Saturday 9 January 2016

அம்புஜம் பாட்டி அலசுகிறாள் : பெற்ற மனமும் சுட்ட மகனும்


’அலி சகர்’ங்கற உன் பேரு காதுக்கு இனிமையா இருக்குடாப்பா. சிரியாவுல ‘ரக்கா’ங்கற ஊர்ல நீ தீவிரப் போராளியா இருக்கன்னு கேள்விப்பட்டேன். ஆனா உன் இருபது வயசுல அப்பாவியான உங்கம்மாவ பொது இடத்துல நிக்க வச்சு சுட்டுக் கொன்னயே, அந்தப் பாவமோ நிர்பந்தமோ யாருக்கும் வரவேண்டாம்.

உனக்கே இஷ்டமில்லாம மத்தவா சொல்லித்தான் நீ இந்தப் பாதகத்தைப் பண்ணினன்னும் நினைக்க முடியல.  அப்படின்னா நெஞ்சுல ஈரம் இருக்கற எவனும் அம்மாவச் சுட்ட உடனே அதே துப்பாக்கியால தன் பொட்டுலயே சுட்டிண்டிருப்பான்.  உன் விஷயத்துல அது நடந்திருந்தா அவள நினைச்சு இப்ப வருத்தப் படற உலகம் உன்னை நினைச்சுத்தான் கண்ணால அழுதுண்டு மனசால பெருமைப் பட்டிருக்கும்.  

கோபம் வந்தா யாரை வேணும்னாலும் அடி, உதை, குத்து. அதெல்லாம் எப்பவும் ரைட்டுங்கற அர்த்தத்துல சொல்லல. எதிராளி மேல குத்தம் இல்லேன்னாலும் அந்தச் செயலுக்கும் பல காரணங்களச் சொல்லி ‘பரவால்ல, கொஞ்சம் தப்புதான், ஆனாலும் மன்னிக்கலாம்’னு பரவலா பேசிக்கற அளவுக்கு சமூகமே மாறிண்டிருக்கு. அதுக்கெல்லாம் உனக்கும் மன்னிப்பு கிடைக்கலாம். ஆனாலும் உங்கம்மா பண்ணின காரியத்துக்கு அவ உயிரை எடுக்கறதுதான் நியாயம், அதுவும் பெத்த பையனே அதப் பண்றது உத்தமம்னு நினைக்கற அளவுக்கு எந்த தேசமும் மாறிருக்காது.

என்ன பண்ணிட்டா லீனா, அதான் உங்க அம்மா? உன்னைக் காப்பாத்தத்தாண்டா நினைச்சிருக்கா! அதாவது நீ உங்க நாட்டு போரளிகள் குழுவோட இருந்தா உனக்கு நல்லதுல்ல, நீயே ஜீவிச்சிருப்பயோ மாட்டயோ, அதுனால நீயும் அவளோட சேர்ந்து வந்தா ரண்டு பேருமா வேற தேசத்துக்குப் போய் உன்னைக் கரை ஏத்திடலாம்னுதான் உங்கம்மா உன்னைக் கூப்பிட்டிருக்கணும்.  தானா ஏற்பட்ட தாய்ப் பாசத்துக்கு இப்படி ஒரு தண்டனையா?

ஒரு பேச்சுக்கு சொல்றேன் - ஒரு வேளை உங்கம்மாக்கு குழந்தைகளே இல்லன்னா, தான் மட்டும் பல ஆபத்துகளத் தாண்டி உன் நாட்டுலேர்ந்து தப்பிச்சு ஓடிப் போகணும்கற எண்ணம் அவளுக்கு இவ்வளவு தூக்கலா வந்திருக்காது. இன்னொண்ணையும் சொல்றேன் – இப்ப உங்க நாட்டுலேர்ந்து தப்பிச்சுப் போறதுதான் நல்லதுன்னு ஓட்டம் பிடிக்கற உன் வயசுப் பையன்கள் அனேகமா அம்மாக்கள விட்டுட்டுத்தான் போயிண்டிருப்பா.   அப்பவும் அந்த அம்மாக்கள் பையனாவது பொழச்சுட்டானேன்னு கொஞ்சம் நிம்மதிய வச்சிண்டிருப்பா.

உன் கதை எப்படி இருந்தாலும், உங்கம்மாவோட இக்கட்டை நினைச்சா கண்ல ஜலம் வரதுடாப்பா. அவளுக்குத் தெரிஞ்சிருக்கும்: நீ வரேன்னு சொல்லி இருந்தாலும் சிரியாவை விட்டு தப்பிச்சுப் போறதே பலநாள் பேராபத்துதான் - அதுக்கும் முன்னால நீ அவளோட யோஜனைக்கு உடன்படாம அவளை காட்டிக் குடுத்து உங்க ஊர் முச்சந்திலயே அவ மரண தண்டனைய ஏத்துக்க வேண்டிருக்கும்னும் அவளுக்குப் புரிஞ்சிருக்கும். துளிக்கூட தன் நலம் இல்லாத பிள்ளைப் பாசத்துக்கு உங்க அம்மாவ உலகப் பிரதிநிதியாத்தான் நினைச்சுக்கணும்.
     
சரி, உங்கம்மாவப் பார்த்து துப்பாக்கிய நீட்டினயே, அப்ப மனசுக்குள்ள அவ என்ன நினைச்சிருப்பான்னு தெரியுமா? “என்னையே கொல்ற என் பிள்ளை நாசமாப் போக”ன்னு உன்னைத் திட்டிருப்பான்னு நீ நினைச்சா அது சரியா இருக்காது. “ஐயோ! இவனுக்கு ஒரு பிள்ளை பிறந்து அவனும் இருபது வயசுல என் பையனை சுட்டுக் கொன்னுடுவானோ கடவுளே!”ன்னு பதறிருப்பான்னு எனக்குத் தோண்றது.

* * * * *

Copyright © R. Veera Raghavan 2016


3 comments:

  1. தாயை சுட்டுக் கொன்றவன் மனிதனே அல்ல. அவன் எங்கள் மதத்தை சேர்ந்தவன், எங்கள் குரூப்பை சேர்ந்தவன் என யாருமே இப்போது கூறுவதில்லை. ஏன்? கூறினால் அவர்களைத் தான் உலகம் காறித் துப்பும்.

    ReplyDelete
  2. கட்டுரையின் கடைசி வரி நெஞ்சைப் பலமாகக் குத்துகிறது.

    காதலி கேட்டதால் தாயின் குடலைக் கொண்டுபோகும் இளைஞன் தவறி விழுந்தபோது அந்தக் குடல் "மகனே! உனக்கு அடிப்படலியே?" என்று கவலையுடன் கேட்ட கதை நினைவைத் தொடுகிறது.

    ReplyDelete
  3. Ambujam paatti romba nanna alasi manasu porukkama porumitta! Heartening to hear such stories in the name of religion. Are they using or abusing their religion!

    ReplyDelete