Wednesday 27 December 2017

அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: மன்மோகன் சிங் மனசின் குரல் – அன்னை சொல் மிக்க மந்திரமில்லை. வாழ்க அன்னை சோனியா!


மன்மோகன் மாமாவை நினைச்சா பத்திண்டு வரது. பத்து வருஷம் தேசத்தோட பிரதமரா இருந்திருக்கார். இப்பிடியா விவஸ்தை இல்லாம இருப்பார்?

பிரதமரா இருந்தாதான் ஒரு மனுஷனுக்கு விவஸ்தை வரணும்னு இல்லை. ஆனா விவஸ்தையே இல்லாத மனுஷன் பிரதமரா வந்திருக்கப் படாது. இவரை எதுக்கு கோபிக்கறேன்னு சொல்றேன். 

இப்ப நடந்ததே குஜராத் தேர்தல்,  அதுக்கு மூணு நாள் முன்னால மணி சங்கர் மாமா கூப்பிட்டார்னு அவர் வீட்டுக்கு டின்னர் சாப்பிட போனாராம். போகட்டும், தப்பில்லை. அந்த டின்னருக்கு இப்போதைய பாகிஸ்தான் ஹை கமிஷனர், முன்னாள் பாகிஸ்தான் வெளி உறவு மந்திரி, முன்னாள் இந்திய துணை ஜனாதிபதி, முன்னாள் இந்திய வெளி உறவு மந்திரி, முன்னாள் இந்திய ராணுவ தளபதி,  இவாளையும் மணி மாமா கூப்பிட்டு உக்கார வச்சிருக்கார்.  வேற சில பழைய இந்திய அரசாங்க அதிகாரிகளும் வந்திருக்கா. எல்லாரும்  இந்தியா பாகிஸ்தானுக்குள்ள நல்லுறவு பத்தி கூடிப் பேசினாளாம்.  சிரிக்காம என்ன பண்றது? இவா கட்சி சமீபத்துல பத்து வருஷம் ஆட்சில இருந்தபோது அரசாங்க மட்டத்துலயயே இந்தியா பாகிஸ்தான் நல்லுறவுக்காக பெரிசா பண்ண முடியலை – புரியறது, அதுக்கு முக்கிய காரணம் பாகிஸ்தானோட துவேஷம்,  அவாளோட காஷ்மீர் ஆசை எல்லாம்தான்.  இப்ப எதிர்க்கட்சி இருந்து அரசாங்கத்துக்கும் தெரியாம ரகசியமா டின்னர் சாப்டுண்டே என்ன முயற்சி பண்ணிருக்க முடியும்? குழந்தைத்தனமா பண்ணிருந்தாலும், கடைசீல ஏப்பம்தான் மிஞ்சும். 

ஒண்ணு கவனிங்கோ.  இந்திய அரசாங்கத்துக்கு இவா என்ன பேசிண்டான்னு நேரடியா தெரியாது – முதல்ல காங்கிரஸ் கட்சிலேர்ந்து அப்பிடி ஒரு டின்னர் மீட்டிங் நடந்ததுன்னு ஒப்புக்கலை. அப்பறம், ஆமாமா நடந்ததுன்னா.  ஆனா பாகிஸ்தான் அரசாங்கம் அப்பிராணியா இருக்க மாட்டேன்னாளோ என்னவோ. அவா தகவல் சொல்லிதான் இப்ப இருக்கற பாகிஸ்தான் ஹை கமிஷனுரையும் மணி மாமா டின்னருக்கு கூப்பிட்டாரோ? அப்பதான் டின்னர் மீட்டிங்ல யார் என்ன பேசினான்னு முழுசா தகவல் வந்து சேர பாகிஸ்தானே வழி பண்ணிண்டதோ என்னமோ.

  பாகிஸ்தான் நாடே ராணுவ யூனிஃபார்ம் போட்ட பயங்கரவாதிகள் கைல இருக்கு.  அடிக்கடி எல்லையை தாண்டி இந்தியாவுக்குள்ள  வந்து சுடறதுக்கும் வெடிகுண்டு வீசறுதுக்கும் பாகிஸ்தானே பயங்கரவாதிகளுக்கு பயிற்சி குடுத்து அனுப்பிண்டிருக்கு.  அப்பிடி வர கும்பல்கள் இந்திய சிப்பாய்களையும் கொன்னுண்டிருக்கா. இந்த சூழ்நிலைல இந்தியா பாகிஸ்தான் பரஸ்பர உறவு எப்பிடி சோபிக்கும்?

ஏன், 2001-ஆம் வருஷம் நடந்தது மன்மோகன் மாமாக்கு ஞாபகம் இல்லையா? அப்பத்தான் இந்திய பாராளுமன்ற வளாகத்துக்கே பாகிஸ்தான் அனுப்பின பயங்கரவாதிகள் ஏ.கே.47 துப்பாக்கி, கைஎறி குண்டு சகிதமா வந்து தாக்குதல் நடத்தினா. அங்க இருந்த இந்திய எம்.பிக்கள் பொழைச்சதே அதிர்ஷ்டம். இந்தியா நட்பா இருந்தாலும் சரி, இந்தியாவை ஒழிக்கணும்கறதைத் தவிர பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு வேற வேலையே இருக்கறதா தெரியலை. இப்பிடி தீவிர  எதிரியா இருக்கற ஒரு நாட்டு அரசாங்கத்து தூதர், அந்த நாட்டு முன்னாள் வெளி விவகார மந்திரி ரண்டு பேரையும் காங்கிரஸ் தலைவர்  ஒருத்தர் விசேஷமா வீட்டுல விருந்துக்கு அழைக்கறார், அந்த விருந்துக்கு இந்திய அரசாங்கத்துல மிக உயர் பதவி வகிச்சவா சில பேரும் விருந்தினரா வரா, அப்பிடின்னா அந்தக் கட்சிக்கு அது பெரிய இழுக்கு.  

அந்த டின்னருக்குப் போன மத்தவாள விட மன்மோகன் மாமாக்குதான் பெரிய மானக் கேடு, கௌரதைக் குறைச்சல்.  சோனியா காந்தி கேட்டுக்காமயோ சிபாரிசு பண்ணாமயோ, மணி மாமா அழைச்சார்னு மட்டும் அவர் டின்னருக்கு போயிருக்க மாட்டார்.  பாவம், தான் அசடா அபத்தமா தெரிஞ்சாலும் பரவால்லை, தன்னை பிரதமர் ஆக்கி வாழ வைச்ச கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு எப்பவும் விசுவாசத்தை காமிக்கணும்னு நினைக்கறார். 

 டின்னருக்கு ரண்டு வருஷத்துக்கு முன்னால  மணி மாமா ஒரு நாள் பாகிஸ்தான் போனார். அது நவம்பர் 2015. அப்ப மோடிதான் இந்திய பிரதமரா இருக்கார்.  பாகிஸ்தான்  நாட்டு ’துனியா டி.வி’ல மணி மாமாவை பேட்டி எடுக்கறா. அந்த அயல்நாட்டு டி.வி. பேட்டில,  "இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்குள்ள நல்லுறவு வளரணும்னா நீங்க எங்களைக் கொண்டு வாங்கோ,   மோடியை   அப்புறப் படுத்துங்கோ"ன்னு மணி மாமா கன்னா பின்னான்னு பேசறார்.  "நீங்களே அதைப் பண்ணலாமே?"ன்னு பேட்டி எடுக்கறவர் திருப்பிக் கேக்கறார். அதாவது, ’இந்திய நாடாளுமன்ற தேர்தல்ல எதிர்க் கட்சிகள்  ஜெயிச்சு ஜனநாயக முறைல மோடியை அப்புறப்படுத்தலாம்' அப்பிடிங்கற அர்த்தம்தான் அந்தக் கேள்வில இருக்கு. அது ஒரு எதிர்க் கட்சிக்கு இருக்கற சரியான வழிதான். அந்த வழிலதான், மோடி தலமைல எதிர்க்கட்சிகள் மன்மோகன் மாமா பிரதமரா இருந்த ஆட்சியை 2014-ஆம் வருஷம் கீழ எறக்கினா. ஆனா கேம்பிரிட்ஜ்ல படிச்ச மணி மாமா அந்தக் கேள்விக்கு அசால்டா பதில் சொல்றார், "நாங்க மோடியை அப்புறப் படுத்தலாம். அது வரை நீங்க காத்துண்டிருக்கணும்". என்ன அர்த்தம்? 'பாகிஸ்தான்காரா ஆளை அனுப்பி ஏதாவது டப் டுப்புனு பண்ணி சட்டு புட்டுனு மோடியை அப்புறப் படுத்தலாம்'னு தான இதுக்கு அர்த்தம்?  யூ டியூப்ல இந்த டெலிவிஷன் பேட்டியைப் பாத்தேள்னா திக்னு இருக்கும்.  இந்தியா பாகிஸ்தான் பிரிவினை வந்த போது, லாகூர்ல பிறந்மணி மாமாக்கு பாகிஸ்தானை தேர்ந்தெடுத்து அங்கயே அவர் சௌக்கியமா இருந்திருக்கலாம்னு எனக்கு தோணினா தப்பா? அவரோட டெலிவிஷன் பேட்டியை பாத்த பாகிஸ்தான் மிலிடரிகாராளுக்கே அப்படி ஆசையாத் தோணலாம்!

இந்தியாக்கு எதிரா பாகிஸ்தான் அக்கிரமும் அராஜகமும் பண்ணிண்டே இருக்குன்னு நம்ம நாடு அவாளோட  இரு தரப்பு கிரிக்கெட் கூட  ஆடவேண்டாம்னு வச்சிருக்கோம்.  அந்த நாட்டோட முன்னாள் இந்நாள் உயர் அரசாங்க அதிகாரிகளோட மன்மோகன் மாமாக்கு எதுக்கு டின்னரும்  குசலமும்? இருக்கற நிலவரப்படி, எந்தெந்த வகைல என்னன்ன   உறவுகள் வேணும்னு அரசாங்கம் மட்டும் பாத்துக்கறது தான் நல்லது, அதுதான் இந்தியாவுக்கே கௌரதை. இதெல்லாம் ஒரு மாஜி பிரதமருக்கு சொல்லியா தெரியணும்? அதுவும் ஆக்ஸ்ஃபர்டுலயும் கேம்பிரிட்ஜ்லயும் படிச்சவருக்கு?

ரண்டாம் உலகப் போர் நடந்த போது ஜெர்மெனிக்கும் இங்கிலாந்துக்கும்  என்ன பகை இருந்ததோ அதே பகை உணர்ச்சிதான்  இந்தியா மேல பாகிஸ்தான் அரசாங்கம் இப்ப வச்சிண்டிருக்கு – இந்தியா நட்பா இருக்க நினைச்சாலும் பாகிஸ்தான் கடுகடுன்னு இருக்கு.  அந்த உலகப் போர் நடந்த பெரும் பகுதி நாட்கள்ள சர்ச்சில்தான் இங்கிலாந்து பிரதமர். அந்த சமயத்துல ஜெர்மெனி நாட்டு முன்னாள் அந்நாள் அரசாங்க உயர் அதிகாரிகளை இங்கிலாந்து நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் யாராவது தன் வீட்டுக்கே டின்னருக்கு கூப்பிட்டிருப்பாரா?  அந்த மாதிரி டின்னர் ஏற்பாடு ஆயிருந்தாலும்  முன்னாள் இங்கிலாந்து  பிரதமர் யாராவது போயிருப்பாரா? இதுல மணி மாமாக்கும் மன்மோகன் மாமாக்கும் சந்தேகம் இருந்தா,  அவா படிச்ச ஆக்ஸ்ஃபர்டு கேம்பிரிட்ஜ் யூனிவர்சிடிக்கு போய் ஒரு பிரதமர், ஒரு அரசியல் தலைவருக்கான முறையான நடத்தை என்னன்னு கேட்டு தெரிஞ்சிக்கலாம்.

இதுல இன்னொண்ணு பாருங்கோ. பாகிஸ்தானுக்குப் போய் அந்த நாட்டு டி.வி.ல "இந்தியப்  பிரதமரை நீங்க அப்புறப் படுத்தணும். நாங்க முறையா பண்றதுக்கு லேட் ஆகும். நீங்கன்னா சீக்கிரமாவே முடிக்கலாம். ஹி ஹி"ன்னு ஒரு காங்கிரஸ் கட்சித் தலைவர் சொன்னா, காங்கிரஸ் பிரதம மாதிரியா இருந்த மன்மோகன் மாமா அதைக் கண்டிக்கணுமா வேண்டாமா? ஏன் கண்டிக்கலை?  சோனியா காந்தி சொல்லலைன்னா? ஒவ்வொண்ணா எல்லாம் நடந்ததுக்கு அப்பறமும், பாகிஸ்தான் அரசங்கத்துல முக்கியப் பட்ட பேரை மணி மாமா சாப்பிட கூப்டார்னு இவரும் போயிருக்கார். மன்மோகன் மாமாக்கு விவஸ்தை இல்லைன்னா சரிதானே? குறைச்சு சொல்லிட்டேனா?

* * * * *


Copyright © R. Veera Raghavan 2017

2 comments:

  1. Very humorous and factual. Mani Shankar Iyer was booted out from his own constituency and yet he talks like a spokesperson of Congress. He was a liability not only toCongress but also to the nation. I know some of his family members as his sister was married to acolleagueof mine in port sector. They are all same, though the mother was good. She has written some good poetry for children in Tamil.

    ReplyDelete
  2. Superb
    While Mani and MMS misbehaved the RS opposition leader wanted Modi to apologise (later clarify) the raking up of this disgraceful meet during the Gujarat election rallies.
    The congress stalled the RSfor more than a week

    ReplyDelete