Tuesday 13 August 2019

370-வது பிரிவு பற்றி ஒரு யு.கே.ஜி பாடம் – எப்படி நுழைந்தது, ஏன் கல்தா கொடுக்கப் பட்டது?


அரசியல் அமைப்புச் சட்டம் 370-வது பிரிவால் இந்தியாவின் மீது படிந்த அவமானக் கறை துடைக்கப் பட்டது, தேசாபிமானம், மனோ தைரியம், அரசியல் சாதுரியம் மிகுந்த பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில்தான் இந்த சாதனை சாத்தியமானது.

ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுடன் சேருவதற்காக அந்த சமஸ்தானத்தின் மன்னர் 1947-ம் வருடம் இந்தியாவுக்கு  ஒரு இணைப்புப் பத்திரம் எழுதிக்கொடுத்தார், அதை இந்திய அரசாங்கமும் கையெழுத்திட்டு ஒப்புக் கொண்டது. அந்த மாநிலத்தைப் பொறுத்தவரை, மிகச் சில விஷயங்களில் மட்டும்தான் இந்தியாவின் பாராளுமன்றம் சட்டம் இயற்றுவதற்கு அதிகாரம் உண்டு என்று அந்த இணைப்புப் பத்திரம் சொன்னது. அவை சுருக்கமாக: பாதுகாப்பு, ஆயுதப் படைகள், அயல் நாட்டு உறவு, தகவல் தொடர்பு, விமானம், கப்பல், ரயில்வே போக்குவரத்து, விமான நிலையங்கள், துறைமுகங்கள், தபால் தந்தி, ஒலிபரப்பு மற்றும் டெலிபோன் சேவைகள்.

 அந்த இணைப்புப் பத்திரத்தில் ஜம்மு-காஷ்மீரின் மன்னர் நமது நாட்டிற்கு வேறு சில நிபந்தனைகளையும் விதித்தார் – நாமும் அவற்றை ஒப்புக் கொண்டோம்.  அவற்றில் இரண்டு இவை:

”இந்தியாவின் எதிர்கால அரசியல் அமைப்பு சட்டத்தை ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்கிற நிர்பந்தம் கிடையாது.”

”இந்த இணைப்புப் பத்திரத்தில் உள்ள ஷரத்துகள் மட்டுமே ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை கட்டுப்படுத்தும். மற்றபடி, இந்த மாநிலத்தில் எனது தன்னாட்சியும் உரிமைகளும் அதிகாரங்களும் இந்த மாநில சட்டங்களும் பாதிப்பில்லாமல் தொடரும்.”

இந்த நிபந்தனைகளைக் கருத்தில் வைத்து, நமது அரசியல் அமைப்புச் சட்டம் உருவாகும் சமயத்தில் ஷேக் அப்துல்லா நேருவிடமும் நமது அரசியல் நிர்ணய சபை அங்கத்தினர்களிடமும் இப்படிப் பேசி இருக்க முடியும்: ”இணைப்புப் பத்திரத்தில் உள்ள இந்த இரண்டு நிபந்தனைகளுக்கும் உட்பட்டுதான் இந்தியா ஜம்மு-காஷ்மீர் மாநில இணைப்பை ஏற்றது. ஆகையால் இந்த நிபந்தனைகளையும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் சேர்க்க வேண்டும். 370-வது பிரிவு அம்சங்களின் வழியாக அந்த இரண்டு நிபந்தனைகள் இந்திய அரசியல் சட்டத்தில் இடம் பெறட்டும். அது நடக்காவிட்டால் இணைப்புப் பத்திரத்தில் இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்ட அந்த இரண்டு நிபந்தனைகளும் வலு இழந்து செல்லாமலே போகும்”

ஷேக் அப்துல்லாவின் இந்த வாதத்தை இந்தியா நிராகரித்திருக்க முடியாது. ”ஏதோ இணைப்பு பத்திரத்தில் உங்களுக்குப் பிடித்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு உங்கள் மாநிலத்தை வளைத்துப் போட்டோம். எங்கள் வார்த்தையை நம்பி நீங்களும் இந்த நாட்டோடு சேர்ந்து விட்டீர்கள்.  அந்த நிபந்தனைகளை எல்லாம் எங்கள் நாடு இப்போது செயல்படுத்தாது. மரியாதையாக அமைதியாக இருங்கள். இல்லாவிட்டால் எங்கள் நாட்டு ராணுவம் உங்களை கவனிக்கும்” என்று இந்தியா சொல்லவில்லை. அன்று இந்தியா அப்படி அடாவடியாகச் சொல்வதை யாரும் நினைத்துப் பார்க்கவும் முடியாது.  இதுதான் 370-வது பிரிவு பிறந்த கதை.

ஜம்மு-காஷ்மீர் மாநில மன்னரோடு எந்த இணைப்புப் பத்திரத்தில் இந்தியா கையெழுத்திட்டதோ, அச்சு அசல் அதே மாதிரியான இணைப்பு பத்திரத்தில்தான் இந்தியா மற்ற 550-க்கும் மேலான சமஸ்தான மன்னர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.  ஆனால் அந்த மன்னர்கள் தங்களுடைய இணைப்புப் பத்திரத்தில் கண்ட நிபந்தனைகளை இந்தியா தனது அரசியல் சட்டத்திலும் அங்கீகரிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கவில்லை. அந்த நிபந்தனைகளை எல்லாம் தாமாக தளர்த்திக்கொண்டு அவர்களின் சமஸ்தானங்களை இந்தியாவோடு முழுமையாக ஐக்கியம் செய்தார்கள்.

ஒரு கேள்வி நியாயமாக வரலாம். இப்படி அவமானமான நிபந்தனைகள் கொண்ட ஒரு இணைப்புப் பத்திரத்தை இந்தியா ஏன் ஏற்றது?  இதே இணைப்புப் பத்திரத்தின் வடிவில்தான் பாகிஸ்தான் நாடும் அதனுடன் இணைந்த சில 13 சமஸ்தானங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.  ஒரு நாடு கையெழுத்திட்ட இணைப்புப் பத்திரத்தை இன்னொரு நாடும் காப்பி அடித்து தனது நாட்டிற்கு பயன் படுத்தி இருக்க முடியாது. அனேகமாக, இரண்டு நாடுகள் பயன் படுத்திய இணைப்புப் பத்திரத்தையும் ஒரே மாதிரியாக தயாரித்தவர்கள் பிரிடிஷ் அரசாங்கமாக இருக்கும்.  அவர்கள் ஆட்சியின் கீழ் இந்திய சமஸ்தானங்கள் இருந்த காலத்திலும் பல தனி அதிகாரங்கள் அந்த சமஸ்தானங்களுக்கு உண்டு. அவற்றின் தொடர்ச்சியாக அது போன்ற தனி அதிகாரங்கள் இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ இணையும் சமஸ்தானங்களுக்கும் தக்க வைக்கப்பட்டிருக்கும்.  சரி, இந்தக் காலத்திற்கு வரலாம்.

ஒரு சமூகத்தின், ஒரு தேசத்தின் பழைய ஏற்பாடுகளை, பிற்கால சந்ததிகளும் அரசாங்கங்களும் அப்படியே பின்பற்றுவது என்பது சரித்திரத்தில் பெரும்பாலும் நடப்பதில்லை. மக்களும் அரசாங்கங்களும் அந்த ஏற்பாடுகளை மாற்றுகின்றன.  அந்நிய நாட்டு நிலப்பரப்பை மற்றோரு நாடு அடாவடியாக ஆக்கிரமிக்காமல் இருக்கவேண்டும் என்பதுதான் பொதுவான விதி.

தீவிரவாதிகளை உருவாக்கி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குள் அனுப்பி நாசவேலைகளை வன்மத்துடன் நிகழ்த்திவருகிறது அண்டை நாடான பாகிஸ்தான். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய பகுதியான காஷ்மீர் பள்ளத்தாக்கில் பிரிவினை கேட்கும் அரசியல் கட்சிகள், தீவிரவாதிகளுக்கு வால் பிடிக்கும் அரசியல் கட்சிகள், இந்தியாவை தாய் நாடாகவே மதிக்காத அரசியல் கட்சிகள்தான் பிரதானமாக இருக்கின்றன. காலம் எல்லாம் இந்த அவல நிலையைத் தாங்கிக் கொண்டே ஜம்மு-காஷ்மீரை ஒரு மாநிலமாக வைத்துக் கொள்ளவா அந்தப் பிரதேசத்தை இந்தியா தன்னுடன் இணைத்துக் கொண்டது?  அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, சைனா, போன்ற எந்த நாடும் இந்தியாவின் நிலையில் இருந்தால் இந்தப் பரிதாபமான சூழ்நிலையை நீடிக்க விடாது. 

இப்போது இந்தியா தனது நாட்டை தீவிரமாகப் பாதுகாக்கவும் ஜம்மு-காஷ்மீர் மக்களின் முன்னேற்றத்துக்காகவும் 370-வது பிரிவின் பிடியில் இருந்து மீள்வது காலம் ஏற்படுத்தும் நிகழ்ச்சி. இதை இந்தியா இந்த மாத முதல் வாரத்தில் நிறைவேற்றி விட்டது. இந்த மாற்றத்தை எதிர்ப்பவர்கள் யார்? தாங்கள்தான் அப்பாவி ஜம்மு-காஷ்மீர் மக்களின் பாதுகாவலர்கள் என்று நடித்து அந்த மக்களை ஏமாற்றி அமோக அரசியல் பலன்களை அனுபவித்தவர்கள் அவர்கள், அல்லது 370-வது பிரிவின் மீது கை வைத்தால், கொத்தாகக் கிடைத்து வந்த முஸ்லிம் ஓட்டுக்கள் பறிபோகலாம் என்று கணக்குப் போடும் அரசியல்வாதிகள் அவர்கள், அல்லது பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் எழுச்சியை எதிர்ப்பவர்கள் அவர்கள். உதாரணம்: பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி, குலாம் நபி ஆசாத், ராகுல் காந்தி, ஸ்டாலின், ப.சிதம்பரம் மற்றும் சில பத்திரிகைகள், தொலைக்காட்சி சானல்கள்

370-வது பிரிவின் கட்டுப்பாடுகள் நீங்கியதை எதிர்க்கும் அரசியல் கட்சிகளையே எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு தேர்தலின் போதும் அந்த அரசியல் கட்சிகள் பழைய கூட்டணிகளை மறந்துவிட்டு, அந்த நேரத்துக்கு ஏற்ற புதிய கூட்டணிகளை அமைக்கிறார்களே? அதில் நேற்றைய நண்பர்களும் எதிரிகளும் இன்று இடம் மாறுகிறார்களே? இன்று தனது கட்சிக்கு பலன் தருவது யாருடைய நட்பு, யாருடைய பகை என்று பார்த்துத்தானே அரசியல் கட்சிகள் மாறி மாறி கூட்டணி அமைக்கின்றன?  அது போலத்தானே ஒரு நாடும் தற்போதைய சூழ்நிலையில் தனது நலனுக்கும் கௌரவத்துக்கும் உகந்தது எது என்று எண்ணி சட்ட நடவடிக்கைகளையும், அரசியல் நிலைகளையும் எடுக்கும்?

இன்னமும் பாருங்கள். தனது நாட்டின் ஒரு பகுதி மக்களையே உதாசீனம் செய்த பாகிஸ்தான் நாட்டிலிருந்து, அந்தப் பகுதியின் நிலப்பரப்பு 1971-ம் வருடம் துண்டாகி பங்களா தேஷ் என்ற புதிய பெயரோடு தனி நாடாகவே ஆகிவிட்டது.  இது சாதாரண ஒப்பந்த மீறல் இல்லை.  பாகிஸ்தானின் அரசியல் சட்டமே பாழ் செய்யப்பட்டு அதன் விளைவாக தோன்றியது பங்களா தேஷ். இந்தியாவின் பெரும் ராணுவ உதவி இல்லாமல் பங்களா தேஷ் அந்த நாளில் உருவாகி இருக்காது. பிறகு அது ஐக்கிய நாடுகளின் உறுப்பினரும் ஆகி விட்டது. இதற்கு என்ன அர்த்தம்? எந்த நாடும் எப்படியும் துண்டாடப்படுவதை உலக நாடுகள் அனைத்தும் ஆட்சேபம் இல்லாமல் வரவேற்கும் என்பதா? இல்லை. விசேஷமான, விதிவிலக்கான நிலப்பரப்பு அல்லது அரசியல் மாற்றங்களை உலகம் அங்கீகரித்துத்தான் ஆக வேண்டும். ஆனால் ஜம்மு-காஷ்மீர் விஷயம் இன்னும் சாதாரணமானது, எளிமையானது. அதற்குப் பொருந்திய 370-வது பிரிவின் மாற்றம் இந்தியாவின் உள்நாட்டு விஷயம். அதுவும் சட்டத்தின் வழிதான் நடந்திருக்கிது.  அது எப்படி என்றும் பார்க்கலாம்.

370-வது பிரிவின் படி, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவையும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஒப்புதலோடு அங்கு அமல் படுத்தலாம் என்று இருக்கிறது. நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் இன்ன இன்ன பிரிவுகள் எங்கள் மாநிலத்துக்கும் பொருந்த சம்மதிக்கிறோம், அவைகளை நாங்களும் முழுமையாக அல்லது சில மாற்றங்களுடன் ஏற்றுக் கொள்கிறோம் என்று அந்த மாநிலமே  தனது கண்ணில் விளக்கெண்ணை வைத்துக்கொண்டு ஒவ்வொரு பிரிவாக அலசி ஆராய்ந்து சில தவணைகளில் ஒப்புதல் கொடுத்திருக்கிறது. அப்படியான ஒப்புதல்களின் விளைவாக ஒரு சட்ட நிலை தோன்றி இருக்கிறது. அது என்னவென்றால், தற்போது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சட்டசபை முறையாக கலைக்கப்பட்டு அங்கு ஜனாதிபதி ஆட்சி நடப்பதால், இந்த நேரத்தில் 370-வது பிரிவை ஜனாதிபதி உத்தரவு மற்றும் பாராளுமன்ற ஒப்புதல் மூலமாகவே முடக்கிப் போடும் சட்ட  வழி கிடைத்தது. அதை சாதுரியமாக உடனே செயல்படுத்தியது இந்திய அரசாங்கம். இப்படியாகத்தான் 370-வது பிரிவுக்கு கல்தா கொடுக்கப்பட்டது. அது போட்ட குட்டியான 35-A பிரிவும் நமது அரசியல் அமைப்புச் சட்டத்திலிருந்து வெளியேறியது.

370-வது பிரிவு மாதிரி, இந்தியாவோடு இணைந்த எல்லா சமஸ்தானங்களுக்கும் அவரவர் இணைப்புப் பத்திரங்களின் படி ஒரு சிறப்பு அந்தஸ்தை நமது அரசியல் சட்டம் வழங்கி இருந்தால், பிறகு புதுக்கோட்டை சமஸ்தானத்திடமும் மத்திய அரசு பணிந்து சம்மதம் வாங்கினால்தான் அந்த ஊர் மக்களுக்கும் பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் கிடைத்திருக்கும். இல்லை, தமிழ்நாடே ஜம்மு-காஷ்மீரைப் போல் ஒரு சமஸ்தானமாக இருந்து அதற்கும் சிறப்பு அந்தஸ்து கிட்டி இருந்தால், கலைஞர் கருணாநிதி தன்னை முன்னிலைப்படுத்தி பல அதிகாரங்களை விட்டுக் கொடுக்காமல் என்றோ மாநில சுயாட்சி பெற்றிருக்கலாம், மத்திய அரசு சர்க்காரியா கமிஷனையும் அமைத்திருக்க முடியாது. மத்திய அரசின் ஊழல் தடுப்பு சட்டத்தை இந்த மாநிலத்தில் அமல் படுத்த முடியாமல் சசிகலாவும் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றிருக்க மாட்டார். எல்லாவற்றையும் பார்த்தால், ’போனது போகட்டும் போடா!’ என்று இந்தியர்கள் ஆனந்த ராகத்தில் பாட வேண்டிய நேரம் இது.

* * * * *

Copyright © R. Veera Raghavan 2019

3 comments:

  1. I also wonder under what accession agreement Pakistan holds a portion of Kashmir (pOK)! What are they who suppport Pakistan on "high moral ground" have to say?

    ReplyDelete
  2. PC has to say as to why more than 42000 Indians who are mostly from a particular minority community were killed is violence during the Congress rule. Being a Hindu, he cannot escape by using a "secular" brush to support the Kashmir cause.

    ReplyDelete
  3. POK is not the short form for Pakistan Occupied Kashmir; from a patriotic Indian's view, it is the short form of POK(KIRI) state! And PC can also be expanded as "perfectly cunning", "politically corrupt". Actually Jammu Kashmir and Ladakh should celebrate their Independence day only on the day Article 370 was scrapped.

    ReplyDelete