Friday, 28 February 2025

கும்பமேளாவில் எட்டிப் பார்த்த தேச ஒற்றுமை

  

          -- ஆர். வி. ஆர்

 

பிரயாக்ராஜ் நகரில் 45 நாட்களாக நடந்து முடிந்திருக்கிறது  மஹா கும்பமேளா. அந்த தினங்களில் திரிவேணி சங்கமத்திற்கு வந்து புனித நீராடிய பக்தர்கள், 66 கோடிக்கு மேல். 


இந்த மஹா பிரும்மாண்ட ஜனத் திரள் நம் நாட்டிற்குத் தெரிவிக்கும் ஒரு பக்கவாட்டுச் செய்தி இது: பாரதத்தில் ஹிந்து மதம், ஹிந்துத் திருவிழாக்கள், போற்றப் படாவிட்டால், தழைக்காவிட்டால், பாரதம் ஒரு நாடாக இணைந்திருக்க முடியாது.

 

நினைத்துப் பாருங்கள். ரோப்பிய யூனியன், 27 ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு. அந்த நாடுகளின் ஓட்டுமொத்த ஜனத்தொகை, சுமார் 45 கோடி இந்திய ஜனத்தொகையின் மூன்றில் ஒரு பங்கையும் விடக் குறைவு.

 

ஐரோப்பிய யூனியனின் ஒரு நாட்டில் வசிப்போர் அந்தக் கூட்டமைப்பின் வேறு எந்த நாட்டிற்கும் தடையில்லாமல் சென்று வரலாம், அந்த மற்ற நாட்டில் வேலை பார்க்கலாம், வசிக்கலாம். அவர்கள் கூடுதல் கட்டணமின்றி ஐரோப்பிய யூனியனின் மற்ற நாடுகளில் தங்கள் மொபைல் போனையும்  டெபிட் கார்டையும் உபயோகிக்கலாம். ஒற்றை யூரோ நாணயப் புழக்கம் அவர்களுக்கு உண்டு. அப்படி இருந்தும், அந்த 27 நாடுகளும் ஏன் ஒரே நாடாக இணையவில்லை? குறைந்த பட்சம், அவற்றில் மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த இரண்டு அண்டைக் கிறிஸ்தவ நாடுகள் கூட (உம்: பிரான்ஸ், ஸ்பெயின்) ஒரு நாடாக இணையவில்லையே? என்ன காரணம்?

 

காரணம் இது: ஐரோப்பிய யூனியனின் அநேக நாடுகளுக்கு வேறு வேறு பிரதான மொழிகள் உண்டு, சில கலாச்சார வேறுபாடுகள் உண்டு. சில சரித்திரக் காரணங்களும் உண்டு. இவற்றை மீறி மதம் அவர்களை இணைக்கும் சக்தியல்ல.  பாரதத்தின் கதை வேறு.

 

பாரதத்தின் பல பிரதேசங்களிலும் பல மொழிகள் பேசப்படுகின்றன. சிற்சில பிரதேச கலாச்சார வேறுபாடுகளும் அவைகளுக்குள் உண்டு. பாரதத்தின் வெவ்வேறு பகுதிகளைப் பழைய நூற்றாண்டுகளில் வெவ்வேறு மன்னர்கள் ஆண்டார்கள். வம்சாவழியாக அப்படி வந்திருக்கும் இந்தியர்கள், தற்காலத்தில் ஏன் மொழிகள் அடிப்படையில் தனித்தனி நாடுகளாகப் போக விரும்புவதில்லை? எது அவர்களை பாரதத்தில் ஒன்றாக இணைந்திருக்க வைக்கிறது? இதற்கான விடை: பாரதத்தில் தொன்று தொட்டுப் பரவியிருக்கும் ஹிந்து மதம்.

 

பாரத ஜனத்தொகையில் ஹிந்துக்கள் சுமார் 80 சதவிகிதம். அவர்கள் பாரத மண்ணை நேசிப்பதற்குக் காரணம், பாரதத்தின் பிரதான ஹிந்து மதம் மற்றும் அதன் புராண இதிகாசங்கள் தொடர்புடைய நிலங்கள், மலைகள், நதிகள், சமுத்திரக் கரைகள் – அந்த இடங்கள் பாரதத்தின் இன்னொரு மொழிப் பிரதேசத்தில் இருந்தாலும், அங்கு சிற்சில மாறான சமூகக் கலாசாரம் தென்பட்டாலும். ஹிந்து பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களும் பாரத மக்களை ஒன்றுபடுத்துகின்றன.


ஹிந்து மக்களின் மன ஒற்றுமையும் தேசாபிமானமும் சட்டத்தின் எதிர்பார்ப்பால் ஏற்பட்டதல்ல. அவை அவர்களுக்குள் கலந்த ஒரு ஆழமான மத உணர்வு.  

 

இன்று பாரதம் ஒரு தேசமாக இல்லாவிட்டால், தமது மதம் நசியும் என்ற உள்ளுணர்வு ஹிந்துக்களுக்கு இருக்கும். அந்த உள்ளுணர்வு பாரதத்தின் மீதான நேசிப்பை அவர்களுக்கு அதிகப் படுத்தும், உறுதிப் படுத்தும் – அது பற்றி அவர்கள் வெளிப்படையாகப் பேசாவிட்டாலும்.  

 

வெளிநாட்டு மதங்களைச் சேர்ந்த இந்தியர்களுக்கு – குறிப்பாக இந்திய இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு – அவர்களின் மத உணர்வின் நீட்சியாக பாரதத்தின் மீது கூடுதல் அபிமானம் இருக்க முடியாது. இது அவர்களிடம் உள்ள குறை என்பதல்ல. அவர்களின் பின்னணியில் இது மனித இயற்கை. 

 

பாரதத்தின் மிகப் பெருவாரியான ஹிந்துக்களின் மத உணர்வை, பாரத நிலப் பரப்பின் மீது அவர்களுக்கு இருக்கும் மத உணர்வு கலந்த அபிமானத்தை, பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உணரவில்லை. அதை உணராத, உணர்ந்து போற்றாத, அரசியல் தலைவர்கள் தேசத்திற்கு நல்லது செய்யவில்லை, இன்று தேசம் ஒன்றுபட்டிருக்கும் முக்கிய காரணத்தை உதாசீனம் செய்கிறார்கள்.  

 

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மஹா கும்பமேளா நடக்கும் போது “கங்கையில் மூழ்கி எழுந்தால் நாட்டில் வறுமை நீங்குமா?” என்று பொது மேடையிலிருந்து, யாரையோ இடிப்பதாக நினைத்துக் கொண்டு, பித்துக்குளித் தனமாகக் கேட்டார். அதற்கும் முன்பு, திமுக-வின் உதயநிதி ஸ்டாலின், “டெங்கு, மலேரியா, கொரோனா போல் சனாதனத்தை ஒழிக்கவேண்டும்” என்று பிதற்றினார்.

 

பாஜக-வை எதிர்க்கும் பிற முக்கிய எதிர்க் கட்சிகளும் ஹிந்து மதம் பற்றி அசிரத்தையாக இருக்கிறார்கள் – அப்படிக் காட்டிக் கொண்டால் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்களுக்குப் பிடிக்கும், அதன் மூலம் சாதாரண இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஓட்டுக்களைக் கொத்தாகப் பெறலாம் என்ற நப்பாசையில்.

 

எதிர்க் கட்சிகள் ஹிந்துக்களை இகழ்வதையும் உதாசீனம் செய்வதையும் தொடர்ந்து, நாட்டில் போகப் போக ஹிந்துக்களின் எண்ணிக்கை பெரிதும் குறைகிறது, அவர்களின் பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களின் பிரபல்யம் தேய்கிறது, என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது அனைத்து இந்திய மக்களையும் எது இணைக்கும், எது நாட்டின் மீதான அபிமானத்தை அவர்களிடம் தக்க வைக்கும்? அந்த வேலையை அரசியல் சட்டம் சுளுவாகச் செய்யும் என்று யாரும் அப்பாவியாக நினைக்க வேண்டாம். அப்போது மாநிலங்களில் என்ன நடைபெறலாம்?

 

அந்த நிலையில் ஸ்டாலின் மாதிரி வேறொருவர் தமிழக முதல்வராக இருந்தால், திராவிட மாடலைக் குப்பையில் தள்ளிவிட்டு, ‘தமிழ்நாடு மாடல்’ அரசு நடத்தித் தனிநாடு பற்றி யோசிப்பார் – அது நடந்தேறும் சாத்தியமும் உண்டு.  மம்தா பானர்ஜி மாதிரியான மற்றொரு மேற்கு வங்க முதல்வர், அந்த மாநிலத்தைத் தனி நாடாக்க முயல்வார் - சி. பி. ஐ  தொல்லை போகட்டும் என்பதற்காகவே – அவரும் வெற்றி பெறலாம். ஹிந்துக்களின் எண்ணிக்கை நாட்டில் வெகுவாகக் குறைந்தால்,  அல்லது ஹிந்து மத உணர்வுகளுக்கு வடிகால் தடைப்பட்டு அவை மங்கினால், இவை நிகழும் வாய்ப்புகள் அதிகம். அப்போது சட்டம் ஒதுங்கி நிற்கும் அபாயம் உண்டு.

 

இந்த சாத்தியங்கள் பாஜக-வை எதிர்க்கும் பல கட்சித் தலைவர்களுக்குத் தெரியாமலா இருக்கும்? தெரிந்திருக்கும். சிறுபான்மை மதத் தலைவர்களைப் பிரீதி செய்தால் மட்டும் போதாது, மாநில ஆட்சிகளில் கட்டற்ற சுதந்திரம் கிடைக்க மற்ற வகையிலும் பார்க்க வேண்டும், அது எப்படியும் நடக்கட்டும், என்று ஓரக் கண்ணில் சிலர் கனவு கண்டால் என்ன செய்வது?

 

66 கோடி ஜனங்கள் மஹா கும்பமேளாவில் செய்த பிரார்தனை பாரதத்தையும் வளப்படுத்தும், ஒன்றாக வைத்திருக்கும், என்று நாம் நம்பிக்கை கொள்ளலாம். அது வீண் நம்பிக்கை ஆகாது என்று நம்மை ஆறுதல் படுத்த, வீறு கொண்ட ஒரு கட்சி பளிச்சென்று தெரிகிறதே?

 

* * * * *


Author: R. Veera Raghavan, Advocate, Chennai

Sunday, 23 February 2025

‘கெட் அவுட் மோடி’ பலிக்கவில்லை. ‘கெட் இன் அண்ணாமலை’ நிகழ்கிறது!

 

          -- ஆர். வி. ஆர்

 

சமீபத்தில் பிரதமர் மோடியைக் கண்டித்துப் பேசிய தமிழகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “பிரதமர் இனி தமிழகத்துக்கு வந்தால் மக்கள் அவரை கெட் அவுட் மோடி என்று சொல்லித் துரத்துவார்கள்” என்று எச்சரித்தார்.


உதயநிதிக்குத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்தார். மோடியை உதயநிதி அவ்வாறு அவமதிப்பு செய்ததால், தமிழகத்தை சரியாக நிர்வாகம் செய்யாத முதல்வர் மு. க. ஸ்டாலினைத் தானும் ‘கெட் அவுட் ஸ்டாலின்’ என்று சொல்வதாகக் கூறினார். இரு தரப்பின் கெட் அவுட் கோஷங்களும் தளத்தில் ஒரு நாளுக்கு மேல் பிரதானமாக வந்தன.  இந்த இரண்டு கோஷங்களின் தொடக்கக் காரணம், மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை, 2020.


மத்திய அரசு தனது புதிய தேசிய கல்விக் கொள்கையை நாடு முழுவதும் அமல் செய்யவிருக்கிறது.  அதன் மூலமாக பள்ளிக் கல்வி முறைகளில், பாடத் திட்டங்களில், சில முக்கிய மாறுதல்கள் வரும். ஆனால் தமிழகத்தை ஆளும் திமுக அரசு இதை எதிர்க்கிறது.


தேசிய கல்விக் கொள்கையின் எந்த அம்சத்தைத் திமுக எதிர்க்கிறது? ஏன் எதிர்க்கிறது?


தேசிய கல்விக் கொள்கையின் ஒரு அம்சம்: 5-ம் வகுப்பு வரை, முடிந்தால் 8-ம் வகுப்பு வரை, பள்ளி மாணவர்களுக்குப் பயிற்று மொழி அவரவர்களின் பிரதேச மொழியாக இருக்கும்.  தமிழ்நாடு என்றால், அது தமிழ்வழிக் கல்வியாக இருக்கும். இது அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். 5 அல்லது 8 வகுப்புகள் வரை இங்கிலீஷ் மீடியம் கல்வி இருக்காது என்றாகிறது. இந்த 'தாய் மொழிக் கல்வி' அம்சத்தைப் பற்றி திமுக குறிப்பாக ஒன்றும் சொல்லவில்லை.


தேசிய கல்விக் கொள்கையின் இன்னொரு அம்சம்: பிரதேச மொழி மற்றும் ஆங்கிலம் தவிர, மாணவர்கள் தாங்கள் விரும்பும் வேறொரு இந்திய மொழியைக் கற்க வேண்டும். தமிழ்நாட்டில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, மராத்தி, ஹிந்தி என்று ஏதாவது ஒரு பிற இந்திய மொழியை மாணவர்கள் தேர்வு செய்து பள்ளியில் பயில வேண்டும்.


தேசிய கல்விக் கொள்கையின் ஒரு அம்சத்தை மட்டும் வலியுறுத்திக் குறிப்பிட்டு, அதை ஒரு சாக்காகச் சொல்லி, தேசிய கல்விக் கொள்கையை ஒட்டுமொத்தமாக எதிர்ப்பது போல் திமுக நிலை எடுக்கிறது.  அதாவது, ‘தேசிய கல்விக் கொள்கை பள்ளிகளில் மும்மொழி கற்பிக்க வைக்கிறது. அதனால் தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் தவிர இன்னொரு இந்திய மொழியை மாணவர்கள் கட்டாயம் கற்கவேண்டும். இதன் மூலம் மத்திய அரசு  பள்ளி மாணவர்களை ஹிந்தி கற்க கட்டாயப் படுத்துகிறது. இது ஹிந்தித் திணிப்பு’.


தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு அமல் செய்யத் தவறுவதால், அந்த வகையில் மத்திய அரசு தமிழகத்திற்காக ஏற்கவிருந்த ஆண்டுச் செலவு சுமார் 2,100 கோடி ரூபாயை மாநிலத்திற்கு விடுவிக்காமல் இருக்கிறது.  இது தமிழக அரசுக்கு நெருக்கடி. இருந்தாலும் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறது திமுக - கூடுதலாக சில அபத்தக் காரணங்கள் சொல்லி.

 

“தேசிய கல்விக் கொள்கை சமூகநீதிக்கு வேட்டு வைக்கும் கொள்கை. தமிழுக்கு வேட்டு வைக்கும் கொள்கை. தமிழர்களுக்கு, தமிழ்நாட்டுக்கு, வேட்டு வைக்கும் கொள்கை. தமிழகம் அந்தக் கல்விக் கொள்கையை ஏற்றால் 2000 ஆண்டுகள் பின்னோக்கித் தமிழ்ச் சமுதாயம் போய்விடும்” என்று ஜன்னி கண்டவர் போல் கடலூர்க் கூட்டத்தில் இப்போது பேசியிருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். சிரிக்காமல் அவர் அப்படிப் பேச முடிந்தது அதிசயம்.


திமுக-வின் எதிர்ப்பு வாதம் போலியானது, பித்தலாட்டமானது, சுயநலம் நிறைந்தது.


முதல் விஷயம்: தேசிய கல்விக் கொள்கையின் படி, தமிழகத்தின் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயில விரும்பும் மூன்றாவது மொழியாக ஹிந்தியைத் தேர்வு செய்யவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.  மற்ற எந்த இந்திய மொழியையும் அவர்களே தேர்வு செய்து படிக்கலாம். இது வெட்ட வெளிச்சம். இதை யாரும் எடுத்துச் சொல்லவேண்டியது இல்லை.

 

ஹிந்தி படித்தால் அகில இந்தியாவில் எங்கு சென்றும் சமாளிக்கலாம், நாட்டில் தமக்கு வேலை வாய்ப்புகளும் கூடும் என்று நினைத்து, தேசிய கல்விக் கொள்கையின் கீழ் அதிகமான தமிழக மாணவர்கள் எல்லாப் பள்ளிகளிலும் தாங்களாகவே ஹிந்தியைத் தேர்வு செய்து படிக்க ஆரம்பிக்கலாம். இந்த நடைமுறை உண்மைதான் திமுக-விற்கு கிலியைக் கொடுக்கிறது. ஏன் அந்த கிலி?

 

‘தமிழர்களின் தாய்மொழி உணர்வைக் கட்டிக் காப்பது திமுக மட்டுமே. ஹிந்தி தமிழகத்தில் பரவலாக நுழைந்தால் அது தமிழை நசித்துவிடும், தமிழர்களை அந்த அபாயத்திலிருந்து காத்து, அதற்காக உயிரையும் விடத் தயாரானவர்கள் திமுக-வினர்’ என்ற அடிப்படையில் ‘தமிழ்ப் பாதுகாவலர்கள்’ என்ற ஒரு பிம்பத்தை அப்பாவித் தமிழர்கள் மத்தியில் தனக்கு ஏற்படுத்தி இருக்கிறது திமுக.

 

பெருவாரியான தமிழக இளைஞர்கள் பள்ளிகளில்  ஹிந்தி படிக்க ஆரம்பித்து, அதன் பின்னும் தமிழ் தழைத்தால் திமுக-வின் ‘தமிழ்ப் பாதுகாவலர்’ பிம்பம் உடையும், மொழி அடிப்படையில் திமுக தனக்கு வளர்த்து வைத்திருக்கும் வாக்கு வங்கி சேதப்படும். காலத்துக்கு ஏற்ப மாறி நின்று மக்கள் செல்வாக்கைப் பெறும் சிந்தை திமுக-விடம் இல்லை. இதனால் தேசிய கல்விக் கொள்கையிடம் திமுக அஞ்சுகிறது.


இன்னொன்று. தேசிய கல்விக் கொள்கையின் கீழ் அரசுப் பள்ளிகளின் தரம் தாமாக உயரும். அதனால் அரசியல்வாதிகள் குடும்பம் நடத்தும் தனியார் பள்ளிகளின் வியாபாரம் அடி வாங்கும். அந்தக் கவலை திமுக-வுக்கும் இருக்குமே?

 

தேசிய கல்விக் கொள்கையை அமல் செய்யும் மத்திய அரசின் சட்டத்திற்கும் உத்தரவுகளுக்கும் மாறாகத் தமிழக அரசு செயல்பட முடியாது. அதுதான் அரசியல் சட்டம். இருந்தாலும், மத்திய அரசு இதில் பொறுமை காக்கும், விட்டுப் பிடிக்கும்.   

 

இந்தச் சூழலில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ‘கெட் அவுட் மோடி’ என்ற திமிர் வார்த்தையைப் பேசினார். உதயநிதியின் அடாவடிப் பேச்சுக்கு, யாரும் எதிர்பாராத ஒரு பதிலைச் சொன்னார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.  அதுதான் ‘கெட் அவுட் ஸ்டாலின்’ கோஷம். அந்தக் கோஷம் X தளத்தில் பத்து லட்சம் பதிவுகளைத் தாண்டி திமுக தலைமையை உலுக்கி இருக்கிறது. அதன் விளைவு, அடுத்த நாள் மு. க ஸ்டாலின் கடலூரில் பிதற்றிய அபத்தக் கருத்துக்கள்.

 

திமுக தலைவர்களின் பொதுவான அடாவடிப் பேச்சால், அவர்கள் தைரியசாலிகள், கெத்தனவர்கள், உறுதி மிக்கவர்கள், அவர்கள் பின் நிற்பது தமக்குப் பாதுகாப்பு என்று சாதாரண மக்கள் பலரும் அப்பாவியாக நினைக்கிறார்கள். அதே தைரியம், கெத்து, உறுதி ஆகிய குணங்களை ஒரு பாஜக தலைவரும் ஒரு யுக்தியாகத் திமுக-வுக்கு எதிராகத் தனது பேச்சில் அவ்வப்போது அளவாகக் காண்பித்தால்தான் அநேக சாதாரண மக்களைத் தங்கள் பால் பாஜக வேகமாக ஈர்க்க முடியும். அதைத் தனது ‘கெட் அவுட் ஸ்டாலின்’ எதிர்ப் பேச்சு மூலம் அண்ணாமலை முயன்றிருக்கிறார். பாஜக-வில் அவர்தான் இதற்குச் சரியானவர். நடைமுறை அரசியலில் இது பாஜக-வுக்கு நன்மை செய்யும்.

 

அண்ணாமலையின் சூடான எதிர்ப் பேச்சால், கணிசமான சாதாரணத் தமிழக மக்கள் – அதுவும் அண்ணாமலையின் பக்கம் மெள்ள மெள்ள அடி எடுத்து வைக்கிற தமிழர்கள் – அந்தத் தலைவரைத் தமது மனதிற்குள் “கெட் இன் அண்ணாமலை” என்று சட்டென்று சொல்வார்கள். நல்ல காரியம் நடப்பது சரிதானே?

 

* * * * *


Author: R. Veera Raghavan, Advocate, Chennai

Tuesday, 18 February 2025

பிரதமர் மோடியை இகழ்ந்து விகடன் பிளஸ் வெளியிட்ட கார்ட்டூன். கார்ட்டூனா அது?

 

          -- ஆர். வி. ஆர்

  

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைக் கேலி செய்து விகடன் பிளஸ் என்ற இணைய இதழ் பிப்ரவரி 10-ம் தேதி ஒரு கார்ட்டூன் வெளியிட்டது - 'அட்டைப்படம்' என்று பிரதானமாக. அந்த இதழைப் பிரசுரிப்பது ஆனந்த விகடன் பத்திரிகை குரூப். 


அந்தக் கார்ட்டூன் கடும் கண்டனங்களை ஈர்த்தது – குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியின் அபிமானிகளிடமிருந்து. அந்தக் கார்ட்டூன் பாரதப் பிரதமரை அவதூறு செய்கிறது, தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் மத்திய அரசுக்குக் கோரிக்கை அனுப்பி இருக்கிறார்.


அந்தக் கார்ட்டூன் வெளிப்படுத்தும் காட்சி இது:  மோடியின் கைகால்கள் சங்கிலியால் பிணைக்கப் பட்டுத் துவண்டு தோற்ற முகத்துடன் அவர் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அருகில் இன்னொரு நாற்காலியில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அமர்ந்து, மோடியை நோக்கி ஒரு கையைக் காட்டி எக்காளமாகச் சிரிக்கிறார்.  அதாவது, அமெரிக்க அதிபர் டிரம்ப், பாரதப் பிரதமர் மோடியை அடக்கி வைத்திருக்கிறார், அமெரிக்க அதிபருக்கு முன் பாரதப் பிரதமர் செயலிழந்து கட்டுண்டு கிடக்கிறார் என்பது அந்தக் கார்ட்டூன் சொல்ல வந்த கருத்து.  

 

இந்தக் கார்ட்டூனுக்கு ஒரு பின்னணி உண்டு. கார்ட்டூன் வெளிவந்த ஐந்து நாட்கள் முன்பாக, பாரதத்தின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் ஒரு அமெரிக்க ராணுவ விமானம் வந்திறங்கியது. அமெரிக்காவால் நாடுகடத்தப் பட்ட 104 இந்தியர்கள், கைகளும் கால்களும் சங்கிலியால் பிணைக்கப் பட்டு அந்த விமானத்தில் திருப்பி அனுப்பப் பட்டிருந்தனர்.  அந்த நாட்டிற்குள் அவர்கள் சட்ட விரோதமாக நுழைந்த/தங்கிய அந்நியர்கள் என்பதால் பிடிபட்டு அவ்வாறு நாடுகடத்தப் பட்டனர்.

 

அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைந்த மற்ற சில நாட்டினரையும் கைகால்களைச் சங்கிலியால்  பிணைத்து வைத்து விமானத்தில் அவரவர் நாட்டுக்குத் திருப்பி அனுப்புகிறது அமெரிக்கா. இப்போது மீண்டும் அமெரிக்க அதிபராகி இருக்கும் டிரம்ப், அமெரிக்காவில் பிடிபடும் சட்டவிரோத ஊடுருவல்காரர்களை நாடு கடத்துவதில் முனைப்பாக இருக்கிறார்.

 

விகடன் பிளஸ் தனது கார்ட்டூன் மூலம் என்ன சொல்கிறது என்றால்: விமானத்தில் நாடு கடத்தப் படும் இந்தியர்களின் கைகால்களைச் சங்கிலியால் காட்டாமல் அனுப்ப வேண்டும் என்று பாரதம் அமெரிக்காவிடம் கேட்டு அவ்வாறு நிகழச் செய்ய முடியவில்லை. அதற்கான தெம்பும் திராணியும் பிரதமர் மோடியிடம் இல்லை. அப்படியாகப் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்பின் முன் செயலற்ற சோப்ளாங்கியாக இருக்கிறார்.  உறுதியான டிரம்ப், தனக்கு முன்பாக அடங்கிக் கிடக்கும் மோடியைப் பார்த்து இளக்காரமாகச் சிரிக்கிறார். இதுதான் விகடன் பிளஸ் கார்ட்டூனின் கருத்து.

 

இந்தக் கார்ட்டூன் கருத்தின் மதிப்பு என்ன? மெகா சைஸ் பூஜ்யம்.


நாடு கடத்தப் பட்ட இந்தியர்களில் பலர், அறியாமையால்  ஏஜெண்டுகளிடம் பணத்தை இழந்து துன்ப வழியில் உருண்டு புரண்டு அமெரிக்காவிற்குள் நுழைந்தவர்கள். நாடு கடத்தலாகும் போது அவர்கள் விரக்தியிலும் ஆவேசத்திலும் விமானத்திற்குள் அசம்பாவிதம் செய்ய முனையக் கூடாது. ஆகையால் அவர்களின் பாதுகாப்பிற்கும் விமானத்தின் பாதுகாப்பிற்கும் அவர்களின் கைகால்களில் அமெரிக்கா சங்கிலி போட்டு அவர்களைப் பயணிக்க வைப்பது தவிர்க்க முடியாதது. இது, அமெரிக்காவின் எச்சரிக்கை சம்பந்தப் பட்டது. இதில் பாரதத்தின் இயலாமையோ பலவீனமோ துளியும் இல்லை.

 

தத்துப் பித்தான கருத்தில் கார்ட்டூன் வெளியிட்டிருக்கிறது விகடன் பிளஸ். மற்றபடி, டிரம்ப உட்பட அகில உலகத் தலைவர்கள் பிரதமர் மோடியைப் பெரிதும் மதிக்கிறார்கள், போற்றுகிறார்கள் என்பது வெளிப்படை. கார்ட்டூன் வெளியான மூன்றாம் நாள் அமெரிக்காவில் நிகழ்ந்த மோடி-டிரம்ப் சந்திப்பின் போதும் இது தெரிந்தது.

 

அடுத்த விஷயம், இந்தக் கார்ட்டூன் நேர்மையற்றது, கீழ்த்தரமானது. விமானத்தில் நாடு கடத்தலாகும் இந்தியர்கள், உடன் வரும் அமெரிக்க பாதுகாப்பு வீரர்கள், விமான பைலட்டுகள் ஆகியோருக்கும், பறக்கும் விமானத்திற்கே கூட, நூறு சதவிகிதப் பாதுகாப்பு அவசியம் என்பதால்தான் அந்த இந்தியர்களின் கைகால்களில் சங்கிலி போடப் பட்டது என்பது, நூற்றாண்டு காணவிருக்கும் ஆனந்த விகடன் பத்திரிகைக்குப் புரியாதா? இருந்தாலும் பிரதமர் மோடியை எப்படியோ இகழ இது ஒரு வாய்ப்பு என்று தன் மனம் இனிக்க மலிவாக ஒரு கார்ட்டூன் பிரசுரித்திருக்கிறது விகடன் பிளஸ். 

 

தற்போது மத்தியில் ‘இண்டி’ கூட்டணி ஆட்சி நடைபெற்று ராகுல் காந்தி நாட்டின் பிரதமராக இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நிலைமையிலும், அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தலாகும் இந்தியர்கள் கைகால்களில் விலங்கு போட்டுத்தான் இந்தியாவுக்கு அனுப்பப் படுவார்கள்.  அப்போதும் அதுதான் நடக்கும். ஆனால் அப்போது – அதாவது ராகுல் காந்தி பிரதமராக இருந்தால் – நடக்கவே முடியாதது இது: எக்காளமாய்ச் சிரிக்கும் அதிபர் டிரம்பும் கைகால்களில் சங்கிலியிட்ட ‘பிரதமர்’ ராகுல் காந்தியும் விகடன் பிளஸ் கார்ட்டூனில் தோன்ற மாட்டார்கள்.   

 

அர்த்தமற்ற, நேர்மையற்ற இந்தக் கார்ட்டூன் கீழ்த்தரமானதும் கூட. பாரதப் பிரதமரை அமெரிக்க அதிபரின் முன்னால் தோல்வியுற்ற முகத்துடன் கைகால்களில் விலங்குடன் அமர்ந்திருக்குமாறு ஒரு பாரதப் பத்திரிகை கார்ட்டூன் போடலாமா? அதுவும் மனமறிந்த ஒரு பொய்க் கருத்தை வெளிப்படுத்த? கீழான நோக்கம் கொண்ட ஒரு பத்திரிகைதான் இப்படியான கார்ட்டூனை வெளியிடும். அதே நோக்கம் கொண்ட மற்றொருவர்தான் இந்தக் கார்ட்டூனைப்  பாராட்ட முடியும். அப்படியான மற்றொருவர், “அது சிறந்த கார்ட்டூன். அதில் அர்த்தமும் இருந்தது” என்று விகடன் பேட்டியில் சிலாகித்தார். அவர் யாரென்றால், நூற்றி ஐம்பதாவது வயதை நெருங்கும் ‘ஹிண்டு’ ஆங்கிலப் பத்திரிகையின் டைரக்டர், என். ராம்.

 

இந்தக் கார்ட்டூன் மத்திய அரசால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தக்கதா இல்லையா என்பது வேறு விஷயம்.  இந்த விஷயத்தில் விகடன் பிளஸ்ஸை சட்டம் ஒழுங்குபடுத்த முடியாமல் போனால், அதன் காரணமாக அந்தப் பத்திரிகையின் செயல் சரியாகாது, பாராட்டுக்கு உரித்தாகாது.  

 

ஒரு மனிதன் அல்லது ஒரு பத்திரிகை தனக்கு உண்மையாக, பிறருக்கு நேர்மையாக, தேசத்தை உயர்த்திப் பிடிப்பதாக இருத்தல் அவசியம் என்பது சட்டத்தின் கட்டளையல்ல. குடிமக்கள்  இந்தப் பண்புகளைத் தாமாக ஏற்பது சமூகத்தை, தேசத்தை, உயர்த்தி வைக்கும். அந்த வகையில் விகடன் பிளஸ்ஸுக்கு நாம் எத்தனை மார்க் தரலாம்? மைனஸ் தான்.


* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

Wednesday, 12 February 2025

கும்பமேளாவில் நீராடினால் வறுமை நீங்கிடுமா? காங்கிரஸ் தலைவர் கார்கே அபத்தக் கேள்வி!

 

          -- ஆர். வி. ஆர்          

 

பிரயாக்ராஜில் ஒரு மாதமாக மஹா கும்பமேளா மிகப் பிரும்மாண்டமாக நடந்து வருகிறது. இந்த பிப்ரவரி 26-ம் தேதி விழா நிறைவடையும். 


மஹா கும்ப மேளா நாட்களில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது புண்ணியம் என்பது ஹிந்துக்களின் ஆழ்ந்த நம்பிக்கை. இந்த தினங்களில் புனித நீராட மொத்தம் 45 கோடி மக்கள் பிரயாக்ராஜ் நகரில் நுழைவார்கள், 15 லட்சம் பேர்கள் வெளிநாட்டிலிருந்தும் வருவார்கள் என்கிறது மத்திய அரசின் செய்திக் குறிப்பு.

 

மஹா கும்பமேளா பற்றிப் பேசும்போது காங்கிரஸ் கட்சியைப் பற்றியும் சொல்லவேண்டி இருக்கிறது. என்ன செய்வது, வேறு வழி இல்லை!

 

இன்றைய பரிதாப காங்கிரஸ் கட்சியின் அசட்டுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே. அவருக்கும் மேலே கட்சிக்குள் முடிசூடா மன்னராக இருப்பவர் அச்சுப்பிச்சு ராகுல் காந்தி.

 

அண்மையில் மத்தியப் பிரதேம் மௌவ் நகரில் சமூக நீதிக்கான ஒரு பேரணிக் கூட்டத்தில் மேடை ஏறினார் கார்கே. ராகுல் காந்தியும் அருகில் அமர்ந்திருந்தார். அன்றைய தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மஹா கும்பமேளாவில் பங்கேற்று  திரிவேணி சங்கமத்தில் ஸ்நானம் செய்தார்.

 

மேடையில் பேசிய கார்கே, பாஜக தலைவர் அமித் ஷாவை மனதில் வைத்து ஏதோ குத்தலாகக் கேட்க நினைத்தார். தான் நினைத்தது அசல் பைத்தியக்காரத் தனம் என்று அவருக்கே உறைத்திருக்கும்.  இருந்தாலும் அப்போது நேராக எதையும் தனக்குப் பேச வரவில்லை என்றும் நினைத்தாரோ என்னவோ, “நான் யாரையாவது வருத்தப் படுத்தினால் மன்னித்து விடுங்கள்” என்று தற்காப்பாகச் சொல்லிவிட்டுத் தொடர்ந்தார். அவரது வார்த்தைகள்:

 

“குழந்தைகள் பசியால் இறக்கின்றன. அவை பள்ளிக்குப் போக முடியவில்லை. தொழிலாளிகளுக்கு உண்டானது கிடைப்பதில்லை. இந்த நிலைமையில் ஆயிரக் கணக்கில் செலவழித்து இந்த மனிதர்கள் டிவி-யில் தெளிவாகத் தெரிய போட்டி போட்டுக் கங்கையில் மூழ்கி எழுகிறார்கள். கங்கையில் குளித்தால் வறுமை நீங்கிடுமா? பசித்த வயிறுகள் நிரம்புமா?”

 

நாட்டின் பல கோடி ஹிந்துக்களில் அமித் ஷாவும் ஒருவர். அவர்களைப் போல, தான் ஒரு ஹிந்து என்ற உணர்வில் அவரும் மஹா கும்பமேளா சமயத்தில் திரிவேணி சங்கமத்தில் நீராடினார். இதுவரை ராகுல் காந்தியும் கார்கேயும் இந்த விழாவின் போது திரிவேணி சங்கமத்திற்கு நீராட வரவில்லை. அதனால் யாரும் அந்த இருவரைக் குறை  சொல்லவில்லை. ஆனால் தனது நம்பிக்கையின் பேரில் அங்கு மூழ்கி எழுந்த ஒரு பாஜக தலைவரை நோக்கி காங்கிரஸ் தலைவர் கார்கே இப்படியா பைத்தியக்காரத் தனமாகப் பேசுவார்?

 

கார்கேயின் பைத்தியக்காரப் பேச்சுக்குப் பின்னர் ஒரு நாள் பிரதமர் மோடியும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

 

“கங்கையில் குளித்தால் வறுமை நீங்கிடுமா?” என்று  கார்கே கேட்டது, ஒவ்வொரு ஹிந்துவையும் அப்படிக் கேட்டது போலாகும். மக்களின் ஓட்டைப் பெறவேண்டிய ஒரு கட்சியின் தலைவர், கும்பமேளாவுக்கு வரும் கோடானுகோடி மக்களின் மத நம்பிக்கையை இப்படி ஒரே கேள்வியில் இகழ்கிற தோரணையில் பேசுவது, தனி ரக பைத்தியக்காரத் தனம்.

 

“அமித் ஷா உள்துறை அமைச்சர் என்பதால் அப்படிக் கேட்டேன், அவர் ஒரு ஹிந்து என்பதால் அல்ல” என்று கார்கே மேலும் பிதற்றக் கூடும். அப்படியானால் கார்கேவுக்கு சில கேள்விகள்.

 

2014-ல் நரேந்திர மோடி பிரதமர் ஆவதற்கு முன்பு பத்தாண்டுகள் தொடர்ச்சியாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்தியில் ஆட்சி செய்தது, காங்கிரஸ் கட்சியின் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார். கங்கையில் குளித்தோ குளிக்காமலோ அந்தக் கூட்டணித் தலைவர்கள் நாட்டில் வறுமையை ஒழித்து விட்டார்களா? அதன் பின்னர் 2014-ல் மோடி பிரதமர் ஆனவுடன் வறுமை டக்கென்று மக்கள் இல்லத்தில் வம்படியாக நுழைந்து கொண்டு, ‘மீண்டும் காங்கிரஸ் தலைமையில் மத்திய ஆட்சி அமைந்தால்தான் நாட்டை விட்டு வெளியேறுவேன்’ என்று முரண்டு பிடிக்கிறதா?

 

1971-ம் வருடம் காங்கிரஸ் தலைவர் இந்திரா காந்தி திரிவேணி சங்கமத்தில் முழுக்குப் போடாமல், ‘கரிபி ஹடாவோ’ என்ற தேர்தல் முழக்கத்தை எழுப்பி வறுமையுடன் நேருக்கு நேர் மல்லுக் கட்டினாரே, அப்போது ஏன் வறுமை நாட்டை விட்டுப் போகவில்லை?

 

சரி, கங்கையில் குளிப்பதால் வறுமையை விரட்ட முடியாது என்ற பேருண்மை உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. நீங்களும் அதை ஊரறியச் சொல்லிவிட்டீர்கள். ஆனால் உங்கள் மாநிலம் கர்நாடகத்தின் காங்கிரஸ் தலைவர், கர்நாடகத் துணை முதல் மந்திரி, டி. கே. சிவகுமார்  நீங்கள் பேசிய சில நாட்கள் கழித்து என்ன செய்தார்? மஹா கும்பமேளாவை முன்னிட்டு அவர் திரிவேணி சங்கமத்தில் சிரத்தையாக  மூழ்கி எழுந்தார். அது ஏன்? ஹிந்துவான தனக்குப் புண்ணியம் சேரும் என்ற  நம்பிக்கையிலா, அல்லது கர்நாடக மண்ணிலிருந்து காங்கிரஸ் வறுமையை ஓட ஓட விரட்டி விட்டது, இனி பொழுதைப் போக்க கங்கையில் குளித்தால் தப்பில்லை என்ற காரணத்தாலா?

 

“நான் அமித் ஷாவை மனதில் வைத்து அப்படிக் கேட்க வில்லை. பொதுவாகக் கும்பமேளா நாட்களில்  கங்கையில் குளிப்பவர்களை எண்ணிப் பேசினேன்” என்று மேலும் பைத்தியக்காரத் தனமாக கார்கே விளக்கம் தர மாட்டார் என்று நாம் நம்பலாம்.

 

எப்படி இருந்தாலும் கார்கேயைப் பற்றி நாம் அனுதாபத்தோடு ஒன்றை எண்ணிப் பார்க்க வேண்டும்.

 

கார்கே காங்கிரஸ் கட்சியில் இல்லாமல், பாஜக-வை எதிர்க்கும் வேறு ஒரு அரசியல் கட்சியில்  ஒரு முன்னணித் தலைவராக இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள் – திரிணாமுல் காங்கிரஸ், லாலு கட்சி அல்லது ஒரு கம்யூனிஸ்ட் கட்சி என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தக் கட்சிகளில் கார்கே இருந்தால் கும்பமேளாவில் குளிப்பதற்கும் வறுமை ஒழிவதற்கும் முடிச்சுப் போட்டு, பாஜக-வை எதிர்க்க அவர் இவ்வளவு பிதற்றலாகப் பேசி இருப்பாரா? மாட்டார்.

 

காங்கிரஸ் கட்சியில் இருப்பதால் மட்டும் ஏன் கார்கே இப்படிப் பிதற்றினார்? ஏனென்றால், பேய்க்கு வாக்கப் பட்டால் புளிய மரத்தில் ஏறத்தான் வேண்டும்.  அச்சுப் பிச்சு ராகுல் காந்தியைத் தலைவராக ஏற்றால், அதுவும் அந்த அச்சுப் பிச்சு அருகிலேயே அமர்ந்திருக்கும் போது, இப்படிப் பேசினால்தான் ராகுல் காந்திக்கு இனிக்கும், கட்சிக்குள் அது தன்னை, தன் இடத்தை, பாதுகாக்கும் என்று கார்கேக்குத் தெரியாதா என்ன?

 

ராகுல் காந்தி அரசியலில் ஒரு வில்லன் மட்டுமல்ல, ஒரு அச்சுப் பிச்சுவும் கூட. ராகுல் காந்தியின் எந்த உருவத்தை மகிழ்விக்கத் தன்னால் ஆடிக் காட்ட முடியுமோ, அதைக் கார்கே செய்து விட்டார். அதுதானே விஷயம்?

 

* * * * *


Author: R. Veera Raghavan, Advocate, Chennai

Sunday, 9 February 2025

இந்தியர்களைச் சங்கிலியில் அனுப்புகிறது அமெரிக்கா. குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

 

          -- ஆர். வி. ஆர்

  

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள், அல்லது விசா காலம் முடிந்தும் அந்நாட்டில் தங்கியவர்கள். அவர்களில் நூற்றி நான்கு நபர்களை நாடு கடத்தி அண்மையில் இந்தியாவிற்குத்  திருப்பி அனுப்பியது அமெரிக்கா.


அந்த நூற்றி நான்கு இந்தியர்களின் கைகால்களில் விலங்கு பூட்டி ஒரு அமெரிக்க ராணுவ விமானத்தில் ஏற்றி இந்தியாவின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் அவர்களை இறக்கியது அமெரிக்கா. அவர்களை விலங்கிட்டு அழைத்து வந்தது மனிதாபிமானம் அற்றது, அவர்களை அவமானம் செய்வது, என்று சில எதிர்க் கட்சித் தலைவர்கள் கண்டனம் செய்தார்கள் – ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உட்பட.  வேறு சில எதிர்க் கட்சிகளின் எம்.பி-க்களும் அவ்வாறு ஆட்சேபித்தார்கள்.   

 

அமெரிக்கா திருப்பி அனுப்பிய இந்தியர்கள் தங்களின் கனவுலகம் கைவிட்டுப் போனது பற்றி அமெரிக்க அரசாங்கத்தின் மீது கோபம் வைத்திருப்பார்கள். நாடு கடத்தலாகி வரும்போது அவர்களுக்கு மனப் பதட்டமும் இருந்திருக்கும். அது இயற்கை.

  

நாடு கடத்தலான இந்தியர்களின் கைகளும் கால்களும் விமானத்தில் சுதந்திரமாக இருந்தால், அவர்களில் சிலர் நிதானம் இழந்து உடன் வரும் அமெரிக்கப் பாதுகாப்பு வீரர்களை வான் பயணத்தில் தாக்க மாட்டார்கள் என்பது நிச்சயமா? விரக்தியின் உச்சத்தில் அவர்கள் எதையாவது பிடுங்கி விமானத் தளத்திலோ கூரையிலோ எறியலாம். வான் களேபரம் பெரிதாகலாம். ஒன்றும் சொல்வதற்கில்லை. எச்சரிக்கை அவசியம்.


பறக்கும் விமானத்திற்குள் கலகமும் தாக்குதலும் செய்பவர்களைக் கட்டுப்படுத்த, உடன் வரும் அமெரிக்கப் பாதுகாப்பு வீரர்கள் வீதியில் இருப்பது போல் மெலிதான துப்பாக்கிப் பிரயோகமும் செய்ய முடியாது. அதற்காக, நாடு கடத்தலாகும் ஒவ்வொரு இந்தியப் பயணிக்கும் தடியுடன் நாலைந்து பாதுகாப்பு வீரர்கள் விகிதம் ஒரு பெரும் பாதுகாப்புக் கூட்டத்தை அமெரிக்கா விமானத்தில் அனுப்ப முடியாது. விமானம் மற்றும் பயணிகளின் பாதுகாப்பிற்கு உகந்த வழி, நாடு கடத்தல் ஆகிறவர்களின் கை கால்களில் சங்கிலி போடுவது என்பது புரிந்துகொள்ளத் தக்கது, தவிர்க்க முடியாதது.

 

அமெரிக்கா செய்தது அமெரிக்காவுக்கு சரி.  ஆனால் கைகால்களில் சங்கிலியோடு திருப்பி அனுப்பப் பட்ட இந்தியர்கள் நம் மனதுக்கு வருத்தமான காட்சி. அது  இந்திய நாட்டின் கண்ணியம் வாங்கிய அடி. சக இந்தியக் குடிமக்களாக நாம் இப்படி நினைக்க, நாட்டின் கதி குறித்து வருத்தப்பட, நமக்கு அருகதை இருக்கிறது. ஆனால் நாட்டின் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் பெரிதும் சிறிதுமாக – சிலருக்கு மிகப் பெரிதாக, சிலருக்கு மிகச் சிறிதாக – அந்த அருகதை இல்லை.

 

நமக்குச் சுதந்திரம் கிடைத்து 77 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அது மூன்று தலைமுறைக் காலம். மத்தியிலும் மாநிலங்களிலும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் ஆட்சி செய்த லட்சணமும் நிர்வாகம் செய்த அழகும் எங்கெல்லாம் தெரிகிறது? நமக்குக் கிடைத்திருக்கும் குடிநீர் மற்றும் சாலை வசதிகளில் தொடங்கி, கல்வித் தரம், வேலை வாய்ப்பு, வாழ்க்கை வசதி என்று போய், சட்டம் ஒழுங்கு மற்றும் அரசுத் துறைகளின் அவலத்தில் அவை சிரிப்பாய்ச் சிரிக்கின்றன. இருக்கிற நிலைமையை அனுசரித்து இந்தியாவில் பிழைப்பவர்கள் பலர், சௌகரியம் காண்பவர்கள் சிலர், என்ற குடிமக்கள் உண்டு. ஆனால் வேறு சில குடிமக்களும் உண்டு.  யார் அந்த வேறு சிலர்?

 

மற்ற பல நாடுகளில் கிடைக்கக் கூடிய நல்ல வேலை வாய்ப்புகளையும் வருமானத்தையும் விரும்பி அங்கு செல்ல எத்தனிக்கும் இந்தியர்கள் உண்டு, அவர்களில் சிலர் வளைகுடா நாடுகளில் பிளம்பர், கார் டிரைவராகப் போகிறார்கள். இன்னும் சிலர் அமெரிக்கா சென்று படித்து அங்கு கார்ப்பரேட் நிறுவனங்களில் சி.இ.ஓ-வாகவும் உயர்கிறார்கள். அதுவும் முடியாமல் இதுவும் முடியாமல் இருப்பவர்களில் பலர் முப்பது நாப்பது லட்சம் கடன் வாங்கிச் செலவழித்து, கடல் காடு வழியாகத் துன்பத்தில் பயணித்து, அமெரிக்காவுக்குள் ரகசியமாக நுழைக்கிறார்கள். அங்கு பிடிபட்டால் சங்கிலி அணிவிக்கப் பட்டு இந்தியாவுக்குத் திருப்பப் படுகிறார்கள்.   

 

அமெரிக்காவிலிருந்து சிங்கப்பூர், ஜப்பான், இங்கிலாந்து, ஜெர்மெனி நாட்டு மனிதர்கள் இப்படி நாடு கடத்தப்டுவதை நாம் கேள்விப் படுகிறோமா? அப்படி நடப்பதில்லை. என்ன காரணம்?

 

அந்த நாட்டுக் குடிமக்களுக்குத் தேவையான கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், பிற வாழ்க்கை வசதிகள், சிறந்த அரசு நிர்வாகம் ஆகியவை அவர்கள் நாட்டிலேயே கிடைக்கின்றன. அதனால் பிழைக்கவும் பெரிய சம்பாத்தியத்தில் வாழவும் அவர்கள் அமெரிக்கா அல்லது வேறு வெளிநாடு போக வேண்டாம். அதுவும் ரகசியமாக அமெரிக்காவுக்குள் நுழைய அவர்களுக்கு அவசியமோ தூண்டுதல் காரணமோ கிடையாது.  

 

இந்தியா எப்படி? நம் மக்கள் அனைவருக்கும் உள் நாட்டில் நல்ல வேலை வாய்ப்பும் சிறந்த வாழ்க்கை வசதிகளும் போதிய அளவில் இன்றும்  கிடைக்கவில்லை.  அதற்குக் காரணம் நமது நாடுதானே? நமது நாடு என்றால், நமது நாட்டை 1947-க்குப் பிறகு மத்தியிலும் மாநிலங்களிலும் ஆட்சி செய்த அரசியல்வாதிகள் தானே காரணம் – பெரிதும் சிறிதுமாக? முதல் ஒன்றிரண்டு, அல்லது மூன்று, பத்தாண்டுகளுக்குப் பின்னர் நமது மக்கள் நல்ல முன்னேற்றத்திற்கான அறிகுறிகளைக் கண்டிருக்க வேண்டும், இன்று அவை மேலும் பரந்து பெரிதாகி நம் மக்கள் அனைவரையும் வளப்படுத்தும் பெரிய உயரத்தில் நமது பொருளாதாரம் இருக்க வேண்டும்.  ஆனால் இல்லை.

 

ஆட்சியில் இருந்தாலும் எதிர்க் கட்சியில் இருந்தாலும் நமது அரசியல் கட்சித் தலைவர்களின் நேர்மைக் குறைவு, தன்னல மோகம் மற்றும் சுய-குடும்ப அக்கறை பிரசித்தமானது. இந்தியர்களின் நல்வாழ்க்கை ஆர்வத்தின் மீது, அதற்கான பிரயத்தனத்தின் மீது, கண்ணுக்குத் தெரியாத சங்கிலிகளைப் போட்டு அவர்களை இடர்ப்படுத்தி முடக்கி வைத்திருப்பது இந்த அரசியல்வாதிகள் தான். அரசியல்வாதிகளில் முக்கால் வாசிப்பேர் இப்படியானவர்கள் என்பதால், நல்லது செய்ய நினைக்கும் மற்ற அரசியல்வாதிகளும் செயல்டுவதற்குத் திணறுகிறார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மெனி, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இந்தப் பரிதாப நிலை இல்லை.

 

பெருவாரியான மக்களைப் பல சங்கிலிகளில் பிணைத்து வைத்து, எதற்கும் ஏக்கத்துடன் அரசாங்கத்தை எதிர்பார்க்கும் நிலையில் அவர்களை வைத்து, சில வகுப்பு மக்களை எப்போதும் தாஜா செய்து, எல்லா மக்களிடமும் அரசாங்கப் பணத்தில் சில இலவசங்களை எறிந்து, அவர்களின் நன்றி கலந்த ஓட்டை வாங்குவது நமது அநேக அரசியல் தலைவர்களுக்கு எளிதாக இருக்கிறது. ஒரு கட்சியிலாவது மாறுதல் தெரிவது ஆறுதல்.

 

இந்தியர்களுக்குச் சொந்த நாட்டிலேயே பல இடர்ச் சங்கிலிகள் அணிவித்து – அதுவும் தடிமனான அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் சங்கிலிகளில் மக்களைப் பிணைத்து – அவர்களை நசுக்கி வைத்திருக்கிறார்கள் நமது அநேக அரசியல் தலைவர்கள். இந்த அவலச் சங்கிலிகள் எப்போது உடைபடும் என்ற ஏக்கம்தானே நாட்டில் விவரம் அறிந்த நல்லோர்க்கு இருக்கும்?


* * * * *


Author: R. Veera Raghavan, Advocate, Chennai