Sunday, 26 January 2025

வேங்கைவயல் குற்றப் பத்திரிகை. அபத்தமாக ஆட்சேபிக்கும் கட்சிகள்

 

          -- ஆர். வி. ஆர் 


புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் ஒரு மேல்நிலை குடிநீர்த் தொட்டி இருந்தது. அங்கு வசிக்கும் பட்டியலின மக்களின் நீர்த் தேவைகளுக்காக அது  பயன்படுத்தப் பட்டது.


2022-ம் வருடம் யாரோ குரூரமாக அந்தத் தொட்டி நீரில் மனிதக் கழிவைக் கலந்ததால் அந்த மக்கள் பாதிப்படைந்து, அவர்களுக்கு நேர்ந்த அக்கிரமம் பொதுவெளியில் வந்தது. பின்னர் வழக்கு பதியப் பட்டு தமிழக சிபிசிஐடி போலீசார் புலன் விசாரணை செய்தனர். அது முடிந்து தற்போது போலீசார் தமது குற்றப் பத்திரிகையைக்  கோர்ட்டில் தாக்கல் செய்திருக்கின்றனர்

 

வேங்கைவயல் வழக்கின் குற்றப் பத்திரிகை சொல்கிறது: அதே ஊரைச் சேர்ந்த மூன்று நபர்கள் அந்தக் குற்றத்தைச் செய்தனர். குற்றத்திற்கான காரணம், சிலரது முன் விரோதம். குற்றப் பத்திரிகை குறிப்பிடாத ஒரு விவரம்: அந்த மூவரும் பட்டியலின சமூகத்தவர்.

 

          விசிக, மார்க்சிஸ்ட்-கம்யூனிஸ்ட், அதிமுக, தமிழக பாஜக என்று ஆட்சியில் இல்லாத பிற கட்சிகள் சிபிசிஐடி சமர்ப்பித்த குற்றப் பத்திரிகைக்கு ஆட்சேபம் செய்கின்றன. வழக்கு மத்திய அரசின் சிபிஐ வசம் மாற்றப் பட வேண்டும், சிபிஐ புதிதாகப் புலன்விசாரணை செய்யவேண்டும், என்றும் கோருகின்றன. இந்தக் கட்சிகளின் பிரதான ஆட்சேபம் ஒன்று. அது விசிக-வின் தலைவர் திருமாவளவனின் அறிக்கையில் இப்படி வருகிறது.

 

"பட்டியல் சமூகத்தினர் குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்ததாகத்தான் வழக்கு. அந்த வழக்கில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களே குற்றவாளிகள் என்று காவல்துறை கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. இது ஏற்கத்தக்கதாக இல்லை"

 

   இந்த ஆட்சேபமும், வழக்கைப் புதிதாக நடத்த சிபிஐ வரவேண்டும் என்ற கோரிக்கையும், அபத்தமானது, சமூகத்திற்குக் கேடு செய்வதும் கூட.


   கீழான நோக்கத்தில் ஒருவர் தனியாகவோ கூட்டாகவோ செய்திருக்கக் கூடிய குற்றச்செயல் இது. எதுவாக இருந்தாலும், வழக்கிற்காக குடிநீர்த் தொட்டியிலிருந்து எடுக்கப்பட்ட சில மாதிரிகள் ஆய்வு செய்யப் பட்டிருக்கின்றன. குற்றம் சாட்டப் பட்ட மூன்று நபர்களின் டி.என்.ஏ-வும் சேகரிக்கப் பட்டிருக்கிறது.  அந்த மூவர் உபயோகித்த செல் போன்கள் கைப்பற்றப் பட்டு, அவற்றிலிருந்து முன்பு அழிக்கப்பட்ட சில படங்கள் மற்றும் உரையாடல்கள் மீட்டு எடுக்கப் பட்டிருக்கின்றன. சிலரின் குரல் மாதிரிகளும் சேகரிக்கப் பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் கோர்ட்டின் வசம் இருக்கின்றன. வழக்கை விசாரித்து, சாட்சியங்களின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, கோர்ட் தீர்ப்பு சொல்லப் போகிறது.

 

      இந்த வழக்கில் கீழ்க் கோர்ட்டின் தீர்ப்பு எப்படி இருக்கப் போகிறது? இறுதியாக இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்குச் சென்றால் சுப்ரீம் கோர்ட் என்ன தீர்ப்பு சொல்லும்? இந்தக் கேள்விகளுக்கு இந்த நேரத்தில் யாருக்கும் விடை தெரியாது – எல்லா புது வழக்குகளையும் போல. எல்லோரும் பொறுத்திருந்து தான் இந்த வழக்கின் முடிவை, அதற்கான காரணங்களை, தீர்ப்பின் மூலம் அறிய முடியும். 


   இந்த நிலையில் பிற கட்சிகள் சிபிசிஐடி-யின் குற்றப் பத்திரிகையை ஆட்சேபம் செய்வதிலும் ‘சிபிஐ வேண்டும்’ என்று கேட்பதிலும் என்ன அர்த்தம் இருக்கிறது?

 

சிபிஐ உள்ளே வந்தாலும், சிபிஐ செய்யும் புலன் விசாரணையின் முடிவில் அதே மூன்று  நபர்கள் தான் குற்றவாளிகள் என்று தெரிய வந்தால் அதை அந்த மற்ற கட்சிகள் ஏற்குமா ஏற்காதா? ஏற்காதென்றால், “வேறு சமூகத்தைச் சார்ந்த சிலரைக் குற்றவாளிகள் என்று சொல்லும் மாறுதலான குற்றப் பத்திரிகையைத் தான் நாங்கள் ஏற்போம்” என்ற ஒரு நிபந்தனையோடு அந்தக் கட்சிகள் இந்த வழக்கில் சிபிஐ-யை எதிர் நோக்குகிறார்களா? அப்படியான ஒரு உத்தரவாதத்தை சிபிஐ முன்கூட்டியே தர முடியாதே? பிறகு எதற்கு சிபிஐ?

                                                               

ஒவ்வொரு குற்றத்திற்கும் தனித்தனிக் காரணம் உண்டு, தனித்தனிப் பின்னணி உண்டு. குற்றம் செய்யும் ஒரு நபர் தன் ஊர்க்காரருக்கு, தன் ஜாதிக்காரருக்கு, தன் மதத்தவருக்கு  குற்றம் இழைக்கலாம். தன் சொந்தக்காரரிடமே ஒருவர் குற்றம் புரியலாம்.

 

பணம் சொத்து விஷயங்களில் அண்ணன் தம்பிகள் ஒருவரை ஒருவர் ஏமாற்றுவது, வெட்டுவது, கொலை செய்வது நடக்கின்றன. திருமண உறவு தடம் புரள்வதால் சிலர் தங்கள் வாழ்க்கைத் துணையின் கதையை முடித்து வைக்கிறார்கள். சில பெண் குழந்தைகளிடம் அவற்றின் நெருங்கிய உறவினர்களே அட்டூழியம் செய்த செய்திகளும் வருகின்றன. இந்தக் குற்றங்களில் ஒருவர் தன் மனிதருக்கே, சக ஜாதி மனிதருக்கே, கேடு செய்வது நிகழ்கிறதே? 

 

வேங்கைவயல் வழக்கைப் பொறுத்தவரை குற்றம் சாட்டப் பட்ட மூவர்தான் குற்றத்தைச் செய்தனர் என்பதை நிரூபிக்க, கோர்ட் ஏற்கத்தக்க சாட்சியங்கள் உள்ளனவா என்பதுதான் முக்கியம். அவர்கள் என்ன சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பது சட்டத்திற்கும் கோர்ட்டுக்கும் முக்கியம் அல்ல. ஆனால் சில அரசியல் கட்சிகளுக்கு அதுதான் முக்கியம் என்றாகிறது. இது ஏன்?

 

சுதந்திரம் அடைந்து 77 வருடங்களுக்கு மேல் ஆகிறது. பட்டியல் சமூகத்து மக்களின் கல்வி நிலையை, பொருளாதார நிலையை, நமது அரசை நடத்திய கட்சிகள் கணிசமாக மேம்படுத்தவில்லை – மற்ற சாதாரண மக்களின் நிலையும் அதுதான். அதனால் அரசியல்வாதிகளைப் பற்றி சரியான புரிதல் அம்மக்களுக்குக் கிட்டுவது சிரமம்.

 

பல ஜாதி எளிய மக்கள் “பட்டியலின மக்கள்” என்று ஒரு கொத்தில் வருவதால் அவர்களை ஒரே கூட்டமாக அரசியல் ரீதியில் ஏமாற்றுவது, அதன் வழியாக அரசியலில் கொழிப்பது, பலப்பல அரசியல்வாதிகளுக்கு சௌகரியம். யார் நம்மை ஏமாற்றி ஓட்டு வாங்கிக் கொழிக்கிறார்கள் என்று  புரியாத அப்பாவிப் பட்டியலின மக்கள், அந்த மக்களின் நலனுக்காக என்று சொல்லி நடத்தப் படும் போராட்டங்களும் எழுப்பப்படும் கோரிக்கைகளும் அவர்களின் நலனுக்காகவே என்று எண்ணிப் பல நேரங்களில் ஏமாறுகிறார்கள்.   

 

இந்த விவகாரத்தில் சில கட்சிகள் அறிவித்த ஆட்சேபத்தால், பட்டியலின மக்கள் வேறு சமூகத்தினரிடம் இருந்து மனதளவில் இன்னும் சற்றுத் தள்ளி இருப்பார்கள். அந்த வேறு சமூகத்தினருக்கும் இதே உள்ளுணர்வு ஏற்படும். முடிவில் இது அனைத்து சமூகத்திற்கும் நல்லதல்ல.  சிபிசிஐடி-யின் குற்றப் பத்திரிகையை எதிர்க்கும் அரசியல் கட்சிகளுக்கு இது புரியவில்லையா?


மாநிலத்தை ஆளும் திமுக-வைப் பொறுத்தவரை, வேங்கைவயல் மக்களுக்கு ஏற்பட்ட அக்கிரமம் கோர்ட் வழக்காக மாறி, இந்த வழக்கை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் பின்னர் உற்றுக் கவனிக்கும் என்றாகி விட்டது. ஆகையால், புலன் விசாரணையில் கிடைத்த சாட்சியங்கள் காட்டும் நபர்களை குற்றப் பத்திரிகையில் குற்றவாளிகள் என்று குறிப்பிட்டால்தான் கட்சியின் பேர் ரிப்பேர் ஆகாமல் இருக்கும், அதுதான் பாதுகாப்பான அரசியல், என்ற நிர்பந்தமும் இதில் சேர்ந்துவிட்டது – அதுவும் சமீபத்தில் அண்ணா பல்கலைக் கழக பாலியல் துன்புறுத்தல் எப்.ஐ.ஆர் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் மாநில போலீசுக்கு வைத்த குட்டின் வலி இன்னும் ஆறாத நிலையில்.


கடைசியாக ஒன்று. அரசியல் கட்சிகள் எதையாவது சரியாகச் செய்தாலும் தவறாகச் செய்தாலும், அதன் நோக்கம் தாங்கள் தப்பிக்க, தாங்கள் பிழைக்க, தாங்கள் சுயலாபம் பார்க்க என்றுதான் இருக்குமோ?


* * * * *

 

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

Wednesday, 15 January 2025

பெரியாரைத் துணைக் கொள்! அரசியலில் புது அர்த்தங்கள்!

           

         -- ஆர். வி. ஆர்

           

திராவிட அரசியல் கட்சிகளால் – முக்கியமாக, திமுக-வால் – ‘பெரியார்‘ என்று புகழப் படுகிறவர், திராவிடர் கழகத்தின் நிறுவனர் ஈ.வெ. ராமசாமி.   எப்படியானவராக இருந்தார் ஈ.வெ.ரா?


பேச்சிலும் எழுத்திலும் தமிழ் மொழியை, அதைத் தாய்மொழியாகக் கொண்டவர்களை, இகழ்ந்தவர் ஈ.வெ.ரா. தமிழை ‘சனியன்‘ என்றும் வைதவர். தமிழர்களை ஆங்கிலத்தில் பேசச் சொன்னவர். கடவுளை நம்புகிறவர்களை, வணங்குபவர்களை, முட்டாள், அயோக்கியன், காட்டுமிராண்டி, என்று வசை பாடியவர் ஈ.வெ.ரா.

 

ஆண்-பெண் திருமண உறவை நகைத்தவர் ஈ.வெ.ரா. அவர் பெண்மையின் விசேஷத்தை, பெருமையை, உணராமல் பெண்களைச் சிறுமைப் படுத்திப் பேசியவர். அவர் பேசிய, எழுதிய, கீழான எண்ணங்கள் பலவற்றை அப்படியே பொதுவில் சொல்வதற்குப் பலரும் நாகரிகம் கருதித் தயங்குவார்கள்.   

 

இவை அனைத்தும் திமுக, அதிமுக மற்றும் பெரியாரை மதிக்கும் சில சிறு கட்சிகளுக்குத் தெரியும். இருந்தாலும் அக் கட்சிகள், குறிப்பாக திமுக, ஏன் ஈ.வெ.ரா-வை உயர்த்திப் பிடிக்கின்றன?

 

எல்லாம் தெரிந்தும் முன்பு அவரைப் போற்றிய நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், இப்போது ஏன் திடீரென்று ஈ.வெ.ரா-வைக் கடுமையாக விமரிசனம் செய்து இகழ்கிறார்?

 

கருணாநிதியின் திமுக ஆட்சியில் அவர் ஈ.வெ.ரா-வைக் கொண்டாட ஆரம்பித்தார். ஈ.வெ.ரா-வை உயர்த்திப் பிடித்தால், அரசியலில் தான் இயங்குவது தனது லாபத்திற்காக அல்ல, ஒரு சமூக சீர்திருத்தவாதியின் கொள்கைகளைப் பின்பற்ற, நடைமுறைப்படுத்த, நான் இருக்கிறேன் என்று சிறிது காட்டிக் கொள்வதற்காக ஈ.வெ.ரா அவருக்குப் பயன்பட்டார். அந்தப் போற்றுதல் திமுக-வில் இன்றும் தொடர்கிறது. ஏதோ ‘காட்டிக் கொள்ள’ப் பயன்படும் வெளிவேஷம் இது. மலிவு அரசியலில் ‘ஷோ’ வேண்டுமே!

 

ஈ.வெ.ரா இகழ்ந்த திருக்குறளின் ஆசிரியர் திருவள்ளுவர். கடவுள் வாழ்த்து, கள்ளுண்ணாமை, ஒழுக்கமுடைமை, செங்கோன்மை போன்ற அதிகாரங்களில் குறள் எழுதியவர். அந்தத் திருவள்ளுவருக்குக் கன்னியாகுமரியில் கடல்பாறை மீது பெரிய சிலை வைத்துப் பெருமை கண்டது கருணாநிதியின் திமுக ஆட்சி. திருக்குறளை இகழ்ந்த ஈ.வெ.ரா-வுக்கும் தமிழகத்தில் ஊர் ஊராகச் சிலைகள் வைத்துப் புளகாங்கிதம் அடைந்தது அவருடைய திமுக ஆட்சி.

 

ஈ.வெ.ரா-வைப் போற்றி மகிழ்ந்த கருணாநிதி, திருக்குறளுக்கு உரையும் எழுதியவர்.

 

கருணாநிதியின் இந்தப் பெரிய முரண்பாடுகள், பெருவாரியான தமிழக மக்களைப் பாதிக்கவில்லை. ஒரு வளர்ந்த ஜனநாயகத்தில் இந்த முரண்கள் எளிதில் சாத்தியமில்லை. இந்தியாவில் இவை சர்வ சாதாரணம்.

 

சீமான் விஷயத்தில், அவர் இப்போது பெரியாரைக் கடுமையாக விமரிசனம் செய்வதும் அவரது சுய அரசியல் லாபத்திற்காக மட்டும்தான். நேரான காரணத்திற்காக அல்ல. இதைக் காட்டும் சில உண்மைகள் இவை.

 

இலங்கையில் அந்த நாட்டு அரசை எதிர்த்து, தனி நாடு கேட்டு, ஆயுதமேந்திப் போர் புரிந்தவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) தலைவர் பிரபாகரன். அந்த இயக்கம் அந்த நாட்டில் தீவிரவாதச் செயல்கள் புரிந்தது. இறுதியில் அந்த நாட்டு ராணுவ நடவடிக்கையால் அந்த இயக்கம் வீழ்ந்தது, பிரபாகரனும் மடிந்தார்.

 

இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை இந்திய மண்ணில், அதுவும் தமிழகத்தில், குரூரமாகக் கொன்றதில் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு முக்கியப் பங்குண்டு. இப்படியான பிரபாகரனை முன்னிறுத்தி – அதுவும் தமிழ்நாட்டில் சிறந்த முன்னுதாரணமான அரசியல்  தலைவர்களை விட்டுவிட்டு – “பிரபாகரன்தான் என் தலைவன்” என்று முழக்கமிடுகிறார் சீமான். சீமானின் இந்தச் செயலும், இந்த அப்பட்டமான தேச விரோதப் போக்கும், அவரது ஆதரவாளர்களைப் பாதிக்கவில்லை.

 

ஈ.வெ.ரா-வைப் போற்றும் அறிவீனத்துக்கு நிகரானது சீமான் வெளிப்படுத்தும் பிரபாகர பக்தி. இதனால் வெளிநாடுகளில் வாழும் அப்பாவி இலங்கைத் தமிழர்களிடம் சீமானுக்கு என்ன பயனோ?

 

அரசியல் மேடைகளில் சீமான் பேசுவது வசீகரமானது. கைகளைப் பலவாறு வீசி, இரண்டு உள்ளங் கைகளையும் அடிக்கடி தட்டி, முகத்தைப் பல கோணங்களில் திருப்பி, தன் தெளிவான உரத்த குரலை ஏற்றி இறக்கி, மக்களின் உணர்ச்சிகளைக் கவர்ந்து தடையில்லாமல் ஆக்ரோஷமாகப் பேசுபவர் அவர். சாதாரண மக்களை, அதுவும் மிக இள வயதினரை, தனது உணர்ச்சி மிகுந்த பேச்சுக்களால் அவரைப் போல திசை திருப்பி ஈர்க்கும் ஒரு அரசியல் தலைவர் இப்போது தமிழகத்தில் இல்லை.

 

பெரிய கட்சி திமுக-வை எதிர்த்து அரசியல் செய்து வளர்ந்தால் தான் பெரிதாகலாம் என்று பொறுமையாகத் திட்டமிட்டு அரசியல் செய்கிறார் சீமான். அதன் ஒரு பகுதியாக, திமுக போற்றும் ஈ.வெ.ரா-வை இப்போது எதிர்க்கிறார். சீமானிடம் பெரிய எண்ணங்களோ விசாலமான பார்வையோ உயர்ந்த தேச சிந்தனையோ காணப்படவில்லை.  திமுக-வை மிஞ்சி அவர் திமுக பாணி அரசியல் செய்ய விரும்புகிறார். அதுதான் சீமான்.

 

பொதுவாக நமது நாட்டில் விவரம் அறியாத மக்கள், எளிதில் ஏமாறக் கூடிய சாதாரண மக்கள், எண்ணிக்கையில் அதிகம். குறைந்த வருமானத்தில், பொருளாதார ஏக்கத்தில், எப்போதும் வைக்கப் பட்டிருக்கும் அந்த மக்கள், ஏதோ அரிசி பருப்பு வங்க முடிகிறதா, அரசிடமிருந்து ஆயிரம் ரண்டாயிரம் பணம் கிடைக்குமா, அரசு இலவசங்கள் வேறென்ன கிடைக்கும், என்ற எதிர்பார்ப்பு நிலையில் வைக்கப்பட்டவர்கள். மற்றபடி யார் ஈ.வெ.ரா-வைப் போற்றினால் என்ன, தூற்றினால் என்ன  என்றுதான் அவர்களால் இருக்க முடியும்.


அரசியல் விஷயங்களில் முதிர்ச்சி குறைந்து வாழ்க்கையில் அல்லாடும் அப்பாவி மக்கள், குயுக்தி நிரம்பிய குரூர அரசியல் தலைவர்கள். இது இந்தியா!

 

ஈ.வெ.ரா-வைத் திமுக ஆதரித்தால் என்ன, சீமான் கட்சி எதிர்த்தால் என்ன? இரண்டு கட்சிகளும் கோணலான அர்த்தங்களில் ஔவையாரின் ஆத்திசூடி சொற்களை ஏற்கின்றன: பெரியாரைத் துணைக் கொள்!


* * * * *


Author: R. Veera Raghavan, Advocate, Chennai

 

 


Friday, 10 January 2025

கண் ஜாடை காட்டி அக்கிரமம் நிகழ்த்துபவரா மு. க. ஸ்டாலின்?  என்ன சொல்கிறார் சத்தியமூர்த்தி?

         

         -- ஆர். வி. ஆர்

 

கவர்னர் ஆர். என். ரவி தமிழக சட்டசபையில் இருந்து  சமீபத்தில் வெளிநடப்பு செய்தார். காரணம்: மத்திய அரசு உத்தரவை ஏற்று கவர்னரின் வருகையை ஒட்டி சட்டசபையில் தேசிய கீதம் இசைக்கப் படவில்லை, அவையில் அவர் கேட்டுக்கொண்ட பின்னும் அது நடக்கவில்லை. தேசிய கீதத்திற்கு அவமதிப்பு நேர்கிறது என்று கவர்னர் உடனே சபையை விட்டு வெளியேறினார். 


"முதல்வர் ஸ்டாலின் மட்டும் கண் ஜாடை காட்டி இருந்தால் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த கவர்னர் ரவியின் கோட்டு சூட்டைக் கிழித்து, டிராயருடன் அனுப்பி இருப்போம்" என்று ஒரு திமுக தலைவர் பின்னர் ராமநாதபுரத்தில் பேசினார். அவர் பெயர் சத்தியமூர்த்தி. முன்பு இவர் அதிமுக-வில் இருந்து அப்போது மாநில அமைச்சராகப் பதவி வகித்தவர்.  

 

முதல்வர் கண் ஜாடையின் அர்த்தத்தை, அற்புத சக்தியை, இப்படி ஒரு தலைவர் விளக்குவதைக் கேட்கப் புல்லரிக்கிறது! இருந்தாலும், இதில் பலருக்கும் பிடிபடாத சில விஷயங்கள் உண்டு.  முதல்வரின் கண் ஜாடை மகிமையை விவரித்த மனிதர்தான் இவை பற்றித் தெளிவுபடுத்த வேண்டும்.  அவருக்கான கேள்விகள் இவை.

 

கவர்னர் ரவி சட்டசபையில் பேசும்போதோ, அல்லது அங்கிருந்து வெளிநடப்பு செய்ய முயலும்போதோ, அவையிலுள்ள திமுக எம்.எல்.ஏ-க்கள் கவர்னரைப் பார்க்கக் கூடாது, அவர் பேச்சையும் கவனிக்கக் கூடாது, ஆனால் முதல்வரின் கண் ஜாடையை அறிவதற்காக முதல்வரின் கண்களைப் பார்த்தபடி இருக்க வேண்டும் என்று முன்பே அறிவுறுத்தப் பட்டார்களா?

 

கவர்னர் ரவி தொடர்பாக, முதல்வர் எத்தனை வகையான கண் ஜாடைகளை வெளிப்படுத்தக் கூடியவர், அவை ஒவ்வொன்றும் திமுக-வினருக்கு நன்றாகப் புரியுமா?

 

‘கவர்னரை ஒன்றும் செய்யவேண்டாம், அவர் பாட்டுக்கு வெளிநடப்பு செய்யட்டும்’ என்று முதல்வர் கருணை கூர்ந்து தெரிவிக்கும் கண் ஜாடை ஒன்று உண்டா? உதாரணமாக: முதல்வர் வெறுமனே கண்களை மூடியபடி அமர்ந்திருப்பது, அல்லது மோட்டு வளையைப் பார்த்தபடி இருப்பது, என்பதாக?

 

கவர்னர் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்யும்போது அவருடைய கோட்டு சூட்டைக் கிழிக்காமல், அவர் கையை மட்டும் இழுத்து விடுவது, காலை மட்டும் இடறி விடுவது, என்பதற்கும் முதல்வர் சில கண் ஜடைகளை வைத்திருக்கிறாரா?

 

கிழிக்க வேண்டும் என்றால், கவர்னரின் கோட்டை மட்டும் கிழித்துவிட்டு, அல்லது பேண்டை மட்டும் கிழித்து விட்டு, அவருடைய மற்ற உடைகளுக்கு சேதாரம் ஆகாமல் அவரை அனுப்பிவிட முதல்வரிடம் விசேஷ கண் ஜாடை உண்டா?

 

முதல்வரின் கண் ஜாடை உத்தரவுகளைத் தவறாகப் புரிந்துகொண்டு ஒன்றுக்குப் பதில் மற்றதைச் செய்துவிடக் கூடாது, ஒன்றுக்குப் பதில் மற்றதைக் கிழிக்காமல் இருக்கவேண்டும், என்பதற்காக சம்பத்தப்பட திமுக-வினருக்கு 'முதல்வரின் கண் ஜாடைப் பயிற்சி வகுப்புகள்' நடந்திருக்குமா?

  

சத்தியமூர்த்தி பேசியதைப் போல், 'லோக் சபையில் மோடி கண் ஜாடை காட்டினால் ராகுல் காந்தியின் – அல்லது ஒரு திமுக உறுப்பினரின் – ஆடைகளைக் கிழிப்போம்' என்று எந்த பாஜக தலைவரும் பேசியதில்லை, அப்படி அவருக்குப் பேசவும் தோன்றாது, அதற்கான தைரியமும் வராது.

 

ஒரு அரசியல் கட்சியின் பிரதான தலைவருடைய பண்புகள் எத்தகையவை, நாட்டைப் பற்றிய அவருடைய சிந்தனை என்ன, அரசியலில் அவர் நீடிப்பதின் நோக்கம் எது, அந்த நோக்கத்திற்கான அவரது வழிமுறைகள் யாவை – இவற்றைப் பொறுத்துதான் அந்தக் கட்சிக்கு இரண்டாம், மூன்றாம் கட்டத் தலைவர்கள் வந்து சேருவார்கள். அதற்கு ஏற்பதான் அந்தக் கட்சிக்கு லோக்கல் பிரமுகர்களும் அமைவார்கள். 

 

நமது நாட்டின் அப்பாவி மக்களுக்கு – ஏழ்மையில் அல்லது குறைவான வருமானத்தில் வைக்கப் பட்டிருக்கும் பெருவாரியான மக்களுக்கு – பொது வாழ்வில் அப்பட்டமாக நிகழும் அவலங்களே சரியாக, முழுவதுமாக, பிடிபடுவதில்லை. ஆனால் சட்டசபையில் ஒரு முதல்வரின் கண் ஜாடையைக் கவனித்தே அவர் கட்சி உறுப்பினர்கள் அந்த சபையில் ஒரு அடாவடியை, அக்கிரமத்தை, நிறைவேற்றுவார்கள் என்று திமுக-வின் இரண்டாம் கட்டத் தலைவர் சத்தியமூர்த்தி பேசுகிறார். திமுக தலைமை அவர் பேசியதை நிராகரிக்கவில்லை, அவரைக் கண்டிக்கவில்லை. இது இன்னும் கவலைக்குரியது.


நாம் இப்போதைக்கு என்ன செய்யலாம்?

 

இறைவனின் கண் பார்வை தமிழகத்தின் மீது பரவட்டும், அரசியல் உலகில் தீய கண் ஜாடைகள், கெட்ட நோக்கங்கள், செயலிழக்கட்டும் என்று தானே நாம் பிரார்த்திக்க முடியும்

 

* * * * *

 Author: R. Veera Raghavan, Advocate, Chennai