Sunday 11 September 2016

உ.பி-யில் காங்கிரஸ்: மானம் கட்டிலேறியது!


     அனைவருக்கும் நன்னெறிகள் சொல்லும் இதிகாசங்களும் புராணங்களும் இந்தியாவில் அறியப்பட்டது போல் வேறு எங்கும் இல்லை.  ஒழுக்கத் தவறுகளில் மிகச் சாதாரணமான பொய் பேசுதல் என்பதும் கூடாது என்று பாரத தேசத்தில் வலியுறுத்தப் பட்டது. “பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது” என்று சின்ன வயதில் பழமொழி கேட்டு வளர்ந்தவர்கள் இன்றும் தமிழ்நாட்டில் உண்டு. இப்போது அதையே நாட்டு நிலைமைக்கு ஏற்ப ஒரு சிறு மாற்றத்துடன் – அதாவது “பொய் சொல்லாத வாய்க்கு” என்பதாக - பலர் நமட்டுச்சிரிப்புடன் புரிந்துகொள்ளலாம்.  தமிழ் தெரிந்தால், அதில் ராகுல் காந்தியும் ஒருவராக இருக்கலாம். ஏனென்றால் பொய்பேசுதலையும் தாண்டி, பொதுமக்கள் களவாடினால் கூடத் தவறில்லை என்று தெளிவாக தொனிக்கும்படி அண்மையில் பேசியிருக்கிறார் ராகுல் காந்தி. ஏன் அப்படிப் பேசினார்?

    உத்திரப் பிரதேசம் ருத்ராபுரில் நடந்த ஒரு காங்கிரஸ் கூட்டத்தின் முடிவில் ஏற்பட்ட காட்சி தேசிய செய்தியானது. ’கட்டில் சபைகள்’ என்ற பெயருடன் பல கிராமங்களில் ராகுல் காந்தி உரை நிகழ்த்தும் விவசாயிகள் கூட்டங்களின் முதல் நிகழ்ச்சி அந்த கிராமத்தில் செப்டம்பர் 6-ல் நடந்தது. அங்கு அவர்கள் அமர்ந்து தலைவரின் பேச்சைக் கேட்பதற்காக மரத்தால் ஆன கயிற்றுக் கட்டில்கள் வாடகைக்கு எடுத்துப் போடப் பட்டன. கூட்டம் முடிந்தது. கட்டில்களில் உட்கார்ந்து பேச்சைக் கேட்டவர்கள் ஆயிரக் கணக்கான கட்டில்களை வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டனர்.  பல வட மாநில கிராமங்களில் அது போன்ற கயிற்றுக் கட்டில்கள் பரவலாகப் பயன்படுத்தப் படும். அதனால்தான் ஊருக்கு ஊர் ஆயிரக் கணக்கில் கட்டில்களைக் கிடத்தி கூட்டங்கள் நடக்குமாறு திட்டமிட்டது காங்கிரஸ் கட்சி.

    ருத்ராபுர் கூட்டதிலிருந்து கட்டில்களைத் தூக்கிச் சென்றவர்களைப் பல செய்தியாளர்கள் புகைப்படம் எடுத்தார்கள், விடியோவும் எடுத்தார்கள். அதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் வெட்கம் எதையும் காட்டாமல் நகர்ந்தார்கள் கட்டில் சுமந்தவர்கள்.  ‘இது சரிதான், இது நியாயம்தான்’ என்கிற மனோபாவத்தில்தான் அவர்கள் தென்பட்டார்கள்.  சட்டத்தின் பார்வையில் அவர்கள் செய்தது திருட்டாகும்.  ஆனால் அவர்கள் திருட்டுத் தொழில் செய்பவர்களோ, வழக்கமாக யாருடைய பொருள் எங்கு கிடைத்தாலும் திருட நினைப்பவர்களோ அல்ல. அவ்வாறு செய்பவர்கள் திருட்டை ரகசியமாக செய்வார்களே தவிர, கட்டில் எடுத்தவர்கள் மாதிரி ‘ஹாயாக’ பகிரங்கமாக செய்யமாட்டார்கள்.  இரண்டு நாட்கள் முன்பு – செப்டம்பர் 9-ம் தேதி – உத்திரப் பிரதேசம் அம்பேத்கர் நகர் மாவட்டத்திலும் ராகுல் காந்தி பங்கேற்ற கட்டில் சபைக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்திற்கும் வெறுங்கையோடு வந்தவர்கள் பலர் கட்டில்களோடு வீடு திரும்பிய செய்தியும் உண்டு.

    சட்டம் செய்யமுடியாத ஒரு காரியத்தை நாமும் காங்கிரஸ் கட்சியும் செய்யலாம். அதாவது கட்டிலை எடுத்துப் போனவர்களின் ஏழ்மையையும் மனதில் கொண்டு அவர்களை மன்னிக்கலாம். உண்மையில் அவர்களின் செய்கைக்கு ஏழ்மையைத் தவிர இன்னொரு காரணமும் இருக்கிறது. அதாவது “எங்களைத் தொடர்ந்து ஏமாற்றி வஞ்சித்துக் கொழுக்கும் அரசியல் கட்சிகளிடமிருந்து இந்த சிறு ஆதாயமாவது எங்களுக்குச் சேருவது நியாயம்தான்” என்கிற உள்ளார்ந்த நம்பிக்கையும் ஒரு காரணம். ஆகையால்தான் அந்தத் தவறையும் அவர்கள் குற்ற உணர்ச்சி இல்லாமல் செய்கிறார்கள். ஆனால் அவர்களின் செயலை ராகுல் காந்தியே பின்னர் நியாயப் படுத்தும் தொனியில் பேசியதுதான் மன்னிக்க முடியாதது.

     ருத்ராபுர் செய்தி ஊடகங்கள் வாயிலாக நாடெங்கும் பரவியது. இதனால் காங்கிரசுக்குக் கெட்ட பெயர் என்று எண்ணிய ராகுல் காந்தி, தன் கூட்டத்திற்கு வந்தவர்கள் கட்டில்களை எடுத்துச் சென்றது தவறல்ல என்ற தோற்றத்தை ஏற்படுத்த விரும்பினார். ஆகையால் மறுநாள் கோரக்பூரில் பேசும்போது “விவசாயிகள் கட்டில்களை எடுத்துச் சென்றால் அவர்களைத் திருடர்கள் என்கிறார்கள். ஆனால் விஜய் மல்யா மாதிரி ஒரு தொழிலதிபர் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் கடனைத் திருப்பித் தராமல் கம்பி நீட்டினால் அவரைக் கடன் தவறியவர் என்கிறார்கள்” என்று சொல்லி வைத்தார். இங்குதான் ராகுல் காந்தி தவறு செய்கிறார்.

     விஜய் மல்யா வங்கிக்கடன் வாங்கியதே குற்றமல்ல.  அதைப் பின்னர் முறையாக திருப்பிச் செலுத்தவில்லை என்பதால் அவர் கடன் தவறியவர் ஆனார். அதற்கான சட்ட நடவடிக்கை அவர்மீது இப்போது எடுக்கப் பட்டிருக்கிறது.  ஆனால் ருத்ராபுரில் கூட்டத்துக்கு வந்தவர்கள் கட்டிலைத் தூக்கி நகர்ந்தபோதே சட்டப்படி குற்றம் செய்தவர்கள். இது தெரியாமல் அல்லது தெரியாத மாதிரி இருப்பவர் காங்கிரஸ் கட்சியின் அடுத்த பிரதம மந்திரி வேட்பாளர்!


      ருத்ராபுர்  நிகழ்ச்சியைப் பற்றிப் பேசவேண்டும்  என்றால் ராகுல் காந்தி என்ன சொல்லி இருக்கவேண்டும்? “ருத்ராபுர் விவசாயிகளே, எனது கூட்டத்திற்கு வந்திருந்த உங்களில் சிலர் கூட்டத் திடலில் இருந்த கட்டில்களை வீட்டுக்கு எடுத்துச் சென்றீர்கள். உங்களுக்கு அப்படி ஒரு எண்ணம் ஏற்படுமாறு உங்களை எழ்மை நிலையிலேயே இதுநாள் வரை வைத்து ஆட்சி செய்த கட்சி காங்கிரஸ் கட்சியும்தான் என்பதை நினைத்தால் எனக்கு வெட்கமாக இருக்கிறது. உங்கள் தவற்றின் பெரும் பகுதிக்கான காரணமும் பொறுப்பும் உங்களைச் சேராது, காங்கிரஸ் கட்சியையே சேரும். சுதந்திரத்தில் இருந்து ஐம்பது வருஷத்துக்கும் மேலாக மத்தியில் ஆட்சியில் இருந்த கட்சி காங்கிரஸ் என்ற முறையில் இதை வருத்தத்தோடு ஒப்புக் கொள்கிறேன். ஒரு சாதாரணக் கட்டில் வாங்கும் அளவிற்குக் கூட சக்தியற்றவர்களாக உங்களை வைத்திருந்ததற்காக எங்கள் கட்சியின் சார்பில் மன்னிப்பு கேட்கிறேன். வரும் காலங்களில் உங்கள் பொருளாதார முன்னேற்றத்திற்காக எனது கட்சி தீவிரமாகச் செயல் படும்” என்று அவர் பேசியிருக்கலாம்.

      ராகுல்   காந்தி    இப்படிப்   பேசி   இருந்தால்   அதில் பொய் இருக்காது. பொதுமக்கள் செய்த தப்பை நியாயப் படுத்துவதாகவும் ஆகாது. மாறாக, அவர் பலரின் மனதைத் தொட்டிருக்கக் கூடும். அவரின் நம்பகத்தன்மையும் மேலும் வலுப்படும்.  ஏன், அது போன்ற பேச்சின் விளைவாக ஒருவராவது கட்டிலைத் திருப்பிக் கொடுக்க நினைத்தாலும் ஆச்சரியம் இல்லை.  ஆனால் அப்படியான வார்த்தைகளை உணர்ந்து பேசுவதற்கு காங்கிரஸ் கட்சியில் எந்தத் தலைவருக்கும் நேர்மை இருக்காது, பணிவும் துணிவும் கிடையாது. ஒரு காலத்தில் நேர்மையும் பணிவும் துணிவும் தழைத்து ஓங்கிய அக் கட்சியில் அந்தப் பண்புகள் மீண்டும் வளர்ந்து கட்சித் தலைமையை எட்டுவது நம் ஜனநாயகத்திற்கு அவசியம். அது நடக்கும் வரை கட்சியின் மானத்தைக் காப்பாற்ற ஏதோ ரீதியில் மல்யாவைத்தான் நம்ப வேண்டும்.

* * * * *

Copyright © R. Veera Raghavan 2016

7 comments:

  1. கிராமத்து மக்கள் சுவாதீனமாக எடுத்துச்சென்றார்கள்.

    ReplyDelete
  2. கட்டில்களை எடுத்துச் சென்றது ஒரு பக்கம். அதை விடவும் பெரிய பிரச்சினை காங்கிரஸ் கட்சியை இப்பொழுது காத்துக் கொண்டிருக்கிறது, அதாவது, அடுத்த கூட்டத்திவ மக்களை நிற்க வச்சியே பேசணுமா என்ன? அடுத்த கூட்டத்தினர் நாற்காலிகளைத் தூக்கிச் செல்ல மாட்டாங்கன்னு என்ன உறுதி?

    ReplyDelete
  3. Kurtam paarkin sutram Illai. Own partymen cannot be faulted. It's unwritten rule. Expecting moral preaching from a political party head is therefore asking for a moon.

    ReplyDelete
  4. This trivial matter need nothave been magnified to this extent.I am happy that poor people can sleep on a coir cot for some time hereafter.

    ReplyDelete
  5. At best RG is a joker. The present "Congress" party has connection whatsoever with the original Congress. It was split in 1969 first & lost its thin connection when Sonia took over. They are a party of rogues, thieves & anti-national villains

    ReplyDelete
  6. Please add the word "NO" before the word connection.

    ReplyDelete
  7. விஜய் மல்யா மாதிரி ஒரு தொழிலதிபர் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் கடனைத் திருப்பித் தராமல் கம்பி நீட்டினால் அவரைக் கடன் தவறியவர் என்கிறார்கள்” என்று சொல்லி வைத்தார். இங்குதான் ராகுல் காந்தி தவறு செய்கிறார்.

    விஜய் மல்யா வங்கிக்கடன் வாங்கியதே குற்றமல்ல. அதைப் பின்னர் முறையாக திருப்பிச் செலுத்தவில்லை என்பதால் அவர் கடன் தவறியவர் ஆனார். அதற்கான சட்ட நடவடிக்கை அவர்மீது இப்போது எடுக்கப் பட்டிருக்கிறது.

    what actions taken sir? the inefficient CBI & cENTRAL GOVT ALLOWED HIM TO FLEE THE COUNTRY AND HE IS HAPPILY STAYING IN LONDON POSH AREA. WAHT ACTION TAKEN AGAINST mODI, lalit ; SUSHMA &RAJE???.

    RAHUL AND MODI ARE ORE KUTTAYIL URIYA MATTAI.

    ReplyDelete