Friday, 16 May 2025

பஹல்காம்: இந்தியாவைப் பெருமைப் படுத்தும் மோடி

 

          -- ஆர். வி. ஆர்

 

பாகிஸ்தானின் ஆதரவோடு நான்கு பயங்கரவாதிகள்  சென்ற ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமிற்கு வந்து 25 சுற்றுலாப் பயணிகளை – அவர்கள் அனைவரும் ஹிந்துக்கள் என்று ஊர்ஜிதம் செய்த பின்னர் – படுகொலை செய்தனர். சீறி எழுந்தது மோடியின் இந்தியா.

 

தனது ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதிகளில் இந்தியா மின்னல்வேகத் துல்லியத் தாக்குதல்கள் நடத்தியது. அங்கு செயல்பட்ட 9 பயங்கரவாத முகாம்களை அழித்து நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளைக் கொன்றது. சில பாகிஸ்தான்  ஊர்களின் வான்வெளிப் பாதுகாப்புக் கவசங்களை நொறுக்கிவிட்டு, அந்நாட்டின் 11 ராணுவ விமானத் தளங்களின் ஓடுபாதைகளையும் இந்தியா உருக்குலைத்தது.

 

பாகிஸ்தானின் எதிர் ராணுவ நடவடிக்கைகளால் இந்தியாவுக்குச் சில வருந்தத்தக்க உயிரிழப்புகள் ஏற்பட்டன. வேறு பெரிய பாதிப்பில்லை.

 

ஒரு கிரிக்கெட் டெஸ்ட் மேட்ச் காலத்திற்குள், நான்கே நாட்களில் போரைச் சுத்தமாக முடித்து பாகிஸ்தானைப் போர் நிறுத்தம் கேட்க வைத்தது இந்தியா. அந்த நாட்டை முடக்கிய பிரதமர் மோடியின் பேரும் புகழும் இந்தியர்களிடம் இப்போது அதிகரிக்கும். ஏனென்றால் உலகறிய அவர் தலைமையில் கிடைத்த பிரும்மாண்ட வெற்றி அது. பின்னாளில் பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறிச் செயல்பட்டால், இந்தியா ஓங்கித் திருப்பி அடிக்கும் என்பது பாகிஸ்தானின் புதிய உள்ளுணர்வு.

 

முன்னதாக, பஹல்காம் படுகொலைகள் நடந்த இரண்டாவது நாள் பீஹாரில் பேசிய பிரதமர் மோடி, “கொலையாளிகள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தொடரப் படுவார்கள். அவர்களையும் அவர்களின் பின்னால் இருப்பவர்களையும் தேடிப் பிடித்து தண்டிப்போம்” என்று சூளுரைத்தார். கொலையாளிகளை ஏவிய பாகிஸ்தான் கதறக் கதற தண்டிக்கப் பட்டுவிட்டது. கொலை பாதகர்கள் தேடப் படுகிறார்கள்.

 

நமது எதிர்க் கட்சி அரசியல் தலைவர்களின் அணுகுமுறை எப்படி இருந்தது?

 

பிரதமர் மோடி பொருத்தமாகப் பாகிஸ்தானைப் பழி வாங்குவார், அதற்குத் தேவையான தீவிரமும் மன உறுதியும் அவரிடம் உண்டு, தனது பதில் நடவடிக்கைகளை உலக நாடுகள் ஏற்கச் செய்யும் ஆற்றலும் கொண்டவர் மோடி, என்பது இந்தியாவின் எதிர்க் கட்சிகள் அனைத்திற்கும் தெரியும்.

 

மோடியை எதற்கும் எப்போதும் எதிர்க்கும் எதிர்க் கட்சிகள், பஹல்காம் விஷயத்தில் ஆரம்பம் முதலே மத்திய அரசின் நடவடிக்கைகளுக்குத் துணை நிற்பதாக அறிவித்தன. இப்போது மோடியை எதிர்த்துவிட்டுப் பின்னால் நாம் தனிமைப்படக் கூடாது, ஜாக்கிரதையாக இருப்போம், என்ற எண்ணமும் எதிர்க் கட்சிகளுக்கு உண்டு. சில கசக்கும் கற்பனைகள் இந்த உண்மையைப் பளிச்சென்று காட்டும்.


பஹல்காம் படுகொலைகள் நிகழ்ந்த நாளில் மோடிக்குப் பதிலாக, நம் தலைவிதியாக ராகுல் காந்தி பிரதமராக இருக்கிறார், அல்லது இன்னும் திகிலாக மம்தா பானர்ஜிதான் அப்போதைய பிரதமர், அல்லது படு பயங்கரமாக மு. க. ஸ்டாலின் அன்றைய பிரதமர் என்றெல்லாம் நினைத்துப் பாருங்கள். அவர்கள் எவ்விதம் பேசுவார்கள்? மோடி மாதிரி பாகிஸ்தானுக்கு எதிராக தில்லாகக் குரல் எழுப்புவார்களா? அப்படி நடக்காது. 

 

ராகுல் காந்தி இப்படி உளறுவார்: "எனக்கு முந்தைய பத்தாண்டு மோடி அரசு, பட்டியலின மக்கள், பழங்குடி மக்கள், ஓபிசி மக்கள் ஆகியோருக்கு நியாயம் வழங்கவில்லை, அதன் விளவை நாம் பஹல்காமில் பார்த்தோம். இனி பாஜக தனியாகவோ கூட்டணியாகவோ மத்தியில் ஆட்சிக்கு வராது என்று நமது நண்பன் பாகிஸ்தானுக்குத் தெரிவிப்போம். அவர்களுடன் நட்பை வளர்ப்போம்."

 

மம்தா பானர்ஜியின் பிதற்றல் இப்படிப் போகும்: "பாஜக தான் நான்கு நபர்களை பஹல்காமுக்கு அனுப்பி அங்கிருந்த சுற்றுலாப் பயணிகளிடம் அவர்களின் மதம் பற்றிக் கேட்க வைத்துப் பின் கொலைகளை அரங்கேற்றியது. இதற்காகப் பாகிஸ்தான் மீது இந்தியா நடவடிக்கை எடுத்தால், அதன் விளைவாக நம் நாட்டில் கலவரங்களை உண்டாக்கி எனனைப் பிரதமர் பதவியிலிருந்து இறக்கி விடலாம் என்பது தானே பாஜக-வின் கனவு? அது நடக்காது. மக்கள் என் பக்கம்."

 

மு. க. ஸ்டாலினின் குழந்தைப் பேச்சு இப்படி இருக்கலாம்: "மோடி அவர்களே! என் அன்பிற்குரிய சிறுபான்மையினரும் மற்றவர்களும் இந்தியாவில் ஒருவருக்கொருவர் இன்முகத்துடன் சகோதர பாசத்துடன் பழகி வருவது உங்களுக்கு வேப்பங்காயாக இருக்கிறதா? அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காஷ்மீரத்தில் சில நிகழ்வுகள் நடந்தால், நீங்கள் ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்கலாமா? எனது அருமை நண்பர் பாகிஸ்தானின் ராணுவத் தளபதிக்கு நான் சொல்லிக் கொள்கிறேன்: இந்திய மக்கள் நன்மக்கள். நீங்கள் வைத்திருக்கும் காஷ்மீர் பகுதி பகிஸ்தானுக்கே வேண்டும் என்றால், அதை இந்திய மக்கள் அன்பளிப்பாக உங்கள் நாட்டுக்கு வழங்கிட சம்மதிப்பார்கள் என்று நான் இந்த நேரத்தில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்!"

 

எதிர்க் கட்சிகளின் கூட்டணி இப்போது மத்தியில் ஆட்சி செய்தால், பஹல்காம் படுகொலைகளுக்காகப் பாகிஸ்தானைத் தட்டிக் கேட்கும் தைரியம் அவற்றில் ஒரு கட்சிக்கும்  இருக்காது, முழு மனதும் இருக்காது. அந்தப் பயங்கரவாத நாட்டின் மீது வலுவான ராணுவ நடவடிக்கை எடுக்கத் தேவையான நெஞ்சுரமும் தலைமைக் குணங்களும் எதிர்க் கட்சிகளிடம் கிடையாது. ஆனால் மோடி வேறு மாதிரியான பிரதமர் – இது எதிர்க் கட்சிகளே அறிந்தது.

 

பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளுக்குத் தமது ஆதரவை முன்னதாகவே சொல்லி வைத்தால், இப்போதே அவர் பின்னால் நின்றால், சில கைதட்டல்கள் நமக்கும் வந்து சேரும் – அல்லது பரவலான வசவுகளாவது வராது – என்பது பல முக்கிய எதிர்க் கட்சிகளின் எண்ணம். அதன்படி அவர்கள் செயல்பட்டார்கள்.  

 

2020-ம் ஆண்டு சீனா எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் அத்துமீறல் செய்த போது, அப்போது மோடியைத் தொடர்ந்து சீண்டியவர் தானே ராகுல் காந்தி?  சீனாவுக்கு எதிரான நமது அன்றைய ராணுவ நகர்வுகள் மிதமாக, கமுக்கமாக நடைபெற வேண்டி இருந்தன. அப்போது தேச நன்மையை உயர்த்திப் பிடிப்பதும், மத்திய அரசின் பின்னால் நிற்பதும் ராகுல் காந்திக்கு அரசியல் லாபம் தருவதாகத் தோன்றவில்லை. இப்போது மட்டும் அவருக்கு எல்லாவற்றையும் விட தேச நலன் முக்கியம் என்று நாம் கருத முடியுமா?  பிற எதிர்க் கட்சித் தலைவர்களும் அப்படித்தானே?

 

பாகிஸ்தான் ராணுவம் தனது படைபலத்தையும் ஆயுதங்களையும் வைத்து, அந்நாட்டு அரசியல்வாதிகளுக்கு உயிர்ப் பயத்தை உண்டாக்கி, ராணுவம் முன்னதாகத் தேர்ந்தெடுத்தவர்கள் தான் தேர்தலில் ஜெயித்து எம்.பி-க்களாகவும் பிரதமராகவும் வரமுடியும் என்று ஒரு நடைமுறை விதியை ஏற்படுத்தி இருக்கிறது. இது ராணுவ பயங்கரவாதம். அந்த ராணுவம், சீருடை இல்லாத குட்டி பயங்கரவாதிகளைத் தொடர்ந்து தனது நாட்டில் உருவாக்கி வருகிறது. அந்தக் குட்டி பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ராணுவத்திற்குப் பிடிக்காத லோக்கல் அரசியல்வாதிகளின் கதையை முடிக்க உதவுவார்கள், இந்தியாவில் அவ்வப்போது படுகொலைகளும் செய்தார்கள்.

 

நமக்கு இப்படியான, நம் வசமுள்ள காஷ்மீரையும் அபகரிக்க நினைக்கும், ஒரு அண்டை நாடு. இதைத் தவிர, சிறுபான்மை மக்களிடம் தாஜா அரசியல்  செய்து, முறைகேடுகளில் மூழ்கி, தேச நலனையும் பாதுகாக்காத, எதிர்க் கட்சிகள் நிரம்பியதுதான் நமது நாடு. இவர்களுக்கு இடையில் மோடி பைத்தியம் பிடிக்காமல் தேர்தலில் போட்டியிடுகிறார், பிரதமர் ஆகிறார், இந்தியாவையும் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் பெருமைப் படுத்துகிறார். எப்படி அவரால் முடிகிறது?

 

பல இந்தியர்கள் தமது நலன் அறியாத அப்பாவிகளாக இருந்தாலும், பல சமயங்களில் சரியான வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போடத் தெரியாமல் இருந்தாலும், அவர்களின் பூர்வ ஜென்ம பலன் மோடி காலத்தில் வேலை செய்கிறதோ? வேறு எப்படி நினைத்தாலும் நமது ஜனநாயகம் இடிக்கிறதே!

 

* * * * *


Author: R. Veera Raghavan, Advocate, Chennai

 

 

 

 

1 comment: