Saturday, 29 March 2025

அண்ணாமலை, ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ், சீமான், விஜய் – இவர்களில் யார் எப்படி?

         

          -- ஆர். வி. ஆர்

 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, மக்கள் செல்வாக்கு நாளுக்கு நாள் ஒரு அலாதியான காரணத்தினால் கூடுகிறது.  அது என்ன?

 

திமுக-விலிருந்து ஆரம்பிக்கலாம்.

 

மு. க. ஸ்டாலின் தலைமை தாங்கும் திமுக ஒரு அராஜகக் கட்சி என்பது தமிழக மக்களின் பரவலான எண்ணம். வேண்டாதவர்களிடம் முஷ்டி வீசுதல், எட்டி உதைத்தல், காது கூசும் சொற்கள் பேசுதல் போன்ற அநாகரிகச் செயல்கள் அக் கட்சியின் கீழ் மட்டத்திலும் நடு மட்டத்திலும் இயல்பாகப் பரவியிருக்கிறது என்பது தமிழ்நாட்டில் பலரின் கருத்து. அந்தக் கட்சியினரைப் பகைக்கிற மாதிரி வெளியில் பேசவோ செயல்படவோ சாதாரண மக்கள் பயப்படுவார்கள்.

 

தமிழ்நாட்டில் சில அரசியல் தலைவர்கள் திமுக-வை எதிர்க்கலாம், ஆனால் தமது சுயலாபத்திற்காக மட்டும் எதிர்க்கிறார்கள், அல்லது அவர்கள் திமுக மாதிரி தில்லானவர்கள் கிடையாது, சமத்து சாதுப் பேர்வழிகள், அவர்களை நம்பிப் பயனில்லை, என்பதும் பெருவாரியான சாதாரண மக்களின் கருத்து. இந்த நிலையில் தமது அறியாமையால், இயலாமையால், அடாவடிக் கட்சி திமுக-வுக்கு ஓட்டுப் போடுவது பாதுகாப்பானது என்ற ஒரு எண்ணத்தில் சாதாரண மக்கள் அந்தக் கட்சியை வேறு வழி தெரியாமல் ஆதரிக்கிறார்கள். இருக்கிற ஏழ்மையில் வருகிற பணத்தை அவர்கள் தேர்தல் காலங்களில் வாங்கிக் கொள்வது வேறு விஷயம். திமுக-வுக்கு அநேக சாதாரண மக்கள் வாக்களிப்பதன் பிரதான காரணம் பணம் அல்ல.  

 

எம்.ஜி.ஆர் மீதுள்ள பற்றால், அவரது இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டுப் போடும் 55+ வயதுள்ள வாக்காளர்கள் இன்றும் அதிமுக-வை ஆதரிக்கிறார்கள் – தலைமைக் குணம் இல்லாத, தகுதிக்கு மீறிய பேராசைகள் நிறைந்த, எடப்பாடி பழனிசாமிக்காக அல்ல. பழனிசாமியோ அல்லது அதிமுக-வின் வேறு முன்னாள் இந்நாள் தலைவரோ இன்று மக்களை ஈர்க்கும் தலைவர்கள் அல்ல. அவர்கள் இரட்டை இலையின் நிழலில் இளைப்பாறுகிறவர்கள்.

 

ராமதாஸின் பாமக, அடிப்படையில் ஒரு ஜாதிக் கட்சியாகவே தெரிகிறது. அதனால் பிற ஜாதி மக்கள் பலரும் அந்தக் கட்சியிலிருந்து தள்ளி இருக்க விரும்புவார்கள். மற்ற மக்களுக்கும் அவரவர் ஜாதிகள் மேல் பிடிப்பு இருப்பதால், அவர்களில் பலரும் பாமக-வில் சேர, அந்தக் கட்சியை நேரடியாக ஆதரிக்க, விரும்ப மாட்டார்கள்.  தன் ஜாதி மக்களை முக்கியமாக ஈர்த்திருக்கும் ராமதாஸ், ஒவ்வொரு தேர்தல் நிலவரப்படியும் திமுக மற்றும் அதிமுக-வுடன் மாறி மாறிக் கூட்டணி வைத்தாலும் தன் கட்சியினரின் ஆதரவை அவர் இழக்க மாட்டார்.

 

நாம் தமிழர் கட்சியின் சீமான் மேடைகளில், பத்திரிகையாளர் சந்திப்புகளில், கைகள் வீசி, முக பாவங்கள் மாற்றி, குரலை ஏற்றி இறக்கி, பஞ்ச் டயலாக் பேசி, நாடகத் தனம் செய்கிறார். துடிப்பான உணர்ச்சி மிகுந்த இள வயதினரை, அதுவும் ஆண்களை, அவர் கவர்கிறார். போட்டிக் கட்சிகளின் அரசியல் தலைவர்களிடம் சீமான் டெக்னிக் இல்லை. மற்றபடி அவர் ஒரு திமுக பாணி கட்சியாகவும், திமுக-வுக்குப் போட்டியாகவும், வளர நினைக்கிறார்.  மற்ற யாரும் கவுரமான தலைவர்களாக அவர் கட்சியில் உருவாக முடியாது. அவர்தான் கட்சி.

 

நடிகர் விஜய்க்கு சினிமா ரசிகர்கள் ஏராளம். அரசியலுக்கு வந்து அரசியல்வாதியாக உழைத்துச் செயல்பட்டு மக்கள் ஆதரவைத் திரட்டியவர் அல்ல விஜய்.  தனக்கு ரெடிமேடாக இருக்கும் சினிமா ரசிகர்களின் ஆதரவை,  தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்காளர் ஆதரவாகப் பெற்றவர் அவர். அவர் எந்தக் கட்சியை ஆதரித்தாலும் எதிர்த்தாலும் அவரது ரசிகர்களின் ஆதரவு அவருக்கு உண்டு. அவரிடம் முதிர்ச்சி ஏதும் காணப்படவில்லை. அரசியலில் விஜய் நிலைப்பாரா, வெற்றி அடைவாரா, என்று தெரியாது. அவர் இன்னொரு எம். ஜி. ஆரும் அல்ல.

 

இவர்கள் அனைவரிலிருந்தும் வேறுபட்டவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. 41 வயதுதான் ஆகப் போகிறது. கட்சியில் சேர்ந்த பதினோரு மாதங்களில் தமிழக பாஜக தலைவர் ஆக்கப் பட்டார். அதைத் தொடர்ந்து, கடந்த மூன்றே முக்கால் வருடங்களில் அவர் மக்களிடம் தனக்கென்று ஒரு அபரிதமான செல்வாக்கை வளர்த்துக் கொண்டிருக்கிறார்.

 

தமிழகத்தில் ஏற்கனவே மிகப் பிரபலமான ஒரு கட்சித் தலைவரின் மடியில் தவழ்ந்தோ, காலில் விழுந்தோ, விரல் பிடித்தோ, அடியொற்றி நடந்தோ மக்களிடம் அறிமுகமாகி வளர்ந்தவர் அல்ல அண்ணாமலை. அவர் ஒரு சுயம்பு – அதை சரியாக அடையாளம் கண்டவர் பிரதமர் மோடி.

 

அண்ணாமலை மற்றும் தமிழக பாஜக-வின்  ‘அநியாய அக்கிரம அராஜகத்திற்கு’ப் பயந்து, அதன் காரணமாக அதிகமான மக்கள் அண்ணாமலையை ஏற்கிறார்கள் என்பதில்லை. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா மாதிரி, தோற்றக் கவர்ச்சியும் இல்லாத தலைவர் அண்ணாமலை. ராமதாஸ் மாதிரி, தன் ஜாதி மக்களை நம்பி, தன் ஜாதி மக்களுக்காக அரசியலுக்கு வந்தவர் அல்ல அண்ணாமலை. சீமானின் நாடகப் பாசாங்கும் அவரிடம் கிடையாது. விஜய் மாதிரி தமிழகத்தில் ரெடிமேட் ஆதரவாளர்கள் கொண்டவரும் அல்ல அவர்.  ஏற்கனவே உள்ள பாஜக-வில் சேர்ந்து, எப்படி அவரால் தமிழக பாஜக-வுக்குப் புத்துயிர் அளிக்க முடிந்தது, அவரும் நாளுக்கு நாள் அதிகம் பிரபலம் அடைகிறார்?

 

அண்ணாமலையின் தனிப்பட்ட மக்கள் செல்வாக்கிற்கான காரணம் இதுதான்.  ‘அராஜக திமுக-வை, முறைகேடுகள் நிறைந்த திமுக-வை, தைரியமாக, தில்லாக, தெனாவெட்டாக, நேருக்கு நேர், வார்த்தைக்கு வார்த்தை, பளீர் சுளீரென்று எதிர்க்க வல்ல ஒரே தமிழகத் தலைவர் அண்ணாமலை, அதையும் அவர் தனது சுயலாபத்திற்காகச் செய்யவில்லை, நமக்காகச் செய்கிறார். அவர் பேச்சும் தெளிவாக, நேராக, நியாயமாக, நச்சென்று இருக்கிறது. இந்த மனிதர் நமக்குப் பாதுகாப்பாகவும் இருப்பார். இவரை நம்பலாம்’ என்ற எண்ணம் அதிகமான தமிழர்களின் மனதில் பதிகிறது. இதுதான் அண்ணாமலையின் தனிப்பட்ட மக்கள் செல்வாக்கின் அடித்தளம்.  

 

ஒரு காலத்தில் காஷ்மீரில் இந்திய ராணுவத்தினரை நோக்கிக் கல்லெறிந்தனர் சாதாரண மக்கள். ஏனென்றால் அப்போது காஷ்மீரில் தீவிரவாதிகளின் கை ஓங்கி இருந்தது. தில்லான தீவிரவாதிகள்தான் தமக்கு அதிகப் பாதுகாப்பு என்று நினைத்து, தீவிரவாதிகளின் கட்டளைப்படி காஷ்மீரில் அன்று சாதாரண மக்கள், கைகள் கட்டப்பட்ட நமது ராணுவத்தினர் மீது கல் வீசினர். ஆனால் அரசியல் சட்டப் பிரிவு 370 நீக்கப் பட்ட பிறகு,  தீவிரவாதிகளை அடித்து நொறுக்கி துவம்சம் செய்யும் ராணுவத்தை வைத்திருக்கும் மத்திய அரசின் மீது இப்போது காஷ்மீர் மக்கள் அதிக நம்பிக்கை வைக்கிறார்கள்.

 

யார் தில்லானவர்களோ, யார் சக்தி மிக்கவர்களோ, அவர்களை ஆதரிக்கும், அவர்களுக்கு ஓட்டுப் போடும் இந்தியர்கள் அதிகம். அந்த சக்திமான்கள் நல்லவர்களாகவும் இருந்துவிட்டால் சாதாரண மக்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் அந்த நல்ல வல்லவர்களின் பின்னால் நிற்பார்கள்.  அப்படியாகத்தான் திமுக-வைத் துணிவோடு எதிர்த்துப் பேசி, அதற்கான காரண காரியங்களை விரிவாக, பொறுமையாக, எடுத்துச் சொல்லும் அண்ணாமலையைத் தமிழக மக்கள் பலரும் ஆதரிக்கிறார்கள்.

 

ஒரு அரசியல் கட்சியைக் குறியாக, தில்லாக, தளராமல் எதிர்ப்பதால் மட்டும் ஒரு புதிய பெரிய தலைவர் மக்களிடையே உருவாக முடியும் என்று காண்பித்தவர் அண்ணாமலை. அது ஏன் சாத்தியம் என்பதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, அப்படி ஒதுக்கப்பட வேண்டிய பெரும் தீய சக்தி திமுக என்று சாதாரண மக்களே பரவலாக நினைக்கிறார்கள். இரண்டு, அந்த நினைப்பை அரசியல் உலகில் செயல்படுத்தக் கூடிய நேர்மையான, உறுதியான, நெஞ்சுரம் மிக்க, ஒரே தலைவர் அண்ணாமலை என்றும் மக்கள் நம்புகிறார்கள்.  

 

தமிழகத்தில் பாஜக ஒரு கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வருவது, வரமுடியாமல் போவது, வேறு விஷயம். ஏனென்றால் தேர்தல் வெற்றிக்கான சரியான கூட்டணிக் கணக்குகள் தனியானவை, அவை மெய்ப்பட வேண்டும். ஆனால் அண்ணாமலை தமிழக அரசியலில் ஒரு விடிவெள்ளி, தமிழக பாஜக-வுக்கும் தமிழக மக்களுக்கும் ஒரு வரப் பிரசாதம் என்பது நிச்சயம் தானே?


* * * * *

 

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

Tuesday, 11 March 2025

பள்ளியில் மும்மொழி – மு. க. ஸ்டாலினுக்கு ஒரு தமிழன் எழுதும் கடிதம்

 

-- ஆர். வி. ஆர்

 

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு,

 

வணக்கம். 

 

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை நீங்கள் ஏற்கவில்லை. அதிலும் தேசிய கல்விக் கொள்கையின் ஒரு அங்கமாக, தமிழகப் பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் தவிர மாணவர்கள் விரும்பும் வேறு ஒரு இந்திய மொழியைப் பயிற்றுவிப்பதற்கு உங்கள் கட்சியும் அரசும் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றன.  உங்கள் எதிர்ப்பு சிறுபிள்ளைத் தனம், அசட்டுத்தனம், என்று உங்களுக்குப் புரியவே இல்லையா?

 

"திரைகடலோடியும் திரவியம் தேடு" என்பது ஔவையார் வாக்கு. ‘கடல் கடந்து வெளிநாடு சென்றாவது செல்வத்தைத் தேடவேண்டும்’ என்பது அதன் பொருள்.  

 

ஒளவையார் சொல்லுக்கு நடைமுறையில் என்ன அர்த்தம்? ‘இன்னொரு நாட்டுக்குச் சென்று அந்நாட்டு மக்களை ஒரு வருடம் பொறுமையாகத் தமிழ் கற்க வைத்து, பிறகு தமிழில் மட்டும் அவர்களிடம் பேசிப் பணம் சம்பாதித்துக் கொள், தமிழா!’ என்று அர்த்தமா? அல்லது, ‘தொலைதூரம் செல்லவிருக்கும் நீ, அந்த இடத்து மொழியையும் தேவையான அளவு கற்று அந்த மக்களிடம் எளிதாகப் பொருள் ஈட்டிக் கொள், தமிழா!’  என்று அர்த்தமா?

 

பாரதம் பல மொழிப் பிரதேசங்களைக் கொண்டது.  வேலையின்மை அதிகம் உள்ள நாடு. இங்கிருந்து பிற நாடுகளுக்குச் சென்று சம்பாதிக்க முடிகிறவர்களை விட, உள்நாட்டில் மற்ற பிரதேசங்களுக்குச் சென்று சம்பாதிக்க நினைக்கிற மக்கள் அதிகம் – அது  எளிதில் அவர்களுக்கு சாத்தியமும் ஆகும். அவர்களின் முயற்சி வெற்றி பெற, அந்த மற்ற பிரதேசத்தின் மொழியை அவர்கள் கற்க முன்வர வேண்டும்.  தமிழ் மொழியை நடிகர் ரஜினிகாந்த் கற்றது போல்.

 

இல்லையென்றால் நமது தொழிலைப் பொறுத்து, மற்ற பிரதேசத்து மொழி தெரிந்தவர்களை வேலைக்கு வைத்து அந்தப் பிரதேசத்தில் நாம் தொழில் செய்ய வேண்டும். சன் டிவி பல இந்திய மொழிகளில் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்வதற்காகப் பிற மாநிலங்களில் அலுவலகங்கள் அமைத்து அந்த அந்தப் பிரதேச மொழி தெரிந்தவர்களை வேலைக்கு வைப்பது போல்.

 

என்ன இருந்தாலும், பல மொழிகள் பேசப்படும் இந்தியாவில் தாய்மொழி தவிர இன்னொரு இந்திய மொழி பயில்வது மிகவும் அனுகூலம்.  பள்ளிப் படிப்பின் போதே நமக்கு உணர்வு ரீதியாக அல்லது வேலை நிமித்தமாகப் பொருந்தி வரும் இன்னொரு இந்திய மொழியைத் தேர்வு செய்து கற்பது புத்திசாலித் தனம். முதல்வரே! இந்தக் கட்டம் வரை, இந்த எண்ணத்தின் லாஜிக் பற்றி,  உங்களுக்கு ஆட்சேபணை இருக்காதல்லவா?

 

சரி, பள்ளிகளுக்கான மும்மொழிக் கொள்கையை எதிர்த்து நீங்கள் பேசுவதின் சாராம்சம் என்ன? அதை இப்படிச் சொல்லலாம்: "தமிழகப் பள்ளி மாணவர்கள் பிரதேச மொழி தமிழையும் அதோடு ஆங்கிலத்தையும் பள்ளியில் கற்கட்டும். இன்னொரு இந்திய மொழியை அவர்கள் கற்க விரும்பினால்,  அவர்கள் வேறு எங்காவது போய் அதைக் கற்றுக் கொள்ளட்டும். அதை மாநில அரசு தடுக்காது. ஆனால் அந்த இன்னொரு இந்திய மொழியை அவர்கள்  பள்ளியில் கற்றால், அவர்களே எந்த மொழியைத் தேர்வு செய்தாலும், அது மொழித் திணிப்பு. அது ஹிந்தித் திணிப்பாக உருவெடுக்கும்."

 

உங்கள் எண்ணம் தமிழகத்தின் அரசுப் பள்ளி ஏழை மாணவர்களைக் குறிப்பாக பாதிக்கும். தாம் விரும்பும் இன்னொரு இந்திய மொழியை அவர்கள் எளிதாகப் பள்ளியில் படிக்க முடியாவிட்டால், எங்கே எப்போது அதைக் கற்பார்கள்? அதற்காக அவர்களுக்கு ஏன் வீண் சிரமம், வெட்டிச் செலவு, கால விரயம் ஏற்படுத்துகிறீர்கள்? அவற்றைச் சந்திக்க முடியாமல் அவர்கள் மூன்றாவது மொழியைப் பெரும்பாலும் கற்கவே மாட்டார்களே?

 

உங்கள் நிலைப்பாடு சிறுபிள்ளைத் தனமானது என்று விவரம் அறிந்த அனைவருக்கும் தெரியும். ஆனால் ‘தமிழகத்தில் பெருவாரியான தமிழர்கள் இந்த விஷயத்தில் விவரமானவர்கள் அல்ல, ஆகையால் அநேக தமிழர்கள் என்  எதிர்ப்பை வரவேற்பார்கள்’ என்று நீங்கள் நினைத்தால் அது அசட்டுத்தனம்.

 

நீங்களும் உங்கள் கட்சியினரும் தெருவில் இறங்கி மும்மொழிக் கொள்கையை எதிர்த்துக் கூட்டங்கள் போடலாம், ஆர்ப்பாட்டங்கள் நடத்தலாம். ஆனால் உங்கள் வாதத்தை ஏற்காத பொதுமக்கள் தாமாகத் கூடி தெருவுக்கு வந்து எதிர்க் கோஷம் போட மாட்டார்கள். திமுக என்னும் கட்சியை –மொழி பற்றிய அதன் நிலைப்பாட்டை – வெட்டவெளியில் பகிரங்கமாக எதிர்ப்பது இந்த ஜனநாயகத்தில் தமக்கு ஆபத்தானது என்று உணர்ந்தவர்கள் சாதாரண மக்கள்.

 

இது போக, தங்கள் ஏழ்மையிலும் இயலாமையிலும் தேசிய கல்விக் கொள்கை பற்றி அக்கறை காட்ட முடியாத மிக எளிய மக்களும் தமிழகத்தில் இருக்கிறார்கள். மும்மொழிக் கொள்கை விஷயத்தில் இவர்கள் உங்கள் நிலைப்பாட்டை ஏற்றவர்கள் என்று அர்த்தமல்ல. இவர்களின் நலனும் காக்கப் படவேண்டும்.

 

வேலைக்காக இடம் விட்டு இடம், மாநிலம் விட்டு மாநிலம், மாறும் மக்கள் அதிகம் இருக்கிறார்கள். பரந்த இந்தியாவில், வளர்கிற இந்தியாவில், இடம் பெயர்தல் அதிகம் நிகழும் காலம் இது. அதற்கு ஏற்ப சாலைகள் நீள்கின்றன, புதிய அதிவேக ரயில்கள் விரைகின்றன, புதிய விமான நிலையங்கள் எழுகின்றன.

 

தமிழகத்தில் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக வட மாநிலத்தவர்கள் வந்து எல்லா வேலைகளையும் செய்து பிழைப்பதைத் தமிழர்கள் பார்க்கிறார்கள். இதன் விளைவாக, இன்னொரு இந்திய மொழி நமக்குத் தெரிந்தால் நாம் நல்ல வேலைகள் தேடும் இடம் இந்தியாவில் விரிவடையும் என்று தமிழக இளைஞர்கள் நினைப்பார்கள், பெண்கள்  உட்பட.  இதை நீங்கள் உணரவில்லையா முதல்வரே?

 

வெளி மாநிலம், வெளி நாடு என்று தமிழர்கள் போய் விட்டால், அந்தந்த இடங்களில் தமக்கான கோவில்களைக் கட்டிக் கொள்ளலாம். தமிழ்ச் சங்கங்களும் அமைத்துத்  தங்களின் தமிழ் உணர்வைக் காத்துக் கொள்ளலாம். அது நடக்கிறது.

 

அமெரிக்காவில் பல ஊர்களிலும் ஹிந்துக் கோவில்கள் உண்டு. மிக அதிகமாகத் தமிழ்ச் சங்கங்களும் அந்த நாட்டில் உண்டு. அந்தத் தமிழ்ச் சங்கங்களை ஏற்படுத்தியது அங்கு குடியேறிய தமிழர்களின் தமிழ்ப் பற்றுதானே?  அந்தத் தமிழ்ச் சங்கங்களுக்கும் திமுக தலைவர்களுக்கும் சம்பந்தம்  கிடையாதே?  திமுக-வைத் தவிர்த்து தமிழும் தமிழ் உணர்வும் அங்கு வாழ்கிறதல்லவா, வளர்கிறதல்லவா? தமிழகத்தில் மட்டும் அது நடக்காதா?

 

‘எதுவானாலும், மும்மொழிக் கொள்கையை நான் எதிர்ப்பதால், மக்களின் மொழி உணர்ச்சியை நான்  கிளறுவதால்,  முன்காலம் போல் திமுக-வுக்கு இப்போதும் அதிக ஓட்டுகள் கிடைக்கும்’ என்று ரகசியமாக நினைக்கிறீர்களா? அப்படித்தான் தெரிகிறது. ஆனால் உங்கள் நினைப்பு  சரியல்ல, இக்காலத்தில் அது பயன் தராது.

 

தமிழகச் சிறுவர்கள் தங்கள் பள்ளிகளில் இன்னொரு இந்திய மொழி கற்பதைத் தமிழக மக்கள் பரவலாக விரும்புவதால், மக்களின் அந்த விருப்பத்தை நிறைவேற்ற ஒரு மாற்று அரசியல் சக்தி அசாதாரண உறுதியுடன் தமிழகத்தில் செயல்படுகிறது, வலுப்பெறுகிறது. அதுவே தமிழக மக்களை இந்த விஷயத்தில் தைரியப் படுத்துகிறது.  இதை நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருப்பதும் உங்கள் அசட்டுத்தனம் முதல்வரே!

    

வாழ்த்துகளுடன்:

தமிழக மாணவர்களின் நலம் விரும்பும்,

 

ஒரு தமிழன்


* * * * *


Author: R. Veera Raghavan, Advocate, Chennai

Thursday, 6 March 2025

மும்மொழிக் கொள்கை. திமுக பழனிவேல் தியாகராஜனின் கேள்விகள் அபாரமா அபத்தமா?


          -- ஆர். வி. ஆர்

 

பழனிவேல் தியாகராஜன் ஒரு முக்கியத் தமிழக அமைச்சர். பத்திரிகையாளர் கரண் தாப்பருக்கு அவர் அளித்த யூ-டியூப்  பேட்டியில், மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையைக் கண்டித்தார், எதிர்த்துக் கேட்டார். அதை தளத்தில்  மெச்சிப் பகிர்ந்திருக்கிறார் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின்.


மும்மொழிக் கொள்கை என்பது, மத்திய அரசு வெளியிட்ட தேசிய கல்விக் கொள்கையின் ஒரு அம்சம். நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்களில் தேசிய கல்விக் கொள்கையை அமல் செய்ய விரும்புகிறது மத்திய அரசு. தமிழகத்தில் மாநில அரசு எதிர்க்கிறது. 

 

மும்மொழிக் கொள்கையின் படி, நாட்டின் அனைத்துப் பள்ளிகளிலும் ஐந்தாம் வகுப்பு வரை, முடிந்தால் எட்டாம் வகுப்பு வரை, முக்கியப் பிரதேச மொழி தான் பயிற்று மொழியாக இருக்கும். தமிழ்நாடு என்றால், தமிழ். ஆங்கிலப் பாடமும் கட்டாயம்.  தவிர, மாணவர்கள் தங்களின் விருப்பப்படி வேறு ஏதேனும் ஒரு இந்திய மொழியை ஒரு பாடமாகப் பயில்வார்கள்.


சரி, பழனிவேல் தியாகராஜன் பத்திரிகையாளரிடம் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து என்ன பேசினார்? அதிலென்ன சாரம், அதிலென்ன லாஜிக்? அவர் பேசியதின் ஒரு முக்கியப் பகுதி இது:

 

இருமொழிக் கொள்கை மூலம்தான் தமிழகம் இந்த வளர்ச்சியை அடைந்துள்ளது. தமிழகத்துக்கு மும்மொழிக் கொள்கை தேவையில்லை. உத்தரப் பிரதேசம், பீஹார், குஜராத்தில் எத்தனை மாணவர்களுக்கு மூன்று மொழி தெரியும்? எத்தனை மாணவர்களுக்கு இரண்டு மொழி தெரியும்?”  

 

ஒரு தேசத்தின் அல்லது பிரதேசத்தின் மக்களுக்குக்  கல்வி வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, அதிகமாக அல்லது குறைவாகக் கிடைத்திருக்கச் சில காரணங்கள் இருக்கும். அதனால் உ. பி மாநிலத்தை விட, பீஹார் மாநிலத்தை விட, தமிழகம் அதிகளவு வளர்ச்சி பெற்றிருக்கலாம். தமிழகத்திற்குள் ராமநாதபுரம், பெரம்பலூர் மாவட்டங்களை விட கோயம்பத்தூர் அதிக வளர்ச்சி கண்டிருக்கலாம். இதற்கெல்லாம் தமிழகத்தின் இருமொழிக் கொள்கை காரணமல்ல என்பது அமைச்சருக்குப் புரியுமா? புரியாவிட்டால் அவருக்கு இப்படிச் சொல்லி விளக்கலாம்.

 

ஜப்பான் மொழியால்தான் ஜப்பான் வளர்ச்சி அடைந்தது, ஹீப்ரு மொழியால்தான் இஸ்ரேல் வளர்ச்சி அடைந்தது என்றும் சொல்லலாமா? ஒரு மக்களின் உழைப்பு, அர்ப்பணிப்பு, தொழில் சிந்தனை, அவர்களின் அரசியல் தலைமை எல்லாம் சேர்ந்தல்லவா அவர்களின் வளர்ச்சிக்கு வழி காட்டும்? தமிழகத்தில் அதற்கு வலுவான அடித்தளம் இட்டது திமுக-வுக்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியல்லவா?

 

இன்னொன்று. தேசிய கல்விக் கொள்கை இப்போதுதான் சில மாநிலங்களில் ஆரம்ப நிலையில் அமல் ஆகி வருகிறது. அதைப் பூரணமாக அமல் செய்து அந்த மாநிலங்களில் மூன்றாவது இந்திய மொழியையும் பரவலாகப் பயிற்றுவிக்க, அதன் பலன்கள் தெரிய, வருடங்கள் ஆகும்.  இந்த நிலையில், “உ. பி, பீஹார், குஜராத்தில் எத்தனை மாணவர்களுக்கு மூன்று மொழி தெரியும்?” என்று பழனிவேல் தியாகராஜன் கேட்டதன் லாஜிக், அவரும் முதல்வரும் மட்டும் அறிந்த ரகசியம்.

 

அடுத்ததாக, வட மாநிலத்து மாணவர்களில் “எத்தனை மாணவர்களுக்கு இரண்டு மொழிகள் தெரியும்?” என்றும் கேட்கிறார் அமைச்சர். அதாவது, “தமிழக மாணவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்த அளவுக்கு உ.பி, பீஹார் மாணவர்களுக்கு ஆங்கிலமும் தெரியாது. ஹெ ஹே!” என்கிற தொனியில் பேசியிருக்கிறார் பழனிவேல் தியாகராஜன்.

 

உ. பி மற்றும் பீஹார் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு ஆங்கிலம் சரியாகத் தெரியவில்லை என்றால் அது இருக்கட்டும், அது கவனிக்கப்பட வேண்டும்.  ஆனால் தற்போதய தமிழக மாணவர்களுக்கு – பன்னிரண்டு கிளாஸ் படித்தவர்களுக்கும் – தமிழே முறையாகப் பேசவும் எழுதவும் தெரிகிறதா? பலர் கோர்வையாகக் கூடத் தமிழ் பேசுவதில்லையே? முதலுக்கே இங்கு மோசமாக இருக்கிறதே?

 

1967-ல் திமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த பின்னர் மாநிலத்தின் பள்ளிகளில், அதுவும் அரசுப் பள்ளிகளில், படித்த மாணவர்களின் தமிழறிவு குறைந்துகொண்டே வருகிறது. இதை நினைத்து வருத்தப் படாமல் உ. பி, பீஹார் மாணவர்களின் ஆங்கில அறிவைப் பற்றி அங்கலாய்ப்பதில் என்ன பயன்? அதிலும் கூட, தற்காலத்தில் தமிழக அரசுப் பள்ளிகளில் படித்து வெளிவரும் மாணவர்களின் ஆங்கில மொழியறிவு எப்படி இருக்கிறதாம்? ஆங்கிலப் பாடத்தில் ஒரு பீஹார் மாணவன் நூற்றுக்கு இருபது மார்க் வாங்குகிறான், தமிழக மாணவன் சிறப்பாக இருபத்தி ஐந்து மார்க் வாங்குகிறான் என்று தம்பட்டம் அடிக்கிறாரா பழனிவேல் தியாகராஜன்?

 

தேசிய கல்விக் கொள்கை நாட்டில் பெரிதும் அமலானால், அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்துதான் ஆகும். அதற்கான  கட்டமைப்பு வசதிகளை உள்ளடக்கியது அந்தக் கொள்கை.  அப்போது அதிகமான மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் படிக்க முன் வருவார்கள். அதன் விளைவாக, மூன்றாவது மொழியை இப்போதும் கற்பிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் திமுக தலைவர்களின் கொழுத்த கல்வி வியாபாரம் அடி வாங்கும். அது அவர்களின் கவலை.

 

தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கை நடைமுறையானால், சாதாரண மக்களின் பிள்ளைகளின் கவனம் கல்வியில் பிடித்து வைக்கப்படும் – முக்கியமாக இது அரசுப் பள்ளிகளில் நிகழும்.  அதோடு இன்னொரு இந்திய மொழியையும் அவர்கள் கற்றால் தங்களின் கல்வி, சுய அபிவிருத்தி, தமிழகம் தாண்டியும் வேலை என்று அவர்கள் முனைப்பாக இருப்பார்கள். அது நடந்தால், தமிழக மக்களின் அறியாமையை, எதற்கும் அரசை நோக்கிக் கையேந்தி நிற்கும் நிலையை மூலதனமாக்கி இப்போது ராஜாங்கம் நடத்தும் அரசியல் தலைவர்களின் நஷ்டங்கள் சொல்லி மாளாதே?

 

59 வயதாகும் பழனிவேல் தியாகராஜன் ஆங்கிலம் நன்றாகப் பேசுவார். அவர் பேட்டியளித்ததும்  ஆங்கிலத்தில். இளமையில் படிப்பு, வேலை என்று அமெரிக்காவில் இருபது வருடங்கள் வாழ்ந்தவர். அப்படி இருந்ததால், அவர் தமிழ் மிகக் சரளமாகப் பேசுபவர் அல்ல. ஆங்கிலம் படித்து அவர் அமெரிக்கா போய் மேற்படிப்பு முடித்து நிறைய சம்பாதிக்கலாம், சற்றுத் தடுமாறித் தமிழ் பேசிக் கொள்ளலாம், ஆனால் வேறு இந்திய மொழியை அரசுப் பள்ளியில் ஒரு தமிழக மாணவர் எளிதாகப் படித்து வேறு மாநிலத்தில் எளிதாக ஒரு நல்ல வேலைக்குப் போகக் கூடாதா?   

 

தமிழ் 2,000 ஆண்டுகளுக்கும் மேல் தொன்மையானது. இன்றுவரை அது நம்மிடையே வழக்கு மொழியாக நீடித்திருக்க ஒரு முக்கிய காரணம் அதன் அபரித அழகும் செறிவும். அதாவது, ஒருவர் நேராகக் கைகால் வீசி நடப்பது போல் மட்டும் இல்லாமல், ஒரு நாட்டிய மங்கையின் வசீகர அசைவுகளையும் நகர்வுகளையும் தனது சொற்பிரயோகத்தில் ஏற்றி நம்மை மகிழ்விப்பது தமிழ். அதோடு, தமிழ் மொழியின் அந்த அழகையும் செறிவையும் ரசிக்கத் தெரிந்த மக்களாகத் தமிழர்கள் தொடர்ந்து வந்ததும் தமிழை நம்மிடையே இன்றுவரை உயிர்ப்பித்து வைத்திருக்கிறது. 


தமிழ் மக்களின் தமிழார்வத்தைத் திமுக உளமாறப் பேணுவதில்லை, 1967-ல் இருந்து. தமிழ்நாட்டில் தமிழின் அழகையும் செறிவையும் கற்றறிந்து கொண்டாடுபவர்களின் ஆர்வம் குறைந்து வருவதற்குத் திமுக-வும் ஒரு காரணம். முறைகேடான அரசு நிர்வாகத்தை நிலைநிறுத்தி, தமிழைத் தங்கள் அரசியல் வியாபாரத்துக்கான கடையாக மட்டும் உபயோகித்து வரும் திமுக என்ன சாதித்திருக்கிறது? பொதுவாழ்வில் தமிழர்கள் தரம் தாழவும் அதைத் தொடர்ந்து தமிழ் வாடவும் வகை செய்திருக்கிறார்கள் அதன் தலைவர்கள். 


தமிழகப் பள்ளிகளில் மூன்றாவது இந்திய மொழி ஒரு பாடமாக வருவது இருக்கட்டும். திமுக மாடல் ஆட்சி தமிழகத்தில் தொடர்ந்தால், முதல் மொழி தமிழ் பிழைக்குமா,  செழிக்குமா?


* * * * *


Author: R. Veera Raghavan, Advocate, Chennai