Thursday 1 August 2019

ஒரு இந்தியக் குடும்பம், இந்தோனீஷிய ஹோட்டல், இன்னும் ஒரு விஷயம்.



வெளிநாட்டு சுற்றுலா சென்ற ஒரு இந்தியக் குடும்பத்திற்கு இந்தோனீஷியாவில் மானம் போனது வீடியோவில் பரவுகிறது.  அந்தக் குடும்பத்தினர்  ஹோட்டல் அறைகளைக் காலி செய்து தங்கள் உடைமைகளுடன் ஒரு 'வேனி'ல் புறப்படத் தயாராக இருக்கிறார்கள். அப்போது ஹோட்டல் அதிகாரிகள் இருவர் அந்தக் குடும்பத்தினரின் பெட்டி பைகளை வாகனத்திலிருந்து இறக்கி சோதனை செய்கிற காட்சிகள் வீடியோவில் தெரிகின்றன. 

அந்தக் காட்சிகள் இவை:  அந்தக் குடும்பத்தினர் தங்கிய அறைகளில் விருந்தினர் உபயோகத்திற்காக வைக்கப்பட்ட ஹோட்டல் சாமான்கள் - கண்ணாடி, 'ஹாங்கர்', 'ஹேர் டிரையர்',  'சோப் டிஸ்பென்சர்', சில கலைப் பொருட்கள் போன்றவை - அவர்களின் பெட்டி பைகளில் இருந்து வெளியே எடுக்கப்படுகின்றன. தங்கள் குற்றம் வெளிவருவதைப் பார்க்கும் அந்தக் குடும்பத்தின் நடுத்தர வயது ஆணும் பெண்ணும், ஹோட்டல் அதிகாரிகளிடம் "சாரி, சாரி, அதற்கான பணத்தை நாங்கள் கட்டுகிறோம்" என்று தப்பிக்கும் தீர்வு சொல்கிறார்கள். எடுபடவில்லை. குடும்பத்தில் இருக்கும் சற்று மூத்தவர் ஒரு ஹோட்டல் அதிகாரியிடம் மன்னிப்பு கேட்டு கும்பிடுகிறார், பயனில்லை.  வாகனச் சோதனை நீடிக்கிறது. குடும்பத்தின் மூன்று பெண் குழந்தைகள்  - வயது 12ல் இருந்து 16 இருக்கும் - வருத்தமான பார்வையில் நிற்கின்றன.  அயல் நாட்டில் ஒரு  இந்தியக் குடும்பத்தின் மானம் மரியாதை திமிறிக்கொண்டு போகிறது.

ஹோட்டல் பொருட்களை பதுக்கிய இந்தியர்கள் மீது நீங்கள் கோபம் கொள்வதும், 'வெளி நாட்டில் இந்தியாவின் பெயரைக் கெடுக்கிறார்களே' என்று நீங்கள் ஆத்திரப் படுவதும் நல்ல பண்பு. மற்ற விஷயமும் உண்டு.

நிச்சயமாக, அந்தக் குடும்பத்தின்  குழந்தைகள் மட்டும் யாரும் அறியாமல் ஹோட்டல் சாமான்களை பெட்டி பைகளில்  கடத்த மாட்டார்கள். இது பெரியவர்கள் செய்த காரியம்தான். வசதியாகவும் டீசன்டாகவும் தோன்றுகிறார்கள்.  பின் ஏன் அந்தக் குடும்பம் இந்தத் தப்பை செய்தது? இதற்கான விடையை, இந்தியப் பொது வாழ்க்கை நெறியின் லட்சணம் பெருமளவு சொல்லும்.

எனக்குத் தெரிந்து, ஒரு காலத்தில் ஒரே வீட்டில் பிறந்து ஒரு குடும்பமாக வளர்ந்த மிகப் பலர் இன்று பெரியவர்களாகி தனித் தனி குடும்பங்களாக நேர்மையாக வாழ்கிறார்கள். அவர்கள் யாரும் இது போன்ற இந்தோனீஷிய ஹோட்டல் தப்பை செய்ய மாட்டார்கள். இதற்கு முக்கிய காரணம், அவர்களுடன் 85 வயதுக்கும் மேலாக எளிமையாக, நேர்மையாக, ஆளுமையுடன் வாழ்ந்து மறைந்த அவர்களின் தாத்தா பாட்டியின் உதாரணம் – அதே வழியில் வந்த தாய் தந்தைகளின் உதாரணம். 

திருச்சியில் நான் படித்த ஈ.ஆர். உயர் நிலைப் பள்ளியின் ஆசிரியர்களை மறக்க முடியாது. அவர்களின் எளிமை, நேர்மை, ஞானம் மற்றும் அர்ப்பணிப்பு மாணவர்களை வசப்படுத்தின, வளப்படுத்தின. ஐம்பது வருடம் ஆனாலும், அந்த ஆசிரியர்கள் ஏற்படுத்திய தாக்கம் இன்றும் எனது வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிணைப்பாக இருக்கிறது. 

குடும்பத் தலைவர்களும் பள்ளி ஆசிரியர்களும் நம்மிடம் நல்லது-கெட்டது பற்றி பாதிப்பை ஏற்படுத்தும் 'ரோல் மாடல்'கள் அல்லது 'இன்ஃப்ளுவென்சர்'கள்.  அவர்களைத் தவிர வேறு யார் நமக்கு இன்ஃப்ளுவென்சர்களாக, வழிகாட்டிகளாக அமைகிறார்கள்? அதுவும் பொதுவெளி நடத்தையில், பொது வாழ்க்கையில்? அது அரசியல்வாதிகள்தான், அரசாங்கம் செய்து நம்மை ஆள்பவர்கள்தான். நல்லதோ கெட்டதோ, அவர்களின் பிரதான குணங்கள் – அதுவும்  பல வருடங்களாக தொடர்ந்து ஆட்சி செய்கிறவர்களின் நல்லதனமும் வில்லத்தனமும் – மக்களின் நோக்கில்,  நடத்தையில் சத்தமில்லாமல் தாக்கத்தை உண்டாக்கும். இது சம்பந்தமாக இந்திய அரசியல் தலைவர்களின் குண லட்சணத்தை பார்ப்பதற்கு முன்னர் இன்னொரு விஷயத்தை கவனிக்கலாம்.

இந்தோனீஷிய ஹோட்டல் சம்பவத்தை வீடியோவில் பார்த்த பல இந்தியர்களின் உள் மனது, 'பண்புள்ள மனிதர்கள் இதை செய்ய மாட்டார்கள், அதுவும் வெளிநாட்டுக்குப் போய் சொந்த நாட்டுக்கு கெட்ட பேர் வரக்கூடிய செயலை நினைக்க மாட்டார்கள்' என்று வருத்தமுடன் சொல்வது புரிகிறது. சரி, அப்படி அக்கறைப்படும் இந்தியர்களிடமே ஒரு கேள்வியை எழுப்புங்கள்: "வெளி இடங்களிலும், வெளி நாடுகளிலும் பண்பானவர்கள், நேர் நடத்தை உடையவர்கள் எந்த நாட்டுக்காரர்கள்?"  இதற்கான பதிலில் இந்தியா வராது. அறிந்தவர்கள், டென்மார்க்,  நியுஜிலாண்ட், சுவிட்சர்லாண்ட்,  ஜெர்மெனி, இங்கிலாண்ட் போன்ற நாடுகளை சுட்டிக் காட்டுவார்கள்.

மேலே சொன்ன மற்ற நாடுகளில் பொதுத்துறை முறைகேடுகளும் அரசியல்வாதிகளின் ஊழலும் மிகக் குறைவான அளவில்தான் உண்டு - அதாவது இந்த நாடுகளின் அரசியல் தலைவர்கள் அனேகம் பேர் நேர்மையான நடத்தை கொண்டவர்கள். ஆட்சிக்கு வந்த பின்பும் அதே நல்ல நடத்தை அவர்களிடம் தொடர்கிறது. பொதுப் பணத்தில் அவர்கள் கை வைப்பதில்லை, உறவினர்கள் மற்றும் வேண்டியவர்கள் பெயரில் தீடிரென்று கோடிகள் சேரும் எளிதான வழிகளை  ஏற்படுத்துதில்லை.

'டிரான்ஸ்பாரன்சி இண்டெர்நேஷனல்' என்ற சர்வதேச அமைப்பு, உலக நாடுகளின் பொதுத்துறைகளில் நிலவும் தூய்மையைக் கணித்து ஒவ்வொரு நாட்டுக்கும் ’ஊழலை உணர்த்தும் குறியீடு’ வழங்கி வருடா வருடம் ஒரு தரவரிசைப் பட்டியல் வெளியிடுகிறது. 2018-ஆம் வருடத்திற்கான அந்தப் பட்டியல் பதிமூன்று சர்வேகள் நடத்தி தயாரிக்கப் பட்டது. அந்தப் பட்டியலில் பொதுத்துறை ஊழல் குறைந்த நாடுகளாக டென்மார்க், நியுஜிலாண்ட், சுவிட்சர்லாண்ட், ஜெர்மெனி, இங்கிலாண்ட் ஆகிய நாடுகளை முதல் சில ராங்குகளில் சேர்த்திருக்கிறது. ஊழல் மிக அதிகமான நாடு என்று சோமாலியாவை குறிக்கிறது.  அதாவது, பொதுத்துறைகளுக்கான தூய்மை அளவுகோலில் டென்மார்க் நாட்டிற்கு முதல் ராங்க் கிடைக்கிறது. இந்தியாவுக்கு 78-வது ராங்க் – அது இத்தாலியை விட 25 ராங்குகள் மோசம் என்றால் நமது அரசாங்கம் மற்றும் பொதுத்துறை ஊழல் எவ்வளவு உலகப் பிரசித்தம் என்பது புரியும். கடைசிக்கு முந்தின ராங்க் சிரியாவுக்கு. சோமாலியாவிற்கு கடைசி 180-வது இடம்.  

'டிரான்ஸ்பாரன்சி இண்டெர்நேஷனல்' பட்டியல் மூலம் நாம் ஒன்று உணரலாம். அந்த அந்த நாட்டுத் தலைவர்கள் எந்த அளவு நேர்மையாக, தூய்மையாக இருக்கிறார்களோ, அதற்கு ஈடாக அதே பாணியில் அந்த நாட்டு மக்களும் அமைகிறார்கள். டென்மார்க் நாட்டு மக்களின் நன் நடத்தையை இந்தியர்களிடம் எதிர்பார்க்க முடியாது. இந்தியர்கள் அளவுக்கான நல்ல குணத்தை சோமாலிய காவாலிகளிடம் எதிர்பார்க்கக் கூடாது – அவர்கள் தோளில் துப்பாக்கியை தொங்கவிட்டு ஹோட்டல் அறைக் கதவையே கழட்டி, வெளியேறும் போது ரிசப்ஷன் பக்கம் டாட்டா காட்டியவாறு நகரலாம் – அது போன்ற வீரச் செயல்களை மானசீகமாக ஊக்கப் படுத்தும் அரசியல் தலைவர்களும் அவர்களுக்கு உண்டு.

எல்லா நாடுகளிலும் விதிவிலக்கான தலைவர்கள் இருக்கிறார்கள், மக்களும் உண்டு – அவர்கள் வெறும் விதி விலக்குதான். ஆனால் ’அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி’ என்பதுதான் பொதுவான விதி. ’மக்கள் எவ்வழி அரசன் அவ்வழி’ என்று ஆவதில்லை. ஆகையால் விதி விலக்கான தலைவர்களையும் மக்களையும் நாம் விட்டு விடலாம்.

பொதுப்பணத்தை கையாள்வதிலும், பொதுச் சொத்துக்களை காப்பதிலும், இந்திய அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் நமது மக்களிடம் என்ன மதிப்பு பெறுகிறார்களோ அதைத்தான் டிரான்ஸ்பாரன்சி இண்டெர்நேஷனல் பட்டியல் போட்டு  அறிவிக்கிறது.  நாம் இத்தாலியை விடவும் படு மோசம் என்றால், நம்மை ஆளும் அரசியல்வாதிகளின், நமது நாட்டு அதிகாரிகளின் பேராசை தெளிவாகிறது.  

’பதவியில் அமர்ந்து, அதிகாரத்தை வைத்து யார் யாரோ எப்படி எல்லாமோ சாப்பிடும்போது, சாப்பிட்டு ஏப்பம் விடும்போது, நாம் ஒரு ஹோட்டலில் ரகசியமாக சில துளிகள் நக்கிச் சாப்பிடுவது தப்பில்லை’ என்று ஒரு சாதாரண இந்தியனுக்கு இயல்பாகத் தோன்றலாமா இல்லையா? விதி விலக்கான இந்தியனை விடுங்கள் - ஒரு சாதாரண இந்தியனுக்கு இப்படி மிக அனேகமாகத் தோன்றும். அவனது செயலை நாம் பாராட்ட வேண்டாம், நியாயப் படுத்த வேண்டாம். ’பாவம், அவன் ஒரு அடிப்படை வியாதியின் பிடியில் இருக்கிறான், அந்த வியாதி வீடியோக்களில் தெரியாது, அவனைப் பிடித்த வியாதியை நாட்டிலிருந்து ஒழித்தால் நாட்டிற்கும் நல்லது, அவனுக்கும் நல்லது. அதற்கான தலைவர்கள் நாட்டில் பெருகட்டும், அவர்கள் நிலைக்கட்டும்’ என்று நினைத்து நாம் பிரார்தனை செய்யலாம். நமது நாட்டின் அடிப்படை வியாதி தீர உங்களுக்கும் எனக்கும் வேறு சிறந்த வழி இருக்கிறதா என்ன?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2019

5 comments:

  1. Well written as usual but I don't blame leaders for our shameless mindset. A leader influencing mass is a rare event. Such a leader appears in the scene probably once in hundred years like Mahatma Gandhi. Most of the time, leaders simply emerge out of the common man and he reflects the mind set of the common man.
    We Indians have become avaricious over a period of time and we have no sense of shame in accumulating unearned wealth by hook or crook. The Indonesian incident is just one example of the worst mindset of us...

    ReplyDelete
  2. Very well said RVR!!!.It is easy to have bad influence over majority than to have good influence. Yes, it is once in 100 years only we get a leader like mahatma Gandhi. But as kabir says that milk &curd is sold by going house to house and shouting every one to buy but for liquor is sold away in secluded place still it sells. People see politicians getting away with corruption and amassing wealth, then they think they can also do such petty thefts and get away.

    ReplyDelete
  3. This is the outcome of the wretched reservation policy. Reservation policy which was originally formulated to "uplift the downtrodden" and bring about social justice has now become a vote bank policy. There is nothing wrong in favoring a deserving candidate from ST, SC or backward classes, but just because one belonged to SC, ST or backward class,empowering them with highly responsible and decision making posts, would only lead to such social demoralization. A government that depends mainly on its revenue from liquor for its social welfare measures,is bound to be inefficient and less honest. And that dishonesty will naturally percolate through the legislative and executive sections leading to degeneration of society at large. Unless and until strict punishment is meted out to corrupt politicians and bureaucrats, the society will not improve.

    ReplyDelete
  4. Good read. There's a Hindi saying "jaisa raja, vaisa Praja" the people are like it's rulers. The article in the 2nd part is advocating this theory. Well being a democracy and leader emerging from amongst us perhaps reverse is applicable here. Our rulers are corrupt as we are only the degree extends based on the opportunity. Sad. How to change? This is brought out in the first part. Good upbringing by example. Children may not obey their parents / elders / even teachers but they do imitate them. Pray for good mentors and try to be one yourself.

    Thanks for the article which has brought out a crying need from a social media forward.

    God bless. jai hind.

    ReplyDelete
  5. It is not about indians, it is about human mind set - an urge to take something sometimes as a souvenir or unmindful of the result, take away something for pleasure. Kleptomania is a disease by itself There are hotels which specifically inform the guest that if they like some of the times used in the rooms, they can buy it. They make it clear that items are not meant for removal as they have paid the hotel room rates only for utilisation and not for 'taking'along with them. Some times we quote certain rankings based on our knowledge, but when you see the countries/citizens of such countries, who have the greed to take away (steal otherwise)from hotels, India is quite low on the scale, much after those elite countries. It is quite unfortunate that a video was taken and widely publicised, may be by an Indonesian or more by an ASIAN. While I too do not appreciate such a thing, I do not subscribe to the view that these are based on family values, educational background, etc. Like they say all five fingers are not the same. We cannot say all children studied under the same teacher, have similar attributes - definitely not. It is the culmination of combination of factors. This is my humble submission that we cannot generalise everything.

    ReplyDelete