Tuesday 7 November 2023

கட் அண்ட் ரைட்டு கோவிந்து: இன்னா பேசுற வேலு? இந்தியா துபாய் பக்கமான ஊர்னு நெனச்சியா?


-- ஆர். வி. ஆர்


எ. வ. வேலுன்னு தமிள்நாட்ல ஒரு ஆளைத் தெரிமா? ஆங், அவருதான்! இப்ப வர்மான வரி ரெய்டு போய்க்கினு இருக்கே,  அது தொடர்பான மாநில அமிச்சர்தான். அவருக்கு இப்ப 72 வயசு.


        வேலு பேர்ல இருக்குற இனிசியல் ‘எ.வ’ அப்பிடின்ற எளுத்து எதைக் குறிக்கிதுன்னு முதல் அமிச்சர் ஸ்டாலின் சொல்லிக்கிறாரு. 'எதிலும் வல்லவர்'னு அர்த்தமாம். வெளக்கமா சொன்னா, வேலைல கிங்கா இருப்பாரு வேலுன்னு பாராட்டிக்கிறாரு ஸ்டாலின். அதுக்கு இன்னா அர்த்தம்னு நம்ம கரீக்டா ஊகிச்சிரலாம். 


          எ. வ. வேலு இப்ப பொதுப்பணித்துறை, ஐவேஸ் அப்பிடின்னு பால் சுரக்கற துறைங்களுக்கு மந்திரி. வல்லவருக்கு ஏத்த துறைங்களை கைல
வெச்சிக்கினு வல்லமைய காட்டிக்கினு இருப்பாரு.  இப்ப அவரு மேல வந்துக்குதே ரெய்டு, அத்தைக் காட்டியும் அவரு இன்னொரு விசயத்துல ஆல்  இந்தியா பேமஸ் ஆயிக்கினாரு. அத்தைக் கொஞ்சம் பேசுவோம்.


      கொஞ்ச நாள் மின்னாடி வேலு மைக்கைப் புடிச்சி ஒரு விசயம் பேசினாரு. கை தட்றதுக்கு வந்த ஆளுங்க டப டபன்னு கை தட்னானுங்க. வேலுவும் சிரிச்சிக்கினே அந்த விசயத்தை ரண்டு நிமிசம் நீட்டி பேசிக்கினாரு. கைதட்டல் கூடுச்சு. வேலுவும் கெத்தா மூஞ்சை வெச்சிக்கினாரு.

 

வேலு பேசுனது வரிக்கு வரி சுருக்கமா இதான்.  

 

ஒரு காலத்துல இந்தியா என்பது கூட நமக்கு எப்பொழுதும் பெரிய தாக்கம் இருப்பதில்லை இந்தியா என்ற வார்த்தைக்கு எந்தக் காலத்துல நமக்கெல்லாம் தாக்கம் இருந்திருக்கிறது? ஒரு காலத்துல எங்க இருந்தது நமக்கெல்லாம்? இந்தியான்னா ஏதோ வடக்கே இருக்கற ஊரு! நம்ம ஊரு தமிழ் நாடுதான்! முடிஞ்சா திராவிட நாடுன்னு யோசிப்போம். நம்முடைய எண்ணங்கள் இப்படித்தான போய்க் கொண்டிருந்தது?

 

 

வெக்கம், மானம் இருந்து நாட்டை மதிக்கிற எந்தத் தலிவரும், எந்த அமிச்சரும், பொது மேடைல பேச ஆவாத ஒரு விசயத்தை வேலு தெனாவெட்டா பேசிக்கினாரு.

 

‘நம்ம, நமக்கு, நமக்கெல்லாம்’ அப்பிடின்னு வேலு பேசினது யாரை? திராவிடர் களகத்து ஆளுங்க, ஒட்டு மொத்த திராவிட அரசியல் தலிவருங்க, அதுல குறிப்பா முந்தின தலைமுறை மனுசங்க  – இவுங்க இந்தியாவை முன்ன எப்பிடி நேசிக்காம இருந்தாங்கன்னு வேலு பேசிக்கினாரு. அந்த டைப்பு ஆளுங்கள்ள வேலுவும் ஒருத்தரு.

 

‘முன்ன அப்பிடி இருந்துக்கினோம்’னு ஒரு பளைய தகவலை மட்டும் சொன்னாரா வேலு – இல்லை ‘இப்பவும் அப்பிடி இருக்க எங்களுக்கு ஆசையா கீது’ன்னு சைடால சொல்ல வந்தாரான்னு தெர்ல. கேக்குறவன் அப்பிடி கன்பியூஸ் ஆவுற மாதிரி பேசிக்கினாரு வேலு. அவர் பூரிச்சிப் போய் பேசுனதை நீ வீடியோவுல பாத்தின்னா நா சொல்றது டக்குனு புரியும்.

 

“முன்னதான் அப்பிடி தெரியாத் தனமா இருந்தோம், இப்ப திருந்தி ஊறுகா போட்ட கணக்கா தேச பக்தில ஊறிக்கினு இருக்கோம்” அப்பிடின்னும் வேலு பேசிக்கலை, மறைமுகமாவும் காட்டிக்கலை. அப்பிடிலாம் நெனச்சி  பாக்குற ஆளா வல்லவர் வேலு?  

 

இன்னா வேலு? நீ பொறந்ததே 1951, சுதந்திரத்துக்கு அப்பால. இந்தியா ஒரு நாடுன்னு உனக்கு தெரியாமவே இருந்திச்சா? இந்தியான்றது வடக்கையோ துபாய்க்குப் பக்கமோ எங்கியோ இருந்த ஊர் அப்பிடின்னு நெனச்சியா?  யார் உனக்கு அப்பிடி சொன்னது? இஸ்கோல் போயி ஒண்ணு ரண்டு கிளாஸ் படிச்ச எவனும் – இல்லை  அரசியல்ல பூந்த எவனும்  உன்னை மாதிரி நெனச்சிருக்க மாட்டானே?  

 

‘இந்தியா ஒரு நாடு இல்லை, அது வடக்கே இருக்கற ஊருதான்’, அப்பிடின்னு நீயும் உன் ஆளுங்களும் நெனச்சிருந்தா, நீங்க பொறந்த ஊரு, பக்கத்து ஊரு, அதெல்லாம் எந்த நாடுன்னு நெனச்சீங்க?  

 

‘முடிஞ்சா திராவிட நாடுன்னு’னு முன்ன யோசிச்சதா பேசினியே, அதுக்கு இன்னாபா அர்த்தம்?  ஏற்கனவே உன் ஊரு ஒரு நாட்டுல அதோட பகுதியா இருக்குது, அந்த நாட்டுலேர்ந்து உன் ஊரு, அடுத்த ஊருன்னு கூட்டா பிரிஞ்சு திராவிட நாடுன்னு  தனிநாடு அமைக்கணும்னு தானப்பா அர்த்தம்? எந்த நாட்லேர்ந்து  நீ வெட்டிக்க நெனச்சியோ, அந்த நாடுதான் இந்தியா அப்பிடின்னு தெரியாத மண்ணாங்கட்டியா இருந்திச்சா ஒரு கட்சி, ஒரு கூட்டம்? இன்னா வேலு பேசுற?

 

நீ பையனா இருந்த நாள் தொட்டு தேசிய கீதம் கேட்ருப்பேல்ல? அது என்ன சொல்லுது? இந்திய நிலப் பரப்புல பஞ்சாப், திராவிடப் பிராந்தியம், வங்கம், குஜராத்னு நாலு திசைல இருக்கற பகுதிகள் பேரும் தேசிய கீதத்துல வர்தே,  தெரிமா? இன்னும் மலைகள், நதிகள் பேரையும் சொல்லி இதெல்லாம் உள்ளடக்கியது ‘பாரதம்’னு தேசிய கீதத்துல இருக்கே?  உன் 11வது வயசுல இருந்து – அதான் 1962ல இருந்து – எல்லா சினிமா தியேட்டரும் வருசக் கணக்கா தேசிய கீதம் போட்டுச்சே, தெரியும்ல? அது எந்த நாட்டுக்காரனுக்கு?  திராவிடப் பகுதில இருக்கற தமிள் நாட்டு மக்களுக்கும் அதுதான் தேசிய கீதம்னு அப்ப புரிஞ்சிச்சா இல்லியா, வேலு?

 

இந்தியா பத்தி வேலு மேடைல பெனாத்தி மூணு மாசம் ஆச்சு. அதை  முதல் அமிச்சர் ஸ்டாலின் கண்டுக்கலை, கண்டிக்கலை. வேலு பேசி ஒரு மாசம் களிச்சு, ‘மலேரியா, டெங்கு மாதிரி சனாதனத்தை ஒளிக்கணும்’னு இன்னொரு அமிச்சர் பேசிக்கினாரு. அவருதான் ஸ்டாலின் மவன் உதயநிதி. சனாதனம் இந்தியா பூரா இந்துக்கள் மதிக்கிற, கடைப்பிடிக்கிற வாள்வு முறை. அதை ஒளிக்கணும்னு உதயநிதி பேசுனா ஸ்டாலின் அதுக்கும் சப்போர்ட் குட்துகினாரு. சனாதன எதிர்ப்பு பேச்சு மேல, ஏன் போலீஸ் ஆக்சன் எடுக்காம கைய கட்டிக்கினு இருந்திச்சுன்னு இப்ப நம்ம ஹை கோர்ட்டே கேக்குது.

 

இந்திய தேசம் பத்தி பெருமையா உணர்வு இல்லை.  இந்துக்கள் பெர்சா மதிக்கற சனாதனம் பத்தி அளிக்கணும் ஒளிக்கணும்னு திமிருப் பேச்சு.  இந்த மாதிரி ஆளுங்களுக்கு என்னதான்பா வேணும் இந்தியாவுல?  மணல் கொள்ளை, கனிமவளக் கொள்ளை சுளுவா நடக்க இந்த மண்ணு  வேணும். மாய்மாலமா பேசி ஓட்டு வாங்க நம்ம ஜனங்க வேணும். மத்திய ஆட்சில பங்கு கெடிக்கிறா மாதிரி இருந்தா, விடக் கூடாது.  அந்தப் பங்குதான் டாப்பு – அது சுளையா கெடச்சிட்டா, வேலு கூட  இந்தியாவை  ஒஸ்த்தியா  பேசிப்பாரு.

 

தமிள்நாட்டு அரசியல் உருப்புட்டு, ஆட்சில நீதி நாயம் ஏற்பட்டா என்ன ஆவும்? அப்ப எல்லாப் பெரிய கட்சித் தலிவருங்களும் மேடைல இப்பிடித்தான் பேசுவாங்க: “திராவிடம்னா இப்ப நமக்கு ஒரு தாக்கமும் இல்லை. எங்க இருக்கு நமக்குலாம்? திராவிட நாடு, திராவிட மாடல்னு ஏதோ பளைய காலத்துல தலிவருங்க ராங்கா பேசிக்கினாங்க. இப்ப நமக்கு உயிர் மூச்சு எது? அதான் பாரதம். ஜெய்  ஹிந்த்!”

 

தமிள்நாடு உருப்புடணும், தலிவருங்க இப்பிடி மாத்திப் பேசற  காலம் வர்ட்டும்னு வேண்டிக்கினு கோவிலுக்குப் போ,  அங்கப் பிரதட்சிணம் பண்ணு. வெரதம் இரு, காவடி எடு. ஆண்டவன்தான் இப்ப தமிள் நாட்டு மானம், மருவாதை, மக்கள் அல்லாத்தையும் காப்பாத்தணும். இன்னான்ற?  

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai


1 comment: