரும் வருடங்களில் அது பலப்படும். இதில் அவருக்குத் துணையாக பாஜக-வின் தேசியத் தலைமையும் இருக்கிறது.

 

அண்ணாமலை முன்பு முன்னிருந்து செய்ததை, இப்போது பக்கவாட்டிலிருந்து செய்யப் போகிறார். அதை முற்றிலும் உணர்ந்துதான், அவரே புதிய மாநிலத் தலைவர்  நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாகப் பேசி இருக்கிறார். நயினார் நாகேந்திரனை வாழ்த்தி, அண்ணாமலையின் அபிமானிகள் தொடர்ந்து பாஜக-வுக்கு ஆதரவு தரவேண்டும்.  பாஜக மூலமாகத் தமிழ்நாட்டுக்கு விடிவு பிறக்கும் நேரம் வந்து கொண்டிருக்கிறது.  வேறென்ன வேண்டும்?

 

* * * * *

 

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

 

 

Friday, 11 April 2025

பொன்முடியின் ஆபாசப் பேச்சு. பாதிக் காரணம், திமுக தலைவர் ஸ்டாலின்


-- ஆர். வி. ஆர்

 

திமுக-வின் உயர் மட்டத் தலைவர்களின் பொதுவான குணம் இது: ஹிந்து மதத்தை இடித்துப் பேசுவது, இழித்துப் பேசுவது. கிறிஸ்துவ மதத்தையும் இஸ்லாம் மதத்தையும் போற்றிப் பேசுவது, அந்த மதத் தலைவர்களிடம் குழைந்து பணிந்து நடப்பது. திமுக-வின் துணைப் பொதுச் செயலாளர் மற்றும் மாநில அமைச்சரான பொன்முடியும் இதில் ஒருவர்.  

 

மிக அநாகரிகமாக, ஆபாசமாக, பெண்கள் கூடி இருக்கும் அவையில், பொன்முடி சமீபத்தில் பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது. ஹிந்து மத சம்பிரதாயங்களான சைவத்தையும் வைணவத்தையும் குறிப்பிட்டு ஏதோ கீழ்த்தரமாகப்  பேசி, கேட்பவர்கள் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தார் பொன்முடி. திமுக-வின் இன்னொரு துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியே  கண்டனம் தெரிவிக்கும் வகையில் இருந்தது பொன்முடியின் எட்டாந்தரப் பேச்சு.

 

பொன்முடியின் ஆபாசப் பேச்சைத் தொடர்ந்து, திமுக-வின் தலைவர் மு. க. ஸ்டாலின் பொன்முடியைத் துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி இருக்கிறார் – காரணம் குறிப்பிடாமல். பொன்முடி இதுவரை தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை. தெரிவித்தாலும் அது போலியாக இருக்கும்.

 

தனது ஆபாசப் பேச்சால் கட்சிப் பொறுப்பில் இருக்கும் தகுதியைப் பொன்முடி இழந்தார், ஆகையால் அவருடைய கட்சிப் பதவி பறி போனது என்றாகிறது. கட்சிப் பொறுப்புக்கு லாயக்கில்லாத பொன்முடி, அமைச்சர் பதவிக்கும் லாயக்கில்லாதவர் ஆயிற்றே? சரி சரி, கண்துடைப்புக்காக எடுத்த நடவடிக்கையில் லாஜிக் பார்க்க முடியுமா?

 

கீழ்த்தரமாக, ஆபாசமாகப் பொதுமேடையில் பேசிய பொன்முடி, அனுபவமில்லாத இளவயதுக் காரரா? படிப்பறிவும் பெரிதாக இல்லாதவரா? இல்லை. அவருக்கு வயது 75 ஆகப் போகிறது. திமுக-வின் சீனியர் தலைவர்களில் ஒருவர். 18 வருடங்கள் கல்லூரி ஆசிரியராக வேலை செய்தவர். இதையும் நம்புங்கள்: அவர் மூன்று துறைகளில் எம்.ஏ, அது தவிர பி.எட், பி.எல் மற்றும் பி.எச்.டி பட்டங்கள் பெற்றவர்.  என்ன இருந்து என்ன? கடைசியில் அவர் ஒரு முன்னணி திமுக தலைவர், கட்சித் தலைமைக்கு நம்பிக்கையானவர். அவர்களுக்குள் அதில் நிறைய விஷயம் இருக்கிறது.

 

நினைத்துப் பாருங்கள். தமிழகத்தில் ஒரு பாஜக தலைவரோ, அல்லது காங்கிரஸ் தலைவரோ, பொன்முடி பாணியில்  ஆபாசமாக, ஹிந்து மதத்தை மலிவாக இழித்தும், பேசியிருக்க முடியுமா? முடியாது. அதற்குக் காரணம், அது போன்ற அருவருப்பான பேச்சுகளை பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தேசியத் தலைமையில் உள்ள தலைவர்கள் பேசுவதில்லை. ஆனால் திமுக-வின் தலைமை அப்படி அல்ல.

 

நீங்கள் ஒரு அமைப்பில் பணி செய்கிறீர்கள், அந்த அமைப்பின் தலைவர் நாகரிகமாகப் பேசுகிறவர் என்றால் உங்களுக்கே பிறரிடம் அநாகரிகமாகப் பேசக் கூச்சமாக இருக்கும். ‘அநாகரிகமாகப் பேசினால் தலைமையின் கண்டனத்திற்கு நாம் ஆளாவோம், இந்த அமைப்பிலும் நாம் வளர முடியாது’ என்ற உள்ளுணர்வு உங்களிடம் இயற்கையாக இருக்கும். அப்படியான உள்ளுணர்வு  கொண்டவர்கள் தான் அந்த அமைப்பிலும் வந்து சேருவார்கள்.

 

நீங்கள் பணி செய்யும் அமைப்பின் தலைவரே அநாகரிகமாகப் பேசுகிறவர் என்றால் நீங்களும் பிறரிடம் அநாகரிகமாகப் பேச முனைவீர்கள். ‘அநாகரிகமாகப் பேசினால் நாம் தலைமையால் மெச்சப் படுவோம், இந்த அமைப்பிலும் எளிதாக வளரலாம்’ என்ற உள்ளுணர்வு உங்களுக்கு இயல்பாக வரும் – ஒரு ரவுடிக் கூட்டத்தில் உள்ள மாதிரி. அப்படியான உள்ளுணர்வு  கொண்டவர்கள் அந்த அமைப்பில் அதிகம் வந்து சேருவார்கள். அப்படித் திமுக-வில் சேர்ந்து வளர்ந்தவர் பொன்முடி.

 

திமுக தலைவர்களின் முறைகேடுகளும் முறையற்ற பேச்சுகளும், ஹிந்து மத விரோதப் போக்கும், சமீப காலமாகத் தமிழக பாஜக-வால் கடுமையாக எதிர்க்கப் படுகின்றன. அதனால் பேச்சு அளவிலாவது இதில் திமுக தலைமை சற்றுப் பின் வாங்கி வருகிறது. அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலும் நடக்கப் போகிறது. இந்த நேரத்தில், ஹிந்து மதத்தை இழித்துப் பேசுவது, ஆபாசச்  சொற்கள்  பேசுவது ஆகிய செயல்களைத் திமுக காரண காரியமாகக் கட்சிக்குள் சற்று மட்டுப் படுத்த விரும்பும். அப்படி இருக்கையில் அமைச்சர் பொன்முடி சமீபத்தில் பேசிய அருவருப்பான பேச்சு, திமுக தலைவர் ஸ்டாலினையே பாதித்திருக்கும். அதனால் பொன்முடியின் கட்சிப் பதவி பறிபோயிருக்கிறது.

 

சிறிது பள்ளிப் படிப்பு மட்டும் படித்த காமராஜ், அன்றைய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து கண்ணியமான பேச்சுக்கள் பேசிய பெருந்தலைவராக விளங்கினார். பொறியியல் படிப்பு மற்றும் எம்.பி.ஏ படித்து ஐ.பி.எஸ்-ஸிலும் தேர்வான அண்ணாமலை இன்று ஒரு பாஜக தலைவராக நாகரிகமாகப் பேசுகிறார். ஆனால் பதினெட்டு ஆண்டுகள் கல்லூரி ஆசிரியராக இருந்த பொன்முடி, எம்.ஏ, பி.எட், பி.எல், பி.எச்.டி என்று பல கல்விப் படங்கள் பெற்ற பொன்முடி, காது கூசும் கீழ்த்தரமான பேச்சை – அதுவும் ஹிந்து மதத்தை அநாகரிகமாகத் தொடும் பேச்சை – பேசக் கூடியவர் என்றால் என்ன அர்த்தம்?

 

நாகரிகமான சிந்தனையும் பேச்சும் கொண்டவர்கள் திமுக-வில் உயர்வது விதி விலக்கானது, இயல்பானது அல்ல. தரம் தாழ்ந்தவர்கள் திமுக-வில் உயர்வதற்குக் காரணம், அந்தக் கட்சியின் தலைவர் பதவி விகித்தவர்கள் காண்பித்த முன்மாதிரி. அவர்களில் திமுக-வின் முந்தைய நெடுநாள் தலைவர் கருணாநிதி முக்கியமானவர். அவரது புதல்வர் ஸ்டாலினும் முடிந்தவரை தந்தைக்கு இதில் ஈடுகொடுக்க அவ்வப்போது முனைகிறார் – தந்தையின் வீரியம் ஸ்டாலினிடம் இல்லை என்றாலும்.

 

கிட்டத் தட்ட ஏழு வருடங்களாகத் திமுக-வின் தலைவர் பதவியில் இருப்பவர் ஸ்டாலின். அவர் நினைத்தால், அதற்கான உறுதி அவரிடம் இருந்தால், இந்த ஏழு வருடங்களில் அவர் திமுக-வினரின் கீழ்த்தர அநாகரிகப் பேச்சுகளுக்குத் தடை விதித்திருக்கலாம், அவரும் அந்தத் தடையைக்  கடைப் பிடித்திருக்கலாம்.  ஆனால் ஸ்டாலின் அதைச் செய்யவில்லை. ஏனென்றால் அவரும் திமுக-வின் கலாசாரத்தை உயர்த்திப் பிடிப்பவர். 

 

அந்நியரைக் கடிக்க உங்கள் நாயை நீங்கள் அனுமதித்து ரசித்தால், அது அடுத்தவரை எந்த அளவு கடிக்கும் என்பதை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது. அது ஒருவரைக் கன்னா பின்னாவென்று கடித்த பின், ஊருக்காக நீங்கள் விரல் அசைத்து அதைக் கண்டிக்கலாம்.  ஆனாலும் அது உங்கள் அருமைப் பிராணி. நீங்கள் அதற்கு வேண்டிய இறைச்சி கிடைக்க வழி செய்வீர்கள். உங்களுக்கு வேண்டியது உங்களுக்குக் கிடைக்க அது துணையாக இருக்கும், காவலாக நிற்கும். பிறகென்ன?

 

* * * * *

 

Author: R. Veera Raghavan, Advocate, Chennai


Saturday, 5 April 2025

அண்ணாமலை நீடிப்பாரா, மாற்றப் படுவாரா?

 

-- ஆர். வி. ஆர்


 

திமுக, அதிமுக-விலிருந்து ஆரம்பிக்கலாம்.  

 

கருணாநிதியால்  திமுக-விலிருந்து வெளியேற்றப் பட்ட எம். ஜி. ஆர், திமுக-வுக்குப் போட்டியாக ஆரம்பித்த கட்சி, அதிமுக. அந்த இரு தலைவர்களும் இன்று இல்லை. ஆனால் அந்த இரண்டு கட்சிகளும் ஒரே இயல்பு கொண்டவை. ஒரு கட்சியில் ஹிந்து விரோதப் பேச்சு இருக்கும், அராஜகப் போக்கும் காணப்படும். இன்னொரு கட்சியில் அவை இருக்காது. மற்றபடி, தங்கள் நலன்களை நன்றாகக் கவனித்துக் கொண்டு மக்கள் நலனுக்கு எதிராக ஆட்சி செய்யும் தலைவர்கள்தான் இரண்டு கட்சிகளிலும் இருக்கிறார்கள்.  

 

1967 தேர்தலில் திமுக-வால் மாநிலத்தில் வீழ்த்தப்பட்ட காங்கிரஸ் சென்ற பல வருடங்களாகத் திமுக-வின் காலடியில் கிடக்கிறது, திமுக-வை எதிர்த்து மறுபடியும் ஆட்சியில் அமரக் காங்கிரஸ் முனையவில்லை. திமுக, அதிமுக இரண்டு கட்சிகள் மட்டும் மாறி மாறித் தமிழகத்தில் 1967-லிருந்து ஆட்சி செய்கின்றன.  

 

தமிழகத்திற்கு நல்லாட்சி கிடைக்க, இப்போது நடக்கவேண்டிய முதல் காரியம் இது. அதாவது, ஆட்சியில் இருக்கும் திமுக கூட்டணியை 2026 சட்டசபைத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். அது முடியாவிட்டால், அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி மிகக் குறைந்த உறுப்பினர் எண்ணிக்கையில் மட்டும் ஜெயிக்கும் வகையில் எதிரணியின் உறுப்பினர் எண்ணிக்கை உயரவேண்டும். அதன் மூலம், திமுக-வுக்கு எதிரான மக்கள் சக்தி திரண்டு வருகிறது என்கிற செய்தியை திமுக-வுக்கு உரத்துச் சொல்லி, 2031 சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி தோற்கடிக்கப் பட்டு, பாஜக முக்கிய அங்கம் வகிக்கும் ஒரு கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும்.

 

வருகின்ற 2026 சட்டசபைத் தேர்தலில், திமுக-வுக்கு வலுவான எதிர்ப்பை எந்தக் கட்சியின் தலைவர் மக்களிடையே காண்பிக்க முடியும்? சீமான் அவர் பாணியில் திமுக-வை எதிர்க்கிறார், விஜய்யும் அவர் பாணியில் எதிர்க்கிறார். ஆனால் இந்த இருவரும் தமிழகத்தில் நல்லாட்சி தருவதற்கான போக்கும் தகுதியும் கொண்டவர்கள் அல்ல. இந்த இரு தலைவர்களும் பாஜக-வின் தேசிய சிந்தனை துளியும் இல்லாதவர்கள். இந்த இருவரும் பாஜக-வுடன் ஒரு கூட்டணியில் இணைந்து திமுக-வை எதிர்க்க முன் வருவது சந்தேகம்.  

 

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, திமுக-வை எதிர்க்கும் முக்கியக் கட்சியாக இருக்கிறது. ஆனால், சீமானுக்கோ விஜய்க்கோ உள்ள தனிப்பட்ட வாக்காளர் பின்புலம் பழனிசாமிக்கு இல்லை, அவர் கட்சியில் மற்ற தலைவர்களுக்கும் கிடையாது. இருந்தாலும் எம்.ஜி.ஆர் பிரபலப் படுத்திய இரட்டை இலை சின்னம் இன்றும் அதிமுக-வின் கணிசமான வாக்கு வங்கிக்குக் காரணமாக இருக்கிறது – அது குறைந்து வந்தாலும்.

 

இந்த சூழ்நிலையில், பாஜக-வின் திமுக எதிர்ப்புக்கும் மக்களிடையே ஆதரவு பெருகி வருகிறது. அதற்குக் காரணம் பாஜக என்ற கட்சி ஸ்தாபனம் அல்ல. மோடி, அமித் ஷா போன்ற கட்சியின் தேசியத் தலைவர்களும் காரணம் அல்ல. அண்ணாமலை தமிழக பாஜக-வின் மாநிலத் தலைவர் ஆவதற்கு முன்பிருந்த மாநிலத் தலைவர்களோ, அல்லது கட்சியின் பிற மூத்த தலைவர்களோ காரணம் அல்ல.

 

யார் மீதும் குறை சொல்லாமல் ஒரு உண்மையை நாம் அறியலாம். அதாவது, அண்ணாமலை கட்சியின் மாநிலத் தலைவர் ஆன பின்பு அவருடைய பேச்சினால், செயலினால், துணிவினால், மன உறுதியினால், அர்ப்பணிப்பால், தலைமைப் பண்பினால்வார்த்தைகளால் எளிதில் விளக்க முடியாத அவரது  அம்சத்தால், அவர் இன்று தமிழகத்தில் திமுக-வின் முக்கிய எதிர்ப்பு முகமாக – அதாவது, பிரதானமாகத் திமுக-வை எதிர்க்கும் ஒரு குரலாக – பார்க்கப் படுகிறார். திமுக-வே அப்படி நினைக்கும். அதை வைத்து பாஜக தமிழகத்தில் ஒரு சக்தி மிக்க தேர்தல் கூட்டணியை உருவாக்க வேண்டும். அதை பாஜக முனைகிறது. 

 

இப்படி இருக்கையில், 2026 தேர்தல் சமயத்தில் அண்ணாமலை பாஜக-வின் மாநிலத் தலைவராக இல்லாமல் போகலாம், ஒரு கட்சிக் கோட்பாட்டினால் – அல்லது ஒரு அரசியல் யுக்தியாக – அவர் இப்போது மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விடுவிக்கப் படலாம் என்ற பேச்சு பரவலாக எழுகிறது. அது நடந்தால் என்ன ஆகும்? பாஜக-வின் திமுக எதிர்ப்பானது முனை மழுங்கும்.

 

திமுக, மிக ஆக்ரோஷமாகப் பந்து வீசும் கிரிக்கெட் பவுலர்கள் மாதிரி. அவர்களைத் திறமையாக எதிர் கொண்டு, வரும் பந்துகளை ஃபோர், சிக்சர் என்று திறமையாக அடித்து விளையாடி பவுலர்களைச் சோர்வடையச் செய்யும் ஒரு பேட்ஸ்மேன் எதிரிலுள்ள பாஜக அணிக்குத் தேவை. அதை அண்ணாமலை செய்ய முடியும் என்றால் அவரை ஆடுகளத்தில் இருக்கச் செய்வது நல்லது. நமது அணியில் மற்றவர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக, அல்லது வேறு காரணத்திற்காக, அண்ணாமலையை இந்த மேட்சில் ஆடுகளத்துக்கு அனுப்பாமல் இருப்பது  நமக்கு வெற்றி தருமா?

 

மற்ற பேட்ஸ்மேன்களால் மூர்க்கமான பவுலர்கள் வீசும் பந்துகளை ஆட்டமிழக்காமல் அடித்து ஆட முடியாது, அவ்வப்போது ஒன்று, இரண்டு ரன்கள் மட்டும் எடுக்க முடியும், மற்ற எல்லாப்  பந்துகளையும் டொக்கு டொக்கு என்று ஆடுவார்கள் என்றால் அவர்களால் பெரிய பயன் உண்டா?

 

தமிழகத்தில் பாஜக-வின் மூத்த தலைவர்கள் பலரையும் தாண்டி, கட்சிக்கே புதியவரான அண்ணாமலையை எதற்காகக் கட்சியின் தேசியத் தலைமை 2021-ம் ஆண்டு தமிழகத்தின் மாநிலத் தலைவர் ஆக்கியது? ஏனென்றால், தமிழகத்தின் திராவிட அரசியல் களம் வினோதமானது, கொடுமையானது. மீண்டும் ஆட்சியில் அமர்ந்துள்ள திமுக-வை அண்ணாமலையால் மற்ற பாஜக தலைவர்களை விடப் பலமாக எதிர்க்க முடியும், அதற்கான குணாதிசயங்கள் அவரிடம் தெரிகின்றன, என்ற கணிப்பில், எதிர்பார்ப்பில். அந்தக் கணிப்பை, அந்த எதிர்பார்ப்பை, அவர் 2021 ஜூலை மாதத்திலிருந்து நிரூபித்து வருகிறார். அப்படியானால் 2026 சட்டசபைத் தேர்தல் வருவதற்கு முன் அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விடுவிக்கப் பட்டால், அது கட்சிக்கு நன்மை செய்யுமா?

 

பாஜக என்ற அதிசயக் கட்சியும், மோடி என்ற அற்புதத் தலைவரும், தமிழகத்தில் திமுக-வுக்கு எதிராக மக்களைத் திருப்ப முடியவில்லை. அண்ணாமலையால் அது சிறிதளவாவது முடிந்திருக்கிறது. இப்போது அவரை மாநிலத் தலைவர் பதவியலிருந்து நீக்கினால், கட்சியின் மகிமையும் மோடியின் நற்பெயரும் தமிழக பாஜக-வைத் தூக்கி நிறுத்தாதே? அவர் மாநிலத் தலைவராக இல்லாவிட்டால், அவரால் பாஜக-வுக்கு ஈர்க்கப்பட்ட வாக்காளர்கள் 2026-ல் பாஜக-வுக்கு வாக்களிப்பார்களா என்பதும் ஒரு கேள்வி. 

 

‘அண்ணாமலை மாநிலத் தலைவராக இல்லாவிட்டாலும் அவர் தனது மாநிலப் பணிகளைத் தொடர்ந்து செய்வார், அதில் பாதகம் ஏற்படாது’ என்று எண்ணினால் அதில் சாரமில்லை.

 

அண்ணாமலை மாநிலத் தலைவராகத் தொடராவிட்டால், முன் போல் அவரால் பத்திரிகையாளர் சந்திப்புகளை அடிக்கடி நடத்த முடியுமா? புதிய தலைவரைத் தவிர்த்து அவரே திமுக-வுக்குப் பதிலடிகள் கொடுத்துக் கொண்டே இருக்க முடியுமா? அண்ணாமலை மாநிலத் தலைவராக இல்லாவிட்டாலும் அது முடியும், முன் போல் அவர் அதே வெளிச்சத்தில் இருப்பார் என்றால், புதிய மாநிலத் தலைவர் எதற்கு?

 

இன்னொன்று. ‘2026 சட்டசபைத் தேர்தலின் போது அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்து அந்தத் தேர்தலில் பாஜக கூட்டணி தோற்றால், அது அண்ணாமலைக்குப் பின்னடைவாகும். அதனால் இப்போது அண்ணாமலையை வேறு கட்சிப் பணியில் அல்லது மத்திய அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டு, 2031 தமிழக சட்டசபைத் தேர்தல் நேரத்தில் அவரை மீண்டும் தமிழக மாநிலத் தலைவர் ஆக்கலாம்’ என்ற ஒரு யோசனையும் காற்றில்  வருகிறது.

 

அண்ணாமலை நல்ல பேட்ஸ்மேன் என்று தெரிந்தும், மூர்க்கமாகப் பந்து வீசும்  எதிர் அணி விளையாடும் இந்த மேட்சில் அவரை இறக்காமல், அடுத்த மேட்சுக்கு அவர் வரட்டும் என்பது ஒரு யுக்தியாகுமா?

 

நமக்குத் தெரிந்தது இது. கிரிக்கெட்டில் ஏதாவது திருப்பம் வருமா, அல்லது ஒன்றும் வராதா, என்று தெரியாது. நாம் என்ன செய்யலாம்? மேட்ச் பார்க்கலாம். செய்வோம்.

  

* * * * *

 

Author: R. Veera Raghavan, Advocate, Chennai