Wednesday 19 September 2018

அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: ராஜிவ் கொலையாளிகள் வாழ்க வாழ்கவே!



அசட்டுத்தனம், பைத்தியக்காரத்தனம், பொல்லாத்தனம், இந்த மூணும் சேர்ந்தா எப்படி இருக்கும்னு நினைக்கறேள்? பதில் சொல்றதுக்கு பெரிசா கற்பனைலாம் பண்ணிப் பாக்க வேண்டாம். அதுகள் மூணும் ஒண்ணா கலந்து, ரத்தமும் சதையுமா உருவெடுத்து, ஸ்டாலின், ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ், ராமதாஸ், விஜயகாந்த், வைகோ, திருமாவளவன், இப்படில்லாம் பேர் வச்சுண்டு இருக்காளே? இந்த மாதிரி மனுஷாதான் ராஜிவ் காந்தி கொலையாளிகள் ஏழு பேருக்கும் தண்டனை குறைப்பு செஞ்சு அவாளை  ஜெயில்லேர்ந்து இப்பவே விடுவிக்கணும்னு உருகி உருகி கேக்கறா.

விவேகம் இல்லாம ஒரு காரியம் பண்ணினா அது அசட்டுத்தனம். பாக்கறவா, கேக்கறவா சிரிக்கற மாதிரி நடந்துண்டா அது பைத்தியக்காரத்தனம். மத்தவாளுக்கோ சமூகத்துக்கோ அநாவசியமா தீங்கு பண்ணினா அது பொல்லாத்தனம். சொல்லுங்கோ, இது உண்மையா இல்லையா? இது சரின்னா, இந்த குணாதிசயங்கள் உள்ளவாதான ராஜிவ் கொலையாளிகளுக்கு விடுதலை கேக்கறவா?

ஒரு தேசத்து முன்னாள் பிரதமரை அரசியல் காரணத்துக்காக திட்டம் போட்டு கொலை பண்றது, அதுவும் வெளிநாட்டு பயங்கரவாதிகள் மனித வெடிகுண்டை அனுப்பி கொடூரமா படுகொலை பண்றது, எவ்வளவு பெரிய அட்டூழியம், அராஜகம்? ராஜிவ் காந்தி கொலை நிகழ்ச்சியை இப்ப நினைச்சுப் பார்த்தாலும் பக்குனு இருக்கே? அதுல நமக்கு இருக்கற ஒரு ஆறுதல் - அந்தக் கொலை வழக்குல அபாரமா துப்பு துலக்கி குற்றவாளிகளை கண்டுபிடிச்ச சி.பி.ஐ சிறப்பு புலனாய்வு குழு. இந்தியர்கள் எல்லாரும் அந்த குழுவுக்கு மானசீகமா நன்றி சொல்லணும். 

உலகத்தரமான ஒரு புலன் விசாரணை பண்ணி, அதுவும் நம்ம நாட்டுல நடத்தி, அதுவும் தமிழ் நாட்டுல உக்காந்துண்டு செயல்பட்டு, இந்தியாவுல இருந்த கொலைக் குற்றவாளிகளை தப்பவிடாம கண்டுபிடிச்சு தண்டனையும் வாங்கி குடுத்த சி.பி.ஐ போலீசை எத்தனை தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் மனமார பாராட்டிருப்பா? நினைச்சா வெக்கமா இருக்கு.

தேசத்தை உலுக்கின ஒரு சிக்கலான வழக்குல, அந்த சிறப்பு புலனாய்வு குழு ஜெயிச்சு நாட்டு மானத்தையே காப்பாத்திருக்கு. அந்த சமயத்துல தமிழ் நாட்டுல யார் யாருக்கு என்ன தொடர்பு உண்டு, எங்க எப்படியான ஆதரவு இருந்ததுன்னு தெளிவா இல்லாத சூழ்நிலைல, சிறப்பு புலனாய்வு குழு இவ்வளவு நேர்த்தியா வழக்குல வெற்றி அடையும்னு யாரும் நினைச்சிருக்க மாட்டா. என்னைக் கேட்டா அந்த சி.பி.ஐ சிறப்பு புலனாய்வு குழு தலைவர் கார்திகேயனுக்கு பாரத ரத்னா பட்டம் குடுக்கணும்னு சொல்லுவேன். ஏன்னா அவர் தலைமையும் மேற்பார்வையும் துல்லியமா முடிச்சது, லேசுப்பட்ட காரியமில்லை. பிரும்மாண்டமான சாதனை.  அது நம்ம நாட்டு பிரதமர் நமக்கு முக்கியம்னு எல்லார்க்கும் உணர்த்தி, நம்ம போலீஸ் துறையோட பெருமையை உலக அளவுல உயர்த்தி பிடிச்சது. சரி, இப்ப நீங்க எதுக்கு சிரிக்கறேள்? ஓஹோ... புரியறது! அந்த ஏழு குற்றவாளிகளுக்கும் பாரத ரத்னா குடுக்கணும்னு சில தலைவர்கள் கேக்காம இருந்தா அதுவே பெரிசுங்கறேளா?

ராஜிவ் காந்தி கொலை வழக்கோட சிறப்பு புலனாய்வு குழுவை பத்தி நீட்டி முழக்கறதுக்கு காரணம் இருக்கு. நம்ம நாட்டோட பெருமை நம்ம பிரதமர் ஸ்தானத்தோடயும் ஒட்டிண்டு வரும். நம்ம பிரதமர் ஸ்தானத்தை மதிக்காத ஒரு இந்தியன் நம்ம நாட்டையும் மதிக்காதவன்னுதான் அர்த்தம். நம்ம நாட்டை லட்சியம் பண்ணாம, நம்ம பிரதமர் ஸ்தானத்தையும் உதாசீனம் பண்றவாதான், அந்த சிறப்பு புலனாய்வு குழுவோட வெற்றியையும் உணர முடியாதவா. அதுனாலதான் அந்த மாதிரி மனுஷா வெக்கமே இல்லாம ராஜிவ் கொலையாளிகளை முன்கூட்டியே வெளில விடணும்னு கேக்கறா. 

         ராஜிவ்  கொலை  வழக்கு  சுப்ரீம்  கோர்ட்டுக்கு வந்தபோது கோர்ட் என்ன சொன்னது தெரியுமா? ராஜிவோட பதினாலு பேரை மேலோகத்துக்கு அனுப்பின குண்டுவெடிப்பு, தடா சட்டப்படி ஒரு பயங்கரவாத செயல் இல்லை, மத்த சதாரண கொலை வழக்குகள் ரகத்தை சேர்ந்ததுன்னு சொன்னது. அப்பறம், ஏழு கொலையாளிகள்ள மூணு பேருக்கு ஆயுள் தண்டனை குடுத்து நாலு பேருக்கு மரண தண்டனை விதிச்சது. பின்னால, அந்த நாலு பேர்ல ஒருத்தரோட மரண தண்டனையை தமிழக கவர்னர் ஆயுள் தண்டனையா குறைச்சார். அதுக்கு அப்பறம், மீதி மூணு பேரோட மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட்டே ஆயுள் தண்டனையா குறைச்சது - ஏன்னா அந்த குற்றவாளிகளோட கருணை மனுவை பைசல் பண்றதுக்கு மத்திய அரசு பல வருஷங்கள் எடுத்துண்டதாம்.

          சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பின்னாடி தண்டனைக் குறைப்புன்னு இத்தனை நடந்திருக்கே, இது என்ன ஏதுன்னு புரியறதா உங்களுக்கு? எனக்கு தலைய சுத்தறது. உங்களுக்கு எது சரி சரியில்லைன்னு புரிஞ்சா பேசாம இருங்கோ. புரியாட்டாலும் பேசாம இருங்கோ. இப்படியே போனா, இந்த ஏழு குற்றவாளிகளும் சீக்கிரம் விடுதலை ஆனாலும் ஆகலாம். அதுக்கப்பறம் அவாளுக்கு தியாகிகள் பென்ஷன் கிடைக்கலாம். மெரினால சிலையும் வைப்பாளோ என்னவோ! சரி, மெயின் விஷயத்துக்கு வருவோம். 

ராஜிவ் கொலைக் கைதிகள் ஏழு பேருக்கு இப்ப விடுதலை கேக்கற அரசியல் தலைவர்கள் அதை நியாயப்படுத்தி என்ன சொல்றா, என்ன சொல்ல முடியும்? 'சுப்ரீம் கோர்ட் ரொம்ப ஜாஸ்தியா தண்டனை குடுத்திருக்கு. யாருக்கும் தூக்கு தண்டனையே குடுத்திருக்கக் கூடாது. ராஜிவ் காந்தி கொலை சம்பவத்துல, போலீஸ்காரா மத்த மனுஷான்னு சேர்த்து மொத்தம் பதினைஞ்சு பேர் உடல் சிதறி இறந்தாலும், எல்லாக் கொலைக்கும் மொத்தமா பன்னண்டோ பதினாலோ வருஷம் ஜெயில் தண்டனைதான் அந்த ஏழு குற்றவாளிகளுக்கும் குடுத்திருக்கணும். ஆனா பாவம், அவாளுக்கு ஆயுள் தண்டனை கிடைச்சது மட்டுமில்லை. ஆயுள் தண்டனைன்னா, ஆயுள் பூரா சிறை தண்டனைன்னு கிறுக்குத்தனமா தப்பர்த்தம் பண்ணிண்டு இந்த ஏழு பேரையும் இருபத்தி ஏழு வருஷமா ஜெயில்லயே வச்சிருக்கறது அநியாயம். அவா படற பாட்டை நினைச்சா அழுகை அழுகையா வரது. அதுனால, அவாள்ளாம் இப்பவாவது விடுதலை ஆகணும்.’ இதைத்தான விடுதலை கேக்கறவா ஒரு நியாயமா சொல்ல வரா? ஆனா மத்தவா நம்பறா மாதிரியும், நியாயத்தை உணர்ரா மாதிரியும் விடுதலை கேக்கறவாளுக்கு பேசத் தெரியலை.

விடுதலை கேக்கறவா ஒரு காரியம் பண்ணினா, அவா பக்கத்து நியாயம் இன்னும் பளிச்சுன்னு நேர்மையானதா தெரியும். என்னன்னா, அவா கூட்டா இப்படி ஒரு அறிக்கை விடணும்: "முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை நாங்கள் நேசிக்கிறோம். ஆனால் அவரது கொலையில் சம்பத்தப்பட்ட குற்றவாளிகளை வாழ்நாள் முழுவதும் சிறையில் வைத்திருப்பது நீதிக்கும் மனித நாகரிகத்துக்கும் முரண் ஆனது.  ஒரு சராசரி குடிமகனோ பிரதமரோ, பதவியில் இருக்கிறாரோ இல்லையோ, எந்த ஒரு மனிதர் கொலையுண்டாலும், எத்தனை பேர் ஒரே சம்பவத்தில் கொலையானாலும், இந்த மனித நேய தத்துவம் பொருந்தும். எங்கள் சிந்தனையின் நேர்மையை வலியுறுத்த இன்னொன்றையும் சொல்கிறோம். எங்களில்  யாராவது பயங்கரவாதத்தாலோ சாதாரண குற்ற செயல் மூலமாகவோ உயிர் இழந்தால், அதை ஏற்படுத்தும் நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது. அந்த குற்றவாளிகளுக்கு அதிக பட்சம் பதினாலு வருடங்கள் சிறை தண்டனை வழங்கினால் போதுமானது. இது போக, தந்தை ராஜிவ் காந்தியின் கொலையாளிகளை மன்னித்த ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை நாங்கள் குறிப்பிடுவது வீண் பேச்சல்ல என்பதையும் தெளிவு படுத்த விரும்புகிறோம். ராஜிவ் காந்தி போல் எங்களுக்கும் ஒரு அகால முடிவு நேர்ந்தால், எங்களின் எதிர்கால கொலைக் குற்றவாளிகள் எவரையும் அன்புடன் மன்னிக்குமாறு எங்கள் குழந்தைகளை இப்போதே கேட்டுக் கொண்டுள்ளோம். வாழ்க மனித நேயம்."

    விடுதலை   கேக்கறவா   இப்படி   ஒரு   அறிக்கை   குடுத்து எதிர்ப்பாளர்கள் வாயை அடைக்கலாம். ஏன் மாட்டேங்கறா? விளங்க வைப்பா விக்னேஸ்வரா!

* * * * *

Copyright © R. Veera Raghavan 2018



Tuesday 11 September 2018

ராஜிவ் காந்தி கொலை. குற்றவாளிகளுக்கு ஏன் விடுதலை?


“நளினியோடு முருகனுக்கும் சாந்தனுக்கும் விடுதலை!" என்று பாடியபடி முன்னணி தமிழக அரசியல் தலைவர்கள் கூத்தாடிக் கோரிக்கை வைக்காமல் இருப்பதுதான் குறை. மற்றபடி ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளான அந்த மூவர் உட்பட ஏழு பேரையும் சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும், அதற்காக தமிழக கவர்னர் அரசியல் சட்டத்தின் கீழ் தண்டனைக் குறைப்பு செய்து அவர்கள் விடுதலை ஆக உத்தரவிட வேண்டும் என்று இந்தத் தலைவர்கள் வலுவாகக் கேட்டிருக்கிறார்கள். தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க, ம.தி.மு.க கட்சித் தலைவர்களும் இதில் அடக்கம். இதில் ஒருவரை ஒருவர் மிஞ்சிப் பெருமை தேடவும் பார்க்கிறார்கள்.

தமிழக பா.ஜ.க-வும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் இந்த அபஸ்வர கோஷ்டி கானத்தில் சேரவில்லை என்பது ஆறுதல். ஆனால் தாராளமான மெஜாரிடி ஓட்டு சதவிகிதத்தை தங்கள் வசம் கூட்டாக வைத்திருக்கும் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளும் ஒரு முன்னாள் பிரதமரின்  கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை விடுவிக்க குரல் கொடுப்பது தமிழகத்தின் அரசியல் நல்லொழுக்க சீரழிவிற்கு சாட்சி.  

ராஜிவ் காந்தி இந்தியாவின் பிரதமராக இருந்தபோது அவர் எடுத்த நடவடிக்கைக்காக அவரை பின்னாளில் படுகொலை செய்வது நமது நாட்டின் மீதே தாக்குதல் நடத்துவதற்கு சமம். அந்த பாதகச் செயல் வெளிநாட்டு  தீவிரவாதிகளால் திட்டமிடப்பட்டு அவர்களின் தமிழக கூட்டாளிகள் துணையோடு இந்திய மண்ணிலேயே குரூரமாக நிறைவேற்றப் பட்டது. ந்தக் குற்றத்திற்காக தண்டனை அடைந்து ஜெயிலில் உள்ள அந்தக் கயவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று ஒரு இந்தியக் குடிமகன் கேட்பது அவனுக்கு இழுக்கு. அதை ஒரு இந்திய அரசியல் தலைவர் நினைத்துப் பார்ப்பதே அவருக்கு மானக்கேடு. அதற்கு ஒரு அரசாங்கம் செவி சாய்த்தால் அது தனக்கே செய்துகொள்ளும் துரோகம். இதில் இரண்டாவது, தமிழகத்தில் தடபுடலுடன் பரவலாக வெளிவந்துவிட்டது.  மூன்றாவது, தமிழக கவர்னரின் முடிவைப் பொறுத்தது. தற்போதைய இந்தியாவின் பொது வாழ்க்கையில், அதுவும் அரசியல் நிகழ்வுகளில், நல்லதோ சரியானதோ நடக்கும்வரை அப்படி நடக்கும் என்று ஆணித்தரமாக சொல்ல முடியாது.

தமிழக தலைவர்கள் விடுக்கும் கோரிக்கையின் மஹா அபத்தத்தை அழுத்தமாக புரிந்துகொள்ள ஒரு கற்பனையான உதாரணத்தை நினைத்துப் பார்க்கலாம். தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க, மற்றும் பல தமிழக பொடிக் கட்சிகளின் பிரதான தலைவர்கள் யாராவது இந்திய பிரதமர் ஆனார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  தேவ கௌடாவே பிரதமர் ஆன பிறகு யார்தான் பிரதமர் ஆக சாத்தியமில்லை? சரி, அந்தக் கற்பனை பிரதமரின் பதவிக் காலம் முடிந்த பின், துரதிர்ஷ்டமாக   ஒரு அண்டை நாடு மற்றும் வேறு ஒரு  இந்திய மாநிலத்தின் பல கிரிமினல்களின் கூட்டு சதியால் அவர் படுகொலை செய்யப் பட்டார் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். அந்தக் குற்றத்தில் பிடிபட்ட பத்து பேர்கள் குற்றவாளிகள் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சொல்லி அவர்கள் இப்போது டெல்லி திகார் ஜெயிலில் ஆயுட்கால தண்டனை அனுபவிக்கிறார்கள் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். அப்படி என்றால் தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க போன்ற கட்சிகளின் தலைவர்கள் அந்த பத்து குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு கேட்பார்களா ? மாட்டார்கள்.

மேலே சொன்ன உதாரண நிகழ்ச்சியில், அந்த பத்து குற்றவாளிகள் சிலரின் சொந்த மாநிலத் தலைவர்கள் அப்படி விடுதலை-கோரிக்கை எழுப்பினால், நமது தமிழக தலைவர்கள் வெகுண்டெழுவார்கள் இல்லையா? ’அப்படியான  கோரிக்கை ஏற்கப்பட்டால், இந்தியாவின் சுய பெருமிதம், நமது மக்களின் தேசப்பற்று ஆகிய பண்புகளை காலில் மிதித்து, நம்மை நாமே உலக நாடுகள் பார்வையில் கேலிக்கு உள்ளாக்குகிறோம்’ என்று தமிழக தலைவர்கள் அப்போது சரியாக ஆட்சேபிப்பார்கள். இப்போது அசல் ஏழு குற்றவாளிகளுக்கு விடுதலை கேட்கும் தமிழக தலைவர்கள், அந்த உதாரணத்தின் பத்து குற்றவாளிகளுக்கு விடுதலை கூடாதென்று ஏன் சொல்வார்கள்? ஏனென்றால், இப்போதும் அப்போதும் இது போன்ற தமிழக தலைவர்களுக்கு நாட்டின் மீது அக்கறை இல்லை, பெருமையும் கிடையாது. ஓட்டின் மீதுதான் ஆசையும் கவனமும். அதிலும், இப்போதைய கோரிக்கையானது அவர்களின் முறுக்கிய கண்ணோட்டத்தின், தவறான கணிப்பின் விளைவுதான்.

         தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க மற்றும் சில குட்டிக் கட்சிகள் தமிழகத்தின் மிகப் பெரிய ஓட்டு சதவிகிதத்தை கூட்டாக வைத்திருக்கலாம்.  ஆனால் அவர்களின் ஒவ்வொரு ஒருமித்த நடவடிக்கைக்கும் அதே சதவிகிதத்தில் தமிழக மக்களின் ஆதரவு அவர்களுக்கு உள்ளது என்று அர்த்தமல்ல. 

“இது மக்கள் கோரிக்கை, மக்கள் விருப்பம்” என்கிறார் அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஒரு மாநில அமைச்சர். ஏழு குற்றவாளிகளும் விடுதலை செய்யப்பட்டால் “அனைத்து தமிழர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்” என்கிறார் தி.மு.க-வின் புதிய தலைவர். இது பித்தர்களின் பிதற்றல். தமிழக மக்களின் கவலைகளும் பிரச்சனைகளும் வேறு.

ஏற்கனவே ’தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை மோசமாகி வருகிறது, நியாயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையுடன் போலிஸ் நிலையங்களுக்கு கூட போகமுடியவில்லை’ என்று சாதாரண மக்கள் தமிழகத்தில் காலம் தள்ளுகிறார்கள். தமிழகத்தில் செல்வாக்கான அமைச்சரில் இருந்து, டி.ஜி.பி-யான காவல் துறையின் தலைவரே குட்கா ஊழல் விவகாரத்தில் சி.பி.ஐ-யால் இப்போது ரெய்டு செய்து விசாரிக்கப் படுகிறார்கள். மாநிலத்தின் ஒரு முதல்வர் முறைகேடாக சொத்து குவிப்பு செய்தார் என்று சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டே ஊர்ஜிதம் செய்தது. கெட்டிக்கார எதிர்க்கட்சியினர் ஊழல் தடுப்பு சட்டத்தின் பிடியிலிருந்து லாவகமாகத் தப்பித்து கொழிக்கிறார்கள். மாநிலத்தின் இந்த பரிதாப நிலைமையில், அதன் காரண கர்த்தாக்களின் பிடியில், அவதிப்படும் தமிழக மக்கள் அனைவரும் என்ன சிந்தனையில் இருப்பார்கள்? ‘இப்போது ராஜிவ் கொலைக் குற்றவாளிகளும் வெளி வருவதுதான் நியாயம். அப்போதுதான் மக்கள் மேலும் பாதுகாப்பாக குதூகலமாக உணரமுடியும்’ என்று நினைப்பார்களா?  அதுவும் கொலை என்ற வெறும் சொல்லே சாதாரண மக்களுக்கு மன அசௌகரியத்தையும் சற்று அச்சத்தையும் ஏற்படுத்தும் போது?

டேவிட் ஹெட்லி என்கிற பாகிஸ்தானிய-அமெரிக்கன் ஒரு லஷ்கர் பயங்கரவாதி. 2008-ம் வருடம் நடந்த மும்பை குண்டுவெடிப்புக்கான திட்டமிடுதலில் அவனுக்கும் பங்கு இருந்தது. அந்த பயங்கரவாத தாக்குதலில் 164 பேர் உயிர் இழந்தார்கள். அந்த படுகொலைகளுக்காக, அமெரிக்கா அவன் மீது சிகாகோ நகர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, 2013-ம் வருடம் அவனுக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை வாங்கிக் கொடுத்தது. அவன் வழக்கு விசாரணையில் முழுவதுமாக ஒத்துழைத்து எல்லா உண்மைகளையும் கக்கியதால், அந்த நாட்டு சட்டமுறைப்படி அவனோடு செய்து கொண்ட ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில், மரண தண்டனையை தவிர்த்து குறைவாக அவனுக்கு வழங்கப்பட்ட தண்டனை 35 ஆண்டுகள்.

இந்தியாவில் நடந்த ஒரு குண்டுவெடிப்புக்காக அமெரிக்கா டேவிட் ஹெட்லி மீது ஏன் வழக்கு தொடுக்க வேண்டும், அதுவும் தன் நாட்டில்? ஏனென்றால், மும்பை தாக்குதலில் கொல்லப்பட்ட 164 நபர்களில் ஆறு பேர் அமெக்க குடிமகன்கள்.  தனது  சாதாரண குடிமகன் ஒருவன் பயங்கரவாத தாக்குதலில் வெளி நாட்டில் உயிர் இழந்தாலும், குற்றவாளியைப் பிடித்து தண்டிக்கிறது அமெரிக்கா. தனது 52-வது வயதில் 35 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற டெவிட் ஹெட்லி, 87 வயது வரை உயிருடன் இருந்தால் வெளி வரமுடியாது. அந்த நாட்டு அரசியல் தலைவர்கள் டேவிட் ஹேட்லி முன் கூட்டியே விடுதலை செய்யப் படவேண்டும் என்று கேட்க மாட்டார்கள்.  அவர்கள் சூடு சொரணை  சுய கௌரவம் உள்ளவர்கள். ஆனால் நமது முன்னாள் பிரதமர் ஒருவர் நமது நாட்டிலேயே பயங்கரவாதிகளால் தீர்த்து கட்டப்பட்டாலும், அதில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கோர்ட் விதித்த தண்டனையை இன்னும் குறைத்து அவர்களை விடுதலை செய்யுமாறு கேட்கும் தமிழக தலைவர்களே – நீங்கள் ஏன் வெட்கத்தையும் விட்டு விவஸ்தையும் கெட்டீர்கள்?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2018