Friday 22 March 2024

கிருஷ்ணா, கிருஷ்ணா! மியூசிக் அகாடமிக்கு ஏனப்பா சோதனை!

  

-- ஆர். வி. ஆர்

 

      டி. எம். கிருஷ்ணா ஒரு மிகச் சிறந்த கர்நாடக சங்கீத வித்வானா? ஆம். சென்னை மியூசிக் அகாடமி அவருக்கு 2024-க்கான சங்கீத கலாநிதி பட்டம் அளிப்பதோடு  விஷயம் முடிகிறதா? இல்லை.

 

டி. எம். கிருஷ்ணாவின் பாட்டுக்கு எண்ணற்ற ரசிகர்கள் உண்டு. அவரது தடாலடிப் பேச்சாலும் எழுத்தாலும் அவரது பிரபல்யம் மேலும் அதிகரித்தது. பொதுவாக பிராமணர்கள் பற்றி, மற்ற சீனியர் வித்வான்கள் பற்றி, அரசியல் சார்ந்த விஷயங்கள் பற்றி, அவர் தாட்பூட்டென்று, கன்னாபின்னாவென்று,  கருத்துகள்  சொல்லியும்,  பெரியார் என்று அழைக்கப்படும் ஈ. வெ. ராமசாமியைப் போற்றியும் கூடுதலான கவனம் ஈர்த்தார். இதனால் பல கர்நாடக இசைக் கலைஞர்களுக்கு அவர்மீது வருத்தமும் கோபமும் உண்டு.

 

கர்நாடக சங்கீதம் பயில்பவர்கள், மேடைக் கச்சேரி செய்பவர்கள், அந்த இசையை ரசிப்பவர்கள் ஆகியோரில் பிராமணர்கள் தொன்றுதொட்டு அதிகம் இருக்கிறார்கள். டி. எம். கிருஷ்ணாவும் ஒரு பிராமணர். 

 

பொதுவாக பிராமணர்கள் அதிக தெய்வ நம்பிக்கை உடையவர்கள். ஹிந்து தெய்வங்கள் மீதான ஸ்தோத்திரங்கள் கற்று மனப்பாடம் செய்கிறவர்கள் – இப்போது அந்தச் சமூகத்துச் சிறுவர்களிடம் அந்த வழக்கம் குறைந்து வந்தாலும்.

 

ஹிந்து மதத்தை, ஹிந்து தெய்வங்களை, மிக இழிவாகப் பேசி, ராமருக்குச் செருப்பு மாலை அணிவித்த ஊர்வலத்தில் பிரதானமாக இருந்து, பிராமணர்களையும் கேவலம் செய்து வந்தவர் ஈ. வெ. ராமசாமி. ஆகையால் அவர்  மீது மனக் கசப்பு கொண்ட நிறைய ஹிந்துக்கள் உண்டு, அவர்களுள் நிறைய பிராமணர்கள் உண்டு. அத்தகைய பிராமணர்கள் – அதுவும் தெய்வத்தைப் புகழ்வது மிக முக்கிய அம்சமாக இருக்கும் கர்நாடக இசையைப் பயின்றவர்கள் – ஈ. வெ. ரா-வைச் சிலாகித்துப் பேசும் டி. எம். கிருஷ்ணாவை அந்தக் காரணத்தினாலும் மனதளவில் தள்ளி வைப்பார்கள். தெய்வ நம்பிக்கை உள்ள மற்ற இசைக் கலைஞர்களும் அப்படித்தான்.

 

தெய்வ நம்பிக்கை உள்ள ஹிந்துக்களுக்கு வாழ்வில் அது மிக முக்கியம். தெய்வத்தை வலிய இகழ்கிற ஒருவரை, ஈ. வெ. ரா-வைப் பெரிதும் புகழ்கிற ஒருவரை, அவர்கள் கச்சை கட்டி பதிலுக்கு எதிர்க்காமல் இருக்கலாம், ஆனால் அந்த நபரிடமிருந்து விலகி இருப்பார்கள், அவருடன் கூடிக் குலவ மாட்டார்கள். இப்படி விலகி நிற்கும் போக்கு படித்தவர்களிடம் அதிகம் இருக்கும். சரித்திரக் காரணங்களால் அநேக பிராமணர்கள் படித்தவர்களாக இருப்பார்கள். அதனால் அவர்கள் டி. எம். கிருஷ்ணா போன்ற பெரியார் அபிமானியிடமிருந்து – அவரே ஒரு பிராமணர் என்றாலும் –  கசப்புடன் விலகி இருக்க நினைப்பார்கள்.

 

பகுத்தறிவுத் தந்தை எனப்படும் ஈ. வெ. ரா - வைப் போற்றும் ஒரு புதிய பாடலை டி. எம். கிருஷ்ணா சென்ற வருடம் கர்நாடக சங்கீத பாணியில் பாடினார். அதன் வீடியோ இன்டர்நெட்டில் இருக்கிறது. அந்தப் பாடலை அறிமுகம் செய்து அந்த வீடியோவில் சில வார்த்தைகள் பேசுபவர், “பயன்படாத எதையும் பெரியார் திரும்பிக்கூட பார்க்க மாட்டார். அதில் இசை முதலிடம் பெறும்” – அதாவது,  பெரியாருக்கு இசை பிடிக்காது, ஏனென்றால் அவரைப் பொறுத்தவரை இசையினால் யாருக்கும் எதுவும் பிரயோஜனம் இல்லை – என்றும் கூறுகிறார். பெரியாரைப் போற்றும் டி. எம். கிருஷ்ணா, பெரியார் நிராகரித்த இசையிலேயே அவரைப் புகழ்ந்து பாடுகிறார். இது என்ன பகுத்தறிவோ?

 

பகுத்தறிவு விஷயத்தை விட, அடிப்படை மனித இயல்பு சம்பந்தப்பட்ட ஒரு விஷயம், டி. எம். கிருஷ்ணா விருதுக்கான எதிர்ப்பில் உள்ளது.  அதுதான் முக்கிய விஷயம்.  

 

மனதளவில் நான் மிகவும் கசந்த ஒருவரிடம் திறமைகள் இருந்தால், அவர் திறமையை நான் மறுக்க அவசியம் இல்லை. ஆனால் அந்த நபரின் திறமைக்காக அவரை நான் மனமுவந்து கொண்டாடத் தயங்குவேன், அவரைக் கொண்டாடும் ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற விரும்ப மாட்டேன். அதுவும் என் ஜென்மத்தில் நான் பணிந்து வணங்கும் தெய்வத்தைத் தூற்றிய ஈ. வெ. ரா என்ற மனிதரின் அபிமானியாக, அந்த மனிதரைப் போற்றுபவராக, அந்த மற்ற நபர் இருந்தால் நான் அந்தக் காரணத்திற்காகவும் அந்த நபரை நிச்சயம் கொண்டாட மாட்டேன். அவர் மீது எனக்குப் பொறாமை இல்லை. ஆனால் முடிந்தவரை என் மதிப்பை என் செயலால் நான் காப்பாற்றுவேன்.      

 

மேற்சொன்ன காரணத்தால், சங்கீத கலாநிதி விருது டி. எம். கிருஷ்ணாவுக்கு வழங்கப்படும் என்று சில தினங்கள் முன் மியூசிக் அகாடமி அறிவித்த உடன், கர்நாடக சங்கீத உலகைச் சேர்ந்தவர்கள், உபன்யாசம் மற்றும் ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்த்துபவர்கள், என்று சிலர் தங்கள் அதிருப்தியையும் எதிர்ப்பையும் தெரிவித்திருக்கிறார்கள். ரஞ்சனி-காயத்ரி, திருச்சூர் சகோதரர்கள், சித்திர வீணை ரவிகிரண், விசாகா ஹரி, துஷ்யந்த் ஸ்ரீதர், ஆகியோர் அந்த எதிர்ப்பாளர்கள். கடிதம் மற்றும் சமூக வலைத் தளம் மூலமாக, கவலை தோய்ந்த அவர்களின் உணர்வுகள் நாகரிகமாக வெளியாகி இருக்கிறது.   

 

அகாடமியின் தேர்வுக்கு வெளிப்படையாக எதிர்ப்புச் சொன்னவர்கள் போக, தங்கள் எதிர்ப்பைப் பகிரங்கமாக வெளிப்படுத்தாத கர்நாடக இசைக் கலைஞர்கள், அதுவும் வளரும் கலைஞர்கள், இருப்பார்கள். அவர்கள் என்ன நினைப்பார்கள்? ‘நமது எதிர்ப்பை வெளியில் சொன்னால், வருவது வரட்டும் என்று டி. எம். கிருஷ்ணாவுக்கே துணிச்சலாக சங்கீத கலாநிதி பட்டம் கொடுக்கும் மியூசிக் அகாடமி, வளர்ந்துவரும் நமக்கு வேண்டுமென்றே என்ன கெடுதல் செய்வார்களோ?’ என்று அவர்கள் கவலைப் படுவார்களே? அதனால் அவர்கள் மௌனம் காப்பார்கள். அதிருப்தி அடைந்த மற்ற பல முன்னணிக் கலைஞர்கள் கூட, சக்திவாய்ந்த அகாடமியைக் குறைசொல்ல சற்று யோசிக்கலாம். போகப் போகத் தெரியும்.

 

மியூசிக் அகாடமியின் இப்போதையத் தலைவர் என். முரளி. அவர் ‘ஹிந்து’ பத்திரிகை வெளியிடும் கம்பெனியில் ஒரு இயக்குனரும் கூட. ரஞ்சனி-காயத்ரி சகோதரிகள் அகாடமிக்கு வருத்தப்பட்டு எழுதிய எதிர்ப்புக் கடிதத்திற்கு அவர் எழுதிய பதிலில் கடுகடுப்பும் அதிகார தோரணையும் அதிகம் தெரிகிறது. பிரச்சனையின் தன்மை, அதன் அடிப்படை, அவருக்குப் புரிந்த மாதிரி இல்லை. அல்லது அதையெல்லாம் அவர் பொருட்படுத்தவில்லை.

 

என்னதான் ஒருவர் சிறந்த விளையாட்டு வீரராக இருந்தாலும், பதக்கங்கள் வென்றாலும், அவர் தேசியக் கொடியை அவமதித்து வந்தால் – அல்லது, ஒரு எதிர்க்கட்சித் தலைவர் பேசியது போல், இந்தியா-சைனா மோதலில்  இந்தியாவை சங்கடப் படுத்தி சைனா சந்தோஷப்படும் வகையில் பேசி வந்தால் – அவருக்கு மத்திய அரசு அர்ஜுனா விருதை வழங்காமல் இருப்பது நல்லது. தெய்வத்தைத் துதிக்கும் கர்நாடக இசை உலகில், ஹிந்து மதத்தை அனுதினமும் இழிவு செய்த ஒருவரைப் போற்றி வந்த டி. எம். கிருஷ்ணாவுக்கு – மேற்சொன்ன மற்ற காரணங்களுக்காகவும் – பாரம்பரியமான அகாடமி இயந்திர நோக்கில் ஒரு பெரிய கௌவரத்தை அளிக்காமல் இருக்கலாம். 

 

ஒருவேளை, தேசிய அரசியலை ஹிந்து பத்திரிகை பொறுப்பில்லாமல் காண்பிப்பது போல், மியூசிக் அகாடமியும் இனி அப்படி நடத்தப் படுமா – தனக்குள்ள சட்ட உரிமைகளை மட்டும் உயர்த்திக் காட்டி?  திமுக-வின் கனிமொழியும்  தமிழக மார்க்சிஸ்ட் கட்சியும் கூட, மியூசிக் அகாடமியின் தேர்வைப் பாராட்டி எதிர்ப்பாளர்களுக்குக் கண்டனம் தெரிவித்து விட்டார்களே?

 

கிருஷ்ணா, கிருஷ்ணா! உன்னை வேண்டிக் கொள்வதா கடிந்து கொள்வதா?

* * * * *

 Author: R. Veera Raghavan, Advocate, Chennai

Tuesday 19 March 2024

திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக – இவை சொல்வது ஒன்றே!


-- ஆர். வி. ஆர்

 

திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக இந்தக் கட்சிகள்  ஒரு முக்கியச் செய்தியை அவரவர் பாணியில் சொல்கின்றன, கவனித்தீர்களா? சர்ரென்று பார்க்கலாம்.

 

அண்ணாத்துரை தனது தலைமைப் பண்பினால் பலரையும் ஈர்த்து திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவினார், தமிழகத்தில் திமுக-வின் ஆட்சியை அமைத்தார். அவர் அகால மரணம் அடைந்த பின் திமுக-வின் முதல்வரான மு. கருணாநிதி தனது சாதுர்யத்தால், உழைப்பால் கட்சிக்குள் பெரிதும் உயர்ந்தார்.  

 

49 வருடங்கள் திமுக-வில் கோலோச்சினார் கருணாநிதி. அப்போது, சில கட்சிக்காரர்கள் இரண்டாம் கட்டத் தலைவர்களாக வளர்ந்து பெருகத் துணை நின்றார். அந்தத் தலைவர்கள் கருணாநிதியின் குறிப்பறிந்து அவரைப் பாராட்டிச் சீராட்டித் தங்களையும் பக்கவாட்டில் கவனித்துச் செழித்தார்கள்.

 

அருமை மகன் ஸ்டாலினையும் செல்ல மகள் கனிமொழியையும் கட்சிக்குள் முன்னிலைப் படுத்தினார் தந்தை கருணாநிதி. திமுக-வின் இரண்டாம் கட்டத் தலைவர்களும் ஒதுங்கி நின்று அந்த வாரிசுத் தலைவர்களை ஆதரித்தார்கள். பிரதிபலனாக, தங்கள் தங்கள் வாரிசுகளும் கட்சிக்குள் வளர வழி செய்து கொண்டார்கள். கழகம் ஒரு குடும்பம்.

 

கருணாநிதியின் மறைவுக்குப் பின், தேர்தலில் மறுபடியும் திமுக ஜெயித்து ஸ்டாலின் இப்போது தமிழக முதல்வராக இருக்கிறார். கட்சிக்குள் இது ஸ்டாலினை மகிழ்விக்கும் காலம் என்பதால், திமுக–வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் அவரது மகன் உதயநிதியை வணங்கிப் பணிந்து நிற்கிறார்கள். அவரும் பல்லக்கில் அமர்ந்து தடாலடி அரசியல் செய்கிறார்.


நடிகர் எம். ஜி. ஆர் திமுக-வில் இருக்கும்போதே சாதாரண மக்களின் நெஞ்சில் இடம் பிடித்தவர். திமுக-வில் இருந்து அவர் வெளியேற்றப் பட்டவுடன் அதிமுக-வை அவர் வளர்த்துத் தன் ஆயுட்காலம் வரை திமுக-வை வீழ்த்தி வைத்திருந்தார். அவரால் கட்சியில் அறிமுகம் செய்து ஊக்கம் தரப்பட்டவர் நடிகை ஜெயலலிதா. எம். ஜி. அர் மறைந்த பின் தனது உறுதியால், போராட்டக் குணத்தால், கட்சியின் தலைமைப் பொறுப்பைப் பிடித்து முதல்வர் ஆனவர் ஜெயலலிதா.  

 

எம். ஜி. ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு மகன், மகள் என்ற குடும்ப வாரிசுகள் இல்லை. கட்சியில் எம். ஜி. ஆரைப் பக்தியுடன் போற்றியவர்கள், ஜெயலலிதாவை பயத்துடன் வணங்கியவர்கள், அங்கு இரண்டாம் கட்டத் தலைவர்களாக இருந்தார்கள். கருணாநிதியைப் போலவே, அந்த இரு தலைவர்களும் கட்சிக்குள் பெரும் திறமைகளை ஈர்த்தவர்களோ ஊக்குவித்தவர்களோ அல்ல.

 

இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாகப் பதினேழு வருடங்கள் இருந்தார் ஜவஹர்லால் நேரு. அவரது மகள் இந்திரா காந்தி.  நேரு இருந்தவரை அவர் இந்திரா காந்தியைக் கட்சிக்குள் கனகாரியமாகத் தூக்கி விடவில்லை. அன்றைய காங்கிரஸ் தலைவர்களும் அப்படியான செயலை விரும்பி இருக்க மாட்டார்கள். நேரு மறைந்த பின் லால் பகதூர் சாஸ்திரியைப் பிரதமர் ஆக்கியது காங்கிரஸ். அவருக்குப் பின் அக்கட்சி இந்திரா காந்தியைப் பிரதமராக அமர்த்தியது.

 

இந்திரா காந்தி அமல் செய்த நெருக்கடி நிலைக் காலத்தில் அவர் மகன் சஞ்சய் காந்தி ஆட்டம் போட்டார். பிரதமர் இந்திரா அதை அனுமதித்தார்.  சஞ்சய் காந்தியும் இந்திராவும் அடுத்தடுத்து மரணித்த பின், அரசியல் அனுபவம் குறைந்த இந்திராவின் இன்னொரு மகன் ராஜீவ் காந்தியைக் காங்கிரஸ் கட்சி பிரதமர் ஆக்கியது. 


ராஜீவ் காந்தியின் காலத்திற்குப் பின், ஒரு இடைவெளி விட்டு அவர் மனைவி சோனியா காந்தி கட்சியில் தலை தூக்கினார். இன்றும் கட்சியில் அவர் அதிகார மாதா. ராஜீவ்-சோனியாவின் மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி, காங்கிரஸின் இளவரசர், இளவரசி என்று பல வருடங்களாகக் கட்சியில் மிதக்கிறார்கள். அந்த இளவரசர் ஒரு தத்துப்பித்து. அவர்தான் இப்போது கட்சிக்குள் ராஜ தர்பார் நடத்துகிறார்.

 

இந்த மூன்று கட்சிகளுக்கு மாறாக பாஜக செயல்படுகிறது. பாஜக-வில் வாரிசுகளோ தனிப்பட்ட முறையில் தலைவருக்கு வேண்டியவர்களோ வளர்க்கப் படுவதில்லை,  தூக்கி நிறுத்தப் படுவதில்லை.

 

இந்திரா காந்தி, கருணாநிதி, எம். ஜி. ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர், தலைவரின் வாரிசு என்ற காரணத்தால் தலைவரே மேலே இழுத்துவிட்டுக் கட்சிக்குள் தலை எடுத்தவர்கள் அல்ல. ஆனால் இந்திரா காந்தியும் கருணாநிதியும் கட்சிக்குள் வாரிசுகளை அனுமதித்து உயர்த்திவிட்டார்கள்.  

 

குடும்ப வாரிசு இல்லாத ஜெயலலிதா, தோழி சசிகலாவைத் தனது ‘உடன்பிறவா சகோதரி’ என்று அறிவித்து, சசிகலாவின் தகுதிக்கு மீறி அவருக்குக் கட்சிக்குள் செல்வாக்கு சேரக் காரணமாக இருந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுக தலைவர்கள் சசிகலாவின் காலில் விழுந்து அடைக்கலமும் ஆதாயமும் தேடினார்கள்.  ஊழல் குற்றத்திற்காக சசிகலா ஜெயிலுக்குப் போனார் என்பதை ஒரு சமயோசித சாக்காக வைத்து, அவரைக் கட்சியில் இருந்து வெளியேற்றினார் அதிமுக-வின் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் அவரே தனக்கான மக்கள் செல்வாக்கு இல்லாமல் தடுமாறுகிறார்.

 

அண்ணாத்துரை-கருணாநிதி காலத்து திமுக-வை விட, இப்போதைய திமுக-வின் வலிமை குறைவு. எம்.ஜி.ஆர்-ஜெயலலிதாவின் அதிமுக-வை விட இந்நாள் அதிமுக-வின் சக்தி மிகக் குறைவு. 

 

இந்திரா காந்தி காலத்து தமிழக காங்கிரஸ், திமுக-வால் பலமிழந்து  நின்றது. இன்றைய தமிழக காங்கிரஸ் இன்னும் சோப்ளாங்கியாய் நிற்கிறது. தமிழக பாஜக மட்டும் கடந்த மூன்று வருடங்களில் அதிவேகமாக வளர்கிறது. எந்த அளவுக்கு? திமுக-வின் துரைமுருகனே, "தமிழகத்தில் பாஜக பிசாசு மாதிரி வளர்கிறது” என்று பயத்தில் சொல்லும் அளவுக்கு.

 

பிற மாநிலங்களிலும் தமிழகத்திலும் பாஜக வளர்ந்து கொண்டே இருக்கிறது என்றால், என்ன காரணம்? நேர்மை, திறமை, துணிவு, அர்ப்பணிப்பு, ஆகிய பண்பு கொண்டவர்களைத் தன்னிடத்தே ஈர்க்கிறது அந்தக் கட்சி.

 

தனது மகன் மகள் என்ற பாசத்தால், அல்லது ரகசியப் பலன்களுக்காகத் தனக்கு வேண்டியவர் என்பதால், ஒரு அரசியல் கட்சித் தலைவர் கட்சிக்குள் ஒருவரைத் தாங்கி முன்நிறுத்தினால், கட்சியின் அடுத்த கட்டத் தலைவர்களும் அதை ஏற்றுக் கொண்டால், என்ன நடக்கும்? ஒன்று, கட்சிக்குள் ஏற்கனவே இருக்கும் திறமை அடங்கி முடங்கித் தன் இடத்தைப் பாதுகாக்கும். இரண்டு, நேர்மையான, திறமையான, செயல்திறன் மிக்க வெளி மனிதர்கள் அந்தக் கட்சிக்குள் வரத் தயங்குவார்கள். ஏனென்றால் அந்த மனிதர்கள் தலைவருக்கு வேண்டியவர்களிடம் பணிந்து நின்று தங்கள் சுய மரியாதையை இழக்க விரும்பமாட்டார்கள், சிறுமைப்பட கூச்சப் படுவார்கள்.

 

வாரிசுகள், வேண்டியவர்கள் என்ற காரணத்தினால் ஒரு கட்சியில் திறமையற்ற சிலர் முக்கியத்துவம் பெறுவது ஒரு தீமையின் அறிகுறி. அவர்கள் கட்சிக்குள் முன்னிலைப் படுவதுதான் கட்சித் தலைவருக்கே அதி முக்கியம் என்றால், மக்கள் நலன் அந்தக் கட்சிக்கு இரண்டாம் பட்சமாகத்தான் இருக்கும்.  அந்தக் கட்சியின் ஆட்சியில் கண்துடைப்புத் திட்டங்கள் மட்டும் கோலாகலமாக நடக்கும். பார்க்கிறோமே?

 

திமுக, அதிமுக, இந்திரா தலைமையிலான காங்கிரஸ் ஆகிய கட்சிகள், செல்வாக்கான பெரும் தலைவர்களை முன்பு கொண்டிருந்தாலும், அந்தத் தலைவர்கள் நேர்மையும் திறமையும் கொண்ட இளைஞர்களைக் கட்சிக்கு ஈர்க்கவில்லை, அத்தகையவர்கள் புதிய தலைவர்களாகக் கட்சிக்குள் வளர வழி செய்யவில்லை. ஆனால் பாஜக அந்த உன்னதக் காரியத்தைத் தொடர்ந்து செய்து வருகிறது.


இன்னொரு பக்கத்தில், சாதாரண இந்திய மக்களிடம் உள்ள ஒரு நியாய-நேர்மை உணர்வு நமக்கு வரப்பிரசாதம். ராமாயணம், மஹாபாரதம் ஆகிய இதிகாசங்கள் பல நூற்றாண்டுகளாக நம் மக்களின் ரத்தத்தில் கலந்த பண்பின் மீதி மிச்சம் அது. அதை வைத்துத் தனது நேர்மையால், திறமையால், உழைப்பால், சேவை மனப்பான்மையால், சாதுர்யத்தினால், சாதாரண மக்களை ஈர்க்க முடிகிறது பாஜக-வின் நரேந்திர மோடியால். அதோடு நாட்டின் தீய அரசியல் சக்திகளின் வலுவைக் குறைக்க முடிகிறது அவரால். 

 

மோடியைப் போன்ற ஒரு தலைவர்தான் அண்ணாமலை மாதிரியான ஒரு அற்புதமான இளம் தலைவரை தமிழகத்திற்காக ஈர்க்க முடிகிறது. வாரிசு மற்றும் வேண்டியவர்கள் வளரும் ஒரு கட்சியால் அண்ணாமலை போன்ற ஒரு தலைவரைக் கவர முடியாது. அண்ணாமலையும் அவர் பங்குக்குத் துடிப்பான இளைஞர்களை பாஜக-வுக்கு ஈர்ப்பார். இது ஒரு தொடர் நன்மையாக அமையக் கூடியது. பெரிய விஷயமல்லவா இது?

 

திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக ஆகிய நான்கு கட்சிகளும் சேர்ந்து, இந்த ஒரு செய்தியைச் சொல்கின்றன என்பது தெரிகிறது. அதாவது, ஒரு கட்சி எப்படி நடத்தப் பட்டால், ஒரு கட்சியின் தலைவர் எப்படிச் செயல்பட்டால் – வாரிசுகள், வேண்டியவர்கள் என்ற சுயநல விருப்பு வெறுப்பு இல்லாமல் அவர் கட்சி நடத்தினால் – மக்கள் நலன் அந்தக் கட்சியின் ஒரே குறிக்கோளாக இருக்கும், அந்தக் கட்சியின் ஆட்சியில்  பொதுமக்கள் அதிக நன்மைகள் பெறுவார்கள், அரசாங்க கஜானாவும் நலமாக இருக்கும், என்பதை இப்படியும் அப்படியுமாகச் சொல்கின்றன இந்த நாலு கட்சிகள். சரிதானே?  

 

* * * * *

 

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

Sunday 10 March 2024

‘மலேரியா டெங்கு மாதிரி போதைப் பொருளை ஒழிக்க வேண்டும்’ – உதயநிதி இப்படிப் பேசட்டுமே!

 

-- ஆர். வி. ஆர்

 

ஜாபர் சாதிக் என்பவன் திமுக-வின் முக்கிய ஆள். அவன் பெரிய அளவில் போதைப் பொருட்களை வெளிநாடுகளுக்குக் கடத்திய குற்றச்சாட்டில் இப்போது கைதாகி இருக்கிறான். அவனைக் கைது செய்தது, மத்திய அரசின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு. 


ஜாபர் சாதிக், போதைப் பொருள், திமுக பற்றி எல்லாம் நன்கு புரிந்துகொள்ள, தமிழக அமைச்சர் உதயநிதியின் ‘சனாதன ஒழிப்பு’ப் பேச்சில் இருந்து ஆரம்பிப்பது  நல்லது.  


ஆறு மாதங்கள் முன்பு அமைச்சர் உதயநிதி பிதற்றிய வார்த்தைகள் நாடு முழுவதும் பிரசித்தம். "மலேரியாடெங்கு, கொரோனா மாதிரி முற்றிலும் ஒழிக்கப் படவேண்டியது சனாதனம்" என்று எதையோ அரைகுறையாகப் புரிந்துகொண்டு தனது சொற்களின் விளைவும் தெரியாமல் அவர் மேடை ஏறிப் பேசினார். 


சனாதன தர்மம் என்பது என்ன? வாழ்வில் நாம் ஏற்கத் தக்க நல்லெண்ணங்களும் பின்பற்றத் தகுந்த நன்னெறிகளும் சனாதன தர்மம் என்ற பெயரோடு ஒரு வாழ்க்கை முறையாக ஹிந்து  சமூகத்தில் பல நூற்றாண்டுகளாகக் கருதப்படுகின்றன. அவை எல்லாவற்றையும் இந்தக் காலத்தில் நாமும் நமது அரசாங்கமும் முழுதாகப் பின்பற்றுகிறோமா என்றால் இல்லை. மதிக்கத் தக்க அளவில் நாம் அவற்றை வைத்திருக்கிறோம் – அதுவும் அது பற்றிப் படித்து அறிந்திருக்கும் சிலர் அப்படி வைத்திருக்கிறார்கள். சில சில அனுசரிப்புகள் உண்டு. சட்டத்தில் அவை ஏதும் கட்டாயம் இல்லை.

 

இன்னொரு பக்கத்துக்கு வருவோம்: சட்டம் எதிர்க்கின்ற, அரசு தீவிரமாகக் கட்டுப்படுத்த வேண்டிய, இக்காலத்துப் பெரும் தீமை ஒன்று நம் சமூகத்தில் இருக்கிறது. அதாவது, நமது இளைஞர்கள் மத்தியில், போதைப் பொருள் நுகர்தல் பரவி இருக்கிறது, வளர்ந்து வருகிறது. இளைஞர்களின் சித்தத்தை, அவர்களின் எதிர்காலத்தை, நாசம் செய்யும் அந்தத் தீய பழக்கத்திற்குத் தீனி  போட்டு அவர்களைப் பாழாக்குபவர்கள் போதைப் பொருள் உற்பத்தியாளர்கள், கடத்தல்காரர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள்.  அப்படியான ஒரு விஷமி, திமுக-வின் முக்கியஸ்தரான ஜாபர் சாதிக். கட்சியின் தலைமைக் குடும்பத்திடமும் அவன் நெருக்கம் காட்டியவன்.  

 

சென்ற பிப்ரவரி மாத நடுவில் ஜாபர் சாதிக்கின் மூன்று தமிழகக் கையாட்கள், டெல்லியில் ஒரு குடோன் வைத்து செயல்பட்டு ரசாயன போதைப் பொருட்கள் வைத்திருந்தபோது அங்கு கைதானார்கள். அவர்களை விசாரித்ததில் ஜாபர் சாதிக்தான் அவர்களுக்கு முதலாளி, அவன் ஒரு சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரன் என்று வெளி உலகிற்குத் தெரிந்தது. அந்த சமயம் ஜாபர் சாதிக் திமுக-வில் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணைப் பொறுப்பாளராக இருந்தான். அவனது கையாட்கள் டெல்லியில் கைதானவுடன் அவன் தலை மறைவானான். 


சில நாட்கள் கழித்து,  பிப். 25-ம் தேதியன்று, திமுக-வின் பொதுச் செயலர் துரைமுருகன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலும் இருந்து ஜாபர் சாதிக் டிஸ்மிஸ் செய்யப்படுவதாக அறிக்கை கொடுத்தார். தற்போது மார்ச் 9-ம் தேதி ஜாபர் சாதிக் டெல்லியில் கைதாகி இருக்கிறான்.

 

ஜாபர் சாதிக்கைத் திமுக-விலிருந்து நிரந்தரமாக நீக்கி இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. இன்றுவரை அவனது படுபாதகச் செயலைக் கண்டித்து முதல்வர் மு. க. ஸ்டாலினோ அமைச்சர் உதயநிதி ஸ்டாலினோ ஒரு வார்த்தை பேசவில்லை. ஏன்? அப்படி அவர்கள் கண்டித்தால், திமுக-வின் முக்கியத் தலைவர்களைப் பற்றி ஜாபர் சாதிக் அதிகம் பேசிவிடுவான், அது நல்லதல்ல என்பதாலா?

 

ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் விவகாரம் அம்பலம் ஆகும் வரை, அவன் திமுக-வின் முக்கியப் புள்ளியாக இருந்தவன். உதயநிதியின் மனைவி கிருத்திகா இயக்கிய ‘மங்கை’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக். அப்படி என்றால், ஒண்ணும் ஒண்ணும் ரண்டு என்று நமக்குப் பல கணக்குகள் டக்கென்று புரியும். 


சினிமா, ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறை, குறிப்பாக ஒரு சொகுசு ஹோட்டல், என்று ஜாபர் சாதிக் நிறைய முதலீடுகள் செய்திருக்கிறான். அதற்கும் போதைப் பொருள் தொழிலில் அவன் சம்பாதித்த பணத்திற்குமான தொடர்பு ஆராயப் படும் என்று  மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி, ஜாபரின் கைதுக்குப் பிறகு தெரிவிக்கிறார். மேலும் சில அதிர்ச்சி விவரங்கள் விசாரணையில் தெரிய வரலாம்.    

 

கடந்த மூன்று வருட காலமாக ஜாபர் சாதிக் மூலம் இதுவரை 45 முறை ஆஸ்திரேலியா, நியூஜிலாந்து, மலேசியா என்று வெளிநாடுகளுக்கு சுமார் 3,500 கிலோ எடையுள்ள போதைப் பொருள் ஏற்றுமதி ஆகி இருக்கிறது, அதன் மதிப்பு சுமார் 2,000 கோடி ரூபாய் என்று செய்திகள் வந்திருக்கின்றன. இதன் அடிப்படையில், ஜாபர் சாதிக்கின் பெயரைக் குறிப்பிடாமல், போதைப் பொருளுக்கு மட்டும் எதிராக  ‘மலேரியா டெங்கு மாதிரி போதைப் பொருட்கள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்’ என்றாவது உதயநிதி பேசுவாரா? மாட்டார். அப்படிப் பேசினால் அது ஜாபர் சாதிக்குக்கு எதிராகப் பேசுவதாக ஜாபர் சாதிக்கே நினைத்துவிட்டால்? அதன் எதிரொலியாக ஜாபர் சாதிக் ஏதாவது பேசிவிட்டால்?  திமுக-வில் செந்தில் பாலாஜி, ஜாபர் சாதிக் போன்றவர்கள் ஓரளவு சமமாக நடத்தப் படவேண்டுமே? அதுதானே கட்சிக்குள் எல்லோருக்கும் நல்லது?  

 

ஜாபர் சாதிக் இந்தியாவில், அதுவும் தமிழகத்தில், போதைப் பொருள் சப்ளை செய்தானா, எங்கு, எவ்வளவு என்ற விவரங்கள் இனிமேல்தான் தெரியும். அவன் ஏற்றுமதிக் கடத்தல் மட்டும்தான் செய்தான் என்றாலும், அவன் இந்தியாவுக்கும் ஆபத்தானவன். எந்தப் பாம்பு, எங்கே யாரைக் கொத்துமோ? நம் வீட்டுப் பையன் ஒருவன் அடிக்கடி அடுத்த வீடுகளுக்கு மட்டும் போய் திருடிக் கொண்டிருந்தால் நாம் மெத்தனமாக இருக்க முடியாதே? நம் பேரை அடுத்த வீட்டிலும் கெடுக்கும் அவனை இன்னும் ஒரு போடு போடுவோமே?

 

ஜாபர் சாதிக் போதைப் பொருள் விற்பனையில்  செய்ததற்கும், திமுக நெடுங்காலமாக அரசியலில் செய்து வருவதற்கும் ஒரு ஒற்றுமை உண்டு. சத்துணவு மற்றும் தேங்காய்ப் பொடி பொட்டலங்களை ஏற்றுமதி செய்யும் போர்வையில் அந்த உணவுப் பொருட்களில் ரசாயன போதைப் பொருளைக் கலந்துவைத்து, உண்மையில் போதைப் பொருளைத்தான் அவன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி  செய்தான் – அதனால் கோடிகள் சம்பாதித்தான்.

 

திமுக  நெடுங்காலமாக என்ன செய்கிறது? தமிழ் என்ற அமிர்தத்தில் சுயநல அரசியல் ஆதாயம் என்ற நச்சைக் கலந்து, “நாங்கள் அமிர்தம் வழங்குகிறோம்” என்று அதிகளவில் தொண்டர்களையும் சாதாரண மக்களையும் நம்பவைத்து அவர்களின் இயற்கையான மொழிப் பற்று என்பதை ஒரு போதை உணர்வாக மாற்றி அவர்களில் பலரைச் சித்தம் தடுமாற வைத்தது திமுக.  அதனால் திமுக தலைவர்கள் சிலர் ஓட்டுகளிலும் மற்றதிலும் கோடி கோடி நன்மைகள் அடைந்தனர்.

 

ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் வியாபாரத் தொடர்புகள் இப்போது வெளிவந்து அவன் யார், எத்தகையவன், என்று ஊருக்குத் தெரிகிறது. அது கோர்ட்டிலும் நிரூபணம் ஆகவேண்டும். அதே போல், திமுக-வின் சுயநலத்தை மறைக்க உதவும் காரண காரியமான தமிழ்ப் பற்றும் அக்கட்சியின் ஏமாற்று வேலைகளும் அம்பலமாகித் தமிழகம் சித்தம் தெளியும் நாள் விரைவில் வரவேண்டும். அது தேர்தலிலும் நிரூபணம் ஆகவேண்டும். ஒரு நாட்டில் எல்லாவித போதை சமாச்சாரங்களும் முற்றிலும் ஒழிவது அந்த நாட்டுக்கு, அதன் இளைஞர்களுக்கு, அதன் எதிர்காலத்துக்கு,  நல்லதுதானே?

 

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

 


Sunday 3 March 2024

திருச்சிப் பாட்டியும் திராவிட ஆட்சியும்

 

          -- ஆர். வி. ஆர்

  

போன வாரம் திருச்சி அழைத்ததால் சென்னையிலிருந்து ஒரு நாள் அங்கு போய் வந்தேன் – ஒரு உறவினரைப் பார்க்க.

 

சென்ற நூற்றாண்டு அறுபதுகளின் கடைசியில், எனது ஒன்பதாவது வகுப்பின் பெரிய லீவுக்காக அம்புஜம் பாட்டி வீட்டில் கொட்டமடிக்கத் திருச்சி போயிருந்தேன். அவர் எனது அம்மாவின் அம்மா.  அவர் வீட்டில் அப்போது சி. ஏ படிப்பு, காலேஜ், ஸ்கூல் என்று படித்துக் கொண்டிருந்த என் மூன்று சித்திகள் மற்றும் ஒரு மாமா, என்னுடன் தாயக்கட்டை ஆடிய என் பாட்டியின் மாமியார், அடுத்த சந்தில் வசித்த என் பாட்டியின் அக்கா, அவரின் பெண்களான எனது மற்ற சித்திகள், எல்லோரும் என் அன்பு விசிறிகள். பொறுப்பும் தலைமைக் குணங்களும் மிக்க என் பாட்டி, என்னிடம் கருணை கலந்த கறார் முகம் காட்டினார்.  

 

திருச்சி வடக்கு ஆண்டார் வீதியில் உள்ள பாண்டியன் பிள்ளை சந்தில் இருந்தது என் பாட்டி வீடு.  இன்னும் சில சந்துகள் அந்த வீதியில் உண்டு. வீதியின் ஒரு பக்கத்துச் சந்துகளுக்கு அநேகமாக உள்புறத்தில் இணைப்புச் சந்துகள் உண்டு. எல்லா ஊர்களிலும், அதுவும் மையப் பகுதிகளில், அப்படித்தானே இருக்கும்?  

 

நான் மதுரையில் படிக்காமல் டிமிக்கி கொடுக்கிறேன் என்று சில வருடங்களாகவே சரியாகக் கணித்திருந்தார் என் திருச்சிப் பாட்டி. லீவுக்கு வந்த என்னைப் பிடித்துவைத்து, அந்த ஊர்ப் பள்ளியில் பத்தாம் கிளாஸ், எஸ். எஸ். எல். சி, என்று இரண்டு வருடங்கள் தனது தினசரி மேற்பார்வையில் படிக்கவைத்தார் அவர். 


நான் திருச்சிப் பள்ளியில் சேர்ந்தபோது கணக்கில் புலி, கண்டிப்பில் சிம்மம், என்று அந்த ஸ்கூல் நிர்வாகத்தையும் அதில் வாத்தியார் பொறுப்பையும் பலகாலமாய் ஏற்றிருந்தவர் நடராஜ ஐயர்.  எளிமையான வெள்ளை உடை, பழமையான சைக்கிள், அவரது வெளி அடையாளம். பத்தாம் வகுப்பில் எனது முதல் பீரியட் தொடங்கும் முன்னரே அவர் என் வகுப்பறைக்குள் வந்து, அன்றைய கணிதப் பாடக் குறிகளைக் கரும்பலகையில் எழுதிக் காத்திருந்து மாணவர்கள் நுழைந்து அமர்ந்த உடனே பாடம் ஆரம்பித்தவர். அவரும் பிற ஜாம்பவான் ஆசிரியர்களும் உன்னதம் சேர்த்த ஈ. ஆர். ஹைஸ்கூல் அது. என்னையும் படிப்பில் தேற்றித் தன்னை நிரூபித்த ஸ்கூல் அது!


ஸ்கூல் படிப்பிற்குப் பின் பலமுறை திருச்சி போயிருக்கிறேன். போன வாரம் சென்றபோதுவடக்கு ஆண்டார் வீதியில் இன்னொரு சந்தில் வசிக்கும் என் ஸ்கூல் சினேகிதன், மற்ற இடங்களில் இருக்கும் சில ஸ்கூல் சினேகிதர்கள் என்று ஒவ்வொருவராகப் பார்த்துவர சில திருச்சிப் பகுதிகளில் அலைந்தேன்.   

 

வடக்கு ஆண்டார் வீதியில் நடந்தபோது சிறுவனானேன். அதில் முதலியார் சந்தின் பெயரை வலது சுவற்றில் பார்த்ததும் உள்ளே சுகித்தது. நேரே செல்லவேண்டிய நான், முதலியார் சந்தின் உள்ளே நுழைந்து போய் இடப்புறம் திரும்பிப் பின் வலப்புறம் சென்று மறுபடியும் இடப்புறம் திரும்பிப் பாட்டி வீட்டுப் பாண்டியன்  பிள்ளை சந்தில் கால் வைத்தேன். பாட்டியின் வீடு இப்போது வெளி நபருக்குக் கைமாறி இருந்தது. அந்த வீட்டின் முன் நின்றுவிட்டு, சிறிது ஒடித்து நேராகப் பாண்டியன் பிள்ளை சந்திலேயே  நகர்ந்து, திரும்பித் திரும்பி, பந்தடிமால் சந்து வழியாக மீண்டும் வடக்கு ஆண்டார் வீதியில் கலந்தேன். சில அடிகள் முன்னேறி புதுப்படிச் சந்தில் புகுந்து என் சினேகிதனைப் பார்த்தேன். போகிற வழியில் சில பழக்கமான சந்துகளில் வேண்டுமென்றே நான் சுற்றிய சுற்று, சிறு பிராயத்தில் ஜயண்ட் வீலில் சுற்றியது போல் சிலிர்த்தது.  

 

திருச்சியில் நான் தங்கி இருந்த தென்னூர்ப் பகுதியும் சரி, வடக்கு ஆண்டார் வீதியிலும் பிற இடங்களிலும் நான் நடந்த பகுதிகளும் சரி, என் பாட்டி காலத்திலிருந்து மாறாத சில காட்சிகள் கொண்டவை. அவை, சாலை ஓரங்களிலும் சில தெருக்களின் குறுக்கிலும் ஓடும் திறந்தநிலைச் சாக்கடைகள். வீடுகளின் சமையலறை, குளியலறையிலிருந்து வெளிவரும் கழிவு நீர், மற்ற கழிவு நீர் என்று அனைத்தையும் தாங்கி வரும் ஜீவ சாக்கடைகள்  அவை.  

 

ஐம்பத்து ஐந்து ஆண்டுகளாகத் திராவிடக் கட்சிகள் தமிழகத்தை, அதன் நகராட்சிகளை, ஆளுகின்றன. ஆனாலும் முக்கிய நகரான திருச்சியின் பழைய பிரதான பகுதிகளில் கூடப் பாதாளச் சாக்கடைகளை அமைத்து, அவற்றோடு எல்லா வீடுகளுக்கும் இணைப்பைச் செய்து, அவற்றை முறையாகப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்து, திறந்த சாக்கடைகளையும் அடையாளம் தெரியாமல் நிரந்தரமாக  மூடவில்லை என்றால் என்ன அர்த்தம்? திராவிடக் கட்சிகளின் ஆட்சி மாமூலாக நடக்கிறது என்று அர்த்தம்.

 

முப்பது வருடங்களுக்கு மேலாகத் திருச்சியில் பாதாள சாக்கடைத் திட்ட வேலைகள் நடக்கின்றன, நடக்காமலும் இருக்கின்றன. பாதி அல்லது முக்கால்வாசி இடங்களில் தெருவை வெட்டி ஆழத்தில் பாதாள சாக்கடைக் குழாய்கள்  அமைக்கப்பட்டு விட்டன.  அந்தக் குழிகளையும் மூடி ஆயிற்று.  ஆனால் நிறைய வீடுகளிலிருந்து பாதாள சாக்கடைக் குழாய்களுக்கு இன்னும் இணைப்பு ஆகாமல் குளியலறை மற்றும் சமையலறை, கழிவறை, இவற்றில் எதற்கும் இணைப்பு ஆகாமால் அல்லது கழிவறைக்கு மட்டும் இணைப்பு ஆகி – தெரு ஓரங்களில் உள்ள பழைய திறந்த சாக்கடைகள் இன்றும் உயிரோட்டமாக இருக்கின்றன.   

 

திருச்சியில் பாதாள சாக்கடையை அமைத்த அளவிலும் கூட, அதை முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் தலைமையும் நேர்மையும் பொறுப்பும்  திராவிடக் கட்சிகளிடம் இல்லை. அதுபோன்ற பண்புகள்  அந்த ஊர்ப் பாட்டி ஒருவரிடம் நிரம்பி இருந்தன.

 

திருச்சியில் நொண்டியடிக்கும் பாதாள சாக்கடைத் திட்டம், அரசியல்வாதிகளையும் மீறிக் காலம் எவர்க்கும் தானாகக் கொண்டு தரும் வளர்ச்சி.  அந்த அளவு வளர்ச்சி அந்த நகருக்கு வந்துவிட்டதால் – தமிழகத்தில் அதற்காகக் காத்திருக்கும் மற்ற ஊர்களும் அதுபோல் பயன் பெற்றுவிட்டால் – அதை ஒட்டி அதற்கு ஏற்ற செழிப்பையும் கொழிப்பையும் இடைப்பட்ட காலத்தில் எப்படியோ சம்பாதிப்பவர்கள் நிச்சயம் உண்டு. அவர்கள் யார், அவர்களின் பங்கு என்ன, என்பது திராவிட ஆட்சியாளர்களுக்குத் தெரியுமே! 

 

தமிழகத்தில் திறந்தபடி செயல்படவேண்டிய அரசு இயந்திரம், மர்மத்தில் மூடியபடி இயங்குகிறது. போதிய வெளிப்படைத் தன்மை இல்லை. மூடியபடி தரைக்கு அடியில்  ஓட வேண்டிய சில ஊர்களின் சாக்கடைகள் சாலையில் திறந்தநிலையில் ஓடுகின்றன. மாநிலத்தில் தேவையான ஆட்சி மாற்றம் வந்தால் தான், இரண்டிலும் நிலைமை தலைகீழாக மாறிச் சரியாகுமோ?

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai