Monday, 12 April 2021

ஊசி போடலையோ ஊசி!

 - ஆர்.வி. ஆர்

  

கோவிட்-19 தடுப்பூசி, சில படித்தவர்களையும் பாமரர்களையும் ஒரு அரிக்கும் சந்தேகத்தில் வைத்திருக்கிறது.

 

அருகிலிருக்கும் மளிகைக் கடை பாமர அண்ணாச்சியிடம், "ஊசி போட்டாச்சா?" என்று நேற்று குசலம் விசாரித்தேன். "அதுங்க..." என்று நிறுத்தி, "ஊசி போட்டா ஏதோ பண்ணும்கிறாங்க. அதான் போட்டுக்கிடலை" என்று நியாயம் சொன்னார். படித்த 70-வயது நண்பரிடமும் (சர்க்கரை வியாதியின் பாதிப்பு அதிகம் உடையவர்) இன்று கேட்டேன். "அதுல சைட் எஃபட்ஸ் ஜாஸ்தியா இருக்கும்னு நானும் ஒய்ஃபும் அவாய்ட் பண்றோம்" என்று புத்திசாலித்தனம் காட்டினார். "பிரதமர் மோடிக்கே போட்டாச்சே?" என்று நான் கேட்க, "அவர் வெறும் பி-காம்ப்ளெக்ஸ் ஊசி போட்டுட்டு ஃபோட்டோக்கு போஸ் காட்டி தடுப்பூசின்னு பொய் சொல்லுவார்" என்று அசட்டு மேதாவித்தனம் பேசினார்.

 

வெளிநாட்டில் வசிக்கும் ஒரு இந்திய டாக்டர், "இங்கே ஒரு இந்திய டாக்டரே வாக்ஸின்ல தனக்கு நம்பிக்கை இல்லைன்னு அதைத் தவிர்த்தார்" என்று சொல்லி, பிறகு அவரே கோவிட் கையைப் பிடித்தபடி மேலோகம் போனதாக வருத்தப்பட்டார் .

 

60 வயது நிரம்பியவர்களுக்குத் தடுப்பூசி ஆரம்பித்த முதல் தினமே நான் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு ஓடிப்போய் முதல் குத்து வங்கிக் கொண்டேன். அன்று காலை ஒன்பது மணிக்கு நாற்பது ஐம்பது பேர் அங்கு தடுப்பூசிக்கு வந்தனர். முதல் நாள் அந்த நேரத்தில் அவ்வளவு எண்ணிக்கையில் கூட்டம் வரும் என்று கணிக்க முடியாமல், தடுப்பூசிக்கு வந்தவர்களை இருந்த நாற்காலிகளில் அருகருகே ரண்டு இன்ச் இடைவெளியில் உட்கார வைத்தார்கள். எதிரே சுவரில் தொங்கிய எச்சரிக்கை வாசகம், "கோரோனா காலத்தில், வெளி இடங்களில் பிறரிடம் இருந்து 6 அடி விலகி இருங்கள்" என்று பயனில்லாத அறிவுரை சொன்னது. அதை நான் உன்னிப்பாகப் படித்துப் புன்னகைப்பதைக் கவனித்த ஒரு ஆஸ்பத்திரி ஒருங்கிணைப்பாளர்,  "சாரி சார். முதல் நாள் காலைலயே இத்தனை பேர் வருவாங்கன்னு நாங்க நினைக்கலை" என்று என்னிடம் சொன்ன சமாதானம் சரி என்று பட்டது. மற்றபடி தடுப்பூசி போடுவதற்கு நேர்த்தியான ஏற்பாடு, போட்டபின் அரை மணி காத்திருக்க தனி இட வசதி,  செய்திருந்தார்கள். 


அங்கு தடுப்பூசி போட்டவர்களுக்கு அந்த ஆஸ்பத்திரி பெயரில் உடனே ஒரு சிறிய மெலிய நோட்டுப் புத்தகமும் தந்தார்கள். அதன்  பக்கங்களில் ஊசி போட்டுக் கொண்டவரின் பெயர், ஆதார் போன்ற நபர்-அடையாள நம்பர், முதல் ஊசி போட்ட தினம், ஆகிய விவரம் எழுதி ஒரு சான்றாக வழங்கினார்கள். வந்தவர்களுக்கும்  திருப்தி, ஆஸ்பத்திரிக்கும் நல்ல பேர்.

 

இன்று அதே ஆஸ்பத்திரியில் இரண்டாவது ஊசி போட்டுக் கொண்டேன். நிறைய நாற்காலிகள்  இருந்தன. வந்தவர்கள்  தள்ளித்தள்ளி உட்கார முடிந்தது. புஜத்தில் குத்து வாங்கி வெளியே வருகையில், "உங்களுடைய நோட்டுப் புத்தகத்தைக் கொடுங்கள். ஒரு எண்டார்ஸ்மென்டும் போடுகிறோம்" என்று சொல்லி வாங்கி, அதில் எனது பெயர், ஆதார் நம்பர், இன்றைக்கு இரண்டாவது ஊசி போட்ட விவரம் எழுதினார்கள். பிறகு கடைசிப் பக்கத்தில் ஒரு மகிழ்ச்சியான அரை உண்மையை  நல்லெண்ணத்தோடு ரப்பர் ஸ்டாம்பில் பதித்தார்கள். நான் இனி "கோவிட் அண்டாதவர்" (Covid Immune) என்று அது என் முதுகைத் தட்டி ஊக்கப்படுத்தியது.

 

இரண்டு தடுப்பூசி போட்டவர்களையும் கோரோனா வைரஸ் தாக்கலாம், அவர்களும் அதைப் பிறருக்குத் தரலாம், ஆனால் வாக்ஸின் போட்டவருக்கு வைரஸால் மரணம் நேராமல் தடுப்பூசி ஆளைப் பிழைக்க விடும் என்றுதான் பத்திரிகைகள் சொல்கின்றன. பேச்சில் சொல்வது போல்  'பிழைத்துக் கிடந்தால்', அதையும் ஊர்ஜிதம் செய்கிறேன்.

 

* * * * *

Copyright © R. Veera Raghavan 2021

Sunday, 4 April 2021

வார்த்தைகள்


 -- ஆர். வி. ஆர்   


 
 

 

சிற்சில நேரத்தில்

சில சில எண்ணங்கள் 
சேர்ந்தால் அவைகளைச் 
சொல்வது அழகல்ல! 
 

 

 

சில பேச்சை  சில

செவிகள் கேட்கலாம்

எழுத்தில் வருவது

எந்நாளும் முறையல்ல!


 

 

என்னென்ன சிந்தனை

எவ்வெந்த வார்த்தையில்

எக்காலம் உரைப்பது

என்றுணர்தல் அறிவு! 

 

 


வார்த்தை வடிவில்

வெளிப்படும் அறிவு

வெளிவரும் முதிர்ச்சி

வசப்படுமா நமக்கு?

 

 

   

இறைவன் அருளோ

இயற்கையின் பரிசோ

இருத்தல் வேண்டும்

இதில்நாம் வெல்வதற்கு!


 


* * * * *

 

Copyright © R. Veera Raghavan 2021

 

Sunday, 28 March 2021

ரஜினிகாந்திற்கு ஒரு கடிதம்: ஏன் இந்த மஹா மௌனம்?

-- ஆர்.வி.ஆர்

 

அன்புள்ள ரஜினிகாந்த்,

  

எம்.ஜி.ஆரை அடுத்து, ஒரு வேற்று மாநிலத்தவராக தமிழ்த் திரையுலகில் அபார வெற்றி கண்டவர் நீங்கள். ஒரு நடிகராக, லட்சக்கணக்கான தமிழர்களை ரசிகர்களாக  ஈரத்திருக்கிறீர்கள்.  இன்னும் பலரிடமும் உங்களுக்கு நற்பெயர் உண்டு.

 

தமிழகத்தில் நீங்கள் பெற்ற வளர்ச்சிக்கு இரண்டு காரணங்கள். ஒன்று, உங்கள் திறமையும் உழைப்பும், அதோடு வந்த அதிர்ஷ்ட அறிமுக வாய்ப்புகளும். எளிதில் புலப்படாத மற்றொன்று: தமிழ் மக்களின் பாரபட்சமில்லாத பரந்த உள்ளம் - உங்களுக்குத் தெரியாதா என்ன?

 

உங்களுக்கு நல்ல மனது, நேர்மையான சிந்தனை என்பதும் அனைவருக்கும் தெரியும். அவைதான் தமிழகத்தில் உங்களுக்குப் பெருமதிப்பைக் கொண்டுவந்தன.    

 

நீங்கள் அரசியலுக்கு வருவீர்கள், தனிக்கட்சி தொடங்குவீர்கள், தமிழகத்தின் அனைத்து சட்டசபைத் தொகுதிகளிலும் அந்தக் கட்சி போட்டியிடும் என்று 2017  டிசம்பரில் – உங்கள் 67-வது வயதில் – அறிவித்தீர்களே,  அதற்குக் காரணம் உங்கள் நல்ல மனதுதான். அதாவது, உங்களைக் கொண்டாடும் தமிழ் நாட்டைப் பல பத்தாண்டுகளாக வஞ்சித்து நசுக்கும் தமிழக அரசியல் கட்சிகளிடம் இருந்து  மீட்க முனையலாம் என்று நினைத்தீர்கள். அதற்கான முயற்சி, தமிழர்களுக்கு நீங்கள் செய்யக் கூடிய பிரதி உபகாரம், ஒரு தார்மிகக் கடமை, என்று உங்கள் நல்ல மனது கண்டிப்பாகச் சொல்லி இருக்கும், அதனால்தான் நீங்கள் அரசியலுக்கு வருவேன் என்று பிரகடனம் செய்தீர்கள்.  அதற்குத் தோதான, எளிதான காலமும் அப்போது சேர்ந்து வந்தது - ஜெயலலிதா மறைந்துவிட்டார், கருணாநிதி வயோதிகத்தால் செயல் இழந்துவிட்டார், ஆனாலும் அவர்களது கட்சிகள் திடமாக இருந்தன.

 

ஒருவர் அரசியல் கட்சி தொடங்கிச் செயல்பட பல காரணங்கள் இருக்கும். டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், சீமான், சரத்குமார் என்ற பலருக்கும் பல காரணங்கள், பல பயன்கள் உண்டு. எம்.ஜி.ஆருக்கும் அப்படி உண்டு, கமல் ஹாசனும் அதில் சேர்த்தி. இவர்கள் எல்லாரையும் விட உங்கள் அரசியல் பிரவேச நோக்கம் உயர்ந்தது. ஆனாலும் நீங்கள் உங்கள் முயற்சியைத் தடபுடலாக ஆரம்பித்து கடைசியில் விட்டுவிட்டீர்கள்.  விட்டதற்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவான  உங்கள் உடல்நிலை மற்றும் பரவி வரும் கொரோனா வைரஸ் முக்கிய காரணங்கள் என்று 2020 டிசம்பரில் நீங்கள் அறிவித்தீர்கள். அதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால்  அந்த அறிக்கைக்குப் பின்னர், பற்றி ஏறியும் தமிழக அரசியலைப் பற்றி வாயே திறக்காத உங்கள் மௌனத்தை எப்படிப் புரிந்துகொள்வது?

 

நடிகர் விஜயகாந்த் 2005-ல் ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்து, அதற்கடுத்த வருடம் அவர் சந்தித்த முதல் சட்டசபைத்  தேர்தலிலேயே திமுக, அஇஅதிமுக இரண்டு கட்சிகளையும் ஒரு சேர எதிர்த்தார் – பத்து சதவிகித வாக்குகளையும் பெற்றார். அது ஒரு பெரிய ஆரம்பம். பிறகு மெள்ள மெள்ள அவருக்குத் தாக்குப் பிடிக்கும் மனவலிமை குறைந்து அவரது  உடல்நிலையும் மோசம் அடைந்து அவர் அரசியலில் பலவீனம் ஆனார். கடைசியாக இப்போது வந்த கமல் ஹாசனோ, இரண்டில் எந்தக் கட்சியோடு அணி சேர்ந்து முன்னேறலாம் என்று பார்த்து, சரியான சவாரி அமையாமல் இரண்டையும் வரும் சட்டசபைத் தேர்தலில் எதிர்க்கிறார்.

 

உங்கள் விஷயம் என்னநீங்கள் குறிப்பாக அரசியலுக்கு வர ஏன் ஆசைப் பட்டீர்கள்? நீங்கள் வராவிட்டால் திருமாவளவனோ சீமானோ சரத்குமாரோ தங்கள் கட்சிகளைக் கிடுகிடுவென்று வளர்த்து பத்துப் பதினைந்து வருடத்தில் தமிழக ஆட்சியைப் பிடித்து விடுவார்கள், அதை முன்பாகவே தடுக்க வேண்டும் என்பதற்காகவா? அல்லது திமுக, அஇஅதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளின் பிடியில் ஏற்கனவே ஐம்பது ஆண்டுகளாக சிக்கி நஷ்டப்படும் தமிழகத்தை, 2021 தேர்தல் மூலமாக விடுவிப்பது நல்லது என்பதற்காகவாபின்னதுதான் காரணம் என்று உங்கள் பேரக் குழந்தையும் சொல்லும்.  

 

திமுக, ஹிந்து மதத்திற்கு எதிராக நேரடியாகவும் மறைமுகமாகவும் செயல்படுகிறது, அஇஅதிமுக ஹிந்து மதத்திற்கு விரோதம் காட்டும் கட்சி இல்லை, அது திமுக-வையும் எதிர்க்கிறது என்பது போக, இரண்டு கட்சிகளின் மற்ற வண்டவாளங்கள் ஒன்றுதான். இது தவிர, திமுக-வின் அடிதடி அராஜக ஆட்டங்கள், மைக் வசைமொழிகள் ஆகியவை பிரசித்தம்.  அதனால்தான் நீங்கள் அந்த இரண்டு பெரிய கட்சிகளையும் எதிர்க்க நினைத்தீர்கள்.

 

திமுக மற்றும் அஇஅதிமுக கட்சிகளை 2021 தேர்தல் மூலமாக தமிழக ஆட்சிக்கு வராமல் செய்வது, உங்கள் கட்சி அந்தத் தேர்தலில் வென்று மாநிலத்தில் நேர்மையான திறமையான ஆட்சி தருவது, இந்த இரண்டும்தான் நீங்கள் செய்ய விரும்பியது. நீங்கள் கட்சி ஆரம்பிக்க முடியாததால் இரண்டாவது காரியத்தை செய்ய முடியவில்லை என்றால் சரி. ஆனால் திமுக மற்றும் அஇஅதிமுக கட்சிகளுக்கு எதிராக நீங்கள் ஒரு வகையில் கூட நகர முடியாமல் போய்விட்டதா என்ன?

 

அநீதி அக்கிரமத்தை எதிர்த்துக் குரல் கொடுத்து வீதியில் வந்து போராடிய மஹாத்மா காந்தியும் ஜெயபிரகாஷ் நாராயணனும், பின்னால் வந்த மாற்று ஆட்சியில் பங்கெடுக்க வில்லை. யாரை எதற்கு அரசியல் ரீதியாக எதிர்க்க வேண்டுமோ அதற்குக் குரல் கொடுத்து எதிரிகளின் பலத்தைக் குறைத்து, அரசியல் வில்லன்களுக்கு எதிராக மக்கள் சக்தியைத் திரட்டினார்கள், மக்கள் மனதில் நம்பிக்கை ஏற்படுத்தினார்கள். அதுவே சுயாட்சிக்கு, நல்லாட்சிக்குப் பெரும் சேவையாக இருந்தது.  அது மாதிரி, நீங்கள் கட்சி ஆரம்பிக்காமல், உங்கள் கட்சியினர் பதவிக்கு வராமல், போனாலும் நீங்கள் தமிழக அரசியல் நலனுக்கு உங்களால் ஆனதை செய்யவேண்டாமா? இந்த டிஜிட்டல் யுகத்தில், உங்களின் ஒரு பேச்சு, ஒரு அறிக்கை, ஒரு வேண்டுகோள், மக்களிடையே மின்னலாகப் பரவி முடிந்த தாக்கத்தை உண்டாக்குமே?

 

தமிழக சட்டசபைத் தேர்தல் இன்னும் எட்டு நாட்கள் கழித்து, ஏப்ரல் 6-ம் தேதி நடக்கப் போகிறது. தமிழகத்தில் தப்பாட்சி செய்து மாநிலத்தை முடக்கி வைத்திருக்கும் இரண்டு பெரிய கட்சிகளும் ஆட்சிக்கு வரக்கூடாது, தமிழக வாக்காளர்கள் அதை நினைவில் கொள்ளவேண்டும் என்று நீங்கள் இதுவரை பொதுவெளியில் சொல்லக்கூட இல்லை. கட்சி தொடங்க முடியாவிட்டாலும், தமிழக ஆட்சிக்கு யார் வரக் கூடாது என்றாவது நீங்கள் பளிச்சென்று சொல்லி இருந்தால், அதுவே நல்ல பலன்களுக்கு வித்திடும். அத்தகைய உங்கள் கருத்தும் வேண்டுகோளும் முன்பே வெளிவந்திருந்தால், அதற்கு ஏற்ப முக்கிய அரசியல் கூட்டணியும் தமிழகத்தில் உருவாகி ஒரு நல்வழிக்குப் பாதையும் ஏற்பட்டிருக்கும். இதை நீங்கள் செய்யாததிற்கு, உங்கள் உடல் நிலையோ கொரோனாவோ   காரணம் ஆகாதே

 

அரசியலுக்கு நீங்கள் வராமல் இருப்பதற்கான காரணம் சொன்னீர்களே, அதை உங்கள் தமிழக ரசிகர்கள் ஏற்பார்கள் - பிறகு இப்போது நீங்கள் நடிக்கும் அடுத்த படத்தை எதிர்பார்ப்பார்கள். அதுவும் அவர்களின் அமைதியான பரந்த உள்ளத்திற்கு அடையாளம். ஆனால் உங்கள் நல்ல மனது உங்கள் மௌனப்  போக்கை ஏற்குமா?

 

உங்கள் மனது நலிந்து துணிவையும் இழந்திருந்தால் ஒழிய, உங்கள் மௌனத்தினால் அது சமாதானம் அடையாது. அது உங்களை நச்சரித்தால், வரும் தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முன்னர் கூட ஒரு அறிக்கை மூலம், இப்போது தேர்தலை சந்திக்கும் கூட்டணிகளில் எது வெல்லக் கூடாது, எது இருப்பதில் நல்லது என்று நீங்கள் மக்களுக்குச் சொல்லலாம். அது சரியான வேண்டுகோளாக இருக்கும் என்பது உங்கள் நோக்கத்தை அறிந்தவர்களின் எதிர்பார்ப்பு.

 

நீங்கள் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி. இப்போது நீங்கள் ஒன்றும் சொல்லாமல் இருந்தால், அது நூறு குற்றங்கள் செய்த மாதிரி. கேட்டுப்பாருங்கள், உங்கள் நல்ல மனது சொல்லும்.

 

அன்புடன்,


ஆர். வி. ஆர்.

* * * * *

Copyright © R. Veera Raghavan 2021


Saturday, 20 March 2021

திமுக-க்கு ஓட்டில்லை போடா!

 -- ஆர். வி. ஆர்   



திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் முன்பு வீதி மொழியில் வந்த ஒரு கோஷம், “இந்தி தெரியாது போடா!“.   

கடந்த பத்தாண்டுகளாக தமிழக ஆட்சியில் இல்லாத திமுக, வரும் ஏப்ரல் 6-ல் நடக்கப் போகும் நமது மாநில சட்டசபைத் தேர்தலில் வெல்ல முனைகிறது.  திமுக ஆட்சி அமைப்பது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல என்பதைச் சொல்லும் கவிதை இது - வீதி மொழியின் மணம் சேர்க்கப்பட்டது.

 

  

 

தமிழகம் தழைக்கணுமாடா?

தப்பாமல் இதை நீ அறியடா

தாரக மந்திரம் ஒன்றடா

திமுக-க்கு ஓட்டில்லை போடா!  

 

 

 

சகலரும் நிம்மதியா வாழவே

ட்டமும் ஒழுங்கும் தேவைடா

தெருவெங்கும் அடிதடி எதுக்கு?

திமுக-க்கு ஓட்டில்லை போடா!


 

 

அரசுப்பணம் பத்திரமா இருந்தா

ஆக்கப் பணி எளிதாகுமேடா

தொலைப்போமா நம் செல்வம் நாமே

திமுக-க்கு ஓட்டில்லை போடா!  

 

 

  

ஆற்று மணல் வீடு நிலம் எல்லாம்

அள்ளி அபகரிப்பது யாரடா?

தேச நலன் மக்கள் நலம் காக்க

திமுக-க்கு ஓட்டில்லை போடா!

 

 

   

மாதர்தம்மை வாய் நிறையப் போற்றுவார் – பின் 

மகளிர் அச்சம் கொள்ளவைப்பாரடா

தைரியமாய்ப் பெண் குரல்கள் சொல்லட்டும்

திமுக-க்கு ஓட்டில்லை போடா!

 


  

தீய சொல் செயல்கள் மிகுந்து – ஹிந்து

தெய்வம் மதம் பழிப்போர் யாரடா?

தன்மானம் கொண்டு நாம் உரைப்போம்

திமுக-க்கு ஓட்டில்லை போடா!

 

 

* * * * *

 

Copyright © R. Veera Raghavan 2021

Tuesday, 2 March 2021

பசுமாடே பசுமாடே ...

-- ஆர். வி. ஆர்   



இந்தியாவின் பல ஊர்த் தெருக்களில் பசுமாடுகள் உணவுக்காக பரிதாபமாக அலைகின்றன. அவைகளுடன் நாம் இப்படிப் பேசலாம். 

 

  

 

பாவப்பட்ட பசுமாடே – நீ

பாதகம் முன்னர் செய்தாயோ?

உலகிற்குப் பாலைத் தருகின்றாய் – உன்

உணவைக் குப்பையில் தேடுகிறாய்.

 

 

 

ஊர் ஜனம் நெய்தயிர் சுவைத்திருக்க – சவ

ஊர்வல மலர் உண்ண ஏங்குகிறாய்.

ஆதிநாள் முதல் அன்னதாதா

ஆன தெய்வம் நீதானா?

 

 

 

மானுட சிறுவர் உன் பாலை

மகிழ்ந்து குடித்து வளர்கையிலே

உன் ஆண் கன்றுகள் பல உயிரை

உடன் எம் அரிவாள் கொல்கிறதே 

 

 

  

‘ம்மா’ என ஒலி நீ எழுப்பினால்

எம் தாய்மீதுணர்வு எழுகிறது

அன்னையின் பொறுமை பயன் மிக்க

உன்னைப் பேணுவோர் ஏனில்லை?

 

 

   

கயமை மாந்தரை சகித்திருப்பாய் – உன் 

கண்ணில் சாந்தம் குவித்திருப்பாய்.

நாய்ப் பிழைப்பென்பது கேவலமா – சொல் நாங்கள் மனிதர் கேவலமா?

 


* * * * *

 

Copyright © R. Veera Raghavan 2021

Wednesday, 10 February 2021

சிறை சென்ற சசிகலாவுக்கு கோலாகல வரவேற்பு. இது இந்தியா!

          -- ஆர். வி. ஆர்

 

தெரியுமல்லவா? தேங்காய் பூசணி உடைப்பு, ஆரத்தி மரியாதைகளோடு சசிகலா நேற்று காலை பெங்களூரில் இருந்து சாலை வழியாக சென்னைக்கு வந்துவிட்டார்.  வழியில் சசிகலாவின் ஆயிரக் கணக்கான அபிமானிகளால் அவரது கார் அவ்வப்போது  நிறுத்தப்பட்டு, மலர் தூவப்பட்டு ஊர்ந்து வந்தது. வாகனத்தின் முன் சீட்டில் அமர்ந்தபடி, தனது காரை சூழ்ந்து ஆர்ப்பரித்த மக்களுக்குக் கும்பிடு போட்டு  இரு விரல் உயர்த்தியபடி வந்தார் அவர். வழி நெடுக வெயிலிலும் பனியிலும் இத்தனை மக்களையும் ஏற்பாடு செய்து பணம் கொடுத்து ஒருவர் கூட்டி வந்திருக்க முடியாது. தானாக வந்தவர்கள் அதிகம் இருப்பார்கள்.

 

சசிகலா ஆதரவு டிவி-யிலும் ‘தியாகத் தலைவி சின்னம்மா’ என்ற அவர் போற்றப்பட்டு அவரது பயணம் முழுவதும்  நேரடி ஒளிபரப்பாகியது.  சாதாரண ஆறேழு மணி நேர பயணம் இருபத்தி மூணு மணி நேரமாகியது.  இரவிலும் கண்விழித்து பெருமிதமாக வந்தார் சசிகலா.

 

ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சுப்ரீம் கோர்ட்டால் தண்டிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையை பெங்களூரு சிறையில் முடித்துவிட்டு சசிகலா காரில் சென்னைக்கு திரும்பி வந்தார். அப்போதுதான் அவருக்கு இவ்வளவு தடபுடலான வரவேற்பு. ஊழல் குற்றத்திற்காக, அதற்கு கூட்டுசதி செய்து துணை போனதற்காக, ஜெயில் தண்டனை ஏற்பது நமது அரசியல் தலைவர்களுக்கு அவமானம் அல்ல, அவர்களின் மக்கள் செல்வாக்கையும் அது பாதிக்காது. தண்டனை காலத்தில் தமது செயல் திறன் முடங்கி இருப்பதுதான் அவர்களின் கவலை. வெளி வந்த பின் அவர்களுக்கு அப்பாவி மக்களிடையே இன்னும் மெருகு ஏறலாம். காரணம், இது இந்தியா!

 

இந்தியா முதிர்ச்சி இல்லாத ஒரு ஜனநாயகம். அதற்கான முக்கிய அடையாளம் நமது மக்களின் ஏழ்மை அல்ல – அதன் பங்கு சிறிதளவுதான்.  தங்களை ஏமாற்றி, தங்கள் தலையில் நர்த்தனம் ஆடிக் கொழிக்கும் அரசியல்வாதிகளின் கயமையை உணராத நமது அப்பாவி ஜனங்கள்தான் அதற்கான முக்கிய அடையாளம். ஒரு உதாரணம் சொல்லி இதை விளக்கலாம்.  

 

அமெரிக்காவை எடுத்துக் கொள்ளுங்கள். 2016 தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க ஜனாதிபதியானவர் டொனால்ட் டிரம்ப்.  பிறகு மறுபடியும் 2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது, தனது நாட்டின் கணிசமான மக்கள் ஆதரவு இருந்தும் அவர் ஜனநாயக விரோதமான காரியங்களை அப்பட்டமாக செய்தாரே, என்ன காரணம்அமெரிக்கா முதிர்ச்சியற்ற ஜனநாயகம், அங்கு அப்படித்தான் நடக்கும் என்பதாலா? இல்லை. அமெரிக்கா முதிர்ச்சி அடைந்த ஜனநாயகம்தான், முதிர்ச்சி அம்சத்தில், நமது இரு ஜனநாயகங்களுக்கும் உள்ள வித்தியாச அறிகுறிகள்  நன்றாகத் தெரிகின்றன.   

 

எந்த சூழ்நிலைக்கும் ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கும். அமெரிக்க ஜனநாயகத்தில் பித்துக்குளி டிரம்ப் விதி விலக்கானவர். 2020 தேர்தலில் ஜெயித்து அவர் மறுபடியும் ஜனாதிபதியாக ஆசைப்பட்டார். இரண்டாம் முறை தேர்தலில் வெல்வதற்காக அவர் சட்டத்தையும் ஜனநாயக பண்புகளையும் அபாண்டமாக மீறிய போது - அதுவும் தனக்கு எதிராக வெளிப்பட்ட சில மாநில ஓட்டு எண்ணிக்கை முடிவுகளை அவர் தனக்கு சாதகமாக அமைக்க முயற்சிகள் செய்தபோது - என்ன ஆயிற்று? எதிர்க் கட்சியினர் மட்டுமல்ல, அவரது  குடியரசுக் கட்சித் தலைவர்களே பலர் அவரிடம் இருந்து விலகி அவரது ஜனநாயக விரோத போக்கிற்கு துணை போகவில்லை. அவர் தனித்து விடப்பட்டார். அதனால் அவர் 2020 ஜனாதிபதி தேர்தலில் முறைகேடாக வெல்ல முடியவில்லை. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜோ பைடன்தான் வென்றார்.

 

இப்போது இந்தியாவில் நடக்கும் வேறு ஒரு காட்சியைப் பாருங்கள். பிரதமர் மோடி அப்பழுக்கற்ற நேர்மையாளர், குறிப்பாக பொதுப்பண விஷயங்களில். அவரால் ஆட்சிக்கும் வர முடியாமல் அதன் கோடி கோடி பலன்களை அடையவும் முடியாமல் தவிக்கும் எதிர்க் கட்சித் தலைவர்கள் ஒன்றா இரண்டா? தங்களுக்குள்ளேயே பிளவு பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர்கள், ஒரு நேர்மையாளரை எதிர்ப்பதற்காக இப்படி திரும்பத் திரும்ப ஒன்று கூடுகிறார்கள் என்றால் அதுவே நமது முதிர்ச்சி இல்லாத ஜனநாயகத்தின் அடையாளம். 

 

ஜனநாயக முதிர்ச்சி உள்ள நாட்டில், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அரசாங்கத்தின் கஜானா முறையாகக் காக்கப்பட்டு அது  கொள்ளை போகாமல் கவனிக்கப் படும். இதற்கு இங்கிலாந்தும் அமெரிக்காவும் உதாரணங்கள். இந்தியாவில் பா.ஜ.க-வுக்கு மாற்றாக பல கட்சிகள் இருந்தாலும்அநேகமாக அவை அனைத்தும் அரசு கஜானாவின் சிறந்த பாதுகாவலர்கள் இல்லை.  அந்த கட்சித் தலைவர்கள் வெளியில் பேசக் கூடாத பொருளாதார வல்லமை கொண்டவர்கள்.  அது பற்றி உங்களுக்கும்  தெரியுமே?

 

சாமர்த்தியமாக சம்பாதிக்கும் தலைவர்கள் சட்டத்தில் சிக்காமல் ஊழல் செய்வார்கள். அது தெரியாமல் அநேக மக்கள் நமது நாட்டில் அந்தத் தலைவர்களையே திரும்பவும் ஆட்சிக்கு தேர்வு செய்வார்கள். இது போக, தாங்கள் சட்டத்தில் மாட்டி ஊழலுக்கான தண்டனை பெற்று வெளிவந்தாலும், அநேக மக்கள் தங்கள் சொல்படி ஓட்டளிப்பார்கள் என்ற சரியான நம்பிக்கையும் நமது தலைவர்கள் பலருக்கு உண்டு. இந்தியா முழுவதும் இதுதான் நிலை. தமிழ் நாட்டில் இது ஸ்டாலினுக்குத் தெரியாதா, சசிகலாவுக்குப் புரியாதா?

 

சிரிப்பை அடக்கிக் கொண்டு ஒரு கேள்வி கேட்கலாம். சசிகலா அதிமுக-விற்குள் வருவதை, வந்து தலைமை ஏற்பதை எதிர்க்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், மர்ம மவுனத்தில் இருக்கும் துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வமும் எப்படிப்பட்டவர்கள்? பொது வாழ்வில் நேர் நடத்தையை உயர்த்திப் பிடிக்கும் ஜனநாயக தூண்களா? இருக்க முடியாது.

 

தினமும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகழ் பாடி, மதுரை அருகே அவருக்காகக் கட்டிய கோவில் ஒன்றையும் சமீபத்தில் திறந்து வைத்தவர்கள்  ஈ.பி.எஸ், ஒ.பி.எஸ் இருவரும்.  அவர்கள் போற்றி வணங்கும் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவருடன் 33 வருடங்கள் நெருங்கிய தொடர்பில் இருந்து, அதில் பல காலம் ஜெயலலிதாவின் வீட்டிலேயே தங்கி ஜெயலலிதாவுக்கு உதவியவர் சசிகலா. ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி என்றும்  அறியப் பட்டவர் அவர்.  பலர் அறியாத ஜெயலலிதாவின் தனிப்பட்ட முக்கிய விஷயங்கள் சசிகலாவுக்குத் தெரியும். அந்த அளவு சசிகலாவின் மீது நம்பிக்கை வைத்து அவரை சார்ந்திருந்தார் ஜெயலலிதா. ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க முடியாமல் இருந்தார்கள். இதை எல்லாம் உணர்ந்த அதிமுக-வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள், அந்த இருவரையும் தொழுது வந்தால்தான் தாங்களும் பிழைத்து செழிக்க முடியும்  என்று அந்தப் பணி செய்து தங்களுக்கும் வசதி செய்துகொண்டார்கள்.   

 

தமிழக முதல்வர் என்ற பதவியில் பொது ஊழியராக  இருந்த ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஜெயலலிதா தன் வருமானத்திற்கு அதிகமான சொத்து வைத்திருந்தார், அந்த அதிக சொத்தை சேர்ப்பதற்காக அவர் சசிகலா, இளவரசி மற்றும் வி.என். சுதாகரனோடு கூட்டு சதி செய்தார் என்று ஜெயலலிதா மீது கிரிமினல் வழக்கு வந்தது.  சசிகலாவும் மற்ற இருவரும் அந்தக் கூட்டு சதியில் ஈடுபட்டார்கள், ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்புக்கு துணை போனார்கள்  என்பது அந்த மூவர் மீதான வழக்கு.  ஜெயலலிதாவிடம் பொது அதிகார ஆவணம் பெற்றிருந்த சசிகலா அந்த மூவரில் முக்கிய புள்ளி.  

 

மாஜிஸ்டிரேட் கோர்ட், ஹை கோர்ட் இரண்டையும் கடந்து வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்து இரு தரப்ப வாதங்களும் முடிந்த நிலையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு  சொல்ல தாமதம் ஆனது. அந்த தீர்ப்பு வருவதற்கு முன் டிசம்பர் 2016-ல் ஜெயலலிதா மறைந்தார். பின்னர் ஒரு நாள் தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட், மாஜிஸ்டிரேட் கோர்ட்டின் முடிவுகளை ஏற்று, சொத்துக் குவிப்பு நடந்தது என்று உடன்பட்டது. 

 

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு முன் ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவர் மீதான வழக்கு ஓய்ந்து போனது (proceedings abated) – அதாவது அவர் மீது தீர்ப்பு எதுவும் சொல்லாமல் அவருக்கு எதிரான வழக்கு மட்டும் சட்ட ரீதியாக நிறுத்தப் பட்டது.  சசிகலா, மற்ற இருவரின் மீதான குற்றச்சாட்டுகள்  – அதாவது, ஜெயலலிதாவின் சொத்து குவிப்பிற்காக அவருடன் கூட்டு சதி செய்தது, ஜெயலலிதாவின் சொத்து குவிப்பிற்கு துணை போனது ஆகிய குற்றச்சாட்டுகள் – நிரூபணம் ஆனது என்று சுப்ரீம் கோர்ட்டும்  முடிவு செய்தது. அதோடு, சசிகலாவுக்கும் மற்ற இருவருக்கும் மாஜிஸ்டிரேட் கோர்ட் விதித்த நான்கு வருட சிறைத் தண்டனையையும் ஊர்ஜிதம் செய்தது சுப்ரீம் கோர்ட். அந்த தண்டனையை பூர்த்தி செய்துவிட்டுதான் சசிகலா இப்போது வெளி வந்திருக்கிறார். ஊழல் சம்பந்தமான வழக்கில் தண்டனை அடைந்து வெளிவந்ததால் அவருக்கு  ‘தியாகத் தலைவி’ பட்டமும் கிடைத்துவிட்டது. புதிய பட்டத்திற்கு ஏற்ப இனி அவர் என்ன என்ன தியாகச் செயல்கள் செய்வாரோ!

 

தண்டனை பெற்று சிறை செல்வதற்கு முன் சசிகலா நியமித்த எடப்பாடி பழனிசாமிக்குதான் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்து அவரை முதல்வராக ஆக்கினார்கள்.  சசிகலாவை விலக்கிய அதிமுக தன் கையில் சிதையாமல் இருக்கும், மக்களும் தன் தலைமையை ஏற்பார்கள் என்று இந்த நிமிடம் வரை நம்புகிறார் எடப்பாடி.

 

தலைவர்களிடம் ஒரு ஈர்ப்பு (charisma) இருந்தால் அப்பாவி இந்திய மக்கள் அதன் காரணமாகவே அந்தத் தலைவர்களைப் பெரிதும் ஆதரிப்பார்கள். இந்த ஈர்ப்பானது, இயற்கையாக அமைந்த தோற்ற ஈர்ப்பாக இருக்கலாம் – உதாரணம், நேரு, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா. இன்னொரு விதமாக,   ஒரு தலைவர்  ஆற்றிய பணிகளால் மக்களுக்கு பெரிய நன்மைகள் ஏற்பட்டு அதன் விளைவாக அந்தத் தலைவருக்கு கிடைக்கும் காரிய ஈர்ப்பாக இருக்கலாம்  - உதாரணம். நரேந்திர மோடி. சசிகலாவை நீங்கள் ஏற்கிறீர்களோ இல்லையோ,  அவருக்கும் ஓரளவு தோற்ற ஈர்ப்பு வந்திருக்கிறது.   

 

தனக்குக் கிடைத்த  மக்கள் சக்தியை ஆதாரமாக வைத்து, ஈர்ப்புள்ள ஒரு இந்தியத் தலைவர் மக்களுக்கு நல்லது செய்கிறாரா, அல்லது தனக்கு ஆதாயம் தேடிக் கொள்கிறாரா என்பது அந்த அந்தத் தலைவரின் நல்லொழுக்கத்தைப் பொறுத்தது, அப்பாவி மக்களின் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது.  

 

மீண்டும் தமிழ்நாட்டைப் பார்க்கலாம். ஜெயலலிதாவின் அடிப்படைக் குற்றமான சொத்துக் குவிப்பை நீக்கிவிட்டு, சசிகலாவின் கூட்டு சதி மற்றும் துணை போதல் குற்றம் நிலைக்க முடியாது.  அதாவது, ஜெயலலிதா ஒரு குற்றமும் செய்யவில்லை, சசிகலாதான் ஏதோ குற்றம் செய்து தண்டனை அடைந்தார் என்று எடப்பாடி பழனிசாமியும் வேறு யாரும் சொல்ல முடியாது.  ஜெயலலிதாவும் சசிகலாவும்  வேறு வேறு வகையில் ஊழல் தொடர்பான குற்றங்கள் செய்தவர்கள்தான்.

 

ஜெயலலிதாவின் நிழலில் சசிகலா அமோக பயன் அடைந்தது போல், ஜெயலலிதாவின் நினைவையும், படத்தையும் போற்றி, சசிகலாவைத் தள்ளிவைத்து,    எடப்பாடி பழனிசாமியும் மற்ற சில அதிமுக தலைவர்களும் அபாரமாகத்  பயன் அடையப் பார்க்கிறார்கள், ஆனால் அனுபவம் வாய்ந்த சசிகலா விடுவதாக இல்லை. சிறையில் இருந்து வெளி வந்த உடன் தனது மக்கள் ஆதரவை, ஓட்டு சக்தியை, எடப்பாடிக்கு உணர்த்த ஆரம்பித்து விட்டார் சசிகலா. இதுதான் விஷயம், இதுதான்  அவர்களுக்குள்ள போட்டி. யார் கண்டது, இந்தப் போட்டியில் எடப்பாடி தரப்பு சிறிதாகவோ சற்று பெரிதாகவோ வெல்லலாம், அல்லது சசிகலா நன்கு வெல்லலாம். அல்லது எடப்பாடியும் அவருடன் சேர்ந்திருக்கும் தலைவர்களும் சசிகலாவுக்குப் பணிந்து அவரோடு இணைந்து அனைவரும் தங்களுக்குக் கிடைக்கும் பயன்களைப் பிரித்து  அனுபவிக்கலாம்.  சொல்லுங்கள், இதுதானே இந்தியா?

 

* * * * *

 

Copyright © R. Veera Raghavan 2021