Wednesday, 7 May 2025

பாகிஸ்தான் மீது இந்தியா ராணுவ நடவடிக்கை எடுத்தது சரியா?

  

          -- ஆர். வி. ஆர்

 

“பாகிஸ்தான் மீது இந்தியா ராணுவ நடவடிக்கை எடுத்தது சரியா? நமது நாட்டு ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களின் பெரிய உயிரிழப்புக்கு அது வழி வகுக்காதா?

 

இந்தக் கேள்விகளை நம்மில் சிலர் – சிலர் அப்பாவியான நல்லெண்ணத்திலும், சிலர் மறைமுக மோடி எதிர்ப்பாகவும் – எழுப்புகிறார்கள்.

 

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு நாம் பாகிஸ்தான் மீது துப்பாக்கி-குண்டு நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது. ஏனென்றால்:

 

எப்படியான நாடு இந்தியா? இந்து சமவெளி நாகரிகம் வளர்ந்த நாடு. உலகில் மிக அதிக மக்கள் தொகை உடைய நாடு. நான்காவது பெரிய பொருளாதாரம், பிற நாடுகளைக் காட்டிலும் வேகமான வருடாந்திரப் பொருளாதார வளர்ச்சி, இவற்றோடு உலகம் போற்றும் தலைவரைப் பிரதமராகத் கொண்ட நாடு.

 

இப்படியான நமது நாட்டிற்குள் அடுத்த நாடு சில பயங்கரவாதிகளை அவ்வப்போது அனுப்பி நம் ராணுவ வீரர்களையும் அப்பாவி மக்களையும் கொன்று குவிக்கும், அதை நம் நாடு கண்டனம் செய்துவிட்டு ஐ. நா சபைக்குச் சென்று அழுவதோடு நிறுத்திக் கொள்ளவேண்டும் என்றால் நமது பெருமையை, நமது முக்கியத்துவத்தை, நமது மக்களுக்கான கடமையை, உணராத நாடு இந்தியா என்று அர்த்தமாகும்.

 

நம் மண்ணில் நம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் துணியாத நாடாக இருந்து நாம் வளர முடியாது, உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்க முடியாது.  நாம் அப்படிச் செயலற்று இருந்தால், வளர்ந்த மற்ற நாடுகள் நம்மைக் கிள்ளுக் கீரையாக நினைக்கும், வியாபாரம் மற்றும் பொருளாதார விஷயங்களில் நம்மை அடிபணிய வைக்கும், நம்மை வஞ்சித்து உறிஞ்சும்.

 

பாகிஸ்தான் நம்மை எந்த வகையில் தாக்கி வருகிறது? நம் நாட்டிற்குள் தனது ராணுவத்தை அனுப்பாமல், நூற்றுக் கணக்கில் பயங்கரவாதிகளைத் தயார் செய்து நம் நாட்டிற்குள் அனுப்பிப்  படுகொலைகளையும் நாசவேலைகளையும் செய்கிறது. இவற்றுக்குப் பதிலடி என்பதாக, நாமும் இந்தியாவில் பயங்கரவாதிகளைத் தயார் செய்து அவ்வப்போது பாகிஸ்தானுக்குள் ரகசியமாக அனுப்பி அந்த நாட்டு எல்லைக்குள் நாசவேலைகளை அரங்கேற்ற முடியாது. பாகிஸ்தானுக்கு நாம் ராணுவ ரீதியாக நடவடிக்கை எடுத்துத் தான் புரியவைக்க முடியும். அதை இந்தியா இப்போது - இன்று 7.5.2025 அதிகாலை - மிகக் கவனமாகச் செய்திருக்கிறது.

 

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில், ஒன்பது இடங்களில் பாகிஸ்தானின் ஆசியுடன் அமைக்கப் பட்ட பயங்கரவாதக்  கட்டமைப்புகளை இன்று ஏவுகணைகள் வீசி அழித்திருக்கிறது இந்தியா. இது குறித்து இந்தியர்கள் மகிழ்வது இயற்கை, அதை அவர்கள் வெளிப்படுத்துவதும் இயல்பானது.

 

இன்று இந்தியா எடுத்த அளவான ராணுவ நடவடிக்கைக்கு எதிராக, சில நாட்களில் அல்லது பின்னாளில்  பாகிஸ்தான் கண்ணை மூடிக்கொண்டு கன்னா பின்னாவென்று நாம் நாட்டின் மீது ராணுவத் தாக்குதல் நடத்துமா, அதில் இந்தியாவின் பக்கம் கணிசமான உயிர்ச் சேதம் நிகழுமா, என்று நமக்குத் தெரியாது. அதை நினைத்து இந்தியா பாகிஸ்தான் மீது இன்றைய ராணுவ நடவடிக்கையை  எடுக்காமல் இருக்க முடியாது. பாகிஸ்தான் அப்படி ஒரு ராணுவத் தாக்குதல் செய்தால், செய்ய எத்தனித்தால், நமது மோடி அரசு அதைத் திறமையாகக்  கையாளும் என்று நாம் நம்பலாம்.

 

அதிக பட்சமாக எந்த அளவு ஒரு அரசு எல்லா பக்கங்களிலும் சிந்திக்க முடியுமோ, திட்டமிட முடியுமோ, அதைச் செய்து இந்தியா இன்றைய அளவான ராணுவ தாக்குதலில் வெற்றி கண்டது பற்றிப் பல இந்தியர்களுக்கு இப்படி ஒரு உணர்வு இருக்கும்.  "தானாக வந்து நம்மை அவ்வப்போது செவிட்டில் அறைந்து ஒடும் அடுத்த வீட்டுக்காரனை, நாம் ஒரு முறை அவன் வீட்டுக்குள் சென்று அவன் முதுகில் போட்டு ரண்டு எத்து எத்தினோமே!" என்ற திருப்தியும் தன்மான மகிழ்வும் இந்தியர்களுக்கு ஏற்பட்டிருக்கும்.

 

மத்தியில் உள்ள மோடி அரசு பொறுப்பானது.  தேவையில்லாமல் பாகிஸ்தானுடன் பெரிய போரை ஆரம்பித்து, அல்லது வளர்த்து, நமது நாட்டு உயிர்களையும் பொருளாதார முன்னேற்றத்தையும் தானாகப் பலி தராது என்று நாம் நம்பலாம். இந்த நேரத்தில் மோடி போன்ற ஒரு தலைவர் நாட்டின் பிரதமராக இருப்பது இந்தியாவுக்கு யானை பலம்.

 

சரி, ராணுவ ரீதியாகப் பாகிஸ்தானை நன்றாகப் போட்டதில், இனி பாகிஸ்தான் நம் நாட்டுக்குள் பயங்கரவாதிகளை அனுப்பாது, நாசவேலைகள் செய்யாது என்பது நிச்சயமா? அது நிச்சயம் இல்லை.

 

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் தலைமையகம் எங்கிருக்கிறது? உண்மையில் அந்த இடம் அந்நாட்டு ராணுவத் தலைமையகம்.  பாகிஸ்தான் திருந்தாத, திருத்த முடியாத நாடு. அந்த நாட்டை எதிர்த்து இந்தியா என்னென்ன தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்கவேண்டும், என்னென்ன நேரடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது அவ்வப்போதைய பாதுகாப்பு நிலைமையைப் பொறுத்தது. 

 

மேற்கே ரவுடி ராணுவ பாகிஸ்தான், கிழக்கே நன்றியில்லாத பங்களா தேஷ், வடக்கே ராட்சஸ சீனா என்று இந்தியா காலம் தள்ள வேண்டியபோது, ஊழலுக்கும் சுயநலத்திற்கும் பெயர் வாங்கிய அரசியல்வாதிகளும் உள்நாட்டில் மத்திய அரசைக் கைப்பற்றினால், அதைவிடப் பெரிய நரகம் இந்தியாவுக்கு இல்லை.

 

தேசத்தை நேசிக்கும் பொதுமக்களக்கிய நாம் இதைத்தான் செய்யலாம். நாட்டு நலன் பற்றி அக்கறையுள்ள ஒரு பொறுப்பான திறமையான மத்திய அரசு டெல்லியில் எப்போதும் இருக்கட்டும் என்று நாம் பிரார்த்திக்கலாம். சரிதானே?

 

* * * * *


Author: R. Veera Raghavan, Advocate, Chennai

 

1 comment:

  1. It is our fortune that we have Modi as our PM. Our opposition parties will be happy if our country under the leadership of Modi is defeated by our enemy.

    You have assessed our opposition parties accurately.

    Chittanandam

    ReplyDelete